Tuesday 22 December 2015

என்ன செய்ய வேண்டும்?- லெனின்

தமிழில் ஆர்.கே.கண்ணன்
விலை-ரூ.180/-

வெளியீடு:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
110/63, என்.எஸ்.கே. சாலை, கோடம்பாக்கம்,
சென்னை 600 024.

தொலைபேசி: 94448 34519

 

 

      எங்கிருந்து தொடங்குவது? என்ற கட்டுரையில் பேசப்பட்ட, அரசியல் கிளர்ச்சியின் தன்மையும் உள்ளடக்கமும், அமைப்புத்துறைப் பணிகள், ஒரே நேரத்தில் பல்வேறு புறங்களில் இருந்து கிளர்ச்சியை ஏற்படுத்த அனைத்து ருஷ்யக் கட்சியை கட்டுவதற்கான திட்டம் என்ற மூன்று பிரச்சினைகள் பற்றியும் அதனோடு சேர்த்து இரண்டு பிரச்சினைகளை இந்நூலில் லெனின் இணைத்துள்ளார். அந்த இரண்டில் ஒன்று விமர்சனச் சுதந்திரம்மற்றொன்று தன்னியல்பான பொதுமக்கள் இயக்கம் பற்றிய கம்யூனிஸ்டுகளின் பாத்திரம்.

 

இந்நூலின் முதல் இயல், வறட்டுச் சூத்திரவாதமும் விமர்சன சுதந்திரமும்”. மார்க்சியத்தில் காணப்படும் குற்றங்களை எடுத்துக் கூறுவதற்கு விமர்சன உரிமை வேண்டும் என்ற போர்வையில் மார்க்சியத்தை திருத்துகின்ற சந்தர்ப்பவாதிகளின் போக்கை லெனின் விமர்சிக்கிறார். இந்தத் திருத்தல் போக்கு இன்றும் தொடர்ந்து வருகிற தொடர்கதையாகும்.

 

இந்த திருத்தல்போக்கு மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்றும் அதன்மீதான விமர்சனத்தை மறுக்கின்ற மார்க்சிய வறட்டு சூத்திரவாதத்தை விமர்தசிப்பதற்கு சுதந்திரம் வேண்டும் என்றும் கோருகிறது. கம்யூனிச இயக்கத்தில் “படிப்பறிவுள்ள” ஒரு பகுதி கலந்துவருவதே இந்தப் போக்கு தோன்றுவதற்கு காரணமாகிறது. இப்போக்கினர் திரும்ப திரும்பச் சொன்னால் போதும், அதற்கு சான்று தேவையில்லை என்று நம்புகிறார்கள் போலும் என்று லெனின் கூறுகிறார்.

 

இப்போக்கினரை லெனின் அம்பலப்படுத்துகிறார், (26) “..சமூக முரண்பாடுகளைப் மழுங்கடிப்பது பற்றிய கருத்தைப் பரிந்துரைத்தும், சமூகப் புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய கருத்து அபத்தம் என்று பிரகடனப்படு…”த்கின்றனர்.

 

இப்போக்கு புதுவகையான சந்தர்ப்பவாதம் என்கிறார்.

 

லெனின்:- “சோஷலிசத்தில் உதித்துள்ள புதிய விமர்சன வகைப்பட்டபோக்கு ஒரு புது வகையான சந்தர்ப்பவாதம் தவிர வேறில்லை என்பதை வேண்டும் என்றே கண்ணை மூடிக்கொண்டால் ஒழிய ஒருவர் காணாமல் இருக்க முடியும்.”

 

இதனை மேலும் விளக்கும் முகமாக கூறுகிறார்:-

அவ்வாறாயின் விமர்சன சுதந்திரம்என்பதின் பொருள் சமூக-ஜனநாயகத்தில் சந்தர்ப்பவாதப் போக்குக்கு வேண்டிய சுதந்திரம் என்பதாகும். சமூக-ஜனநாயகத்தைச் சீர்திருத்தத்துக்கு நிற்கும் ஜனநாயகக் கட்சியாக மாற்றுவதற்கான சுதந்திரம், சோஷலிசத்தில் முதலாளி வர்க்கக் கருத்துக்களையும் முதலாளி வர்க்கப் போக்குள்ள நபர்களையும் புகுத்துவதற்கான சுதந்திரம் என்பதாகும்

என்ன செய்ய வேண்டும்? -பக்கம்- 15

 

       மார்க்சியத்தை சீர்திருத்த முற்படுபவர்கள் அன்றும் இன்றும் விமர்சன சுதந்திரம் என்ற போர்வையில் தான், தமது வேலையைத் தொடங்குகின்றனர். இந்த சீர்திருத்த விமர்சனப் போக்கின் நோக்கம், சமூக-ஜனநாயகம் சமூகப் புரட்சிக்கான கட்சியாக இருப்பதை விட்டொழித்துச் சமூகச் சீர்திருத்தங்களுக்கான சமூக-ஜனநாயகக் கட்சியாக மாறித் தீர வேண்டும் என்பதேயாகும்.

