Wednesday 25 July 2012

டூரிங்குக்கு மறுப்பு


(டூரிங்குக்கு மறுப்பு-திரு ஓய்கேன் டூரிங் விஞ்ஞானத்தில் நிகழ்த்திய புரட்சி)
-எங்கெல்ஸ்

தமிழ் மொழி பெயர்ப்பு:கே.ராமநாதன்
முன்னேற்றப் பதிப்பகம் 1979
சோவியத் நாடு

இந்நூல் தோன்றியதற்கான பின்புலம் பற்றிய அறிமுகம்



முன்னேற்றப் பதிப்பகம் முன்னுரை:-
மார்க்சியத்திற்குப் பகைமையான ஜெர்மன் சித்தாந்தப் போக்குகளிடையே குட்டி பூர்ஷ்வா சித்தாந்தவாதியான டூரிங்கின் கருத்துக்களும் இடம் பெற்றிருந்தன. இவற்றை, கொச்சைப் பொருள்முதல்வாதம் கொச்சைப் பொருளாதாரம் மற்றும் கருத்தியல்வாத, நேர்க்காட்சி, போலி சோஷலிசத் தத்தவங்களிலிருந்து இரவல் பெற்ற எல்லாவகையான கருத்துக்கள் கருத்துருக்களின் ஒரு கதம்பக் கலவை என்று சித்தரிக்கலாம்.

டூரிங்குக்கு முந்திய மார்க்சிய விரோதிகள்  பிரதானமாயும் மார்க்சியத்தின் அரசியல் கோட்பாடுகளை எதிர்த்து நிராகரித்தார்கள். ஆனால் டூரிங்கோ மார்க்சியத் தத்துவத்தின் எல்லா உள்ளடக்கக் கூறுகளையும் அதாவது தத்துவவியல், அரசியல் பொருளாதாரம் மற்றும் விஞ்ஞான சோஷலிசத்தைக் கண்டன விமர்சனம் செய்து ஒரு புதிய சர்வப்பொது தத்துவ்வியல் அமைப்பை, அரசியல் பொருளாதாரத்தை மற்றும் சோஷலிசத்தைப் படைப்பவராக உரிமை கொண்டாடினார்.

இந்த சூழல்களின் கீழ், கட்சி இன்னும் விஞ்ஞான சோஷலிசக் கோட்பாடுகளை முழுமையாக மேற்கொள்ளாத பொழுது, தொழிலாளர் இயக்கம் கற்பனாவாத சோஷலிசத்தின் பல்வேறு வடிவங்களின் செல்வாக்கிலிருந்து இன்னும் விடுபட்டிராத பொழுதில், டூரிங்கின் கருத்துக்கள் பரப்பப்படுவது தொழிலாளர் இயக்கத்துக்கு விசேஷ அபாயமாக இருந்தது. எனவே மார்க்சின் போதனையை ஆதரித்து வளப்படுத்தி மக்களிடையே பரப்புவது அவசியமாயிற்று.

       மார்க்சியத்துக்கு பகையானது என்றும், விஞ்ஞான சோஷலிசத்தைக் கண்டன விமர்சனம் செய்கின்றது என்றும், தொழிலாளர் இயக்கத்துக்கு விசேஷ அபாயமானது என்றும் இம்முன்னுரையில் எச்சரித்த டூரிங்கின் கருத்துக்கள் இன்று இர்ஃபான் ஹபீப் சோஷலிசம் என்ற நூலிலும், தோழர்.சு.பொ.அகத்தியலிங்கம் (தீக்கதிர் 22-07-2012)  “சோஷலிசம்என்ற இந்நூலுக்கான விமர்சனத்திலும் (டூரிங்கின் கருத்துக்கள்) முற்போக்கானதாகப் படுகிறது.

