Saturday 26 June 2021

மாசேதுங் எழுதிய “நடைமுறை பற்றி” சுருக்கமும் சாரமும்

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

23 வது வார வகுப்பு - 26-06-2021) வகுப்பு) 

மாசேதுங் எழுதிய “நடைமுறை பற்றி” (ON PRACTICE) என்ற நூலை இன்று நாம் பார்க்கப் போகிறோம். இதை நூல் என்று சொல்வதைவிட, கட்டுரை என்று கூறுவதே சரியாக இருக்கும். இருபது பக்கத்திற்குள் உள்ள ஒரு சிறப்பான கட்டுரை. இந்தக் கட்டுரையைச் சரியாகப் புரிந்து கொண்டால், பிற தத்துவ நூல்களைப் படிப்பது எளிதாக இருக்கும். 

1931-34ஆண்டுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் வறட்டுவாத தவறுகள் மேலோங்கி இருந்து. சீனப்புரட்சியின் அனுபவங்களை நிராகரித்து, மார்க்சியப் படைப்புகளில் காணப்படும் கருத்துக்களை எந்தச் சூழ்நிலைக்குக் கூறப்பட்டது என்பதை மறந்து அதனை அப்படியே பின்பற்றுகின்ற வறட்டுச்சூத்திரவாதப் போக்குக் காணப்பட்டது. மார்க்சியம் என்பது ஒரு வறட்டுக்கோட்பாடு அல்ல, அது நடைமுறைக்கு ஒரு வழிகாட்டி. அந்த வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு நிலைமைகளையும் அணுக வேண்டும். அனைத்து முடிவுகளையும் மார்க்சியம் தயாராகத் தன்கைவில் வைத்துக் கொண்டிருக்கவில்லை. புதிய நிலைமைகளை எதிர்கொள்ள மார்க்சியம் தயாராகவே இருக்கிறது. 

இந்த வறட்டுசூத்தரத்தை எதிர்த்து மாசேதுங் யெனானில் உள்ள ஜப்பானிய-எதிர்ப்பு ராணுவ அரசியல் கல்லூரியில் சொற்பொழியாக இரண்டு தலைப்புகளில் நிகழ்த்தினார். முதலாவது “நடைமுறை பற்றி”, இரண்டாவதாக நிகழ்த்தியது “முரண்பாடு பற்றி”, நமது செங்கொடி மையத்தில், தோழர் கதிரவன் அவர்கள் முரண்பாடு பற்றி ஏற்கெனவே வகுப்பெடுத்துள்ளார். இன்று நாம் நடைமுறை பற்றி நிகழ்த்திய உரையின் நூலை சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம். 

இந்த நூலின் துணைத் தலைப்பாக உள்ளதை பார்த்திடும் போதே, இந்த நூலின் பேசு பொருள் என்னவென்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

அறிவிற்கும் நடைமுறைக்கும் இடையிலான உறவு, அறிவதற்கும் செயல்படுவதற்கும் இடையிலான உறவு பற்றியே இந்த நூல் பேசுகிறது. 

அறிவு-செயல்-அறிவது-செயல் என்கிற தொடர்ச்சி நடைபெறுகிறது. அதாவது இதுவரையிலான அனுபவத்தைக் கொண்டு அறியப்பட்ட அறிவு, அந்த அறிவைக் கொண்டு செயல்படுவது, செயல்படும் போது ஏற்படுகின்ற புதிய அனுபவங்களைக் கொண்டு பெறப்பட்ட அறிவு, என்று அறிவானது தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

அறிதலுக்கும் அறிவுக்கும் ஒரு முடிவு கிடையாது. புறநிலையில் இருக்கின்ற அனைத்தும் அறியக்கூடியதே. அறிதல் ஒரு தொடர் நிகழ்வாகும். 

இதுவரையிலான அனுபவத்தைக் கொண்டு உருவாக்கிய அறிவைப் பயன்படுத்தாமல், தற்போதைய நடைமுறைக்குச் செல்ல முடியாது. நடைமுறைக்குச் செல்லாமல், அனுபவத்தின் மூலம் கிடைக்கப் போகிற புதிய அறிவு கிட்டாது. 

நூலின் தொடக்கத்தில் உள்ள பகுதியை அப்படியே படிக்கிறேன். அப்படிப் படிக்கும் போது புரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், பின்னால் புரியும்படி பிரித்துப் படிப்போம். நாம் தமிழில் படிக்கும் போது இங்கே உள்ள மொழியாக்க சிக்கலைக் கடந்துதான் படித்துப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 

“மார்க்சுக்கு முன்பு, மனிதனது சமூக இயல்பிற்கு அப்பாற்பட்டு அவனது வரலாற்று வளர்ச்சிக்கு அப்பாற்பட்டு பொருள்முதலியலானது அறிவின் சிக்கலை கூர்ந்தாராய்ந்ததால், உற்பத்தி மற்றும் வர்க்கப் போராட்டம் மீதான அறிவின் சார்பு என்ற சமூக நடைமுறை மீதான அறிவின் சார்பை புரிந்துகொள்ளத் திறமை யற்றிருந்தது.” 

ஆங்கிலத்தில் உள்ள Complex sentenceயை அதாவது சிக்கலான தொடர் வாக்கியத்தை அப்படியே தமிழ்படுத்தி உள்ளனர். தமிழ் இலக்கணத்தில் சிக்கலான தொடர் வாக்கியம் என்பது கிடையாது. அதனால் ஆங்கிலத்தில் உள்ளதை, பிரித்து மொழிபெயர்க்க வேண்டும். இந்த நூலில் அவ்வாறு பிரிக்காமல் அப்படியே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அனைத்தும் இவ்வாறுதான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. 

நாம் இதனைப் பிரித்துப் படித்துப் புரிந்து கொள்வோம்.     

புதிய தொகுப்பு நூலில் உள்ள மொழியாக்கத்தை முதலில் படித்தேன். பிறகுதான் பழைய மொழியாக்கம் கிடைத்து. அந்தப் பழைய மொழியக்கத்தை அப்படியே தருகிறேன். 

“மார்க்சுக்கு முன், பொருள்முதல்வாதம், மனிதனின் சமுதாய இயல்புக்கு புறம்பானதாகவும் அவனுடைய வரலாற்று ரீதியான வளர்ச்சிக்குப் புறம்பானதாகவும் அறிவைப் பற்றிய பிரச்சனைகளை ஆய்வு செய்தது. ஆதலால் அறிவு சமுதாய நடைமுறையைச் சார்ந்திருக்கிறது என்பதை, அதாவது அறிவு, உற்பத்தியையும், வர்க்கப் போராட்டங்களையும் சார்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலாததாக இருந்தது.” 

இந்தப் பழைய மொழியாக்கமும் நீண்ட ஆங்கில ஒரே வாக்கியத்தை. இரண்டு வாக்கியமாகத்தான் பிரித்துள்ளது. இதனை இன்னும் பிரித்தால் தான் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். பிரித்துப் பார்ப்போம். 

மார்க்சுக்கு முன்பு, பொருள்முதல்வாதமானது, மனிதனின் சமூக இயல்புக்குப் புறம்பானதாக இருந்தது. அதே போல அவனுடைய வரலாற்று வழியிலான வளர்ச்சிக்கும் புறம்பானதாக இருந்து. இந்த அடிப்படையிலேயே பழைய பொருள்முதல்வாதமானது அறிவு பற்றிய பிரச்சனைகளை ஆய்வு செய்தது. ஆதலால் அறிவானது, சமூக நடைமுறையைச் சார்ந்து இருக்கிறது. அதாவது அறிவானது, உற்பத்தியையும், வர்க்கப் போராட்டங்களையும் சார்ந்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல், மார்க்சுக்கு முன்பான பழைய பொருள்முதல்வாதம் இருந்தது. 

இன்னும் குற்றிப்பாகச சொல்ல வேண்டும் என்றால், மார்க்சுக்கு முன்புவரை உள்ள பொருள்முதல்வாதமனது சமூகம் பற்றிய அறிதலில் கருத்துமுதல்வாதமாகவே இருந்தது. மார்க்ஸ் தான், சமூகத்தை இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் ஆராய்ந்தார். மனிதனின் அறிவு என்பது, பொருள் உற்பத்தியின் செயல்பாட்டினை முதன்மையாகச் சார்ந்திருக்கிறது. அவனுடைய பிற அனைத்து நடிவடிக்கைகளைத் தீர்மானிக்கக்கூடியதாக அது இருக்கிறது. இதனையே மார்க்சியம் அடித்தளமே மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது என்கிறது. 

உற்பத்தியின் போது மனிதர்களுக்கு இடையே தவிர்க்க முடியாத வகையில், சில உறவுகளை ஏற்படுகிறது. அந்த உறவுகளை உற்பத்தி உறவுகள் என்று அழைக்கப்படுகிறது. இங்கே நாம் பொருளாதார உறவுகளையே குறிப்பிடுகிறோம். 

உற்பத்தி செயல்பாட்டுக்கு அப்பாற்பட்டு அறிவைப் பெற முடியாது என்பது நமக்கு இப்போது தெளிவாகிறது. ஆனால் இதனை வறட்டுவாதமாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அதவாது அடித்தளமே மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது என்றவுடன், அடித்தளத்தில் மாற்றம் ஏற்பட்டால், மேற்கட்டமைப்பில் தானே மாற்றம் நடைபெறும் என்று வறட்டுத்தனமாக - இயந்திரத்தனமாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அப்படி அடித்தள நடவடிக்கையை மட்டும் ஏற்றுக் கொள்வதினால், நடத்திட வேண்டிய அரசியல் நடவடிக்கையினையும், அதற்கான வர்க்கப் போராட்டதையும் புறக்கணிக்கப்படுகிறது. வறட்டுசூத்திரவாதம் நடைமுறைக்கு எதிரான முடக்குவாதமே ஆகும். 

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தீன் மீது தாக்கம் செலுத்துகிறது. இந்தத் தாக்கத்தைத் தீர்மானிக்கிற சக்தியாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அடித்தளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, மேற்கட்டமைப் புறக்கணிக்கிற போக்கும், மேற்கட்டமைப்பின் தாக்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகப் புரிந்து கொள்வதும் தவறான போக்காகவும், அது சமூக வளர்ச்சிக்குத் தடையாகவும் இருக்கிறது. 

கோட்பாடு, நடைமுறையினை அடிப்படையாகக் கொண்டுள்ளது, அந்தக் கோட்பாடு புதிய நடைமுறைக்கு உதவிடுகிறது. புதிய நடைமுறையில் இருந்து கோட்பாடு செழுமை பெறுகிறது. எந்த ஒரு கோட்பாடும், மனித மனதின் அகநிலை உணர்வால் உருவாவதில்லை. சமூகப்பொருளாதார நிகழ்வு என்கிற புறநிலைமைகளினால்தான் கோட்பாடுகள் தோன்றுகிறது. 

நம்மைச் சுற்றி நிகழ்வதைப் புலன்களின் மூலம் அறிகிறோம். புலனுணர்ச்சியால் (Sensation) கிடைப்பது, அறிதலில் முதல்கட்டம், இரண்டாவது கட்டம் புலனறிவு (Perception). 

புலனுணர்ச்சிகளால் கிடைக்கப்பெற்ற தனித்தனியான தரவுகளை ஒருமுகப்படுத்தித் தர்கவழியிலான முடிவுகள் எடுக்கப்படுகிறது. மனிதனின் அறிதல் உணர்வுக்கட்டத்திலேயே நின்றுபோவதில்லை. இந்த உணர்வுக்கட்டத்தில் இருந்து எண்ணம், சிந்தனை, கருத்தாக்கங்கள் ஆகிய கட்டங்கள் தொடர்கிறது. 

புலன்களால் அறியப்பட்டவைகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் போது அது எண்ணங்களாக உருபெறுகிறது. இந்த எண்ணங்களால் சிந்தனை தோன்றுகிறது. புலனறிவு, எண்ணங்கள், சிந்தனைகள் ஆகிவற்றின் அடிப்படையில் கருத்தாக்கம் தோன்றுகிறது. 

மார்க்சிய பொருள்முதல்வாதமே அறிவுத்தோற்றத்தைப் பற்றிய சிக்கலை முதன்முறையாகச் சரியாகத் தீர்த்தது. 

நிலப்பிரபுத்துவச் சமூகத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறையின் விதிகளை முன்கூட்டியே அறிந்து கொள்வது சாத்தியமற்றதாக இருந்தது. அதே போல முதலாளித்துவம் இன்னமும் தோன்றியராததால் அதன் உற்பத்தி முறையின் விதிகளை அறிந்து கொள்ள முடியாமல் இருந்தது. மார்க்சியம் தோன்றும் போது முதலாளித்துவம் தன் உள்ளடக்கத்தில் வளர்ச்சி பெற்றிருந்தது, அதன் முரண்பாடுகள் வெளிபடத் தொடங்கியது. அதனால் தான் மார்க்சியம் முதலாளி சமூக உற்பத்தியின் விளைபொருள் என்று கூறப்படுகிறது. 

அதே போல, சுதந்திர வணிக முதலாளித்துவக் கட்டத்தில், ஏகாதிபத்திய காலகட்டத்துக்கு உரிய விதிகளை மார்க்சால் முன்கூட்டியே அறிந்து கொள்ளமுடியவில்லை. முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கட்டமான ஏகாதிபத்தியம் இன்னமும் தோன்றாமல் இருந்தது, அதனால் மார்க்சால் அதைப் பற்றி அறய முடியவில்லை. 

ஏகாதிபத்திய உற்பத்தியின் தொடக்கத்தை லெனினே கண்டறிந்து கூறினார் ,லெனினுடன் ஸ்டாலினும் ஏகாதிபத்திய உற்பத்தி முறையினை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயற்பட்டனர். உற்பத்தி முறையின் மாற்றத்தை அது தோன்றுவதற்கு முன்பே கண்டறிய முடியாது. ஒன்றின் தோற்றத்தையோ அதன் மறைவையோ நிகழத்தொடங்கிய பின்பே அறிந்து கொள்ள முடியும். யதார்த்தத்தில் இல்லாதது அறியப்பட முடியாது. எதார்த்தத்தில் இல்லாதது பற்றிய கருத்துக்கள் கற்பனையானதே. அது நடைமுறைக்கு உதவிடாது. 

