Sunday 27 August 2023

1) மாவோ எழுதிய “சரியான சிந்தனைகள் எங்கிருந்து தோன்றுகின்றன?” “இயக்கவியல் பொருள்முதல்வாதம்” (1963/1938).

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 96- வது வார வகுப்பு  – 27-08-2023  )


 

      இன்றைய வகுப்பில் இருந்து மாவோவின் படைப்புகளின் வழியில் மார்க்சியத்தைக் கற்கப்போகிறோம். இது ஒரு தொடர் வகுப்பாகும். பத்து அல்லது பதினைந்து வகுப்புகள் மாவோவின் படைப்புகளைப்புகளில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறோம்.

      இன்றைய முதல் வகுப்பில் மாவோவின் இரண்டு சிறியக் கட்டுரைகளைப் பார்க்கப் போகிறோம். முதல் கட்டுரை “சரியான சிந்தனைகள் எங்கிருந்து தோன்றுகின்றன?” இரண்டாவது கட்டுரை “இயக்கவியல் பொருள்முதல்வாதம்”.

விடியல் பதிப்பகம், அலைகள் வெயீட்டகம் ஆகியவை இரண்டும் இணைந்து மாவோ தேர்ந்துடுக்கப்பட்ட படைப்புகளை 9 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இன்றைய வகுப்பின் முதல் கட்டுரை ஒன்பதாவது தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இரண்டாம் கட்டுரை ஆறாம் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்த வகுப்பை முடித்து மாவோ நூல்களை நேரடியாக படிக்க முயலும் தோழர்களுக்கு உதவும் வகையில் இந்தத் தகவல் கொடுக்கப்படுகிறது.

      மனிதன் தமக்கான குறிக்கோளை அமைத்துக் கொண்டே செயல்படுகிறான். தமது தேவைகளை அடைவதற்கு சிந்திக்கிறான், அதற்கான குறிக்கோளை உருவாக்கிக் கொள்கிறான். அதனால் தான் உணர்வுநிலை, சிந்தனை, குறிக்கோள் ஆகியவை அடிப்படையாகக் கொண்டே அனைத்து தத்துவங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

சிந்தனைப் பற்றிய கருத்தில் கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் வேறுபடுகின்றன. மாவோ பொருள்முதல்வாத வழியில் இதனை விளக்கி உள்ளார் அதனேயே இன்றைய வகுப்பில் பார்க்கப் போகிறோம்.

“சரியான சிந்தனைகள் எங்கிருந்து தோன்றுகின்றன?” என்கிற தலைப்பில் மாவோ 1963-ஆம் ஆண்டு மே மாதம் எழுதினார். இந்தத் தலைப்பே மிகவும் தெளிவாக வைக்கப்பட்டுள்ளது. சிந்தனை எங்கிருந்து தோன்றுகின்றன என்று கேள்வி கேட்கவில்லை, சரியான சிந்தனை எங்கிருந்து தோன்றுகின்றன என்றே மாவோ கேள்வி எழுப்பி உள்ளார். இந்தக் கேள்வியிலேயே பதில் அடங்கியிருக்கிறது. தவறான சிந்தனைகள் எங்கிருந்து வருகிறதோ, அங்கிருந்து சரியான சிந்தனைகள் தோன்றவில்லை என்று கேள்வியில் இருந்தே நமக்கு பதில் எதிர்மறையாகக் கிடைக்கிறது. இந்த பதில் சரியானதுதான் ஆனால் விளக்கம் இல்லை. மாவோ விளக்குவதை பார்ப்போம்.

சரியான சிந்தனைகள் எங்கிருந்து தோன்றுகின்றன?

அவை வானத்தில் இருந்து விழுகின்றதா? இல்லை என்கிறார் மாவோ.

மூளையில் உள்ளார்ந்து உள்ளதா? இதற்கும் இல்லை என்றே மாவோ பதில் கூறுகிறார்.

கேள்விக்கு பதிலாக மாவோ கூறுகிறார், சமூக நடைமுறையில் இருந்தே சிந்தனை தோன்றுகிறது, இதிலிருந்து அல்லாமல் வேறெதுவில் இருந்தும் தோன்றவில்லை.

அதாவது மனிதன் சமூகத்தில் தொடர்ந்து இயங்குவதில் இருந்தே சிந்தனை உருவாகிறது. மனிதன் தனித்து சிந்திப்பதில்லை. ஒரு மனிதனை காட்டில் தனியே விடப்பட்டால் அவன் உண்பது உறங்குவது - உண்பது உறங்குவது என்கிற தொடர் இயக்கதிலேயே இருப்பான். அவனது சிந்தனை இதற்குள் அடங்கியே இருக்கும். மனித சமூகம் பற்றிய கருத்து எதுவும் அவனிடம் இருக்காது. மனிதன் சமூகத்தில் இயங்கும்போதே பல்வேறு சிந்தனைகள் தோன்றுகிறது என்பதை இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

சமூகம் இயங்குகிறது என்று பார்த்தோம், அந்த சமூக இயக்கம் மூன்று வகைப்படும் என்கிறார் மாவோ. உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், அறிவியல் போராட்டம். மார்க்சியம் கூறுகிற வாழ்வாதாரப் போராட்டத்தையே மூன்று சமூக இயக்கங்களாக மாவோ பிரித்துக் கூறுகிறார்.

மனிதனின் சமூக பொருளாதார வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது.

ஒரு முன்னேறிய வர்க்கத்தின் சரியான சிந்தனை வெகுமக்களைப் பற்றிக் கொண்டவுடன், அந்த சிந்தனை பொருளாயத சச்கியாக மாறி, சமூகத்தை மாற்றுகிறது. அந்த முன்னேறிய வர்க்கத்தின் சிந்தனை உலகத்தையும் மாற்றுகிறது.

சமூக நடைமுறையின் போது மனிதன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுகிறான், அதில் பல்வேறு அனுபவங்களை பெறுகிறான். சமூகப் போராட்டங்களில் வெற்றிகளும் தோல்விகளும் கிட்டுகிறது. இதன் மூலம் மனிதன் அனுபவப் பாடங்களைப் பெறுகிறான்.

புறநிலை உலகில் நடைபெறும் எண்ணற்ற நிகழ்வுகள், மனிதனின் ஐந்து புலன்களின் மூலம் அவனது மூளையில் பிரதிபலிக்கின்றன. தொடக்கத்தில் அறிவு புலக்காட்சியாக இருக்கின்றனது. புலக்காட்சி அறிவு போதிய அளவு தொகுக்கப்பட்டதும், கருத்தியல் அறிவாக பாய்ச்சல் அடைகிறது. கருத்துக்கள் இவ்வாறு தோன்றுகிறது. இது அறிவுத்தோற்றவியலின் முதல் கட்டம்.

புறநிலைப் பொருளில் மட்டுமே உணர்ந்திருந்த கட்டத்தில் இருந்து, அகநிலை உணர்வு நிலைக்கு உயர்ந்தப்படுகிறது. அதாவது வெறும் புலன்வழி உணர்வுநிலையில் இருந்து முன்னேறிய சிந்தனை செய்யும் நிலைக்கு உயர்த்தப்படுகிறது. இந்த முதல் கட்டத்தில் ஒருவனது புரிதலினால் உருவான சிந்தனை புறநிலை உலகின் எதார்த்த விதிகளைச் சரியாக பிரதிபலிக்கின்றனவா என்பதை உறுதியாகக் கூறமுடியாது. இது சரியா? அல்லது தவறா? என்று அறிவது அடுத்தக்கட்டம் ஆகும்.

புறநிலையில் இருந்து உணரப்பட்டதைத் தொகுத்து, அகநிலையில் தோன்றிய சிந்தனையை சரிபார்க்க வேண்டியது இரண்டாம் கட்டம். புறநிலைப் பிரதிபலிப்பால் அகநிலையில் தோன்றிய கொள்கைகள், திட்டங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவம் போது ஏற்படும் அனுபவங்களைக் கொண்டு, சரியானதா? தவறானதா? என்பதை மனிதன் அறிகிறான். வகுத்தக் கொள்கைகள் வெற்றி பெற்றால் அது சரியானது, தோல்வி கண்டால் அது தவறானது என்று பொதுவாக முடிவெடுக்கலாம்.

ஏன் இங்கே பொதுவானது என்று கூறப்படுகிறது என்றால், சில நேரங்களில் கோட்பாடுகள் சரியாக இருந்தாலும் போராட்டத்தில் தோல்வி ஏற்படலாம். இதற்குக் காரணம் கோட்பாட்டில் இல்லை, போராட்டத்தில் அதன் பலவீனத்தில் இருக்கிறது. பிற்கோக்கு சக்திகள் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றது உண்மை தான், ஆனால் இது நிரந்தர வெற்றியாக இருக்காது. இது முற்போக்கு சக்திகளின் தற்காலிகமான தோல்வியே ஆகும். இறுதியில் முற்போக்கு சக்தி வெல்லும் என்பது உறுதி. தோல்வி கற்றுத் தந்தப் பாடம், அறிவுத்திறனை மேலும் உயர்த்தும், அந்த திறன் வெற்றியை தேடித்தரும்.

பாட்டாளி வர்க்கம், உலகை அறிவதற்கான நோக்கம் அதை மாற்றுவதற்கே ஆகும். பொருளில் இருந்து உணர்வுநிலைக்கும், உணர்வுநிலையில் இருந்து பொருளுக்கும் கொண்டு செல்லும்போதே மனிதனின் அறிவு திறன் வளம் பெறுகிறது. இதுவே மார்க்சியம் கூறும் அறிவுக் கோட்பாடாகும். இதுவே இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அறிவுக் கோட்பாடாகும்.

நமது தோழர்களில் பலருக்கு இந்த மார்க்சியம் கூறும் அறிவுக் கோட்பாடு (theory of knowledge) இன்னும் புரிந்து கொள்ளாது இருக்கின்றனர். புரிந்து கொள்ளாத தோழர்களிடம், “உங்களது கொள்கைகள், கோட்பாடுகள், சிந்தனைகள், செயல்முறைகள், திட்டங்கள், மதிப்பீடுகள். நீண்ட சொற்பொழிவுகள், நீண்ட கட்டுரைகள் ஆகியவற்றை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? அவற்றின் ஆதாரத்தைக் கூற முடியுமா?” என்று கேட்டால், இந்தக் கேள்வியை அவர்கள் விசித்திரமாகப் பார்ப்பார்கள். ஆனால் அவர்களால் பதில் அளிக்க முடியாது.

அப்படிப்பட்ட தோழர்களுக்கு இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அறிவுக் கோட்பாட்டைப் பயிற்றுவிப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய கடமை ஆகும்.

நமது தோழர்களின் சிந்தனை மட்டம் உயர வேண்டும் என்றால், பகுத்தராய்வதிலும், படிப்பதிலும், அனுபவங்களைத் தொகுப்பதிலும் தேர்ச்சி பெற்று சிரமங்களைச் சமாளிப்பதிலும், தவறுகளைக் குறைத்தும், பணிகளை சிறப்பாக செய்யவும் மார்க்சியக் கல்வி அவசியமாகிறது. மேலும் சீனாவை வலிமையான சோஷலிச நாடாக கட்டியெழுப்பும் கடமைக்காப் போராடவும், உலகெங்கும் உள்ள ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளான பரந்துபட்ட மக்களுக்கு உதவுவதும் நமது சர்வதேசிய கடமை ஆகும்.

இவைகளை நிறைவேற்ற நமது தோழர்களுக்கு இயக்கவியல் பொருள்முதல்வாததின் அறிவு பற்றி கோட்பாட்டை பயிற்றுவிப்பது அவசியமாகிறது.

இத்துடன் இந்த சிறு கட்டுரை முடிவடைகிறது. இதனை ஒட்டி மாவோ 1938-ஆம் ஆண்டில் எழுதிய “இயக்கவியல் பொருள்முதல்வாதம்” என்பதையும் பார்ப்போம்.

ஒரு கம்யூனிஸ்ட் சிறந்த செயல்பாட்டாளராக இருக்க வேண்டும் என்றால் அந்தத் தோழர் மார்க்சியத் தத்துவத்தையும் பொருளாதாரத்தையும் கற்க வேண்டும். இங்கே மாவோ விளக்கும் மார்க்சியத் தத்துவத்தைப் பார்ப்போம். இது இரண்டு அத்தியாயங்களைக் கொண்ட சிறியக் கட்டுரையே ஆகும். முதல் அத்தியாயம் கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும், இரண்டாவது அத்தியாயம் இயக்கவியல் பொருள்முதல்வாதம்.

I. கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும்

கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் என்கிற முதல் அத்தியாயத்தை மாவோ  நான்கு உட்தலைப்புகளில் விளக்குகிறார்.

1. தத்துவத்தில் இரண்டு படைகளுக்கு இடையேயான போராட்டம்

பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம் என்கிற இரண்டு எதிரெதிரான தத்துவ சிந்தனைப் பள்ளிக்களின் வளர்ச்சியும் போராட்டமே தத்துவங்களின் முழு வரலாறாகும். உலகில் உள்ள அனைத்து தத்துவப் போக்குகளும் இந்த இரண்டு தத்துவத்தின் வெளிப்பாடுகளே ஆகும்.

இந்த இரண்டு தத்துவங்களும் குறிப்பிட்ட சமூக வர்க்கங்களைச் சேர்ந்த அறிஞர்களால் உருவாக்கப்பட்டதாகும். தத்துவங்கள் குறிப்பிட்ட சமூக வர்க்கத்தின் தேவையை வெளிப்படுத்துகிறது. பொருள்முதல்வாதம் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கிறது, கருத்துமுதல்வாதம் சுரண்டும் வர்க்கமான முதலாளித்துவ வர்க்க நலனை பிரதிபலிக்கிறது. வர்க்க முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே தத்துவங்கள் கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்று இரு பெரும் பிரிவாகப் பிரிந்து காணப்படுகிறது.

