Sunday 23 April 2017

இளைஞர் கழகங்களின் பணிகள் – லெனின் (கட்டுரை அறிமுகம்)

எதிர்கால கம்யூனிச சமூகத்தை மனதில் கொண்டு, இளைஞர்களுக்கு அரசியல் போதனை அளிப்பதற்காக இளைஞர் கம்யூனிஸ்ட் கழகம் ஒன்றை லெனின் அமைத்தார். 1918ஆம் ஆண்டு அக்டோபரில் இளைஞர் கழகத்தின் முதலாவது காங்கிரஸ் நடைபெற்றது. 1920ஆம் ஆண்டு இளைஞர் கழகங்களின் மூன்றாவது காங்கிரசில் இளைஞர் கழகங்களின் பணிகள் என்ற தலைப்பில் லெனின் உரை நிகழ்த்தினார். இவ்வுரையில் லெனின் இளம் கம்யூனிஸ்டுக் கழகத்தின் அடிப்படைப் பணிகளை விவரித்தார்.

                பொதுவில் இளைஞர்களுக்கும் குறிப்பாக இளங் கம்யூனிஸ்ட் கழகங்களில் உள்ள இளைஞர்களுக்கு முன்னுள்ள பணிகளை ஒரே சொல்லில் சொல்ல வேண்டுமாயின் “கற்றறியுங்கள்” என்று லெனின் கூறினார். ஆனால் எதைக் கற்றறிவது, எப்படிக் கற்றறிவது என்ற அத்தியாவசியமான கேள்விக்கு இச்சொல் பதில் அளிக்கவில்லை என்பதைத் தெரிவித்து, எதைக் கற்க வேண்டும், எப்படிக் கற்க வேண்டும் என்பதை இச் சொற்பொழிவில் விரிவாக விளக்கினார்.

“.. இளைஞர்களுக்கு நாம் போதிக்க வேண்டியது என்ன, இளைஞர்கள், கம்யூனிச இளைஞர்கள் என்னும் பெயருக்கு உரியவராகும் தகுதி பெற உண்மையாகவே விரும்பினால், அவர்கள் கற்றறிந்து கொள்ள வேண்டியது என்ன, நாம் துவக்கியிருக்கும் பணியை நிறைவுறச் செய்து முடித்து வைக்கக் கூடியவர்களாகும் பொருட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது எப்படி என்கிற பிரச்சினை குறித்து நாம் விவரமாய்ப் பரிசீலிக்க வேண்டும்.

இளைஞர் கழகமும் பொதுவில் கம்யூனிசத்துக்கு முன்னேறிச் செல்ல விரும்பும் இளைஞர்கள் அனைவரும் கம்யூனிசத்தைக் கற்றறிந்தாக வேண்டும் என்பதே முதலாவதும் மிகவும் இயற்கையானதுமான பதிலாய்த் தோன்றுகிறது…..”

                கம்யூனிச நூல்களைப் படிக்க வேண்டும் ஆனால் அது மட்டும் போதாது, ஏனென்றால் வேலையில் ஈடுபடாமல், போராட்டம் இல்லாமல் போனால் அந்த ஏட்டறிவினால் பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை. தயாராய் வரையறுத்த முடிவுகளை தெரிந்து கொண்ட ஒரே காரணத்தால் தம்மை மெச்சிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் பரிதாபத்துக்கு உரியவரே என்கிறார் லெனின்.

“இந்த அறிவை நீங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது, விமர்சனக் கண்கொண்டு ஆய்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வேண்டாத குப்பையை எல்லாம் மூளையில் அடைத்துக் கொள்ளாமல், கல்வியில் சிறந்த இக்கால மனிதர் எவருக்கும் அத்தியாவசியமான உண்மைகளைக் கொண்டு சிந்தனையை வளமாக்கிக் கொள்ள முடியும்.

கருத்து மிக்க கடும் முயற்சி இல்லாமலே, விமர்சனக் கண்கொண்டு பரிசீலிக்க வேண்டிய உண்மைகளைப் புரிந்து கொள்ளாமலே ஒரு கம்யூனிஸ்டு, தயாராய் வரையறுத்து வைக்கப்பட்ட முடிவுகளைத் தெரிந்து கொண்டு விட்ட ஒரே காரணத்தால் தனது கம்யூனிசத்தை மெச்சிப் புகழ்ந்து கொள்ள நினைப்பாராயின் உண்மையில் அவர் பரிதாபத்துக்குரிய கம்யூனிஸ்டுதான். இத்தகைய நுனிப்புல் மேயும் போக்கு நிச்சயமாய் ஆபத்தையே உண்டாக்கும்.

அறிந்தது குறைவே என்பது எனக்குத் தெரிந்தால் மேலும் கற்க முயலுவேன். ஆனால் நான் ஒரு கம்யூனிஸ்டு, எதையும் தீர்க்கமாய்த் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்று கூறும் ஒருவர் எந்நாளும் எவ்விதத்திலும் கம்யூனிஸ்டுக்கு ஒப்பானவராக முடியாவே முடியாது.”

-அப்படி என்றால் எப்போது கம்யூனிஸ்ட்டாக முடியும் என்பதை லெனின் கூறுகிறார். மார்க்சிய நூல்களில் காணப்படும் முடிவுகளை மட்டும் தெரிந்து கொள்வது மார்க்சியம் ஆகாது, மனிதகுலம் படைத்தளித்திருக்கும் அனைத்து அறிவையும் மார்க்சிய அணுகுமுறையில் அறிந்து கொண்டவரே மார்க்சியர் ஆவார். அப்படிப்பட்டவரே ஒரு நடைமுறை கம்யூனிஸ்ட்டாக முடியும்.

“மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று உங்கள் சிந்தனையை நீங்கள் வளமாக்கிக் கொள்ளும் போது மட்டுமே உங்களால் கம்யூனிஸ்டாக முடியும்.
கம்யூனிசமானது குருட்டு மனப்பாடமாய் கற்க வேண்டிய ஒன்றாய் அமையாது, நேரடியாய் நீங்களே சிந்தித்துப் பார்த்த ஒன்றாய், தற்காலக் கல்வியின் கண்ணோட்டத்தில் இருந்து  எழும் தவிர்க்க முடியாத முடிவுகள் உள்ளடங்கிய ஒன்றாய் அமையும்படி, இந்த ஒட்டுமொத்த மனித குல அறிவைப் பெற வேண்டும்.
வளர்ந்து வரும் இளந் தலைமுறையினர் எப்படிக் கம்யூனிசம் கற்றறிய வேண்டும் என்கிற கேள்விக்கு இதுவே பதில்.

இவர்கள் தமது படிப்பு, பயிற்சி, கல்வி இவற்றின் ஒவ்வொரு படியையும், சுரண்டலாளர்களது பழைய சமுதாயத்தை எதிர்த்துப் பாட்டாளிகளும் உழைப்பாளி மக்களும் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலமே கம்யூனிசத்தைக் கற்றறிய முடிவும்.”

                மனிதன் படைத்துள்ள அறிவுக் கருவூலங்களைப் பெற்று சிந்தனையை வளப்படத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிய லெனின் அந்த அறிவை எவ்வாறு கற்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.

“பள்ளியின் செயற்பாடுகளில் ஒவ்வொரு படியையும், பயிற்சி, கல்வி, போதனை இவற்றில் ஒவ்வொரு படியையும், சுரண்டலாளர்களுக்கு எதிராய் உழைப்பாளி மக்கள் அனைவரும் நடத்தும் போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதவாறு அதனுடன் இணைத்துக் கொள்வதன் மூலமே கற்றறிய வேண்டும்..”

