Saturday 19 December 2020

லெனின் எழுதிய “மார்க்சியமும் திருத்தல்வாதமும்”

 

(“செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில் (19-12-2020) எடுக்கப்பட்ட வகுப்பின் குறிப்பு) 

லெனின் எழுதிய “மார்க்சியமும் திருத்தல்வாதமும்” என்ற இந்த சிறு கட்டுரையில் மார்க்சியம் தோன்றியது பற்றியும் அதைத் தொடர்ந்து மார்க்சியத்தைத் திருத்தம் செய்யும் திருத்தல்வாதிகளின் போக்கை அம்பலப்படுத்தியும் எழுதியுள்ளார். இது ஒரு சிறு கட்டுரை 14 பக்கத்திற்குள் தான் இருக்கிறது. இந்த கட்டுரையின் கருத்தை சுருக்மாகவும் சாராமாகவும் பார்ப்போம். 

வடிவகணித (Geometrical) கோட்பாடுகள் மனித நலன்களை பாதிக்குமானால் அதை மறுப்பதற்கு நிச்சயம் முயற்சி செய்வார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. மதக்கருத்துக்கு முரணாக இயற்கை விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தோன்றும் போதெல்லாம் அதை மதக்ககாரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள், எதிர்ப்பார்கள். அதே போல மதக்கருத்துக்கும் - மதத்துக்கும் எதிரான கோட்பாடான மார்க்சியத்தை கண்டிப்பாக எதிர்ப்பார்கள் என்பதை மறுக்க முடியாது. 

மனிதக்குரங்கில் இருந்து தான் மனிதன் தோன்றினான் என்று டார்வின் கூறிய போது அந்த கண்டுபிடிப்பு, மதவாதிகளால் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது தெரிந்ததே. அதே போல உலகம் உருண்டை வடிவானது என்பதை கண்டுபிடித்தப் போது, உலகம் தட்டையானது என்று கருதிய மதவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். 

இப்படிப்பட்ட நிலையில் மார்க்சியக் கோட்பாட்டை நிலை நிறுத்துவதற்கு மார்க்சிய கோட்டை உருவாக்கியவர்கள் கடும் போராட்டத்தை நடத்த வேண்டி வந்தது. போராடி போராடி தான் மார்க்சிய அடிப்படைகள் நிலைநிறுத்தப்பட்டது. 

மார்க்சியம் தமது வாழ்வு முழுதும் போராடியே ஒவ்வொரு அடியாக முன்னேறி வந்துள்ளது. இந்த இடத்தில் மார்க்சியக் கோட்பாடு என்பது எது என்பதை சுமார் ஆறு வரிக்குள் லெனின் சுருக்கித் தந்துள்ளார். 

மார்க்சியம் என்றால் ஆட்சி மாற்றத்தையே பலர் நினைத்து வருகின்றனர். அந்த ஆட்சி மாற்றம் என்கிற புரட்சி நடத்துவதற்கு, முன்பு செய்ய வேண்டியது என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொண்டு அதனை செயற்படுத்தாமல், ஆட்சி மாற்றமோ புரட்சியோ நிறைவேற்ற முடியாது. 

மார்க்சியம் பற்றி லெனின் கூறிய அந்த சுருக்கத்தைப் பார்ப்போம். 

முதலாளித்துவ  சமூகத்தில் மிகவும் முன்னேறிய வர்க்கமான பாட்டாளி வர்க்கத்திற்கு அறிவொளி ஊட்ட வேண்டும். பாட்டாளி வர்க்கம் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். தற்போதுள்ள இந்த முதலாளித்துவ அமைப்பு, பொருளாதார வளர்ச்சிக் காரணமாக, தவிர்க்க முடியாமல் வீழ்த்தப்பட்டு, அந்த இடத்தில் புதிய சோஷலிச சமூக அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்பதை நிரூபிப்பதே மார்க்சிய கோட்பாடாகும். 

இதை நிரூபிக்கும் வகையில் மார்க்சிய கோட்பாட்டை புரிந்து கொண்டுள்ள கம்யூனிஸ்ட்டால் தான் லெனின் கூறுகிறபடி செயற்பட முடியும். அதனால் கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொள்பவர்கள் மார்க்சிய கோட்பாடான, தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் ஆகியவற்றை நன்றாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். 

இந்த மார்க்சியக் கோட்பாட்டை முதலாளித்துவ அறிவாளிகளும், பேராசிரியர்களும் எதிர்ப்பார்கள் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் எப்படி மார்க்சியத்தை எதிர்க்கிறார்கள் என்றால்? மார்க்சியம் பொய்த்துவிட்டது, காலாவதியாகிவிட்டது. 

உண்மையில் காலாவதியாகிவிட்ட பழைய அமைப்பினர் தான் நவீன கண்டுபிடிப்புகளான மார்க்சியத்தை பொய்த்துவிட்டது என்று கூவுகிறார்கள். 

இப்படி மார்க்சியத்தை அழித்து ஒழிக்க முயற்சிக்கிற போதெல்லாம் உண்மையில் மார்க்சியம் உறுதியுடனும் உயிர் துடிப்புடனும் ஓங்கி வளருகிறது என்று லெனின் செல்கிறார். இப்படி ஓங்கி வளர வேண்டும் என்றால் மார்க்சிய அடிப்படைகளைக் காப்பதிலும், அதற்கு எதிரான போக்கை விமர்சிப்பதிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும். 

தொழிலாளர்களிடையே நிலவும் பழைய கோட்பாடுகளுடன், மார்க்சியம் நிகழ்த்திய போராட்டம் அவ்வளவு எளிதாக நடைபெறவில்லை. அதாவது, எடுத்த எடுப்பிலேயே தொழிலார்களிடம் மார்க்சியக் கோட்பாடு நிலைப்படுத்த முடியவில்லை. 

குறிப்பாக இடது இளம் ஹெகல்வாதிகளுடன் தத்தவத்துறையிலும், புரூதோதனியத்துடன் பொருளாதாரத் துறையிலும், பக்கூனிடம் விஞ்ஞான சோஷலிசத்திலும் கணக்கு தீர்த்துதான் மார்க்சியம் தன்னை நிலைநிறுத்தியது. 

இதற்கு அடுத்து வந்த டூரிங்கையும் எங்கெல்ஸ் கோட்பாட்டு வழியில் கடுமையாக எதிர்த்து தான் மார்க்சியம் நிலைநிறுத்தப்பட்டது. 

இந்த வரலாறு 1840 ஆண்டுகளில் தொடங்கி 1890 களில் முடிவடைகிறது. இந்தப் போராட்டம் மார்க்சியத்திற்கு எதிரான கோட்பாட்டுடனான போராட்டமாகும். அடுத்த அறை நூற்றாண்டு போராட்டம் என்பது வேறுவகைப்பட்டது என்று லெனின் கூறுகிறார். அது எப்படி என்றால், மார்க்சியத்திக்கு எதிரான கோட்பாளர்கள், மார்க்சியத்திற்குள் நுழைந்து மார்க்சியத்திற்கு விரோதமாய் -  திருத்தல்வாதமாய் செயற்பட்டது. 

இந்தப் போக்கு இன்று அதிகமாகக் காணப்படுகிறது என்று கூறலாம். ஆனால் அதற்கு எதிரானப் போராட்டம் தான் சரியாக நடத்தப்படவில்லை. சிதைப்பவர்களை இனம் கண்டு அவர்களுக்கு பதிலளிப்பது தான் மார்க்சிய அடிப்படைகளைக் காப்பதாகும். ஆனால் 1890 ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட இந்த உள்ளிருந்து மார்க்சியத்தை சிதைக்கும் போக்கை, அன்றைய மார்க்சியர்கள் குறிப்பாக பிளாகனவ், லெனின் போன்றோர்கள் சிறப்பாக எதிர் கொண்டனர். 

உள்ளிருந்து போராட ஏன் முனைந்தார்கள் என்பதை லெனின் மிகவும் சிறப்பாக கூறியுள்ளார். 

மார்க்சியத்திற்கு மாறான சோஷலிசம் மார்க்சியத்தால் விமர்சிக்கப்பட்டு மறுக்கப்பட்டவுடன், அது முன்பு போல தனது சொந்த அடிப்படையில் இருந்து மார்க்சியத்துடன் போராடுவதற்கு பதிலாக, மார்க்சியத்தின் பொது அடிப்படைகளை ஏற்றுக் கொண்டது போல், போக்கு காட்டிவிட்டு, மார்க்சிய அடிப்படைகளை திருத்துவதாக, தமது போராட்டத்தை மாற்றிக் கொண்டது. அதனால் திருத்தல்வாதத்தின் சித்தாந்தத்தை பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

மார்க்சியத்தின் மூன்று பிரிவுகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் ஆகியவற்றில் நடைபெற்ற திருத்தல் போக்கைப் பற்றி லெனின் சுருக்கமாக இந்தக் கட்டுரையில் கூறியுள்ளார். 

தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் ஆகியவற்றில் எவ்வாறு திருத்தல்வாதம் செயற்பட்டது என்பதையும், அது எவ்வாறு தவறானது என்பதையும் தொடர்ந்து பார்ப்போம் 

தத்துவம் 

திருத்தல்வாதிகளுக்குத் தேவைப்படுகிற சித்தாந்தத்தை முதலாளித்துவ அறிஞர்களே தருகின்றனர். மார்க்சியத்தைக் கண்டு மிரண்டு போன முதலாளித்துவ அறிஞர்கள் நவீன-கான்ட்டியத் தத்துவப் போக்குகளை மீண்டும் கொண்டுவந்தனர். மார்க்சின் பொருள்முதல்வாதத்தைவிட கான்டின் கருத்துமுதல்வாதமே சிறந்தது என்று கூறுவதுடன், இந்த முதலாளித்துவ அறிஞர்கள், “கான்டுக்குத் திரும்புவோம்” என்று முழுக்கமிட்டனர். உடனே திருத்தல்வாதம் இந்த முதலாளித்துவ அறிஞர்களின் முழக்கத்தை ஏற்று, மார்க்சிய அடிப்படைகளை அதற்கு ஏற்ப, திருத்த முனைந்தது. 

பாதிரிமார்கள் முன்பு ஆயிரம் முறை கூறியதையே முதலாளித்துவ அறிஞர்களும், திருத்தல்வாதிகளும் திரும்பவும் கூறுகின்றனர். இதில் எதுவும் புதியது கிடையாது. பொருள்முதல்வாதம் நெடுங்காலத்துக்கு முன்பே தவறானது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று காலங்காலமாக கூறிய அதே பொய்யை மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். இவர்கள் ஹெகலை செத்த நாய் என்று ஒதுக்கித் தள்ளினர், ஆனால் ஹெகலைவிட ஆயிரம் மடங்கு அற்பமானதும் படுமோசமானதும் ஆன கருத்துமுதல்வாதத்தை உபதேசம் செய்தனர். அது மட்டும் இல்லாது இயக்கவியலை புறக்கணித்தனர். இயக்கவியலுக்கு மாறாக பரிணாமவாததை கையாண்டனர். 

டார்வின் படைத்த பரிணாமம் வேறு இந்த பரிணாமவாதம் என்பது வேறு. டார்வினுடைய பரிணாமத்தில் நிலைமறுப்பு உண்டு. ஆனால் இந்த பரிணாமவாதத்தில் எந்த முறிவும் இல்லாது அதே வழியில் மாறிக் கொண்டும், வளர்ச்சிப் பெற்றக் கொண்டும் செல்லும். ஆனால் இயக்கவியலானது, இன்று நிலைத்து நிற்பது குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் பழையதாய் போய், புதியதற்கு இடம் கொடுக்கும் என்று கூறுகிறது. மாற்றத்தை இயக்கவியல் விளக்குகிறது. வளர்ச்சியை மட்டும் பரிணாமவாதம் கூறுகிறது. 