ஆதிகால மனிதனிடம் காணப்பட்ட அறியாமை மூடநம்பிக்கை ஆகியவற்றின் விளைவாகவே கருத்துமுதல்வாதம் தோற்றம் பெற்றது. பின்பு, விஞ்ஞான வளர்ச்சி உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி ஆகியவற்றால் கருத்துமுதல்வாதம் வீழ்த்தப்பட்டு பொருள்முதல்வாதம் மாற்றீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பண்டைய காலங்களில் இருந்து, இன்றுவரை கருத்துமுதல்வாதம் வீழ்ச்சி அடையவில்லை என்பது மட்டுமல்லாது பொருள்முதல்வாதத்தை எதிர்த்து அதிகமாகவே போராடுகிறது. சமூகம் வர்க்கங்களாக இன்னும் பிளவுபட்டிருப்பதே இதற்குக் காரணம் ஆகும்.

ஒரு பக்கம் சுரண்டும் வர்க்கம், தமது வர்க்க நலனுக்காக கருத்துமுதல்வாதத்தை வளர்க்கவும் வலுப்படுத்தவும் போராடுகிறது மறு பக்கம் ஒடுக்கத்துக்கு ஆளான வர்க்கம் தமது நலன்களை வளர்க்கவும் வலுப்படுத்துவும் போராடுகிறது. வர்க்கப் போராட்டத்தின் கருத்தாயுதங்களாக பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும் திகழ்கிறது. சமூகத்தில் வர்க்க முரண்பாடு ஒழியும் வரை இந்த இரு தத்துவங்களுக்கு இடையேயானப் போராட்டம் மறைந்துவிடாது. வர்க்கங்கள் மறைவின் போதே முழுமையாக மறைவடையும்,

கருத்துமுதல்வாதம் சுரண்டும் வர்க்க நலன்களை பிரதிநிதிப்படுத்திக் கொண்டு பிற்போக்கான நோக்கங்களுக்கு பணிசெய்கிறது. பொருள்முதல்வதம் பிற்போக்கான கருத்துமுதல்வாதத்தை எதிர்த்து இடைவிடாமல் போராடுகிறது. உழைக்கும் மக்களின் நலன்களை பொருள்முதல்வாதம் நிறைவேற்றுகிறது. அதனால் உழைக்கும் மக்களின் சித்தாந்த ஆயுதமாக பொருளமுதல்வாதம் விளங்குகிறது.

தத்துவங்களின் நோக்கம் என்பது வர்க்கங்களின் நலன்களை பாதுகாப்பதே ஆகும். இதுதான் அதன் முதன்மையான நோக்கமாகும்.

முதலாளித்துவ வர்க்கத்தை தூக்கி எறிவது, பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தை கட்டமைப்பது, சோஷலிச சமூகத்தை உருவாக்குவது என்கிற பொதுவான தொழிலாளர்களின் கடமைக்கு மார்க்சியத் தத்துவமானது குறிப்பான சிறப்பான வழிகாட்டியாக இருக்கிறது.

2. கருத்துமுதல்வாதத்துக்கும் பொருள்முதல்வாதத்துக்கும் இடையிலான வேறுபாடு

சிந்தனைக்கும் பொருளுக்கும் இடையிலான உறவு குறித்த, அதாவது உணர்வுநிலைக்கும் வாழ்நிலைக்கும் இடையிலான உறவு குறித்த, தத்துவத்தின் அடிப்படையான இத்தகையக் கேள்விக்கு அளிக்கும் பதில்களால் இந்த இரண்டு தத்துவ முகாம்கள் தோன்றியது. கருத்துமுதல்வாதமானது, உலகில் உள்ள அனைத்துத் தோற்றுவாய்களுக்கு அடிப்படைக் காரணமாக சிந்தனையை வைக்கிறது. கருத்தே முதன்மையானது பொருள், சமூகம், இயற்கை போன்றவை இரண்டாம் நிலையானது என்பதே கருத்துமுதல்வாதத்தின் அடிப்படைக் கருத்தாகும்.

பொருள்முதல்வாதமானது இதற்கு மாறாக சிந்தனையில் இருந்து பிரிக்கப்பட்ட
சுயேச்சையான பொருளை முதன்மைப்படுத்துகிறது, சிந்தனையை இரண்டாம் நிலையினதாகவும் பொருளுக்கு கீழ்ப்பட்டதாகவும் கருதுகிறது. இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்படி வாழ்நிலையே சிந்தனைப் படைக்கிறது சிந்தனை வாழ்நிலையைப் படைக்கவில்லை. கருத்துமுதல்வாதத்தின்படி சிந்தனையே வாழ்நிலையைப் படைக்கிறது.

3. கருத்துமுதல்வாதத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம்

சிந்தனையின் விளைவே பொருள் என்கிறது கருத்துமுதல்வாதம். இந்தத் தத்துவம் எதார்த்தத்தை தலைகீழாகப் பார்க்கிறது. இந்தத் தத்துவத்தின் ஆதாரம் எங்குள்ளது என்பதைப் பார்ப்போம்.

முன்பே கூறியது போல கருத்துமுதல்வாதத்தின் தொடக்கம் பண்டைய மனிதனின் அறியாமை, மூடநம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றியது. சொத்துடைமையும் அதனைத் தொடர்ந்து வர்க்கங்களும் தோன்றிய போது உழைப்பை செலுத்துபவர், உழைப்பை வாங்குபவர் என்கிற பிரிவு ஏற்பட்டது. அதுமுதல் மூளை உழைப்பு உயர்ந்ததாகவும் உடல் உழைப்பு தாழ்ந்ததாகவும் கருதப்பட்டது. இது கருத்துமுதல்வாதத்தின் கண்ணோட்டம் ஆகும். கருத்துமுதல்வாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றால் உடல் உழைப்புக்கும், மூளை உழைப்புக்கும் இடையே உள்ள வேறுபாடு ஒழிக்கப்படுவது முன்நிபந்தனை இருக்கிறது என்கிறார் மாவோ.

சமூகத்தில் வர்க்கங்கள் மறையும் போதே கருத்துமுதல்வாதம் இறுதியாக முழுமையாக வீழ்ச்சி அடையும். அதுவரை அதை எதிர்த்து பொருள்முதல்வாதம் போராட வேண்டும். போராட்டம் தொடர்ந்தால்தான அதை இறுதியில் வீழ்த்த முடியும், எதுவும் தானே நிகழ்ந்திடாது.

அனைத்துக் கருத்துமுதல்வாதிகளும் மனித உணர்வுக்கு அப்பால் சுதந்திரமாக இருக்கும் புறநிலை எதார்த்தத்தின் இடத்தில்; உணர்வுநிலை, சிந்தனை, கருத்து ஆகிவற்றை வைக்கிறார்கள். உணர்வுநிலை என்பது பருப்பொருளால் வரம்பிடப்பட்டது என்கிற பொருள்முதல்வாதம் சுட்டிக்காட்டும் உண்மையை கருத்துமுதல்வாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் உணர்வுநிலையே செயல்துடிப்பு வாய்ந்ததாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் உணர்வுநிலையின் செயல்பாட்டை மிகைப்படுத்தி ஊதிப் பெருக்குகிறார்கள். அதனால் மாவீரர்களே வரலாற்றை படைப்பதாக கருதுகிறார்கள்.

கருத்துமுதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள அரசியல்வாதிகள், அரசியலை சர்வ வல்லமை கொண்டதாகக் கருதுகிறார்கள். கருத்துமுதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள ராணுவத் தளபதிகள் மூர்க்கமான சண்டை வழிமுறைகளை நடைமுறைப்படுத்துகிறார்கள். கருத்துமுதல்வாதப் புரட்சியாளர்கள் அராஜகவாத்தை ஆதரிக்கிறார்கள். அனைத்துக் கருத்துமுதல்வாதிகளும் அகநிலைக் காரணிகளை மிகைப்படுத்திக் காட்டுகிறார்கள்.

மார்க்சியத்துக்கு முன்பான பொருள்முதல்வாதம் எந்திரவியல் பொருள்முதல்வாதமாக இருந்தது. அறிவு வளர்ச்சியில், சிந்தனையின் செயல்பாட்டை பழைய பொருள்முதல்வாதம் கணக்கில் கொள்ளவில்லை.

மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதம் சிந்தனையின் செயல்துடிப்பான பாத்திரத்தை கவனத்தில் கொள்கிறது. அதே நேரத்தில் சிந்தனையானது பருப்பொருளின் வரம்பிடப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறது.

 கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் உணர்வுநிலையை முக்கியத்துவப்படுத்துகிறது. கருத்துமுதல்வாதம் உணர்வுநிலையை முதன்மைப்படுத்துகிறது. பொருள்முதல்வாதம் புறநிலையை முதன்மைப்படுத்துகிறது உணர்வுநிலையை இரண்டாம் நிலையானதாகக் கூறுகிறது. உணர்வுநிலை என்பது புறநிலைமைகளால் உருவாகிறது என்று பொருள்முதல்வாதம் கூறுகிறது.

4. பொருள்முதல்வாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியின் மூலம்

உணர்வுநிலைக்கு அப்பால், வெளியுலகில் சுதந்திரமாக பருப்பொருள் இருக்கிறது என்பதை ஏற்பதே பொருள்முதல்வாதத்தின் அடிப்படை. நடைமுறை அனுபவத்தின் வாயிலாக இந்தக் கருத்தை மனிதன் உருவாக்கினான்.

பண்டைக்கால மனிதன் எளியக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இயற்கை எதிர் கொண்டான். இயற்கை சக்திக்கு முன் அவனது கருவி மிகவும் சாதாரணமானது அதனைக் கொண்டு, இயற்கை அறிய முடியாத நிலையில் அதனிடம் அடிபணிந்தான். இயற்கையின் போக்கிற்குக் காரணத்தை அறிய முடியாத நிலையே மதம், கருத்துமுதல்வாதம் தோன்றுவதற்கு தொடக்கக் காரணம் ஆகும்.

கருத்துமுதல்வாதத்தின் பயனற்றத் தன்மையை மனிதன் உணர்ந்து கொள்ளவும், பொருள்முதல்வாத முடிவுகளை ஏற்கவும் விஞ்ஞான வளர்ச்சி மனிதனுக்கு உதவுகிறது. உலகம் விஞ்ஞான விதிகளால் ஆளப்படுவதை பொருள்முதல்வாதத் தத்துவம் மனிதனுக்கு நிரூபித்தது. வளர்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான முன்னேற்றமே இயற்கையின் புரியாத் தன்மையை நீக்குவதுடன் பொருள்முதல்வாதத் தத்துவத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கிறது.

பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மனிதன் இயற்கை, சமூகம் ஆகிய இரண்டு ஒடுக்கு முறையில் இருந்தும் படிப்படியாக விடுபடுகிறான்.

II. இயக்கவியல் பொருள்முதல்வாதம்

இந்த இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்கிற இரண்டாம் அத்தியாயத்தை மாவோ ஆறு உட்தலைப்புகளில் விளக்குகிறார்.

1. இயக்கவியல் பொருள்முதல்வாதமே பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர ஆயுதம்.

முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் வரலாற்றுப் பணியை ஏற்றுக்கொண்டுள்ள சீனப் பாட்டாளி வர்க்கம் தனது சிந்தனைக் கருவியாக  இயங்கியல் பொருள்முதல்வாதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மாவோ கூறிகிறார். இதன்காரணமாக புரட்சிகர இயக்கத்தை வழிநடத்தும் ஊழியர்கள் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை கற்பது இன்றியமையாதது என்பதை அறிய முடிகிறது.

இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஏன்? கற்க வேண்டும். ஏனென்றால் இயக்க செயற்பாட்டில் தவறுகளை தவிர்ப்பதற்கும், குறைபாடுகளை களைவதற்கும், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை கற்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக அகநிலைவாதம், எந்திரவியல்வாதம் போன்றவற்றை தவிர்ப்பதற்கு மார்க்சியத் தத்துவத்தைப் படிக்க வேண்டும்.

2. இயக்கவியல் பொருள்முதல்வாதத்துக்கும் பழைய மரபுவழி தத்துவமுறைக்கும் இடையேயான உறவு

1919ஆம் ஆண்டு மே-4 இயக்கத்துக்குப் பிறகு அரசியல் அரங்கில் உணர்வுவழிபட்ட பாட்டாளி வர்க்கம் தோன்றியதன் காணரமாகவும், அறிவியல் மட்டம் உயர்ந்தன் காரணமாகவும் மார்க்சிய தத்துவ இயக்கமானது சீன நாட்டில் தோன்றி வளர்ந்தது. ஆனால் தொடக்கநிலையில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கு பெற்ற எந்திரவியல் பொருள்முதல்வாதம், அகநிலைவாதம் போன்ற போக்கின் காரணமாக இயக்கவியல் பொருள்முதல்வாதப் புரிதல் பலவீனமாக காணப்படுகிறது. 1927-ஆம் ஆண்டு புரட்சியின் தோல்வியைத் தொடர்ந்து மார்க்சிய-லெனினிய புரிதல் மட்டம் முன்னேற்றம் கண்டது.

சீனாவில் அன்றைய பின்தங்கிய வளர்ச்சி காரணமாக, தமது சொந்த தத்துவ மரபினை சீர்திருத்துவதன் மூலம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் வளரக்கமுடியவில்லை. மார்க்சிய-லெனினியத்தை கற்பதின் மூலமே வளர்ச்சி பெற்றது. இருந்தாலும் சீனாவில் இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவம் வேரூன்றி வளர வேண்டுமானால், சீனப் புரட்சிக்கு உறுதியான செல்வழியை அளித்து, எதிர்காலத்தில் இறுதி வெற்றிக்கு அழைத்துச் செல்ல விரும்பினால், சீனாவில் தற்போது காணப்படும் அனைத்து பழமையான தத்துவக் கோட்பாடுகளை எதிர்த்து விமர்சிக்க வேண்டும். பழைய தத்துவ மரபுகளை பொருள்முதல்வாத அணுகுமுறையில் முறியடிப்பதின் மூலமே புரட்சியில் வெல்ல முடியும் என்கிறார் மாவோ.

மாவோ கூறுகிறது மிகவும் முக்கியமான ஒன்றாகும், நாட்டில் உள்ள பொருள்முதல்வாதத்துக்கு எதிரான பழைய தத்துவப் போக்குகளை படித்து விமர்சிக்காவிட்டால் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை உறுதியாகப் பின்பற்ற முடியாது.

பழைய தத்துவங்களை தான் ஏற்றுக் கொள்ளவில்லை, அதனைப் படித்ததில்லை என்று கூறிவிடுவதால் மட்டும் அந்த பழைய தத்துவப் போக்கில் இருந்து விடுபட முடியாது. தம்மை அறியாமலேயே நாட்டில் காணப்படும் தத்துவங்களின் தாக்கம் இருக்கவே செய்யும், அதனால் அதை நீக்குவதன் மூலமே பொருள்முதல்வாத்தில் சிறப்பாக செயல்பட முடியும்.