 

       மார்க்சிய அடிப்படைகளை சீர்திருத்த முனைபவர்களான இப்படிப்பட்டவர்கள் எத்தகைய மார்க்சிய அடிப்படைகளை மறுக்கின்றனர் என்பதை தொகுத்துத்தருகிறார்.

 

லெனின்:- “சோஷலிசத்தை அறிவியல் அடிப்படையில் வைத்திடும் சாத்தியப்பாடு மறுக்கப்பட்டது, சோஷலிசத்தின் அவசியத்தையும் தவிர்க்கவொண்ணாத தன்மையையும் வரலாறு வழிப்பட்ட பொருள்முதல்வாதப் பார்வை நிலையில் இருந்து நிதர்சனப்படுத்தும் சாத்தியப்பாடும் மறுக்கப்பட்டது.

 

வறுமையாக்கப்படல் அதிகரிப்பதும், பாட்டாளிமயமாக்கும் நிகழ்வுப் போக்கும், முதலாளித்துவ முரண்பாடுகள் கடுமையாக்கப்படுதலும் மறுக்கப்பட்து. “இறுதிக் குறிக்கோள் எனும் கருத்தாக்கமே தவறானது என்று பிரகடனப்படுத்தப்பட்டது. பாட்டாளி சர்வாதிகாரம் எனும் கருத்து முற்றாக நிராகரிக்கப்பட்டது. கோட்பாடு நிலையிலே மிதவாதத்துக்கும் சோஷலிசத்துக்கும் இடையேயுள்ள எதிர்நிலை மறுக்கப்பட்டது. வர்க்கப் போராட்டம் பற்றிய கோட்பாடு மறுக்கப்பட்டது. காரணம், பெரும்பான்மையினரின் சித்தப்படி ஆளப்பட்டுவரும் முற்றும் ஜனநாயக வழிப்பட்ட சமூகத்தோடு அதைப் பொருத்திச் செயற்படுத்த முடியாது, முதலியவையாம்.

       என்ன செய்ய வேண்டும்? – பக்கம்- 13

 

       மார்க்சியத்தை சீர்திருத்த முனைவோரின் போக்குகள் அன்றும் இன்றும் மார்க்சிய அடிப்படைகளை சரியாகப் புரிந்ததின் அடிப்படையிலேயே காணப்படுகிறது. அதாவது மார்க்சியத்தின் விஞ்ஞானத் தன்மை எதில் அடங்கியிருக்கிறது என்பதை இவர்கள் சரியாகப் புரிந்து அதனை கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

 

       இப்படிப்பட்ட விமர்சனவாதிகளின் முழுமையான நோக்கத்தை லெனின் குறிப்பிடுகிறார்:-

““விமர்சனம்எனும் கொடியைக் கைகளில் ஏந்திக் கொண்டு மார்க்சியத்தை ஒழித்துக்கட்டுவதைஅநேகமாக ஏகபோகமாகப் பெற்றுவிட்ட முன்னாள் மார்க்சியவாதிகள்இந்த இலக்கியத்திலே பலமாகக் காலூன்றிவிட்டார்கள். “வைதீகத்தை எதிர்போம்” “விமர்சனச் சுதந்திரம் நீடூழி வாழ்கபோன்ற கவர்ச்சிச் சொற்கள் உடனே ஃபேஷனாகிவிட்டது

என்ன செய்ய வேண்டும்? – பக்கம்- 26

 

       இவர்கள் பழைய கருத்துக்களுக்குப் பதிலாக புதிய கருத்துக்களை வைத்திடும் சுதந்திரத்தைக் கோராமல், பழைய கருத்துக்களின் பக்கத்திலே புதிய கருத்தக்களை வைத்திடுவதற்கு சுதந்திரம் கோருகின்றனர்.

