Thursday 16 March 2017

மார்க்சியம் என்றால் என்ன?

நூலின் தலைப்பு : மார்க்சியம் என்றால் என்ன?  (கேள்வி - பதில்)

ஆசிரியர் : அ.கா.ஈஸ்வரன்

முதல் பதிப்பு : டிசம்பர் 2016

பக்கங்கள்: 64

விலை : ரூ.50/-

வெளியீடுபரிசல் புத்தக நிலையம்,
71-A, ராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர்,
 சென்னை 600 004
தொடர்புக்கு : 93828 53646 | parisalbooks@gmail.com


மார்க்சியம் என்றால் என்ன?  நூலில் உள்ள முன்னுரை

“மார்க்சியம் ஏற்கெனவே பொய்யென நிரூபிக்கப்பட்டுவிட்டது” என்ற கூக்குரல் மார்க்சியம் தோன்றியது முதலாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. தனிச்சொத்துடைமையின் அழிவுவரை இந்தக் கூக்குரல் கேட்டுக் கொண்டுதான் இருக்கும். தனிச்சொத்து முழுமையும் அழிந்து, மறைந்து போவதற்கு மார்க்சியம் வழிகாட்டியாக இருக்கும். தனிச்சொத்தின் உடைமையாளர்களும், அதன் அடிவருடியான அறிவுத்துறையினர்களும் கூக்குரலை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருப்பர். தனிச்சொத்துடைமையின் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மார்க்சியம் உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டும். அவ்வழியில் சென்று சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகே இந்தக் கூக்குரல் முழுமையாக முடிவுக்கு வரும்.

மார்க்சியம் நமக்கு எந்த வகையில் வழிகாட்டுகிறது என்பதை அறிந்து கொள்வதற்கு இந்த நூல் தொடக்கமாக இருக்கும். எதனையும் முழுமையாக அறிவதற்கு ஒரு தொடக்கம் தேவை. தொடக்கம் எளிமையாக இருக்க வேண்டும், இந்த எளிமையில் இருந்து தான் மேலானவற்றை முழுமையாக அறிந்திட முடியும். இந்த நூல், மார்க்சியம் என்றால் என்ன? என்பதை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. எளிமைக்காகவே கேள்வி பதில் (135) வடிவம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்சியம் பேசுகின்ற தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் ஆகியவைகளை அறிந்து கொள்வதற்கான கலைச்சொற்களை அறிமுகம் செய்து விளக்குகிறது. இந்த விளக்கத்தின் தெளிவு, மார்க்சிய நூல்களைப் படித்தறிவதில் உள்ள சிரமத்தைக் குறைக்கும். இந்த நூல் கேள்வி பதில் வடிவில் இருப்பதால் மிகமிக எளிமையானது என்று நினைத்திடக் கூடாது, திரும்பத்திரும்பப் படித்தறிய வேண்டும். படிக்கும் போது ஏற்படுகிற சந்தேகங்களைப் பிற தோழர்களின் உதவியை நாட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்கிற வகுப்புகள் புரிதலை முழுமைப்படுத்தும்.

மார்க்சிய அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் போன்றோர்களின் நூல்கள் பெரும் பயனளிக்கும். அவ்வகையான அறிமுக நூல்களை ஒவ்வொரு பிரிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. சற்று விரிவாக இறுதியில் பட்டியல் இடப்பட்டுள்ளது. இதனைப் படித்துவிட்டு அவர்களின் விரிவான நூல்களைப் படிக்கத் தொடங்கலாம். இதற்கு இணையாக இந்த ஐவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படித்தறிவது அவசியமானதாகும். ஏன் என்றால் அவர்களின் வாழ்க்கையின் மூலம், ஒரு கம்யூனிஸ்ட்டின் வாழ்க்கையை அறிவதோடு, அவர்கள் எழுதிய நூல்கள் எப்போது, எதற்காக எழுதப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ள ஏதுவாகிறது. ஒரு நூலைப் படிப்பதற்கு அந்நூல் எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டது என்பதை அறிந்து படிக்கத் தொடங்கும் போது அந்த நூலில் காணப்படும் பொருள் எளிதில் பிடிபடுகிறது.