நம் நாட்டைப் பொறுத்தளவில் இயக்கவியல் பொருள்முதல்வாதத்துக்கு நெருக்கமான பழைய பொருள்முதல்வாதக் கூறுகளைக் கொண்ட தத்துவங்கள் நிறைய இருக்கிறது, அதனை நாம் மேம்படுத்துவதன் மூலம் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை அடைய முடியும்.

3. இயக்கவியல் பொருள்முதல்வாதத்தில் உலகக் கண்ணோட்டம் மற்றும் ஆய்வு முறைமை ஆகியவற்றுக்கான ஒற்றுமை

இயக்கவியல் பொருள்முதல்வாதமானது பாட்டாளி வர்க்கத்தின் உலகக் கண்ணோட்டம் ஆகும். இந்தக் கண்ணோட்டம் சுற்றியுள்ள உலகத்தை அறிந்து கொள்வதற்கு உரிய ஆய்வு முறையும் ஆகும். இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது வறட்டுத் தத்துவம் கிடையாது, அது புதிய நிலைமைகளை புரிந்து கொள்வதற்கு வழிகாட்டியாகவும் இருக்கிறது.

4. பொருள்முதல்வாத இயக்கவியலின் நோக்கம் பற்றிய கேள்வி – எதை கற்பதற்குப் பொருள்முதல்வாத இயக்கவியல் உதவுகிறது?

பொருள்முதல்வாத இயக்கவியல் ஒன்றுமட்டுமே சிந்தனை, அறிவு ஆகியவற்றின் தோற்றத்தை அறிவியல் வழியில் காரண காரியத்தோடு நிரூவியுள்ளது. மனிதனது மூளையில், இயற்கையும் சமூகமும் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை அறிவியல் வழியில் ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்கிறது.

இதனால் வாழ்நிலைக்கும் சிந்தனைக்கும் இடையிலான உறவுகளை சரியாகப் புரிந்து கொண்டு, சமூகத்தை மாற்றுவதற்கான சூழ்நிலைமைகளை புரிய வைக்கிறது.

5. பருப்பொருள் பற்றி

மனித சிந்தனைக்கு வெளியே சுயேச்சையாக உலகம் இருக்கிறது என்பதை அங்கீகரிப்பதே பொருள்முதல்வாத தத்துவ முகாமில் ஒருவர் இருப்பதற்கான முக்கியமான முன்நிபந்தனை ஆகும். புற உலகம் மனிதனைச் சாராமல் இருக்கிறது என்பதே அறிவியல் ஆய்வு முறைக்கு அடிப்படை ஆகும். மனிதனின் அறிதல் அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டுமானால், அகநிலைவாதத்தால் முடிவெடுக்காமல் புறத்தில் இருக்கும் எதார்த்த நிலையின் மெய்விவரங்களில் இருந்து ஆராய வேண்டும். இதற்கு இயக்கவியல் பொருள்முதல்வாதம் வழிகாட்டுகிறது.

உணர்வுநிலை என்பதை பொருள்முதல்வாத ஒளியில் நோக்கினால் அது ஒரு பொருளினுடைய இயக்கத்தின் வெளிப்பாடு என்பதை தவிர வேறொன்றும் இல்லை என்பதை அறிய முடிகிறது. உணர்வுநிலை என்பது மூளையில் இருந்து தோன்றுவதில்லை, ஆனால் மூளையில் பிரதிபலிக்கப்பட்டத்தில் இருந்து தோன்றுகிறது. மூளை சிந்திக்கும் திறன் பெற்றதுதான், ஆனால் அதை வைத்து சிந்தனைகளைக் கருத்துக்களை தத்துவங்களை உருவாக்க முடியாது.

இது ஒரு முதலாளித்துவ சமூகம் என்று மூளையே முடிவெடுக்கிறது, ஆனால் அது தாமே எடுப்பதில்லை சமூகத்தில் உள்ள நிலைமைகளை தொகுத்துப் பார்த்து இந்த முடிவுக்கு வருகிறது.

இதற்கு ஒரு எளிய உதாரணத்தைப் பார்ப்போம்.

இன்று சாப்பிட்ட சாம்பார் சாதம் எங்கிருந்து வந்தது என்று கேட்டால், பாத்திரத்தில் இருந்து வந்தது என்று கூறுவது, சரியா? ஒரு வகையில் இது சரிதான். ஆனால் பாத்திம் வைத்திருப்பவர் அனைவரும் சாம்பார் செய்திட முடியுமா? அடுப்பும் பாத்திரமும் மட்டும் வைத்து சாம்பாரை செய்திட முடியுமா? எல்லோர் வீட்டிலும் பாத்திரம் இருக்கிறது, அடுப்பும் இருக்கிறது. சாம்பார் செய்ய வேண்டும் என்றால் சாம்பார் செய்வதற்கான தேவைப்படும் பொருட்கள் வேண்டும். அந்தப் பொருட்கள் பாத்திரத்துக்கு புறத்தில் இருக்கிறது. சுதந்திரமாக இருக்கிறது, பாத்திரமே இல்லை என்றாலும் புறத்தில் அதற்கான பொருட்கள் இருக்கும்.

அதே போல பாத்திரத்தில் இருந்தே ரசம் செய்யப்படுகிறது, காரக்குழம்பு செய்யப்படுகிறது, மீன் குழம்பு செய்யப்படுகிறது, மோர் குழம்பு செய்யப்படுகிறது. அனைத்தும் பாத்திரத்தில் தான் செய்யப்படுகிறது. அற்காக பாத்திரத்தில் இருந்து குழம்பு வருகிறது என்று கூறிட முயுமா? முடியாது.

மூளை பல முடிவுகள் எடுக்கிறது அனால் அது மூளையின் கண்டுபிடிப்புபல்ல, புறத்தில் உள்ள மெய்விவரங்களை சேகரித்து, தொகுத்து எடுக்கப்பட்ட முடிவு ஆகும். கருத்து உருவாவதற்கு புறநிலையே முதன்மையானது மூளையின் செயற்பாடு இரண்டாம் நிலையானது. இவ்வளவு எளிதாக விளக்கியப் பிறகும் மூளையில்லை என்றால் எப்படி முடிவு எடுக்கமுடியும். மூளை முக்கியமானது முதன்மையானது என்று கூறுபவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.

காரக் குழம்பு செய்யக்கூடியப் பொருட்களை வைத்து, மீன் குழம்பை செய்ய முடியாது, மீன் குழம்பு செய்யக்கூடியப் பொருட்களை வைத்துக் கொண்டு, மோர் குழம்பை செய்ய முடியாது. குழம்பு செய்யக்கூடிய பொருட்கள் தான் முதன்மையானது பாத்திரம் இரண்டாம் நிலையானது என்று கூறுவது தவறு இல்லை தானே.

ஒரு மனிதன் சமூகத்தில் இருந்து விலகி காட்டில் வாழக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டாதாக வைத்துக் கொள்வோம். அவன் ஒரு ஐந்து ஆண்டுகள் காட்டில் தனித்து வாழ்கிறான், இப்போது அவனை ஒரு மனிதக் கூட்டம் எதேச்சையாக சந்திக்கிறது என்றால் அந்தக் கூட்டத்தைப் பார்த்து அந்த மனிதன் பயப்படவே செய்வான். காட்டில் இருந்து அவனை விடுவிக்க முயற்சித்தால், அவன் அதை தடுக்கவே செய்வான். ஆக சூழ்நிலைமைகளால் தான் அறிவைப் பெறுகிறோம் அறிவின் எல்லை புறச்சூழ்நிலையைச் சார்ந்தே இருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது.

இப்படி கூறியவுடன் மார்க்சியம் தனிநவர்களின் சிறப்பை அறிந்து கொள்ளவில்லை, பொருட்களை மதிக்கத் தெரிந்த மார்க்சியம், மனிதனை மதிக்கத் தெரியவில்லை என்கிற குற்றச்சாட்டை நாம் இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இதில் உண்மை இல்லை. மனிதனின் தனிச் சிறப்பை மார்க்சியம் மதிக்காமல் இல்லை. மார்க்சே இதை நான்தான் கண்டு பிடித்தேன் என்று நேரடியாக எழுதி உள்ளார். குறிப்பாக உபரி மதிப்பைக் கூறலாம். அதே போல மார்க்சுக்கு இணையான அறிவு பெற்ற எங்கெல்ஸ் மார்க்சை மேதை என்றும் தான் ஒரு சிறந்த அறிவாளி மட்டுமே என்று கூறுவது தனிநபரை சிறப்பிப்பதுதானே.

மார்க்ஸ் பிறக்காது போய் இருந்தால் உபரி மதிப்பு யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று மார்க்சியம் கூறவில்லை. இதுதான் வேறுபாடு. புறநிலையை சரியாக பிரதிபலிப்பவரையும், முதலாவதாகப் பிரதிபலிப்பவரையும் மார்க்சியம் சிறப்பிக்கிறது. ஆனால அவரால் மட்டுமே அதை பிரதிபலிக்க முடியும் என்று கூறுவதை மறுக்கிறல்.

இதுபோன்ற உதாரணத்தை அனைத்துக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் நாமே முயற்சிக்க வேண்டும், அப்போதுதான் பிறர் உதவியின்றி மார்க்சிய அணுகுமுறையில் சிறப்பாக செயல்பட முடியும்.

6. இயக்கம் பற்றி (வளர்ச்சி பற்றி)

பொருளின் மீதான பார்வையே இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் முதல் அடிப்படைக் கோட்பாடாகும். பருப்பொருளின் முதன்மைத் தன்மையை அறிவதே முதல் அடிப்படை.

இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் இரண்டாவது அடிப்படை பொருளின் இயக்கம், வளர்ச்சி பற்றிய கோட்பாடாகும்.

இயக்கம் என்பது பொருளின் இருப்பின் வடிவம், பொருளின் உள்ளார்ந்த பண்பு, மேலும் பொருளின் பன்மைத் தன்மையின் வெளிப்பாடாகும். இதுவே உலக வளர்ச்சியின் கோட்பாடு.

உலகில் காணும் பொருட்களின் சேர்க்கையின் ஒருமை பற்றிய கோட்பாட்டை, உலகின் வளர்ச்சியின் கோட்பாடுடன் இணைந்து இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் முழு உலகக் கண்ணோட்டத்தையும் உருவாக்குகிறது. உலகம் என்பது வரம்பற்ற வளர்ச்சியின் செயல்பாட்டில் உள்ள பொருளாயத உலகத்தைத் தவிர வேறில்லை என்கிறது மார்க்சியத் தத்துவம்.

மாவோ இங்கே மிகவும் சுருக்கமாகவே எழுதி உள்ளார், விளக்கம் கொடுக்கவில்லை. மற்ற நூல்களில் இதன் விளக்கத்தை நாம் படித்தறிய வேண்டும்.

மார்க்சிய பொருளாயத ஒருமையைப் பற்றி மட்டும் இங்கே சிறிது விளக்கத்தைப் பார்ப்போம். உலகில் பலப் பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது, ஆனால் அதில் எவையும், எதனோடும் தொடர்பற்று தனித்து இருக்கதில்லை.

உலகில் மரம் இருக்கிறது, காற்று இருக்கிறது, மண் இருக்கிறது இவைகள் அனைத்தும் தனித்தன்மையோடு இருக்கிறது, ஆனால் தனித்து இருக்கவில்லை தன் சிறப்புத் தன்மையை பெற்றதுடன் மற்றவற்றோடு தொடர்பிலும் இருக்கிறது. மற்றவற்றுடன் இணைந்து காணப்படுவதினால் தனது சிறப்புத் தன்மையை இழந்துவிடவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தனது சிறப்புத் தன்மையை தன்னிடம் இருந்தே பெற்றுக் கொள்வதில்லை பிறவற்றிடம் இருந்தும் பெற்றுள்ளது. மார்க்சியத் தத்துவம் பன்மையை ஏற்கிறது அதனுள் உள்ள ஒற்றுமையையும் உணர்ந்துள்ளது. அதனால் தான் உலகை, மார்க்சியம் பன்மையில் ஒருமை என்று கூறுகிறது.

இவைகளை விரிவாக வேறு நூல்களில் படிக்க வேண்டும் என்பதை மட்டும் இங்கே தெரிவித்துக் கொண்டு மாவோவிடம் செல்வோம்.

இயங்கியல் பொருள்முதல்வாதத்தின், இயக்கம் பற்றியக் கோட்பாடு, முதலில் கருத்துமுதல்வாதத் தத்துவத்துவங்களுக்கும், மதத்தின் இறையியல் கருத்துக்களுக்கும் எதிராக உள்ளது. கருத்துமுதல்வாதத் தத்துவங்களும் மதங்களும் உலகப்பொருட்களின்  ஒருமையையும், உலகில் காணும் பொருள்வகைப்பட்ட இயல்பையும் மறுக்கிறது. இதனால் தான் கருத்துமுதல்வாதத்தை பொருள்முதல்வாதம் எதிர்க்கிறது.

இயக்கவியல் பொருள்முதல்வாதமானது உலகில் உள்ள பொருட்களின் பன்மையைத் தன்மையையும் ஒவ்வொருப் பொருளின் தனித்தன்மைகளையும் ஏற்றுக் கொள்கிறது. மேலும் உலகின் இயக்கத்தையும் வளர்ச்சியையும் பருப்பொருளின் அடிப்படையில் விளக்குகிறது. ஆனால் கருத்துமுதல்வாதங்களும் மதங்களும் உலகின் இயக்கமும் வளர்ச்சியும் பருப்பொருளில் இருந்து தனித்து இருப்பதாக கற்பனை செய்கிறது. மேலும் கடவுள், பரமாத்மா, ஆத்மசக்தி போன்றவற்றின் நடவடிக்கையினால் உலகம் இயங்குவதாக கற்பனை செய்கிறது.

இங்கே மாவோ புத்த மதத்தை மற்ற மதங்களுக்கு இணையான ஒரு மதாகவே பார்க்கிறார். நம்நாட்டில் உள்ள சில இடதுசாரிகளிடம் புத்த மதத்தின் மீது இருக்கும் சார்பு மாவோவிடம் இல்லை. புத்தரின் கருத்து பின்னுக்கு போய் புத்தம் மதமாகிவிட்டதை நாம் மறந்துவிடக் கூடாது.