 

லெனின்:- “சுதந்திரம் – ஒரு மேன்மையான சொல், எனினும் தொழில் துறைக்குச் சுதந்திரம் என்கிற பெயரால் மிகவும் கொள்ளைக்காரத்தனமான போர்கள் நடத்தப்பட்டுள்ளன. உழைப்புக்குச் சுதந்திரம் என்கிற பெயரால் உழைப்பாளி மக்கள் சூறையாடப்ப பட்டுள்ளனர். நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் “விமர்சன சுதந்திரம்” என்கிற சொல்லிலும் இதே உள்ளார்ந்த பொய் குடிகொண்டிருக்கிறது. விஞ்ஞானத்தில் முன்னேற்றம் அடைந்திருப்பதாக உண்மையாகவே உறுதியாக நம்புகிறவர்கள் புதிய கருத்துக்கள் பழைய கருத்துக்களின் பக்கத்திலேயே இருந்துவரட்டும் என்று சுதந்திரம் கோரா மாட்டார்கள். பழைய கருத்துக்களுக்குப் பதிலாகப் புதிய கருத்துக்களை வைத்திடும் சுதந்திரமே கோருவார்கள்.”

என்ன செய்ய வேண்டும்?

லெனின் - தேர்வு நூல்கள் தொகுதி 1 – பக்கம்- 15

 

இந்த இயலை முடிக்கும் போது லெனின் கூறுகிறார், புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது. முன்னேறிய கோட்பாட்டின் (advanced theory) வழிகாட்டியாகக் கொண்டுள்ள கட்சி ஒன்றுதான் முன்னணிப் போராளியின் பாத்திரத்தை நிறைவேற்ற முடியும்.

 

இரண்டாவது இயல், மக்களின் தன்னியல்பும் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வுநிலையும். இந்த இயல் கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கையின் இரண்டாம் அத்தியாயமான பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் என்பதின் விரிவாக்கமாக கூறலாம். பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் அமைப்பாக இணையும் போது தன்னியல்பு உணர்வுநிலையாக வர்க்க உணர்வாக வளர்ச்சிபெறுகிறது.

 

தன்னியல்பை (Spontaneity) லெனின் தவிர்ப்பதாகவும், வெளியில் இருந்து வருகிற வர்க்க உணர்வை இங்கே வலியுறுத்துவதாகவும் தவறான புரிதல் காணப்படுகிறது. தன்னியல்பு வழிபாட்டையே எதிர்க்கிறார். தன்னியல்பின் கூறுகள் கருவடியத்தில் இருக்கும் உணர்வுநிலை என்பதே லெனின் கருத்தாகும்.

 

தன்னியல்பு என்பது வேலைநிறுத்த இயக்கத்தை முதலாவதாகக் கூறலாம். உடனடித் தேவைகளை வைத்துப் போராடுவது தன்னியல்பானதாகும். கண்டிப்பாக இது பொருளாதாரப் போராட்டமாகவே இருக்கும். ருஷ்யாவில் 1890களில் நடைபெற்ற போராட்டங்கள் தன்னில்பானது என்கிறார் லெனின். கருவடிவில் உள்ள உணர்வுநிலையிலான தன்னியல்பை கம்யுனிச உணர்வாக, வர்க்க உணர்வாக வளர்த்தெடுக்க வேண்டும். இதுவே கம்யூனிஸ்டின் பணியாகும். அறிக்கை இதனையே கூறியிருக்கிறது.

 

கம்யூனிஸ்டுகளைப் பற்றி அறிக்கை கூறுகிறது:- “கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் நடைமுறை ரீதியில், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளில், மிகவும் முன்னேறிய, மிகவும் உறுதி வாய்ந்த பிரிவாக, மற்றவர்கள் அனைவரையும் முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற பிரிவாக உள்ளனர். மறுபுறம் தத்துவ ரீதியில், கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத ஓர் அனுகூலத்தை, அதாவது, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப் பெற்றுள்ளனர்.” (மார்க்ஸ்- எங்கெல்ஸ்- கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை)

இதனை லெனின் இன்னும் தெளிவாகக் கூறுகிறார்.