                இதுகாறும் ஒழுக்கநெறி என்று கூறப்படுவதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இந்த உரையில் லெனின் விளக்கியிருக்கிறார். ஒழுக்க நெறியை நிராகரிப்பவர்கள் என்று முதலாளித்துவ வர்க்கத்தினர் கம்யூனிஸ்டுகள் மீது குற்றம் சுமத்துகின்றனர் இதனை லெனின் மறுத்துரைக்கின்றார்.

“..கம்யூனிச அறநெறி என்பதாய் ஒன்று இருக்கிறதா? கம்யூனிச ஒழுக்கம் என்பதாய் ஒன்று இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. நமக்கென ஒரு தனி அறநெறி கிடையாது என்பதாய் அடிக்கடி பேசப்படுகிறது, ஒழுக்கநெறி அனைத்தையுமே நிராகரிப்பவர்கள் என்பதாய்க் கம்யூனிஸ்டுகளாகிய நம்மீது முதலாளித்துவ வர்க்கத்தினர் அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள். பிரச்சினையைக் குழுப்புவதற்கான – தொழிலாளர், விவசாயிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கான – ஓர் உபாயமே இது.

எந்த பொருளில் நாம் அறநெறியை, ஒழுக்க நெறியை நிராகரிக்கிறோம்?

முதலாளித்துவ வர்க்கத்தினர் அதற்கு அளித்திடும் பொருளில் நிராகரிக்கிறோம். கடவுள் கட்டளைகளை அவர்கள் அறநெறிக்கு அடிப்படையாக்கிக் கொள்கிறார்கள். இவ்விவகாரம் குறித்துப் பேசுகையில், எங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று நாம் கூறுகிறோம்.
மனிதனுக்குப் புறம்பான, வர்க்கத்துக்குப் புறம்பான கருத்தினங்களை அடிப்படையாய்க் கொண்ட எந்த ஒழுக்கநெறியையும் நாம் நிராகரிக்கிறோம். அது ஏமாற்றுவித்தை, மாய்மாலம், நிலப்பிரபுக்கள், முதலாளிகளது நலன்களை முன்னிட்டு தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மூடர்களாக்குவதற்கான உபாயம் என்கிறோம்.

எங்களுடைய ஒழுக்கநெறி பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தது என்று நாம் கூறுகிறோம். எங்கள் ஒழுக்கநெறி பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் நலன்களில் இருந்துதான் தோன்றுகிறது”

ஒழுக்கநெறியை எவ்வாறு அணுக வேண்டும் என்று லெனின் வழிகாட்டியிருக்கிறாரோ அதன்படியே அனைத்தையும் அணுக வேண்டும்.


Monday 17 April 2017

சந்தையைப் பிடிக்கும் ஏகாதிபத்தியப் போரும் கம்யூனிஸ்டுகளின் கடமைகளும்

(முதல் உலகப் போரும் ருஷ்ய போல்ஷிவிக்குகளின் பார்வையும்)

(போரும் ருஷ்ய சமூக-ஜனநாயகமும், போரும் சோஷலிசமும், மாருஷ்யர்களது தேசியப் பெருமித உணர்ச்சி குறித்து- என்கிற லெனின் நூல்களில் இருந்து)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலாளித்துவ உலகம் சில நபர்களிடம் ஏகபோகமாக சுருங்கிய போது ஜெர்மனி தமது இயந்திர தொழில் வளர்ச்சியில் இங்கிலாந்தையும் பிரான்சையும் விட உயர்ந்துவிட்டது. ஜெர்மன் ஏகாதிபத்தியம் இங்கிலாந்திடமும் பிரான்சிடமும் உள்ள காலனிப்பகுதிகளை பறித்துக்கொள்ள முயன்றது. இதே நேரத்தில் ருஷ்ய முதலாளிகளுக்கும் புதிய சந்தைகள் தேவைப்பட்டன. கிழக்கு நாடுகளை சந்தைப்படுத்த நினைத்தது. ஜெர்மனியும் அந்தப் பகுதிகளை தமதாக்கிக்கொள்ள முயற்சித்தது. எனவே இவ்விரண்டு நாடுகளுக்கு இடையே போர் சூழல் ஏற்பட்டது. ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட சந்தைப் போட்டியின் வெளிப்பாடே இந்தப் போர்.

குறிப்பாக ஜெர்மனியும், இங்கிலாந்தும் தங்களது படைவலிமையை பெரும் அளவுக்கு அதிகப்படுத்தி வைத்திருந்தனர். இந்தப் போர் உலகப் போராக மாறக்கூடியதாக இருந்தது.

ருஷ்யாவின் மீது ஜெர்மன் 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போர் அறிவிப்பைச் செய்தது. ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி ஒருப்பக்கத்திலும் இங்கிலாந்து, பிரான்ஸ், ருஷ்யாவும் மறுபக்கத்தில் அணிவகுத்துக் கொண்டன. அமெரிக்காவும் ஜப்பானும் இதர நாடுகளும் போரில் இறங்கின. இந்தப் போர் ஒர் உலகப் போராக உருப்பெற்றது.

இரண்டாம் அகிலத்தின் ஒவ்வொரு மாநாட்டிலும் போர் எதிர்ப்புத் தீர்மானங்கள் போடப்பட்டிருந்தன. இதுவரையில் அனைத்து நாடுகளின் கட்சிகளும் இதனை ஏற்றிருந்தன. ஆனால் ஏகாதிபத்தியப்போர் தொடங்கியவுடன் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டன. ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தமது அரசின் போர்க் கடனுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதன் மூலம் ஏகாதிபத்திய அரசின் போர் செயலுக்கு துணைபோனது. பிரான்ஸ், பெல்ஜிய கம்யூனிஸ்டுகளும் இதே நிலையினை எடுத்தனர். இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான கட்சிகள், தங்களது முதலாளித்துவ தாய் நாட்டை காப்பதற்கு தொழிலாளர்களை அழைத்தன. இரண்டாம் அகிலத்தின் தீர்மானங்கள் தோல்வி கண்டன. அகிலம் நீர்த்துப் போயிற்று. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதத்துக்கு துரோகம் செய்து தாய்நாட்டை காப்போம் என்ற முழுக்கத்தோடு முதலாளித்துவ தேசியவெறிக்கு பலியாயினர். சொல் அளவில் கம்யூனிஸ்டுகள் செயலில் தேசியவெறியராகிப் போனார்கள்.

இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமும் இருந்தது. சொந்த நாட்டின் தொழிலாளர்களை சுரண்டிவந்த முதலாளித்துவம், காலனிகளை அமைத்து அங்கே உள்ள தொழிலாளர்களை கடுமையாகச் சுரண்டியது. குறிப்பாக இங்கிலாந்து பூர்ஷ்வாக்கள் தங்களது நாட்டு தொழிலாளர்களை சுரண்டி சேர்த்ததைவிட தங்களது காலனி நாடுகளில் அதிகமாக சுரண்டி லாபம் ஈட்டினர். இவ்வாறு ஈட்டப்பட்ட அதீத லாபத்தில் இருந்து, தங்களது நாட்டுத் தொழிலாளர்களில், நவீனத் தொழில்நுட்பத்தில் மேலடுக்கில் இருக்கின்றவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அதிகமான ஊதியத்தை வழங்கினர். இதன் மூலம் ஒருவித மேட்டுக்குடி தொழிலாளி (labour aristocracy) பகுதியினரை உருவாக்கினர்.

