Friday 10 November 2017

லஷ்மி குறும்படம் - விமர்சனம்


 
ஒரு தவறு எவ்வாறு நடக்கிறது என்பதைக் கலையாகச் சுட்டிக்காட்டலாம். ஆனால் அந்தத் தவறை நியாயப்படுத்தும் வகையில் கலையாக்கப்பட்டிருந்தால் அது விமர்சனத்திற்கு உரியதே. இந்தச் சமூகத்தில் திருடுவதற்குத் தேவைப்படுகிற பின்புலங்கள் அதிகம் இருக்கின்றன என்பதற்காகத் திருட்டை ஆதரிக்க முடியுமா?. ஆனால் ஒரு திருடன் எவ்வாறு தோன்றுகிறான் என்பதைக் கலையாக வடிக்க முடியும். அவ்வாறு எடுக்கும் படம், பார்வையாளனுக்குச் சமூகத்தின் மீது கோபத்தை ஏற்படுத்தும். அந்தக் கோபம் சமூக மாற்றத்திற்குப் பயன்படும்.

தவறை நியாயப்படுத்துவது சமூகம் மேலும் சீரழிவிற்கே கொண்டு செல்லும். இந்தச் சமூகத்தில் ஒருவன் மற்றொரு பெண்ணுடன் தொடர்புவைத்திருப்பதற்குச் சொல்லும் காரணத்தை, ஒரு பெண்ணைச் சொல்ல வைத்து அந்த ஆணின் தவறை நியாப்படுத்துவதுடன், தவறு செய்ய நினைக்கும்பெண்களுக்குத் தூண்டுதலையும் இந்தப் படம் தருகிறது. இந்தப் படத்தின் மீதான கடும் விமர்சனம் இங்கே தான் அடங்கி இருக்கிறது.

"தினமும் காலைல எந்திருச்சி ஆபிஸூக்கு போய்ட்டு வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து.. ஆயிரம் முறை சுத்தற மாதிரி சுத்துற கிரைண்டர் மாதிரிஅலுப்பான வாழ்க்கை வாழ்ந்தால் யாருக்குத்தான் தப்பு பண்ண தோணாது. எனக்கும் தோணுச்சு"

இந்த வசனம் தப்பை தூண்டும் வகையில் தான் எழுதப்பட்டிருக்கிறது. இந்தத் தவறுக்கு பாரதியார் கவிதைகள் பயன்படுத்தியது வேதனைக்கு உரியவிஷயமாகும். இன்றைய சமூகத்திற்கு எது நீதியோ அதுவே நீதியாகும், நேற்றைய சமூகத்தின் நீதிகள் இன்றைய சமூகத்திற்கு ஒத்துவராது, அதே போல்நாளை சமூகத்தை யூகித்து இன்று அதனைக் கடைப்பிடிப்பதும் தவறாகும். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் செய்யும் தவறு, அந்தக்குடும்பத்தை மிகவும் பாதிக்கும். குடும்ப உறவை கொண்டுள்ள இன்றைய சமூகத்தில் இது ஆபத்தான விளைவையே ஏற்படுத்தும்.

குடும்ப உறவை முன்வைத்து, செய்யப்படுகிற எந்தக் கொடுமையையும் எதிர்க்கக்கூடாது என்பதற்காக இவைகளைச் சொல்லவில்லை. அது வேறு இதுவேறு. அதே போல் பாலியல் சுதந்திரத்தைப் பற்றியும் இங்கே விவாதிக்கப்படவில்லை.