தத்துவப் பகுதியில் கேள்விக்கு பதிலாக, நான் எழுதிய “மார்க்சிய தத்துவம்” என்ற நூலில் இருப்பவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மார்க்சிய அடிப்படைகளை அறிந்து கொள்வதற்கான நூல்களையே, தற்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். மார்க்சிய நூல்களை சுமார் 30 ஆண்டுகளாக படித்ததின் அடிப்படையில் எழுதப்படுகிறது. இதுவெறும் நூலறிவாகக் கொள்ள முடியாது. ஏன் என்றால் மார்க்சியம் என்பது வெறும் படிப்பறிவு கிடையாது. மார்க்சியப் படிப்பறிவு என்பதே எதார்த்த உலகோடு ஒப்பிட்டு அறிவதாகும். இதனை லெனின் தமது “இளைஞர் கழகங்களின் பணிகள்” என்ற கட்டுரையில் தெளிவாக்குகிறார்.

கம்யூனிசமானது குருட்டு மனப்பாடமாய்க் கற்க வேண்டிய ஒன்றாய் அமையாது, நேரடியாய் நீங்களே சிந்தித்துப் பார்த்த ஒன்றாய், தற்காலக் கல்வியின் கண்ணோட்டத்தில் இருந்து  எழும் தவிர்க்க முடியாத முடிவுகள் உள்ளடங்கிய ஒன்றாய் அமையும்படி, இந்த ஒட்டுமொத்த மனித குல அறிவைப் பெற வேண்டும்.
வளர்ந்து வரும் இளந் தலைமுறையினர் எப்படிக் கம்யூனிசம் கற்றறிய வேண்டும் என்கிற கேள்விக்கு இதுவே பதில்.

இவர்கள் தமது படிப்பு, பயிற்சி, கல்வி இவற்றின் ஒவ்வொரு படியையும், சுரண்டலாளர்களது பழைய சமுதாயத்தை எதிர்த்துப் பாட்டாளிகளும் உழைப்பாளி மக்களும் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலமே கம்யூனிசத்தைக் கற்றறிய முடிவும்.

       மார்க்சிய நூல்களைக் குருட்டு மனப்பாடமாகக் கொள்ளாமல், அதனை நடைமுறையோடு இணைத்து, படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் படித்தறிந்த மார்க்சியத்தின் அடிப்படைகள், நடைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கும்.

ருஷ்ய நவம்பர் புரட்சியின் நூற்றாண்டான இந்த ஆண்டு முற்போக்கு இளைஞர்களை மார்க்சியத்தின் பக்கம் ஈர்ப்போம். அவ்விளைஞர்கள் மார்க்சிய அடிப்படைகளைப் படித்தறிந்து சிறந்த கம்யூனிஸ்ட்டாகச் செயற்பட உதவுவோம். கம்யூனிஸ்ட் கட்சி என்பது உழைக்கும் தொழிலாளர்களின் முன்னணிப் படையாகும், அப்படைக்கு மார்க்சியம் வழியாட்டியாகும். சிறந்த கம்யூனிஸ்டாகச் செயற்பட இந்த நூல் அவர்களுக்குத் தொடக்க வழிகாட்டியாக அமையும்.

       இந்நூலை பதிப்பதற்குப் பரிசல் சிவ.செந்தில்நாதனை அணுகிய போது, உடனே பதிப்பிக்க எடுத்துக் கொண்டு, தோழர் வே.மீனாட்சிசுந்தரம் அவர்களின் அணிந்துரையையும் பெற்றுக் கொள்வோம் என்று கூறி பதிப்பு வேலையைத் தொடங்கிவிட்டார். அவருக்கும், அருமையான அணிந்துரை வழங்கிய தோழர் வே.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


.கா.ஈஸ்வரன்                             மின்னஞ்சல்: marxistwriter@gmail.com
சென்னை                                  அலைபேசி எண்: 9283275513-9884092972


2 comments:

  1. இது மிகவும் சிறப்பான முன்னுரை என்று சொல்வதை விட புதிதாய் மார்க்சியம் கற்பவர்களுக்கான அறிவுரையென்றே சொல்ல வேண்டும்.

    இந்த கேள்வி பதிலை இரண்டு தடவை படித்தேன்
    பல புரியாத புதிர்களை புதினமாக படித்தேன்.
    மார்க்சியத்தின் அடிப்படையை மிகவும் எளிதாக புரிய வைத்துள்ளார் தோழர் அ.ஈஸ்வரன்.

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.!!!

    ReplyDelete
  2. நன்றி தோழர்

    ReplyDelete