இந்தச் சலுகை பெற்ற தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகளில் நுழைந்தனர். பிறகு இவர்கள் தொழிலாளர் சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பதவிபெற்றனர். முதலாளித்துவத்தின் செழுமையான காலப்பகுதியில் சட்டவழிப்பட்ட போராட்டத்தில் மட்டுமே இவர்கள் கவனம் செலுத்தி வந்தமையால் அதற்கு மட்டுமீறி பழக்கப்படுத்திக் கொண்டனர். சட்டவழிப்பட்ட முறையில் செயற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அடுத்து புரட்சிகர நடவடிக்கைகளாக விரிவுபடுத்த வேண்டும் என்பதை முழுமையாக மறந்துபோயினர்.

கட்சியின் மேல்மட்டத்தினர் இந்த தொழிற்சங்க, நாடாளுமன்ற போக்கிற்கு ஏற்பவே செயற்பட்டு தாமும் சட்டவழியிலான போராட்டத்தில் கறைந்து போனதால், வர்க்கப் போராட்ட அரசியலை மறுதலித்துவிட்டு வர்க்க சமரசப் போக்கை பின்பற்றினர். இவர்கள் பாட்டாளி வர்க்க புரட்சிகர போராட்ட அரசியலை விட்டுவிட்டு, சட்டவழியாகவே (நாடாளுமன்றம் வாயிலாகவே) சோஷலிச சமூகத்தை அடைந்துவிடலாம் என்று கருதினர். மார்க்சியத்தின் புரட்சிகரக் கோட்பாடுகளை மறுதலித்துவிட்டு சந்தர்ப்பவாத கொள்கையைப் பின்பற்றினர்.

இவர்களைப் பற்றி லெனின் கூறுகிறார்:-
“பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்த புறநிலைகள் சந்தர்ப்பவாதத்தை வெகுவாகத் தீவிரப்படுத்திற்று, பூர்ஷ்வா அமைப்பில் அனுமதிக்கப்படும் சட்டவழியிலான வாய்ப்பினை பயன்படுத்துவது என்பதற்கு மாறாக அந்த நிலைக்கு உட்பட்டு அடிபணிவது என்று மாற்றியது, தொழிலாளி வர்க்கத்தின் உயரினத்தையும், அதிகாரக்கும்பல் ஒன்றையும், அதன்மீது நிற்கும் ஒரு மெல்லிய மேலோடாக, பொருக்காக மாற்றியது, வழித்துணையர்களாக பல குட்டிபூர்ஷ்வா “வழித்துணை வழிப்போக்கர்களை” சமூக-ஜனநாயக் கட்சிகளின்பால் ஈர்த்தது”1

ஏகாதிபத்தியத்திடம் சலுகை பெற்ற இவ்வகையினர், போர்க் காலத்திலும் தங்களது சலுகைகள் கிடைத்திட வேண்டும் என்று ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து தாய் நாட்டைக் காப்போம் என்று புரட்சிகர பாட்டாளி வர்க்கத்திற்கு துரோகம் புரிந்தனர்.

“முதலாளிகளாக மாறிய இந்தத் தொழிலாளர்கள் அல்லது மேட்டுக்குடி உழைப்பாளர்கள்” தங்களது வாழ்க்கை முறையிலும், ஊதியத்தின் அளவிலும், தங்கள் கண்ணோட்டம் முழுவதிலும் குட்டிமுதலாளித்துவ மனப்பான்மை கொண்ட இவர்கள், இரண்டாவது அகிலத்தின் பிரதானத் தூண்கள் ஆவர், தற்காலத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான சமூகத் தூண்கள் ஆவர். ஏனெனில், அவர்கள்தாம் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முதலாளித்துவ வர்க்கத்தின் மெய்யான கையாட்களாக, முதலாளித்துவ வர்க்கத்தின் தொழிலாளர் சேவகர்களாக, சீர்திருத்தவாதத்துக்கும் தேசியவெறிக்குமான மெய்யான வாகனங்களாக இருக்கின்றனர். பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையில் நடைபெறும் உள்நாட்டுப் போரில், அவர்கள் தவிர்க்க இயலாதபடி, பெரிய எண்ணிக்கையில் முதலாளித்துவ வர்க்கத்தின் தரப்பை ஏற்கின்றனர்,…..” 2

-இதுவே இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாத போக்கிற்கு பெரும் காரணமாக அமைந்தது.

போல்ஷிவிக் கட்சி மட்டுமே ஏகாதிபத்தியப் போரை எதிர்த்து உறுதிகுலையாமல் நின்றது. ஏகாதிபத்தியப் போரின் தன்மையைப் பற்றி லெனின் தொடர்ந்து எழுதினார். மற்றொரு போக்காக நடுநிலைவாதிகள் தோன்றினர். ஜெர்மனியில் காவுத்ஸ்கியின் தலைமையிலும், பிரான்சில் லோங்கேயின் தலைமையிலும், ருஷ்யாவில் டிராட்ஸ்கியின் தலைமையிலும் தங்களது தடுமாற்றத்தை நடுநிலை போக்காகக் கடைப்பிடித்தனர்.

தாய்நாட்டைக் காப்போம் என்ற சந்தர்ப்பவாத முழக்கத்திற்கு எதிராக லெனின் ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக, உள்நாட்டு முதலாளித்துவத்துக்கும் எதேச்சதிகார அரசுக்கும் எதிராகத் திருப்பும்படி கோரிக்கை விடுத்தார். இதுவே தொழிலாளர்களின், விவசாயிகளின், மக்களின் நலன்களை வெளிப்படுத்துவதாக இருந்தது.

போர் தொடங்கியதில் இருந்தே தற்போதைய சூழலுக்கு ஏற்ப ஒரு புதிய அகிலத்தை (மூன்றாம் அகிலத்தை) தோற்றுவிக்க வேண்டும் என்று லெனின் திட்டமிட்டிருந்தார். அதற்கான சக்திகளை திரட்டவும் தொடங்கினார்.

1915ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சர்வதேசியவாதிகளின் முதல் மாநாடு ஜிம்மர்வால்ட் என்ற இடத்தில் நடைபெற்றது. போரை எதிர்த்து செயற்படுவதற்கு ஒரு சர்வதேச இயக்கத்தின் முதல்படி என்று லெனின் இதனை கருதினார். இந்த மாநாட்டில் ஜிம்மர்வால்ட் இடதுசாரி குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் போல்ஷிவிக்குகள் மட்டுமே போருக்கு எதிரான முரண்பாடு இல்லாத கொள்கைகளைக் கடைபிடித்தனர். அடுத்த ஆண்டு சுவிட்சர்லாந்தில்  சர்வதேசவாதிகளின் இரண்டாவது மாநாடு கூடியது.

இந்தக் கூட்டத்தின்போது எல்லா நாடுகளிலும் சர்வதேசியவாதிகளின் குழு உருவாகியிருந்தது. இந்தக் கூட்டத்தில் சர்வதேசியவாதிகளுக்கும், சமூக தேசிய வெறியர்களுக்கும் இடையே உள்ள பிளவு முன்பைவிட தெளிவாக வெளிப்பட்டது. மாநாட்டின் முடிவில் விவாதங்களின் அடிப்படையில் ஒர் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கை ஜிம்மர்வால்ட் மாநாட்டினைவிட ஒருபடி முன்னேற்றம் கண்டிருந்தது. அனால், ஜிம்மர்வால்ட் மாநாடு போலவே இந்த மாநாடும் போல்ஷிவிக்குகளின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் மக்கள் இடதுசாரிப் பக்கத்திற்கு வந்துகொண்டிருந்தனர். போரினால் ஏற்பட்ட துன்பங்கள் அவர்களை இடதுசாரி பக்கம் சேர்த்தது.

ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்றுதல், தன்னுடைய சொந்த அரசை தோற்கடிக்கச் செய்தல், மூன்றாவது அகிலத்தை அமைத்தல் ஆகியவை போல்ஷிவிக்குகளின் கருத்துக்களாக இருந்தன.

ஏகாதிபத்தியப் போரின் போது லெனின் பல்வேறு கட்டுரைகளில் போல்ஷிவிக்குகளின் பார்வையினை வெளிப்படுத்தும் விதமாக எழுதினார். அதில் குறிப்பிடத்தக்க நூல்கள். போரும் ருஷ்ய சமூக-ஜனநாயகமும், போரும் கட்சியின் கடமைகளும், போரும் சோஷலிசமும், மாருஷ்யர்களது தேசியப் பெருமித உணர்ச்சி குறித்து.

இதுபோன்ற கட்டுரைகளில் தற்போதையப் போரை எவ்வாறு சமூக-ஜனநாயகவாதிகள் அணுகுவது என்பதைப் பற்றி எழுதினார். “சமாதானம் நிலவவேண்டும்”, “ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும்”. “ஏகாதிபத்தியப் போரில் தங்களுடைய சொந்த நாட்டை அந்தந்த நாட்டு மக்களே தோற்கடிக்கச் செய்ய வேண்டும்”, “பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி பெறவேண்டும்” என்பதாக இந்தப் படைப்புகளில் கருத்துரைக்கப்பட்டது.

ஏகாதிபத்திய உலகப் போர் தொடர்பாக, போல்ஷிவிக் கட்சியின் அணுகுமுறை பற்றிய ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் ஆவணமாக போரும் ருஷ்ய சமூக-ஜனநாயகமும் என்ற கட்டுரை அமைந்தது. இது இரண்டாம் அகிலத்தின் அனைத்து நாடுகளின் நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டது. ருஷ்யாவிலும், வெளிநாடுகளிலும் பரவலாக விநியோகிக்கப்பட்டது. இக்கட்டுரையின் தொடக்கமே நடைபெற்றுவரும் ஏகாதிபத்தியப் போர் தொடங்கியதின் காரணத்தையும், அதன் நோக்கங்களையும் தொகுத்தளிக்கிறது.

“அனைத்து நாடுகளின் அரசுகளும் முதலாளித்துவக் கட்சிகளும் பல பத்தாண்டுகளாக ஆயத்தம் செய்துவந்த ஐரோப்பியப் போர் மூண்டுவிட்டது. ஆயுத தளவாடங்களின் பெருக்கம், முன்னேற்றமடைந்த நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியின் ஆக சமீப கட்டமான ஏகாதிபத்திய கட்டத்தில் சந்தைகளுக்கான போராட்டம் தீவிரமடைதல் மற்றும் மிகவும் பிற்பட்டதான கிழக்கு ஐரோப்பிய முடியாட்சிகளின் அரசவம்ச நலன்கள் ஆகியவை இந்தப் போரைத் தவிர்க்க முடியாத வகையில் கட்டாயம் ஏற்படுத்தியே தீரும், அவ்வாறு ஏற்படுத்தியுள்ளன.

பிரதேசங்களைக் கவர்ந்து பறித்தல், பிற தேசங்களை அடிமைப்படுத்துதல், போட்டியிடும் தேசங்களை நாசப்படுத்தல், அவற்றின் செல்வங்களைச் சூறையாடுதல், ருஷ்யா, ஜெர்மனி, பிரட்டன் மற்றும் இதர நாடுகளின் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளில் இருந்து உழைக்கும் மக்கள் திரளின் கவனத்தைத் திசைதிருப்புதல், தொழிலாளர்கள் ஒற்றுமையைக் குலைத்து, தேசியவாதம் மூலம் அவர்களைப் பயனற்றவர்களாகக்குதல், பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தைப் பலவீனப்படுத்த அவர்களது முன்னணிப் படையினை அழித்தொழித்தல்- இவையே தற்போதைய போரின் ஒரே மெய்யான உட்கிடை முக்கியத்துவம் மற்றும் குறிபொருளும் ஆகும்.” 3

       மேலும் கூறுகிறார், போரிடும் ஒரு பிரிவுக்கு ஜெர்மன் முதலாளித்துவ வர்க்கம் தலைமை தாங்குகிறது, இப்போர் தாயகத்தையும், சுதந்திரத்தையும், நாகரிகத்தையும் பாதுகாப்பதற்கும், ஜாரிசத்தை அழிப்பதற்கும் நடைபெறும் போராக பிரக்கடனப்படுத்துகிறது. மற்றொரு பிரிவுக்கு தலைமைத் தாங்கும் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவர்க்கமும், தமது நாடுகளைப் பாதுகாப்பதற்கும் ஜெர்மன் கொடுங்கோன்மையை எதிர்ப்பதற்கும் போராடுவதாகக் கூறுகிறது. ஆனால் தொழிலாளி வர்க்கத்தையும், பாடுபடும் பெரும்பாலான மக்களையும் ஏமாற்றுவதற்கே இந்தப் போர் நடைபெறுவதாக லெனின் கூறுகிறார். போரின் உண்மையான நோக்கத்தை தெளிவுபடுத்துகிறார்.

“பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் போராட்டம், ஜெர்மன் காலனிகளைக் கவர்ந்து பற்றுவதையும், அதிக விரைவான பொருளாதார வளாச்சி பெற்றிருந்த அந்தப் போட்டித் தேசத்தை நாசப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.” 4

       ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களைக் கூறிய லெனின், அடுத்து முதலாளித்துவ தேசியவெறியை, வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்கள் எதிர்த்து, சர்வதேசியவாதத்தை பாதுகாப்பது உடனடி கடமையாகும் என்கிறார்.

“தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி அவர்களை ஒருவருக்கொருவர் எதிராகப் போரில் நிறுத்தவும் அனைத்து நாடுகளையும் சேர்ந்த முதலாளித்துவ வர்க்கம் எவ்வளவு அதிகக் கடுமையாக முயல்கிறதோ, இந்த உன்னத நோக்கத்திற்காக அது ராணுவச் சட்டத்தையும், ராணுவத் தணிக்கை முறையையும் எவ்வளவு அதிக மிருகத்தனமாக நடைமுறைப்படுத்துகிறதோ அந்தளவுக்கு அதிகமான வர்க்க உணர்வுள்ள தொழிலாளி வர்க்கம் அதன் வர்க்க ஒருமைப்பாட்டையும் அதன் சர்வதேசியவாதத்தையும் அதன் சோஷலிஸ்டு துணிபுகளையும் எல்லா நாடுகளிலும் உள்ள “தேசபக்த” முதலாளித்துவக் கும்பல்களின் கட்டற்ற தேசியவெறியை எதிர்த்தும் பாதுகாத்துக் கொள்வதைத் தமது மிக அவசரக் கடமையாக கருத வேண்டும்.