சமுதாயம், தத்துவம் மற்றும் சோஷலிசம் பற்றி டூரிங்கின் முற்போக்கான ஆனால் கருத்துக்களை எதிர்த்து நடத்திய கருத்துப் போராட்டத்தின் விளைவாகவே இந்நூல் எழுதப்பட்டது     இர்ஃபான் ஹபீப்-சோஷலிசம் பக்கம் 60

இதனையே தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் (டூரிங்கின் முற்போக்கான அனல் கருத்துக்களை எதிர்த்து..) வழிமொழிகிறார். இதன் படி பார்க்கும்போது டூரிங்கின் கருத்து முற்போக்காகவும் அதனை எதிர்க்கும் எங்கெல்சின் கருத்து எந்தப் போக்காக இவர்களுக்கு படுகிறது என்ற கேள்வி எழுகிறது. சோவியத் பதிப்பின் முன்னுரையில் கூறியது போல் இது தொழிலாளர் இயக்கத்துக்கு  விசேஷ அபாயமானது என்பதை குறிப்பாக உணர்த்துவதற்கே டூரிங்குக்கு மறுப்பு நூலின் தோற்றத்துக்கான காரணங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

டூரிங் போன்ற எதிரிகளின் கருத்துக்களை, எங்கெல்ஸ் காட்டுகின்ற மார்க்சியத்தின் வழியில் பாட்டாளி வாக்கம் எதிர்கொள்ள பயிற்சி பெறவேண்டும்.

நூலின் அறிமுகத்துக்குச் செல்வோம்.

மார்க்சும் எங்கெல்சும் பாரிஸ் கம்யூனின் நிகழ்வுகளை பகுத்தாராய்ந்து கொண்டிருந்த வேளையில், ஜெர்மனியில் ஏற்பட இருந்த இரண்டு  இயக்க இணைப்புகளில் கவனம் செலுத்தினர். ஜெர்மனியில் தோற்றுவிக்கப்பட்ட பாட்டாளி வர்க்க கட்சியின் தலைவர்களான பெபெலும், லீப்னெட்டும் மார்க்சியக் கருத்துடன் நின்றாலும் சில தவறுகளை செய்தனர். 1875ஆம் ஆண்டு பாட்டாளிகளின் கட்சியை, குட்டி முதலாளித்துவ புரட்சியாளரான லஸ்ஸால் என்பரின் அனைத்து ஜெர்மானிய தொழிலாளர் ஒன்றியம் என்றழைக்கப்பட்ட இயக்கத்துடன் ஜெர்மன் சமூக-ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் இணைக்க முற்பட்டனர்.

இவ்விரண்டு இயக்கங்கள் அவசரகதியில் கொள்கையின்றி இணைவதை மார்க்சும் எங்கெல்சும் பொதுவாக எதிர்த்தனர். கொள்கையினுடைய ஒற்றுமையின் அடிப்படையில் இணைவதே போர்குணமிக்க பாட்டாளி வர்க்க கட்சி தோன்றுவதற்கு ஏதுவாய் இருக்கும் என்று வலியுறுத்தினர்.

லஸ்ஸாலியர்களுடைய கொள்கைகளுக்கு பெரிதளவான சலுகைகளை அளித்து இணைப்புக்குரிய நகல் திட்டம் திடீரென்று கிடைத்ததற்கு மார்க்சும் எங்கெல்சும் கட்சி தலைவர்களிடம் தமது கடும்எதிர்ப்பை உடனே தெரிவித்தனர். இருந்தும் இந்த விமர்சனம் 1857ல் கோத்தா என்ற இடத்தில் நடைபெற்ற காங்கிரசின் அமைப்பாளர்களிடம் உரிய விளைவை ஏற்படுத்தவில்லை. மார்க்சின் நகல் திட்டம் பற்றிய விமர்சனத்தில் ஒருசில அம்சங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டனர்.

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்த திட்டத்துக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பு இல்லை என்று அறிவிக்கவே மார்க்சும் எங்கெல்சும் முதலில் முடிவெடுத்தனர். நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் பலவிதமான சந்தேகங்களை தோற்றுவிக்கும் என்பதால் பின்பு இந்த முடிவை மாற்றிக் கொண்டனர்.

