Friday 21 October 2016

மேற்கோள்களைக் கொண்ட எனது எழுத்து முறையைப் பற்றி..


     எனது எழுத்துமுறை பற்றிக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. நான் வெளியிட்டுள்ள நூல்களைத் தொடர்ந்து படித்த, அல்லது ஒரு நூலையாவது முழுமையாகப் படித்த பெரும்பான்மையினருக்கு இந்தக் கேள்வி எழுவதற்கு வாய்பில்லை. மேலோட்டமாக நூல்களின் வடித்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு வெறும் மேற்கோள்களாக மட்டுமே கண்ணில் படும்.

பொதுவாக மேற்கோள்கள் இடம் பெறுவது, அதுவும் அதிகமாக இடப்படுவது படிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏன் என்றால் இந்த மேற்கோள்கள் என்ன சொல்ல வருகின்றன என்பதை மேலேயும் கீழேயும் உள்ள பகுதிகளைச் சேர்த்துப் படித்தால் தான் நன்றாக அதனைப் புரிந்து கொள்ள முடியும். இந்தச் சிரமத்தை எந்நூல்கள் ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்தே செய்கிறேன். மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்தை நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இதற்குக் காரணமாகும். இதற்குப் பதில் முதலாசிரியர்களின் முழு நூலையும் படித்திடலாமே, மேற்கோள்களை மட்டும் படிப்பதில் புரிதல் முழுயடையாதே என்று கேள்வி எழுப்பலாம்.

நேரடியாக நூலைப் படிப்பவர்கள் சந்திக்கின்ற சிக்கல்களை மனதில் கொண்டே நான் எழுதுகிறேன். நான் 30 ஆண்டுகளாக மார்க்சிய நூல்களைப் படித்து வருகிறேன். தமிழில் தான் படிக்கிறேன். ஒப்பிட்டுக்கு மட்டுமே ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறேன். சில தோழர்கள் படிப்பதற்கு உதவி இருந்தார்கள் என்பது உண்மையே, என்றாலும் எனது படிப்புச் சுயமானதே. அதனால் அதிகச் சிக்கல்களைச் சந்தித்திருக்கிறேன். அந்தச் சிக்கல்களைப் புதியதாகப் படிப்பவர்கள் மற்றும் இதுவரை படித்தவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு உதவிடும் வகையில் இந்த மேற்கோள் எழுத்து பாணியைக் கடைப்பிடிக்கிறேன். இந்த எழுத்து பாணி வெற்றியடைந்துள்ளதை எதார்த்தத்தில் சந்தித்துள்ளதால், தேவைப்படும் வரை இந்த முறையைப் பின்பற்றுவேன்.

"குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற எங்கெல்ஸ் எழுதிய நூல் படிப்பதற்குச் சிரமமானதே. ஆனால் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்” என்ற நூல் அந்தளவிற்குச் சிரமமானது அல்ல. இருந்தாலும் 10 ஆண்டுகள் தொழிற் சங்கங்களில் மற்றும் கட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தோழர்களே “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலை தவறாப் படித்து புரிந்துள்ளனர்.

தொழிலாளர்களின் தன்னியல்பை(Spontaneity) மறுதலிக்கிறார், அவர்களின் வர்க்க குணாம்சத்தை வெளியில் இருந்து வருகிற அறிவுத்துறையினரிடம் இருந்துதான் பெறமுடியும் என்று லெனின் கூறியிருப்பதாக புரிந்து கொண்டுள்ளனர். லெனின் தன்னியல்பு வழிபாட்டையே மறுதலித்துள்ளார். தன்னியல்பு என்பது கருவடிவத்தில் மட்டுமே உள்ள வர்க்கப் போராட்டமாகவே லெனின் கூறுகிறார். இதற்கான மேற்கோளை “லெனின் வாழ்வும் படைப்பும்” என்ற எனது நூலில் காட்டவில்லை. தன்னியல்பு வழிபாட்டை மேற்கொள்கிற வலது, இடது போக்கை சுட்டுகிற லெனினது எழுத்தையே மேற்கோளாக இட்டுள்ளேன். இதனைக் குறிப்பிடுவற்கு காரணம் நான் நினைக்கிற அனைத்து மேற்கோள்களையும் நூலில் இடாமல் தேவைப்படுகிற எழுத்தையே மேற்கோள்களாக இட்டுள்ளேன். இந்த மேற்கோள்களை இணைக்கும் எனது எழுத்துக்கள் லெனின் கருத்தை புரிந்து கொள்வதற்குப் போதுமானதாக இருக்கிறது. எனது புரிதலை நான் நூலாக்குவதைவிட லெனினது கருத்தை நேரடியாகப் புரிந்து கொள்வதற்கு உதவிடுவதே எனது முதன்மை நோக்கமாக இருப்பதனால் மேற்கோள்கள் அதிகம் இடம் பெறுகிறது.