 

லெனின்:- “தொழிலாளிகளிடையே சமூக-ஜனநாயக உணர்வுநிலை இருந்திருக்க முடியாது என்று சொன்னோம். அது வெளியிலிருந்து தான் அவர்களுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். தொழிலாளி வர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாகத் தொழிற் சங்க உணர்வை மட்டுமே அதாவது, தொழிற் சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது, அவசியமான தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுதத முயல்வது, முதலியவற்றின் அவசியத்தைப் பற்றிய துணிபை மட்டுமே- வளர்த்துக் கொள்ள முடிகிறது என்று எல்லா நாடுகளின் வரலாறும் புலப்படுத்துகிறது. ஆனால் சோஷலிசத்தின் கோட்பாடு தத்துவவழிப்பட்ட, வரலாற்று வழிப்பட்ட, பொருளாதார வழிப்பட்ட கோட்பாடுகளில் இருந்து வளர்ந்ததாகும், சொத்துள்ள வர்க்கங்களின் பிரதிநிதிகள், அறிவுத்துறையினர் அவற்றை வகுத்து விளக்கினர். நவீன விஞ்ஞான சோஷலிசத்தின் மூலவர்களான மார்க்சும் எங்கெல்சும் முதலாளி வர்க்கப் போக்கான படிப்பாளிப் பகுதியினரைச் சேர்ந்தவர்கள்.”

என்ன செய்ய வேண்டும்? -பக்கம்- 44

 

       தொழிலாளர்களின் தன்னியல்பில் காணப்படும் கருவடிவிலான வர்க்க உணர்வை கம்யூனிஸ்டுகள் மேம்படுத்த வேண்டும். பொருளாதாரப் போராட்டத்தோடு நின்றுவிடும் தொழிலாளி வர்க்கத்தை அரசியல் படுத்த வேண்டும். இன்றைய பொருளாதாரப் போராட்டம் நிரந்தரத் தீர்வல்ல. இது ஒருவகையில் சீர்திருத்தப் போராட்டமே. தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையே ஏற்படும் முரண் முதலாளித்துவ அமைப்பு முறையில் காணப்படும் முரணின் வெளிப்பாடே என்பதை தொழிலாளர்களுக்கு உணர்த்த வேண்டும்.

 

       லெனின் தன்னியல்பு வழிபாட்டை விமர்சிக்கிறார்:-

பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தன்னியல்பு பால் உள்ள எல்லா வழிபாடும், “உணர்வுநிலையான கூறுகளின்பாத்திரத்தைச் சிறுமைப்படுத்துவது அனைத்தும், சமூக-ஜனநாயத்தின் பாத்திரத்தைச் சிறுமைப்படுத்துவது அனைத்தும், - அப்படிச் செய்கிறவன் விரும்புகிறானோ இல்லையோ- தொழிலாளிகள் மீது முதலாளி வர்க்கத்தின் சித்தாந்தத்தின் செல்வாக்கைப் பலப்படுத்துவதாகவே பொருள்.”

என்ன செய்ய வேண்டும்? – பக்கம்- 53-54

 

       கம்யூனிஸ்டுகளின் பணி தொழிலாளர்களின் தன்னியல்பை எதிர்த்து புரட்சிகரமான கம்யூனிச உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துவதாகும்.

 

       மூன்றாவது இயல், தொழிற்சங்கவாத அரசியலும் சமூக-ஜனநாயக அரசியலும். தொழிலாளர்களின் தன்னியல்போடு அதாவது அவர்களின் பொருளாதாரப் போராட்டத்தோடு நின்றுவிடுகிற அரசியலை லெனின் கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் பொருளாதாரப் போராட்டங்களை அவர் நிராகரிக்கவில்லை, அது வர்க்க உணர்வு விழித்தெழுவதற்குத் தொடக்கமாகவும், சோஷலிசம் பரவுவதற்கு தொடக்கப் புள்ளியாகவும் கூறுகிறார். அந்தத் தொடக்க பொருளாதார போராட்ட உணர்வை, அரசியல் உணர்வாக, வர்க்க உணர்வாக சமூக-ஜனநாயகவாதிகள் வளர்த்தெடுக்க வேண்டும்.

 