வர்க்க உணர்வுடைய தொழிலாளர்கள் இந்த நோக்கத்தைக் கைவிடுவார்களானால் அவர்கள் தமது சோஷலிஸ்டு விருப்பங்களைக் கைவிடுவது ஒரு புறமிருக்க சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான விருப்பங்களைக்கூடத் துறந்தவர்களாவார்கள்.” 5

       இந்தக் கடமையை ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகள் நிறைவேற்றிட தவறிவிட்டனர் என்பதை லெனின் ஏமாற்ற உணர்வுடன் பதிவு செய்கிறார். அகிலத்தில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் சோஷலிசத்திற்குப் பதில் தேசியவாதத்தை கைக்கொண்டனர். தமது சொந்த நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் தேசியவெறிக்கு அடிபணிந்து போரை நியாயப்படுத்த முனைந்தனர். அகிலத்தின் தலைவர்கள் சோஷலிசத்திற்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர் என்று கடிந்துகொண்டார். ஒரு விஷயத்தில் அவர் மிகவும் வேதனைப்பட்டார்:-
“அனைத்துப் புரட்சிகரச் செயல்பாட்டையும் தவிர்க்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகும் அளவுக்கு ஜெர்மன் சமூக-ஜனநாயகம் பலவீனமாக இருந்தது என்று பாவித்துக் கொண்டாலும் கூட அது இந்த தேசியவெறி முகாமில் சேர்ந்திருக்கக் கூடாது” 6

       இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சியை ஒட்டி பேசும்போது மிகவும் கோபம் கொப்பளிக்க எழுதியிருப்பதைப் பார்க்க முடிகிறது. அகிலத்தின் சந்தர்ப்பவாதத் தலைவர்கள், சோஷலிசக் குறிக்கோளை நிராகரித்துவிட்டு அதனிடத்தில் முதலாளித்துவ சீர்திருத்தவாதத்தை வைத்தனர், வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து, ஒத்துழைப்பைப் பிரச்சாரம் செய்தனர், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உழைப்பாளர்களுக்கு தாயகம் என்பதில்லை என்ற அடிப்படையை நிராகரித்தது போன்ற செய்கைகளுக்கு அடிப்படையான தயாரிப்புகளை பலகாலமாக செய்தனர் என்று லெனின் கூறுகிறார். மேலும் சந்தர்ப்பவாதத்தோடு தீர்மானமாக முறித்துக் கொள்ளாமல், சோஷலிசத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாது என்பதையும் தெளிவாக முன்வைக்கிறார்.

“…முதலாளித்துவ நாடாளுமன்றத்தையும், முதலாளித்துவ சட்டவழித்தன்மையையும் அவசியமாகப் பயன்படுத்துவதை ஒரு குருட்டு வழிபாடாக்கியும், நெருக்கடிகள் நிறைந்த காலங்களில் சட்டவழியற்ற வடிவங்களிலான நிறுவனமும் பிரசாரமும் அவசர அவசியம் என்பதை மறந்தும்…. இவற்றை எல்லாம் இந்த வீழ்ச்சிக்கு அடிப்படையான தயாரிப்பாக சந்தர்ப்பவாதிகள் நீண்ட காலமாகச் செய்து வந்தார்கள். சந்தர்ப்பவாதத்திற்கு இயல்பான “துணைச் சேர்க்கையாக”- பாட்டாளி வர்க்க அதாவது மார்க்சியக் கருத்துக்கு எதிராக முதலாளித்துவக் கருத்துப் போன்று அதே அளவு பழமைமையான- அராஜக-சிண்டிகலிசப் போக்கையும், தற்போதைய நெருக்கடியின்போது தேசியவெறி முழக்கங்களையும் சற்றும் குறையாத வெட்கக் கேடான சுயமகிழ்வான முறையில் மீண்டும் வற்புறுத்திக் கூறுகின்றனர்.

சந்தர்ப்பவாதத்தோடு தீர்மானமாக முறித்துக் கொள்ளாமல், அதன் தவிர்க்க முடியாத படுதோல்வியை மக்கள்திரளுக்கு விளக்கிக் கூறாமல் இன்றைய கட்டத்தில் சோஷலிசத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாது, தொழிலாளர்களின் உண்மையான சர்வதேசிய ஒற்றுமையை அடையமுடியாது.” 7

வலதுதிரிபின் சந்தர்ப்பவாதம் சோஷலிசப் புரட்சிக்கு எதிராகத்தான் முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு சாட்சியாகிறது. ஏகாதிபத்தியப் போரின் தொடக்கத்தில் ருஷ்யப் புரட்சி ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாகவும், முன்னேறிய நாடுகளில் சோஷலிசப் புரட்சியாக இருக்கும் என்ற முடிவில்தான் லெனின் இருந்தார் என்பதை இந்நூலின் மூலம் அறியமுடிகிறது.

“ருஷ்யா மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாலும், அதன் முதலாளித்துவப் புரட்சியை இன்னும் முழுமை செய்யாததாலும், அந்த நாட்டிலுள்ள சமூக-ஜனநாயகவாதிகள் முன் நிலையுறுதியான ஜனநாயக சீர்திருத்தத்திற்கான பின்வரும் மூன்று அடிப்படையான நிலைமைகளைச் சாதனையாக்கும் பணி உள்ளது. ஒரு ஜனநாயகக் குடியரசு (அனைத்து தேசங்களுக்கும் முழுமையான சமத்துவம் மற்றும் சுயநிர்ணய உரிமையுடன்), நிலச் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், எட்டு மணி நேர வேலை நாள். ஆனால் முன்னேறிய நாடுகள் அனைத்திலும் போல் சோஷலிசப் புரட்சி என்ற முழக்கத்தை நாள் நிகழ்ச்சிநிரலில் வைத்துவிட்டது” 8

       அகிலத்தில் சந்தர்ப்பவாதிகளின் வெற்றி அற்பாயுசானது. போர் எந்தளவுக்கு தியாகங்களைத் திணிக்கிறதோ அந்தளவுக்கு சந்தர்ப்பவாதிகள் தொழிலாளர் குறிக்கோளைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள் என்பதை அதிகத் தெளிவாக்கிவிட்டது.

இந்நூலின் இறுதி இவ்வாறு முடிகிறது:-
“அனைத்து நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் தேசியவெறி மற்றும் தேசபக்தியை எதிர்த்த தொழிலாளர் சர்வதேச சகோதரத்துவம் நீடூழி வாழ்க!.

சந்தர்ப்பவாதத்தில் இருந்து விடுபட்ட பாட்டாளி வர்க்க அகிலம் நீடுழி வாழ்க!”9

போரும் சோஷலிசமும் என்ற நூல் ஜிம்மர்வால்ட் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கு வழங்குவதற்காக ருஷ்ய, ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளில் எழுதப்பட்டது.

பாட்டாளி வர்க்கத்தின் சமாதானத்திற்கும், பூர்ஷ்வா வர்க்கத்தின் சமாதானத்திற்கும் உள்ள வேறுபாட்டை இந்நூலில் லெனின் கூறுகிறார். வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டு, சோஷலிசம் தோன்றிய பிறகுதான் போர்களை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்ற புரிதலின் அடிப்படையில், பூர்ஷ்வா சமாதான ஆர்வலர்களிடம் இருந்து பாட்டாளிகளின் சமாதானம் வேறுபடுவதை சுட்டிக்காட்டியுள்ளார். அதே போல் நியாயமான போர், அநியாயமான போர் என்று வகைப்படுத்துகிறது.

ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஒடுக்கும் வர்க்கத்தை எதிர்த்து நடத்தும் போர், நிலவுடைமையாளர்களை எதிர்த்து சுரண்டலுக்கு ஆளான பண்ணை அடிமைகள் நடத்தும் போர், பூர்ஷ்வாக்களை எதிர்த்து சுரண்டலுக்கு ஆளான பாட்டாளிகள் நடத்தும் போர் முற்போக்கானது நியாயமானது. அடுத்த நாட்டை ஆக்ரமிக்கும் போர், தன்னாட்டு மக்கள் மீது தொடுக்கும் போர் போன்றவை அநியாயமானவை என்று வகைப்படுத்திவிட்டு இன்றைய போரை ஓர் ஏகாதிபத்தியப் போர் என்று லெனின் நிலைநிறுத்துகிறார்.