“பொருளாதாரவாதிகளும் பயங்கரவாதிகளும் (Terrorism) வேறுவேறு வகைப்பட்ட தன்னியல்பையே வழிபடுகின்றனர். மார்க்சியத்தில் இருந்து விலகுகிற வலது இடது இரண்டுமே தொழிலாளர்களின் வர்க்க உணர்வுக்கும், அரசியல் உணர்வுக்கும் தடையாகிறது.

லெனின்:-“”பொருளாதாரவாதிகளும்” பயங்கரவாதிகளும் தன்னியல்பின் வெவ்வேறு கோடிகளை வழிபடுகின்றனர். “பொருளாதாரவாதிகள்” “சுத்தமான தொழிலாளர் இயக்கத்தின்” தன்னியல்பை வழிபடுகிறார்கள், புரட்சி இயக்கத்தையும் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் ஒன்றிணைந்த முழுமையாகத் தொடர்புபடுத்துவதற்கு ஆற்றலோ வாய்ப்போ இல்லாத அறிவாளிகளின் ஆவேசமான வெஞ்சினத்தின் தன்னியல்பைப் பயங்கரவாதிகள் வழிபடுகின்றனர்.” (என்ன செய்ய வேண்டும்? – பக்கம்- 104)

இத்தகைய தன்னியல்பு வழிபாட்டைச் சமூக-ஜனநாயகம் (கம்யூனிசம்) மறுதலிக்கிறது. பொருளாதாரவாதிகளும், பங்கரவாதிகளும் மக்களின் புரட்சி நடவடிக்கையைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். சமூக-ஜனநாயகவாதிகள் மக்களிடம் இருந்தே தமது அரசியல் வேலைகளைத் தொடங்குகின்றனர்.

மக்களின் அதிருப்தியின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் பயன்படுத்துவதிலும், ஒவ்வொரு கண்டன நடவடிக்கையையும் சிறந்த பயனளிக்கும் வகையில் திரட்டிப் பயன்படுத்திக் கொள்வதிலுல் சமூக-ஜனநாயகவாதிகள் திறம்பெற்றவர்களாக வேண்டும்.” (லெனின் வாழ்வும் படைப்பும்- அ.கா.ஈஸ்வரன் - பக்கம்-70)

இந்த இருண்டு தன்னியல்பு வழிபாட்டை, எனது சொந்த எழுத்துக்களில் மட்டும் எடுத்துக் கூறினால் படிப்பவர்கள் ஏற்றுக் கொள்வதில் உள்ள தடையை, இந்த மேற்கோள்கள் நீக்குகிறது. நான் புரிந்த லெனினை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவதைவிட, லெனின் கூறியதை நேரடியாகப் புரிந்து கொள்ளுங்கள் என்று வாசகர்களுக்கு வழிவிடுகிறேன். இந்தப் புரிதலுக்குத் தேவைப்படுகிற இணைப்பு வேலையை மட்டுமே நான் செய்கிறேன்.

அப்படி என்றால் மார்க்சியத்தைப் புரிந்து கெள்வதற்கு எந்த உதவியும் எனது எழுத்து செய்திடவில்லையா? என்ற கேள்வி எழுவது நியாயமே. எனது எழுத்துக்கள் மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்தை புரிந்து கொள்வதற்கு உதவுவதோடு, தவறாகப் புரிந்து கொள்வதைத் தவிர்ப்பதற்கும் துணைபுரிகிறது.

அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்பதை மேற்கட்டமைப்பின் செயற்பாட்டை அடித்தளமே அமைத்துக் கொள்கிறது என்றகிற நிர்ணயவாதமாகப் புரிந்து கொள்வதை மறுப்பதற்கும், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது மேற்கட்டமைப்பு அடித்தளத்தை நிர்ணயிக்கிறது என்கிற பரஸ்பர நிர்ணயவாததையும் மறுப்பதற்கும் எனது முதல் நூல் எழுதப்பட்டது.