மதம் பற்றிய விஷயத்தில் இந்தத் திருத்தல்வாதிகள் படுமோசமான திருத்தத்தை வைத்தனர். அரசைப் பொருத்தளவில் மதம் தனிநபர்களின் விவகாரமாக பார்க்க சொன்னதை, கட்சியில் உள்ள கம்யூனிஸ்ட்களுக்கும் மதம் ஒரு தனிநபர்களின் விவகாரமாக திருத்தியது. அதாவது சமூகத்தில் ஒருவர் எந்த மதத்தைப் பின்பற்றவதற்கும், பின்பற்றாமல் இருப்பதற்கும் அதாவது நாத்திகராக இருப்பதற்கும் உரிமை வேண்டும். இதில் அரசு தலையிடக்கூடாது. இவ்வாறு மார்க்சியம் கூறியதை கட்சிக்குள்ளும் மதம் என்பது தனிநபரின் சுதந்திரம் என்று திரித்துக்கூறப்பட்டது. இந்தத் திருத்தல் போக்கைத்தான் இங்கே லெனின் மறுக்கிறார்.  

அரசியல் பொருளாதாரம் 

அரசியல் பொருளாதாரத்தில் திருத்தல்வாதம் என்ன செய்தது என்று பார்ப்போம். 

திருத்தல்வாதிகள் உழைக்கும் மக்களிடம் தவறான கருத்துக்களைக்கூறி வசப்படுத்த முயன்றனர். பெரு அளவிலான உற்பத்தியே வளர்ச்சி அடையும், சிறு அளவிலான உற்பத்தி, பெரு அளவிலான உற்பத்தியின் வளர்ச்சியினால் அழிந்து போகும் என்று கூறிய மார்க்சியம் பொய்யாகிவிட்டது. 

மார்க்சியம் கூறியது போல் எதுவும் நடைபெறவில்லை. அதே போல மார்க்சியம் கூறுய மிகை உற்பத்தியினால், உருவாகும் பொருளாதார நெருக்கடி தற்போது அரிதாகிவிட்டது. கார்டல்கள் டிரஸ்டுகள் ஆகியவற்றின் திட்டமிட்ட உற்பத்தியினால் பொருளாதார நெருக்கடி தவிர்க்கப்பட்டுவிட்டது, உழைப்பை பெறுபவர்களுக்கும் உழைப்பை செலுத்துபவர்களுக்கும் இடையே காணப்பட்ட வர்க்கப் பகைமையின் கடுமை குறைந்து தணிந்துவிட்டது, அதனால் முதலாளித்துவம் அழிந்து சோஷலிசம் வரும் என்கிற “அழிவுக் கோட்பாடு”க்கு ஆதாரம் இல்லாது போய்விட்டது என்று திருத்தல்வாதிகள் கூறினர். முடிவில் மதிப்புக் கோட்பாட்டிலும் திருத்தத்தைப் புகுத்தியது. 

இதற்கு எதிரானப் போராட்டமானது, முன்பு எங்கெல்ஸ் டூரிங்குக்கு எதிராக நடத்திய போராட்டம் அளவுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று லெனின் கூறியுள்ளார். 

புள்ளிவிவரங்களும், சிறிய அளவு உற்பத்தி பற்றி கூறியதும் தவறானது, திருத்தல்வாதிகள் தமக்கு சாதகமாக சித்தரிக்கப்பட்டது, உண்மை நிலைமை இதற்கு மாறாக இருந்தது. 

சிறிய அளவு உற்பத்தி என்கிற இயற்கைப் பொருளாதாரத்தின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். 

உணவுத் தரத்தை மோசமாக்கியது, பட்டினியையும், உழைக்கும் வேலை நேரத்தை அதிகப்படுத்துவதும், கால்நடைகளின் தரத்தையும் பராமரிப்பையும் சீர்கேடு அடையச் செய்வது இந்த சிறிய அளவு உற்பத்தியே. 

முதலாளித்துவ உற்பத்தி தோன்றிய போது, எப்படி கைத்தொழில் உற்பத்தி தன்னை நிலைநிறுத்துவதற்குப் போராடி தோற்றதோ அதே போலத் தான் முதலாளித்துவத்தின் விஞ்ஞானம் தொழில்நுட்பம் போன்ற வளர்ச்சிக்கு முன்னால், சிறிய அளவு உற்பத்தி அழிவுறவே செய்யும். 

திருத்தல்வாதிகளை எதிர்த்திடும் போதே விவசாயிகளுக்கு கம்யூனிஸ்டுகள் கூறிட வேண்டிய உண்மை ஒன்று இருக்கிறது, அது என்னெவென்றால், முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முன், சிறிய உற்பத்தியாளர்கள் நிலைத்து நிற்க முடியாது, விவசாயத்தில் சிறு சாகுபடிக்கு வாய்ப்பு குறைந்து-மறைந்து போகும் என்கிற உண்மையை, விவசாயிகள் ஏற்கும்படி விளக்குவது, கம்யூனிச அரசியல் பொருளாதாரத்தின் கடமையாகும் என்று லெனின் கூறியுள்ளார். 

லெனின் எழுதிய வார்த்தைகளை அப்படியே அப்படியே பார்ப்போம்:-

“…முதலாளித்துவத்தில் சிறு உற்பத்தியாளர் அழியாது நிலைப்பது முடியாது என்பதையும் முதலாளித்துவத்தில் விவசாயியின் சிறு சாகுபடிக்குக் கதிமோட்சமில்லை என்பதையும் பாட்டாளியின் கண்ணோட்டத்தை விவசாயி ஏற்பது அவசியம் என்பதையும் தெளிவுபடுத்திக் காட்டுவதும் சோஷலிஸ்டு அரசியல் பொருளாதாரத்தின் கடமையாகும்.” 

திருத்தல்வாதிகள், விஞ்ஞானப் புரிதல் இன்றி, பாட்டாளி வர்க்கப் பார்வைக்கு மாறான, சிறு உடைமையாளர்களின் போக்கை – அதாவது முதலாளி வர்க்கத்தினரின் போக்கை விவசாயிகள் ஏற்கும்படி செய்கின்றனர்.   

பொருளாதார நெருக்கடியைப் பற்றிய திருத்தல்வாதிகளின் கருத்து படு மோசமாக இருக்கிறது. 

பொருளாதார நெருக்கடிகள் காலாவதியாகிவிட வில்லை. வளமையான காலத்தைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகள் வரும் என்பதை 2008 ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் உறுதிப்படுத்தியது. இந்த எதார்த்த உண்மையை திருத்தல்வாதிகள் மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள். 

பொருளாதார நெருக்கடியின் கால வரிசையில் தான் மாற்றம் ஏற்பட்டுள்ளது, முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவாக பொருளாதார நெருக்கடிகள் உருவாகும் என்பது, தவிர்க்க முடியாது என்பதை இன்றளவும் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. 

கார்டல்களும், டிரஸ்டுகளும் உண்மையில் பொருளாதார நெருக்கடியை தவிர்த்துவிடவில்லை, இதிலும் உற்பத்தியின் அராஜகம், அதாவது திட்டமிடாத உற்பத்தியின் விளைவாக பொருளாதார நெருக்கடி தோன்றவே செய்கின்றன. தொழிலாளர்களின் வாழ்க்கையில் பாதுகாப்பு இன்மையும், மூலதனத்தின் ஒடுக்கு முறையையும் தீவிரமாக தொடரவே செய்கிறது. முன்பைவிட வர்க்கப் பகைமை மேலோங்கியே காணப்படுகிறது, அதனால், முதலாளித்துத்தின் அழிவு தவிர்க்க முடியாது என்று கூறிய நிலைமைகள் உண்மையில் மாறவே இல்லை முன்பைவிட மோசமாகத்தான் காணப்படுகிறது. 

தொடர்ந்து வரும் பொருளாதார நெருக்கடிகள், திருத்தல்வாதிகளின் போக்கை மறுத்துவருகிறது. 

இந்த இடத்தில் லெனின் அந்தக் காலத்தில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிதி நெருக்கடிகள் அதிகரித்ததையும், அதன் காரணமாக தொழிலாளர்கள் வேலை இழந்ததையும் குறிப்பிட்டு, திருத்தல்வாதிகளின் போக்கை மறுத்துள்ளார். இந்த பொருளாதார நெருக்கடி அண்மைய காலத்திலும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எற்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம். இன்றுவரையில் திருத்தல்வாதிகளின் கூற்று பொய் என்பதை தொடர்ந்துவரும் பொருளாதார நெருக்கடிகள் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதனை தொழிலாளி வர்க்கம் மறந்திடக் கூடாது என்று லெனின் கூறுகிறார். 

திருத்தல்வாதப் போக்கு என்பது, ஒரு தொடர் போக்காகும், விளக்கங்கள் வேறுபட்டாலும் இந்தத் திருத்தல்வாதப் போக்கு எல்லாம் ஒரே வகையைச் சேர்ந்ததுதான். தொழிலாளர்கள் இத்தகைய திருத்தல்வாதப் போக்கு, மார்க்சிய விஞ்ஞானத் தன்மைக்கு மாறனது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

இதுவரை நாம் பார்த்தது, அரசியல் பொருளாதாரத் துறையில் திருத்தல்வாதிகளின் போக்கு. அடுத்து அரசியலில் அவர்களின் போக்கைப் பற்றிப் பார்ப்போம். 

அரசியல் 

இங்கே அரசியல் என்று கூறுவது விஞ்ஞான சோஷலிசத்தைப் பற்றி தான். 

அரசியல் துறையில், மார்க்சிய அடிப்படையான வர்க்கப் போராட்டம் பற்றிய கருத்தில் திருத்தம் செய்தனர். வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ சமூகத்தில் ஜனநாயகமும், அனைத்து மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் வர்க்கப் போராட்டத்தின் அடித்தளத்தையே அகற்றிவிட்டது என்று திருத்தல்வாதிகள் கூறினர். இதுகூட புதிய கருத்தல்ல, மிவாதிகள் பலகாலமாக கூறிய பழைய கருத்தே ஆகும். இன்றைய சமூகத்தில், பொருளாதார வேறுபாடு கூடிக் கொண்டு தான் செல்கிறது, குறையவே இல்லை என்பதே உண்மையாகும். 

மிகவும் ஜனநாயக குடியரசுகளிலும்கூட நாடாளுமன்றம் என்பது ஒடுக்குமுறை கருவியாகவே செயல்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம். அனைவருக்கும் வாக்குரிமை என்பது எந்த வகையிலும் வர்க்க ஒடுக்கு முறையை அகற்றிடவில்லை. 

சோஷலிச இயக்கத்தில் திருத்தல்வாதிகளின் வேலை இறுதி நோக்கம் பற்றியதில் காணப்பட்டது. அதாவது இயக்கமே அனைத்தும், இறுதி நோக்கம் ஒரு பொருட்டல்ல என்று இயக்கவியலைப் புறக்கணித்து, பரிணாமவாதத்தைக் கையாண்டு சோஷலிசப் புரட்சியை மறுதலித்தனர். 

திருத்தல்வாதம் மீண்டும் மீண்டும் எழுவதற்கு சமூகத்தில் அதன் வர்க்க வேர்கள் இருப்பதே காரணமாகும். அதனால் மார்க்சிய அடிப்படையைக் காப்பதற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.   