கோத்தா வேலைத்திட்டத்தின் மீதான  விமர்சனத்தில் லஸ்ஸால்வாதிகளுடைய கொள்கையுடன் சமரசம் கொள்வதை தீவிரமாக மார்க்ஸ் விமர்சித்தார். இதனை ஜெர்மானி கட்சி ஏற்றுக் கொள்ளாததால் கோத்தா நகரில் உருவான இணைப்பு, சமரச சுவடுகளை கட்சிக்குள் ஏற்படுத்திவிட்டது. கட்சிக்குள் கொள்கை குழப்பம் ஏற்பட்டு, கட்சித் தலைவர்களில் பலர் டூரிங்கின் குட்டி முதலாளித்துவச் சோஷலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டனர். குட்டிமுதலாளித்துவ சித்தாந்த கருத்தாக்கம் பாட்டாளி வர்க்க கட்சிக்கு அச்சுருத்தலாகவும் அபாயகரமானதாகவும் இருப்பதை லீப்னெட் அறிந்துகொண்டார். மறுக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த லீப்னெட் எங்கெல்சிடம் "டூரிங்குக்கு" மறுப்பை எழுத்துவடிவில் தெரிவிக்கும்படி ஓராண்டுகாலம் பெரும் முயற்சி எடுத்தார். இதன் விளைவே "டூரிங்கக்கு மறுப்பு" என்னும் நூல். இந்நூலில் முழுப்பெயர் "டூரிங்குக்கு மறுப்பு-திரு ஓய்கேன் டூரிங் விஞ்ஞானத்தில் நிகழ்த்திய புரட்சி" என்பதாகும்.

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான "மக்களரசி"ல் எங்கெல்ஸ் எழுதிய டூரிங்கு பற்றிய விமர்சனம் 1877ஆம் ஆண்டு முதல் 1879வரை தொடர்ந்து வெளிவந்தது. ஆனால் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்யிலுள்ள டூரிங் சித்தாந்தத்தை ஏற்றவர்கள் எங்கெல்சின் விமர்சனம் வெளிவருவது பிடிக்கவில்லை. நமது பத்திரிகை வாசகர்களுக்கு எங்கெல்சின் கட்டுரையால் பயனேதும் கிட்டப்போவதில்லை என்ற கருத்தை முன்வைத்து தடுக்க முயற்சித்தனர். ஆனால் எங்கெல்சின் கட்டுரை வெளியிட வேண்டும் என்றும், அக்கட்டுரை பத்திரிகையின் விஞ்ஞான அனுபந்த பகுதியில் அச்சிடப்படும் என்று கட்சி காங்கிரஸ் முடிவெடுத்தது.

டூரிங் மூன்று பெரும் தடித்த நூலைப் படைத்துள்ளார். 1, அரசியல் பொருளாதாரம் மற்றும் தோஷலிசத்தின் ஒரு திறனாய்வின் வரலாறு (1871). 2, அரசியல் மற்றும் சமூகப் பொருளாதாரத்தின் செல்வழித் தொகுதி (1873). 3, தத்துவம் ஒரு கண்டிப்பான விஞ்ஞானக் கண்ணோட்டம் மற்றும் வாழ்க்கையின் மூலாதாரம் என்னும் வகையில் அதன் செல்வழித் தொகுதி (1875). நூல்களின் தலைப்பைப் போன்றே நூல்களும் பெரும் தொகுப்பாக காணப்படுகிறது.

இந்நூல்களை படித்து விமர்சிப்பது பற்றி எங்கெல்ஸ் கூறுகிறார்:- "எனது வேலைகளைப் புறக்கணித்து இந்தப் புளிக்கும் ஆப்பிளைக் கடிப்பது போன்ற இனிமையில்லாத வேலையில் இறங்குவது என்று உறுதிகொள்ள ஓராண்டு பிடித்தது. ஒரு முறை கடித்தால் முழுவதும் மென்று விழுங்க வேண்டிய வகைப்பட்ட ஆப்பிளாகும், இது மிகவும் புளிப்பானது மட்டுமல்ல மிகவும் பருமனானது." இங்கே எங்கெல்ஸ் வேறுவேலைகள் என்று குறிப்பிடுவதில் முதன்மையானது "இயற்கையின் இயக்கவியல்" என்ற தமது நூலை படைக்கும் பணியை நிறுத்திவிட்டு, டூரிங்குக்கு எதிரான இந்த இம்மாபெரும் வேலையைத் தொடங்கினார் என்பதேயாகும். "இயற்கையின் இயக்கவியல்" நமக்கு முழுமைப் பெற்ற வடிவில்  கிடைக்கவில்லை.

