Sunday 26 March 2017

ஆதிசங்கரர் எழுதிய மநீஷா பஞ்சகம்

ஆசிரியர் = ஆதிசங்கரர்
விலை = ரூ.3/-
விளக்கவுரை = ஸ்வாமி சின்மயானந்தர்
தமிழாக்கம் = ஸ்ரீமதி. காயத்ரீ பாலசுப்ரமணியன், பிர.ப்ரணிபாத சைதன்ய
வெளியீடு = சென்ட்ரல் சின்மயா மிஷன் ட்ரஸ்ட்
            2, 13வது அவென்யூ ஹரிங்கடன் சாலை,
சேத்துப்பட்டு,
சென்னை 600031.


“மநீஷா பஞ்சகம்” என்ற நூலையொட்டி மரபுவழிக் கதை இருக்கிறது. ஆதிசங்கரர் வடஇந்தியாவிற்குச் சென்றிருந்தபோது காசி நகரில் இது நடந்தாகக் கூறப்படுகிறது. ஆதிசங்கரர் தம் சீடர்களுடன் கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதரை வணங்குவதற்குக் கோவிலை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவருக்கு எதிரில் அழுக்கடைந்த தோற்றத்துடன் ஒரு சண்டாலன், தன்பிழைப்பிற்காக இசைக்கருவியை வைத்துகொண்டு இசைத்த வண்ணம் வந்தார். அப்போது ஆதிசங்கரர் எதிரில் வந்த அவரை “விலகு, விலகு” என்று கூறினார். அதற்கு அந்தச் சண்டாலன் கூறினார்.

“சிறந்த சந்யாசியே, உணவால் உண்டான சரீரத்திலிருந்து, உணவாலான சரீரத்தையா? அல்லது சைதன்யத்தில் இருந்து சைதன்யத்தைத்தானா? எதை விலகுவிலகு என்று தூரத்தில் விலக்குவதற்கு விரும்புகிறாய் சொல்.” (1)

அந்தச் சண்டாலன் ஞானம் பெற்ற சந்யாசியான ஆதிசங்கரரைப் பார்த்து இவ்வாறு கேட்கிறார். ஒரு சரீரத்திலிருந்து மற்றோர் சரீரத்தை விலகிப் போகச் சொல்கிறாயா? அல்லது ஆத்மாவிலிருந்து ஆத்மாவை விலகச்சொல்கிறாயா?. இருவருக்கும் உணவால் உண்டான சரீரமே இருக்கிறது. எங்கும் நிறைந்த ஆத்மாவே இருவரிடமும் இருக்கிறபடியால் விலகு என்று சொன்னது எதனை என்று கேட்கிறார்.

இதற்கு அடுத்தப்பாடல், இதனையே நேரடியாகத் தெளிவாகக் கேள்வி வைக்கப்படுகிறது.

“கங்கை நீரில் மற்றும் சேரியில் காணப்படும் குட்டையில் உள்ள நீரில் பிரதிபலிக்கும் சூரியனிடம் வேறுபாடு உண்டா? மேலும் பொற்குடத்தில் மற்றும் மண்குடத்தில் உள்ளேயுள்ள ஆகாயத்திடம் வேறுபாடு உண்டா? எண்ண அலைகளற்ற தன்னிலைபெற்ற ஆனந்தமயமான ஞானக் கடலில் ஆத்மவிஷயத்தில், இவன் பண்டிதன், இவன் புலயன் என்ற இந்த மாபெரும் விபரீத மனமயக்கம் ஏன்?” (2)

சரீர தொடர்புள்ள சம்சாரிக்கே வேறுபாடுகள் உண்டு, ஞானம் பெற்ற சன்யாசிக்கு இந்த வேறுபாடு கிடையாது, அப்படியிருக்க இந்த மாபெரும் விபரீர மனமயக்கம் ஏன் என்று கேள்வி எழுப்படுகிறது.

சந்யாசிக்கு, பண்டிதன் என்றோ? புலையன் என்றோ? வேறுபாடு இருக்கிறதா? என்ற கேள்விக்கு ஐந்து பாடல்களால் பதிலளிக்கப்படுகிறது.

“நனவு, கனவு, தூக்கம் ஆகிய மூன்று நிலைகளில் தெளிவாக எந்த ஒரு ஞானம் உண்டாகிறதோ, பிரம்மா முதல் எறும்பு வரையிலானவற்றின் உடலில் நெருங்கி உலகத்தின் சாட்சியாக எந்த ஞானம் உள்ளதோ அதுதான் நான், “காணும் பொருளல்ல” என்று உறுதியான ஞானம் எவனுக்கு உள்ளதோ அவன் சண்டாளராக இருந்தாலென்ன பிராமணராக இருந்தாலென்ன அவனே குரு என்பதே என்னுடைய எண்ணம்.” (1)

இந்த நூலை வைத்து, ஆதிசங்கரர் வர்ணாசிரமத்தை ஆதிரிக்கவில்லை, இதனை மதவாதிகள் மறைத்துவிட்டனர் என்பதாகக் கருத்து தெவிக்கின்றனர். ஆனால் இது தவறாகும். வர்ணசிரம தர்மம் தேவையில்லை என்று எந்த இடத்திலும் அவர் கூறவில்லை. ஞானம் ஏற்படும்வரை உலகத்தில் வேறுபாடுகள் இருக்கும். சம்சாரத்தில் ஈடுபட்டுள்ள கிரகஸ்தன், சுயதர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றே எழுதியிருக்கிறார். “உபதேச பஞ்சகம்” என்ற பிரகரணத்தில், வேதமானது தினந்தோறும் அத்யயனம் செய்யப்பட வேண்டும். அதில் கூறப்பட்ட நித்யநைமித்திக கர்மாவானது நன்கு அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று கிரகஸ்தனுக்கு உரியதை வலியுறுத்தப்பட்டுள்ளது.

“விவேக சூடாமணி”யின் 94வது பாடலில் (சில பதிப்பில் 91) பிறப்பு, இறப்பு முதலிய இயல்புகளும், பருமன் முதலிய பல மாறுதல்களும், குழந்தை முதலான நிலைகளும் வர்ணாச்ரமாதி நியமங்களும் எல்லாம் ஸ்தூல சரீரத்துடையவையே, என்று சரீரத்தைக் கொண்டு செயற்படுகிற சம்சாரத்தில் காணப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஞானம் பெறுவதற்கு முதலில் சித்தசுத்தி (மனத்தூய்மை) பெற வேண்டும். அதற்குச் சுயதர்மத்தை (பிறப்பால் உருவாகும் தர்மம்- சாதிய தர்மம்) கடைப்பிடிக்கும்படி ஆதிசங்கரர் கூறியுள்ளார்.

“வேதாந்த பிரமாணத்தில் சஞ்சலமற்ற திடநம்பிக்கை உள்ளவனுக்குச் சுயதர்மத்தை கடைப்பிடிப்பதும் அதனால் அந்தக்கரணச் சுத்தியும் ஏற்படுகின்றது. மனத்தூய்மை பெற்ற அவனுக்கு இறை அனுபூதி கிடைக்கிறது. அதுவே சம்சாரத்தை நாசயடையச் செய்கிறது.” (148 சில பதிப்பில் 150)

சாம்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பிறப்பால் உருவான் சாதிய தர்மம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதே அத்வைத சித்தாந்தியான ஆதிசங்கரரின் கருத்தாகும்.


No comments:

Post a Comment