 “சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்” என்ற நூல் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றிக் கூறியதை ஆதாரத்தோடு வலியுறுத்துகிறது. ஆதாரத்திற்கு மேற்கோள்களை இடமாமல் நிறுவமுடியது. இயக்கவியல் பொருள்முதல்வாதம், அல்லது வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்று மார்க்சும், எங்கெல்சும் தனித்த நூல் எதையும் எழுதவில்லை. இதுபற்றித் தாங்கள் எழுதிய நூல்களின் முன்னுரை, பின்னுரை, உள்ளடக்கத்தில் சில பகுதிகளில் கூறியிருக்கின்றனர். இதனை ஒன்றிணைத்து நிறுவுவதற்கு அனைத்து மேற்கோள்களையும் படித்தேயாக வேண்டும். ஒரு மேற்கோளை மட்டும் நூலின் உள்ளடக்கத்தில் பதிந்து மற்ற மேற்கோளை அடிக்குறிப்பில் நூல்களையும், அதில் உள்ள பக்க எண்களையும் மட்டும் குறித்தாலே போதுமானதுதான், ஆனால் அதில் பல நூல்கள் தற்போது கிடைப்பதில்லை. அந்நூல்களை வைத்திருப்பவர்களும் அதனைத் தேடி படிப்பதில்லை என்பதை மனதில் கொண்டே, அதாவது நம் நாட்டு பெரும்பான்மையான வாசகர்களின் வாசிப்பு முறையை மனதில் கொண்டே நூலின் உள்ளடக்கத்திலேயே மேற்கோள்களை நான் அதிகம் இடுகிறேன்.

எங்கெல்ஸ் தமது இறுதிகாலக் கடிதங்களில் அடித்தளத்தின் தீர்மானகரப் பாத்திரத்தை மறுதலித்தார் என்று தவறாக விளக்கம் கொடுப்பதை மறுப்பதற்கு, ஷ்மிட், ஜோ.பிலோக், பி.மேரிங் ஆகியோர்களுக்கு எழுதிய கடிதங்களின் பகுதியை நேரடியாக மேற்கோளிடாமல் எங்கெல்சின் கருத்தை நிறுவமுடியுமா?

இதுவரை சமூகம் கண்ட பொருளாதார அமைப்பை மார்க்ஸ் எவ்வகையில் விவரிக்கிறார் என்பதைப் பதினேழு பக்கத்தில் மேற்கோளிடாமல் எழுதியிருக்கிறேன். அதே போல், சமூக உணர்வுநிலையின் வடிவங்களான, அரசியல் சித்தாந்தம், பண்பாடு, கலைகள், தத்துவம் ஆகியவை விவரிக்கும் பகுதியில் மேற்கோள் எதுவும் இடப்படவில்லை. இப்பகுதியில் மதம், அறநெறி அகிய இருபகுதியில் மட்டும் தேவை கருதி மேற்கோள் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் இதனை விளக்குவதற்கு மட்டுமே எழுதப்பட்டுள்ளதால் மேற்கோள்கள் தேவைப்படவில்லை. நிறுவும் வகையில் எழுதினால் மேற்கோள்கள் இடம்பெறதான் செய்யும். இந்தப் பகுதி “மார்க்சிய தத்துவம்” நூலில் இடம்பெறும் போது மேற்கோள்கள் இடமாலேயே பதிப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள் நோக்கத்தோடே பயன்படுத்தப்படுகிறது. நோக்கம் புரியாதவர்கள் தவறாகவே பேசுவார்கள்.

மார்க்சின் பிரபலமான மேற்கோளை (அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு - முன்னுரை) முதல் நூலில் முழுமையாகப் பதிவிட்டு, அதனைப் பொழிப்பாகவும், பொழிப்பிலிருந்து சுருக்கமான சாரத்தையும் எழுதியுள்ளேன். இப்பகுதிகள் நான் மார்க்சியத்தை எந்தளவிற்குப் புரிந்துள்ளேன் என்பதைப் படிப்பவர்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறது. எனது நூலுக்கான வாசகர்களை இது போன்ற பகுதிகளே அதிகரிக்கச் செய்துள்ளது.

“சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்” என்ற எனது முதல் நூல் தமது குறிப்பிட்ட கடமையை முடித்துவிட்டதால், அந்த வடிவிலேயே மறுப்பதிப்பு வெளியிட வேண்டாம் என்று முடிவுசெய்து, மறுஅச்சிடப்படவில்லை. இதில காணும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்கிற பகுதியை, “மார்க்சிய தத்துவம்” நூலில் பயன்படுத்திக் கொண்டேன். இந்நூல் உள்ளடக்கத்தில் மேற்கோள் இல்லாமல் எழுதப்பட்டது. தலைப்புகளில் மட்டும் மேற்கோள் ஒன்று இடப்பட்டுள்ளது. மார்க்சிய தத்துவத்தை எதனடிப்படையில் எழுதுகிறேன் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு ஒவ்வொரு அத்தியாயத்தின் மேலே மேற்கோள்கள் இடப்பட்டுள்ளது. இதனைக்கூட நூல் அச்சுக்கு அனுப்பும் போது தான் சேர்த்தேன். எனது நூல்கள் மேற்கோள்களால் நிறப்பட்டுள்ளது என்று குறைபட்டுக் கொள்பவர்கள், “மார்க்சிய தத்துவம்” என்ற நூலில் மேற்கோள்கள் இடாமல் எழுதினேன் என்பதைச் சுட்டிக்காடடவும் இல்லை, அதற்கான காரணத்தையும் அவர்கள் புரிந்து கொள்ளவும் இல்லை. இந்த நூலை தொடக்கநிலையில் உள்ள வாசர்களையும், படித்தவர்களுக்குத் தொகுப்பாகவும் இருக்கும் வகையில் எழுதியது அதனால் மேற்கோள்களை இடவில்லை. மார்க்சிய தத்துவத்தைக் குழப்புபவர்களின் கருத்தை முறியடிக்கும் வகையில் எழுதும் போது மேற்கோள்கள் அதிகமாக இடம்பெறும். இவ்வகையிலும் எழுத வேண்டிய அவசியம் இருக்கிறது. எனது முதல் நூலை மேற்கோளுக்காகவே தேடிக்கொண்டிருப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். படித்துப் பயனடைந்தவர்களுக்குப் புரிந்தது, என்மீது வசைபொழிபவர்களுக்குப் புரியவில்லை.

எனது இரண்டாவது நூல் “மதத்தைப் பற்றி மார்க்சியம்”. மதமும் மார்க்சியமும் என்ற பெயரில் தான் இது பற்றி எழுதுவது வழக்கம், ஆனால், “…பற்றி மார்க்சியம்” என்று நான் தலைப்பிட்டதற்குக் காரணம் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் கூறியதை தொகுத்துத் தருவதே இந்த நூலின் நோக்கம். இதனை எனது முன்னுரையிலும் கூறியுள்ளேன். அவ்வாறு தொகுப்பது மட்டுமே இந்நூல் செய்திருக்கிறதா? இல்லை, மதம் பற்றிய மார்க்சிய கருத்தாக்கத்தைத் திரித்து விளக்குவதை மறுதலித்து, மார்க்ஸ் கூறியதை நிலைநிறுத்தியிருக்கிறது மற்றும் பல்வேறு நூல்களில் கூறியதை வரிசையாகத் தொகுத்து விளக்கப்பட்டுள்ளது.