சீனாவில் உள்ள புத்த மதம், உருவ வழிபாட்டைக் கொண்ட மதம் ஆகிய அனைத்தும் உலகுக்கு அப்பால் உள்ள சக்தியால் அனைத்தும் இயக்கப்படுவதாக கருதுகிறது. பருப்பொருளில் இருந்து இயக்கத்தை பிரித்துப் பார்க்கும் இத்தகைய கருத்துமுதல்வாதத் தத்துவங்கள் அனைத்தும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்துடன் ஒத்துப்போகவில்லை. அதனால் கருத்துமுதல்வாத தத்துவங்களையும் மதங்களையும் மார்க்சியத் தத்துவம் விமர்சிக்கிறது.

சீன இயக்கமறுப்பியல் சிந்தனையாளர்கள் பிரபஞ்சம் மாற்றத்துக்கு உள்ளாகாமல் அசைவற்று இருப்பதாக கருதுகிறது. இயற்கை சமூகம்  இரண்டுக்குமான அடிப்படை இயல்பு மாறாமல் இருப்பதாக இந்த சிந்தனைகள் கூறுகிறது. இந்த சிந்தனைகளுக்கு அவர்களது வர்க்க பின்னணியே காரணம் ஆகும். இயற்கை, சமூகம் ஆகிவற்றின் இயல்பு இயக்கத்துக்கும் மாற்றத்துக்கும் உட்பட்டது என்று சுரண்டும் ஆதிக்க வர்க்கமான முதலாளித்துவம் எப்படி ஒப்புக் கொள்ளும், அப்படி ஒப்புக் கொண்டது என்றால், அது தனது வர்க்கத்தின் அழிவை ஒப்புக் கொண்டது என்றாகிவிடும். இதனால் தான் சுரண்டும் பிற்போக்கு வர்க்கத்தின் கோட்பாடாக இயக்கமறுப்பில் இருக்கிறது.

புரட்சிகர உழைக்கும் வர்க்கமானது உலகின் வளர்ச்சிக் கோட்பாடான இயக்கவியலை உணர்ந்து ஏற்றுக் கொள்கிறது. அதன் அடிப்படையில் உலகையும் சமூகத்தையும் மாற்றுவதற்குப் போராடுகிறது. இதன் காரணமாகவே தத்துவம் வர்க்கத் தன்மை உடையதாக மார்க்சியம் கூறுகிறது.

இயக்கவியல் பொருள்முதல்வாதம் உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை வெளிப்படுத்துகிறது, கருத்துமுதல்வாதம் சுரண்டும் வர்க்த்தின் நலன்களை வெளிப்படுத்துகிறது.

ஒரு பொருளாக இருந்தாலும்சரி சமூகமாக இருந்தாலும்சரி அதன் வளர்ச்சியும் மாற்றமும் அதன் உள்முரண்பாட்டில் அடங்கி இருக்கிறது. இந்த உள்முரண்பாட்டை அறிந்து அதனை விரைவுபடுத்த இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை உழைக்கும் வர்க்கத்துக்கு உதவுகிறது. 

பாட்டாளி வர்க்கமும், அனைத்துப் புரட்சியாளர்களும் இந்த அறிவியல் வழிப்பட்ட ஆயுதத்தைக் கையில் எடுத்தால், அவர்களால் இந்த உலகத்தைப் புரிந்துகொள்ளவும், புரிந்து கொண்டதின் அடிப்படையில் உலகை மாற்றவும் முடியும்.

இந்த சிறு கட்டுரையில் மாவோ இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பவற்றுக்குள்ளேயே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையை சுருக்கமாக சேர்த்து விளக்கி உள்ளார்.

      சரியான சிந்தனையைப் பின்பற்றினால்தான் தவறு ஏற்படாமல் சரியாக செயல்பட முடியும். இதற்கு மார்க்சியக் கல்வியை நடைமுறையோடு இணைத்துப் படிக்க வேண்டும்.

உழைக்கும் வர்க்கத்தோடு இணைந்து, இயக்கவியல் பொருள்முதல்வாத வழிகாட்டுதலின் படி, கம்யூனிஸ்ட் கட்சி சென்று, உழைக்கும் மக்களுக்கான சமூகத்தைப் படைக்கும் என்கிற உறுதியோடும், மாவோ கூறிய கருத்துகளோடும் முதல் வகுப்பு நிறைவு பெறுகிறது.

மாவோவின் தொடர் வகுப்புகள்


மாவோவின் தொடர் வகுப்புகள்

 

1) மாவோ எழுதிய “சரியான சிந்தனைகள் எங்கிருந்து தோன்றுகின்றன?” “இயக்கவியல் பொருள்முதல்வாதம்” (1963/1938).
 

Sunday 13 August 2023

ஸ்டாலின் எழுதிய “செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தேர்தல் பரப்புரையும் மென்ஷிவிக்குகளும்”

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 96- வது வார வகுப்பு  – 13-08-2023  )


ஸ்டாலின் எழுதிய இரண்டு சிறு கட்டுரைகளை இன்று பார்க்கப் போகிறோம். முதலாவது காவுத்ஸ்கி எழுதிய “உந்து சக்திகளும் ருஷ்யப் புரட்சிக்கான வாய்ப்புகளும்” என்ற நூலுக்கு ஸ்டாலின் எழுதிய முன்னுரை, மற்றொன்று “செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தேர்தல் பரப்புரையும் மென்ஷிவிக்குகளும்.” இந்த இரண்டு சிறு கட்டுரைகளும் ஸ்டாலின் 1907-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எழுதியது. ஒரே விசயத்தைப் பற்றி பேசுவதால் இரண்டையும் சேர்த்துப் பார்க்கலாம்.

“உந்து சக்திகளும் ருஷ்யப் புரட்சிக்கான வாய்ப்புகளும்” என்கிற தலைப்பில் காவுத்ஸ்கி எழுதிய நூல் ஜார்ஜிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதற்கு ஸ்டாலின் எழுதிய முன்னுரையை முதலில் பார்க்கலாம்.

காவுத்ஸ்கி என்ற பெயரைக் கேட்டாலேயே பலருக்கு ஓடுகாலி காவுத்ஸ்கி என்று லெனின் கூறியதே நினைவுக்கு வரும். ஓடுகாலி என்பது சரியான சொல் கிடையாது, கொள்கை மாறி, அதாவது கொள்கையை விட்டு ஓடியவர் என்பதே பொருள் ஆகும். கடுமையாக விமர்சிக்கப்பட்ட காவுத்ஸ்கி நூலை மொழியாக்கம் செய்யப்பட்டு அதற்கு ஸ்டாலின் ஏன் முன்னுரை எழுத வேண்டும் என்று உடனடியாக சிலருக்குக் கேட்கத் தோன்றும்.

காவுத்ஸ்கி முதலில் சிறந்த கம்யூனிஸ்ட்டாகத்தான் இருந்தார். அதே போல பிளாகனவ்வும் தொடக்கத்தில் சிறந்த மார்க்சியவாதியாகத்தான் இருந்தார். பின்னாளில்தான் அவர்கள் மார்க்சியத்தை விட்டு விலகுகினார்கள். பின்னால் மாறிப் போனதால் அவர்களால் எழுதப்பட்ட பழைய நூல்களும் சந்தேகத்துக்கு உரியது என்று கருதிட முடியாது.

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டாம் அகிலம் ஆகியவற்றின் முக்கியமான தலைவர்களில் காவுத்ஸ்கி ஒருவர். தொடக்கத்தில் சிறந்த மார்க்சியவாதியாகத்தான் இருந்தார், முதல் உலக போர் ஏற்பட்டப் போது தடுமாறி போனார். சந்தர்ப்பவாதத்தின் வழியில் சென்று தொழிலாளர் இயக்கத்துக்கு பெரும் ஆபத்தானவராக மாறினார். இருந்தாலும் மார்க்சியவாதியாக இருந்த போது அவர் எழுதியதை குறைத்து மதிப்பிட முடியாது. அப்படிப்பட்ட நூல்களில் ஒன்றுதான், “உந்து சக்திகளும் ருஷ்யப் புரட்சிக்கான வாய்ப்புகளும்”. காவுத்ஸ்கி மார்க்சியத்தை விட்டு விலகுவதற்கு முன் எழுதிய இந்த நூலுக்கு ஸ்டாலின் முன்னுரை எழுதினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

முன்னுரையில் ஸ்டாலின் கூறுவதைப் பார்ப்போம்.

காவுத்ஸ்கி கம்யுனிச இயக்கத்தின் மிகச் சிறந்த கோட்பாளராகத் திகழ்ந்தவர். கோட்பாட்ளராக மட்டும் இல்லாமல் செயல்தந்திரத்திலும் மிகச் சிறந்தவராகவும் புகழ்பெற்றவர். அப்படிப்பட்டவர் ருஷ்ய நிலைமையின் செயல்தந்திரங்களைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார்.

ருஷ்யாவில் இரண்டுவிதமான செயல்தந்திரம் பற்றிய விவாதம் காரசாரமாக நடைபெற்றது. ஒவ்வொருவரும் விமர்சனங்களையும் அவச்சொற்களையும் வீசி எறிந்தார்கள். இத்தகைய கடுமையான நிலையில் காவுத்ஸ்கி போன்ற அனுபவம் வாய்ந்த தோழர் இது பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்பதை அறிய ருஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கு ஆர்மாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் பொருட்டே காவுத்ஸ்கியின் நூல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பிளவுபட்ட இரண்டு குழக்களின் முக்கியமான கருத்துக்களைப் பற்றி இந்த நூல் பேசியிருக்கிறது.

ருஷ்யாவில் காணப்படும் செயல்தந்திரப் பிரச்சினைப் பற்றி பிளாகானவ் ஐரோப்பிய தோழர்களின் கருத்தினைக் கேட்டுள்ளார். அதற்கான பதில் தான் இந்த காவுஸ்கியின் நூல்.

செயல்தந்திரத்தால் பிளவுபட்ட இரண்டு போக்குகளில் ஒன்று போல்ஷிவிக்குடையது மற்றொன்று மென்ஷிவிக்குடையது. இந்தப் பிரச்சினையில் காவுத்ஸ்  எதை ஆதரிக்கிறார், யார் பக்கம் நின்றார் என்பதே கேள்வி. ருஷ்யப் புரட்சியின் பொதுவான தன்மையைப் பற்றியே கேள்வி எழுப்பட்டது.

ருஷ்யப் புரட்சியானது ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியே தவிர, சோஷலிசப் புரட்சி அல்ல. நிலப்பிரபுத்துவத்தை முற்றிலும் அழித்தொழிக்கப்பட வேண்டும் இதற்கு விரைவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டும். இதை இரண்டு பிரிவுகளும் ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இதற்கு யார் தலைமைத் தாங்குவது என்பதில் தான் இரண்டு பதில்கள் மோதுகின்றன.

பாதிப்புக்குள்ளான அனைவரையும்  இணைத்து தலைமைத் தாங்க வேண்டியது, முதலாளித்துவ வர்க்கமா? பாட்டாளி வர்க்கமா?

பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடந்ததைப் போலப் பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் வலைப் பிடித்துக் கொணடு செல்ல வேண்டுமா? அல்லது பாட்டாளி வாக்கத்தின் பின்னால் முதலாளி வர்க்கம் வருமா?

இதுதான் முக்கியமானக் கேள்வி.

பிரெஞ்சுப் புரட்சியைப் போல நடத்த வேண்டும் என்று மென்ஷிவிக்குகள் கோரிக்கை வைத்தார்கள். நடத்த வேண்டியது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி என்பதனால் இதற்கு முதலாளி வர்க்கமே தலைமைத் தாங்க வேண்டும் என்பது மென்ஷிவிக்குகளின் கருத்து.

போல்ஷிவிக்குகள் இதற்கு மாறாக, பிரான்சில் அப்போது பாட்டாளி வர்க்கம் மிகவும் பலவீனமாக இருந்தது, அங்கு பாட்டாளி வர்க்கம் மிகமிகக் குறைந்த வர்க்க உணர்வைக் கொண்டதாகவும் அணித்திரட்டப்படாமலும் இருந்தது. அதனால் பிரான்சில் ஜனநாயகப் புரட்சிக்கு முதலாளித்துவ வர்க்கம் தலைமைத் தாங்கியது. ஆனால் ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் வர்க்க உணர்வு பெற்றதாகவும் அணித்திரட்டப்பட்ட சக்தியாகவும் இருக்கிறது. ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் புரட்சிகரமானதொரு வர்க்கம் என்ற வகையில் இயக்கத்தின் தலைமையை தாங்குகிறது, அதே போல புரட்சிக்கும் தலைமைத் தாங்க வேண்டும் என்பது போல்ஷிவிக்குகளின் கருத்தாகும்.

இந்தக் கேள்விக்கு காவுத்ஸ்கி என்ன பதில் தருகிறார் என்பதைப் பார்ப்போம்.

தாராளவாதிகள் பெரும்பாலும் பிரெஞ்சுப் புரட்சியைக் குறிப்பிடுகின்றார்கள் பெரும்பாலும் நியாயப்படுத்தப்படாமல் அவ்வாறு செய்கிறார்கள். இன்றைய ரஷ்யாவின் நிலைமைகள் 1789 இல் பிரான்சில் இருந்ததை விட பல விதங்களில் முற்றிலும் வேறுபட்டவை என்று காவுத்ஸ்கி முதலிலேயே தெரிவித்துவிடுகிறார். அதனால் பிரெஞ்சுப் புரட்சியை ருஷ்யப் புரட்சிக்கு முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றுவது மிகப்பெரும் தவறாகும். அத்துடன் மேற்கு ஐரோப்பாவில் நடைபெற்ற புரட்சிகர இயக்கங்களில் முன்னணியில் இருந்தது குட்டி முதலாளித்துவ வர்க்கமாகும்.

மேலும் முதலாளித்துவ வர்க்கமானது புரட்சியின் உந்து சக்தியாக இருந்த நிலை முடிந்துவிட்டது. பாட்டாளி வர்க்கம், சுதந்திரமான வர்க்கமாக, புரட்சிகர நோக்கங்களைக் கொண்ட சுயேச்சையான வர்க்கமாக மாறிவிட்டது என்று காவுத்ஸ்கி அந்த நூலில் கூறியுள்ளார்.