எதார்த்தத்தை மாற்றுகின்ற நடைமுறையின் அறிவை இயக்கவியல் பொருள்முதல்வாதம் அளிக்கிறது. புறநிலை விதியின்படியே அனைத்தும் நடைபெறுகிறது என்று கூறுவதனால், மனிதனின் தலையீடு இல்லாமல், அந்த விதி செயல்படுகிறது என்று பொருள் கொள்ளக்கூடாது. அந்த விதி புறநிலையில் உள்ளது, அதனைச் செயல்படுத்துவது மனிதர்களின் நடவடிக்கையே ஆகும். புறநிலைக்கு ஏற்பவே மனிதனின் நடவடிக்கை அமைகிறது என்பதே இதன் பொருளாகும். 

பாட்டாளி வர்க்கம் தொடக்கக் காலத்தில், தனது பிரச்சினைகளுக்கு, முதலாளித்துவம் பயன்படுத்துகிற இயந்திரமே காரணமாக நினைத்தது. அன்றைய பாட்டாளி வர்க்கம் இயந்திரதை உடைப்பது மூலம் தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. இந்தப் போராட்டம் எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு நின்றுவிடுகிறது. இது தன்னெழுச்சியின் விளைவாகும். இது ஒரு புலனுணர்ச்சிக் கட்டமே. 

முதலாளித்துவத்தின் உள்முரண்பாட்டின் விளைவாகவே வெளியில் புலப்படுகிற பிரச்சினை நடக்கிறது என்கிற புரிதல் தொடக்கக் காலத்தில் ஏற்படவில்லை. உள்முரண்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் அன்றைய வளர்ச்சி இல்லை. 

இரண்டாவது கட்டத்தில், முதலாளித்துவத்தின் உள்முரண்பாட்டின் விளைவே வர்க்கப் போராட்டம் என்பதைப் பாட்டாளி வர்க்கம் அறிந்து கொண்டது. பாட்டாளி வர்க்கம் இரண்டாம் கட்டத்தில் பொருளாதாரப் போராட்டத்தினாலும், அரசியல் போராட்டத்தினாலும் வளர்ச்சி பெற்றது. இந்தக் காலகட்டத்தில் முதலாளித்துவச் சமூகத்தின் சாராம்சத்தையும், அதன் வர்க்க போக்கையும், அதன் சுரண்டல் உறவுகளையும் கண்டறிந்து, தனது வரலாற்றுக் கடமையைப் புரிந்து கொண்டது. இது புலனுணர்வைத் தொடர்ந்து பெற்ற புலனறிவாகும். 

பாட்டாளிகளின் தன்னெழுச்சிப் போராட்டம், வர்க்கப் போராட்டமாக மாறியதற்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல் பெரும் காரணமாகும். 

எந்த நிகழ்விலும் இதனைக் காணலாம், முதலில் புலக்காட்சியின் அடிப்படையில் ஏற்படுகிற தன்னெழுச்சி, அடுத்து புலனறிவாக, தர்க்க வழியிலான முடிவின் அடிப்படையில் ஏற்படுகிறது. அதாவது வடிவத்தில் காணப்படும் பிரச்சினை, அதன் உள்ளடக்கத்தின் விளைவே என்கிற புரிதலாக வளர்ச்சி அடைகிறது. இதன் மூலம் தனது முடிவுகளை அகநிலையாக, ஒரு தலைபட்சமாக, மேலோட்டமானதாகப் பார்க்காமல் ஒவ்வொன்றையும் இயக்கவியல் அடிப்படையில் பாட்டாளி வர்க்கம் புரிந்து கொண்டது. 

புறநிலையிலான தரவுகளின் அடிப்படையில் பகுத்தறிந்து முடிவெடுப்பது எதார்த்தத்தை அறிந்து எடுக்கப்பட்டதாக உள்ளது. 

பகுத்தறிவானது, புலனறிவில் இருந்து பெறப்படத் தேவையில்லை என்று கூறுகிற “பகுத்தறிவாத”மானது கருத்துமுதல்வாதவாதமே என்கிறார் மாசேதுங். பகுத்தறிவு வேறு பகுத்தறிவுவாதம் வேறு. அடுத்துப் பகுத்தறிவுவாதத்தைப் பற்றி மாசேதுங் சரியாகச் சுட்டிக்காட்டுகிறார். 

தத்துவ வரலாற்றில் பகுத்தறிவு மட்டுமே நம்பத்தக்கது எனவும், புலக்காட்சியினால் ஏற்படுகிற அனுபவத்தினால் அறிவுப் பெறப்படுவதில்லை என்றும் பகுத்தறிவுவாதம் கருதியது. பகுத்தறிவுவாதம், விஷயங்களைத் தலைகீழாக மாற்றித் தவறு செய்கிறது. 

ஆனால் பகுத்து அறிதல் என்கிற பகுத்தறிவானது, தன்னுடைய ஆதாரத்தைப் புலக்காட்சி உணர்வுகளில் இருந்து பெறுகிறது. அதனால்தான் பகுத்து அறிவின் மூலம் கிடைக்கின்ற முடிவுகள் துல்லியமாகவும் நம்பகத்தன்மை உடையதாகவும் இருக்கிறது. 

சமூக நடைமுறையின் வழியில்தான், மனிதனுக்கு அறிவு கிட்டுகிறது. கண்களை மூடிக்கொண்டும், காதுகளை அடைத்துக் கொண்டும், புறநிலை உலகத்தில் இருந்து முற்றிலும் துண்டித்தும் கொண்டுள்ள மனிதனுக்கு அறிவு என்ற ஒன்று இருக்க முடியாது. அவன் பெற்றது எதுவும் இல்லை, தன்னைத் தனிமையிலும், தன்னிலையிலும் சுருங்கி சுண்டிப் போவான். 

அறிவானது எதார்த்த உலகின் நடைமுறையில் இருந்துதான் கிடைக்கிறது, இதுவே அறிவு பற்றிய பொருள்முதல்வாதக் கோட்பாடாகும். 

அடுத்து, அறிவை ஆழப்படுத்த வேண்டும், இது அறிவின் புலனுணர்வு கட்டத்தை, பகுத்தறிவு நிலைக்கு வளர்த்தெடுக்கப்பட வேண்டும், இது அறிவுக் கோட்பாட்டின் இயக்கவியல் ஆகும். 

பகுத்தறிவு என்பது புலக்காட்சி அறிவைச் சார்ந்து இருக்கிறது, புலக்காட்சி அறிவு பகுத்தறிவாக வளர்த்தெடுக்கப்பட வேண்டி இருக்கிறது, இது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அறிவு கோட்பாடாகும். 

தத்துவத்தில், பகுத்தறிவுவாதமும் அனுபவவாதமும், அறிவின் வரலாறு, இயக்கவியல் ஆகியவற்றின் இயல்பினை புரிந்து கொள்ளவில்லை. இந்த இரு சிந்தனைப் போக்கும் உண்மையை அறிவதற்கான இரண்டில் ஒன்றை ஏற்றுக் கொண்டு, மற்றொன்றை மறுக்கின்றனது. இதனால், இரண்டும் அறிவுக் கோட்பாட்டில் தவறானவை ஆகும். அதாவது பகுத்தறிவுவாதம் அனுபவத்தைப் புறக்கணிக்கிறது, அனுபவவாதம் பகுத்தறிவைப் புறக்கணிக்கிறது இதன்மூலம் உண்மையான அறிவை பெற முடியாமல் இரண்டும் தவறு செய்கிறது. 

புலக்காட்சி அறிவில் இருந்து பகுத்தறிவாக வளரும் இயக்கவியல் பொருள்முதல்வாதம், அறிவின் இயக்கமானது, அறிதலில் சிறிய நிகழ்வாக இருந்தாலும் சரி, பெரிய நிகழ்வாக இருந்தாலும் சரி, இரண்டு போக்கிலும் உண்மைக்குப் பொருந்துகிறது. ஆனால் அறிவின் இயக்கப் போக்கு இத்துடன் நின்றுவிடுவதில்லை. பகுத்தறிவோடு நின்றுபோவது பிரச்சினையின். பாதி அளவுக்குத் தீர்வை மட்டுமே எட்டியிருக்கும். 

புறநிலை உலகின் விதிகளைப் புரிந்து கொள்வதும், அதன் மூலம் உலகை விளக்குவதற்கும் திறமை உடையவராய் இருப்பது முக்கியமானதே, ஆனால் அத்துடன் நின்றுவிடுவது பாதிக் கிணறு தாண்டியதாகவே இருக்கும். முழுக் கிணறு தாண்ட வேண்டுமானால் செயலூக்கமான இவ்விதியை, உலகை மாற்றுவதில் இணைக்க வேண்டும் என்றே மார்க்சியம் வலியுறுத்துகிறது. புரட்சிகரக் கோட்பாடு இல்லாமல் புரட்சிகர இயக்கம் இல்லை என்று லெனின் குறிப்பிடுவதை மாசேதுங் இங்கே சுட்டிக்காட்டுகிறார். 

உலகைப் புரிந்து கொண்டால் மட்டும் போதாது, அதனை மாற்றுவதற்கான கோட்பாட்டை, வரலாற்று வளர்ச்சியின் விதியில் இருந்து பெறவேண்டும். இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறையையும், எதார்த்த உலகையும் புரிந்து கொண்டால் மட்டும் போதாது, அதன் அடிப்படையில் சமூகத்தை மாற்றுவதற்கான கோட்பாட்டை உருவாக்க வேண்டும். 

நடைமுறையோடு அறிவு தொடங்குகிறது, பெறப்பட்ட அறிவை நடைமுறையோடு இணைக்க வேண்டும். இதன் மூலமே புதியபுதிய அறிவுகள் திறக்கப்படுகிறன. 

புறநிலைக்கு ஏற்ப கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை, கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் போது, அதாவது செயற்படுத்தும் போது, சரி பார்க்கப்படுகிறது. நடைமுறையில் தவறு திருத்தப்படுகிறது. 

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர்களின் விஞ்ஞான வழிப்பட்ட கருத்துக்கள், வர்க்கப் போராட்டத்துடன் நடைமுறையில் சரி பார்க்கப்பட்டதின் மூலமே உண்மை என்று நிலைநாட்டப்பட்டது. 

பல கோட்பாடுகள் நடைமுறையில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது, மார்க்சிய லெனினியம் சரியானது என்பதை நடைமுறையே நிரூபித்துக் கொண்டிருக்கிறது. "தத்துவம், புரட்சிகரமான நடைமுறையுடன் இணைக்காவிட்டால் அது இலக்கற்றதாகிவிடும். அதேபோல் நடைமுறையின் பாதையில் புரட்சிகரத் தத்துவம் ஒளிவீசாவிட்டால் நடைமுறை இருளில் தடுமாறும்". என்கின்ற ஸ்டாலின் கூற்றை மாசேதுங் இங்கே நமக்கு நினைவுப்படுத்துகிறார். 

அதாவது தத்துவம், நடைமுறையோடு இணைக்கவில்லை என்றால் அந்தத் தத்துவம் இலக்கு அற்றதாகவிடும். அதே போலப் புரட்சிகரத் தத்துவத்தால் நடைமுறை ஒளியூட்டப்பட வேண்டும், அதாவது இணைக்கப்பட வேண்டும், அவ்வாறு இணைக்கப்படவில்லை என்றல் நடைமுறை இருளில் தள்ளாடும். 

மனிதர்கள், இயற்கையையோ சமூகத்தையோ மாற்றும் நடவடிவக்கையில், முதலில் கொண்டிருந்த கருத்துக்கள், கோட்பாடுகள், திட்டங்கள் மாறுதல் அடையாமல் அப்படியே இருப்பதில்லை. ஏனென்றால் எதார்த்தத்தினை மாற்றுவிதில் ஈடுபட்ட மனிதர்கள் எண்ணற்ற வரம்புகளால் கட்டுப்பட்டுள்ளனர். புறநிலையின் மாறுதலுக்கு ஏற்ப தங்களின் கருத்தை வளர்த்துக் கொண்டால் அன்றி மனிதர்களின் வெற்றி தொடர்ந்து கொண்டிருக்காது. 

மனித அறிவின் இயக்கமானது, நிகழ்வுப்போக்கின் முன்னேற்றத்தைப் பொருத்தவரை நிறைவடைவது இல்லை. புதியபுதிய மாற்றத்தில் இருந்து, அறிவு பெற்றுக்கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொன்றும் அதன் உள்முரண்பாட்டினால் மாறிக் கொண்டே இருக்கிறது, இந்த மாற்றத்தை அறிந்து கொண்டு, அறிவு மாற்றம் பெறுகிறது அதன் அடிப்படையும், வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. 

புறநிலைமைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளாத தலைவர்கள் தவறிழைப்பர். தவறுகளுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகப் புறநிலையினைப் பற்றிய தவறான புரிதலாகவே இருக்கிறது. புறநிலை மாற்றத்துக்கு ஏற்ப தன்னுடைய அகநிலையை அமைத்துக் கொள்ளாத தலைவர் வெற்றி பெறுவதில்லை. புறநிலையினைச் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தமது கோட்பாடுகளையும் செயல்பாட்டையும் மாற்றிக் கொண்டவர்களே வெற்றி பெற்றவர்களாக இருக்கின்றனர். 

மாசேதுங் கூறியதை அவரது வார்த்தைகளில் பார்ப்போம். “ஒரு புரட்சிகரக் காலத்தில் நிலைமை மிக வேகமாக மாறுகிறது; மாற்றப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப புரட்சியாளர்களின் அறிவு வேகமாக மாற்றிக் கொள்ளாது போனால், அவர்களால் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்வதில் திறமை அற்றவராக இருப்பர்.” 