ந.இரவீந்திரன் “மதமும் மார்க்சியமும்” என்ற தலைப்பில் எழுதிய நூலில் கூறியுள்ளார், “எது குறித்தும் முடிந்த முடிவான கருத்துகளை முன்வைக்காததைப் போன்றே மதம் குறித்தும் கறாரான தீர்ப்புக்கள் எதனையும் மார்க்சியம் வழங்கவில்லை”. இதனை மறுத்து எனது முன்னுரையில் கூறியுள்ளேன். “..மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகிய மூன்று மார்க்சிய முதலாசிரியர்களின், மதத்தைப் பற்றிக் கூறிய கறாரான கருத்துகள் இந்தச் சிறு படைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.” மதத்தன் தோற்றம், இன்றைய இருப்பு, இறுதியில் மறைவு ஆகியவை பற்றிக் கூறியதை தொகுத்து இந்நூலில் கூறப்பட்டுள்ளது. தொகுப்போடு இந்நூல் நின்றுவிடவில்லை. மதம் மக்களின் அபினி என்கிற மார்க்சின் கருத்தை, “தாங்க முடியாத வலியால் துடிக்கும் ஒருவனுக்கு அபினி எவ்வாறு தற்காலிக நிவாரணம் அளிக்கிறதோ அதே போல மதமும் மனிதனுக்குத் தற்காலிகமான நிவாரணம் அளிக்கிறது.” என்று திரித்து விளக்கப்படுத்துவதை மறுதலித்து மார்க்ஸ், லெனின் மேற்கோள்காளால் மார்க்சிய கருத்து நிலைநிறுத்தப்படுகிறது. இதனை எனது புரிதலில் இருந்து விளக்குவதைவிட, முதலாசிரியர்களின் மேற்கோள்களால் விளக்குவதே சரியாக இருக்கும். இதனை என்மீது வசைவாரி பொழிபவர்கள் அறிந்து கொள்வது சிரமமே.

இந்து மதத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பகுத்தறிவுவாத நாத்திகமும் மார்க்சிய நாத்திகமும் பற்றிய சிறுஒப்பீடும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் ஆகிய தத்துவத்தினை மார்க்சிய கண்ணோட்டத்தில் அணுகப்பட்டுள்ளது. இது ஒரு தொடக்க முயற்சியே, இதனை விரிவாக்கி தனிநூலாக வெளியிடப்படும் என்று முன்னுரையில் கூறியுள்ளேன். இதன் தயாரிப்பாகத் தான் உபநிடதம், பிரம்ம சூத்திரம் போன்றவற்றை மறுவாசிப்பு செய்ததை முகநூலில் பகிர்ந்தேன். மார்க்சியம் எனக்கு 30 ஆண்டுகளாகப் பரிச்சியம் என்றால், இந்தியத் தத்துவம் 35 ஆண்டுகளாகப் பரிச்சியம். இந்தியத் தத்துவங்களை மூன்று விதமான அணுகுமுறையில் வாசித்திருக்கிறேன். எனது பள்ளிக்காலத்தில் ஆன்மீகவாதிகவும், கல்லூரிக் காலத்தில சமூக அக்கறையுடனும், பிறகு மார்க்சிய அணுகுமுறையிலும் படித்துள்ளேன்.

2014ஆம் ஆண்டு எனது இரண்டு நூல்கள் வெளிவந்தன, 1, மார்க்சிய தத்துவம், 2,மார்க்ஸ்-எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும். மார்க்சிய தத்துவம் என்ற நூலை மேற்கோளகள் இடையிடையே இடமால், அத்தியாயத்தின் தொடக்கத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நூல் இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற இரண்டையும் விவரிக்கிறது. ஒவ்வொன்றும் 500 பக்கத்தில் பொதுவாக எழுதப்பட்டுள்ள நிலையில், எனது நூல் இரண்டையும் சேர்த்து 100 பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சுருக்கம் அவ்வளவு எளிதானதல்ல என்பது எளிதாகப் புரியக் கூடியதே.

இந்நூலைப் பற்றிப் பெண்ணியம் இணையஇதழில் (http://www.penniyam.com/2015/04/blog-post_66.html) தோழர் கொற்றவை, “மார்க்சியம் அரசியல் பொருளாதாரத்தை மட்டுமே பேசுவதாக விமர்சிப்பவர்களுக்கு அதன் தத்துவார்த்த சிறப்பையும் நுட்பமாக விளக்கக்கூடியதாக இந்நூல் இருக்கிறது. தத்துவம் என்றால் என்ன என்பதில் தொடங்கி அதன் பொருள்முதல்வாதத் தன்மையை வரலாற்றுபூர்வமாக விளக்கிச் செல்கிறது இந்நூல். மற்ற தத்துவங்களிலிருந்து மார்க்சியம் எவ்வகையில் வேறுபடுகிறது என்பதை அறியாதவர்களுக்கு, அல்லது அறிந்தும் அதனைத் திரிப்பவர்களுக்குக் கராரான பதிலளிக்கக்கூடியதாக இந்நூல் இருக்கிறது.” என்று கூறியுள்ளார். எனது எல்லா நூலும் இதனடிப்படையிலேயே எழுதப்படுகிறது. அறியாதவர்கள் அறிய வைப்பது, அறிந்து திரிப்பவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் தெளிவுபடுத்துவது இதுவே எனது எழுத்து முறையாகக் கொண்டுள்ளதால் திரிபை அம்பலப்படுத்துவதற்கு மேற்கோள்கள் அதிகம் பயன்படுத்துகிறேன். ஆனால் இந்நூலில் மேற்கோள்கள் பயன்படுத்தாமைக்குக் காரணம், முதலில் தத்துவத்தை அறிமுகப்படுத்திவிட்டு, பிறகு மற்றொரு நூலில் மார்க்சிய தத்துவம் பற்றிய திரிபை அம்பலப்படுத்தும் வகையில் மேற்கோள்கள் இட்டு எழுதப்படும். அப்போது மேற்கோள்கள் இடுவதைத் தவிர்க்க முடியாது. இதற்கு மேல் இதனைப் புரிய வைக்கப் போராடத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