ஆனால், இந்தப் படம் பாலியல் சுதந்திரத்தை மனதில் கொண்டு எடுக்கப்பட்டதா என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. அது தனியொரு விவாதம்.இங்கே ஒன்றை மட்டும் குறிப்பிடலாம். பாலின சுதந்திரம் என்றால் ஒருவன் அல்லது ஒருத்தி மற்றொரு ஒருத்தி அல்லது ஒருத்தனுடம் ஒன்றுபட்டுமுடிவெடுக்கும் சுதந்திரமாகக் குறுக்கிடக் கூடாது. சமுகக் கட்டுபபாடற்ற முறையில் தனித்தனியாக முடிவெடுப்பதை இந்தச் சுதந்திரம் குறிக்காது. ஒருஆண் தன் மனைவி இறந்துவிட்டால், மற்றொரு பெண்ணை மணந்து கொள்வதற்கு உள்ள பாலின உரிமை பெண்ணிற்கும் இருக்க வேண்டும் என்றுகூறுவதாக அமைய வேண்டும். அதுவே பாலின சுதந்திரமாகக் கொள்ள முடியும். அதே போல் குடும்பத்திற்குள் ஒரு பெண்ணையோ, ஆணையோகட்டாயப்படுத்திப் பிணைத்துவைக்கக்கூடாது, அவ்விருவர்களுக்குச் சமமான சுதந்திரமும் உரிமையும் இருக்க வேண்டும். சிலர் எனது விமசர்சனத்தைப்பத்தாம்பசலிதனம் என்று கூறக்கூடும். ஆனால் குடுப்பத்தைக் காப்பாற்றுவதற்காகப் பிணக்கு இருந்தாலும், அதனைப் பொருத்துக கொண்டு, இணைந்துவாழ வேண்டும் எனறு கூறுவதே பத்தாம்பசலிதனம் என்று கூறுவேன்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதயக் கன்ன உரைப்பது கேட்டிரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகைக் கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.


இவ்வாறு தான் பாரதியார் கூறியிருக்கிறார். வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதைப் பெண்கள் ஒழித்து, வெளியில் சென்று உழைத்திடும் வழிவகையையே பாரதி கூறியுள்ளார். இதற்கு மாறாக வெளியில் சென்று உழைக்கும் பெண்கள், தமது இயந்திர வாழ்க்கையின் அலுப்பைப் போக்கிக் கொள்ளத் தப்புச்செய்யப் பாரதியார் வழிவகைக் கூறிடவில்லை. இதற்குப் பாரதியாரைப் பயன்படுத்துவது அவர் கவிதைக்குச் செய்யும் துரோகமாகும்.

5 comments:

  1. "ஒரு தவறு எவ்வாறு நடக்கிறது என்பதைக் கலையாகச் சுட்டிக்காட்டலாம். ஆனால் அந்தத் தவறை நியாயப்படுத்தும் வகையில் கலையாக்கப்பட்டிருந்தால் அது விமர்சனத்திற்கு உரியதே. இந்தச் சமூகத்தில் திருடுவதற்குத் தேவைப்படுகிற பின்புலங்கள் அதிகம் இருக்கின்றன என்பதற்காகத் திருட்டை ஆதரிக்க முடியுமா?. ஆனால் ஒரு திருடன் எவ்வாறு தோன்றுகிறான் என்பதைக் கலையாக வடிக்க முடியும். அவ்வாறு எடுக்கும் படம், பார்வையாளனுக்குச் சமூகத்தின் மீது கோபத்தை ஏற்படுத்தும். அந்தக் கோபம் சமூக மாற்றத்திற்குப் பயன்படும்." மிகச் சரியான மதிப்பீடு.இது ஏன் பெரும்பாலான மார்க்சீயவாதிகளுக்கும் ,முற்போக்கு முகமூடிகளுக்கும் புரிவதில்லை என்பதே என் கேள்வி.குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் .சொல்கிறது நாங்கள் குடும்ப அமைப்பை அடித்து நொறுக்கிவிடவேண்டும் என்று சொல்வதால்,வரைமுறையற்ற பாலுறவிற்கு ஆதரவானவர்கள் இல்லை.கம்யூனிச சமுதாயத்தில் தான் உண்மையான குடும்ப அமைப்பு அன்பினால் மட்டுமே உருவாகும் என்றே சொல்கிறார்கள்.இதனை அவர்கள் படித்திருப்பார்களா ?என்றே தெரியவில்லை.இதில் பாரதியின் பாடலைப் பயன்படுத்தியது அகோரம்.பாரதி இருந்திருந்தாம் படம் எடுத்தவனை பாட்டாலே அடித்திருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. Eagandan Nambi Eagandan @ சரியாகச் சொன்னீர்கள். எங்கெல்ஸ் எழுதிய "குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின தோற்றம்" என்ற நூல் நமக்கு சரியாகவே வழிகாட்டுகிறது. முகநூலில் உங்களது இந்தப் பின்னூட்டத்தைப் படித்தேன்

      Delete
  2. பாலியல் சுதந்திரம், சுதந்திர காதல், தாம்பத்திய உறவில் சிக்கல்கள் என சமூகத்தில் பேச வேண்டியவை ஏராளம். ஆனால் மேற்கத்திய தாக்கம் நம்மை பேய் போல ஆட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. மேற்கத்திய தாக்கத்தால், முடிவுகளில் இருந்து விவாதிக்கின்றனர். நம்ம ஊர் தரவுகளில் இருந்து விவாதிக்க வேண்டும்