இது எதைக் காட்டுகிறது என்றால், எதார்த்த நிலைமையைவிடச் சிந்தனையானது பின்தங்கி இருப்பதையே காட்டுகிறது. எதார்த்த நிலைமையின் மாற்றத்துக்கு ஏற்ப சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும். புறநிலையின் போக்கிற்கு மாறாகச் செல்பவர்கள் வலது சந்தர்ப்பமாகவும் இடது விலகலாகவும் திசை மாறுவிடுகின்றனர். 

புறநிலைமைகளின் மாற்றத்தோடு முன்னேற தவறுபவர்கள், வரலாற்றில் வலது சந்தர்ப்பவாதிகளாக மாறுகின்றனர், அப்படிப்பட்டவர்கள் புறநிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை, மாற்றத்தை காணாமல் பின்தங்கிவிடுகின்றனர். 

புறநிலைமை முன்னேறி மாறியிருப்பதைக் காணத் தவறுவதின் மூலம் பழைய கட்டத்திலேயே பின்தங்கிவிடுகின்றனர். அவர்களால் சமூகத்தின் தேரை முன்னே செல்வதற்கு வழிகாட்ட முடியாததுடன், எதிர்திசையில் அதைப் பின்னுக்கு இழுக்கின்றனர். இந்த வலது சந்தர்ப்பவாதித்தை கம்யூனிஸ்டுகள் எதிர்த்துப் போராட வேண்டும். 

இடது சொல்ஜாலம் புரிபவர்களையும் கம்யூனிஸ்டுகள் எதிர்க்கின்றனர். இந்த இடதுசிந்தனையானது, நிலவுகின்ற புறநிலைமைப் போக்கை கடந்து செல்கின்றனர். சிலர் தங்கள் கற்பனைகளை உண்மையாகக் கருதுகின்றனர், எதிர்காலத்தில் மட்டுமே அடைய கூடியதை லட்சியத்தை நிகழ்காலத்தில் அடைய முயற்சிக்கின்றனர். மேலும் தங்களைச் சாகசக்காரர்களாகக் காட்டிக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட இடதுபோக்கினர் அன்றாட நடவடிக்கையில் இருந்து அந்நியப்பட்டுக் கிடக்கின்றனர். அன்றாட நடவடிக்கையில் அந்நியப்பட்டவர்கள் மக்களிடமும் அன்னியப்பட்டே காணப்படுவர். 

இடது-வலது ஆகியவற்றின் தவறான போக்கை எதிர்த்தும், கடந்து செல்லாமல் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற முடியாது. 

கருத்துமுதல்வாதம், இயந்திரகதி பொருள்முதல்வாதம், சந்தர்ப்பவாதம், சாகசவாதம், மற்றும் அகநிலைவாதம் ஆகியவை புறநிலையுடனான தொடர்பை முறித்துக் கொண்டுள்ளன, அறிவை, நடைமுறையிலிருந்து பிரிக்கின்றன. இத்தகைய போக்கை மார்க்சிய லெனினியம் கடுமையாக எதிர்க்கிறது. 

உண்மை என்பது சார்புநிலையானது. இறுதியான உண்மை என்பதை மார்க்சியம் மறுக்கின்றது. புறநிலை எதார்த்தத்தின் மாற்றம் என்பது முடிவற்றது, அதனால் மனிதனது அறிவும் முடிவற்றது. மார்க்சிய லெனினியம் புறநிலை மாற்றத்தை, அறிந்து கொள்வதற்கான கதவை, திறந்தே வைத்துள்ளது, அறிவதை மார்க்சிய லெனினியம் நிறுத்துவதில்லை, புதிய மாற்றங்களையும், புதிய நிலைமைகளையும் புரிந்து கொண்டு செயல்படுகிறது. 

மார்க்சியத்தின் முடிவாக மாசேதுங் கூறியதை நேரடியாகக் பார்ப்போம்:- 

“அகநிலை மற்றும் புறநிலை, கோட்பாடு மற்றும் நடைமுறை, அறிதல் மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் பருண்மையான வரலாற்று ஒற்றுமைதான் எங்கள் முடிவு, மேலும் பருண்மையான வரலாற்றில் விலக்கிச் செல்லும் இடது மற்றும் வலது சித்தாந்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்” 

மார்க்சிய லெனினிய சித்தாந்தத்திற்கு எதிரான போக்கு, இந்த “வலதும்” “இடதும்”. 

இதனை எதிர்த்துப் போராடுவது கம்யூனிஸ்டுகளின் கடமை என்பதை மாசேதுங் கூறுவதில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம். 

சமுதாயத்தின் வளர்ச்சியின் இன்றைய சகாப்தத்தில், உலகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு, மாற்றும் பொறுப்பை, வரலாறு பாட்டாளி வர்க்கத்தினதும் அதனுடைய கட்சியினதும் தோள்களின்மீது சுமத்தியிருக்கிறது என்கிறார் மாசேதுங். 

உலகை மாற்றுவதற்கான பாட்டாளி வர்க்கம் மற்றும் புரட்சிகர மக்களின் போராட்டம் ஆகிவற்றின் கடமையாக மாசேதுங் கூறுவதைப் பார்ப்போம். 

புறவுலகை மாற்றும் போது அதே நேரத்தில் அகநிலையும் மாற்றப்படுகிறது. தங்களின் அறிவுத் திறமையை மாற்றுதல் என்பது புறநிலை மற்றும் அகநிலை உலகுக்கு இடையிலான உறவுகளை மாற்றுவதாகும். இதனையே பாட்டாளி வர்க்கமும் அதன் புரச்சிகர இயக்கமும் தங்களது கடமையாகக் கொள்ள வேண்டும். கடமை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு மனிதயினம் தன்னையும், உலகையும் தன்னுணர்வோடும், உணர்வுவழியிலும் மாற்றும் பொழுது உலகில் கம்யூனிச சகாப்தம் அடையப்படும். 

நடைமுறையின் மூலமே உண்மை கண்டறியப்படுகிறது, மீண்டும் நடைமுறையின் மூலமே கண்டறிந்த உண்மை சரி பார்த்து வளர்தெடுக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் இதே சுற்றில் செல்கிறது, ஒவ்வொரு சுற்றிலும் முன்னதைவிட உயர்மட்டத்திற்கு வளர்ச்சி பெறுகிறது. இதுவே இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அறிவுக் கோட்பாடு ஆகும். மேலும், அறிதலுக்கும் செயல்படுவதற்கும் உள்ள ஐக்கியமே இயக்கவியல் பொருள்முதல்வாதக் கோட்டாகும். 

மாசேதுங் எழுதிய இந்த “நடைமுறை பற்றி” என்கிற சிறுநூல் மிகவும் முக்கியமானது ஆகும். இதனை நான்றாகப் படித்த பின்பு. பிற தத்துவ நூல்களைப் படிப்பது பயனுள்ளதாக இருக்கும். 

இந்த நூலை இப்படிச் சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம். புறநிலையின் விதிகளை நடைமுறையில் தான் அறிகிறோம், அதனை நடைமுறையில் தான் மாற்றுகிறோம். புறநிலை தானே மாற்றத்தை நிகழ்த்துவதில்லை. ஆக, அறிவு நடைமுறையில் இருந்தே பெறப்படுகிறது. கிடைக்கப்பபெற்ற அறிவை நடைமுறைப்படுத்தும் போதே புதியதான அறிவு கிடைக்கப்பெறுகிறது. அறிவு தொடர்கிறது, அறிவு வளர்கிறது. இந்த நூலை நன்றாகப் படித்துப் புரிந்துவிட்டு, அடுத்தத் தத்துவ நூல்களைப் படிக்கலாம். குறிப்பாக இதற்கு அடுத்து முரண்பாடு பற்றிய நூலைப் படிக்கலாம். 

கம்யூனிஸ்டுகளின் நடைமுறை அரசியலுக்கு, தத்துவம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இங்கே மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தையும் சேர்த்துக் கூறலாம். மார்க்சியத் தத்துவமும், மார்க்சிய அரசியல் பொருளாதாரமும் மார்க்சிய வழிப்பட்ட அரசியலுக்கு அடிப்படை ஆகும். மார்க்சிய அரசியலின் விஞ்ஞானத் தன்மை இந்த இரண்டிலும் தான் இருக்கிறது. இதனைப் புரிந்து கொண்டு மார்க்சியம் பயில்வோம் புரட்சிகர நடைமுறையில் இணைவோம்.

Sunday 20 June 2021

3) மார்க்ஸ் எழுதிய “ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்கு பங்களிப்பு- முன்னுரை" சுருக்கம்

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

21 வது வார வகுப்பு - 19-06-2021) வகுப்பு) 

தவிர்க்க முடியாத காரணத்தால் சில வாரங்கள் நமது செங்கொடி மையத்தின் வகுப்பு நடத்த முடியாமல் போனது. மீண்டும் இன்று முதல், வகுப்பைத் தொடர்ந்து நடத்துவோம். 

கடந்த இரண்டு வகுப்புகளில் லெனின் மதத்தைப் பற்றி எழுதியதைப் பார்த்தோம். லெனின் எழுதியதைப் பார்த்துவிட்டு, மார்க்ஸ் எழுதிய இந்த முன்னுரையைப் படித்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். அதனால் தான் லெனின் எழுதியதை பார்த்துவிட்டு மார்க்சுக்குச் செல்கிறோம். 

இன்று, “ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்குப் பங்களிப்பு" என்ற நூலுக்கு மார்க்ஸ் எழுதிய முன்னுரையை மட்டும் பார்க்கப் போகிறோம். இந்த முன்னுரை 1844ஆம் ஆண்டு எழுதப்பட்டது. மார்க்ஸ் தமது பொருள்முதல்வாத தத்துவத்தை 1843-1844 ஆம் ஆண்டுகளில் நிறைவு செய்துள்ளார். அந்த நிறைவை இந்த முன்னுரையில் நாம் காணலாம். 

ஜெர்மனியைப் பொறுத்தவரை, மதத்தின் மீதான விமர்சனம் அடிப்படையில் நிறைவடைந்துள்ளது. மேலும் மதத்தை விமர்சனம் செய்வது அனைத்து விமர்சனங்களுக்கும் முன்நிபந்தனை ஆகும்.” 

இந்த முன்னுரை இப்படிதான் தொடங்குகிறது. 

ஜெர்மனியில், மதத்தின் மீதான விமர்சனம் சாராம்சத்தில் முழுமை பெற்றுள்ளது. மதத்தின் மீதான விமர்சனமே அனைத்து விமர்சனங்களுக்கும் முன்நிபந்தனை ஆகும் என்கிறார் மார்க்ஸ். அனைத்தையும் விமர்சிப்பதற்கு மதத்தின் மீதான விமர்சனம் அவசியமாகும் என்பது இதன்மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். 

நம் நாட்டில் இத்தகைய மதத்தின் மீதான விமர்சனத்தை முடித்துவிட்டோமா? என்ற கேள்வியை எழுப்பினால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. மதத்தின் மீதான தொடக்கநிலை விமர்சனத்தையே செய்துள்ளோம். அதைத் தொடர்ந்து அதனை நிறைவு செய்தோமா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. இதனை மனதில் கொண்டே இன்றைய வகுப்புக்குச் செல்வோம். 

அடுத்து மார்க்ஸ் மதத்தைப் பற்றிய விமர்சனத்தை முழுமையாக வைக்கிறார். அதனை அப்படியே நேரடியாகக் காண்போம். 

பரலோகத்தின் வினோத அர்த்தமான எதார்த்தத்தில் அதிமானுடனைக் காண விரும்பிய மனிதன், தனது சொந்தப் பிரதிபிம்பத்தைத் தவிர வேறு எதையும் அங்குக் காணவில்லை. தான் தேடுகின்ற இடத்தில் அந்த அமானுஷ்யம், தன்னையே ஒத்திருக்கும் ஒன்றைக் காண்பதன்றி வேறு எதையும் காணுமாறு அவனை இனியும் வற்புறுத்த முடியாது. மனிதன் தனது உண்மையான எதார்த்தத்தையே கண்டறிந்தாக வேண்டும்.” 

பரலோகத்தில் மனித சக்திக்கு அப்பாற்பட்டவனை, மனிதன் தேடிக் கொண்டிருக்கிறான். உண்மையில் அங்கே காண்பது, தனது சொந்த தலைகீழ் பிம்பத்தையே தவிர வேறெதுவும் இல்லை. இது பற்றிய விளக்கம் அடுத்து வருகிறது. பரலோகத்தில் தேடுவதை நிறுத்திவிட்டு, மனிதன் அதனை உண்மையான எதார்த்தத்தில் கண்டறிய வேண்டும், அதாவது உலகில் கண்டறிய வேண்டும் என்கிறார் மார்க்ஸ். 

மதத்துக்கு எதிரான விமர்சனத்தின் அடிப்படையாக இருப்பது எது? என்பதைத் அடுத்து, தொகுத்துத் தருகிறார் மார்க்ஸ். 

மனிதனே மதத்தைப் படைக்கிறான். மதம், மனிதனை உண்டாக்கவில்லை. இதை வேறுவிதமாகவும் கூறலாம். தன்னை ஏற்கெனவே இழந்துவிட்ட மனிதனின் சுயவுணர்வும், சுயமரியாதையும் தான் மதம் ஆகும். ஆனால் மனிதன் என்பவன் உலகுக்கு வெளியே அமர்ந்திருக்கும் சூட்சுமப் பொருள் அல்ல. மனிதன் என்பவன் இந்த உலகின் எதார்த்தம். இந்த எதார்த்த உலகின் தலைகீழான பிரதிபலிப்பாக மதம் காட்சிதருகிறது. மனித சாரம்சத்துக்கு எந்தவிதமான உண்மையான எதார்த்தமும் இல்லை. ஆகவே மதத்துக்கு எதிரான போராட்டம் என்பது ஆன்மீக மணம் வீசும் மறுவுலகை எதிர்த்து நடத்தும் போராட்டத்துடன் தொடர்புடையதே ஆகும். இங்கே மார்க்ஸ் என்ன கூறுகிறார் என்றால், மதத்துக்கு எதிரான போராட்டமானது மதம் கற்பிக்கிற பரலோகம், மறுவுலகம், சொர்கம் போன்ற உண்மைக்கு மாறானதை எதிர்த்து நடத்துகின்ற போராட்டமாகும். 