இந்த நூலில் வலது திருத்தல்வாதத்தைப் பற்றியே லெனின் அதிகம் பேசியுள்ளார். இடதுதிரிபுகள் அன்றைய நிலையில் ஒரு சர்வதேசப் போக்கில் காணப்படவில்லை. அதனால் இந்தக் கட்டுரையில் லெனின் வலதுசாரி திருத்தல்வாத்தை பரிசீலிப்பதுடன் நிறுத்திக் கொண்டார். 

திருத்தல்வாதம் தொடர்ந்து கொண்டே இருப்பதற்குக் காரணம், புதிய சிறு உற்பத்தியாளர்கள் தவிர்க்க முடியாமல், பாட்டாளி வர்க்க அணிகளுக்குள் தள்ளப்படுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் மீண்டும் குட்டி முதலாளித்துக் கண்ணோட்டம் தோன்றுவதற்கு இதுவே காரணம். சமூக மாற்றம் ஏற்படும்வரை இந்த நிகழ்வுப் போக்கு நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும். 

அதனால், புரட்சியை நடத்துவதற்கு மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் பாட்டாளி வர்க்கத்தவராக மாறுவது அவசியம் என்று கூறுவது மிகவும் பெரியத் தவறாகும். இந்தத் திருத்தல்வாதிகளுடன் நடத்தும் போராட்டம் நிறைவு பெற்றால் தான், புரட்சி நடத்த முடியும் என்று கருதுவதும் தவறாகும். இரண்டும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். திருத்தல்வாதிகளை வீழ்த்துவம், சமுக மாற்றத்திற்கான போராட்டமும் இணைந்தே நடத்தப்பட வேண்டும். 

      புரட்சிக் கட்டத்தில் சர்ச்கைக்கு உரிய அனைத்துப் பிரச்சினைகளையும் கூர்மை அடையும், அப்போது எல்லா கருத்து வேறுபாடுகளையும் ஒன்று குவியச் செய்யும், அந்த மும்முரமான போராட்டத்தின் போது நண்பர்களிடம் இருந்து பகைவர்களை இனங்கண்டு பதிலடி கொடுக்கப்படும். புரட்சிக்கட்டத்தில் இதுவரை நண்பர்கள் என்று கூறிய புதிய பகைவர்களுடனும் போர் நடைபெறும். 

      திருத்தல்வாதத்தை எதிர்த்துப் புரட்சிகர மார்க்சியம் நடத்தும் சித்தாந்தப் போராட்டமானது, சிறு முதலாளித்துவப் பகுதியினரின் அனைத்து ஊசலாட்டங்களையும், பலவீனங்களையும் கடந்து, இறுதியில் தமது லட்சியத்தில் முழு வெற்றியை அடையும் என்று லெனின் இந்தக் கட்டுரையை முடிக்கிறார். 

நமது செயற்பாடும் லெனின் வழிகாட்டுதலின்படி சென்று, நமது லட்சியத்தை வெற்றிபெற செய்வோம்.

தத்துவமும் மதமும்

(“செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில் (12-12-2020) எடுக்கப்பட்ட வகுப்பின் குறிப்பு) 

தத்துவத்திற்கும் மதத்திற்கும் உள்ள ஒற்றுமையும் வேறுபாடும் 

தத்துவம் - மதம் பற்றிய சிறு அறிமுகத்தைத் தான் இன்று பார்க்கப் போகிறேன். இந்த அறிமுகத்தின் போது தத்துவம் மதம் பற்றிய புதிய கலைச் சொற்களையும் தெரிந்து கொள்ளப் போகிறோம். புரியாத கலைச் சொற்கள் வந்தால் கவலைப்பட வேண்டாம். இன்று காதில் விழுகின்ற கலைச் சொற்கள், பிறருடன் பேசும் போதோ, நீங்களாகவே படிக்கும் போதோ படிப்படியாக புரிந்து கொள்ளலாம். 

தத்துவத்திற்கும் மதத்திற்கும் ஒற்றுமையும் இருக்கிறது வேற்றுமையும் இருக்கிறது. தத்துவத்தில் உள்ள ஒரு பிரிவுக்கும், மதத்திற்கும் நெருக்கம் இருக்கிறது. அதனால் தான் முதலில் தத்துவத்தைத் தெரிந்து கொண்டு, அடுத்து மதத்தைப் பற்றிப் பார்க்கலாம். 

தத்துவமும் மதமும் மேலை நாடுகளில் தனித்தனியாகப் பிரிந்து காணப்படுகிறது. நம் நாட்டில் தத்துவமும் மதமும் இணைந்து-பிணைந்து காணப்படுகிறது. 

மேலைநாடுகளில் தத்துவாதிகள் என்றால் அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்றவர்களும், மதம் என்றால் அதனை நிலைநிறுத்திய ஏசுநாதர், நபிகள் நினைவுக்கு வருவார்கள். 

இந்தியாவில் அத்வைத தத்துவத்தை நிலைநிறுத்திய ஆதிசங்கரரே சனாதன மதத்துக்கு தலைவராகவும் இருக்கிறார். அதே போல வைணவ மதத்தின் தலைவராக ராமானுஜரும், அந்த மதத்தின் தத்துவமான விசிட்டாத்வைதத்திற்குத் தலைவரும் அவரே ஆவார். தமிழகத்தில் உள்ள சைவ மதமும் இதே போலத்தான். இந்த மதத்தைச் சைவம் என்றும் இதன் தத்துவத்தைச் சைவ சித்தாந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இந்தச் சைவ மதத்திற்கு ஒத்த தவலைவரை முன்னிருத்துவதில்லை. ஆனால் சைவ தத்துவமான சைவ சித்தாந்தத்திற்கு மெய்கண்ட தேவர் முன்னிருத்தப்படுகிறார். 

மதமும் தத்துவமும் இணைந்து காணப்படுவது இந்தியாவில் மட்டும்தான். மேலை நாடுகளில் அவ்வாறு இல்லை. இந்த வேறுபாட்டை முதலில் மனதில் கொள்ள வேண்டும். 

தத்துவமும் மதமும் ஒன்றிணைந்து காணப்பட்டாலும் இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. அதில் முக்கியமானது உலகைப் படைத்தவரை ஒரு உருவமாகப் பார்ப்பது மதம், உலகைப் படைத்தவரை உருவமற்ற சக்தியாகப் பார்ப்பது தத்துவம். 

இங்கே சக்தி என்பது நம் நாட்டில் “பிரம்மம்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதற்கு “Absolute” என்று அழைக்கிறார்கள். 

மதத்தில் உள்ள உருவக் கடவுளிடம் "இது வேண்டும்" "அது வேண்டும்" என்று பிரார்த்தனை இடம் பெறும். தத்துவத்தில், சில பயிற்சியின் மூலம் தத்துவம் கூறுகிற நிலையை அடைவது பற்றி அதில் பேசப்படுகிறது. 

ஆன்மீகத் தத்துவம் – கருத்துமுதல்வாதம் 

இதுவரை நாம் பேசிக் கொண்டிருப்பது ஆன்மீக தத்துவம், இதனைக் கருத்துமுதல்வாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆன்மீகத்தை மறுக்கிற தத்துவமும் இருக்கிறது அதன் பெயர் பொருள்முதல்வாதம். 

தத்துவத்தில் பல போக்குகள் இருக்கிறது. எவ்வளவு போக்குகள் இருந்தாலும் அதனை இரண்டு பிரிவுக்குள் அடக்கிவிடலாம். ஒன்று ஆன்மீகவாதம் அதாவது கருத்துமுதல்வாதம், மற்றொன்று ஆன்மீகத்தை மறுக்கின்ற பொருள்முதல்வாதம். இந்தப் பொருள்முதல்வாதத்தை நாத்திகவாதம் என்றும் கூறலாம். ஆனால் பொருள்முதல்வாத தத்துவத்தில் நாத்திகம் மட்டுமே கூறப்படவில்லை. பல விஷயங்கள் அதில் பேசப்படுகிறது. 

தத்துவத்தில் உள்ள கருத்துமுதல்வாதம் – பொருள்முதல்வாதம் என்கிற இருபெரும் பிரிவுகளைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம். 

கருத்துமுதல்வாதம் – பொருள்முதல்வாதம் 

உலகம் படைக்கப்பட்டதா? இல்லை அது இயற்கையிலேயே என்றும் உள்ளதா? என்ற கேள்விக்கு இரண்டுவிதமான பதில் கிடைக்கிறது. அந்தப் பதிலைக் கொண்டே ஒன்றை கருத்துமுதல்வாதம் என்றும் மற்றொன்றை பொருள்முதல்வாதம் என்றும் கூறுகிறோம். 

உலகம் படைக்கப்படவில்லை, அது என்றும் உள்ளது. மாற்றத்திற்கு உட்பட்டு மாறிக் கொண்டே இருக்கிறது என்று கூறுவது பொருள்முதல்வாதம். 

உலகம் எதாவது ஒரு வகையில் படைக்கப்பட்டது என்று கூறுகிற அனைத்தும் கருத்துமுதல்வாதம். அதாவது எதோ ஒரு சக்தியினால் இந்த உலகம் படைக்கப்பட்டது என்று கூறுவது கருத்துமுதல்வாதம் ஆகும். இதில் பல கோக்குகள் இருக்கிறது. பல போக்குகள் இருந்தாலும், அனைத்தையும் இரு பிரிவுக்குள் அடங்கிவிடலாம். ஒன்று புறநிலை கருத்துமுதல்வாதம் மற்றொன்று அகநிலை கருத்துமுதல்வாதம். 

புறநிலை கருத்துமுதல்வாதம் - அகநிலை கருத்துமுதல்வாதம் 

உலகப் படைப்புக்குக் காரணமான அந்தச் சக்தி புறத்தில், இந்த உலகிற்கு அப்பால் இருப்பதாகக் கருதுவது புறநிலை கருத்துமுதல்வாதம். படைக்கிற சக்தி பௌதீக உலகிற்கு அப்பால் இருப்பதாகக் கூறுவதால், இதற்குப் புறநிலைக் கருத்துமுதல்வாதம் என்று பெயர் பெறுகிறது. அதனால் தான் கருத்துமுதல்வாதத்தை ஆங்கிலத்தில் Metaphysics என்று அழைக்கப்படுகிறது. Meta என்றால் "அடுத்து" அல்லது "அப்பால்" என்று பொருள். அதாவது பௌதீக உலகத்திற்கு அப்பால். 

படைப்பு சக்தியை இந்த உலகிற்குப் புறத்தில் உள்ளதாகக் கருதுவதால் இந்தத் தத்துவத்திற்குப் புறநிலைக் கருத்துமுதல்வாதம் என்று பெயர். அந்தச் சக்தியை புறத்தில் காணாது அகத்தில், அதாவது மனதில் இருப்பதாகக் கொள்வது அகநிலைக் கருத்துமுதல்வாதம். 

நாம் நினைப்பதே புறத்தில் தோன்றுகிறது. புறத்தில் எதுவும் இருப்பதில்லை, நமது மனமே புறத்தைப் படைக்கிறது. இது தான் அகநிலை கருத்துமுதல்வாதம். 

புறநிலைக் கருத்துமுதல்வாதத்திற்கு ராமானுஜரின் விசிட்டாத்வைத தத்துவதையும் அகநிலைக் கருத்துமுதல்வாதத்திற்கு ஆதி சங்கரருடைய அத்வைத தத்துவத்தையும் குறிப்பிடலாம். பொதுவாக உலகம் முழுவதும் காணப்படுவது புறநிலை கருத்துமுதல்வாதமே.