ருஷ்யாவின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கு முதலாளித்துவ வர்க்கம் தலைமைத் தாங்க முடியாது, ருஷ்யப் பாட்டாளி வர்க்கமே புரட்சிக்கு தலைமைத்தாங்க வேண்டும் என்று ருஷ்யப் புரட்சியின் பொதுத்தன்மையாக காவுத்ஸ்கி கருத்தினார்.

ருஷ்ய ஜனநாயகப் புரட்சியில் தாராளவாத முதலாளித்துவம் குறைந்தபட்சம் பாட்டாளி வர்க்கத்தின் கூட்டாளியாக இருக்க முடியுமா? என்பது அடுத்தக் கேள்வி.

தாராளவாத முதலாளித்துவம் கூட்டாளியாக இருக்க முடியாது என்பது போல்ஷிவிக்குகளின் பதில் ஆகும். பிரெஞ்சுப் புரட்சியில் தாரளவாத முதலாளித்துவ வர்க்கம் புரட்சிகரமான பாத்திரம் வகித்தது உண்மைதான். ஏன் அங்கு அப்படி நடந்து என்றால், அப்போது அங்கே வர்க்கப் போராட்டம் தீவிரம் அடையவில்லை, பாட்டாளி வர்க்கமானது மிகமிகக் குறைந்த வர்க்க உணர்வு பெற்றிருந்தக் காரணத்தால், தாராளவாத முதலாளி வர்க்கத்தின் தொங்குசதையாக அப்போது பாட்டாளி வர்க்கம் செயல்பட்டது.

ஆனால் ருஷ்யாவின் நிலைமை வேறு. ருஷ்யப் பாட்டாளி வர்க்கமானது மிக அதிக அளவிலான வர்க்க உணர்வை பெற்றதாக இருக்கிறது. அதானால் அதற்கு தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்தின் உதவி தேவைப்படவில்லை. மேலும் பாட்டாளிகள் வர்க்க உணர்வுடன் போராடும் இடத்தில் தாராளவாத முதலாளி வர்க்கத்தின் புரட்சிகர உணர்வு இழந்து விடுகிறது. உண்மையில் ருஷ்ய தாராளவாதக் கேடேட்டுகள் பிற்போக்குவாதிகளிடம் தஞ்சம் அடைந்து கொண்டதுடன், புரட்சியை எதிர்த்து போராடுகிறார்கள். அதனால் பிற்போக்காளருடன் கைகோர்த்த தாரளமாவாத முதலாளி வர்க்கத்துடன் கூட்டணி வைத்துக்கொள்ள முடியாது.

அவர்கள் பிற்போக்காளர்களுடன் கூட்டணி வைத்துள்ளர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிற்போக்காளர்கள் காடேட்டுகள் ஆகிய கூட்டணிக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் ஏழை விவசாயி வர்க்கத்துடன் தான் உறுதியான கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது போல்ஷிவிக்குகள் கருதுகிறார்கள். அப்படிக் கூட்டணி வைத்துக்கொள்ளாது போனால் வெற்றி என்பது இயலாத ஒன்றாகிவிடும். பாட்டாளி-விவசாயி கூட்டணியே வெற்றி பெறும் என்று போல்ஷிவிக்குகள் உறுதியுடன் கூறினார்கள்.

தேர்தலின் போது டூமாவுக்கு உள்ளேயும் வெளியேயும் போல்ஷிவிக்குகள் தாராளவாத காடேட்டுகளை ஆதரிக்கவில்லை. விவசாயிகளின் புரட்சிகரப் பிரதிநிதிகளை மட்டுமே போல்ஷிவிக்குகள் ஆதரித்தார்கள்.

மென்ஷிவிக்குகள் இதற்கு மாறாகவே சென்றார்கள். தாராளவாத முதலாளிகள் புரட்சிகரமான பாத்திரம் வகிப்பார்கள் என்று மென்ஷிவிக்குகள் கருதினார்கள். பிரான்சைப் போல இங்கேயும் தாராளவாத முதலாளிகள் புரட்சிகரமாக செயல்படுவார்கள், பழைய சமூக அமைப்பினை எதிர்பார்கள். அதனால் தாராளவாத முதலாளிகளை புரட்சியில் கட்டாயம் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே மென்ஷிவிக்களின் முடிவாக இருந்தது.

மென்ஷிவிக்குகள் டூமாவுக்கு உள்ளேயும் வெளியேயும் தாராளவாத முதலாளி வர்க்கத்தை ஆதரித்தார்கள்.

பிளாகானவ்வும் தேர்தலில் பாட்டாளி வர்க்கத்தின் கட்சியானது, முதலாளிகளின் கட்சியான காடேட்டுகளுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று கருதினார்.

தாராளவாத முதலாளி வர்க்கத்தின் புரட்சிகரத் தன்மையில் மென்ஷிவிக்குகள் மிகவும் கவரப்பட்டார்கள்,  அவர்களிடம் மிகுந்த நம்பிக்கை வைத்தார்கள். அது எந்தளவுக்கு செல்கிறது என்றால், தாராளவாத முதலாளிளைத் திருப்திபடுத்துவதற்காக, ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை காணாமல் செய்திடும் அளவுக்கு, அவர்கள் தயராக இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இத்தகைய தாராளவாத முதலாளித்துவத்தை காவுத்ஸ் எப்படிப் பார்க்கிறார்? பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான நட்பு சக்தியாக அவர் யாரைப் பார்க்கிறார்? என்பதை அடுத்துப் பார்க்கலாம்.

இதற்கு முன்பு நடைபெற்றது போல் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் பாட்டாளி வர்க்கம் இனிமேலும் முதலாளித்துவத்தின் தொங்குசதையாகவும் அதன் கைக்கருவியாகவும் இருக்க முடியாது என்பது காவுத்ஸ்கியின் கருத்தாகும்.

பாட்டாளி வர்க்கம் அதற்கே உரிய சுயேட்சைத் தன்மையுடன் தனது நோக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. இந்த நிலையில் தாராளவாத முதலாளித்துவ வர்க்கமானது புரட்சிகர தன்மையினை இழந்துவிடுகிறது. ஆக, ருஷ்யாவில் புரட்சிகர இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒன்றாக முதலாளித்துவம் இருக்க முடியாது.

பாட்டாளி வர்க்கமும் விவசாயி வர்க்கமும் இணைந்த கூட்டணியானது, தங்களது நலன்களில் உறுதியாக இருக்கிறது என்பதே காவுத்ஸ்கியின் கருத்தாகும்.

ருஷ்யப் புரட்சியின் உள்ளடக்கம் என்னவாக இருக்கும்?

ருஷ்யப் புரட்சியில் எந்த வர்க்கங்கள் வெற்றி அடை வேண்டும்? எந்த வர்க்கங்கள் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும்?

ருஷ்யப் புரட்சியில் பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும் முக்கிய சக்திகளாக இருப்பதால், அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிக்காமல் வெற்றி சாத்தியம் இல்லை. பாட்டாளி-விவசாயி கூட்டணியே அதிகாரத்தை வெல்வார்கள். பாட்டாளி வர்க்கம்  விவசாயி வார்க்கம் ஆகியவற்றின் சர்வாதிகாரத்தை நிறுவுதல் என்பதே  இதற்குப் பொருள் என்று போல்ஷிவிக்குகள் வலியுறுத்தினார்கள்.

இதற்கு மாறாக, மென்ஷிவிக்குகள் பாட்டாளி வர்க்கம் விவசாயி வர்க்கம் ஆகியவற்றின் சர்வாதிகாரத்தை மறுதலித்தார்கள். இந்த இரு வர்க்கமும் இணைந்து வெற்றியை அடைய முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள். தாராளவாத முதலாளி வர்க்க பிரதிநிதிகளான காடேட்டுகளின் தலைமையிலான ஒரு டூமாவின் கைகளில்தான் அதிகாரம் சென்றடைய வேண்டும் என்று மென்ஷிவிக்குகள் கருதினார்கள்.

இவைகளைப் பற்றிய காவுத்ஸ்கியின் கருத்து என்னவென்று அடுத்துப் பார்க்கலாம்.

ருஷ்யாவின் புரட்சியானது பாட்டாளி வர்க்கம், விவசாயி வர்க்கம் ஆகியவற்றின் இணைப்பில்தான் இருக்கிறது. இந்த இரண்டு வர்க்கங்களும் தோளோடுதோள் சேர்ந்து நின்றால் மட்டுமே வெற்றி சாத்தியம். தாராளவாத முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியான காடேட்டுகள் புரட்சிக்கு விரோதமானவர்கள் என்பதே காவுத்ஸ்கியின் கருத்தாக இருக்கிறது.

புரட்சிகர கொந்தளிப்பான சூழ்நிலையில் தற்காலிகமான புரட்சிகர அரசு என்று அழைக்கப்படுகிற ஒரு நிலை இயற்கையாகவே தலைதூக்கும். அத்தகைய புரட்சிகர அரசில் கம்யூனிஸ்டுகள் நுழைவது அனுமதிக்கத்தக்கதா?

பாட்டாளி வர்க்கத்தின் நலன்களையும், தற்காலிகப் புரட்சியின் நலன்களையும் திறம்பட பாதுகாக்கும் வகையில், அத்தகைய தற்காலிக அரசாங்கத்திற்குள் நுழைவது கொள்கையின் பார்வையில் அனுமதிக்கப்படுவது மட்டுமல்லாமல், நடைமுறை காரணங்களுக்காகவும் நுழைவது அவசியம் என்று போல்ஷிவிக்குகள் கருதினார்கள்.

ஆனால் தற்காலிக அரசில் நுழைவது தவறு என்றனர் மென்ஷிவிக்குகள். பாட்டாளி வர்க்கத்துக்கு இது உயிரைப் பறிக்கும் முயற்சி என்பதே அவர்கள் கருத்து.

தற்காலிக அரசு பற்றி காவுத்ஸ்கி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

தற்காலிக அரசில் நுழைவது அனுமதிக்கக்கூடியது என்கிறார் காவுத்ஸ்கி. அரசின் தலைமைப் பொறுப்பானது தற்காலிகமானதுதான், அந்தத் தலைமையை ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வதற்கு வாய்ப்பு உண்டு என்றும் கருதினார்.

காவுத்ஸ்கி எழுதிய “உந்து சக்திகளும் ருஷ்யப் புரட்சிக்கான வாய்ப்புகளும்” என்கிற நூலில் கூறப்பட்டவைகள் போல்ஷிவிக்குகளின் கருத்துகளோடு ஒத்துப் போகிறது. அன்றைய நிலையில் காவுத்ஸ்கி ஒரு சிறந்த கோட்பாட்டாளர் என்பதை நினைவு கொண்டு பார்க்கும் போது, போல்ஷிவிக்குகளின் முடிவுகள் சரியானதாக இருக்கிறது.

மென்ஷிவிக்குகளுடைய கருத்துகளோடு காவுத்ஸ்கியின் கருத்துக்கள் முழுதும் ஒத்துப்போகவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

மென்ஷிவிக்குகளின் கருத்துக்கள் தாளராளவாத முதலாளிகளின் பிரதிநிதியான காடேட்டுகளின் கருத்துக்களோடு ஒத்துப் போகிறது.

அன்றைய சிறந்த கோட்பாளரான காவுத்ஸ்கியின் கருத்தோடு இணைகிற போல்ஷிவிக்குகளின் கருத்துக்களே சரியானது என்பதை எதாத்தமும் உறுதிப்படுத்தியது.

அடுத்து ஸ்டாலின் எழுதிய “செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தேர்தல் பரப்புரையும் மென்ஷிவிக்குகளும்” என்கிற கட்டுரையில் உள்ளவற்றைப் பார்க்கலாம்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் என்பது தொழிற்சாலைகள் நிறைந்த நகரம், அங்கு தொழிலாளர்கள் நிறைந்து இருந்தார்கள். அதனால் அங்கு டூமா தேர்தல் பரப்புரை தீவிரமாக இருக்கும். கட்சிகளுக்கு இடையேயான மோதல்களும் அதிகம் நடைபெறும்.

நரோத்னிக்குகள், காடேட்கள், கறுப்பு நூற்றுவர், போல்ஷிவிக்குகள், மென்ஷிவிக்குகள், ட்ருடோவிக்குகள், சோசலிஸ்ட்-புரட்சியாளர்கள் ஆகியவர்களுக்கு இடையில் கடுமையான போராட்டம் நடந்தது.

இதற்கு மறுபுறத்தில், பல்வேறு கட்சிகளின் நிறமானது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கைப் போல வேறெங்கும் அவ்வளவு தெளிவாக வெளுத்ததும் இல்லை. தேர்தலைப் பற்றி இங்கே ஸ்டாலின் சொல்வதை அவர் சொற்களிலேயே காண்போம்.

 

“ஒரு தேர்தல் பரப்புரை என்பதுதான் உண்மையான நடவடிக்கை. கட்சிகளின் தன்மையை அவற்றின் நடவடிக்கைகளின் மூலமாக மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். எவ்வளவு தீவிரமாக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறதோ அந்த அளவிற்குச் சம்பந்தப்பட்ட போட்டியாளர்களின் நிறமானது மேலும் மேலும் தெள்ளத் தெளிவாக அம்பலமாகவே செய்யும்.”

தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேறு விசயம், ஆனால் கட்சியின் நடவடிக்கை ஒரசிப்பார்ப்பதற்கு தேர்தல் களம் ஒரு கல்லாக இருக்கிறது. கட்சியின் நடவடிக்கைகள் எந்தளவுக்கு மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது என்பதை அறிவதற்கு தேர்தலின் முடிவுகள் உதவுகிறது. டூமா போன்ற சிறிதும் அதிகாரமற்ற தேர்தல் களத்தையே ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தேர்தல் பரப்புரையின்போது போல்ஷிவிக்கள், மென்ஷிவிக்குகள் ஆகியோரின் நடத்தையானது மிகுந்த கவனத்தைக் கவரும்விதமாக இருக்கிறது என்கிறார் ஸ்டாலின்.