மார்க்சின் இந்த முன்னுரையானது, பிற்காலத்தில் அவர் எழுதியது போல் எளிமையானதா இல்லை. முற்போக்கான தொழிலாளர்களும் மூலதனம் நூலைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மார்க்ஸ் அதை எளிமையாக எழுதியுள்ளார். 

ஆனால், இந்த முன்னுரை, ஒரு தத்துவ முனைவர் பட்டம் பெற்றவர், அறிவார்ந்த சபையில், அறிவுடையோர் முன் சமர்பிப்பது போல் உள்ளது. இந்தக் கடினமான எழுத்து நடையை மார்க்ஸ் பின்னாட்களில் கையாளவில்லை. இந்த முன்னுரை கடினமானதுதான், இருந்தாலும் இதன் சாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 

நான் கூறுகிற விளக்கம் சரியானதா என்பதை அறிந்து கொள்வதற்கு, மார்க்சின் எழுத்தை மேற்கோள்களாக, இதில் அதிகம் பயன்படுத்தி உள்ளேன். 

அடுத்து மார்ஸ் கூறியதை நேரடியாகப் பார்த்துவிட்டு, அதன் விளக்கத்திற்குச் செல்வோம். 

மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது. இது மக்களின் அபினியாக உள்ளது.” 

இங்கே மார்க்ஸ் மதத்தை அபின் என்கிறார். இந்தக் கூற்று எவ்வளவு பிரபலமோ அந்தளவுக்கு இதனைத் தவறாக விளக்கம் கொடுப்பவர்களின் கூற்றும் பிரபலமாகும். 

மதம் மக்களின் அபினி என்பதைத் திருத்தல்வாதிகள் தவறாக விளக்கம் கொடுக்கின்றனர். துயரங்களைத் தாங்குவதற்கு மயக்க மருந்து போல் மதம் மக்களுக்கு உதவிடுகிறது என்கின்றனர். அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுப்பது போல், கம்யூனிச சமூகம் உருவாகும்வரை மக்கள் இந்தச் சமூகத்தின் துன்பங்களை மறப்பதற்கு மதம் மயக்க மருந்தாக - அபினியாகப் பயன்படுகிறது. 

இது அபத்தமான கூற்றாகும். மார்க்சின் இந்த முன்னுரையை ஒருங்கிணைந்து படித்துப் புரிந்து கொள்ளும் போது இந்த அபத்தம் முழுமையாக வெளிப்படும்.. 

எதார்த்த உலகில் காணும் துயரத்தின் தலைகீழ் வெளிப்பாடே மதம், இதனை விமர்சனப் பூர்வமாகப் பார்க்கும் போது இதற்கு எதிரான விமர்சனமாக மாறுகிறது. உலகின் துயரத்தின் தலைகீழ் பிரதிபலிப்பு என்பதையே ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் மதம் இருப்பதாக முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தலைகீழ் பிரதிபலிப்பு உண்மையாகத் தெரிவதனால் தான் மதத்தை மக்களின் அபின் என்று மார்க்ஸ் கூறியுள்ளார். 

மதம் மக்களின் அபின் என்கிற ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு மதத்தைப் பற்றி விமர்சிப்பது வீண் காலவிரம் என்று சிலரும், மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது என்பதை மட்டும் பிடித்துக் கொண்டு, மதம் மக்களின் துயரத்தை போக்கும் மயக்க மருந்து, அதனால் மக்களின் துயரங்கள் அழியும்வரை மதத்தை எதிர்க்கக்கூடாது என்று சிலரும், மேலே கூறிய மார்க்சின் கருத்துக்கு மாறாக விளக்கம் கொடுக்கின்றனர். 

மதத்தை மயக்க மருந்தாகக் கருதிக் கொள்பவர்கள், மார்க்ஸ் கூறியதில் ஒன்றை மட்டும் பிடித்து, அதன் சாரத்தைத் திரித்துரைக்கின்றனர். மதத்தின் துயரம் உண்மையான துயத்தின் வெளிப்பாடு என்று மார்க்ஸ் கூறியுள்ளார் என்பது உண்மைதான். அதே நேரத்தில் அதனுடன் சேர்த்துக் கூறியதை, தங்கள் வசதிக்காகத் திருத்தல்வாதிகள் விட்டுவிடுகின்றனர். 

மார்க்ஸ் என்ன கூறியுள்ளார், "மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது." 

அடுத்து மார்க்ஸ் கூறியதை நேரடியாகப் பார்ப்போம்:-

மக்களின் மாயையான மகிழ்ச்சியாக உள்ள மதத்தை ஒழிப்பது அவர்களின் உண்மையான மகிழ்ச்சிக்கான கோரிக்கையாகும். தங்களது நிலைமைகளைக் குறித்து மக்கள் கொண்டுள்ள பொய்த்தோற்றத்தை விட்டொழிக்கும்படி கோருவது, அத்தகைய பொய்த்தோற்றங்கள் தேவையாக இருக்கும் நிலைமைகளை விட்டொழிக்கும்படி கோருவதே ஆகும். மதம்பற்றிய விமர்சனம் என்பது, அதன் கருவிலேயே துயரப் பள்ளதாக்கு பற்றிய, அதன் ஒளிப்பிரமையாகவுள்ள மதத்தைப் பற்றிய விமர்சனமாக உள்ளது." 

மார்க்சின் இந்த எழுத்தை எவராலும் திரிக்க முடியாது. மிகமிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 

முன்னுரையின் எந்த இடத்திலும், மார்க்ஸ் மதத்தின் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று அனில் ரஜீம்வாலேவின் கருத்தாக, அண்மைய ஜனசத்தி பத்திரிகை கூறுகிறது. இதே கருத்துடையவர்கள் இடதுசாரிகளிடையே நிறையப் பேர் உள்ளனர். ஆனால் மேலே உள்ள மார்க்ஸ் எழுதிய பகுதியைப் படிக்கும் போது அனில்ரஜீம்வாலே போன்றோரின் கருத்துத் தவறு என்பது தெரிந்துவிடுகிறது. மார்க்ஸ் மதத்தை ஒழிப்பது பற்றியே பேசியுள்ளார். 

மக்களின் மாயையான மகிழ்ச்சியாக உள்ள மத்தை ஒழிப்பதே, மக்களின் உண்மையான மகிழ்ச்சிக்கான கோரிக்கையாக உள்ளதை முன்னுரை குறிப்பிடுகிறது. உண்மையான மகிழ்ச்சியை அடைய வேண்டுமானால், மாயையான மகிழ்ச்சி தருகிற மதத்தை ஒழிக்க வேண்டும். இந்த மாயையான மகிழ்ச்சியை மதம் கொடுப்பதனால் தான் மதத்தை மக்களின் அபின் என்று மார்க்ஸ் கூறியுள்ளார். 

மேலும், மதத்தின் தோற்றத்துக்குக் காரணமான சூழ்நிலைமைகளை ஒழிப்பது பற்றியும் மார்க்ஸ் கூறியுள்ளார். அதாவது மத இருப்பிற்கான வேர்களை ஒழிப்பதை குறிப்பிடுகிறார். முதலாளித்துவ உற்பத்தி முறையினால் உருவான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், அதன் அராஜக உற்பத்தியையும் ஒழிக்க வேண்டும் என்கிறார் மார்க்ஸ். 

அடுத்து மார்க்ஸ் கூறுகிறார், மதத்தின் மீதான விமர்சனமானது, மதத்தின் மாயையான ஒளிவட்டத்தை விமர்சிப்பதாகும். 

மதத்தின் ஒளிவட்டத்தை மார்க்ஸ் விமர்சிக்கிறார் என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாத இடதுசாரி தலைவர்கள் நமது நாட்டில் இன்னும் இருக்கின்றனர் என்பது மிகவும் அவலமான நிலைமை ஆகும். மதத்தை எப்படிப் பொருள்முதல்வாத வழியில் விமர்சிக்க வேண்டும் என்பதையே இந்த முன்னுரை நமக்கு வழிகாட்டுகிறது. 

மதத்தின் கற்பிதமான மலரை, விமர்சனத்தின் மூலம் உதறித் தள்ள வேண்டும் என்கிறார் மார்க்ஸ். கற்பிதமான, மாயையான சூரியனை சுற்றுவதை விடுத்து, உண்மையான சூரியனை சுற்ற வேண்டும். அதாவது மனிதன் கற்பனையில் இருந்து விடுபட வேண்டும். தான் நினைத்த உலகத்தைச் சொர்கத்தில் காணாமல், இந்த உலகில் எதார்த்தமாகக் காண வேண்டும். அதனை இங்கேயே நிலைநாட்ட வேண்டும் 

மதத்தின் மீதான விமர்சனமானது, மாயையைக் கடந்து, மனிதனைச் சிந்திக்கவும் செயல்படவும் வைக்கிறது. எதார்த்த உலகின் சிக்கல்களுக்கு விடையாக, மதம் கற்பிக்கிற பரலோத்தை விடுத்து, இங்கேயே எதார்த்த உலகிலேயே தீர்வை உருவாக்க வேண்டும். அது மட்டுமல்லாது அதை உழைக்கும் மக்களே உருவாக்க வேண்டும் என்கிறார். 

மதத்தின் மீதான விமர்சனத்தின் மூலம் அமைத்துக் கொள்ள வேண்டிய வரலாற்றுக் கடமை என்ன என்பதை அடுத்து மார்க்ஸ் கூறுகிறார்.     

மதத்தின் மாயையான உலகத்தை விமர்சனம் செய்வதின் மூலம் ஒழித்தவுடன், இந்த உலகத்தின் உண்மையை நிலைநாட்டப்பட வேண்டும். இதுவே தத்துவத்தின் உடனடிப் பணியாகும். மனிதனுக்கு அந்நியமாக்கிக் காட்டும் மதத்தின் அதிமானுட உருவை திரைகிழிந்து காட்டிய உடனே, அதன் மாயையான உருவங்களில் தன்னைத் தானே அந்நியப்படுத்தும் தன்மையையும் திரைகிழித்துக் காட்ட வேண்டும். 

மதத்தின் மீதான விமர்சனம் என்பது தொடக்க நிலையானது தான். அதனைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக அனைத்தையும் விமர்சிக்கப்பட வேண்டும். அவை என்ன என்பதை அடுத்து மார்க்ஸ் கூறுகிறார். 

மதம் சுட்டுகிற பரலோகத்தின் மீதான விமர்சனம், பூவுலகைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. மதத்தைப் பற்றிய விமர்சனம், உரிமை பற்றிய விமர்சனமாக மாறுகிறது, இறையியலைப் பற்றிய விமர்சனம், அரசியலைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. 

மதத்தின் மீதான விமர்சனத்தின் தொடர்க்சியாகவே அனைத்தின் மீதான விமர்சனமும் செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள பிரதான மதங்களையாவது இடதுசாரிகள் விமர்சித்துள்ளோமா என்று கேட்டால் அது தொடக்க நிலையில் தான் இருக்கிறது. அதுவும் பல காலத்துக்கு முன் தொடங்கியதாக உள்ளது.

இந்து மதம் என்று கூறப்படுவதற்கு ஆதாரமாகச் சுட்டப்படும், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகியவற்றை மார்க்சிய வழியில் நாம் விமர்சனம் செய்துள்ளோமா? என்ற கேள்வி முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் மதத்தை விமர்சிப்பதில் நம் நாட்டு இடதுசாரிகளிடையே அக்கறையின்மை காணப்படுகிறது. இந்தத் தொடக்கப் புள்ளியே சிக்கலாக இருப்பதே, நம் நாட்டு இடதுசாரிகளின் பின்னடைவுக்கு அடிப்படையாக உள்ளது என்று கூறலாம். பின்னடைவுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன, அதில் இது ஒன்று. 

மார்க்சிய வழிப்பட்ட விமர்சனத்தை, இந்திய மதங்களின் மீது வைப்பதின் மூலமே நாம் அனைத்தையும் விமசிக்க முடியும் என்ற அடிப்படைப் புரிதல் இந்த மார்க்சின் முன்னுரையைப் படிக்கும் போது நமக்கு ஏற்படுகிறது. 

இந்த முன்னுரையில் காணப்படும் அனைத்தையும் நாம் இந்த வகுப்பில் பார்க்கப் போவதில்லை. குறிப்பாக அன்றைய ஜெர்மன் நிலைமைகளைப் பற்றிக் கூறுவதைப் பார்க்கப் போவதில்லை. முன்னுரையில் காணப்படும் மதம் மற்றும் தத்துவம் பற்றிய விவரங்களை மட்டுமே இங்கே தொகுத்துப் பார்க்கிறோம். 

ஆயுதத்தின் மூலம் விமர்சிக்கப்படும் போது விமர்சனத்தை ஆயுதமாகக் கொள்ள முடியாது. ஆயுதத்தின் மூலம் தாக்கும் பாது, அதற்கு எதிராக எழுத்தை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் செய்ய முடியாது. அதாவது ஆயுதக் கருவிக்கு எதிராக, கோட்பாட்டை ஆயுதமாகப் பயன்படுத்த முடியாது. ஆயுதத்தைப் பயன்படுத்தும் போது ஆயுதத்தின் மூலமே அதனை எதிர்கொள்ள வேண்டும். பொருளாயத சக்தியை பொருளாயத சக்தியின் மூலம்தான் தூக்கி எறியமுடியும். ஆனால் கோட்பாடு மக்களின் மனதைப் பற்றிய உடனே அது பொருளாயத சக்தியாக மாறிவிடுகிறது. 