தத்துவத்தின் இரு பிரிவுக்குக் காரணம் 

தத்துவத்தை ஏன் கருத்துமுதல்வாதம் – பொருள்முதல்வாதம் என்று பிரிக்கப்படுகிறது? என்ற கேள்வி எழுப்புவது இயல்பானது. 

கருத்துமுதல்வாதம் இந்த உலகப் பிரச்சினைகளை விளக்குவதோடு நின்றுவிடுகிறது. பணக்காரனாக இருப்பதற்கும், ஏழையாக இருப்பதற்கும் அவரவர் போன ஜென்மத்தில் செய்த செயல்களே காரணம் என்று விளக்கம் மட்டுமே கொடுக்கிறது கருத்துமுதல்வாதம். 

ஆனால் பொருள்முதல்வாதம் இந்த உலகப் பிரச்சினைகளுக்குக் காரணத்தைக் கூறுவதோடு அதனை மாற்றுவதற்கான வழியினையும் கண்டுபிடித்துத் தருகிறது. 

சமூக மாற்றத்தைக் கோருவது பொருள்முதல்வாதம், சமூகத்தை இருக்கும் நிலையிலேயைக் காக்க விரும்புவது கருத்துமுதல்வாதம். 

தத்துவத்தின் சார்பு 

பொருள்முதல்வாதத்தை ஏன் தொழிலாளர்களின் தத்துவம் என்று கூறுகிறோம். சமூக மாற்றம் என்பது உழைப்பாளர்களின் நலனை பிரதிபலிப்பதனால் பொருள்முதல்வாதத்தைத் தொழிலாளர்களின் தத்துவம் என்று கூறப்படுகிறது. 

இந்த யதார்த்த சமூகத்தைத் தக்க வைப்பதற்குப் போராடுவதனால், இந்தக் கருத்துமுதல்வாதத்தை ஆளும் வர்க்கத்திற்கு உரியதாகக் கூறப்படுகிறது. 

இந்த இரு தத்துவத்திற்கும் இடையே உள்ள வர்க்க சார்பை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

இந்த வகுப்பு தத்துவ அறிமுகம் என்பதனாலே, இந்த வேறுபாட்டை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். வேறொரு வகுப்பில் விரிவாக இதனைக் காணலாம். 

இயக்கவியல் பொருள்முதல்வாதம்- வரலாற்றியல் பொருள்முதல்வாதம் 

மார்க்சிய தத்துவமான பொருள்முதல்வாதம் இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம், மற்றொன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம். 

இந்த உலகமும் இயற்கையும் எப்படி எல்லாம் நிலைபெற்று இருக்கிறது, எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை ஆராய்வது இயக்கவியல் பொருள்முதல்வாதம். 

சமூகம் எவ்வாறு தோன்றியது, எவ்வாறு நிலைபெறுகிறது, எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பதை ஆராய்வது வரலாற்றியல் பொருள்முதல்வாதம். 

மதம் 

இதுக்கு முன்னால் கருத்துமுதல்வாதம் பற்றிப் பேசினோம், அந்தத் தத்துவத்திற்கு நெருக்கமானது மதம். 

கருத்துமுதல்வாதம் இந்தப் பிரபஞ்சம் ஒரு சக்தியினால் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறுகிறது. மதம் அந்தச் சக்தியை ஒரு கடவுளாக உருவகம் செய்கிறது. அந்தச் சக்திக்கு மனித உருவம் கொடுக்கிறது. 

சைவ மதம் அந்த இறைவனைச் சிவபெருமான் என்கிறது, வைணவம் நாராயணன் என்கிறது. கிறித்துவத்தில் கர்த்தர் அல்லது ஏசு என்று கூறப்படுகிறது. இஸ்லாத்தில் அல்லா என்று கூறப்படுகிறது. ஆனால் இஸ்லாத்தில் இறைவனுக்கு உருவம் கொடுப்பதில்லை. அந்த அல்லாவின் சக்தியைப் பற்றி மட்டுமே பேசப்படுகிறது. அல்லாவை உருவமாகப் பார்ப்பதை அவர்கள் ஏற்பதில்லை. 

இந்த உலகம் அந்த இறை சக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று மதம் கூறுகிறது. அந்தக் கட்டுப்பாட்டை மீறி இந்த உலகத்தில் ஒன்றையும் செய்திட முடியாது. அவன் அன்றி ஒர் அணுவும் அசையாது. இது தான் மதத்தின் அடிப்படைக் கருத்தாகும். 

மார்க்சியப் பார்வையில் மதம் 

மதத்தை மார்க்சியம் வேறு வகையில் பார்க்கிறது. 

மதம் ஒரு காலத்தில் தோன்றியது என்பதே மார்க்சியப் பார்வை. அப்படி என்றால் மதம் தோன்றாக் காலம் என்று ஒன்று உண்டா? ஆம் இருந்தது. 

மதம் இல்லாச் சமூகத்தை பழங்குடி சமூகம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து நாகரீக சமூகமும் இந்தப் பழங்குடி சமூகத்தைக் கடந்து தான் வந்துள்ளது. நேரடியாக எந்தச் சமூகமும் நாகரீகம் பெற்றுவிடவில்லை. 

அந்தப் பழங்குடி சமூகத்தில் கடவுளோ, மதமோ கிடையாது. இந்த இரண்டும் இல்லாத அந்தச் சமூகம் எப்படி இருந்தது என்பதது என்பதை அடுத்துப் பார்ப்போம். 

அந்தப் பழங்குடி சமூகத்தில் மக்கள் தங்களுக்குள் வேறுபாடு இன்றி வாழ்ந்தார்கள். அவர்களிடம் பணக்காரன் - ஏழை என்ற வேறுபாடு கிடையாது. அப்படி இருந்தும் அந்த வாழ்க்கை மிகவும் கடினமானதாகத் தான் இருந்தது. 

வேட்டையில் எந்த உணவும் கிடைக்காமல் சில நாட்கள் பட்டினி கிடக்க வேண்டிய சூழ்நிலை அவ்வப்போது ஏற்பட்டது. அந்நிலைமைகளில் பூமியில் உள்ள கிழங்குகளைத் தோண்டி எடுத்து உண்பார்கள். அதுவும் கிடையாத சூழ்நிலையையும் அன்றைக்கு அவர்கள் சந்தித்தார்கள். 

அந்தப் பழங்குடி சமூகத்தில் பணக்காரர் - ஏழை என்ற வேறுபாடு தான் கிடையாது. ஆனா அவர்கள் கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. 

வேட்டை ஆடுவதற்கு அன்றைக்கு அவர்களிடம் இருந்த கருவிகள் மிகவும் சாதாரணமானது. அதை வைத்துக்கொண்டு அன்றாட உணவுத் தேவையை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. உணவுகளைத் தேடுவது மட்டுமே அன்றைக்கு வேலையாக இருந்தாலும், முழு நாள் தேடியும் உணவு அவர்களுக்குச் சொற்பமாகத் தான் கிடைத்தது. 

பழங்குடி மக்கள் சேர்ந்து தான் வாழ்ந்தார்கள், ஆனால் அது ஒரு சிறிய கூட்டமாகத்தான் இருந்தது. விலங்கிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளச் சேர்ந்தே வாழ வேண்டிய, சூழ்நிலை தான் அப்போது இருந்தது. மேலும் அந்தச் சிறு குழு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளச் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயமும் இருந்தது. 

ஒவ்வொருவரும் அந்தக் கூட்டத்தில் இருக்கிற அனைவருக்காகவும் உழைத்தார்கள். கிடைக்கிற அனைத்தையும் சமமாகப் பங்கிட்டார்கள். அன்றைய நிலையில் அவர்கள் ஒரு கூட்டு வாழ்க்கை முறையில் தான் வாழ்ந்தார்கள். இந்தக் கூட்டு வாழ்க்கைக் காரணமாக அன்றைய பழங்குடி சமூகத்தை ஆதி பொதுவுடைமை சமூகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 

ஒவ்வொரு தனிநபரும் அந்தக் கூட்டத்துக்கு அவசியமாக இருந்ததால், ஒவ்வொரு தனிநபரையும் காப்பாற்ற வேண்டி வந்தது. எந்த ஒரு நபரையும் இழக்காமல் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையே அன்னைக்கு இருந்தது. அன்றைய சிந்தனைகளும் கருத்துக்களும் இந்தச் சூழ்நிலைக்குத் தக்கபடி இருந்தது. 

அவர்களின் கூட்டு வாழ்க்கைச் சிந்தனையை, அவர்வர்களின் வாழ்க்கைச் சூழ்நிலைகளே ஏற்படுத்திக் கொடுத்தது. 

அன்றைய பழங்குடி சமூகங்களுக்கு இடையே கடுமையான சண்டைகள் நடைபெற்றது. தோல்வி அடைந்த பிற பழங்குடி மக்களை, தம் இனத்தோடு சேர்த்துக் கொள்ளாமல், அவர்களைக் கொலை செய்துவிடுவார்கள். இருக்கிற உணவு பற்றாக் குறையினால் போர் கைதிகளைப் பராமறிக்க முடியவில்லை. அதனால் பிடிபட்டவர்களை அன்றைக்குக் கொலை செய்துவிடுவார்கள். இது தொடக்கல கால நிலைமை. 

இனக் குழு பெருகிய போது, தோல்வி அடைந்த இன மக்களை, முன்பு போலக் கொலை செய்யாமல், அவர்களை அடிமையாக வைத்துக் கொண்டார்கள். 

இந்தப் பழங்குடிகளிடம் மதம் காணப்படவில்லை என்று பார்த்தோம். ஆனால் அந்த மக்களிடம் ஒன்று இருந்தது. அதை ஆங்கிலத்தில் Magic என்று கூறுவார்கள். இதைத் தமிழில் மாயவித்தை என்று சொல்லாம். தங்களுக்கு உணவாக எதுவும் கிடையாக்காத போது, அந்த நிலைமைகளைச் சமாளிப்பதற்கு உருவானதே இந்த மாயவித்தை. அன்றைய சமூகத்தில் பயன்படுத்திய உற்பத்திக் கருவிகளின் எளிய தன்மையின் வெளிப்பாடே மாயவித்தை. 

இயற்கையைச் செயற்பட வைக்க உதவக்கூடிய ஒரு பொய்த்தோற்ற உத்தியே மாயவித்தை. பொய்த் தோற்றம் என்று கூறுவதால் இது ஒரு மதப் போக்காகப் பார்க்கக்கூடாது. இது ஒரு மன கிளர்ச்சிக்காக அந்த மக்கள் செய்தனர். இதை எப்படிச் செய்தனர் என்பதைப் பார்ப்போம். 

மழை பெய்யாத காலங்களில், அதனால் ஏற்பட்ட அசாதரணச் சூழ்நிலையில், அவர்கள் கூட்டாக மழை வேண்டி நடனம் ஆடுவார்கள். மழை பெய்தது போலவும், அதன் விளைவாகக் கிழங்குகள் நிறையக் கிடைத்த போலவும் நடிப்பார்கள். இந்த நடிப்பு ஒரு வகையில் மனக் கிளர்ச்சி ஏற்பட்டு, அந்த அசாதாரணச் சூழ்நிலையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார்கள். இது தொடக்கலாம். 

அதற்கு அடுத்த, சமூக வளர்ச்சி கட்டத்தில் "மழையே வா" என்று கட்டளை இட்டார்கள். இது அவங்களோட இயலாமையை வெளிப்படுத்தினாலும், எந்த இயற்கையை மீறிய சக்தியிடம் வழிபாடு செய்யவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால் தான் இதை மதம் என்று சொல்வதில்லை. 