லெனின்:-“… ஒரு குறிப்பிட்ட தொழிலில் தொழிலாளிகளுக்கும், முதலாளிகளுக்கும் இடையேயுள்ள உறவுகளை மட்டுமே இந்த அம்பலப்படுத்தல்கள் எடுத்துக் கவனித்தன, மேலும், அவை சாதித்த அனைத்தும் இதுதான்- அதாவது, உழைப்புச் சக்தியை விற்பவர்கள் மேலான விலைக்குத் தங்களுடைய சரக்கைவிற்கக் கற்றுக் கொண்டார்கள், முற்றிலும் வர்த்தக முறையிலான பேரத்தில் வாங்குவோருடன் போராடக் கற்றுக் கொண்டார்கள். இந்த அம்பலப்படுத்தல்கள் (புரட்சியாளர்களின் அமைப்பால் முறையாகப் பயன்படுத்தப் பட்டிருந்தால்) சமூக-ஜனநாயக நடவடிக்கைக்குத் தொடக்கமாகவும் அதன் இணைக்கூறாகவும் பயன்பட்டிருக்க முடியும். ஆனால், அவை முற்றிலும் தொழிற்சங்க வழிப்பட்டபோராட்டத்துக்கும் சமூக-ஜனநாயக வழிப்படாத தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கும் கொண்டுபோய்விட முடியும், (தன்னியல்பை வழிபடும் கண்ணோட்டம் இருக்குமேயானால் நிச்சயமாகக் கொண்டு போய்விடும்).

 

உழைப்புச் சக்தியை மேலான விலைக்கு விற்பதற்காக மட்டுமின்றி, சொத்துடைமையற்றவர்கள் தங்களைப் பணக்காரர்களுக்கு விற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துகிற சமூக அமைப்பு முறையை ஒழிப்பதற்காகவும் சமூக-ஜனநாயம் தொழிலாளி வர்க்கப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்துகிறது.

 

குறிப்பிட்ட முதலாளிகளின் ஒரு குழுவோடு தொழிலாளி வர்க்கத்துக்குள்ள உறவு விஷயத்தில் மட்டுமின்றி, தற்கால சமூகத்திலுள்ள எல்லா வர்க்கங்களோடும் நிறுவனக் கட்டுள்ள அரசியல் சக்தியான அரசோடும் அதற்குள்ள உறவு விஷயத்திலும் சமூக-ஜனநாயகவாதிகள் தொழிலாளி வர்க்கத்தைப் பிரதிநிதித்துப் படுத்துகிறார்கள். ஆகவே. இதிலிருந்து  தொடர்வது;-

 

சமூக-ஜனநாயகவாதிகள் பொருளாதாரப் போராட்டத்தை நடத்துவதோடு நின்றுவிடக் கூடாது என்பது மட்டுமல்ல, பொருளாதார அம்பலப்படுத்தல்களை முறையாகத் திரட்டிச் செய்வதை அவர்களின் நடிவடிக்கையின் மிக மேலோங்கிய பகுதியாகிவிட அனுமதிக்கக் கூடாது. நாம் தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியல் கல்வி அளிப்பதையும் அவ்வர்க்கத்தின் அரசியல் உணர்வை வளர்ப்பதையும் தீவிரமாகச் செய்ய வேண்டும்.”

என்ன செய்ய வேண்டும்? – பக்கம்- 79

 

       பொருளாதாரப் போராட்ட மட்டுமே அரசியல் போராட்டமாக உருப்பெறும் என்று கருதுவது தவறு என்று லெனின் எச்சரிக்கிறார். போலீஸ் கொடுங்கோன்மை, எதேச்சாதிகர அட்டூழியங்கள், அதிகாரிகளின் லஞ்ச ஊழல்கள், அறிவொளி பெற மக்கள் எடுக்கும் முயற்சியை தடுப்பது, மதப் பிரிவினரை அடக்கித் துன்புறுத்துவது, மாணவர்களையும், மிதவாத அறிவாளிகளையும் ராணுவத்தைக் கொண்டு தாக்குவது போன்ற கொடுஞ் செயல்கள் நேரடியான பொருளாதாரப் போராட்டத்துடன் தொடர்பு இல்லை என்றாலும் இவைகள் அரசியல் கிளர்ச்சிக்கும், அரசியல் போராட்டத்துக்கு வழிவகுக்கும்.

 

       சீர்திருத்தத்துக்கான போராட்டத்தை இடதுசாரி அராஜகவாதிகளைப் போல் சமூக-ஜனநாயகவாதிகள் (கம்யுனிஸ்டுகள்) மறுதலிப்பதில்லை. ஆனால் சீர்திருத்தத்தையே சோஷலிசமாக கருதுகின்ற வலதுதிரிபை சமூக-ஜனநாயகவாதிகள் மறுதலிக்கின்றனர்.