மார்க்சின் இந்தக் கூற்றையும் மிகவும் எளிமையாகப் பலர் புரிந்து கொள்கின்றனர். கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது பொருளாயத சக்தியாகிறது. இந்தக் கூற்று கருத்து திணிபையே கூறுகிறது. இந்த முன்னுரை இவ்வாறு கூறவில்லை. 

மக்களின் தேவைகளைக் கோட்பாடு நிறைவு செய்யும் போது, கோட்பாடு பொருளாயத சக்தியாக உருவெடுக்கிறது. மனிதத் தேவையைகளைக் கோட்பாடு நிறைவு செய்யும் போது, அது மக்களின் உணர்ச்சியைத் தொடுகிறது. அவ்வாறு மக்களின் தேவைகளை நிறைவு செய்து, சாதிக்கும் போது அந்தக் கோட்பாடு மக்களிடம் சென்றடைகிறது. அப்படி நிறைவேற்றும் போதே அந்தக் கோட்பாடு மக்களிடையே பொருளாயத சக்தியாக மாறுகிறது. 

கருத்து மக்களிடம் சென்றடைவது என்பது எதோ உளவியல் பிரச்சினையாகப் புரிந்து கொள்ளக்கூடாது. கோட்பாடு மக்களிடையே பொருளாயத சக்தியாக மாறுவதற்கு, கம்யூனிஸ்டுகள் அதற்கான செயலை செய்வது பற்றியே இந்த முன்னுரை நமக்குக் கூறுகிறது. 

இந்த முன்னுரையின் இறுதிப் பகுதியில் மார்க்ஸ் ஒரு கேள்வியை எழுப்பி, அதற்குப் பதிலையும் தருகிறார். 

ஜெர்மன் விடுதலையின் உறுதிப்பாடான சாத்தியப்பாடு எங்கே உள்ளது? என்பதே அந்தக் கேள்வியாகும். 

இந்தக் கேள்வியை நாம் இன்னும் விளக்கமாகப் புரிந்து கொள்வதற்காக மாற்றிக் கொள்வோம். 

ஜெர்மன் விடுதலையின் உறுதிப்பாடான சாத்தியப்பாடு எந்த வர்க்கத்திடம் உள்ளது? 

அந்த வர்க்கம் பாட்டாளி வர்க்கமாகும் என்கிறார் மார்க்ஸ். 

பாட்டாளிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் தொழிலாளர்கள் தான், ஆனால் தொழிலாளர்களில் பாட்டாளிகள் என்று யாரை வகைப்படுத்துகிறோம் என்ற தெளிவு வேண்டும். 

முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் தொழிற்சாலையில் உழைக்கும் உழைப்பாளர்களையே பாட்டாளி என்று மார்க்சியம் கூறுகிறது. பாட்டாளிகளின் உழைப்பு, குறிப்பிட்ட வரலாற்று வளர்ச்சி கட்டத்தில், உழைப்பு, உழைப்பு சக்தியாகவும், அந்த உழைப்பு சக்தி ஒரு சரக்காகப் பரிணமித்துள்ளது. இத்தகைய உழைப்பைக் கொண்ட உழைப்பாளிகளையே பாட்டாளிகள் என்று கூறப்படுகிறது. 

எங்கெல்ஸ் எழுதிய “கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற கேள்வி-பதில் பகுதியில் தொழிலார்களுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்றாகப் விளக்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்விபதில் பகுதிகள் நமது செங்கொடி மையத்தில் ஏற்கெனவே வகுப்பெடுக்கப்பட்டுள்ளது.

பாட்டாளிகளின் நிலைமைகளை மார்க்ஸ் அடுத்து விளக்குகிறார். 

சமூகத்தில் ஏனைய அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளாமல் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள முடியாத ஒன்று தான் பாட்டாளி வர்க்கம். பாட்டாளி வர்க்கம் தன்னை முழுமையாக விடுத்துக் கொள்ள வேண்டுமானால், முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் தனிச்சொத்துடைமையை ஒழிக்க வேண்டும். அப்படி ஒழித்தால் தான் பாட்டாளிகளைச் சுரண்டுகிற போக்கு முடிவுக்கு வரும். 

அதாவது பாட்டாளிகள் தங்களை ஒடுக்குகின்ற சக்தியைப் புரிந்து கொண்டு, அந்தச் சக்தியை ஒழிப்பதற்கான போராட்டத்தை நடத்துகிறது. 

ஜெர்மனியில் வளர்ச்சி அடைந்து வரும் எந்திரத் தொழிற் உற்பத்தியோடு பாட்டாளி என்கிற புதிய தொழிலாளி வர்க்கம் தோன்றி வளர்ச்சி அடைந்தது. இந்தப் பாட்டாளி வர்க்கமே ஜெர்மனியை விடுவிக்கப் போகிறது. இதனை ஒரு சோதிடனின் கூற்றைப் போல மார்க்ஸ் கூறவில்லை. அதற்கான தயாரிப்பைப் பற்றியும் கூறியுள்ளார். இயக்கவியல்-வரலாறியல் பொருள்முதல்வாதம், அரசியல் பொருள்முதல்வாதம் ஆகியவை நம்மைத் தயார்படுத்துவதற்கு உதவிடுகிறது. 

இதற்கு அடுத்து மார்க்ஸ் கூறியது ஒரு பிரபலமான கூற்றாகும். 

தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளிகளிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தைத் தத்துவத்திடம் காண்கிறது." 


(As philosophy finds its material weapon in the proletariat, so the proletariat finds its spiritual weapon in philosophy) 

இன்றைய நவீன உலகத்தைப் பாட்டாளி வார்க்கம்தான் விடுவிக்கப் போகிறது. நவீன உற்பத்தியில் காணப்படு ஏற்றமும் இறக்கமும் எந்த வர்க்கத்தைப் பாதிக்கிறதோ அந்த வர்க்கமே பாதிப்பை எதிர்த்துப் போராடும். அதனால் தான் பாட்டாளி வர்க்கத்தைப் புரட்சிகரமான வர்க்கமாகக் கூறப்படுகிறது. 

நவீன உலகத்தைப் பாட்டாளி வர்ககம், விடுவிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தத்துவக் கண்ணோட்டம் தேவை. அந்தத் தத்துவம், இயக்கவியல் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமாகும். இந்தத் தத்துவம் பாட்டாளி வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் இருந்து தோன்றவில்லை. பாட்டாளி வர்க்கத்தின் வாழ்நிலைமைகளில் இருந்துதான் தோன்றியது. 

முதலாளி வர்கத்துக்கான தத்துவப்பணியை முதலாளிகளே உருவாக்கிக் கொள்வது இல்லை. அதற்கான அறிவுத்துறையினர் வேலை செய்கின்றனர். அதே போலப் பாட்டாளிகளின் தத்துவத்தைப் பாட்டாளி வர்க்க நிலைமைகளை நன்றாகப் புரிந்து கொண்ட அறிவுத்துறையினரால் தோற்றுவிக்கப்படுகிறது. 

பொருள்முதல்வாத தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளிகளிடம் இருந்து பெறுகிறது, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தைப் பொருள்முதல்வாத தத்துவத்திடம் பெறுகிறது. 

ஜெர்மனியை விடுவிக்க வேண்டுமானால், அடித்தளத்தையே புரட்சிகரமாக ஆக்க வேண்டும். இங்கே ஜெர்மானிய விடுதலை என்பது மனிதனின் விடுதலையையே குறிப்பிடப்படுகிறது. 

இந்த விடுதலைக்குத் தலையாகச் செயற்படுவது தத்துவமே. இதயம் பாட்டாளி வர்க்கமாகும். 

இதற்கு அடுத்து மார்க்ஸ் கூறியதை நேரடியாகப் பார்ப்போம்.

பாட்டாளி வர்க்கத்தை ஒழிக்காமல், தத்துவத்தை ஒரு எதார்த்தமாக ஆக்க முடியாது, தத்துவத்தை ஒரு எதார்த்தமாக ஆக்கமாமல் பாட்டாளி வர்க்கத்தையும் அழிக்க முடியாது 

இந்த மொழியாக்கம் தோழர் ரகுநாதன் அவர்களால் 1963 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்தது. 

(Philosophy cannot realize itself without the transcendence [Aufhebung] of the proletariat, and the proletariat cannot transcend itself without the realization [Verwirklichung] of philosophy.) 

ஒழித்தல், அழித்தல் என்பதாக இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, இன்றைய அகரமுதலி என்ன கூறுகிறது என்றால், மீறுதல் என்கிறது. எதை மீற வேண்டும். தொடர்ந்து பார்ப்போம் 

பாட்டாளி வர்க்கத்தின் ஒழித்தல்-அழித்தல்-மீறல் பற்றி மார்க்ஸ் ஏன் இங்கே பேசுகிறார் என்று குழப்பம் அடைய வேண்டாம். நான் முன்பே கூறியது போல் மார்க்ஸ் இந்த முன்னுரை, ஒரு சாதாரண வாசகனுக்கு எழுதுவது போல் எழுதவில்லை, தத்துவ மாணவர்களுக்கும் தத்துவ ஆசிரியர்களுக்கும் எழுதியது போல் எழுதியுள்ளார். இதனை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அடுத்துப் பார்ப்போம். 

பாட்டாளி வர்க்கம் தன்னிடம் உள்ள தடையை ஒழிக்காமல் தத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியாது, தத்துவத்தை உணராமல் பாட்டாளி வர்க்கம் தன்னிடம் உள்ள தடையை ஒழிக்க முடியாது. 

இதுதான் அதன் உள்ளார்ந்த பொருளாகும். 

பாட்டாளி வர்க்கம் தனக்கு உரிய எழுச்சியைப் பெற வேண்டுமானால், பாட்டாளி வர்க்கம் எழுச்சி பெறுவதற்கு உள்ள தடையை நீக்க வேண்டும், தடையை நீக்குவதற்குப் பொருள்முதல்வாத தத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். தத்துவத்தை உணர்ந்து கொள்ளாமல் பாட்டாளி வர்க்கம் தன் முன்னுள்ள தடைகளை ஒழிக்க முடியாது. ஆக மொத்தம் என்ன கூறப்படுகிறது என்றால், பாட்டாளி வர்க்கம் தன்னை விடுத்துக் கொள்வதற்குத் தனக்கான தத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த உணர்வைப் பெறாமல் பாட்டாளிகள் தங்களை விடுவித்துக் கொள்ள முடியாது. 

பாட்டாளி வர்க்கத்துக்கான தத்துவத்தின் அவசியத்தைப் பற்றியே இங்குப் பேசப்பட்டுள்ளது. 

பாட்டாளி வர்க்கம் தனக்கான தத்துவத்தையும், தனக்கான அரசியல் பொருளாதாரத்தையும் அறிந்து கொள்ளாமல் முழுமையான விடுதலையை அடையமுடியாது. இந்த முன்னுரை தத்துவத்தைப் பற்றியே பேசுகிறது. இருந்தாலும் இந்த இடத்தில் அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். 

கம்யூனிஸ்டுகளின் அரசியல், விஞ்ஞானத் தன்மை பெற வேண்டுமானால், பொருள்முதல்வாதத்தையும், அரசியல் பொருளாதாரத்தையும் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அறிந்து கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு நாம் பாடுபடுவோம் என்று கூறுவதோடு இன்றைய வகுப்பை முடித்துக் கொள்கிறேன்.

Saturday 19 June 2021

2) லெனின் எழுதிய “மதத்தின் மீதான தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை” என்ற கட்டுரையின் சுருக்கமும் சாரமும்

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

30 வது வார வகுப்பு - 01-05-2021) வகுப்பு)

 லெனின் எழுதிய “மதத்தின் மீதான தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை என்ற கட்டுரையை இன்று பார்க்கப் போகிறோம். இந்தக் கட்டுரை 1909 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. 

கம்யூனிசத்தின் உலகக் கண்ணோட்டம் முழுவதும் விஞ்ஞானச் சோஷலிசத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது, இந்த விஞ்ஞானச் சோஷலிசமானது, இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. மார்க்சும் எங்கெல்சும் இதை மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளனர். 

இந்த இயக்கவியல் பொருள்முதல்வாதமானது 18ஆம் ஆண்டுப் பிரெஞ்சு நாட்டில் காணப்பட்ட பொருள்முதல்வாதம் மற்றும் ஜெர்மனியில் காணப்பட்ட ஃபாயர்பாக்கின் பொருள்முதல்வாதம் என்கிற மரபுத் தொடர்ச்சியில் விளைந்ததாகும். இத்தகைய இயக்கவியல் பொருள்முதல்வாதமானது நாத்திகத் தன்மை கொண்டது, மேலும் இது அனைத்து மதத்திற்கும் உறுதிமிக்க எதிரியாகும். 

இதற்கு அடுத்து எங்கெல்ஸ் எழுதிய இரண்டு நூல்களை லெனின் குறிப்பிடுகிறார். ஒன்று “டூரிங்குக்கு மறுப்பு மற்றொன்று “லுத்விக் ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் சித்தாந்தத்தின் முடிவும். இதில் உள்ள முதல் நூல் மார்க்ஸ் இருக்கும் போது எழுதியது, இரண்டாவது நூல் மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு எழுதியது. 

இந்த இடத்தில் ஒன்றை லெனின் குறிப்பிடுகிறார், “டூரிங்குக்கு மறுப்பு என்ற நூல் மார்க்ஸ் கையெழுத்து படியிலேயே படித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். அன்று இதை எந்த நோக்கத்திற்குப் பதிவு செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் இன்று இந்தப் பதிவு முக்கியத்துவத்தைப் பெறுகிறது. மார்க்ஸ் மிகவும் மென்மையானவர், எங்கெல்ஸ் தான் பொருள்முதல்வாதத்தைக் கறாராகக் கடைபிடிக்கும் வறட்டுவாதி என்ற ஒரு கருத்து இன்றும் உலவுகிறது. ஆனால் எங்கெல்சின் “டூரிங்குக்கு மறுப்பு என்ற நூல் மார்க்ஸ் பார்வைபட்டே வெளிவந்துள்ளது என்பதை லெனினது இந்தக் கூற்றும், எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. எங்கெல்ஸ் எழுத்துக்கள் மார்க்சின் பார்வைபடாமல் வெளிவந்ததில்லை, மார்க்ஸ் எழுத்துகள் எங்கெல்சின் பார்வைபடாமல் வெளிவந்ததில்லை. இவர்களின் வாழ்க்கை வரலாற்றி அறிந்தவர்களுக்கு இது எளிதாகப் புரியும். 