இந்தப் பழங்குடி சமூகத்தில் மதம் தோன்றவில்லை என்பதைத் தெரிந்து கொண்டோம். அப்படி என்றால் எந்தச் சமூகத்தில் மதம் தோன்றியது. 

இந்தப் பழங்குடி சமூகத்தின் ஆதித வளார்ச்சிக் கட்டத்தில் மதம் தோன்றியது. 

அந்த நேரத்தில் உற்பத்திக் கருவிகள் சற்று மேம்பாட்டு இருந்தது, அதனுடன் உழைப்புப் பிரிவினை ஏற்பட்டுவிட்டது. இந்த உழைப்புப் பிரிவினை தான் அன்றைய வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது. 

குறிப்பிட்ட சிலர் வேட்டையாடுவதும், மற்ற சிலர் ஆடு, மாடுகளை மேய்ப்பதுமான வேலைப் பிரிவினை முதலில் தோன்றியது. இந்த வேலைப்பிரிவினையினால் உணவு உற்பத்தியில் சற்று உபரி ஏற்பட்டது. இந்த உபரி அன்றைய சமூகத்தின் தேவையை முழுமையாக நிறைவேற்றிவிட வில்லை என்றாலும், பழைய நிலைமையை ஒப்பிடும்போது சற்று உபரி ஏற்பட்டது. 

இந்த உபரியை பயன்படுத்திக் கொள்வதில் புதிய மாற்றம் ஏற்பட்டது. முன்பு கூட்டாக உழைத்தனர், கிடைப்பதை சமமாகப் பங்கிட்டனர். இப்போது வேலைப்பிரிவினைக்கு ஏற்ப பங்கீடு மாறியது. சமமான பங்கீடு என்ற முறை கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. 

கூட்டாகச் செய்த மாயவித்தை இப்போது ஒருசிலரால் மட்டுமே செய்யப்பட்டது. அதில் தனிச்சிறப்பும் தேர்ச்சியும் வளர்ந்தது. பழங்குடிகளுக்கு இடையே இணைப்பு ஏற்பட்டது, இந்த இணைப்பு போர்களாலும், வேறு சில காரணங்களாலும் ஏற்பட்டது. அவ்வாறு ஏற்படும் போது அவர்கள் செய்து வந்த தொழிலையே தொடர்ந்து செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டது. இந்த உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் தான் சாதி தோன்றியது. சாதி தோன்றியதற்குப் பல காரணங்களில் இதுவும் ஒன்று. 

வேலைப் பிரிவினையின் வளர்ச்சியினால், உடல் உழைப்பை செலுத்துபவர்களுக்கும் அதனை நிர்வகிப்பவர்களுக்கும் இடையே வேறுபாடு தோன்றத் தொடங்கியது. இந்த உடல் உழைப்பு இல்லாதவர்கள் உபரியை கையக்கப்படுத்தினர். 

இந்தக் கையப்படுத்துவதற்கு நியாயம் கற்பிக்கவே மதம் தோன்றியது. உடலால் உழைப்பவர்களை இழிவாகப் பார்க்கும் போக்குத் தொடங்கியது. மூளை உழைப்பு உயர்ந்ததாகக் கருதப்பட்டது. 

உழைப்பை செலுத்துவர்களுக்கும் உழைப்பை வாங்குபவர்களுக்கும் இடையே உள்ள கோபதாபங்களை மூடிமறைக்கவே மதம் தோன்றியது. மதமும் அரசும் ஒரே காரணத்தின் அடிப்படையில் தான் தோன்றியது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வர்க்கம் தோன்றிய போது மதம் தேவைப்பட்டது. 

வர்க்கம் தோன்றிய போது மதம் தேவைப்பட்டது 

மதத்தில் சுரண்டும் வர்க்கத்தின் நலன்கள் பிரதிபலிக்கிறது. மதமும், அரசும் அனைவருக்கும் பொதுவானது என்று அது கூறியது. ஆனால் அதன் வர்க்கத் தன்மையை மார்க்சியமே வெளிப்படுத்தியது. 

சமூகத்தில் சிலர் பணக்காரர்களாகவும், பலர் ஏழைகளாகவும் இருப்பதற்குக் காரணத்தைக் கூறுவதில் மதத்தின் வர்க்க சார்பு அடங்கி இருக்கிறது. பணக்காரர்கள் இன்று பணக்காரர்களாக இருப்பதற்குக் காரணம், போன ஜென்மத்தில் அவர்கள் செய்த புன்னியக் காரியமே, என்று மதம் கூறியது. உழைப்பாளிகள் நாள் முழுதும் உழைத்தும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்காததற்கு, போன ஜென்மத்தில் இவர்கள் செய்த பாவ காரியம் என்று மதம் கூறியது. 

அத்தோடு நிற்கவில்லை. அடுத்த ஜென்மத்தில் நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமானால் இந்த ஜென்மத்தில், பலனை எதிர் பார்க்காமல் உழைக்க வேண்டும். இருப்பதைக் கொண்டு தியாக உணர்வோடு, இந்த ஜென்மத்தில் வாழ்ந்தால், அடுத்த ஜென்மத்தில் நலமாக வாழலாம். இது ஒரு சாதாரணக் கருத்தாகத் தெரியலாம், ஆனால் இதில் தான் மதத்தின் வர்க்கத் தன்மை அடங்கி இருக்கிறது. 

மதத் தோற்றத்திற்கு இரண்டு காரணங்கள் 

மதத்தின் தோற்றத்துக்கு மார்க்சியம் இரண்டு காரணத்தைக் கூறுகிறது. ஒன்று கல்லாமை மற்றொன்று இல்லாமை. 

இயற்கைப் பற்றிய அச்ச உணர்வு கல்லாமையினால் ஏற்பட்டது. 

சமூகத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுக்குக் காரணத்தை அறியாமலும், பொருளாதாரப் போக்கைப் புரிந்து கொள்ளாமையினாலும் உருவான அச்ச உணர்வினால் மத உணர்வு தோன்றியது. இது இல்லாமை என்கிற அடிப்படைக் காரணத்தால் தோன்றிய அச்சமாகும். 

இயற்கைப் பற்றிய அறியாமையினால் உருவான அச்சமும், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் பற்றிய அறியாமையினால் ஏற்படுகிற அச்ச உணர்வும் சேர்ந்து, மதம் தோன்றுவதற்குக் காரணமாகிறது. 

கல்லாமை, இல்லாமை ஆகிய இரண்டுமே மதத்தின் தோற்றத்திற்கு அடிப்படைக் காரணமாகும். 

மதத்தை வெறும் மூட நம்பிக்கையாக, மார்க்சியம் பார்க்கவில்லை. மதம் தோன்றுவதற்கான புறநிலைக் காரணம் இருக்கிறது. அந்தப் புறநிலை இருக்கும் வரை மதமும் அதே போல அரசும் இருக்கும். புறநிலை மறையும் போது மதமும் அரசும் மறைந்து போகும். மதம் தோன்றுவதற்கான முக்கியமான புறநிலைமைகளே அரசு தோன்றுவதற்குக் காரணமாக இருக்கிறது. 

கல்லாமை மறைந்துவிட்டது 

மதம் தோன்றுவதற்கான இரண்டு காரணங்களில் ஒன்று, இன்றைய நிலையில் மறைந்து விட்டது என்று சொல்லலாம், இயற்கைப் பற்றிய புரிதல் இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக வளர்ந்து இருக்கிறது. படிப்பறிவு குறைந்த, அல்லது விஞ்ஞானப் படிப்பு இல்லாதவர்களிடமே இந்தக் காரணங்கள் இன்றும் நீடிக்கிறது. அதனால் இயற்கைப் பற்றிய அறியாமை இன்றைய நிலையில் நீங்கிவிட்டதாகக் கூறலாம். 

ஆனால் பொருளாதார ஏற்றத் தாழ்வினால் ஏற்படுகிற அச்சவுணர்வு இன்னும் நீடிக்கிறது. சமூகத்தில் படிப்பறிவு பெற்றவர்களிடையிலும் இன்று மத உணர்வு இருப்பதற்குக் காரணம் இதுவே ஆகும். விஞ்ஞானிகளிடமும் கூட மத உணர்வு இருக்கிறது. 

2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருதார நெருக்கடிகள் தோன்றியதற்கு காரணத்தை பலரால் அறிந்து கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளுக்கு மேல் வளர்ச்சி அடைந்த வங்கிகள் சில நாட்களுக்குள் சரிந்து வீழ்ந்தன. இதற்கான காரணத்தை அறியாமல் இருந்தவர்களுக்கு, இதனால் ஏற்படுகிற அச்ச உணர்வு, அவர்களை இயற்கை மீறிய சக்தியிடம் தஞ்சம்புக வைத்தது. 

மதத்தின் மறைவு 

மதத்தின் மறைவு என்பது வர்க்க சமூகத்தின் மறைவோடு இணைந்துள்ளது. அப்போது அரசும் உலர்ந்துவிடும், மதமும் தேவையற்றுப் போய்விடும். அந்த வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் ஏற்றத்தாழ்வுக்கு இடமே இருக்காது. வர்க்கங்கள் முழுமையாக ஒழிந்து போய்யிருக்கும். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மறைந்து போயிருக்கும். 

மக்களை வேறுபடுத்தும் பொருளாதாரக் காரணங்கள் இல்லாத அந்தக் காலத்தில் மதம் தேவைப்படப் போவதில்லை. வர்க்க வேறுபாடு இல்லாத அந்தச் சமூகத்தில். வர்க்க ஒடுக்கு முறைக்குக் காரணமான மதம், அரசு ஆகியவை தேவை இல்லாமல் மறைந்து போய்விடும். 

இங்கே சுருக்கமாக அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மேல் விளங்கங்களுக்கு மார்க்சிய தத்துவத்தைப் படித்தறிய வேண்டும். கண்டிப்பாக அரசியல் பொருளாதாரத்தையும் இத்துடன் இணைந்து கற்க வேண்டும். 

இன்று அறிமுகமாகப் பெற்றது, மார்க்சிய தத்துவம், மார்க்சிய பொருளாதாரம் பற்றிய புரிதல் கிடைக்கும் போது, இந்த அறிமுகத்தைக் கடந்து தெளிவைப் பெறலாம். 

இன்று நாம் பார்த்தது தத்துவம் - மதம் பற்றி அறிமுகமே. கம்யூனிஸ்ட் கட்சியின் மதத்தின் மீதான அணுகுமுறை என்ன? என்பது அவசியமான ஒன்றாகும். அதை ஒரு தனி வகுப்பில் பார்க்கலாம். 

Saturday 5 December 2020

வகுப்பு 5:- “காரல் மார்க்ஸ்” – சோஷலிசம் (-லெனின்)

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட வகுப்பின் குறிப்பு) 

லெனின் எழுதிய “காரல் மார்க்ஸ் (மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்) என்ற கட்டுரையைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். 

போன வகுப்பில் மார்க்சின் பொருளாதாரப் போதனை என்ற பகுதியில் உள்ள உபரி மதிப்பு என்பதைப் பார்த்தோம். 

