Thursday 13 January 2022

அரசியல் பொருளாதார நூல்களின் சாரம் தொகுதி - I , முன்னுரை, அ.கா.ஈஸ்வரன்

முன்னுரை:-

அ.கா.ஈஸ்வரன்

9884092972

ak.eswarn@gmail.com



 

"அரசியல் பொருளாதார நூல்களின் சாரம்" என்கிற இந்த நூல் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவரும் எழுதிய மூன்று அரசியல் பொருளாதார நூல்களின் சாரமாகும்.

இந்நூலில் எனது வேலை என்னவென்றால், “கூலியுழைப்பும் மூலதனமும்”, “கூலி விலை லாபம்” “கூலி முறை” என்ற மூன்று நூல்களில் காணப்படும் கருத்துக்களின் சாரத்தைத் தொகுக்கும் தொகுப்பாளரின் வேலையே ஆகும். இந்தத் தொகுப்பு வேலையை ஒரு ஆசிரியனாக இருந்தல்லாமல், மார்க்சியத்தைப் படிக்கும் மாணவனாக இருந்து செய்துள்ளேன். பொதுவாக எனது நூல்கள் அனைத்தும் இவ்வகையில் தான் இருக்கும், எனது பங்காக விளக்குவதில் சிறு முயற்சி செய்திருப்பேன் அவ்வளவே. அதை இனம் கண்டு சுட்டிக்காட்டிய வாசகர்களே என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டுகிறார்கள்.

நூலின் நோக்கம் என்பது தேவைப்படுபவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதாகும். இவ்வகையில் எனது எழுத்துப் பணி வெற்றியே ஆகும்.

நூலின் நோக்கத்தை அறியாதவர்கள் கூறுகிற விமர்சனத்தைக் கடந்து, உண்மையான விமர்சனத்தை நோக்கி, எனது நூல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.

“கூலியுழைப்பும் மூலதனமும்” என்ற நூல் 1847 ஆம் ஆண்டு ஜெர்மன் தொழிலாளர்களுக்குப் பிரஸ்ஸல்ஸில் (பெல்ஜியம்) மார்க்ஸ் நிகழ்த்திய சொற்பொழிவாகும் இதுவே பின்னாளில் பத்திரிகைகளில் நூலாகவும் வந்தது. 1865 ஆம் ஆண்டு முதலாம் அகிலத்தின் பொதுக்குழுவில் மார்க்ஸ் நிகழ்த்திய உரையின் நூல் வடிவமே “கூலி விலை லாபம்”. இந்த உரை மார்க்ஸ், எங்கெல்ஸ் மறைவுக்குப் பிறகு மார்க்ஸ் மகளால் 1898 ஆம் ஆண்டு நூலாக வெளியிடப்பட்டது. இங்கிலாந்து தொழிற்சங்கத்தின் (The Labour Standard) “தொழிலாளர் தரநிலை” என்ற பத்திரிகையில் எங்கெல்சால் மே 1881 முதல் ஆகஸ்டு 1881 வரை தொடராக எழுதப்பட்டு, பிறகு “கூலி அமைப்புமுறை” என்ற தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டது.

சாரத்தைப் படித்துவிட்டு மூல நூல்களை வாசித்தால், அதில் இருந்து கிடைக்கின்ற அரசியல் பொருளாதாரம் பற்றிய புரிதல், நம்மை மார்க்ஸ் எழுதிய “மூலதனம்” என்ற நூலை வாசிப்பதற்கு இட்டுச் செல்லும்.