டூரிங்குக்கு முன்பான மார்க்சிய எதிர்ப்பாளர்கள், மார்க்சியத்தின் அரசியல் கொள்கையையே அதிகம் எதிர்த்தும் மறுத்தும் வந்தனர். டூரிங்கோ தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்ற மார்க்சியத்தின் முதன்மையான மூன்று பிரிவின் உள்ளடக்கத்தை கடுமையாக விமர்சித்தார். டூரிங் சோஷலிசத்தில் கைதேர்ந்தவர், சீர்திருத்துவோர் என தாமே விடுத்த ஆறை கூவலுக்கு எதிராக, புளிக்கும் ஆப்பிளைக் கடிப்பது போன்ற இனிமையில்லாத வேலையில் இறங்கினார் எங்கெல்ஸ்.

எங்கெல்ஸ் டூரிங்குக்கு எதிராக எழுதிய விளக்கங்களை மார்க்ஸ் அறியாமல் வெளியிடக் கூடாது என்ற சுய இணக்கம் இருவருக்கும் இடையே இருந்தது. இந்நூல் அச்சிடப்படுவதற்கு முன்பாக கையெழுத்துபடியிலேயே எங்கெல்சால் மார்க்சுக்கு படித்துககாட்டப்படடது. பாகம் இரண்டில் உள்ள பத்தாவது இயல் மார்க்சால் எழுதப்பட்டது. மார்க்சிய முதலாசிரியர்களில் இருவரின் கைவண்ணமும் இப்படைப்பில் இடம்பெற்றுள்ளது.

டூரிங்குக்கு விமர்சனம் என்ற எங்கெல்சின் படைப்பு டூரிங்குக்கு மறுப்பாகவும் மார்க்சியம் பற்றிய விளக்கமாகவும் அமைந்துவிட்டது. இதனை எங்கெல்ஸ் கூறுகிறார்:-
"அவர் (டூரிங்) சென்ற விடமெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து செல்லவும் அவரது கருத்தோட்டங்களுக்கு எதிராக எனது கருத்தோட்டங்களை முன்வைக்கவும் நான் கட்டாயப்படுத்தப் பெற்றேன். இதன் விளைவாக எனது எதிர்மறை விமர்சனம் நேர்நிலை  விமர்சனமாயிற்று, இந்த வாதம் மார்க்சும் நானும் ஆதரித்துப் போராடிவருகிற இயக்கவியல் முறை மற்றும் கம்யூனிஸ்ட் உலகக் கண்ணோட்டம் பற்றிய ஏறத்தாழ ஒரு தொடர் விளக்கமாக மாற்றப்பட்டது-ஓரளவு விரிவான கல்வித் துறைகளைத் தழுவிய ஒரு விளக்கமாக இருந்தது."

மார்க்சிய இலக்கியத் தொகுப்பிலுள்ள தத்துவம், அரசியல் பொருள்முதல்வாதம், விஞ்ஞான சோஷலிசம் பற்றிய அடிப்படை விவரங்கள் "டூரிங்குக்கு மறுப்பு" என்ற இந்நூலில் ஒருங்கிணைந்த வடிவில் தொகுப்பாய் நமக்கு கிடைத்திருக்கிறது.

Tuesday 17 July 2012

மார்க்சின் மூலதனம் பற்றி... எங்கெல்ஸ்


வெளியீடு: பாரதி புத்தகாலயம்

முதற்பதிப்பு : டிசம்பர், 2010

421, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018.
பக்: 144, விலை: ரூ.70/-

நூல் அறிமுகம்

பாட்டாளி வர்க்கத்துக்கு வல்லமை சேர்க்கும் 
ஆயுதமான மார்க்சின் 'மூலதனம்'

மார்க்சியம், என்பது காரல் மார்க்ஸ் தமது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எழுதிய கருத்துக்கள் முழுவதையும் குறிப்பதாகும். இதில் தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்ற மூன்று உட்பிரிவுகள் கொண்டுள்ளது. மூன்று உட்பிரிவுகளும் தம்முள் உள்ளிணைப்புக் கொண்டவையாகும்.