முதலாளித்துவ உற்பத்தி முறையில் உழைப்பைச் செலுத்துகிற பாட்டாளி மற்ற தொழிலாளர்களைவிட வேறுபட்டவராக இருக்கிறார். பணம் எவ்வாறு ஒரு வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் மூலதனமாக மாறுகிறதோ அதே போல உழைப்பாளர்களின் உழைப்பு என்கிற உழைப்பு சக்தி, வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் ஒரு சரக்காகப் பரிணமித்துள்ளது. “கூலி முறையில் இயங்கும் இந்த முதலாளித்துவச் சமூகத்தில் பாட்டளிகளின் விடுதலை என்பது கூலி உயர்வினால் ஏற்படப் போவதில்லை, இந்தக் கூலி முறை ஒழிப்பில் தான் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை அடங்கியிருக்கிறது. முதலாளித்துவத்தை வீழ்த்துவது பாட்டாளியின் மனம் சார்ந்த விஷயம் அல்ல, அது முதலாளித்துவத்தின் உள்முரண்பாட்டின் முதிர்வினால் ஏற்படுகிறது. அதைச் செய்து காட்டுவது பாட்டாளி வர்க்கம். 

இது போன வகுப்பின் சுருக்கம். 

அடுத்து இன்றைய வகுப்புக்குச் செல்வோம். 

லெனின் “சோஷலிசம் என்ற இந்தப் பகுதியில், முன்பு கூறியதை சுருக்கமாக எடுத்துக்காட்டுகிறார். முதலாளித்துவச் சமூகம் அதன் பொருளாதார இயக்க விதியில் இருந்தே, சோஷலிச சமூகமாக மாற்றம் பெறுகிறது. அத்துடன் இது தவிர்க்க முடியாததாகும் என்றும் கூறியுள்ளார். 

தவிர்க்க முடியாதது என்று கூறிவிட்டதனால் இதற்கான போராட்டம் தேவையில்லை என்று லெனின் கூறவில்லை. அதற்கான போராட்டத்தை நடத்துவதற்கே வழிகாட்டுகிறார். அந்தப் போராட்டத்துக்கான செயற்தந்திரத்தை வகுப்பது பற்றி இந்தப் பகுதியின் இறுதியில் கூறியுள்ளார். 

உழைப்பு சமூகமயமாக்கப்படுவது முன்பைவிட அதிக வேகத்துடன் முன்னேறிவருகிறது. மார்க்ஸ், லெனின் ஆகியோரின் மறைவுக்குப் பிறகு உலகமயமாதல், நீதி மூலதனக் கட்டத்தில் பெருவீத உற்பத்தியின் வளர்ச்சி முதலாளித்துவத்தில் அதிகரித்துள்ளதை நாம் காண்கிறோம். இன்று உழைப்புச் சமூகமயம் ஆக்கப்பட்டிருப்பது வெகு தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சமூகமயமான உற்பத்திக்கும், தனிவுடைமை அடிப்படையிலான வினியோக முறைக்கும் உள்ள முரண்பாடே, தவிர்க்க முடியாதபடி சோஷலிசத்தை நோக்கி செல்வதற்கான பொருளாயத அடிப்படையாகும். 

முன்பே கூறியபடி இந்தச் சமூக மாற்றத்திற்கான வழியாக மார்க்சிய வழியில் லெனின் நமக்கு விளக்குகிறார். வளர்ச்சி அடைந்த முதலாளித்துவத்தின் முரண்பாட்டில் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகும் பாட்டாளி வர்க்கத்திற்கு, முதலாளித்துவமே பயிற்சியை அளிப்பதற்கான களத்தைத் தந்துள்ளது. களம் இருந்தால் மட்டும் போதாது, தொழிலாளிர்களின் முன்னணிப்படையான கம்யூனிஸ்ட் கட்சி அதற்கான பயிற்சியை அளிக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்கள், பயிற்சி கொடுப்பதற்கான திறத்தைப் பெற்றிருக்க வேண்டும். 

பயிற்சி பெற்ற பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து பல்வேறு வழிகளில் போராட்டத்தை நடத்துகிறது. இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியும், வளர்ச்சியும் தவிர்க்க முடியாத வகையில், அரசியல் ஆட்சி அதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கம் கைப்பற்றுவதை நோக்கமாகவே கொண்டுள்ளது. 

பாட்டாளி வர்க்க ஆட்சியில், சமூக மயமான உற்பத்திச் சாதனங்களைச் சமூகச் சொத்தாக மாற்றப்படும். உடைமைப் பறித்தோரின் உடைமை பறிப்பது நிகழ்ந்தே தீரும். அவ்வாறு பாட்டாளி வர்க்க ஆட்சி நடைபெறும் போது, உழைப்பாளியின் வேலை நேரத்தைக் குறைப்பது முதற்கொண்டு, பல்வேறு நலன்கள் தொழிலாளி வர்க்கத்திற்கு உரிய வகையில் மேம்படுத்தப்படும்.

 தொழிலாளிக்கும், விவசாயத்துக்கும் இடையே வேறுபாடு முதலாளித்துவத்தோடு முறிவுக்கு வருகிறது. 

உடல் உழைப்பு குறைந்து, இயந்திரத்தை இயக்கும் வேலை வந்த பிறகு பெண்களையும், குழந்தைகளையும் முதலாளித்துவம் உழைப்பில் ஈடுபட வைக்கிறது. இவ்வகையில் இதுவரை தொடர்ந்து வந்த தந்தை வழி குடும்பத்தில் உடைப்பை ஏற்படுத்துகிறது. 

லெனின் இந்தச் சோஷலிசம் என்கிற பகுதியில், மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய நூல்களில் இருந்து பெரியப்பெரிய மேற்கோள்களைப் பதிவிட்டுள்ளார். மூலதனம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், டூரிங்குக்கு மறுப்பு, பிரான்சிலும் ஜெர்மனியிலும் விவசாயப் பிரச்சினை ஆகிய நூல்களில் இருந்து லெனின் சோஷலிசத்தை விளக்குகிறார். 

மார்க்சின் “மூலதனம் என்கிற நூலின் அடிப்படையில் லெனின், தந்தைவழிக் குடும்பங்களில் ஏற்பட்டுவருகிற மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகிறார். 

குடும்பங்களுக்கு வெளியில்; பெண்களும், இளைஞர்களும், ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் முதலாளித்துவ இயந்திர உற்பத்தியில் ஈடுபடுவதின் மூலம். உயர்வான குடும்ப வடிவத்துக்கும் பால்உறவு வடிவத்துக்கும் புதிய பொருளாதார அடித்தளத்தைத் தந்துள்ளது. 

அதாவது முதலாளித்துவ உற்பத்திக்கு முன்பு பெண்களை, வீடுகளில் முடங்கி வைத்திருந்தது. முதலாளித்துவத்தில் இயந்திரப் பயன்பாடு அதிகாகும் போது, அதற்குத் தேவைப்படுகிற உழைப்பாளர்கள், குறைந்த கூலியில் கிடைப்பதற்காகப் பெண்கைளை வீட்டுச் சிறையில் இருந்து முதலாளித்துவம் வெளி கொணர்ந்தது. 

மார்க்சியம் சென்ற காலத்தை விளக்குவதோடு, எதிர்காலத்தை அச்சமின்றி முன்னறிந்து கூறி, அதனைச் சாதிப்பதற்குத் தையிரியமான நடைமுறை பணிகளை மேற்கொள்கிறது. 

தேசங்கள் என்பது சமூக வளர்ச்சியில் முதலாளித்துவச் சகாப்தத்தில் தவிர்க்க முடியாதபடி தோன்றுகிற விளைவாகும். நாடு வேறு தேசம் வேறு இரண்டும் ஒன்றல்ல. முன்பு அரசர்களால் நாடுகள் பலவற்றைப் பிடித்துத் தமது நாட்டோடு சேர்த்துக் கொள்வர். இதனை நாடு என்று தான் கூற வேண்டும் தேசம் என்று கூறிட முடியாது. இப்படிப் பிடிக்கப்பட்ட நாட்டில் உள்ள மக்கள் பல்வேறு குழுக்களாகத் தனித்தனியே பிடிப்பின்றிக் காணப்படுவர். 

ஆனால் தேசம் என்பது ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு, பொருளாதார ஒன்றிணைப்பு உள்ளதாகக் காணப்படும். ஸ்டாலின் தேசத்திற்குப் பொதுவான ஒரு வரையறைத் தந்துள்ளார். 

ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்று வழியில் உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும். 

இது ஒரு பொதுவரையறை தான். பல மொழிகளைக் கொண்ட நாட்டை லெனின் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார். இங்கே நாம் நாட்டுக்கும் தேசத்துக்கும் உள்ள வேறுபாட்டை மட்டும் புரிந்து கொள்வோம். 

சர்வதேசியவாதிகளான பாட்டாளிகளின் தேசம் பற்றி லெனின் இங்கே விளக்குகிறார். பாட்டாளி வர்க்கத்தின் தேசிய கண்ணோட்டம், முதலாளித்துவப் பொருளில் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் தேசிய தன்மையை லெனின் கூறுகிற வார்த்தையிலேயே பார்ப்போம்.

 

தொழிலாளி வர்க்கம் “தன்னையும் தேசத்துக்குள் ஒரு பகுதியாக்கிக் கொள்ளாமல் தானும் “தேசிய தன்மை பெறாமல் (இந்தச் சொல்லின் முதலாளித்துவப் பொருளில் அல்ல) அது பலம் பெற முடியவில்லை, பக்குவம் பெற முடியவில்லை, உருவாக முடியவில்லை. 

இதை ஏன் லெனின் கூறிய வார்த்தைகளையே பயன்படுத்தி உள்ளேன் என்றால், இங்கே லெனின் எழுதியதைப் படித்துவிட்டு, லெனின் பாட்டாளிகளின் சர்வதேசத்தை மட்டுமே பேசுயுள்ளார், என்று கூறிவிட்டு, அனைத்து நாட்டு விடுதலையைப் பற்றிப் பேசிவிட்டு, தமது நாட்டின் விடுதலையை மறுதலிப்பவர்கள் இன்று நிறையப் பேர் உள்ளனர். அதனால், இதனை விரிவாகப் பேச வேண்டி வருகிறது. 

முதலாளித்துவத்தின் வளர்ச்சி மேலும் மேலும் தேசிய தடைகளை உடைத்து எறிகிறது. தேசிய தனி வாழ்வை அழிக்கிறது, தேசிய பகைமைகளுக்குப் பதிலாக வர்க்கப் பகைமைகளை ஏற்படுத்துகிறது. இந்தப் பொருளில் தான் லெனின் வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் “தொழிலாளிகளுக்குத் தேசம் ஒன்றும் கிடையாது என்று “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறியது முழுமையான உண்மை என்கிறார். இதனை அப்படியே நேர் பொருளில் புரிந்து கொள்ளக்கூடாது. எந்தச் சூழ்நிலையில் கூறப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டால் தன் இதன் பொருள் விளங்கும்.

 

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை:- “நாடுகளையும் தேசிய இனங்களையும் ஒழிக்க விரும்புவதாகக் கம்யூனிஸ்டுகள் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

 

தொழிலாளர்களுக்கு நாடு கிடையாது. அவர்கள் பெற்றிருக்காத ஒன்றை அவர்களிடமிருந்து நாங்கள் பறித்துக்கொள்ள முடியாது. பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் முன்னதாக, அரசியல் மேலாதிக்கம் பெற்றாக வேண்டும். தேசத்தின் தலைமை வர்க்கமாக உயர்ந்தாக வேண்டும், தன்னையே தேசமாக அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்கம் தேசிய தன்மை கொண்டதாகவே இருக்கிறது, இந்தச் சொல்லுக்கான முதலாளித்துவப் பொருளில் இல்லாவிடினும்.” 

கம்யூனிஸ்டுகள் தேசங்களை ஒழிக்க விரும்புவதாகக் கூறிய குற்றச்சாட்டுக்குக் கூறப்பட்ட பதில் இது. 