“இன்றையப் போர் ஒர் ஏகாபத்தியப் போர் என்பது பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
..
நிலப்பிரபுத்துவதை எதிர்த்த முதலாளித்துவம் தேசங்களின் விடுதலைக்கானதாக இருந்தது, இன்றைய முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக, தேசங்களை பெரிதும் ஒடுக்குகின்றவையாக மாறிவிட்டது. முன்பு முற்போக்காக இருந்த முதலாளித்துவம் பிற்போக்காக மாறிவிட்டது. மனிதகுலம் சோஷலிசத்தை ஏற்று அனுசரிக்க வேண்டும்….

…முதலாளித்துவத்தை செயற்கை முறையில் காத்து நீடிப்பதற்கென “பேரரசுகளிடையில்” ஆண்டாண்டுகளாக ஆயுதமேந்தி நடத்தப்படும் போராட்டத்தை அனுபவிக்க வேண்டும். இவ்விரண்டினில் ஒன்று தான் வழி என்ற வகையில் மனிதகுலத்தை நிறுத்தி வைத்துள்ள அளவுக்கு அதன் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அடைந்துள்ளது.” 10

-சோஷலிசத்திற்கான புறநிலையின் வளர்ச்சியை லெனின் இங்கே தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்பு (1912ஆம் ஆண்டில்) போடப்பட்ட பாஸில் அறிக்கையை லெனின் நினைவுறுத்துகிறார்:-“ஒரு போர் ஏற்படுமானால், அந்தப் போர் விளைவிக்கக் கூடிய “பொருளாதார அரசியல் நெருக்கடியை”ப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். “முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்துவதற்கு”ப் பயன்படுத்த வேண்டும். அதாவது போர்க்காலத்தில் அரசுக்கு ஏற்படும் இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும் பொதுமக்களின் சினத்தையும் சோலிசப் புரட்சியாக்க வேண்டும்”11

ஏகாதிபத்தியப் போர் தொடங்கியபோது இந்தப் புரட்சிகர செயற்தந்திரத்திரத்திற்கு துரோகம் விளைவித்து, தாய் நாட்டைக் காப்போம் என்று சமூக-ஜனநாயகத்தினரில் பெரும்பான்மையினர் சந்தர்ப்பவாதியாயினர்.
      
       போல்ஷிவிக்கு கட்சியில் இந்த சந்தர்ப்பவாதப் போக்கு தலைதூக்காததற்கு, வெகுகாலத்திற்கு முன்பே இதுபோன்ற சந்தர்ப்பவாதிகளை முறித்துக் கொண்டதே காரணம் என்று லெனின் கூறுகிறார்.

தற்போதைய போரில் ஜார் அரசையும், முதலாளித்துவ வர்க்கத்தையும் எதிர்த்தவர்கள் பல கொடுமைகளுக்கு ஆளானார்கள். போர் தொடங்கிய போது பிராவ்தா பத்திரிகை நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான கட்சி ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். டூமாவில் போல்ஷிவிக் உறுப்பினர்களின் புரட்சிகர செயற்பாட்டால் அவர்கள் சைபீரிய சிறைகுடியிருப்புக்கு அனுப்பினர். பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் பூர்ஷ்வா நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடத்துகொள்ள வேண்டும் என்பதற்கு சான்றாக போல்ஷிவிக்குகளினுடைய டூமா உறுப்பினர்களின் நடடிக்கை இருந்தது. கட்சி கமிட்டிகள் நசுக்கப்பட்டன. மேலை நாட்டு நாடாளுமன்ற சமூக-ஜனநாயக உறுப்பினர்கள் பூர்ஷ்வாக தேசியவாதத்தை ஆதரித்து சந்தர்ப்பவாதிகளாக மாறிப்போயினர். போல்ஷிவிக்குகளின் டூமா உறுப்பினர்கள் பாட்டாளி வர்க்க குறிக்கோளுக்காக பாடுபட்டு சிறை சென்றனர்.

சர்வதேச சிந்தனையைப் பேசுகிற பாட்டாளி வர்க்கத்துக்கும், அதன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அவர்களது நாட்டின் மீது பற்றுக்கிடையாது என்றும் அதனால் தான், இந்த போரில் தமது தாய்நாட்டிற்கு எதிராக போராட அழைக்கின்றனர் என்று கூறியவர்களுக்கு லெனின் சரியான பதில் அளித்தார்.

“வர்க்க உணர்வுகொண்ட மாருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தவர்களாகிய நமக்கு தேசியப் பெருமித உணர்ச்சி அந்நியமானதா, என்ன? இல்லவே இல்லை! நமது மொழியையும் நமது நாட்டையும் நேசிப்பவர்கள் நாம், இந்நாட்டின் உழைப்பாளிப் பெருந்திரளினரை (அதாவது இந்நாட்டு மக்களில் பத்தில் ஒன்பது பங்கானோரை) ஜனநாயக, சோஷலிச உணர்வு பெறும் நிலைக்கு உயர்த்துவதற்காக இயன்றது அனைத்தும் செய்துவருகிறவர்கள் நாம்.

ஜாரின் கொலைவெறியர்களாலும் பிரபுக்களாலும் முதலாளிகளாலும் நமது இன்னலும் தாயகத்துக்கு இழைக்கப்படும் அட்டூழியங்களையும் ஒடுக்குமுறையையும் இழிவையும் கண்டும் உணர்ந்தும் நெஞ்சு பொறுக்காது நாம் வேதனைப்படுகிறோம். இந்த அட்டூழியங்களுக்கு நம்மிடம் இருந்து, மாருஷ்யர்களிடம் இருந்து காட்டப்படும் எதிர்ப்பைக் கண்டு பெருமிதம் கொள்கிறோம்.”12

              ஆதிக்க தேசியவெறிக்கும், சர்வதேசியவாதிகளின் தேசிய பெருமிதத்துக்கும் உள்ள வேறுபாட்டை இங்கே புரிந்து கொள்ளலாம். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உழைக்கும் மக்களுக்கு ஒரு தேசியம் கிடையாது என்பதை குருட்டுத்தனமாக புரிந்து கொண்டவர்களுக்கு லெனின் பதிலளித்திருக்கிறார்.

கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் உழைக்கும் மக்களுக்கு என்றுஒரு தேசமும் கிடையாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சரியே. ஆனால் அதில் சொல்லப்பட்டிருப்பது இதுமட்டுமே அல்ல. தேசிய அரசுகள் உருவாக்கப்படுகின்ற பொழுது பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம் ஓரளவுக்கு விசேஷமானதாகும் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. முதல் கருதுகோளை (உழைக்கும் மக்களுக்கு ஒரு தேசமும் கிடையாது) மட்டும் எடுத்துக் கொள்வதும் இரண்டாவது கருதுகோளோடு (தேசிய வழியில் தொழிலாளர்கள் ஒரே வர்க்கமாக அமைக்கப்பட்டிருக்கின்றார்கள்- ஆனால் இது பூர்ஷ்வாக்களைப் போன்ற அர்த்தத்தில் அல்ல) அதற்குள்ள தொடர்பை மறந்து விடுவதும் மிகப் பெரிய தவறாகும்” 13

       மேலும் லெனின் பாட்டாளி வார்க்கத்தின் சர்வதேசியவாதத்தின் தன்மையை படம்பிடித்துக் காட்டுகிறார்.