 

லெனின்:- “புரட்சிகரமான சமூக-ஜனநாயகம் எப்பொழுதுமே சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தைத் தனது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கிறது. ஆனால் எல்லாவித நடிவடிக்கைகள் பற்றிய கோரிக்கைகளையும் அரசாங்கத்திடம் வைப்பதோடு மட்டுமல்லாமல் எதேச்சாதிகார அரசாங்கமாக இருக்கக் கூடாது என்கிற (முதன்மையான) கோரிக்கையையும் வைப்பதற்கு அது பொருளாதாரக்கிளர்ச்சியைப் பயன்படுத்துகிறது. மேலும், பொருளாதாரப் போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல், பொது வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் பொதுவாக உள்ள எல்லா வெளிப்பாடுகளின் அடிப்படையிலே தான் இக்கோரிக்கையை அரசாங்கத்திடம் வைப்பது தன் கடமை என்று அது கருதுகிறது.

 

சுருங்கச் சொன்னால், பகுதியை முழுமைக்கு கீழ்ப்படுத்துவதுபோல், அது சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தை விடுதலைக்காகவும் சோஷலிசத்துக்காகவும் நடக்கும் புரட்சிகரமான போராட்டத்துக்குக் கீழ்ப்படுத்துகிறது

என்ன செய்ய வேண்டும்? – பக்கம்- 86-87

 

       தொழிலாளர்களின் வர்க்க உணர்வுநிலை அரசியல் உணர்வுநிலையாக உயர வேண்டுமாயின், அனைத்து அம்சங்களிலும் பொருள்முதல்வாத பகுப்பாய்வின் மூலம் செயற்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் என்று லெனின் கூறுகிறார்.

 

லெனின்:- “..தொழிலாளி வர்க்க உணர்வு உண்மையான அரசியல்  உணர்வாக இருக்க முடியாது. ஸ்தூலமான, எல்லாவற்றிற்கும் மேலாக நடப்பு முக்கியத்துவமுள்ள அரசியல் செயலுண்மைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் இருந்து, மற்ற ஒவ்வொரு வர்க்கத்தையும் அதனதன் அறிவுத்துறை ஒழுக்கத் துறை மற்றும் அரசியல் துறை வாழ்க்கையில் உள்ள எல்லா வெளிப்பக்கங்களையும் வைத்து உற்றுக் கவனிக்கத் தொழிலாளிகள் கற்றுக் கொள்ளாவிட்டால், மக்கள் தொகையின் எல்லா வர்க்கங்களின், அடுக்குகளின், குழுக்களின் வாழ்க்கை மற்றும் நடவடிக்கை தொடர்பான எல்லா அம்சங்களையும் பற்றிய பொருள்முதல்வாதப் பகுப்பாய்வையும் பொருள்முதல்வாத மதிப்பீட்டையும் நடுமுறையில் செயற்படுத்தத் தொழிலாளிகள் கற்றுக்கொள்ளாவிட்டால், உழைக்கும் மக்களின் உணர்வுநிலை உண்மையான வர்க்க உணர்வுநிலையாக இருக்க முடியாது.”

என்ன செய்ய வேண்டும்? – பக்கம்- 96

 

பொருளாதாரவாதிகளும் பயங்கரவாதிகளும் (Terrorism) வேறுவேறு வகைப்பட்ட தன்னியல்பையே வழிபடுகின்றனர். மார்க்சியத்தில் இருந்து விலகுகிற வலது இடது இரண்டுமே தொழிலாளர்களின் வர்க்க உணர்வுக்கும், அரசியல் உணர்வுக்கும் தடையாகிறது.

 

லெனின்:-“”பொருளாதாரவாதிகளும்பயங்கரவாதிகளும் தன்னியல்பின் வெவ்வேறு கோடிகளை வழிபடுகின்றனர். “பொருளாதாரவாதிகள்” “சுத்தமான தொழிலாளர் இயக்கத்தின்தன்னியல்பை வழிபடுகிறார்கள், புரட்சி இயக்கத்தையும் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் ஒன்றிணைந்த முழுமையாகத் தொடர்புபடுத்துவதற்கு ஆற்றலோ வாய்ப்போ இல்லாத அறிவாளிகளின் ஆவேசமான வெஞ்சினத்தின் தன்னியல்பைப் பயங்கரவாதிகள் வழிபடுகின்றனர்.”