தேர்தலுக்கு முன்பாக, அரசியல் அமைப்புச் சட்டவழியிலான ஒரு சட்ட மன்றமும், ஜனநாயக வழியிலான ஒரு குடியரசும் தேவையற்ற ஒரு சுமை என்றுதான் மென்ஷிவிக்குகள் கூறினார்கள். தேவைப்படுவது டூமாவும் காடேட்டுகளின் ஒர் அமைச்சரவையும் ஆகும்.

வர்க்கப் போராட்டம் என்பது இந்தத் தருணத்தில் தற்கொலைக்கு ஒப்பானது மேலும் தீமை விளைவிக்கக் கூடியதும் ஆகும். எனவே பல்வேறு வர்க்கங்களும் குழுக்களும் சிறிது காலத்துக்கு மிகச் சிறந்த திட்டங்கள் அனைத்தையும் முற்றிலுமாக கைவிட வேண்டும், அரசியல் அமைப்புச் சட்ட வழியிலான ஒரே கட்சியாக இணைய வேண்டும். இதுவே மென்ஷிவிக்குகளின் இறுதிக் குறிக்கோளாகக் காணப்பட்டது.

தொடக்கத்தில் இருந்தே இத்தகையப் போக்கை போல்ஷிவிக்குகள் கண்டித்து வந்தார்கள். காடேட்டுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது பொருத்தமற்றது என்றும் தேர்தல் பரப்புரையில் கம்யூனிஸ்டுகள் தனித்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்கள்.

பிற்போக்குத்தனத்திற்கு எதிராகவும் தாராளவாத முதலாளித்துவத்துக்கு எதிராகவும் ஒரே நேரத்தில் இரண்டு முனைகளில் போராட வேண்டும் என்றே போல்ஷிவிக்குகள் கூறினார்கள்.

ஆனால் மென்ஷிவிக்குகள் வேறு வேலையில் இறங்கினார்கள். காடேட்டுகளுடன் டூமாவில் மூன்று இடங்களுக்காக பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பாட்டாளி வர்க்கத்தைச் சுற்றிப் புரட்சிகரச் சக்திகளை ஒன்றிணைப்பதிலும், பாட்டாளி வர்க்கத்தின் செயல்தந்திரம் எந்தவிதத்திலும் சமரசத்துக்கு இடம் கொடுக்காமலும் ஊசலாட்டம் இல்லாமலும் செயல்பட வேண்டும் என்று போல்ஷிவிக்குகள் கருதினார்கள். அதே நேரத்தில் மென்ஷிவிக்குகள் தொழிலாளர்களின் முதுக்குக்குப் பின்னால் காடேட்டுகளுடன் பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

காடேட்டுகளின் மேலாதிக்கம் ஒழிக என்று போல்ஷிவிக்குகள் அறிவித்தார்கள். ஆனால் மென்ஷிவிக்குகள் காடேட்டுகளின் மேலாதிக்கத்துக்கு அடிபணிந்து அவர்களின் வலைப் பிடித்துக் கொண்டு பின்னால் சென்றார்கள்.

தொழிலாளர் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. மென்ஷிவிக்குகள் ஆதிக்கம் செலுத்திவந்த மாவட்டங்களிலும் தோல்வி கண்டார்கள், அங்கே சோஷலிசப் புரட்சியாளர்கள் வெற்றிப் பெற்றார்கள்.

போல்ஷிவிக்குகள் சமரமின்றி அனைத்து புரட்சிகரச் சக்திகளையும் ஒன்றிணைத்தார்கள். சோஷலிசப் புரட்சிவாதிகள் போன்றவர்கள் வெளிப்படையாகவே காடேட்டுகளின் மேலாதிக்கம் ஒழிக என்று போல்ஷிவிக்குகளின் முழக்கத்தோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

இதற்கிடையில் மென்ஷிவிக்குகளுடனான பேச்சுவார்த்தைகளை காடேட்டுகள் முறித்துக் கொண்டார்கள். ஆனால் போல்ஷிவிக்குகள் மற்ற புரட்சிகரச் சக்திகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு காடேட்டுகளை தனிமைப்படுத்தி தாக்குதலைத் தொடுத்தார்கள்.

இறுதியில் மென்ஷிவிக்குகள் தங்களது செயல்தந்திரங்களை மறுதலித்துவிட்டு போல்ஷிவிக்குகளின் செயல்தந்திரத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டார்கள். இறுதியாகப் பார்க்கும் போது மென்ஷிவிக்குகள் காடேட்டுகளின் வலைப் பிடித்துக் கொண்டு செல்வதை விடுத்து இப்போது போல்ஷிவிக்குகளின் வலைப்பிடித்துக் கொண்டார்கள்.

இவ்வாறு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மென்ஷிவிக்குகளின் செயல்தந்திரம் தோல்வி கண்டது, போல்ஷிவிக்குகளின் செயல்தந்திரம் சரியானது என்று நிரூபிக்கப்பட்டது.

Sunday 6 August 2023

ஸ்டாலின் எழுதிய “கட்சியின் நெருக்கடியும் நமது கடமையும்”

 (“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 95- வது வார வகுப்பு  – 06-08-2023  )


எல்லாவற்றிலும் ஏற்றமும் இறக்கமும் இருப்பது போல, கட்சிக்கும் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியிலும் முன்னேற்றம் காண்பது போலவே பின்னடைவும் சந்திக்கிறது. பின்னடைவைப் புரிந்து கட்சியை கட்டி எழுப்ப வேண்டிய பணி கட்சித் தலைமைக்கும் கட்சி ஊழியர்களுக்கும் இருக்கிறது.

போல்ஷிவிக் கட்சியான ருஷ்ய கம்யுனிஸ்ட் கட்சியும் பின்னடைவை சந்தித்தது.

ருஷ்யாவில் 1905-1907வரை நடைபெற்ற புரட்சி தோல்வி கண்டது. தோல்வியைத் தொடர்ந்து ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் ஸ்டாலின் 1909 ஆண்டில் “கட்சியின் நெருக்கடியும் நமது கடமையும்” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.

பின்னடைவு ஏற்பட்ட கட்சி, மறுசீரமைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த சிறிய கட்டுரையில் ஸ்டாலின் விளக்கி இருக்கிறார்.

கட்சி பின்னடைந்திருப்பது கட்சியில் உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக தெரிந்துவிடும். அதனால்தான் ருஷ்யக் கட்யூனிஸ்ட் கட்சி நெருக்கடியில் இருக்கிறது என்பதில் எந்த ரகசியமும் இல்லை என்று இந்தக் கட்டுரையைத் தொடங்குகிறார். அடுத்து எப்படிப்பட்ட விசயங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துச் சொல்கிறார்.

கட்சியின் உறுப்பினர்கள் குறைந்து வருகின்றனர், அமைப்புகள் சுருங்கிவிட்டது. சுருங்கியது மட்டுமில்லாது மற்ற பகுதியில் உள்ள அமைப்புகளுடன் தொடர்பிழந்து தனித்தனியாக இருக்கிறது. ஒருங்கிணைந்த கட்சிப் பணிகள் இல்லாததே கட்சியைப் பிடித்துள்ள நோயாகும்.

பரந்துபட்ட மக்களிடம் இருந்து கட்சி தனிமைப்பட்டிருப்பதே பெரும் மனச்சோர்வை ஏற்படுதும் முதல் விசயமாக இருக்கிறது. முன்பு கட்சியில் உள்ள ஆயிரக்கணக்கானவர்கள் இருந்தனர், அவர்கள் லட்சிக்கணக்கான மக்களை வழிநடத்தினர். இப்போது ஆயிரக்கணக்கானவர்கள் என்பதற்கு பதிலாக பத்துபேர் இருக்கின்றனர், அதிகபட்சமாக நூறுபேர் கட்சியில் தொடர்ந்து நீடிக்கின்றனர். இவ்வளவு குறைவானவர்களைக் கொண்டு, மக்களை வழிநடத்த முடியாது என்பது தெரிந்ததே ஆகும்.

ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி விரிவான அளவில் மக்களிடம் சித்தாந்தத் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது உண்மையே. மக்களும் கட்சியை மதிக்கின்றனர். புரட்சிக்கு முந்தைய நிலையை வைத்துப் பார்க்கும் போது புரட்சிக்கு பிந்தைய நிலைமை மாறி உள்ளது என்பது உண்மையே ஆனால் கட்சியின் நடைமுறை செயற்பாட்டுக்கு இது போதாது.

புரட்சி தோல்வி அடைந்தாலும் புரட்சி மக்களுக்கு பாடம் கற்பித்துள்ளது, ஒரு வகையில் 1917ஆம் ஆண்டு நவம்பர் புரட்சிக்கு இந்தப் புரட்சி காரணமாக இருந்தது என்று கூறலாம்.

கட்சியைப் பற்றி மக்களிடையே மதிப்பு இருப்பது உண்மையே ஆனால் இது மட்டும் போதாது. மக்களை எந்தளவுக்கு அணிதிரட்டப் படுகிறார்களோ அதுவே நடைமுறைக்கு தேவையானது.

1907 ஆம் ஆண்டு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கட்சிக்கு 8,000 உறுப்பினர் இருந்தனர், தற்போது அது 200 -ஆகக் குறைந்துள்ளது. தொழிலாளர்கள் நிறைந்த நகரத்திலேயே இந்த நிலைமை என்றால் நெருக்கடியின் தீவிரத்தை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

மக்களிடம் இருந்து கட்சி பிளவுப்பட்டுள்ளது என்பது ஒரு பிரச்சினை என்றால், ஒர் ஊரில் என்ன நடக்கிறது என்பது பற்றி, மற்ற ஊர்களில் உள்ள அமைப்புகளுக்கு தெரிவதில்லை என்பது மற்றொரு பிரச்சினையாக இருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அமைப்பு தனிமைப்பட்டுள்ளது. முன்பு இருந்த ஒருங்கிணைந்த கட்சி அமைப்பு இப்போது இல்லை.

தற்போது உள்ள ப்ராலிடெரி, கோலோஸ், சோஷியல் டெமாக்ரட் போன்ற பத்திரிகைகளைக் கொண்டு அனைத்து ருஷ்யாவையும் இணைக்க முடியவில்லை. வெளிநாடுகளில் இருந்து வெளிவரும் பத்திரிகை ருஷ்யாவின் எதார்த்த நிலையில் இருந்து வேறுபட்டு இருக்கிறது.

அமைப்புகள் சிதறிக்கிடந்தாலும் சித்தாந்த இணைப்பு இருக்கிறது, பொதுவான திட்டம் இருக்கிறது. புரட்சியின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான நடைமுறைக் குறிக்கோள்களும் இருக்கிறது. கட்சி அமைப்புகளின் சித்தாந்த ஒற்றுமை மட்டும் தனித்திருக்கும் அமைப்புகளை ஒருங்கிணைத்திடாது.

ஆக, திரளான மக்களிடம் இருந்து கட்சி பிளவுபட்டு நிற்பது, அதன் அமைப்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று தனிமைப்பட்டு நிற்பது ஆகிய இவ்விரண்டும்தான், கட்சியானது கடந்து வரவேண்டிய நெருக்கடியின் சாரமாகும்.

புரட்சியின் நெருக்கடி, எதிர்ப்புரட்சியின் தற்காலிக வெற்றி, அதன்விளையாக உருவான மந்தநிலை, மேலும் கட்சி 1905-1906ஆம் ஆண்டுகளில் அனுபவித்த அரைகுறையான சுதந்திரமும் இழந்தது போன்றவையே தற்போதைய நெருக்கடிக்குக் காரணம் என்பது எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

அரைகுறையான சுதந்திரமாக இருந்தாலும் அப்போது கட்சி விரிவடைந்தது, வலுபெற்றது. புரட்சிக்கு முன் கிடைத்த சுதந்திரம் காணாமல் போயிற்று, கட்சி சுணக்கம் கண்டது. புரட்சி தோல்விக் கண்டதைத் தொடர்ந்து, பல அறிவுத்துறையினர் கட்சியில் இருந்து வெளியேறினர். இவர்களுடன் ஊசலாட்டத்தில் இருந்த தொழிலாளர்களும் கட்சியை விட்டு விலகினர்.

தற்போதைய சுதந்திர இழப்பினால் ஏற்பட்ட நெருக்கடியானது சுதந்திரம் கிட்டும்வரை இந்த நெருக்கடியிலேயே கிடக்கும் என்று சிலர் தவறாக நினைக்கின்றனர். முதலில் இந்த நெருக்கடியில் இருந்து கட்சி, புத்துயிர் பெற்று செயல்படும்போதுதான் சுதந்திரம் பெறமுடியும். நெருக்கடியில் துவண்டுகிடந்தால் சுதந்திரத்தை பெற முடியாது.

முதலாளித்துவத்தின் அமைப்பு சீராக வளர்ந்து வரும் நிலையில், பாட்டாளி வர்க்கத்தின் அமைப்பும் தவிர்க்க முடியாமல் ஏற்படும் என்று உலகம் முழுவதும் அறிந்த வர்க்கப் போராட்டத்தின் விதிகள் தெரிவிக்கின்றன. பாட்டாளி வர்க்கத்தின் அமைப்பை ஒரு வர்க்கமாக வளர்ப்பதற்கு, ஒரே ஒரு தொழிலாளர் கட்சி என்ற வகையில் நமது கட்சியை புதுப்பித்தல் அவசியமான ஒரு முன்நிபந்தனை என்பதை கம்யூனிஸ்டுகள் அனைவரும் அறிந்ததே ஆகும்.

இதன் விளைவாக, நமக்குத் தெரிவது என்னவென்றால், சுதந்திரம் கிட்டுவதற்கு முன்பே கட்சியானது நெருக்கடியில் இருந்து மீளவேண்டும், இது சாத்தியமானது மட்டுமல்ல தவிர்க்க முடியாததும் ஆகும்.

கட்சியை மீட்டெடுப்பதற்கான வழிகள் என்னவென்றால், முதலாவது மக்களுடன் இணையும் வழிகளைக் கண்டுபிடிப்பது, இரண்டாவது ஒன்றுடன் ஒன்று சேராமல் தனித்து நிற்கும் அமைப்புகளை ஒரே அமைப்பாக இணைப்பது. இந்த இரண்டையும் மனதில் கொண்டு செயல்பட்டால்தான் இந்த நெருக்கடியில் இருந்து விடுபடமுடியும்.

அடுத்து ஸ்டாலின் கேள்வியை தொடுத்து அதற்கு பதிலும் தருகிறார்.