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முதலாளித்துவ வளர்ச்சி தேசங்களின் எல்லைகளை உடைத்துவருகிறது. இன்றைய நிலையில் அதாவது உலகமயமாதல் நிலையில் இதனைக் கண்கூடாகப் பார்க்கிறோம். 

அடுத்து லெனின் அரசு பற்றிப் பேசுகிறார். அதன் ஒடுக்கு முறையைப் பற்றி விளக்குகிறார். ஏன் என்றால் தேசங்களின் எல்லைகள் உடைகிறது என்று கூறியவுடன், தேசிய அரசின் ஒடுக்கு முறை இல்லை என்று புரிந்து கொள்ளக்கூடாது. லெனின், அரசின் தோற்றத்தைப் பற்றி விளக்குகிறார். இதற்கு எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்கிற நூலின் நீண்ட மேற்கோளை இட்டு விளக்குகிறார். 

அரசு என்பது ஒழுங்கமைக்கப் பெற்ற பலாத்காரம் ஆகும் என்று லெனின் அரசின் வர்க்கத் தன்மையை முதலிலேயே வெளிப்படுத்தி உள்ளார். சமூகத்தில் வர்க்கத் தோன்றிய போது, வர்க்கங்களுக்கு இடையே இணக்கம் காணமுடியாத நிலையினால், ஒடுக்கத்துக்கு ஆளான வர்க்கத்தை எழுச்சி கொள்ளாமல் தடுப்பதற்குத் தோன்றியது அரசு. 

அரசு என்பது வர்க்க முரண்பாடுகளின் வெளிப்பாடாகத் தோன்றியது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அரசின் வர்க்க சார்பைப் புரிந்து கொள்வது அவசியமானது ஆகும். 

முதலாளித்துவத்தன் முற்போக்கு வடிவமான ஜனநாயக் குடியரசும் கூட, வர்க்க சார்பானது தான் என்பதைக் கண்டுவருகிறோம். முதலாளித்துவ அரசு, பழைய அரசிடம் இருந்து வடிவத்தில் மாறி இருக்கலாம், ஆனால் அதன் அடிப்படையான வர்க்கத் தன்மை மாறவில்லை. அந்தந்தக் காலத்துக்கு உரிய ஆதிக்க வர்க்கத்தின் சேவையையே அரசு புரிகிறது. 

எங்கெல்ஸ் எழுதிய “டூரிங்குக்கு மறுப்பு என்கிற நூலில், சோஷலிச அரசின் வளர்ச்சிக் கட்டத்தில், அரசு உலர்ந்து உதிர்வதைப் பற்றி எழுதியதை லெனின் இங்கே மேற்கோளாய்ப் பதிந்துள்ளார். எங்கெல்ஸ் அதில் என்ன கூறுகிறார் என்றால், அரசு ஒழிக்கப்படுவதில்லை, அது தேவையற்றுப் போய் உதிர்ந்துவிடுகிறது என்று கூறியுள்ளார். வர்க்க வேறுபாடுகள் சமூகத்தில் களைந்து எறியப்படும் போது அரசு தேவையற்றதாகப் போய் மறைந்துவிடும். 

இதற்கு அடுத்து லெனின் விவசாயிகளைப் பற்றி மார்க்சியக் கண்ணோட்டத்தை எங்கெல்ஸ் எழுதிய “பிரான்சிலும் ஜெர்மனியிலும் விவசாயப் பிரச்சினை என்ற நூலில் காணப்படுவதை மேற்கோள் மூலம் நிலைநிறுத்துகிறார். 

சோஷலிச அரசு தோன்றிய போது, பெரிய நிலச்சுவான்தாரர்களின் நிலத்தைத்தான் பொதுச் சொத்தாக்கப்படும், சிறு விவசாயிகளின் சொத்துக்கள் அவ்வாறு செய்யப் போவதில்லை என்கிறார் எங்கெல்ஸ். சிறு விவசாயத்தைக் கூட்டுறவு உற்பத்தியாகவும், கூட்டுறவு உடைமையாகவும் மாற்றப்படும். இதைப் பலாத்காரமாகச் செய்யாமல், சமூக உதவியைத் தந்து செய்து வைக்கப்படும். 

சிறு விவசாயத்தின் அனுகூலம் இன்மையையும், கூட்டுறவின் அனுகூலங்களையும் சுட்டிக்காட்டி நிறைவேற்ற பல வழிகள் இருப்பதாக எங்கெல்ஸ் இதில் குறிப்பிட்டுள்ளார். 

பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் செயற்தந்திரங்கள் 

இதற்கு அடுத்து, லெனின் “பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் செயற்தந்திரங்கள் என்பது பேசுகிறார். இது ஒரு முக்கியமானப் பகுதியாகும். தத்துவம் படித்தாலும், அரசியல் பொருளாதாரம் படித்தாலும் அனைத்தும் நடை முறைக்கே என்பது நமக்குத் தெரியும். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் அந்தந்த நாடுகளின் நிலைமைக்கு ஏற்ப, தொழிலாளர்களின் முன்னணிப்படை என்று கூறப்படுகிற கம்யூனிஸ்ட் கட்சி செயற்தந்திரத்தை அமைத்துச் செயற்படுகிறது. 

இறுதிக்குறிக்கோளை அடைவதற்கு இன்று என்ன செய்ய வேண்டும். அதாவது இன்றைய நிலையில் நமது அரசியல் செயற்பாடு, எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று முடிசெய்ய வேண்டியது, கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியக் கடமையாகும். 

கட்சி எதன் அடிப்படையில் செயற்தந்திரத்தை அமைத்துக் கொள்ளப்படுகிறது என்பது பற்றி லெனின் இங்கே வலியுறுத்திக் கூறியுள்ளார். 

மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதத்தின் குறைபாட்டை லெனின் இங்கே சுட்டிக்காட்டுகிறார். “நடைமுறை புரட்சிச் செயல்பாட்டின், சூழ்நிலைமைகளைப் புரிந்து கொள்ளவோ, அதன் முக்கியத்துவத்தை மதிப்பிடவோ முந்தைய பொருள்முதல்வாதம் திறனற்றிருந்தது இது தான் அதன் முக்கியமான குறைபாடு என்கிறார். 

தத்துவத் தொடர்பான வேலையின் கூடவே, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் பற்றிய செயற்தந்திரப் பிரச்சினைகளிலும் தமது கவனத்தை மார்க்ஸ் செலுத்தினார். பாட்டாளி வர்க்க செயற்தந்திரத்தை மார்க்ஸ் தமது பொருள்முதல்வாத இயக்கவியல் உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், அனைத்து ஆதாரக் கூறுகளைக் கொண்டு கறாராக அமைத்தார். 

செயற்தந்திரத்திற்கான அடிப்படையாக லெனின் இங்கே கூறுவது மிகவும் முக்கியமானதாகும். அதனை அப்படியே இங்கே கூறுகிறேன்.

 

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் எல்லா வர்க்கங்களையும் விதிவிலக்கின்றி எடுத்துக் கொண்டு. அவ்வர்க்கங்களுக்கு இடையே உள்ள பரஸ்பர உறவுகளின் கூட்டு மொத்தத்தைப் புறநிலை ரீதியிலே கருத்தில் கொள்வது - அதன் விளைவாக அந்தச் சமூகத்தின் யதார்த்த வளர்ச்சிக் கட்டத்தையும் அந்தச் சமூகத்துக்கும் இதர சமூகங்களுக்கும் இடையேயுள்ள பரஸ்பர உறவுகளையும் கருத்தில் கொள்வது - இது ஒன்றுதான் முன்னணி வர்க்கத்தின் சரியான செயற்தந்திரங்களுக்கு அடிப்படையாக இருக்க முடியும்.” 

நம் நாட்டிற்கு உரிய செயற்தந்திரத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமானால், நம் நாட்டில், விதிவிலக்கின்றி அனைத்து வர்க்கங்களையும் எடுத்துக் கொண்டு அவ்வர்க்கங்களுக்கு இடையேள்ள பரஸ்பர உறவுகளின் அடிப்படையில் ஆராய்ந்தால் தான், இன்றைய நமது சமூகத்தின் யதார்த்த வளர்ச்சிக் கட்டத்தைக் கணக்கிட முடியும். அதற்கு நம் நாட்டைப் பற்றிய வர்க்க ஆய்வு அவசியமாகும். அந்த ஆய்வின் அடிப்படையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி தமது செயற்தந்திரத்தை அமைத்துக் கொள்ளும். 

லெனினும், மாசேதுங்கும் அவர்களின் நாட்டு வர்க்க ஆய்வை சிறப்பாகச் செய்ததினால் தான், அவர்களின் நாட்டிற்கு உரிய செயற்தந்திரத்தை அமைத்து வெற்றி பெற முடிந்தது. அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் முக்கியமான அவர்களின் படைப்பையும் படிக்க வேண்டும். அப்போ தான் நமது நாட்டில் நாம் செய்ய வேண்டிய வர்க்க ஆய்வின் அவசியத்தைப் புரியும். 

இந்த ஆய்வை செய்வதற்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதத்திலும், அரசியல் பொருளாதாரத்திலும் தெளிவு பெற்றி இருக்க வேண்டும். இந்த ஆய்வு என்பது மேம்போக்கானதாக இருக்கக்கூடாது எனபது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

நமது நாட்டில் தீட்டப்பட்ட கட்சித் திட்டங்கள் சிறு மாறுதலுடன் அதன் அடிப்படையில் இருந்து மாறாமல் ஒவ்வொரு கட்சிக் காங்கிரசிலும் ஏற்கப்படுகிறது. சில கட்சிகள் பல பத்து ஆண்டுகளாக அதையே திட்டமாக வைத்துள்ளனர். ஐம்பது ஆண்டுகளில் நமது நாடு பல கட்டங்களில், வளர்ச்சி அடைந்துள்ளது, புதிய வளர்ச்சிக்கு ஏற்ப செயற்தந்திரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான திறத்தை, அனைத்து இடதுசாரி கட்சிகளும் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

இங்கே லெனின் கூறியதை மனதில் கொணடே நான் இவ்வாறு கூறியுள்ளேன். 

சமூகத்தை இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிற அடிப்படையில் அணுக வேண்டும். இங்கிலாந்தில் இருந்து இந்தியா விடுபட்டு பல பத்து ஆண்டுகள் கடந்து விட்டது. இன்னும் இடதுசாரி கட்சிகள் பழைய திட்டங்களிலேயே மூழ்கிக்கிடக்கின்றன. லெனின் சொல்வது போல் இந்தச் சமூகத்தின் வளர்ச்சி நிலையைக் கணக்கில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் புதியதாக ஆய்வு செய்ய வேண்டும். 

ஒவ்வொரு வர்க்கத்தினுடைய இயக்கத்தின் விதிகளை நிர்ணயிப்பவை அந்தந்த வர்க்கத்தின் பொருளாதார வாழ்வின் நிலைமைகளே. அத்துடன் சென்ற காலத்தைப் பற்றிய பார்வையோடு நிற்காமல் எதிர்காலத்தைப் பற்றிய பார்வையுடனும் இருக்க வேண்டும். தற்காலத்திய நிலைமையின் கணிப்புச் சரியாக இருந்தால் தான், எதிர்காலம் குறித்த பார்வையும் சரியாக இருக்கும். இதற்குக் கடந்த காலத்திய நடவடிக்கையில் சரி-தவறு என்பது பற்றிய சுயவிமர்சனம் அவசியமாகும். 