      Delete
  3. எங்கெல்ஸ்:- "ஒருவன்பால் அல்லது ஒருத்தியின்பால் அன்பு காட்டுவது காதலின் இயல்பு. எனினும் இன்று பெண் மட்டுமே அதைப் முழுமையாக நடைமுறையில் காட்டுகிறாள். எனவே காதல் திருமணம் அதன் இயல்பிலேயே ஒருதார மணமாகத்தான் இருக்கிறது" (குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின தோற்றம்)

    மேலும் எங்கெல்ஸ் "ஆண்களுடைய வழக்கமான ஒழுக்கக்கேட்டைப் பெண்கள் சகித்துக் கொண்டிருக்கும்படி கட்டாயப்படுத்துகின்ற பொருளாதார நோக்கங்ள்-தமது வாழ்க்கையைப் பற்றிய கவலை, அதற்கும் மேலாகத் தமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை-மறைகின்ற பொழுது ஏற்படுகின்ற ஆண், பெண் சமத்துவம் பெண்கள் பல கணவர் மண முறைக்குப் போய் விடுவதைவிட ஆண்கள் உண்மையிலேயே ஒருதார மணத்தைக் கடைப் பிடிப்பதற்குப் பேருதவி செய்யும் என்று முந்திய அனுபவத்தின் அடிப்படையில் கூறலாம்" .

    இங்கு எங்கெல்ஸ் குறிப்பிடுகின்ற ஆண் பெண் சமத்துவம் என்பதற்கு, பல கணவர் மண முறைக்கு மாறாக இதுவரை பெண்கள் மட்டுமே கடைபிடித்துவந்த ஒருதார மணத்தை ஆண்கள் உண்மையிலேயே கடைப்பிடிப்பதற்கு பேருதவி செய்யும் என்கிறார்

    மேலும் எங்கெல்ஸ் "..சொத்து உறவுகளிலிருந்து எழுந்ததின் விளைவாக ஒருதார மணத்தின் மீது முத்திரையாக விழுந்துள்ள எல்லா குணாம்சங்களும் உறுதியாக மறையும். அவை பின்வருவன, முதலாவதாக, ஆணின் ஆதிக்கம், இரண்டாவதாக, திருமணத்தை ரத்து செய்ய முடியாமை. ஆணின் பொருளாதார ஆதிக்கத்தின் விளைவாகத்தான் அவன் மண வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறான், அது மறைகின்ற பொழுது இதுவும் போய்விடும்.
    ...
    முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு வந்து கொண்டிருக்கின்ற அழிவுக்குப் பிறக பால் உறவுகளை ஒழுங்குபடுத்துவதைப் பற்றி நாம் ஊகமாகச் சொல்லக் கூடியது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருக்கிறது. இதைத் தவிர கூடுதலாக என்ன இருக்கும்? ஒரு புதிய தலைமுறை வளர்ச்சியடைந்த பிறகு அது முடிவு கட்டப்படும். அந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஆண்களுக்கு பணத்தைக் கொண்டு அல்லது சமூக ரீதியான இதர அதிகார சாதனங்களைக் கொண்டு ஒரு பெண்ணை இணங்கச் செய்யும்படி தம் வாழ்க்கையில் என்றைக்குமே நேராது.

    பெண்கள் உண்மைக் காதலுக்காக மட்டுமன்றி வேறெந்த நோக்கத்துக்காகவும் எந்த ஆணுக்கும் என்றைக்குமே இணங்க மாட்டார்கள், அல்லது பொருளாதார விளைவுகளைப் பற்றி அஞ்சி தம்முடைய காதலனுக்குத் தம்மைக் கொடுப்பதற்குத் தயதங்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படாது. அப்படிப்பட்ட மக்கள் தோன்றியவுடனே, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நாம் இன்று நினைக்கிறோமோ, அதைச் சிறிதும் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு நபருடைய நடைமுறையை ஒட்டி தமது சொந்த நடைமுறையையும் அதற்குப் பொருத்தமான தமது சொந்தப் பொதுமக்கள் அபிப்பிராயத்தையும் நிலைநாட்டுவார்கள், விஷயம் அத்துடன் முடிந்துவிடும்."

    ReplyDelete