மார்க்சியத்தை, தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் என்ற பிரிவை லெனின் தான் பிரித்தார். இதைத் தொடர்ந்து சோவியத் அறிஞர்களை இப்படிப் பிரித்து விளக்கி வருகின்றனர் என்ற கருத்தை இன்றும் கூறுபவர்கள் இருக்கின்றனர். ஆனால் மார்க்ஸ் பார்வைபட்ட “டூரிங்குக்கு மறுப்பு என்ற எங்கெல்சின் நூல் மூன்று பிரிவையும் பிரித்து, தனித் தனியாகப் பெயரிட்டு எழுதப்பட்டுள்ளது. ஆக லெனினுக்கு முன்பே, மார்க்சியத்தைத் தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் என்று பிரிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். 

டூரிங்கை எங்கெல்ஸ் விமர்சிப்பதற்குப் பல காரணம் இருக்கிறது. அதில் ஒன்றை லெனின் இங்கே குறிப்பிடுகிறார். டூரிங் தன்னை ஒரு பொருள்முதல்வாதியாகவும் நாத்திகராகவும் கூறிக் கொள்கிறார். ஆனால் டூரிங் உறுதியான பொருள்முதல்வாதியாக இல்லை என்றும், மதத்திற்கும், மதக் கோட்பாட்டிற்கும் இடம் அளிக்கும் வகையில் பல ஓட்டைகளைத் தமது படைப்புகளில் இடம் கொடுத்தார் என்று எங்கெல்ஸ் அவரை விமர்சிக்கிறார். 

அதே போல ஃபாயர்பாக் என்பவரும் ஒரு பொருள்முதல்வாதி தான். மார்க்சும் எங்கெல்சும் ஹெகலின் கருத்துமுதல்வாதத்தில் இருந்து விடுபடுவதற்கு உதவியர் தான், ஆனால் ஃபாயர்பாக் மதத்தை எதிர்த்துப் போராடுவது மதத்தை ஒழிப்பதற்கு அல்ல, அதனைப் புதிப்பிப்பதற்கே. அந்தப் புதிபிக்கப்பட்ட மதம் ஒரு சிறந்த மதமாக இருக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது. இதனையும் எங்கெல்ஸ் விமர்சிக்கிறார். 

மதம் மக்களுக்கு அபின் என்கிற மார்க்சின் கூற்றே, மதத்தைப் பற்றி மார்க்சியக் கண்ணோட்டம் முழுவதுக்கும் அடிப்படையாகும். இதற்கு அடுத்து லெனின் கூறுவதே மதம் பற்றி மார்க்சியர்களின் கருத்தாகும். 

      அனைத்து நவீன மதங்களும், சர்ச்சுகளையும், அனைத்து மத    நிறுவனங்களும்,       முதலாளித்துவப் பிற்போக்கின் கருவிகளாகும்.       சுரண்டலைப் பாதுகாப்பதற்கும்     தொழிலாளி வர்க்கத்தை வெறி மயக்கமுறச் செய்வதற்குமான கருவிகளாகும் என்றே     மார்க்சியம் எபோதும் கருதுகிறது.” 

மதத்தைப் பற்றி மார்க்சியம் இவ்வாறு கூறுகிறது என்றால், தொழிலாளர் கட்சியின் வேலைத்திட்டத்தில் நாத்திகத்தைப் பற்றித் தெளிவாகவும் வெளிப்படையாகவும் ஏன் தெரிவிக்கவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அத்துடன் நில்லாது மதத்தின் மீது ஏன் போர் பிரகடனம் (declaring war on religion) செய்யவில்லை என்றும் கேட்கின்றனர். இப்படிக் கேள்வி கேட்பவர்கள் தங்களைக் கம்யூனிஸ்டுகளைக் காட்டிலும் தீவிர இடதுசாரிகள், தீவிர புரட்சியாளர்கள் என்றும் கூறிக் கொள்கின்றனர். 

இப்படி மதத்தின் மீது போர் பிரகடனம் செய்ய வேண்டும் என்று கூறுபவர்களை எங்கெல்ஸ் கண்டித்ததை லெனின் இங்கே நினைவு கூறுகிறார். மதத்தின் மீது போர் பிரகடனம் செய்ய வேண்டும் என்று கூறுவது முட்டாள் தனமானது என்கிறார் எங்கெல்ஸ். அவ்வாறு போர் தொடுப்போமாயின், அது மதத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டி புத்துயிர் பெறச்செய்துவிடும் என்கிறார். உண்மையில் இந்தப் போர் பிரகடனம் மதத்தை அழிப்பதை தடுப்பதற்கே உதவிடும் என்று எங்கெல்ஸ் வெளிப்படையாகக் கூறியதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். 

அப்படி என்றால் மத்தை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்வி எழத்தான் செய்யும். 

உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டத்தின் மூலமாகத்தான், உணர்வுபூவர்வமான புரட்சிகரமான சமூக நடைமுறையின் அனுபவத்தின் பயிற்சியினால் மட்டுமே பாட்டாளி மக்களின் பெரும் பகுதியினரை மதத்தின் நுகத்தடியில் இருந்து விடுவிக்க முடியும் என்கிறது மார்க்சியம். 

மதத்தின் மீது போர் பிரகடனம் செய்ய வேண்டும் என்று கூறுவது, அராஜமான சொல் அலங்காரம் தவிர வேறொன்றும் இல்லை என்கிறார் எங்கெல்ஸ். சோஷலிச சமூகத்தில் மதம் சட்ட விரோதமாகப்பட வேண்டம் என்று கூறுகிற டூரிங்கை கண்டித்து, இது போலியான புரட்சிக் கருத்து என்கிறார். 

மதத் தலைவர்களின் மீது பிஸ்மார்க் மடத்தனமாக நடத்திய போராட்டமானது, குருமார்களைத் தெம்பூட்டவே செய்தது என்று எங்கெல்ஸ் கூறியதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய போக்கு அரசியலுக்கு முதன்மை இடம் தராமல் மதத்திற்கு முதன்மை இடம் தரப்படுகிறது. இதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் சில பகுதிகள், புரட்சிகரமான வர்க்கப் போராட்டத்தின், மிக அவசிய கடமையான முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்ப்பதற்குப் பதில், முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் குருமார்களின் மிதான எதிர்ப்பாகத் திசை திருப்பப்படுகிறது. 

நம் நாட்டிலும் உள்ள இத்தகைய ஆபத்தான நாத்திகப் போக்கை நாம் மிகவும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே லெனின் கூற்று நமக்குத் தெரிவிக்கிறது. 

பாட்டாளி வர்க்கத்தை நிறுவன வழியில் பயிற்சி கொடுத்து, பக்குவம் அடையச் செய்வதின் மூலம் மட்டுமே மதத்தை ஒழிக்க முடியும், மதத்தின் மீதான போராட்டம் என்கிற சூதாட்டத்தில் இறங்கக்கூடாது என்று எங்கெல்ஸ் எச்சரிக்கிறார். 

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த, அரசைப் பொறுத்தளவில் “மதம் தனிப்பட்டவரின் விவகாரம் என்கிற கூற்று சரியானது ஆகும். இதனைச் சில திருத்தல்வாதிகள் அரசுக்கு மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மதம் ஒரு தனிப்பட்ட விவகாரமாக விளக்கப்படுத்தினர். இதனை எங்கெல்ஸ் மறுத்து அறிக்கைவிடுத்தார். அதில் கம்யூனிஸ்டுகள், அரசு தொடர்பாக மட்டுமே மதத்தை ஒரு தனிப்பட்ட விவகாரமாகக் கருதுகிறார்கள், ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில் மதம் ஒரு தனிப்பட்டவரின் விவகாரமாகக் கருதப்படவில்லை என்பதைத் தெளிவாக்கினார். 

இதுவே மார்க்சும் எங்கெல்சும் மதம் பற்றிய பிரச்சினைக்குக் கூறிய வரலாறு ஆகும். 

மார்க்சியத்தின் இந்தக் கூற்றைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், இதில் முரண்பாடு உள்ளதாகவும், ஊசலாட்டம் காணப்படுவதாகவும் கருதுகின்றனர். ஆனால், மார்க்சியத்தை அக்கறையோடு அணுகியவர்களும், சர்வதேச கம்யூனிசத்தின் அனுபவங்களை அறிந்தவர்களும், மதத்தின் மீதான மார்க்சிய அணுகுமுறையில் காணப்படும் ஒருங்கிணைந்த தன்மையையும் அதன் உறுதிப்பாட்டையும் அறிந்து கொள்வர். மார்க்சும் எங்கெல்சும் மதத்தின் மீது கொண்ட அணுகுமுறையானது மிகவும் கவனமாக ஆராய்ந்து, சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவாகும் என்பதை மார்க்சிய அரசியல் கோட்பாட்டையும், மார்க்சிய தத்துவத்தையும் அறிந்தவர்கள் எளிதாகப் புரிந்து கொள்வர். 

மார்க்சியத்தின் இந்தக் கூற்றை முன்வைத்து பல இடதுசாரிகள், மதத்தை எதிர்க்கக் கூடாது. மத எதிர்ப்பை செயற்படுத்தினால் மக்களின் மனம் புண்படும், மக்களிடம் நெருங்க முடியாது என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இப்படிப்பட்டவர்கள், லெனின் இங்கே கூறுவதைக் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

      மார்க்சியம் பொருள்முதல்வாதமாகும். அந்த வகையில் இது பதினெட்டாம்    நூற்றாண்டின் பல்பொருள் அறிவுவாதிகளின் பொருள்முதல்வாதம் அல்லது      ஃபாயர்பாக்கின் பொருள்முதல்வாதத்தைப் போலவே மதத்தின்பால் தணியாத     எதிப்பைக் கொண்டிருக்கிறது. இதில் சந்தேகத்திற்கு இடமேயில்லை. ஆனால்      மார்க்ஸ் எங்கெல்சினுடைய இயக்கவியல் பொருள்முதல்வாதம் பல்பொருள்      அறிவொளிவாதிகள், மற்றும் ஃபாயர்பாக் ஆகியோரைக் காட்டிலும் மேலும் முன் செல்கிறது. அது வரலாற்றுத் துறையிலும் சமூக விஞ்ஞானங்களின்       துறையிலும் பொருள்முதல்வாத தத்துவத்தைப் பயன்படுத்துகிறது. 

      நாம் கட்டாயம் மதத்தை எதிர்த்து போராட வேண்டும். அதுதான் அனைத்து       பொருள்முதல்வாதத்தின் அரிச்சுவடியாகும். எனவே மார்க்சியத்தின்      அரிச்சுவடியும் அதுதான். ஆனால் மார்க்சியம் வெறும் அரிச்சுவடியுடன் நின்று    விடும் பொருள்முதல்வாதமல்ல. 

      மார்க்சியம் மேலும் செல்கிறது. 

      அது கூறுவது:- மதத்தை எப்படி எதிர்த்துச் சமாளிப்பது என்பதை நாம் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்காகக் கடவுள் நம்பிக்கை, மதம் ஆகியவற்றின்   மூலாதாரத்தைப் பற்றி ஒரு பொருள்முதல்வாத வழியில் நாம் விளக்கிக்கூற     வேண்டும். மதத்தை எதிர்ப்பது என்பது வெறும் அருவமான சித்தாந்தப்    பிரச்சாரத்துடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. அந்த அளவிலான       பிரச்சாரத்திற்கு மட்டும் தாழ்ந்துவிடக் கூடாது. மதத்தின் சமூக வேர்களை     அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க இயக்கத்தின் உறுதியான     நடைமுறையுடன் இந்தப் பிரச்சாரத்தை இணைக்கப்பட வேண்டும் 

மேலே லெனின் கூறியதை புரிந்து கொள்வதற்கு விளக்கம் தேவையில்லை. அதன் சாரத்தை மட்டும் தொகுத்துக் கொள்வோம். மார்க்சிய தத்துவமான பொருள்முதல்வாதமானது, மதத்தின் மீது எதிர்ப்பைக் கொண்டுள்ளது. இயற்கையை அணுகுவதில் பயன்படுத்திய இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை வரலாற்றுத் துறைக்கும் சமூக விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்துகிறது. 

மதத்தைக் கட்டாயம் எதிர்த்துக் கம்யூனிஸ்டுகள் போராட வேண்டும். இதுவே பொருள்முதல்வாதத்தின் அரிச்சுவடியாகும். ஆனால் மார்க்சியம் இந்த அரிச்சுவடியுடன் நின்றுவிடுவதில்லை. மதத்தை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாக முன்வைக்கிறது. மத எதிர்ப்பு என்பது வெறும் ஆருவமான சித்தாந்தப் பிரச்சாரத்துடன் சுருக்கிக் கொள்ளக்கூடாது. மதத்தின் சமூக வேர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க போராட்ட இயக்கத்தின் உறுதியான நடைமுறையுடன் மத எதிர்ப்புப் பிரச்சாரத்தை இணைக்கப்பட வேண்டும். 

மார்க்சியத்தின் மத எதிர்ப்பென்பது மதத்தின் சமூக வேர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ நாத்திகம் மதத்தை ஒரு சித்தாந்தப் பிரச்சினையாகச் சுருக்குகிறது. அதற்கான சமூக வேர்களை அது கணக்கில் கொள்வதில்லை. 

