Friday 14 April 2017

கட்சி அமைப்பும் கட்சி இலக்கியமும் -லெனின் (கட்டுரை அறிமுகம்)

"புது வாழ்வு" (நோவயா ஷீஸ்ன்) என்ற பெயரில் ஒரு சட்டவழியிலான போல்ஷிவிக்குகளின் செய்சித்தாளை லெனின் வெளியிட்டார். இந்த செய்தித்தாளில் லெனின் கட்டுரைகளை தொடர்ந்து எழுதினார். இதில் வெளிவந்தவைகளில் கட்சி அமைப்பும் கட்சி இலக்கியமும் என்ற கட்டுரை முதன்மை பெற்றதாகும். இந்த கட்டுரை புது வாழ்வு இதழ் பன்னிரண்டில், 1905ஆம் ஆண்டு நவம்பர் பதிமூன்றில் வெளிவந்தது.

 

இந்தக் கட்டுரையில், தற்போதைய புரட்சியின் நிலைமைமைப் பற்றியும், கட்சி அமைப்புக்கும் கட்சி இலக்கியத்துக்கும் உள்ள தொடர்பு பற்றியும் லெனின் எழுதினார். தற்போதைய புரட்சியில் தலைமறைவானது, சட்டவழியிலானது என்ற இயற்கையல்லாத கலவைப் பற்றி அதில் எழுதினார்.

 

“புரட்சி இன்னும் நிறைவுற்றாகவில்லை. புரட்சியைத் தோற்கடிக்க இனிமேல் ஜாரிசம் போதிய பலமுடையதாய் இல்லை, அதேபோல் ஜாரிசத்தைத் தோற்கடிக்க இன்னனும் புரட்சி போதிய பலம் பெற்றாகவில்லை. பகிரங்கமான, ஒளிவுமறைவில்லாத, நேடியான, முரணற்ற கட்சி மனப்பான்மையானது தலைமறைவான, இரகசிய, “ராஜதந்திர” சூழ்ச்சிகரச் “சட்ட முறைமையுடன்” சேர்ந்திருக்கும் இயற்கைக்கு ஒவ்வாத இந்த கலவை, எங்கும் யாவற்றிலும் செயல்படும் ஒரு காலத்தில், இப்பொழுது நாம் வாழ்ந்து வருகிறோம்.”

 

கட்சி இலக்கியம் பற்றி கூறுகிறார்:-


“கட்சி இலக்கியம் என்னும் கோட்பாடு என்பதென்ன? சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்துக்கு, இலக்கியமானது தனியாட்கள் அல்லது குழுக்கள் செல்வம் திரட்டிக் கொள்வதற்குரிய ஒரு சாதனமாய் இருக்க முடியாது என்பது மட்டுமல்ல இக்கோட்பாடு, உண்மையில் இலக்கியமானது பாட்டாளி வர்க்கத்தின் பொதுக்குறிக்கோளைச் சாராத ஒன்றாய், தனியாள் முயற்சியாய் இருக்க முடியாது என்பதும் ஆகும். கட்சி சார்பில்லா மனப்பாங்குடைய எழுத்தாளர்கள் ஒழிக!! இலக்கியத்துறை மீமனிதர்கள் ஒழிக! (Down with literary supermen!) இலக்கியமானது பாட்டாளி வர்க்கத்தினது பொதுக்குறிக்கோளின் ஒரு பகுதியாக வேண்டும், தொழிலாளி வர்க்கம் அனைத்தின் அரசியல் உணர்வு கொண்ட முன்னணிப் படை அனைத்தாலும் இயக்கப்படும் தனியொரு மாபெரும் சமூக-ஜனநாயகப் பொறியமைவைச் சேர்ந்த “பல் சக்கரமும் திருகும்” ஆகிவிட வேண்டும். ஒழுங்கமைந்த, திட்டமிடப்பட்ட, ஒருமித்த சமூக-ஜனநாயகக் கட்சிப் பணியில் இலக்கியம் ஒரு கூறாகிவிட வேண்டும்…

 

முதலாளித்துவத் தனிநபர் மனப்பான்மையோராகிய உங்களுக்கு இதை நாங்கள் சொல்லியாக வேண்டும், அறுதியான சுதந்திரம் (absolute freedom) என்பதாய் நீங்கள் பேசுவது முழுக்க முழுக்க கபடமான புரட்டே ஆகும். பணத்தின் வல்லமையை அடிப்படையாய்க் கொண்ட ஒரு சமுதாயத்தில், உழைக்கும் திரளான மக்கள் வறுமையில் வாட, ஒரு சில செல்வந்தர்கள் புல்லுருவிகளாய் வாழும் ஒரு சமூகத்தில் மெய்யான, பயனுள்ள “சுதந்திரம்” இருக்கவே முடியாது.

..

..அறுதியான இந்தச் சுதந்திரம் முதலாளித்துவ அல்லது அராஜகவாதத் தொடராகும் (உலகக் கண்ணோட்டம் என்ற முறையில் அராஜகவாதமானது உட்புறம் வெளிப்புறமாய் மாற்றப்பட்ட முதலாளித்துவ தத்துவமாகும்). யாராலும் சமூகத்தில் இருந்து கொண்டு, அதேபோதில் சமுகத்தில் இருந்து சுதந்திரமாயும் இருப்பது முடியாத காரியம். முதலாளித்துவ எழுத்தாளர் அல்லது கலைஞர் அல்லது நடிகையின் சுதந்திரம் எல்லாம், பண மூட்டைக்கு, லஞ்ச ஊழலுக்கு, விபசாரத்துக்குக் கீழ்ப்படியும் முகமூடி பூண்ட (அல்லது கபடமாய் முகமூடி இடப்பட்ட) சார்புநிலையே அன்றி வேறல்ல.”

 

மேலும், இக்கட்டுரையின் முடிவில், முதலாளித்துவச் சமூகத்தின் கட்டுக்கோப்பிற்குள் இருந்தாலும் முதலாளித்துவ அடிமை நிலையிலிருந்து உடைத்து வெளிவந்து, மெய்யாகவே முன்னேறிய, முழுக்க முழுக்க புரட்சிகரமான வர்க்கத்தோடு இரண்டறக் கலக்க முடியும் என்று லெனின் வலியுறுத்துகிறார்.



No comments:

Post a Comment