ஆனால் நமது நாட்டு இடதுசாரி கட்சிகள் தம்மைப் பற்றிய சுய விமர்சனமும், பிற கட்சிகளைப் பற்றிய விமர்சனங்களையும் செய்வதில் முழுக் கவனம் செலுத்துவதே இல்லை. இதில் மாற்றம் ஏற்படாமல் இடதுசாரிகளிடம் மாற்றத்தைக் காண முடியாது. 

இதை நான் விவாதத்திற்கு வைக்கிறேன், ஆனால் இந்தப் படிப்பு வட்டத்தில் இந்த விவாதத்தை நடத்தப் போவதில்லை. ஆனால் இந்தப் படிப்பு வட்டத்தில் உள்ளவர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யலாம். விவாதத்தை இங்கே நிகழ்த்த வேண்டாம். படிப்பு வட்டம் அதன் எல்லைக்குள் செயற்படட்டும். 

அடுத்து லெனின் பரிணாமவாதத்திற்கும் இயக்கவிலுக்கம் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டி, நாம் இயக்கவியல் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்கிறார். பரிணாமவாதம், மெதுவாக நடைபெற்றுவருகிற மாறுதல்களை மட்டும் கணக்கில் கொள்கிறது. மாற்றத்தின் அளவு மாற்றத்தைக் கணக்கில் கொள்வதில்லை, அதனால் அது பண்பு மாற்றம் அடைவதைப் பற்றிப் பேசுவதில்லை. இயக்கவியலானது அளவு மாற்றத்தையும் அதன் மூலம் படிப்படியாக ஏற்படுகிற பண்புநிலை மாற்றத்தையும் கணக்கில் கொள்கிறது. 

யதார்த்த நிலைமைகளின் மாற்றம் என்கிற புறநிலை வழியில் தான் பாட்டாளி வர்க்க செயற்தந்திரங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். புரட்சிக்கான புறநிலை இல்லாமல், ஒரு கட்சியோ, பாட்டாளி வர்க்கமோ பொதுவாகப் புரட்சியைத் தோற்றுவித்திட முடியாது. முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிற காலங்களே புரட்சிக்கான புறநிலையாகும். இந்தப் புரட்சிகர நிலைமை வந்துவிட்டால் மட்டும் புரட்சி நிகழ்ந்துவிடாது. அதற்கான தயாரிப்பை முன்பே செய்திருக்க வேண்டும். இதைப் பற்றித் தான் லெனின் இங்கே குறிபிடுகிறார். 

பொருளாதார நெருக்கடிகள் நீங்கிய பின் தொடரும் காலத்தை அமைதியான, மந்தமான காலம் என்று லெனின் கூறுகிறார். அந்த நேரத்தில் முன்னணி வர்க்கத்தின் உணர்வையும், பலத்தையும், செயற்தந்திரத்தையும் வளர்ப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் லெனின். மேலும் கூறுகிறார், இந்த நேரத்துச் செயற்பாடுகள் அனைத்தும் இந்த வர்க்கத்தினுடைய இயக்கத்தின் இறுதி குறிக்கோளை, அடைவதற்கான பணிகளை நிறைவேற்றி வைப்பதற்கு உரிய திறனை வளர்ப்பதாக இருக்க வேண்டும். 

இறுதிக்குறிக்கோளை நினைவில் கொள்ளாமல், அன்றாடப் போராட்டத்தில் மூழ்க்கிக் கிடக்கக்கூடாது. 

ஒன்றை மீண்டும் மீண்டும் கூறிவருகிறேன், அது என்னவென்றால், லெனின் இந்தக் கட்டுரையில் அதிகமாக, மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்களில் இருந்தும் கடிதங்களில் இருந்தும் மேற்கோளைத் தருகிறார். இந்த இடத்தில், தத்துவத்தின் வறுமை, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மற்றும் கடிதங்களில் இருந்து மேற்கோள்களைத் தருகிறார். 

தத்துவத்தின் வறுமை என்ற நூலின் மேற்கோள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். 

முதலாளித்துவத்தின் பெருவீத உற்பத்தியானது முன்பின் அறியாத தொழிலாளர்களை ஓர் இடத்தில் குவிக்கிறது. தொழிலாளர்களை, வேலை கிடைக்க வேண்டும், என்கிற போட்டி அவர்களைப் பிரிக்கிறது. இருந்தாலும் முதலாளிக்கு எதிராகத் தொழிலாளர்களுக்கு இருக்கும் பொது நலனான கூலியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற சூழ்நிலை, தொழிலாளர்களை இணைக்கிறது. 

ஒன்றுபட்டு நிற்கிற மூலதனத்திற்கு முன்பாகத் தொழிலாளர்கள் இணைந்திருப்பது கூலியை நிலைநிறுத்துவதைவிட அதிக அவசியமானது ஆகும். 

இந்த இணைப்பு, நடைபெற இருக்கிற உள்நாட்டுப் போருக்கு தேவையான ஒன்றாகும். தொழிலாளர்களின் இந்த இணைப்பு அரசியல் தன்மை பெற்றுவிடுகிறது. இதைச் செய்வது அவ்வளவு எளிதானக் காரியம் அல்ல என்பதை மார்க்ஸ் எங்கெல்ஸ் கடித்த போக்குவரத்தின் மூலம் லெனின் நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். 

அடுத்து லெனின் அரசியல் போராட்டத்தின் செயற்தந்திரத்திரம் தொடர்பான அடிப்படை மார்க்சியக் கோட்பாட்டை, “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் மூலம் கூறுகிறார். தொழிலாளர்கள் உடனடி நலன்களுக்காகப் போராடுகிற அதே நேரத்தில், எதிர்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியதை குறிப்பிடுகிறார். 

எதிர்கால நலன்களை மட்டும் பேசுவதோ, அதாவது புரட்சி நடவடிக்கை மட்டும் பேசுவதோ, அல்லது உடனடி நலனைப் பற்றி மட்டும் அக்கறை செலுத்துவதோ தவறானதாகும். புரட்சியை முன்னிருத்திக் கொண்டு உடனடி நலன்களில் அக்கறை செலுத்தாமல் இருக்கக்கூடாது. அதே போல உடனடி நலன்களில் முழுக்கி இறுதி குறிக்கோளை மறந்துவிடக்கூடாது. 

உடனடி நலன்களுக்கான போராட்டமானது, ஒரு சீர்திருத்த போரட்டமே, இந்தச் சீர்திருத்த போராட்டத்தின் மூலம் “கூலி முறை என்கிற அமைப்பை நீக்கிவிட முடியாது. கூலி உயர்வுக்கான போராட்டத்தை “கூலி முறை ஒழிப்புக்கான போராட்டம்வரை எடுத்துச் செல்ல வேண்டும். 

இந்தக் கட்டுரையில் மார்க்ஸ் எங்கெல்ஸ் கடித்த போக்குவரத்தில் இருந்து பல கடிதங்களை லெனின் குறிப்பிடுகிறார். அன்று அவர்கள் அதனை நான்கு தொகுதியாகப் பதிப்பித்துள்ளனர். அதை முழுமையாகப் படிப்பது, மார்க்சிய அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும். 

மார்க்ஸ்-எங்கெல்ஸ் படைப்புகள் ஆங்கிலத்தில் இதுவரை 50 தொகுதிகள் வெளிவந்துள்ளன. அதில் 13 தொகுதிகள் அவர்களின் கடிதப் போக்குவரத்தாகும். அதனை முழுமையாக அனைவராலும் படிக்க முடியாது, ஆனால் லெனின் குறிப்பிடுகிற, அந்த நான்கு தொகுதிகள் மொழிபெயர்த்து வெளியிட்டால் தமிழ் சூழலுக்குப் பயனுள்ளதாக இருக்கும். 

பாரிஸ் கம்யூனைப் பற்றி லெனின் அடுத்துக் குறிப்பிடுகிறார். 1870ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரெஞ்சுப் பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியை மார்க்ஸ் பொருத்தமற்றது என்று முதலில் எச்சரித்தார். ஆனால் பாட்டாளி வர்க்கம் போராட்டத்தில் இறங்கிவிட்டது. அதன் பிறகு, மார்க்ஸ் பாட்டாளி வர்க்க எழுச்சிக்கு ஆதரவு கொடுத்தார். விண்ணைச் சாடுகின்ற மக்களின் புரட்சிகரமான முன்முயற்சி என்று உற்சாகத்தோடு கொண்டாடி வரவேற்றார். 

இந்த மார்க்சின் முடிவில் இருந்து லெனின் சொல்ல வருவது என்னவென்றால், புரட்சிகரமான போராட்டம் தோல்வி அடைவதானது, பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் பொதுவான போக்குக்கும், இறுதி விளைவுக்கும் குறைந்த தீங்கே ஏற்படும். போராடாமல் சரணாகதி அடைவது, பாட்டாளி வர்க்கத்தின் உறுதியைக் குலைக்கும், அதன் செயற்தந்திரத்தை பலவீனப்படுத்தும் என்கிறார் லெனின். 

இத்துடன் மற்றொன்றையும் கூறுவதோடு, லெனின் இந்தக் கட்டுரையை முடிக்கிறார். 

பொருளாதார நெருக்கடி இல்லாத காலத்தில், அரசியலில் தேக்கம் நிலவும். அப்போது முதலாளித்துவச் சட்டக் கட்டுப்பாடு மேலோங்கி இருக்கும். அத்தகைய காலகட்டத்தில் சட்டவழியிலான போராட்ட முறைகளைப் பயன்படுத்துவதை மார்க்ஸ் முழுமையாக உணர்ந்து கொண்டுள்ளதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். 

இத்தகைய போக்கை மறுக்கின்ற அராஜகவாதிகளின் “புரட்சிகரமான சொல்லடுக்குகளை மார்க்ஸ் தீவிரமாகக் கண்டித்தார் என்பதையும் லெனின் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் கட்சியில் காணப்படும் சந்தப்பவாதத்தையும் மார்க்ஸ் கண்டித்துள்ளார். 

இடதுதீவிரவாதம், வலது சந்தர்ப்பவாதம் ஆகியவற்றை மார்க்ஸ் தொடர்ந்து கண்டித்து வந்தார். சட்டவழியிலான போராட்டத்தை நடத்த முடியாதவர்களால் சட்டவழியற்றப் போராட்டத்தைத் திறம்பட நடத்த முடியாது என்கிற உண்மை புரிந்து கொள்ள வேண்டும். 

என்ன செய்ய வேண்டும் என்ற நூலில் லெனின் சட்டவழியிலான போராட்டத்தை விளக்கி இருக்கிறார். அதே போலச் சட்டவழியிலான போராட்டத்தை மறுக்கிற அராஜகவாதிகளை ““இடதுசாரி கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு என்ற நூலில் சிறப்பாக விமர்சித்துள்ளார். அதே போல வலது திருத்தல்வாதத்தை “மார்க்சியமும் திருத்தல்வாதமும் என்ற சிறு கட்டுரையில் விளக்கி உள்ளார். இத்தகைய நூல்களைப் படிப்பதின் மூலம் நாம் இது பற்றிய தெளிவுக்கு வரலாம். 

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி வலது சந்தர்ப்பவாதத்தையும், இடது தீவிரவாதத்தையும் முறியடிப்போம். சரியான கம்யூனிச வழியில் செல்வோம், என்று கூறுவதோடு இந்தத் தொடர் வகுப்பை முடித்துக் கொள்கிறேன். 

இத்துடன் இன்றைய வகுப்பும், தொடர் வகுப்பும் நிறைவடைகிறது.

காரல் மார்க்ஸ்-லெனின் (1914)

(மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்)