நகரப் பாட்டாளி வர்க்கத்தின் பின்தங்கியவர்களிடமும், அரைப் பாட்டாளி வர்க்கத்தின் பரந்த பிரிவுகளிலும், விவசாயிகளில் பெரும்பாலார்களிடமும் மதம் ஏன் தனது பிடியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது? 

முதலாளித்துவ முற்போக்காளர் இந்தக் கேள்விக்கு “அறியாமை என்று பதிலளிக்கிறார். அத்தகையவர் இத்தோடு நில்லாமல், “மதம் ஒழிக, நாத்திகம் நீடூழி வாழ்க, நாத்திகக் கருத்துககளைப் பரப்புவதே நமது முதன்மை பணி என்று முழக்கம் இடுகின்றனர். 

இது சரியானதல்ல என்று மார்க்சியம் கூறுகிறது. இது குறுகிய முதலாளித்துவ மேம்பட்டவர்களின் மேலோட்டமான பார்வை என்றே இதை மார்க்சியம் கருதுகிறது. இது மதத்தின் தோற்றத்திற்கும் இருப்புக்கும் காரணமான வேர்களைப் புரிந்து கொள்ளாமல் கூறியதாகும். இந்த முதலாளித்துவ முற்போக்காளரின் கூற்றுப் பொருள்முதல்வாதம் வழியில் அல்லாமல் கருத்துமுதல்வாதம் வகையில் விளக்குகிறது. 

வேறொரு இடத்தில் லெனின் கூறியுள்ளார், “மதக்கேடுகளின் மிக ஆழமான மூலாதாரம், “இல்லாமையும் “கல்லாமையும் ஆகும். இந்தத் தீங்குகளைத்தாம், நாம் எதிர்த்து நின்று சமாளித்தாக வேண்டும்(உழைக்கும் மாதர்களின் முதலாவது அனைத்து ரஷ்ய காங்கிரசில் ஆற்றிய உரை) 

கல்லாமை என்பது இயற்கையைப் புரிந்து கொள்ள முடியாமையினாலும், இயற்கை சீற்றத்திற்குக் காரணத்தை அறியாத போதும் ஏற்படுவது. நவீன முதலாளித்துவத்தில் விஞ்ஞானப் புரிதல் அதிகரித்துள்ளது. அதனால் கல்லாமை என்கிற அறியாமை அல்லது இயற்கை பற்றிய அச்சம் முடிவுக்கு வந்துள்ளது. இப்போது வளர்ச்சி அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் இல்லாமை என்கிற பொருளாதாரக் காரணங்களே அதாவது சமூகப் பிரச்சினைகளே மதத்துக்குக் காரணமாகிறது. இந்தக் காரணமே நவீன முதலாளித்துவத்தில் மதத்தின் வேராக உள்ளது. 

சமூகத் தன்மையான மதத்தின் வேரை லெனின் தொகுத்துத் தருகிறார். 

உழைக்கும் மக்களின் சமூக வீழ்ச்சியடைந்த நிலை, 

முதலாளித்துவத்தின் குருட்டு சக்திகளுக்கு முகங்கொடுப்பதில் தொழிலாளர்களின் முழுயாகக் கிடைக்காத உதவியற்ற தன்மை, 

இது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் சாதாரண உழைக்கும் மக்கள் மீது மிக மோசமான துன்பத்தையும், மிகக் கொடூரமான வேதனையையும் ஏற்படுத்துதல், 

போர்கள், பூகம்பங்கள் போன்றவற்றைவிட ஆயிரம் மடங்கு அதிகக் கொடுமைகளை, முதலாளித்துவம் மக்கள் மீது செலுத்துகிறது. இதுவே சமூகத் தன்மையிலான பயத்தைத் தோற்றுவிக்கும் நவீன மதத்தின் வேர்கள். 

பயமே கடவுளை உண்டாக்குகிறது இயற்கையைப் புரிந்து கொள்ள முடியாமையினால் உருவான அச்சமாக இருந்தாலும் சரி, சமூகத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத அச்சமாக இருந்தாலும் சரி பயமே கடவுளைத் தோற்றுவிக்கிறது. 

இயற்கைச் சீற்றத்தில் இருந்து விடுபடக் கற்றுக் கொண்ட நவீன மக்கள், சமூகப் பொருளாதாரச் சீற்றத்தை அறிந்து கொள்ள முடியாமையினால் ஏற்படும் அச்சமே அந்தச் சமூகத்தின் ஆன்மீக உணர்வுக்கு அடிப்படையாக இருக்கிறது. 

சமூக அச்சத்தைப் பற்றி லெனின் மேலும் கூறுகிறார், முதலாளித்துவத்தின் கண்மூடித்தனமான சக்தியைக் கண்டு பயம், பொருளாதார வீழ்ச்சியை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாத, குருட்டுத் தனமே நவீன சமூகத்தின் மத இருப்புக்கான வேர்களாகும். 

கண்மூடித்தனமான முதலாளித்துவ சக்திகளினால், பாட்டாளிகளின் வாழ்க்கையிலும் சிறு உற்பத்தியாளர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுகிற “திடீரென்று, “எதிர்பாராத வகையில், “தற்செயலாகவும் அழிவையும், நாசத்தையும், ஓட்டாண்டி நிலையையும், விபச்சாரத்தையும், பட்டினிச் சாவையும் ஏற்படுத்துகின்ற சூழல் ஆகியவை அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது நவீன சமூகத்தின் மதத்தின் மூலவேராகும். 

இதைத் தொடக்கநிலை பொருள்முதல்வாதியாக இல்லாத, வளர்ச்சி அடைந்த பொருள்முதல்வாதிகள் இதைக் கட்டாயம் மனதில் கொள்ள வேண்டும். முதலாளித்துவ முற்போக்காளர்களைப் போல் மதத்தை வெறும் கல்வி புகட்டுவதின் மூலமாகவும், புத்தகங்களின் மூலமாகவும் மட்டுமே மதத்தை ஒழித்திட முடியும் என்று ஒரு பொருள்முதல்வாதி கருதமாட்டார். 

      (உழைக்கும்) இந்த மக்களே எழுச்சியுற்று மதத்தின் மூலவேர்களை எதிர்த்துப்       போராடக் கற்றுக் கொள்ளும் போதுதான், ஒன்றுபட்ட அமைப்பு வழியில்     திட்டமிட்ட உணர்வுபூர்வமான முறையில் முதலாளித்துவ ஆட்சியின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப் போராடுவதற்குக் கற்றுக் கொள்ளும்   பொழுது தான் மக்களுடைய உள்ளங்களில் இருந்து மதத்தைத் துடைத்தெறிய முடியும்.” 

மதத்தை வெறும் சித்தாந்தப் போராட்டமாக நடத்தாமல், அதை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து நடத்தும் போதுதான் உழைக்கும் மக்கள் எழுச்சியுற்று, உணர்வு பெற்று தங்களது உள்ளங்களில் குடிகொண்டுள்ள மதத்தைத் தூக்கி எறிவர். 

இவ்வாறு கூறுவதனால், மதத்திற்கு எதிரான கல்வி புகட்டும் நூல்கள் தேவையற்றவையோ, கேடுவிளைவிப்பவையோ அல்ல என்கிறார் லெனின். கம்யூனிசத்தின், நாத்திகப் பிரச்சாரம் வர்க்கப் போராட்டத்தை வளர்த்திடும் கடமைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். 

இந்தக் கூற்றை மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆகியோரின் தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் மறுத்திடலாம். மறுத்திடுபவர்கள், ஆயிரம் ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டு முன்னேற்றத்திற்கும், கலாச்சாரத்திற்கும் எதிரியாக இருக்கும் மதத்தை எப்படி வர்க்கப் போராட்டத்துக்கு உட்பட்டு நடத்துவது என்று கேள்வி கேட்பர். 

இது மார்க்சியத்தின் மீது தற்காலத்திலுள்ள ஆட்சேபணைகளில் முக்கியமான ஒன்றாகும். நம் நாட்டில் உள்ள பகுத்தறிவுவாதிகளும் இந்தக் கேள்வியைக் கேட்கின்றனர். இதற்கு லெனின் கூறுகிற பதிலே அவர்களுக்கும் பதிலாக இருக்கிறது. 

மதத்தை, வர்க்கப் போராட்டதுக்கு உட்பட்டு எப்படி நடத்துவது என்று கேட்பதானது மார்க்சிய இயக்கவியலைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறது. ஆட்சேகணைக்காரர்களைக் குழப்பிவிடும் இத்தகைய முரண்பாடு, மெய்யான வாழ்க்கையிலுள்ள ஓர் உண்மையான முரண்பாடாகும். இது ஒரு இயக்கவியல் முரண்பாடாகும். 

நாத்திகத்தைப் பற்றிய சித்தாந்தப் பிரச்சாரத்திற்கும் அதாவது பாட்டாளிகளின் சில பகுதிகளுக்கு இடையில் உள்ள மத நம்பிக்கையை ஒழிப்பதற்கும், இந்தப் பகுதிகளின் வர்க்கப் போராட்டத்தின் வெற்றி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் இடையில் ஒரு திட்டவட்டமான கண்டிப்பான எல்லைக் கோட்டைப் போடுவது என்பது இயக்கவியல் அற்ற முறையில் காரணக் காரியத்தை ஆராய்வதாகும். மதத்திற்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள இணப்பை மறுப்பதாகும். 

இதனை ஒரு உதாரணத்தின் மூலம் லெனின் விளக்குகிறார். 

ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் உள்ள பாட்டாளிகள் இரண்டு பிரிவாக இருக்கிறார்கள். ஒரு பிரிவில் உள்ள தொழிலாளர்கள், முன்னேறிய, வர்க்க உணர்வு பெற்றுள்ள கம்யூனிஸ்ட்டாக உள்ளனர். அவர்கள் நாத்திகர்கள் என்று வைத்துக் கொள்வோம். 

மற்றொரு பிரிவினர், பின்தங்கிய தொழிலாளர்கள், இன்றும் கிராமத்துடன் தொடர்பில் இருப்பவர்கள், அவர்கள் சர்ச்சுக்கும் போகிறார்கள், மேலும் அந்த இடத்தில் உள்ள பாதிரியாரின் நேரடியான செல்வாக்கின் கீழும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கிறித்துவத் தொழிலாளர் சங்கம் என்றும் ஒரு நிறுவத்தை அமைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 

இந்த நிலையில் அந்த இடத்தில், பொருளாதாரப் போராட்டத்தின் விளைவாக ஒரு வேலை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஒரு மார்க்சியவாதியின் கடமை, வேலை நிறுத்த இயக்கத்தின் வெற்றியை அனைத்துக்கும் மேலாக வைப்பதாகும். இத்தகைய போராட்ட நேரத்தில் நாத்திகத்தை முன்வைத்து, பிளவுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு எதிரான எத்தகைய பிளவையும் தவிர்ப்பது அவசியமானதாகும். 

இத்தகைய வேலை நிறுத்த போராட்ட நேரத்தில், நாத்திகப் பிரச்சாரம் செய்வது தேவையற்றதாகும், மேலும் கேடு விளைவிக்கக் கூடியதாகும் என்கிறார் லெனின். 

மதத்தைச் சித்தாந்தப் போராட்டத்தினால் வெல்ல துடிக்கும் முதலாளித்துவ முற்போக்காளர்கள், இந்தக் கூற்றைக் கேட்டவுடன் என்ன கருவார்கள் என்பதை லெனின் அடுத்துக் கூறுகிறார். 

பின்தங்கி தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை விட்டு ஓடி விடுவார்கள். தேர்தல்களில் ஒரு இடத்தை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் தான் கம்யூனிஸ்டுகள் மத எதிர்ப்பை பொருளாதாரப் போராட்டத்துக்கு அடுத்து வைத்தள்ளனர் என்று கருதுகிறார்கள். 

ஆனால் உண்மை இதுவல்ல. வர்க்கப் போராட்டத்தில் உண்மையான முன்னேற்றம் கிட்ட வேண்டும் என்பதற்கே கம்யூனிஸ்டுகள் இவ்வாறு கருதுகின்றனர். பொருளாதாரப் போராட்டம் நடைபெறும் களத்தில், மொட்டையான நாத்திகப் பிரச்சாரம் பாதிரியாரின் வலைக்குள் தொழிலாளர்களைச் சிக்கவைத்திடும். 

வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுவதில் தொழிலார்களிடையே பிரிவு ஏற்படுவதைக் காட்டிலும், கடவுள் நம்பிக்கை அடிப்படையில் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதையே பாதிரிமார்கள் விரும்புகின்றனர். மொட்டையான நாத்திகப் பிரச்சாரம், பாதிரிமார்கள் விரும்புவதையே நிறைவேற்றும். 

எந்த நிலையிலும் கடவுளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கருதுகிற அராஜகவாதிகள், அந்தப் பாதரிமார்களுக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தான் உண்மையில் சேவை செய்பவரா ஆகிறார்கள். பாதரிமார்களின் கண்ணோட்டம் முதலாளித்துவ வர்க்கத்தின் நலனையே பிரதிபலிக்கிறது என்பதை அறியாத அராஜவாதிகள் எப்போதும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு உதவி செய்கிறார்கள். 

ஒரு மார்க்சியவாதி ஒரு பொருள்முதல்வாதியாகத்தான் இருப்பர். அதாவது மதத்தின் எதிரியாகத்தான் பொருள்முதல்வாதி இருப்பார். ஆனால் அவர் ஒர் இயக்கவியல் பொருள்முதல்வாதியாகத்தான் இருக்க முடியும். அதாவது மதத்துக்கு எதிரான போராட்டத்தை ஒரு வறட்டுத்தனமாக அணுகமாட்டார். 

வர்க்கப் போராட்ட வழியில் உழைக்கும் மக்களை விழிப்படைய செய்வதுடன் இணைத்தே மதத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்துகின்றனர் இயக்கவியல் பொருள்முதல்வாதியான மார்க்சியவாதி. 

மத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதினால், மக்கள் வர்க்கப் போராட்டத்தை ஒதுக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் மார்க்சியவாதிகள் இவ்வாறு கூறவில்லை, வர்க்கப் போராட்டத்திற்கு உள்ளடக்கியே மத எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துகின்றனர். 