என்ன செய்ய வேண்டும்? – பக்கம்- 104

 

       இத்தகைய தன்னியல்பு வழிபாட்டை சமூக-ஜனநாயகம் மறுதலிக்கிறது. பொருளாதாரவாதிகளும், பங்கரவாதிகளும் மக்களின் புரட்சி நடவடிக்கையைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். சமூக-ஜனநாயகவாதிகள் மக்களிடம் இருந்தே தமது அரசியல் வேலைகளைத் தொடங்குகின்றனர். மக்களின் அதிருப்தியின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் பயன்படுத்துவதிலும், ஒவ்வொரு கண்டன நடவடிக்கையையும் சிறந்த பயனளிக்கும் வகையில் திரட்டிப் பயன்படுத்திக் கொள்வதிலுல் சமூக-ஜனநாயகவாதிகள் திறம்பெற்றவர்களாக வேண்டும்.

 

       நான்காம் இயல், பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்.

 

       வர்க்க அரசியலற்ற பொருளாதாரப் போராட்டத்தை மட்டும் செயற்படுத்தும் பொருளாதாதவாதிகளின் பக்குவமின்மையை இந்த இயலில் லெனின் விவரிக்கிறார். தன்னியல்பான போராட்டத்தை கடந்து செல்ல இயலாத, இந்தப் பக்குவமின்மையும், நடைமுறை வழிப்பட்ட பயிற்சி இன்மையையும், அமைப்புப் பணி செய்துவரத் திறமையின்மையையும் வெளிப்படுகிறது. இதனைப் போக்குவதின் அவசியத்தை லெனின் குறிப்பிடுகிறார்.

 

லெனின்:- “தன்னியல்பாக வளரும் அமைப்பு வடிவங்களுக்கு அடிபணிவது, நம் அமைப்புப் பணியின் குறுகிய தன்மையையும் பக்குவமின்மையையும் உணரத் தவறுவது, மிக முக்கியமான இத்துறையில் உள்ள நம் கைவினைவழிமுறைகளின் குறுகிய தன்மையையும் பக்குவமின்மையையும் உணரத் தவறுவது- இது உண்மையிலே ஒரு நோய், இந்த நோய் நம் இயக்கத்தைப் பீடித்துள்ளது என்று கூறுகிறேன். இது நலிவையொட்டி வருகிற நோய் அல்ல. வளர்ச்சியையொட்டி வருகிற நோய் என்பது நிச்சயம். என்றபோதிலும், தன்னியல்பான சீற்றத்தின் அலையானது இயக்கத்தின் தலைவர்களாகவும் அமைப்பாளர்களாகவும் உள்ள நமக்கு மேல் வீசியடித்துவரும் இந்நேரத்தில்தான் பிற்பட்ட தன்மையைத் தாங்கிப் பேசுவதை எதிர்த்தும், இவ்விஷயத்தில் குறுகிய தன்மையை நியாயப்படுத்துவதை எதிர்த்தும் சமரசத்திற்கிடமற்ற போராட்டம் நடத்த வேண்டும்.

 

நம்மிடையே நிலவும் தேர்ச்சிநயமின்மை குறித்து அதிருப்தியும் அதை நம்மிடமிருந்து போக்கிக் கொள்ள வேண்டும் என்ற அசைக்க முடியாத உறுதிப்பாடும் நடைமுறைப் பணியில் ஈடுபடுகிற அல்லது ஈடுபடத் தயாராகிக் கொண்டிருக்கிற எல்லோரிடமும் எழும்படி செய்வது குறிப்பாக அவசியமாகும்.”

என்ன செய்ய வேண்டும்? – பக்கம்- 135

 

இந்தப் பக்குவமின்மையைப் போக்குவதற்கு முழுநேரப் புரட்சியாளர்கள் தேவைப்படுகின்றனர். தன்னியல்பான போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக மாற்றுவது இந்த முழுநேரப் புரட்சியாளர்களின் பணியாகும்.

 

லெனின்:- “… தொழிலாளி வர்க்கத்தின் தன்னியல்பான போராட்டத்தைப் புரட்சியாளர்களின் பலமான அமைப்பு தலைமை வகித்து நடத்திச் செல்லாத வரை அந்தத் தன்னியல்பான போராட்டம் அதன் உண்மையான வர்க்கப் போராட்டமாகஆகாது.”

என்ன செய்ய வேண்டும்? – பக்கம்- 181-182

 

பொருளாதாரப் போராட்டமானது தொழில் தொடர்பான போராட்டமாகும், அதனால் வேலையில் ஈடுபட்டுள்ள இடத்தின்படி மட்டுமல்லாது தொழில் வாரியாகத் தொழிலாளர்கள் ஒன்றிணைப்பது தேவையாகிறது. முதலாளிகள் தங்களுக்கு இடையே ஒன்றிணைகிறார்களே அதே மாதிரி தொழிலாளி வர்க்கமும் தங்களை ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டும்.