நெருக்கடியில் இருந்து கட்சி எவ்வாறு தன்னை விடுவித்துக் கொள்ள முடியும்; இதை அடைய என்ன செய்ய வேண்டும்?

கட்சியை முடிந்தவரை சட்டவழிமுறையாக்க வேண்டும். டூமாவில் உள்ள சட்டவழியிலான குழுவை ஒன்றிணைப்பதின் மூலம் இதை செய்ய வேண்டும் என்று சிலர் கருத்துரைக்கின்றனர். இதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என்று ஸ்டாலின் அன்றைய நிலையை விளக்குகிறார்.

பண்பாட்டு கழகம் போன்ற சாதாரண சட்ட அமைப்புகளே கடுமையான துன்பங்களுக்கு ஆளாகும் இன்றையநிலையில், கட்சியை சட்டவழியில் செயல்படுத்த எப்படி முடியும். இப்போது சட்டவழியில் செல்வது என்பது கட்சியின் புரட்சிகரமான கோரிக்கைகளை கைவிடுவதற்கு சமம். அப்படி செய்வது கட்சியை புதுப்பிப்பதற்கு பதில் புதைப்பதற்கு சமம். டூமாவில் உள்ள குழுவே மக்களிடம் இருந்து மட்டுமல்லாது கட்சி அமைப்புகளிடம் இருந்தும் தனிமைப்பட்டிருக்கும் நிலையில் அது எப்படி கட்சியை மக்களுடன் இணைக்க முடியும் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார்.

நெருக்கடியில் இருந்து விடுபட சிலர் வேறொரு ஆலோசணையைக் கூறுகின்றனர். அது என்னவென்றால், நிலையற்ற அறிவுத்துறையினரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, கட்சி செயல்பாடுகளின் பெரும்பகுதியை கூடுமானவரை தொழிலாளர்களிடம் கொடுத்துவிட வேண்டும்.

பயனற்ற விருந்தாளிகளை கட்சியிலிருந்து விடுவித்து, தொழிலாளர்களின் கைகளில் செயல்பாடுகளை குவிப்பது கட்சியின் மறுசீரமைப்பிற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பழைய அமைப்பு முறையின் கீழ், பழைய கட்சிப் பணி முறைகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் "தலைமை" ஆகியவற்றுடன் வெறும் "பொறுப்பு மாற்றம்" மட்டும் கட்சியை மக்கள்திரளுடன் இணைத்து கொள்வதற்கு போதுமானதாக இருக்காது என்கிறார் ஸ்டாலின்.

நோய்வாய்ப்பட்டுள்ள கட்சிக்கு இதுபோன்ற அரைகுறையான நடவடிக்கைகளால் எதையும் செய்திட முடியாது. கட்சி சந்தித்துள்ள தீவிரமான நெருக்கடிக்கு தீவிரமான வழிமுறைகளையே கையாளவேண்டும்.

தற்போதைய நிலைமைகளைக் கொண்டு, பரந்துபட்ட மக்களை எழுச்சியுறச் செய்யும் கேள்விகளை எழுப்புவதின் மூலம் தான் செய்திட முடியும்.

தொழிற்சாலைகள் முடல், உற்பத்தியின் அளவைக் குறைத்தல், அதற்கு ஏற்ப தொழிலாளர்களை நீக்குதல், சம்பளம் குறைத்தல், வேலை நேரத்தை நீட்டித்தல் போன்ற நிலைமைகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.  இதற்கான கிளர்ச்சியில் உழைக்கும் மக்கள் தள்ளப்படுகிறார்கள்.

இந்த கிளர்ச்சியின் போது, இது ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல, இது மூலதனத்தின் ஆதிக்கத்தால் ஏற்படுவது என்பதை உழைக்கும் மக்கள் உணரும்படி செய்ய வேண்டும். உயிரோட்டமான உண்மைகளின் மூலம், நமது கட்சியின் மாபெரும் குறிக்கோள்களை எடுத்துச் சொல்ல வேண்டும். அசைவற்று கிடக்கும் நிலையை கடப்பதற்கு இதைவிட சிறந்த வழி எதுவும் கிடையாது. அவ்வாறு செய்யும் போதுதான் உழைப்பாளர்களை கட்சியை சுற்றி அணிதிரட்ட முடியும்.

தொழிற்சாலைகள் மற்றும் வேலைசெய்யும் இடங்களில் உள்ள கட்சிக் குழுக்கள்தான் இத்தகைய நடவடிக்கையை செய்திட முடியும். பாட்டாளிகள் புரட்சிகரமானவர்கள் என்பதனால் அனைத்து பாட்டாளிகளும் எளிதில் கட்சி செயல்பாட்டில் ஈடுபடுவர்கள் என்று எதிர்பார்க்க முடியாது. முன்னேறிய பாட்டாளிகள்தான் உடனடியாக கட்சிப் பணியைப் புரிந்து இணைந்து கொள்வார்கள்.

தொழிலாளர்களின் அனைத்து விசயங்களிலும் கட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு, அவர்களின் அன்றாட நலன்களுக்குக் குரல் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களின் அடிப்படையான நலன்களுடன் கட்சியின் குறிக்கோளை இணைத்து பாட்டாளி வர்க்கத்துக்கு போதிக்க வேண்டும். இதுவே கட்சி ஊழியர்களின் கடமை ஆகும். இந்தக் கடமையை உணர்ந்து செய்வதின் மூலமே உழைக்கும் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முடியும்.

இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு, கட்சி அமைப்பு சரியாக கட்டப்பட வேண்டும். தொழிலாளர்களில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்கவர்களை, அனைத்து உள்ளூர் அமைப்புகளில் இணைத்துக் கொள்ள வேண்டும். அமைப்பின் முக்கியமான பொறுப்புகளில் இப்படிப்பட்டவர்களை அமர்த்த வேண்டும்.

புதிய கட்சி ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் போது, போதிய அனுபவம் இல்லாத காரணத்தால் தொடக்கத்தில் தடுமாற்றம் அடைவார்கள், அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அனுபவம் கண்டிப்பாக அவர்களுக்கு பயிற்சியைக் கொடுக்கும். கட்சிக்குத் தேவையான ஊழியர்கள் தயாராக வானத்தில் இருந்து வருவதில்லை, பயிற்சியின் மூலமே கிடைக்கின்றனர்.

இத்தகைய நிலையில் அமைப்பின் முழக்கம், “கட்சி நடவடிக்கையின் அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய தொழிலாளர்களுக்கான பாதையை விரிவுபடுத்துங்கள்,” “அதிகமான வாய்ப்புகளை அவர்களுக்குக் கொடுங்கள்” என்ற வகையில் இருக்க வேண்டும். கட்சியின் முழக்கங்கள் கட்சியின் அப்போதைய போக்குகளுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ள வேண்டும்.

பயிற்சி பெற்ற ஊழியர்களை நம்பியே கட்சியின் செயற்பாடு இருக்கிறது. தலைமைப் பொறுப்பில் உள்ள முன்னேறிய தொழிலாளர்கள் அதிக அளவில் அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும். இதற்கு அனுபவம் உள்ள செயற்துடிப்புள்ள அறிவுத்துறையினரின் உதவி கண்டிப்பாகத் தேவைப்படும்.  

உயர்மட்டங்களில் முன்னேறிய தொழிலாளர்களுக்கு என விவாதக் குழுக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும். அவர்களுக்கு மார்க்சியக் கோட்பாடுகளையும் மார்க்சிய நடைமுறையையும் கற்பிக்க வேண்டும். இப்படி பயிற்றுவிக்கும்போது முன்னேறிய தொழிலாளர்களின் அறிவுத்திறன் மேம்பாடு அடையும். இத்தகைய பயிற்சி அவர்களை எதிர்காலத்தில் விரிவுரையாளர்களாகவும் கருத்தியல் தலைவர்களாகவும் ஆவதற்கு உதவும்.

இன்று பயிற்சி பெறாத தொழிலாளர்கள் முதலில் மேடைக் கூச்சம் போன்ற பிரச்சினைகளை சந்திப்பார்கள், அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. பயிற்சியும் அனுபவமும் அவர்களை கண்டிப்பாக முன்னேற்றும்.

இதுவரை கூறியதை ஸ்டாலின் தொகுத்துத் தருகிறார்.

1) பாட்டாளி வர்க்கத்தின் அன்றாடத் தேவைகளுடன் பொதுவான வர்க்க தேவையையும் இணைந்த வகையில் போராட்டத்தை நடத்த வேண்டும்.

 

2) கட்சியின் மிக முக்கியமான மாவட்ட மையங்கள் என்ற வகையில் தொழிற்சாலைகளில் குழுக்களை, ஒழுங்கமைக்கவும் வலுப்படுத்தவும் வேண்டும்.

 

3) முன்னேறிய தொழிலாளர்களை கட்சியின் மிக முக்கியப் பணிகளில் பங்குபெறச் செய்ய வேண்டும்.

 

4) முன்னேறிய தொழிலாளர்களுக்கான "கலந்துரையாடல் குழுக்கள்" அமைக்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கையின் வழியில் செயற்பட்டால் பரந்துபட்ட மக்களை கட்சியுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முடியும். கட்சிக்கும் மக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளி குறையும்.

மக்களிடம் இருந்து கட்சி தனிமைப்பட்டதால் மட்டும் பாதிக்கப்படவில்லை, அதன் அமைப்புகள் ஒன்றில் இருந்து மற்றொன்று தனிமைப்பட்டு நிற்பதாலும் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான வழியை ஸ்டாலின் அடுத்து கூறுகிறார். வழக்கம் போல கேள்வி எழுப்பி பதிலையும் தருகிறார்.

தனிமைப்பட்டுக் கிடக்கும் உள்ளூர் அமைப்புகளை மற்ற அமைப்புகளுடன் எப்படி இணைப்பது?

அனைத்துக்குமான பொதுவானதொரு வாழ்க்கையை ஏற்படுத்தும் வகையில் தனித்திருக்கும் பகுதிகளை இணைத்து ஒருங்கிணைந்த கட்சியாக இணைப்பது எப்படி?

அவ்வப்போது நடைபெறும் பொதுவான கட்சி மாநாடுகள் இத்தகையப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து, அமைப்புகளை இணைக்கும். வெளிநாடுகளில் இருந்து வரும் பத்திரிகைகள், பிரிந்து கிடக்கும் பகுதிகளை இணைக்கும் என்பது உண்மைதான். ஆனால் இதுமட்டும் போதாது. மாநாடுகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே கட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து வைத்திருக்க முடியும். அதே போல ஒருங்கிணைக்கும் வேலையை பத்திரிகை முழுமையாக செய்திடாது.

இதையும் கடந்து தீவிரமானதொரு நடவடிக்கை தேவை என்பது நன்றாகத் தெரிகிறது.

அனைத்து ருஷ்ய பத்திரிகை ஒன்றே தீவிரமான நடவடிக்கையாக இருக்க முடியும். இதுவே கட்சியின் நடவடிக்கையாக செயல்படும்.

பொதுவான கட்சி நடவடிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே ரஷ்யாவில் சிதறிக் கிடக்கும் அமைப்புகளை ஒன்றிணைக்க முடியும். உள்ளூர் அமைப்புகளின் அனுபவங்கள் அனைத்தையும் பொதுவான மையத்தில் சேகரிக்க வேண்டும். அப்படி சேகரித்ததின்  அடிப்படையில், பொதுவான கட்சி அனுபவத்தை, உள்ளூர் அமைப்புகள் அனைத்துக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். இப்படி செய்வதின் மூலமே பொதுவான கட்சியின் செயல்பாடு சாத்தியப்படும்.

அனைத்து ருஷ்யப் பத்திரிகையானது உள்ளூர் அமைப்புகளுடன் மிக நெருக்கமாவும் நீடித்த உறவுகளையும் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட நிலைமை ஏற்படுத்தவில்லை என்றால் கட்சிப் பணியில் தலைமை என்ற ஒன்று இருக்காது, கட்சிப் பணியில் தலைமை இல்லை என்றால் அமைப்புகளை நிரந்தரமாக இணைக்க முடியாது.

அனைத்து ருஷ்யப் பத்திரிகையானது கட்சியின் மத்தியக் கமிட்டியால் நடத்தப்பட வேண்டும். கட்சியின் அனைத்துப் பகுதிக்கும் வழிகாட்ட வேண்டிய கடமையும் மத்தியக் கமிட்டிக்கே உள்ளது.

எனவே, அனைத்து ருஷ்ய பத்திரிகையே, கட்சியை அதன் மத்தியக் கமிட்டியைச் சுற்றி ஒன்றிணைத்து அணிதிரட்டும். இதுவே கட்சியில் காணப்படும் நெருக்கடியை சமாளிப்பதற்கான வழியாக இருக்கும்.

இதுவரை கூறியதை ஸ்டாலின் இறுதியில் தொகுத்து தந்துள்ளார்.

புரட்சி தோல்வி அடைந்ததின் காரணமாக, கட்சியில் ஒரு நெருக்கடி உருவாகியுள்ளது. கட்சியின் அமைப்புகள் மக்களுடனான தொடர்வுகளை இழந்து நிற்கிறது, பல பகுதிகளில் கட்சி தனித்தனியான அமைப்புகளாகச் சிதறிக் கிடக்கிறது.

இதை போக்குவதற்கு கட்சி அமைப்புகள் மக்களுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது உள்ளூர் அளவிலான கடமை ஆகும்.     

கட்சி அமைப்புகள் ஒன்றுடன் மற்றொன்று இணைத்துக் கொள்வதோடு, கட்சியின் மத்தியக் கமிட்டியைச் சுற்றி அணிதிரள வேண்டும். இது மத்திய அமைப்பு அளவிலான கடமை ஆகும்.

உள்ளூர் அளவிலான கடமையை நிறைவேற்றுவதற்கு, பொதுவான அரசியல் கிளர்ச்சிகளுடன் கூடவே தொழிலாளர்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும் தீவிரமான பொருளாதாரப் போராட்டங்களும் சேர்த்து நடத்தப்பட வேண்டும். முன்னேறிய தொழிலாளர்களிடம் கட்சிப் பொறுப்புகளை கொடுக்க வேண்டும். முன்னேறிய தொழிலாளர்களுக்கு கட்சியின் தலைவர்கள் போதுமான அறிவுத்திறன் பெறும் வகையில் பயிற்சி கொடுக்க வேண்டும்.