“ஒரே ஒரு வகையான மெய்யான சர்வதேசியவாதமே உள்ளது. அதாவது, தமது சொந்த நாட்டில் ஒரு புரட்சிகர இயக்கத்தின், ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் முன்னேற்றத்திற்காக முழுமனதுடன் பாடுபடுவது மற்றும் விதிவிலக்கின்றி ஒவ்வொரு நாட்டிலும் (பரப்புரை, அனுதாபம், பொருளாதா உதவி மூலம்) இந்தப் போராட்டத்தை, இந்தக் கொள்கையை மட்டுமே ஆதரிப்பது.” 14

       இதற்கு மேல் விளக்கம் தேவைப்படாது.

       பாட்டாளி வர்க்கப் பார்வை சர்வதேசியத் தன்மையானது என்பதை மட்டு கூறிக்கொண்டு, தேசியஇனபிரச்சினையில் பிரிதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை மறுப்பவர்கள், லெனின் இந்தக் கட்டுரையில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியிருப்பதையும் படித்தறிய வேண்டும்.

“பிரிந்து போகும் உரிமையின் நடைமுறை நிறைவேற்றத்துடன் இணைக்கப் படாத, பிரதேசக் கைப்பற்றல்களைக் கைவிடுவது பற்றிய எல்லா அறிவிப்புகளும் பிரகடனங்களும் அறிக்கைகளும் மக்கள் மீது முதலாளித்துவத் தன்மையான ஏய்ப்புகளே அல்லது குட்டிமுதலாளித்துவத் தன்மையான வெற்று விருப்பங்களே.

பாட்டாளி வர்க்கக் கட்சி எவ்வளவு பெரிதாக முடியுமோ அவ்வளவு பெரிதான ஓர் அரசை உருவாக்கவே முயல்கிறது. காரணம் இது உழைக்கும் மக்களுக்குச் சாதகமானது. இது தேசங்களை ஒன்றுக்கொன்று மேலும் நெருக்கமாக இணையச் செய்கிறது, அவை வருங்காலத்தில் முற்றிலும் இணையும்படி செய்கிறது, ஆனால் இந்த நோக்கத்தை வன்முறை மூலம் அடைவதற்கு அது விரும்பவில்லை மாறாக, அனைத்து தேசங்களின் தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் சுதந்திரமான சகோதர ஒன்றியம் மூலம் மட்டுமே அடைய விரும்புகிறது.”15

பயன்படுத்திய நூல்கள்

1-போரும் சோஷலிசமும்- பக்கம் 30-31
2-ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்- தேர்வு நூல்கள் - 4 பக்கம்- 48
3-போரும் ருஷ்ய சமூக-ஜனநாயகமும் - தேர்வு நூல்கள் 4 பக்கம்- 7
4- மேற்கண்ட நூல் - பக்கம்- 9
5- மேற்கண்ட நூல் - பக்கம்- 10
6- மேற்கண்ட நூல் - பக்கம்- 12-13
7- மேற்கண்ட நூல் - பக்கம்- 15
8- மேற்கண்ட நூல் - பக்கம்- 17
9- மேற்கண்ட நூல் - பக்கம்- 18-19
10-போரும் சோஷலிசமும்- பக்கம்- 16,17-18
11-போரும் சோஷலிசமும்- பக்கம்-  27
12-மாருஷ்யர்களது தேசியப் பெருமித உணர்ச்சி குறித்து - தேர்வு நூல்கள் 4 பக்கம்- 21-22
13-இனேஸ்ஸா ஆர்மான்டுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து- 1916 நவம்பர் 30
 பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் -பக்கம் 240)
14-நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் தேர்வு நூல்கள் 5 - பக்கம் 74

15- மேற்கண்ட நூல் - பக்கம் 70

Saturday 15 April 2017

மதமும் கம்யூனிஸ்ட் கட்சியும் – லெனின் (அறிமுகம்)

இருபதாம் நூற்றாண்டின், முதற்பத்தின் நடுப்பகுதியில், மார்க்சியம் மீது சந்தேகப் பார்வை ஏற்படுத்தும் முயற்சியில் முதலாளித்துவ அறிஞர்கள் இறங்கினர். இயக்கவியல் பொருள்முதல்வாதம் இன்று பழைமைப்பட்டு போய்விட்டது. காலத்துக்கு ஒவ்வாது போய் காலாவதியாகிவிட்டது என்று விமர்சித்தனர். மார்க்சியவாதிகளிடையேயும் மார்க்சியத்தின் போதாமையைப் பற்றி பேசத் தொடங்கினர். மார்க்சியத்தின் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கி மார்க்சியமும் ஒருவகை புதிய மதமாக கடவுள்-கருத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினர். இதனை எதிர்த்து லெனின் கடுமையாகப் போராடினார்.

சோஷலிசமும் மதமும், மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை என்ற கட்டுரைகளை பத்திரிகைகளில் லெனின் எழுதினார்.

ஒரு பேச்சாளர் மக்களுக்கு தெரிந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி, புரிந்திட வேண்டும் என்ற நோக்கோடு “சோஷலிசம் தான் என்னுடைய மதம்” என்று பேசுகிறார், ஓர் எழுத்தாளர் “கடவுள்- கருத்தை உருவாக்குதல்”, அதாவது கடவுள் கருத்தை தோற்றுவிக்கும் சோஷலிசத்தைப் பற்றி பேசுகிறார். இவை இரண்டும் கண்டனத்துக்கு உரியதே. பேச்சாளரின் செயல் மதத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறிச் செல்வது என்கிற பொருளைத் தருகிறது, இந்தப் பேச்சாளரின் தவறு என்பது மக்களுக்கு வழிகாட்டும் முறையில் உள்ள சிக்கல் மட்டுமே, ஆனால் இந்த எழுத்தாளரின் பிரச்சினை அவ்வாறு அல்ல. மிகவும் கண்டனத்துக்கு உரியது, ஏன் என்றால் இவரது கருத்து, சோஷலிசத்தில் இருந்து மதத்தை நோக்கி பயணிக்கிறது. இது மார்க்சிய அடிப்படைக் கோட்பாடுக்கு முரணானது.

ஒரு கம்யூனிஸ்ட் தமது வழிகாட்டும் கோட்பாடாக இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையே கொண்டுள்ளான். பொருள்முதல்வாதம், அடிப்படையில் மதத்துக்கு எதிரானது. அது மட்டுமல்லாது, கம்யூனிஸ்டுகளுடைய மதத்தின் மீதான அணுகுமுறை, அராஜகவாதியின் புரட்சிவாதத்துக்கும், குட்டிமுதலாளித்துவ மிதவாதியின் சந்தர்ப்பவாத அறிவாளர்களின் கண்ணோட்டத்துக்கும் எதிரானது. பகுத்தறிவுவாத அராஜவாதிகள், மாற்றத்திற்கு உள்ளாகாத கருத்துமுறையிலான தத்துவ வழியிலான போராட்டமாக முன்வைக்கின்றனர். சந்தர்ப்பவாதிகள் மதத்தின் மீதான எதிர்ப்பைக் காட்டுவதற்கு தடுமாற்றம் கொண்டனர். மதத்தை எதிர்ப்பதற்கான தமது கடமையை மறந்துவிட்டு, கடவுள் நம்பிக்கையோடு சமரசப்படுத்திக் கொண்டனர். இவ்விருவரையும் லெனின் விமர்சித்தார்.