தத்துவம் என்பது இயற்கை, சமூகம் பற்றிய அறிதலின் பொதுவான விதிகளை பற்றிய விஞ்ஞானமாகும்.

அரசியல் பொருளாதாரம் என்பது மனிதச் சமூக வாழ்வின் அடித்தளமான பொருளாயாச் செல்வ உற்பத்தியை எடுத்துரைக்கிறது. அதாவது உற்பத்தியின் சமூக அமைப்பு, உற்பத்தி நிகழ்வின் போது மனிதர்களிர்களுக்கு இடையே ஏற்படுகிற பொருளாதார உறவுகள், மனித சமூக வளர்ச்சியில் தோன்றுகின்ற பொருளாயத நலன்களின் உற்பத்திவினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை நிர்வகிக்கும் விதிகளை ஆராய்கிறது.

விஞ்ஞான சோஷலிசம் என்பது அரசியல் பொருளாதாரத்தையும், தத்துவத்தையும் ஆதாரமாகக் கொண்டு முதலாளித்துவ சமூக நிலைமைகளையும், முரணையும், அது இறுதியில் அழிந்து போவது பற்றியும், அதன் தொடர்ச்சியாக நிகழும் சோஷலிச புரட்சியினை எட்டும் நியதிகளை வெளிப்படுத்துகிறது.

இம்மூன்றில் பொருளாதாரம் முதன்நிலை பெறுகிறது. ஏன் என்றால் பொருளாதார முறையே சமூக வளர்ச்சியின் அடித்தளம் என்றும், இந்த அடித்தளமே மேற்கட்டமைப்பான தத்துவம், அரசியல், மதம், சட்டம் போன்றவற்றை நிர்ணயிக்கிறது என்றும் மார்க்சியம்  கூறுவதால் பொருளாதாரமே முதன்மையாகவும், இம்மூன்றினில் அடிப்படையாகவும் இருக்கிறது. மார்க்சியப் பொருளாதாரம் வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பார்வையில் அணுகப்பட்டது. அதனால் வரலாறியல் பொருள்முதல்வாதம் இல்லை என்றால் இந்தப் பொருளாதாரம் இல்லை என்பதையும் சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்சின் "மூலதனம்" முதல் தொகுதி கி.பி.1867, செப்படம்பரில் வெளிவந்தது.   
  
முதலாளித்துவ சமூகம் இந்நூலை வெளிவந்த நேரத்தில் அதுபற்றி ஏதும் பேசாது மரணமவுனத்தைச் சாதித்தது. இந்த மவுனசதிதான் மாபெரும் இந்நூலுக்கு  எதிரான போராட்டமாக முதலாளித்துவ நினைத்திருந்தது. ஆனால் மகத்தான இப்படைப்பு மீதான, இந்த மவுனசதி வெகு காலத்துக்கு நீடிக்கவில்லை. மூலதன முதல் தொகுதியின் வெளியீடுகள் பெருகின, புதிய மொழிபெயர்ப்புகள் பல மொழிகளில் வெளிவந்தன.

இந்த மவுனசதியை உடைப்பதற்கு எங்கெல்ஸ்  மூலதனத்துக்கான மதிப்புரைகளை பலபத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவற்றில் மூன்று இந்த சிறுநூல் தொகுப்பில் இடம்பெறுகிறது. இரண்டாவதாக தொடக்கத்தில் வெளிவந்துள்ள மூலதன நூலின் முதல் தொகுதியின் முதல் நான்கு அத்தியாயங்களின் பொழிப்பு இடம் பெறுகிறது. இந்த பொழிப்புகளின் முதல் நான்கு அத்தியாயம், இன்றைக்கு கிடைத்திடும் நூலின் முதல் தொகுதியின் முதல் நான்கு பிரிவுகளில் அடங்கும். மூன்றாவதாக மூலதனத்தின் மூன்றாம் தொகுதிக்கு அனுபந்தமாகும். நான்காவது, "மூலதனம்" தொகுதி 3ல், அத்தியாயம் 27க்கு இடைச் சேர்ப்பாக எழுதியவை.