மைய அளவிலான கடமையை நிறைவேற்றுவதற்கு, உள்ளூர் அமைப்புகளை கட்சியின் மத்தியக் குழுவுடன் இணைத்து, அவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு அனைத்து ருஷ்ய பத்திரிகை ஒன்றை நடத்த வேண்டும்.

இவைகளை செய்வதின் மூலமே கட்சியின் நெருக்கடியில் இருந்து விடுபட முடியும். இதனை சிறப்பாக செய்வதின் மூலமே பாட்டாளி வர்க்கத்தின் தகுதியான, முன்னணிப் படையின் பொறுப்பான பாத்திரத்தை கட்சி வகிக்க முடியும்.

டூமாவிலிருந்து, தொழிற்சங்கங்களிருந்து, கூட்டுறவு சங்கங்கள், சவ அடக்கத்துக்கான நிதிகள் வரையில் தன்னைச் சுற்றியுள்ள சட்ட வாய்ப்புகளை கட்சி எவ்வளவு விரைவாகப் பயன்படுத்துகிறதோ, அவ்வளவு சீக்கிரம் நெருக்கடியைச் சமாளிக்கும். இந்த நெருக்கடியை எவ்வளவு விரைவில் வெற்றி கொள்கிறோமோ, அந்தளவுக்கு கட்சியின் மீட்சியும் சீரமைப்பும் நிறைவேற்ற முடியும்.

இது ஒரு சிறிய கட்டுரை என்றாலும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் கட்சி எப்படி வெளிவருவது என்பது பற்றி ஸ்டாலின் இதில் சிறப்பாகக் கூறியுள்ளார். நமது நாட்டுக்கும் ஸ்டாலினது வழிகாட்டுதல் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதுவரை நாம் பார்த்த ஸ்டாலினது “கட்சியின் நெருக்கடியும் நமது கடமையும்” என்கிற கட்டுரை 1909 ஆண்டில் எழுதப்பட்டது. இதன் கூடவே ஸ்டாலின் 1912ஆம் ஆண்டு எழுதப்பட்ட “கட்சிக்காக” என்கிற சிறிய கட்டுரையையும் சேர்த்துப் பார்ப்பது பொறுத்தமாக இருக்கும். இந்த இரண்டு கட்டுரைகளும் அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள ஜே.வி.ஸ்டாலின் படைப்புகளின் இரண்டாவது தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

கட்சி நெருக்கடியில் உள்ளது என்று ஸ்டாலின் குறிப்பிட்டதற்கு மூன்று ஆண்டுகள் கழித்து “கட்சிக்காக” என்கிற இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார் என்பதை நினைவில் கொண்டு, இதன் தொடக்க வரிகளை ஸ்டாலின் சொற்களிலேயே பார்ப்போம்.

 

"அரசியல் வாழ்க்கையில் ஆர்வம் என்பது நாட்டில் மீண்டும் துளிர்விடத் தொடங்கி உள்ளது, அதனோடு கூடவே நமது கட்சிக்குள் இருந்து வந்த நெருக்கடியும் கூட முடிவுக்கு வந்துள்ளது. செயலற்ற நிலை என்பது கடந்த காலமாகப் போனதோடு, கட்சிக்குள் நிலவி வந்த மந்தநிலையும் மெதுவாக மறையத் தொடங்கி உள்ளது."

(241)

ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி சந்தித்து வந்த நெருக்கடி குறைந்து வருகிறது என்கிற தகவலுடன் இந்தக் கட்டுரை தொடங்குகிறது. அதாவது குறைப்பதற்கான செயல் தொடங்கிவிட்டது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

புரட்சி தோல்வி அடைந்த நேரத்தில் கட்சி உடைந்து போனது, இதனைக் கடந்து மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகரிக்கும் நேரத்தில் கட்சியும் எழுந்து நிற்கிறது. ருஷ்யப் புரட்சியின் வளர்ச்சின் போது கட்சி வலுபெறுகிறது. இதுதான் எதார்த்த உண்மையாக இருக்கிறது.

தொழில்துறையில் உள்ள முக்கியப் பிரிவுகள் புத்துயிர்ப் பெற்று வளர்கிறது, அதே நேரத்தில் தொழிலாளர்களின் உண்மையான ஊதியங்கள் குறைந்து செல்கிறது, முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதாரம், அரசியல் ஆகிய அமைப்புகள் சுதந்திரமாக வளர்ந்து வருகிறது, ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் சட்டவழிப்பட்ட, சட்டவழியற்ற அமைப்புகள் இரண்டையும் வலிந்து நசுக்கப்படுகிறது. விவசாயிகளின் நிலைமையும் சீரழிந்து கொண்டே செல்கிறது.

இத்தகைய நிலைமைகள் உழைக்கும் மக்களை நேரடியாக பாதிக்கிறது. இந்த பாதிப்பு, உழைக்கும் மக்களை அரசியல் வாழ்க்கை மீதான ஆர்வத்தை தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி விழிப்புற்ற மனங்களை அப்படியே மூடி வைத்திருக்க முடியாது. இந்த விழிப்புணர்வை தவிர்க்க முடியாமல் வெளிப்படையான மக்கள்திரள் நடவடிக்கையாக உருவாக்க வேண்டும்.

இதை எப்படி செய்வது, எதன் வழியில் செய்வது என்பதைப் பற்றி ஸ்டாலின் அடுத்துக் கூறுகிறார். அதை நாம் மேற்கோளாகவே பார்க்கலாம்.

 

"முதலாளிகளுக்கு எதிராக சுதந்திரமாகப் போராடுவதற்கான, வேலைநிறுத்தம் செய்வதற்கான, ஒன்றுகூடுவதற்கான, சங்கம் அமைப்பதற்கான, பேசுவதற்கான, எழுதுவதற்கான உரிமைகள் அனைத்தையும் நாம் வென்றெடுத்தாக வேண்டும். இல்லையெனில், தங்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான தொழிலாளர்களின் போராட்டம் மிக மோசமான வகையில் பாதிப்பிற்கு உள்ளாகும். எனினும் ஆர்ப்பாட்டங்கள், அரசியல் வழியிலான வேலைநிறுத்தங்கள் போன்ற வெளிப்படையான அரசியல் வழியிலான நடவடிக்கைகள் மூலமாக அல்லாமல் வேறெப்படி இந்த உரிமைகள் அனைத்தையும் நம்மால் வென்றெடுக்க முடியும்?"

ஸ்டாலின் இங்கே குறிப்பிடுகிற உரிமைகள், முதலாளித்துவ சமூகத்துக்கு முன்பு உழைப்பாளர்களுக்குக் கிடைக்கவில்லை. முதலாளித்தும் வழங்குகிற குறைந்தபட்ச உரிமையையும் பயன்படுத்திக் கொள்ளாமல், தொழிலாளர்களின் மேம்பாட்டையோ, கம்யூனிஸ்ட் கடசியின் வளர்ச்சியோ காணமுடியாது.

இத்தகைய உரிமைகள் உழைக்கும் மக்களுக்கு முழுமையான விடுதலைக்கு உதாவது, ஆனால் இதைப் பயன்படுத்தால் முழுமையான விடுதலைக்கான போராட்டத்தை வளர்த்துக் கொள்ள முடியாது.

      1912ஆம் ஆண்டுகளில் ருஷ்யா இருந்த நிலைமைகளை ஸ்டாலின் கூறுகிறார். நாடு இப்போது பட்டினியால் பீடிக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் பஞ்சத்தின் பிடியில் அகப்பட்டுள்ளனர். அவநம்பிக்கையிலும் பிச்சைக்காரத்தனத்திலும் உள்ள ருஷ்யாவை மீட்டெடுக்க வேண்டும். ஜாராட்சியை அடிமுதல்முடிவரை வேரோடு தூக்கி எறியாமல் இவைகளை செய்திடமுடியாது.

பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் விரிவான பரந்துபட்ட மக்களின் புரட்சிகரமான இயக்கத்தின் மூலமாக அல்லாமல் வேறு எந்த வகையிலும் ஜார் ஆட்சியையும் அதனோடு ஒட்டிப் பிழைத்துக் கொண்டிருக்கும் நிலப்பிரபுத்துவ தன்மைகளையும் தூக்கி எறிய முடியாது.

இதற்கு, மக்களின் விரிவான பகுதியினரிடையே புரட்சிகர உணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரே பொதுமான முயற்சியின் மூலம், உள்ளூர் அமைப்புகளின் தன்னித்தனியான முயற்சிகளை ஒன்றிணைக்கும், திறமை உள்ள வலுவான, செயலூக்கமான பாட்டாளி வர்க்கக் கட்சி அவசியமாகும். இதை உணர்ந்து ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியை சீரமைக்க வேண்டும். புரட்சிகர நடவடிக்கைகளை சிறப்பாக செய்திடுவதற்கு பாட்டாளி வர்க்கத்தைத் தயார்ப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு தொழிற்துறை மையத்திலும் உள்ள ருஷ்யக் கம்யுனிஸ்ட் கட்சி தொழிலாளர்கள், குழு வேறுபாடின்றி, சட்டவிரோத ருஷ்ய கம்யூனிச தொழிலாளர் கட்சி தேவை என்று நம்பும் அனைவரும், உள்ளூர் கட்சி அமைப்புகளில் ஒன்று சேர வேண்டும்.

இதற்கு, அதிகமானவரை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்பது பொருள் அல்ல, இன்றைய வேலை நிலைமைகளில் அதிகமானவரை சேர்த்தல் என்பது மேலும் அபாயகரமானதாக மாற்றிவிடும். உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தேவையில்லை,  இருக்கின்றன உறுப்பினர்களின் தரத்தை உயர்த்தினாலேயே போதுமானது ஆகும். கட்சியில் செல்வாக்கு மிக்க தோழர்கள் தங்களது செயற்பாட்டின் நோக்கத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டாலேயே போதும். மேலும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் வழிமுறைகளின்படி தங்களது புரட்சிகர நடவடிக்கைகளை அவர்கள் உறுதியோடு மேற்கொள்ள வேண்டும்.

உள்ளூர் அமைப்புகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்துடன் தொடர்புடைய அனைத்து விவகாரங்களிலும், மிக சிறிய சாதாரண விவகாரங்கள் முதல் மிகப்பெரிய அசாதாரண விவகாரங்கள் வரை தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையே நடைபெறும் சின்னஞ்சிறு சண்டைகளையும் விட்டுவிடக்கூடாது. அரசுக்கு எதிராக தொழிலாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு எதிர்ப்பு நடவடிக்கைகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்குத் தேவைப்படுகிற அறிவுத்துறையினர் போதுமான அளவுக்கு இல்லை என்பது உண்மையான நிலவரம். இதைக் கண்டு தொழிலாளர்கள் அச்சப்படத் தேவையில்லை. முற்றிலும் தேவையற்ற அடக்கத்தையும், பழக்கமில்லாத வேலை செய்கிறோம் என்கிற நினைப்புகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, துணிவுடன் கட்சி வேலைகளை செய்ய வேண்டும். அப்படி செய்கின்ற போது தவறுகள் ஏற்பட்டாலும் அதனால் எந்தவித இழப்பும் இல்லை என்றே ஸ்டாலின் கூறுகிறார்.

உள்ளூர் அமைப்புகள் வலிமையோடும் செல்வாக்கோடும் இருந்தாலும் அதுவே கட்சியாகி விடாது. அது கட்சியாக உருவாக வேண்டுமானால் உள்ளூர் அமைப்புகள் அனைத்தும் ஒன்று திரட்டப்பட்டு, பொதுவானதொரு வாழ்க்கையை மேற்கொள்ளும், ஒருங்கிணைந்த அமைப்பாக செயல்பட வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்தின் பொதுவான நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து விசயங்களிலும் தொடர்ந்து ஈடுபடும் விதத்தில், மத்திய குழு செயல்பட வேண்டும். பரந்துபட்ட அரசியல் கிளர்ச்சியை தொடர்ந்து நடத்தும் விதமாக ஒரு சட்டவிரோதமான பத்திரிகையை, மத்தியக் குழு நடத்த வேண்டும். இத்தகைய வழியில் செல்லும்போதே கட்சியின் மறுசீரமைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை செய்திட முடியும்.

இந்த கடினமான பணியை யாருடைய உதவியின்றி, தனியாக மத்தியக் குழுவினால் சமாளிக்க முடியாது என்பது தெரிந்ததே. உள்ளூர்ப் பகுதியில் இருந்து முறையான ஆதரவு கிடைக்காது போனால் மத்தியக் குழு தவிர்க்க முடியாத வகையில் ஒரு மறைக்குறியீடாக மாற்றப்படும். மேலும் கட்சியானது வெறும் கற்பனை கதையாக போய்விடும். ஆகவே மத்தியக் குழுவும் உள்ளூர் அமைப்புகளும் கூட்டாக பணிசெய்ய வேண்டும். இதுவே கட்சியை புதுப்பிப்பதற்கான இன்றியமையாத நிபந்தனை ஆகும். இதைப் புரிந்து கொண்டு கட்சித் தோழர்கள் செயற்பட வேண்டும்.

இன்று நாம் பார்த்த இரண்டு கட்டுரைகளிலும் உழைக்கும் மக்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியத்தையும் அதன் போக்கையும் பற்றி ஸ்டாலின் மிகச் சிற்பாக விளக்கி உள்ளார்.

ருஷ்யாவில் அன்றைய நிலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவாகவே செயல்பட முடிந்தது. இருந்தாலும் சட்டவழியிலான போராட்டத்துக்கு கட்சி வழிகாட்டியது. போல்ஷிவிக் கட்சியின் வெற்றி சட்டவழியற்ற போராட்டத்துடன் சட்டவழியிலான போராட்டத்தை இணைந்ததில் இருக்கிறது என்று லெனின் கூறியதை இங்கே நினைவில் கொள்வோம்.

பொதுவாக ஸ்டாலின் நூல்களுக்கு தனியான வகுப்பு எடுக்கத் தேவையில்லை, அவரது எழுத்துக்கள் மிகமிக எளிமையாகவே இருக்கும், இருந்தாலும் அவர் எழுதியதை அறிமுகப்படுத்த வேண்டி இருப்பதினாலேயே வகுப்பு எடுக்கப்படுகிறது.