“ஒருமார்க்சியவாதி ஒரு பொருள்முதல்வாதியாகத்தான் இருக்க வேண்டும், அதாவது மதத்தின் எதிரியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒர் இயக்கவியல் பொருள்முதல்வாதி, அதாவது மதத்துக்கு எதிரான போராட்டத்தைச் சூக்குமமான முறையில் நெடுந்தொலைவே உள்ள, முற்றிலும் தத்துவஞானரீதியான, ஒரு போதும் மாற்றமடையாத போதனையை அடிப்படையாகக் கொள்ளாமல் ஸ்தூலமான முறையில் செய்முறையில் நடைபெற்று வருகின்ற மற்றும் பெருந்திரளான மக்களிடம் வேறு எதையும் காட்டிலும் அதிகமாகவும் சிறப்பாகவும் பாடம் புகட்டுகின்ற வர்க்கப்போராட்டத்தின் அடிப்படையில் செய்பவராக இருக்க வேண்டும்.

ஒருமார்க்சியவாதி ஸ்தூலமான நிலைமையை முழுமையாக அணுகிப்பார்க்கக் கூடியவராக இருக்க வேண்டும். அராஜகவாதத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டை (இந்த எல்லைக்கோடு சார்புநிலையானது, நகரக்கூடியது, மாறக்கூடியது ஆனால் அது இருக்கிறது) எப்பொழுதும் கண்டுபிடிக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.”1

டூமாவில் ருஷ்ய கம்யூனிஸ்டுகள் மதம் மக்களுக்கு அபின் என்று கூறியது மிகச் சரியானது என்பதை லெனின் தமது கட்டுரையில் உறுதிப்படுதினார்.

“டூமா மேடையில் மதம் மக்களுக்கு அபின் என்று பிரகடனம் செய்ததன் மூலம் நமது டூமா குழுவினர் மிகவும் சரியாகச் செயற்பட்டிருக்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் ஒரு முன்மாதிரியை உண்டாக்கி இருக்கிறார்கள். இதுதான் மதம் தொடர்பான பிரச்சினையில் ருஷ்ய சமூக ஜனநாயகவாதிகளின் எல்லா கூற்றுகளுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டும். அவர்கள் மேலும் சற்று அதிகமாகச் சென்று நாத்திகவாதத்தை மேலும் விரிவாக அபிவிருத்தி செய்திருக்க வேண்டுமா?

நாம் அவ்வாறு நினைக்கவில்லை. இது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சிக்கு மதத்திற்கு எதிரான போராட்டத்தை மிகைப்படுத்தக் கூடிய அபாயத்தைக் கொண்டு வந்திருக்கக்கூடும். அது மதத்திற்கு எதிரான பூர்ஷ்வாக்கள் நடத்தும் போராட்டத்திற்கும், சோஷலிஸ்டுகள் நடத்தும் போராட்டத்திற்கும் இடையில் உள்ள தெளிவான வேறுபாட்டைத் தடம் இல்லாமல் செய்வதில் கொண்டுபோய் விடக்கூடும்.” 2

                போல்ஷிவிக் கட்சியின் நகல் திட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை முழுமையாக வெளிப்பட்டுள்ளது. அதில், மதத்தை அரசியலில் இருந்தும், கல்வி நிலையங்களை மதத்தில் இருந்தும் பிரித்துவிட வேண்டும் என்ற கருத்தோடு கட்சியின் அணுகுமுறை நின்றுவிடவில்லை. இந்தக் கோரிக்கைகளை பூர்ஷ்வா ஜனநாயகவாதிகளும் வைக்கின்றனர், ஆனால் இதனை எங்கும் முழுமையாக நிறைவேற்றவில்லை. இதற்கு காரணம் மூலதனத்துக்கும் மதப்பிரச்சாரத்துக்கும் உள்ள பிணைப்பை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

மதக்கேடுகளில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்பதே கட்சியின் குறிக்கோள். இதற்கு மிக விரிவான விஞ்ஞானக் கல்விக்கும், மத எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கும் கட்சி ஏற்பாடுகளைக் கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று கூறியதோடு ஒர் எச்சரிக்கையை லெனின் வைக்கிறார்.

“எனினும் மத நம்பிக்கை உள்ளவர்களின் மெல்லிய மத உணர்வுகளைப் புண்படுத்துவதைத் தவிர்ப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏன் என்றால் அம்மாதிரி புண்படுத்துவது மதவெறியை அதிகப்படுத்த உதவி செய்துவிடும்”3

மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது, ஒவ்வொருவரும் தம் விருப்பம்போல் எந்த மதத்தையும் கடைப்பிடித்து ஒழுகவும் முழுமையான உரிமை பெற்றிருக்க வேண்டும் என்கிற கம்யூனிஸ்டுகளின் கருத்தை சந்தர்ப்பவாதிகள் மாற்றிப் பொருள் கொள்கின்றனர். இதனை மறுத்து லெனின்:-
“மதம் தனிப்பட்ட விவகாரம் என்று அரசு அறிவிக்க வேண்டுமென்று பாட்டாளி வர்க்கத்தின் கட்சி கோருகிறது. ஆனால் மக்களுடைய மதமெனும் அபினுக்கு எதிரான போராட்டம், மதச் சார்பான மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டம், இதரவற்றைத் "தனிப்பட்ட விவகாரம்" என்று அது கருதுவதில்லை. சமூக - ஜனநாயகக் கட்சி மதத்தைத் தனிப்பட்ட விவகாரமாகக் கருதுகிறது என்று அர்த்தப்படும்படியாக இந்தப் பிரச்சினையைச் சந்தர்ப்பவாதிகளே திரித்துக் கூறுகிறார்கள்!” 4

                மக்களுக்கு வழிகாட்டும் கம்யூனிஸ்ட் போராளிகள், மதத்தின் வர்க்கத் தன்மையை உணர்ந்து, மூடத்தனத்தில் இருந்து விடுபட்டவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களாலேயே பாட்டாளிகளுக்கு சிறந்த வழிகாட்டியாக செயற்படமுடியும். கட்சியைப் பொருத்தளவில் மதம் என்பது தனிப்பட்டவர்களின் விவகாரம் அல்ல என்று லெனின் தெளிவுபடுத்துகிறார்.

சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சியைப் பொறுத்தமட்டில், மதம் தனிநபரது சொந்த விவகாரமல்ல நமது கட்சி தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடும் வர்க்க உணர்வு கொண்ட, முன்னேறிய வீரர்களை ஒருசேர இணைக்கும் அமைப்பாமாகும். இப்படிப்பட்ட ஒரு அமைப்பு மத நம்பிக்கைகளின் வடிவிலாகிய வர்க்க உணர்வின்மை, அறியாமை அல்லது மூடத்தனம் குறித்துப் பாராமுகமாய் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.
.. .. ..
மதத்தின் மூலமான எல்லாவித மாய்மாலங்களாலும் தொழிலாளர்கள் ஏய்க்கப்படுவதை எதிர்த்து இப்படி ஒரு போராட்டம் நடத்தும் பொருட்டே ருஷ்யாவின் சமூக - ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாகிய நமது அமைப்பை நாம் நிறுவிக் கொண்டோம். ஆகவே நமக்குச் சித்தாந்தப் போராட்டம் தனிநபரது சொந்த விவகாரமல்ல, கட்சி அனைத்துக்கும், பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் உரிய விவகாரமாகும். 5

பயன்படுத்திய நூல்கள்:-
1.மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை
2. மேற்கண்ட நூல்
3. ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷிவிக்) யின் நகல் வேலைத்திட்டத்தில் இருந்து மதத்தைப் பற்றிக் குறிப்பிடும் வேலைத்திட்டப் பகுதி
4.மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகு முறை
5. சோஷலிசமும் மதமும்