கால வரிசையில் அல்லாமல், இந்நூல் எங்கெல்ஸ் எழுதிய “கூலி அமைப்புமுறை” என்ற நூலில் இருந்து தொடங்குகிறது. தொழிலாளர்களின் நேர்மையான உழைப்பிற்கு நேர்மையான கூலி (சம்பளம்) கிடைக்கிறதா என்ற கேள்வியுடன் முதல் கட்டுரை தொடங்குகிறது. அடுத்துக் கூலிக்கான போராட்டம் என்கிற உடனடி போராட்டத்தைப் பற்றியும் கூலி அமைப்புமுறைக்கு எதிராகப் போராட வேண்டியதைப் பற்றியும் பேசுகிறது. தொடர்ந்து தொழிற்சங்கங்கள், தொழிலாளர் கட்சி, இறுதியாக இன்றைய வளர்ச்சி அடைந்த சமூகத்தில் முதலாளிய வர்க்கம் தேவையற்றவர்களாவது பற்றிப் பேசுகிறது. ஆகத் தொழிலாளர் வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை அனைத்தையும் இந்நூல் கோடிட்டுக் காட்டுகிறது. இதைப் படித்தவுடன் கண்டிப்பாக மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை வாசகர்கள் உணர்வார்கள் என்பதில் ஐயமில்லை.

“கூலியுழைப்பும் மூலதனமும்” என்ற நூல், கூலி என்றால் என்ன? அது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? ஒரு சரக்கின் விலை எதனால் நிர்ணயிக்கப்படுகிறது? மூலதனத்தின் இயல்பும் வளர்ச்சியும், கூலியுழைப்புக்கும் மூலதனத்துக்கும் உள்ள உறவு, மூலதனம், கூலியுழைப்பு இவற்றின் நலன்கள் நேரெதிரானவை இது போன்ற கேள்விகளுக்குப் பதிலாக அமைந்துள்ளது.

இதே போல் “கூலி விலை லாபம்” என்ற நூல், உற்பததியும் கூலியும், கூலியும் விலையும், மதிப்பும் உழைப்பும், உழைப்பு சக்தி, உபரி மதிப்பின் உற்பத்தி, உழைப்பின் மதிப்பு, உபரி மதிப்பைப் பிரித்துப் பெறப்படும் பல்வேறு பகுதிகள், மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான போராட்டமும் அதன் விளைவுகளும் என்பது போன்ற தலைப்புகளில் சமூக மாற்றம் வரை எளிமையாகவும் தெளிவாக உறுதிபடவும் இந்நூல் விவரிக்கிறது.

நம் கையில் உள்ள இந்த நூல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர்களின் அரசியல் பொருளாதாரம் பற்றிய கருத்துக்களின் தொகுப்பாக இருக்கும். இந்த நூல் வெறும் அரசியல் பொருளாதாரமாக மட்டும் இல்லாது, அரசியல் பொருளாதார அடிப்படையில், அரசியலையும் தொழிலாளர்களின் விடுதலையான சமூக மாற்றத்தையும் சேர்த்து விவரிக்கிறது.

அதுமட்டுமல்லாது ஒரு களப் போராளி அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இந்நூல் ஏற்படுத்தும். அதற்கான அறிமுகத்தையும் கொடுக்கும்.

இடதுசிந்தனை உள்ள அனைவரும் அரசியல் பொருளாதார நூல்களைப் படிப்பது அவசியமாகும். மூலநூல்களைப் படிப்பதில் உள்ள சிரமத்தை மனதில் கொண்டு அந்த நூல்களில் உள்ள சாரம் மட்டும் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. முழுவதும் சுருக்கமாகக் கூறிவிட்டதாக சொல்ல முடியாது. அதனால் மூல நூலை எடுத்துப் படிக்க வேண்டும். சாரத்தை அறிவது நேரடி நூலை படிப்பதற்கே. இந்த நூல் இந்தளவுக்கு சிறப்பாக வந்துள்ளது என்றால் அதற்கு தோழர்கள் தா.சந்திரன், த.ஜீவானந்தன், த.ந.தனராமன், இரா.புருஷோத்தமன் ஆகியோர்களே காரணமாகும், அதற்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக தோழர் தா.சந்திரன் தோழர் இரா.புருஷோத்தமன் ஆகிய இருவரும் இந்த நூல் சிறப்பாக வருவதற்காக கடும் முயற்சியும் உழைப்பும் செலுத்தியுள்ளார்கள். அவ்விருவருக்கும் எனது செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலை சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டுள்ள பொன்னுலகம் புத்தக நிலையத் தோழர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் தொகுதி – I - முன்னுரை, அ.கா.ஈஸ்வரன்