"மார்க்ஸ்-எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும்” என்ற நூல் மேற்கோள்களுடன் கூடிய படைப்புகளை அறிமுகப்படுத்துவதாக மட்டும் கொள்ளமுடியாது. மார்க்சும் எங்கெல்சும் எவ்வாறு பொருள்முதல்வாதியாக உருபெற்றார்கள், மார்க்சின் அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டம் எவ்வாறு வளர்ச்சியுற்றது, வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை எதனடிப்படையில், எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது என்பதையும் விவரிக்கிறது. இதனை முழுமையாகப் படித்து அனுபவித்த வாசர்களை அதிகமாகவே சந்தித்துவருகிறேன். இந்த மேற்கோள் பாணி எழுத்து பயனுள்ளதாக இருப்பதால், இதனடிப்படையிலேயே அடுத்து, “லெனின் வாழ்வும் படைப்பும்” என்ற நூலை எழுதினேன். இந்நூலையும் படித்தவர்கள் பயனடைந்ததாகக் கூறியதை தொடர்ந்து கேட்டுவருகிறேன். லெனின் வாழ்வின் அடிப்படையில் அவரது படைப்புகளை அறிவதோடு லெனினியம் தோன்றிய சூழலையும் அறிந்து கொள்ள இந்நூல் உதவிடுகிறது.

இந்நூலில், லெனினது “என்ன செய்ய வேண்டும்”, “இடதுசாரி” கம்யூனிசம்- ஓர் இளம்பருவக் கோளாறு என்ற இரண்டு நூல்களைப் பற்றிய எனது மேற்கோள்களோடு கொடுக்கப்பட்ட விளக்கம் அதிகம் பேரைக் கவர்ந்துள்ளது. அதனால் இதனைப் புரிந்து கொள்ளாதவர்களைப் பற்றி நான் கவலைப் படப்பேவதில்லை.

லெனின் “அரசும் புரட்சியும்” என்ற நூலில் மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்களில் இருந்து மேற்கோள்கள் போடுவதைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

“மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டுவது என்றுமில்லாத அளவுக்கு மலிந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு நிலையில், மெய்யாகவே மார்க்ஸ் அரசு என்னும் பொருள் குறித்து என்ன போதித்தார் என்பதைத் திரும்பவும் நிலைநாட்டுவதே நமது தலையாயக் கடமை. இதற்கு, நேரடியாக மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் இருந்து நீண்ட பல மேற்கோள்கள் தருவது இன்றியமையாதது. நீண்ட மேற்கோள்கள் வாசகத்தைக் கடினமாக்கிவிடும், சுவையாகவும் எளிதாதவும் பலரும் படிக்கத்தக்க வாசகமாக்குவதற்குத் தடையாகிவிடும் என்பது மெய்தான்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் அரசு என்னும் பொருள் குறித்துக் காணப்படும் எல்லாப் பகுதிகளையும், அல்லது அத்தியாவசியமான எல்லாப் பகுதிகளையேனும் கூடுமான வரை முழு அளவில் எப்படியும் மேற்கோளாய்க் கொடுத்தாக வேண்டும். அப்போதுதான் விஞ்ஞானச் சோஷலிசத்தின் மூலவர்களுடைய கருத்துக்களின் முழுப் பரிமாணத்தையும், அவற்றின் வளர்ச்சியையும் பற்றி வாசகர் சுயேச்சையான ஓர் அபிப்பிரயத்திற்கு வந்தடைய முடியும், இக்கருத்துக்கள் தற்போது மேலோங்கிவிட்ட “காவுத்ஸ்கிவாதத்தால்” திரித்துப் புரட்டப்பட்டிருப்பதை ஆவண ஆதாரத்தால் நீரூபித்து, கண்கூடாய்ப் புலப்படுத்த முடியும்.”