 

தொழிற்சங்கப் போராட்டம் உள்ளூர் அமைப்புகளுடன் மட்டும் தொடர்பை வைத்துக் கொண்டிருந்தால், பாட்டாளி வர்க்கத்தை விடுவிக்கும் போராட்டமாக இல்லாது, வெறும் பொருளாதாரப் போராட்டமாக பின்தங்கிவிடும். இப்போராட்டம் மார்க்சிய அடித்தளத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போது தான் அது வர்க்கத்தின் விடுதலையாக, தொழிலாளர்களின் விடுதலையாக நிலைமாற்றம் பெறும்.

 

லெனின்:- “வேறு ஊர்களில் உள்ள அமைப்புகளினின்று துண்டிக்கப்பட்டுப் போன ஓர் உள்ளூர் அமைப்பு ஒரு சரியான தகவுப்பொருத்த உணர்ச்சியை நீடித்து வைத்திருப்பது மிகவும் கஷ்டமானதாகவும் சில நேரம் அநேகமாக அசாத்தியயமானதாகவும் இருக்கக் காண்கிறது. ஆனால், விலகாமல் மார்க்சிய அடித்தளத்தின் மீது நிற்கும் (stands undeviatingly on the basis of Marxism), முழு அரசியல் போராட்டத்திற்குத் தலைமை வகிக்கும், முழுநேரக் கிளர்ச்சியாளர் பணிக் குழுவைப் பெற்றுள்ள புரட்சியாளர்களின் ஓர் அனைத்து ருஷ்ய அமைப்பிற்கு முறையான தகவுப் பொருத்தத்தை நிர்ணயிப்பதில் என்றைக்கும் கடினமாக இருக்காது.”

என்ன செய்ய வேண்டும்? – பக்கம்- 206

 

       ஐந்தாவது இயல், ஓர் அனைத்து ருஷ்ய அரசியல் பத்திரிகைக்கான திட்டம். ஒரு கட்சி அமைப்பை ஒரு பத்திரிகையால் படைக்க முடியாது, கட்சி அமைப்புதான் பத்திரிகையைப் படைக்கும் என்கிற பொதுவானபோக்கிற்கு மாறாக பத்திரிகையைக் கொண்டு ஓர் அமைப்பை படைக்க வேண்டிய ருஷ்ய சூழ்நிலையை இதில் லெனின் விளக்குகிறார். அதாவது, ஓர் அனைத்து ருஷ்யப் பத்திரிகை மூலமாக பலமான அரசியல் அமைப்புகளுக்குப் பயிற்சி அளிப்பது ஒன்று தான் வழி, வேறுவழி கிடையாது.

 

லெனின்:- “… அரசியல் கிளர்ச்சி வேலை ருஷ்யா முழுவதிலும் தொடர்பு படுத்தப்பட்டிருக்க வேண்டும். எல்லா வாழ்க்கைத் துறைகளின் மீதும் ஒளி பாய்ச்ச வேண்டும், ஆனமட்டும் பரவலான மக்கட் பகுதியினரிடையே நடத்தப்பட வேண்டும், ஆனால் மிக அடிக்கடி வெளியிடப்பட்டுவரும் ஓர் அனைத்து ருஷ்யப் பத்திரிகை இல்லாமல் இன்றைய ருஷ்யாவில் இவ் வேலையைப் பற்றிச் சிந்திக்கவே முடியாது. இந்தப் பத்திரிகையைச் சுற்றிச் சூழ்ந்து உருவாகக் கூடிய அமைப்பு, அதன் கூட்டாளிகள் அமைப்பு எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கும், கடுமையான புரட்சித் தளர்ச்சிநிலவும் காலங்களில் கட்சியின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் தொடாச்சியையும் உயர்த்திப்பிடிப்பதில் இருந்து நாடுதழுவிய ஆயுதமேந்திய எழுச்சிக்குத் தயாரிப்பது, நேரம் குறிப்பது, நடத்தி முடிப்பது வரை எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கும்.”

என்ன செய்ய வேண்டும்? – பக்கம்- 238-239

 

       இந்நூல், போல்ஷிவிக் கட்சியின் கோட்பாட்டு அடித்தளத்தை அளித்தது. இந்நூலில் கூறப்பட்ட ஓர் அனைத்து ருஷ்ய அரசியல் பத்திரிகைக்கான திட்டமாக இஸ்க்ரா செயல்பட்டது.