முன்னுரை:-

அ.கா.ஈஸ்வரன்

9884092972

ak.eswarn@gmail.com




 

"கோட்பாடு முறையிலான சிந்தனை என்பது இயற்கையான திறன் என்ற அளவில் மட்டுமே ஓர் உள்ளார்ந்த பண்பாகும். இந்த இயற்கையான திறன் வளர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். அதன் மேம்பாட்டுக்கு முந்தைய தத்துவத்தைப் படித்தாராய்வது தவிர வேறு வழிகள் கிடையாது."

- எங்கெல்ஸ்          

ஒருவர் எந்தப் பிரச்சினையையும், தமது தத்துவக் கண்ணோட்டத்தின்படியே அணுகுகிறார். இதை அவர் அறிந்திருந்தாலும், அறியாவிட்டாலும் இதுவே உண்மை. எதன் அடிப்படையில் மனிதர்கள் குறிக்கோள்களை அமைத்துக் கொள்கின்றனர் என்பதிலே தான், தத்துவங்களுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு அடங்கி உள்ளது.

குறிக்கோளில்லாமல் எவரும் செயல்படுவதில்லை, இந்தக் குறிக்கோளை அவரவர் புரிந்து கொண்ட தத்துவத்தின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர்.

தத்துவக் கண்ணோட்டம் ஒருவகையில் இயற்கையான திறன் தான். இந்த இயற்கையான திறன் வளர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். அதன் மேம்பாட்டுக்கு முந்தைய தத்துவத்தைப் படித்தாராய்வது தவிர வேறு வழியில்லை என்று எங்கெல்ஸ் கூறியுள்ளார்.

கருத்துமுதல்வாதத் தத்துவத்தை ஏன் ஒரு பொருள்முதல்வாதி படிக்க வேண்டும்? கருத்துமுதல்வாதி ஏன் பொருள்முதல்வாதத் தத்துவத்தைப் படிக்கிறாரோ அதே காரணத்துக்குத் தான் பொருள்முதல்வாதியும் படிக்க வேண்டியுள்ளது. எதிர் தத்துவத்தை எதிர் கொள்ள வேண்டுமானால் அதனை அறிந்திருக்க வேண்டும்.

மக்களிடம் கருத்துக்குழப்பங்கள் ஏற்படுவதற்கும், போராட்ட குணம் குறைந்து காணப்படுவதற்கும் அவர்களிடம் உள்ள கருத்துமுதல்வாதச் சிந்தனையே காரணமாகும். உழைக்கும் மக்களிடம் காணப்படும் கருத்துமுதல்வாதச் சிந்தனையை புரிந்து கொள்வதற்கும், அதில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கும், ஒரு பொருள்முதல்வாதி கருத்துமுதல்வாதத்தை அறிந்திருக்க வேண்டும்.

பொருள்முதல்வாதம் சிறந்தது என்பதை நிரூபிக்க வேண்டுமானால், கருத்துமுதல்வாதத்தைவிடப் பொருள்முதல்வாதம் எந்த வகையில் சிறந்தது என்பதை விளக்க வேண்டும். அப்படி விளக்கம் கொடுப்பதற்குக் கருத்துமுதல்வாதம் தெரிந்து இருக்க வேண்டும்.

      கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் பற்றி எங்கெல்ஸ் கூறியதை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். பழங்காலத்தில், சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவைத் தெளிவுபடத்தக்கூடிய அளவுக்கு அன்றைய விஞ்ஞானமும், தத்துவமும் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. ஆனால், கருத்துமுதல்வாதம் ஆத்மா என்ற கருத்தைப் படைத்து அதனை விளக்கியது. அன்றைய நிலையில் உள்ள தொடக்கநிலைப் பொருள்முதல்வாதத்தால் (Primitive Materialism), இதனை எதிர் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக எங்கெல்ஸ் என்ன கூறுகிறார் என்றால், பழைய பொருள்முதல்வாதம், பழைய கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது. விஞ்ஞான வளர்ச்சியினாலும் தத்துவ வளர்ச்சியினாலும் இன்றைய நிலையில் கருத்துமுதல்வாதம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், நவீன பொருள்முதல்வாதத்தால் இன்றைய கருத்துமுதல்வாதம் நிலைமறுக்கப்பட்டது.

எங்கெல்ஸ்:-

“தொன்மைக் காலத் தத்துவவியல் பழைமையான, தன்னியல்பாக உருவான பொருள்முதல்வாதமே. எனவே அது சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவைத் தெளிவு படுத்த இயலாததாக இருந்தது. ஆனால், இந்தப் பிரச்சினை மீது தெளிவை அடைவதற்கான தேவை, உடலில் இருந்து ஆன்மா பிரிக்கப்படத்தக்கது என்ற போதனைக்கும், பிறகு இந்த ஆன்மாவுக்கு இறவாத் தன்மையைத் துணிந்துரைப்பதற்கும், இறுதியாக ஒரு கடவுட் கோட்பாட்டிற்கும் இட்டுச் சென்றது. எனவே பழைய பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது. ஆனால், தத்துவவியலின் மேலதிக வளர்ச்சிப் போக்கில் கருத்துமுதல்வாதமும் செல்லுபடியாகாததாகிப்போய் நவீனப் பொருள்முதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது.”

(டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 241)

கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை, வளர்ச்சிகளை விமர்சனக் கண்கொண்டு பார்ப்பதற்கு இரு தத்துவங்களையும் படித்திருக்க வேண்டும். அவ்வாறு படித்துப் புரிந்து கொள்ளாமல், ஒரு கம்யூனிஸ்ட் நவீனப் பொருள்முதல்வாதியாக சிறக்க முடியாது.

      கருத்துமுதல்வாதத்தை மார்க்சும் எங்கெல்சும் படித்து விமர்சித்துவிட்டனர், நவீனப் பொருள்முதல்வாதத்தையும் படைதளித்துவிட்டனர். நாம் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொண்டாலே போதும் என்கிற போக்கு இங்கே நிறைய பேரிடம் காணப்படுகிறது. கடவுளை மறுப்பதோடு பொருள்முதல்வாதம் முடிந்துவிட்டதாக பலர் கருதுவதே இதற்குக் காரணம். இயக்கவியல் பொருள்முதல்வாதம் கடவுள் மறுப்போடு நின்றுவிடுவதில்லை, அது பல விஷயங்களைப் பற்றி விளக்கி இருக்கிறது, சமூகம் பற்றியும் பொருள்முதல்வாதம் பேசுகிறது. இந்த விளக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு நாத்திகம் மட்டும் போதுமானது அல்ல.

கம்யூனிச சிந்தனையினால் ஈர்க்கப்பட்டு, பொருள்முதல்வாதத்தை ஒருவர் ஏற்றவுடனேயே, அவர் மனதில் தேங்கியுள்ள கருத்துமுதல்வாத சிந்தனைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்று கூறிட முடியாது. அதை நீக்குவதற்குப் பெரும் முயற்சி எடுக்க வேண்டும். கருத்துமுதல்வாதம் என்ன சொல்கிறது, அதற்கு பொருள்முதல்வாதம் எப்படி பதிலளிக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதனை அறியாது போனதினால் தான், நம் நாட்டில் உள்ள இடதுசாரிகளிடம், கருத்துமுதல்வாத சிந்தனைப் போக்குகள் அவ்வப்போது தலைகாட்டுகிறது. அது கருத்துமுதல்வாதக் கருத்து என்பதைக்கூட அறியாமல் இருக்கின்றனர். இது மிகவும் பலவீனமான சித்தாந்தப் போக்காகும். சித்தாந்த தெளிவில்லாமல் எதையும் சாதித்திட முடியாது.