நான் அவர்கள் கூறியதை விவரிப்பதோடு தற்போது நிறுத்திக் கொள்கிறேன். சில இடங்களில் மட்டுமே சற்று விளக்கம் கொடுப்பேன். நான் புதியதாக விளக்குவதைவிட முதலில் அவர்கள் எழுதியதை விளக்க வேண்டும் என்பதே இன்றைய பணியாக மேற்கொண்டுள்ளேன்.

மண்ணிற்கேற்ற மார்க்சியம் பேசுபவர்கள், ஒவ்வொரு நாட்டிற்கும், தனிதனிப் பிரதேசத்திற்கும் தனியான மார்க்சியம் என்பதாகக் கூறி, அந்தந்த நாட்டில் காணப்படும் மார்க்சியத்திற்கு முரணான தத்துவங்களை மார்க்சியத்தோடு இணைத்திடும் போக்கை, லெனின் கட்டுரைகளைக் கொண்டு இந்நூலில் மறுதலிக்கப்படுகிறது. இந்தத் தொகுப்பிற்கு லெனின் எழுதிய 1) பிரெடெரிக் எங்கெல்ஸ் (1895) 2) நமது திட்டம் (1899) 3) மார்க்சிமும் திருத்தல்வாதமும் (1908) 4) மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் (1910) 5) மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் (1913) 6)மார்க்சியமும் சீர்திருத்தவாதமும் (1913) 7) காரல் மார்க்ஸ் (மார்க்சியப் போதனையும் - வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும்) (1914) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மார்க்சிய அடிப்படைகளின் திரிபுகளை அம்பலப்படுத்தி விளக்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையின் தேவையான மேற்கோள்கள் இல்லாமல் இதனை நிறுவமுடியாது.

தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நூல்களை முடித்துவிட்டு இரண்டு பொருளாதார நூல்களை எழுத திட்டமிட்டுள்ளேன். மார்க்சின் “மூலதனம்” முதல் தொகுதி (1867) வெளிவந்து 150வது ஆண்டு நடைபெறுகிறது. இந்த ஆண்டு இந்த இரண்டு நூல்களையும் எழுதிவிட வேண்டும். முதல் நூல் “அரசியல் பொருளாதாரம்- ஓர் எளிய அறிமுகம்”. இரண்டாவது “மார்க்சின் பொருளாதார நெருக்கடிக் கோட்பாடும் சோஷலிசப் புரட்சியும்”. இதில் முதல் நூல் எந்தவித மேற்கோள்களும் இல்லாமல் எழுத இருக்கிறேன். ஆனால் இரண்டாவது நூல் மேற்கோள்கள் அதிகம் இடம்பெறும். அதற்கான மேற்கோள்கள் 70 பக்கத்தைத் தாண்டிவிட்டது. இதில் நான் விவரிப்பது எவ்வளவு, அப்படியே மேற்கோளாய் இடம்பெறுவது எவ்வளவு என்பது நூல் முடிக்கும் போதே தெரியும். மேற்கோள்கள் அதிகம் இடுவதின் நோக்கமும், மேற்கோளில்லாமல் எழுதுவதின் நோக்கமும் புரியாதவர்களே எனது எழுத்து முறையைக் கேலிசெய்து வருகின்றனர்.

பலர், மார்க்சியத்தைப் பல்வேறு வகையில் திரித்த வகையிலேயே புரிந்தும் எழுதியும் வருகின்றனர். இந்தத் திரித்தல்களை அம்பலப்படுத்தி மார்க்சிய அடிப்படைகளை நிலைநிறுத்துவதற்கே நான் எழுதுகிறேன். நான் கொடுக்கின்ற விளக்கங்கள் மார்க்சிய அடிப்படையிலானது என்பதை வாசகர்களுக்குத் தெளிவு ஏற்படுவதற்கும், அவர்கள் அதனை முழுமையாக, சுயமாகப் படித்துப் புரிந்து கொள்வதற்கு உதவிடும் வகையிலும் மேற்கோள்களைப் பயன்படுத்துகிறேன். தொடக்க நிலை வாசகர்களுக்கு எழுதும் போது மேற்கோள்கள் இல்லாது நேரடியாக எழுதுவேன். இதுவே எனது எழுத்து முறை.