இவ்வகையில் எங்கெல்ஸ் தனது இறுதி காலம் வரை மூலதன நூலின் விளக்கத்துக்கான செழுமையினைச் செய்தார். அதாவது  மார்க்சின் பொருளாதாரக் கோட்பாடுகளை அதன் எல்லா வகையான எதிரிகளிடமிருந்து, விரோதிகளிடமிருந்தும் பாதுகாக்கும் பெரும் பங்களிப்பை செய்துள்ளதை இக்குறு நூல் வெளிப்படுத்துகிறது. இதனையே இந்நூலின் மார்க்சிய லெனினியக் கழகம் (மத்திய கமிட்டி, சோவித் கம்யூனிஸ்டு கட்சி) முன்னுரையில் வெளிடப்பட்டுள்ளது:-

"எங்கெல்சின் மதிப்புரையும் பொழிப்பும் மூலதனத்தைப் படித்தாய்வதற்கு உரிய மதிப்பும் மிகுந்த துணை நூல்களாகும். மூலதனத்தின் உள்ளடக்கம் அதில் பிரதானமாயும் மார்க்சின் சொற்களிலேயே தரப்பபட்டிருக்கிறது.

பொழிப்புரை மற்றும் மதிப்புரை இரண்டினதுமான ஈர்ப்புமையம், மார்க்சியப் பொருளாதார தத்துவத்தின் மூலைக்கல்லான உபரிமதிப்பின் தத்துவத்தில் காணக்கிடக்கிறது.பக்கம் 5-6

"மார்க்சை விமர்சனம் செய்த எண்ணற்ற பலர் மூலதனத்தின் முதல் தொகுதிக்கும் மூன்றாம் தொகுதிக்கும் இடையே "முரண்பாடுகள்" இருப்பதாகக் குறைகூறி அதை நிரூபிப்தற்கு என எழுதிக்குவித்து வீணாக்கிய காகித மலைகள் எத்தனையோ. தமது கட்டுரையில் எங்கெல்ஸ் அவர்களுக்கு உறுதியான பதிலடி கொடுத்தார். மார்க்சியத்தின் இந்தப் பகிரங்கமான விரோதிகளையும் மார்கசியத்தின் நண்பர்கள் போல வேஷமிடும் எதிராளிகளையும் ஒருங்கே முழுமையாக அம்பலப்படுத்தினார்"       பக்கம் 7-8

"எங்கெல்சின் கட்டுரை மதிப்புப் பற்றிய மார்க்சியத் தத்துவத்தின் மெய்யான பொருள்முதல்வாத விளக்கத்திற்கான ஓர் அரிய உதாரணமாகும். மார்க்சியத்தை ஊறு செய்யும் எல்லாவகையான சித்தாந்தப் புரட்டுகளையும் எதிர்த்துப் போராடுவதைற்குரிய ஈடும் எடுப்பும் மில்லாப் பேராயுதமாக இது இன்னும் விளங்ககுகிறது"          பக்கம் 8

எங்கெல்சின் மதிப்புரையும் பொழிப்புரையும் மூலதன வாசிப்புக்கு துணைபுரிவதையும், அத்துணைபுரிதல் மார்க்சின் சொற்களிலேயே தரப்பட்டுள்ளதையும் இம்முன்னுரை சுட்டுகிறது.

மார்க்சிய அரசியல் பொருளதாரம் என்பது பொருள்முதல்வாத விளக்கத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூலனத மூன்று தொகுதிக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக குறைகூறி, அதனை நிரூபிக்க முடியாமல் வீணாகிப் போன காகித மலைக்குவியலாக போவதற்கு, எங்கெல்ஸ் பதிலடிகொடுத்ததையும், மார்க்சிய விரோதிகளையும், மார்க்சியத்தின் நண்பர்களைப் போல வேடமிடும் எதிராளிகளையும் அம்பலப்படுத்துவதையும் இம்முன்னுரை குறிப்பிட்டுள்ளது.