ஆனால், குட்டி முதலாளித்துவவாதிகள் மற்றும் மிதவாதப் படிப்பாளர்கள் மதத்துக்கு எதிரான போராட்டத்தைக் கண்டு அஞ்சுகின்றனர். இவர்கள் தங்களது கடமைகளை மறந்து, கடவுள் நம்பிக்கையுடன் சமரசப்படுத்திக் கொள்கின்றனர். யார் மனமும் புண்படக் கூடாது, யாரையும் பயமுறுத்தி விரட்டக் கூடாது “வாழு, வாழவிடு என்னும் சாமியார்களின் மந்திரத்தை கூறுவது போன்று மிகக்குறுகிய மனப்போக்குடன், மார்க்சிய அணுகுமுறையை இணைத்துக்கூறிட முடியாது. 

அனைத்துப் பிரச்சினையையும் மார்க்சியவாதிகள் வர்க்கப் போராட்டத்துக்கு உள்ளடக்கியே நடத்துகின்றனர். 

அடுத்து ஒரு முக்கியமான பிரச்சினையைப் பற்றி லெனின் கூறுகிறார். 

ஒரு மதகுரு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருக்கமுடியுமா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்விக்கு நிபந்தனையற்ற முறையில் ஆம் என்றே பதிலளிக்கப்படுகிறது. ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனுபவம் இதையே எடுத்துக்காட்டுகிறது. ரஷ்யாவின் நிலைமைகள் இவ்வாறு இல்லை என்பதை லெனின் பதிவு செய்கிறார். ரஷ்யாவைப் பொறுத்தளவில் எந்தவித நிபந்தனையுமற்ற முறையில் இதற்கு “ஆம் என்று விடை அளிப்பது சரியாக இருக்காது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியில் மதக் குருக்கள் எப்போதுமே உறுப்பினராக ஆக முடியாது என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. அதற்கு எதிரிடையான விதியையும் நடைமுறைப்படுத்த முடியாது. 

ஒரு மதகுரு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானால், கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைகளில் பங்குகொள்ள வேண்டும். கட்சியின் கடமைகளை உணர்வுபுர்வமாக நிறைவேற்ற வேண்டும். 

கட்சியின் வேலைத்திட்டத்தை எதிர்க்காமல் இருந்தால், ஒரு மதகுருவை கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள முடியும். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டத்துக்கும் மறுபக்கமாக அந்த மதகுருவின் மத உணர்வுக்கும் இடையில் முரண்பாடு உள்ளது என்பதை மறக்கக்கூடாது. அதனால் அந்த மதகுருவின் போக்குகளைக் கண்காணிக்க வேண்டும். 

அந்த மதகுரு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தபின், மதக்கருத்துக்களைக் கட்சிக்குள் பிரச்சாரம் செய்தால், அவரைக் கட்சியில் இருந்து கேள்விக்கு இடமில்லாத வகையில் நீக்க வேண்டும். 

அதே போல மத நம்பிக்கைக் கொண்ட தொழிலாளர்களைக் கம்யூனிஸ்ட் கட்சியில் அனுமதிக்க வேண்டும். அந்தத் தொழிலாளர்களின் மத உணர்வுகளைக் கொஞ்சம்கூடப் புண்படுத்தக்கூடாது. ஆனால் அவர்களைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்த்தது, கட்சியின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அவர்களைப் பயிற்றுவிப்பதற்கே ஆகும். அத்தகைய தொழிலாளி கட்சி திட்டத்துக்கு எதிராகப் போராடுவதை அனுமதிக்க முடியாது. கட்சிக்குள் சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும், ஆனால் அதற்கு ஓர் எல்லையுண்டு. கட்சியில் உள்ள பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்பட்ட மதக் கருத்துக்களைத் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க முடியாது. அவருடன் சேர்ந்து செயற்பட முடியாது. கட்சிக்கு விரோதமாகச் செயற்பட்டால் அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

இதற்கு அடுத்து லெனின் மற்றொரு உதாரணத்தைச் சுட்டிக்காட்டுகிறார். 

சோஷலிசமே எனது மதம் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அறிவித்தால், அதனை ஒரேவிதமாக அனைத்து சூழ்நிலைகளிலும் கண்டிக்கப்படக் கூடாது என்கிறார் லெனின். இந்தக் கருத்து மார்க்சியத்தில் இருந்து விலகிச் செல்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பின்தங்கிய மக்களுக்குப் பழக்கமான மொழியில் பேசுவதாக இருந்தால் அது வேறு விஷயம். ஒரு எழுத்தாளர் சிறந்த கடவுளை உருவாக்குதல் என்பதையும், கடவுள் கருத்தைத் தோற்றுவிக்கும் சோஷலிசத்தைப் பற்றிக் கூறினால் அது வேறுவிஷயம். 

முதலானவர் மீதான கண்டனம் வெறும் கடிந்துரையாக மட்டுமே இருக்கும். இரண்டாதவர் மீதான கண்டனம் மிகவும் அவசியமாகவும் அத்தியாவசியமாகவும் இருக்கும். முதலானவரின் “சோஷலிசமே எனது மதம் என்கிற கூற்று மதத்தில் இருந்து சோஷலிசத்துக்கு வருவதற்காகக் கூறப்பட்டதாகும். ஆனால் மற்றவரின் கூற்றுச் சோஷலிசத்தில் இருந்து மதத்திற்கு மாறிச் செல்வதற்கான கூற்றாகும். இரண்டையும் ஒரே விதமாகக் கண்டிக்க முடியாது. இரண்டாதவரின் கூற்று மிகவும் கண்டிக்கத் தக்கவையாகும். 

அரசை முன்வைத்து “மதம் ஒரு தனிப்பட்ட விவகாரம் என்று கூறப்பட்டதைச் சந்தர்ப்பவாதிகள் கட்சியைப் பொறுத்தளவிலும் “மதம் ஒரு தனிப்பட்ட விவகாரம் என்று திரித்துரைக்கின்றனர். இதனை லெனின் மறுத்துரைக்கிறார். 

மக்களுக்கு அபினியாக உள்ள மதத்தை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டத்தை, மத மூடத்தனத்தை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டத்தை, ஒரு தனிப்பட்ட பிரச்சினையாகக் கம்யூனிஸ்ட் கட்சி கருதமுடியாது. அவ்வாறு கருதுவது சந்தர்ப்பவாதமாகும். சில தற்காலிக நலன்களுக்காகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அடிப்படையான நலவுரிமைகளைப் பலி கொடுக்க முடியாது. 

மார்க்சியமும் திருத்தல்வாதமும் என்கிற நூலில் லெனின் இப்படிப்பட்டவர்களைத் திருத்தல்வாதி என்கிறார். 

மதத்துக்கு எதிரான போராட்டம் புரட்சிகர முதலாளிகளால் நடத்தப்பட்டது. மேற்கு ஐரோப்பாவில் நிலப்பிரபுவுக்கு எதிரான போராட்டத்தில் அவ்வாறுதான் நடைபெற்றது. ரஷ்யாவில் இந்தப் போராட்டத்தைத் தொழிலாளி வர்க்கத்தின் தோளில் விழுந்தது என்பதை விளக்குகிறார். 

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தேசிய முதலாளித்துவப் புரட்சி முடிந்தப் பின்பு, அதன் அரசுகள் மதகுருவாதத்திற்கு எதிராக, வேண்டும் என்று மிதமான தாக்குதல்கள் கொடுத்தது. இதன் மூலம் சோஷலிசத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சித்தது. 

இதன் தொடர்ச்சியாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்டுகளிடையே மதத்திற்கு எதிரான போராட்டத்தில் “அக்கறையின்மை என்கிற போக்கு தோன்றியது. இந்த அக்கறையின்மை நம் நாட்டு இடதுசாரிகளிடமும் பரவி இருக்கிறது. இந்த நிலைமைகளை நன்றாகப் புரிந்து கொண்டு கம்யூனிஸ்டுகள் மதத்தை இயக்கவியல் பொருள்முதல்வாத வழியில் எதிர்த்து விமர்சிக்க வேண்டும். 

ஐரோப்பிய நிலைமைக்கு மாறாக ரஷ்ய நிலைமை இருந்தது. பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியினை நடத்த வேண்டியதாயிற்று. ரஷ்ய நாடாளுமன்ற வடிவமான டூமாவில் “மதம் மக்களுக்கு அபின் என்று அறிவித்ததை லெனின் வரவேற்கிறார். இதுவே மதம் பற்றிய ரஷ்ய கம்யூனிஸ்ட்டுகளின் அடிப்படை ஆகும். 

அவர்கள் டூமாவில் மேலும் சற்று அதிகமாக நாத்திகத்தை விரிவாகப் பேசியிருக்க வேண்டும் என்று தான் நினைக்கவில்லை என்கிறார் லெனின். அவ்வாறு விரிவாக்கினால், அது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சிக்கு, மதத்திற்கு எதிரான போராட்டத்தை மிகைப்படுத்தும் அபாயத்தைக் கொண்டு வந்திடும். மதத்திற்கு எதிரான போராட்டத்தில் முதலாளித்துவ முற்போக்காளர்களின் அணுகுமுறைக்கும் கம்யூனிஸ்டுகள் அணுகுமுறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய முடியாமல் செய்துவிடும். 

கம்யூனிஸ்டுகளின் கடமை என்ன வென்றால், சர்ச்சுகள், மதகுருமார்களின் வர்க்கப் பாத்திரத்தை அம்பலப்படுத்துவது ஆகும். 

மதம் தனிப்பட்டவரின் விவகாரம் என்கிற கூற்றைச் சரியான பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஜெர்மன் சந்தர்ப்வாதிகள் இதனைத் திரித்துக்கூறினர். அரசை முன்வைத்துக் கூறப்பட்டது “மதம் தனிப்பட்டவரின் விவகாரம். கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தளவில் தனிப்பட்ட விவகாரம் கிடையாது. 

மக்களுக்கு அபினியாக உள்ள மதத்தை எதிர்த்து, நடத்த வேண்டிய போராட்டத்தை, மத மூடத்தனத்தை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டத்தை ஒரு தனிப்பட்ட பிரச்சினையாகக் கம்யூனிஸ்ட் கட்சி கருதவில்லை. சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக எங்கெல்ஸ் விமர்சித்ததைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று லெனின் இங்கே வலியுறுத்துகிறார். 

கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தளவில், மதம் தனிப்பட்டவரின் விவகாரம் அல்ல. மதத்தில் காணப்படும் வர்க்கத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும். வர்க்க சிந்தனைக்கு எதிராக உள்ள ஆன்மீக சிந்தனையை விமர்சிப்பது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். கடமை தவறியவர்களால் கம்யூனிசக் குறிக்கோளை அடைய முடியாது. இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவத்தை ஏற்றுக் கொண்டார்வர்களால் தான் அந்தக் கடமையைச் சரியாக நிறைவேற்ற முடியும். 

இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் மதம் பற்றி இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறையில் சிக்கல்கள் இருக்கின்றன. அண்மையில் “ஜனசக்தி இதழில் அனில் ரஜீம்வாலே அவர்களின் கருத்தை மட்டும் இங்கே பதிவிடுகிறேன். இது போன்ற கருத்தே இங்குள்ள பல கட்சிகளின் கருத்தாக இருக்கிறது. 

      இறை நம்பிக்கையாளராக இருப்பது அல்லது இறை மறுப்பாளராக இருப்பது என்பது மக்கள் மற்றும் உறுப்பினர்களின் ஜனநாயக உரிமை; அந்த உரிமையைப் பாதுகாக்கும் கட்சி, அவர்களின் தனிப்பட்ட சொந்த கருத்தோட்டத்தில் தலையிடுவதில்லை.”(ஜனசக்தி – 2021 ஏப்ரல் 18-24, பக்கம் 8-9) 

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களிடையேயும் மதம் ஒரு தனிப்பட்ட விவகரமாக அனில் ரஜீம்வாலே அவர்களின் கூற்று வெளிப்படுத்துகிறது. அனில் ரஜீம்வாலே அவர்களின் கூற்றை ஒத்த கருத்துடைய அனைவர்களின் கூற்றும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்கு முரணானது என்பதை இன்றைய வகுப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும். 

மதவுணர்வை புண்படுத்தக்கூடாது என்கிற எச்சரிக்கை மட்டுமே நம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்பற்றுகின்றன, இயக்கவியல் பொருள்முதல்வாத வழியில் மதத்தை எதிர்ப்பதற்கான திறமையை வெளிப்படுத்தாமலேயே இதுவரை உள்ளது. இதனை முறியடிக்க வேண்டுமானால் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை நன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டும். 

பெரியாரும், அம்பேத்கரும் மார்க்சின் கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் பெரியாரின் பகுத்தறிவுவாதமும், அம்பேத்கரின் கருத்துக்களும் இந்தியாவுக்கான கம்யூனிசம் என்று கூறப்படுகிறது. இதனை எதிர்கொள்வதற்கு இந்திய மதங்களை, இயக்கவியல் பொருள்முதல்வாதப் பார்வையில் விமர்சிக்க வேண்டும். தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, நா.வானமாமலை போன்றோர்களின் தொடக்க முயற்சி சிறப்பாக இருந்தாலும் அதனைத் தொடர்கின்ற பயிற்சி இல்லாமல், இடதுசாரிகளான நாம் இருக்கின்றோம். இந்த நிலைமையை நன்றாகப் புரிந்து கொண்டு செயற்பாட்டால் தான் பெரியாரியவாதிகளையும் அம்பேத்கரிஸ்டுகளையும் மார்க்சிய வழியில் எதிர்கொள்ள முடியும். 

மார்க்சியம், வர்க்க சார்பான மதத்தை விமர்சிப்பதற்குப் போதுமான வழிகாட்டுதல்கள் கொடுத்துள்ளது. அதனைப் பின்பற்றுவதே இடதுசாரி கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.