பிரபலமான மேற்கோள்களைவிட அதிகமான மேற்கோள்கள் எனது நூலில் இடம்பெறுவதற்குக் காரணம், முதலாசிரியர்களின் நூலை சொந்தமாக வாசிக்க முயற்சிப்பவர்களுக்கு உதவும் வகையில், அந்நூல்களில் காணப்படும் அந்தந்த அத்தியாயத்தின் சாரத்தை அந்த நூலில் இருந்தே எடுத்து மேற்கோளாக இடுகிறேன். இந்தச் சாரத்தின் மேற்கோள்களைப் படித்துவிட்டு, அந்நூலை முழுமையாகப் படிப்பது சிரமத்தைக் குறைக்கும். இதனை அனுபவித்த பலர் என்னிடம் கூறியிருப்பதை மனதில் கொண்டே, இந்த எழுத்து முறையைத் தொடர்ந்து பின்பற்றுகிறேன். அதனால் எனது எழுத்துமுறையைக் கேள்விக்குள்ளாகக்குவதற்கு எதிராக எனது பாணியிலேயே தொடர்ந்து எழுதுவேன். வெற்றிப் பயணம் தொடரும். பயன் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்


தற்போது “மார்க்சியம் என்றால் என்ன” என்ற நூலை கேள்வி-பதில் வடிவில் எழுதியிருக்கிறேன். 130 கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. மார்க்சிய தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு தேவைப்படுகிற கலைச்சொற்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நூலில் மேற்கோள்கள் தேவைப்படாததால் இடம்பெறவில்லை. எதிர்காலத்தில் “மார்க்சிய அடிப்படைகள்” என்ற தலைப்பில் இந்நூல் விரிவாக எழுதப்படும் அதில் மேற்கோள்களிட்டே மார்க்சியம் விவரிக்கப்படும்.  எதனை எவ்வாறு எழுத வேண்டும் என்ற எனது எழுத்து உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கீழே பதியப்பட்டுள்ளது

      Delete
  2. உங்களைப் பற்றியும், உங்களகது எழுத்துப் பற்றியும் எங்களுக்குத் தெரியுமே தோழர், அப்படியிருக்க இப்படி ஒரு தன்விளக்கம் தேவையா? என்று சில தோழர்கள் கேட்கின்றனர். தேவையில்லை தான், புரியாதவர்களுக்குப் புரியவைக்க வேண்டிய தேயையும் இல்லை தான்.

    “சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியம் தேவை- நூலுக்கு எதிர்வினை” (http://abouttamilbooks.blogspot.in/2016/08/blog-post.html ) எழுதிய பிறகு தோழர் வசுமித்ர முகநூலில் எனது எழுத்து முறைப் பற்றிப் பகடி செய்ததோடு, அவரது வலைப்பூவிலும் எழுதியுள்ளார்.

    “கொட்டேஷன் நிரப்பியான அ.கா.ஈஸ்வரன் அவர்களை முன்வைத்து....” (http://makalneya.blogspot.in/2016/09/blog-post_29.html )
    இது போன்று நாளை என் கருத்தோடு முரண்படுபவர்கள் இந்த முறையில் எழுதினால் அதற்குச் சேர்த்து ஒரு தன்விளக்கம் கொடுத்துவிடலாம் என்றே இதனை எழுதியிருக்கிறேன். தோழர் வசுமித்ர என்னைப் பற்றி எழுதிய பிறகு தான், என் எழுத்து முறையைப் பற்றி இதுவரை பேசாதவர்களும் பாராட்டி வரவேற்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இந்த வாய்வை ஏற்படுத்தித் தந்த தோழர் வசுமித்ர மிக்க நன்றி.

    என் கருத்தோடு முரண்படும் போது எனது எழுத்து முறையைப் பற்றிப் பேசுவது வாடிக்கையாகப் போனதால். என்றைக்குமான பதிலாக இதனைப் பதிந்துள்ளேன்.

    ReplyDelete