அரசியல் பொருளாதாரத்தை பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கும் போதுதான், முதலாளித்துவத்தின் முரண்பாடுகளும் அதனைத் தொடர்ந்து பழையதை வீழ்த்தி புதிய சோஷலிஸ்ட் புரட்சிக்கு இட்டுச் செல்வதையும் எங்கெல்ஸ் விளக்குவதை இம்முன்னுரை தெளிவுபடுத்துகிறது.

" வர்க்க முரண்பாடுகள் உக்கிரமடைவதானது எவ்வாறு "பழமையை வீழ்த்தும் சக்திகளும், புதிய சமுதாயத்தை உருவாக்கும்    சக்திகளும் முதிர்ச்சி பெற" இட்டுச் செல்கிறது. அதாவது பாட்டாளிகளின் சோஷலிஸ்டு புரட்சிக்கு இட்டுச் செல்கிறது என்பதையும் எங்கெல்ஸ் காட்டுகிறார்." பக்கம் 5-6

            மூலதன நூல் சோஷலிசப்புரட்சியைப் பற்றி ஒன்றும் கூறவில்லை, அல்லது முதலாளித்துவமே இறுதியானது என்பது போன்ற முடிவுகள் எல்லாம், அரசியல் பொருளாதாரத்தை பட்டாளி வர்க்க சார்பாக புரிந்து கொள்ளாமையே காரணமாகும்.     

எங்கெல்ஸ் மூலதனநூலின் அடிப்படையில் முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழிப்பது பற்றி கூறுகிறார்:-
".. நம்முன் இருக்கும் நூலின் ஆசிரியர். பொருளாதார  விஞ்ஞானம் முழுவதுடனும் சம்பந்தப்பட்ட வகையில் மூலதனம், உழைப்பு ஆகியவற்றின் உறவு முழுவதையும் மறுக்க முடியாத அரிய அறிவுடன் விளக்குகிறார். "முதலாளித்துவ உற்பத்தி முறை" முழுவதும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்" பக்கம் 15 

மேலும்:-
"மூலதனத்தின் ஒரு முகமான குவிதல் மற்றும் திரட்சி என்பதோடு அக்கம்பக்கமாயும் அதே வேகத்தோடும் உழைக்கும் மக்கள் உபரி தொகையின் திரட்சியும் நடைபெறுகிறது. இவ்விரண்டும் சேர்ந்து முடிவில் ஒரு புறம் சமூகப் புரட்சியை அவசியமாக்கும் மறு புறத்தில் அதை சாத்தியமாக்கும் என்பதை நிரூபிக்கச் செய்யும் மாக்சின் தற்படைப்பான சாதனையாகும்"  பக்கம் 15

மூலதனத்தை பாட்டாளி வர்க்கத்தின் அணுகுமுறையில் பார்க்கும் போது தான், இது போன்ற முடிவுகள் கிடைக்கும்.

மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை கேள்விக்குள்ளாக்கும் முதலாளித்துவ பார்வையின் வாசிப்பில் மூலதனத்தில் சோஷலிசப் புரட்சியைப் பற்றி கூறியிருப்பது கண்ணிற்கு படாமல் உறுத்தும்.
                                                                                                           
       சமூகம் வர்க்கமாக பிரிந்துள்ள நிலையில், அரசியல் பொருளாதாரம் வர்க்கத் தன்மை பெற்றதாகவே இருக்கும். முதலாளித்துவ வர்க்க சமூகத்தில், முதலாளித்துவ அரசியல் பொருளாதாரமும், பாட்டாளி வர்க்க அர்சியல் பொருளதாரமும் தத்தம் வர்க்கத்தின் நலன்களின் அடிப்படையில் அணுகப்படுகின்றன.

       மார்க்சிய அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான வழியில் சமூகத்தின் வளர்ச்சியின் புறநிலை விதிகளை ஆராய்ந்து. முரண்பாட்டில் சிக்கிக் கொண்ட முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து, சோஷலிசப் புரட்சியை அடைவதற்கான வழியினை பாட்டாளி வர்க்க கட்சிக்கு காட்டுகிறது.
      
       கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வல்லமை சேர்க்கும் இதுபோன்ற நூல்களை பாரதி புத்தகாலயம் தொடர்ந்து வெளியிட வேண்டும்.