தத்துவத்தின் மீது இடதுசாரிகளிடம் அக்கறையின்மை காணப்படுகிறது. “தத்துவம், அதிகம் தேவைப்படும் இந்தக் காலக்கட்டத்தில் எந்தக் காலத்தைக் காட்டிலும் மிகுந்த உதாசீனத்திற்கு உள்ளாகி உள்ளது மிகவும் கவலை அளிப்பதாகும்” என்று தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

      அரசியல் போராட்டத்துக்கு தத்துவம், ஒரு துணை சக்தி என்பதாக பலர் நினைத்துக் கொண்டுள்ளனர், ஆனால் சமூகத்தில் காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்காண காரணத்தை தத்துவ அடிப்படையிலேயே அறிந்து அதனை மாற்றுவதற்கு போராடுகிறோம். அதனால் தத்துவம் அனைத்துப் போராட்டத்துக்கும் அடிப்படையாகும்.

      சோஷலிசத்தை, நம் நாட்டில் அமைப்பதற்கானப் போராட்டத்தில் இந்திய தத்துவ மரபுகளுக்கு இடையேயான போராட்டம் தொடர்புடையதாக இருப்பதையும், அந்தப் போராட்டத்துக்கு தத்துவம் ஓர் கூர்மையான ஆயுதமாக இருப்பதையும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா தமது நூலுக்கு எழுதிய முகவுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.


"சோசலிசத்திற்கான இந்திய முயற்சி என்பது இந்திய தத்துவ மரபுக்கான போராட்டத்துடன் தொடர்புடையது என்கிற புரிதலே இந்நூலின் அடிப்படை பின்னர்க் குறிப்பிடப்பட்டதில் முக்கியமான் இரு பணிகள் அடங்கும்; முதலாவது, உண்மையில் இருந்த தத்துவ நூல்களைப் பற்றிய பாரபட்சமற்ற பகுப்பாய்வு மூலம் அவற்றில் இன்று நிலைத்திருக்கிற மற்றும் மறைந்து போனவற்றைக் கண்டறிவது; இரண்டாவது, உயிர்த்திருப்பனவற்றுக்கு ஊட்டம் ஏற்றுவதும் மறைந்தனவற்றை 'மண்ணில் புதைப்பதும்'; ஊட்டமேற்றுதல் எனில் அவற்றின் ஆற்றலைச் சரியான திசையில் திருப்பி அது எங்கே செல்கிறது எனப் பார்ப்பது எனப்பொருள் - அதாவது, அவற்றின் காலத்திற்குப் பின்னர் வரலாற்றின் போக்கில் திரண்டுள்ள அறிவியல் தரவுகளைக் கொண்டு அவற்றைச் செழுமைப் படுத்துவது எனப் பொருள்.

 

இப் பணியைச் செவ்வனே செய்தால் நாம் மார்க்சியத்தின் வேர்களை அங்கே காணலாம் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை; இதனை இந்திய தத்துவ மரபில் மார்க்சியத்தைக் கண்டெடுப்பது எனக் கொச்சைப்படுத்திடக்கூடாது; இவ்விடத்தே 'கண்டெடுப்பு' எனும் சொல்லைப் பயன்படுத்த முடியுமாயின் இதன் பொருள் இந்திய தத்துவ மரபின் சில கூறுகளின் அடியொற்றிப் போகிற ஓர் இந்தியன் இறுதியில் வந்து சேருமிடம் மார்க்சியமாகத்தான் இருக்க முடியும் என்பதே அது மட்டுமன்று; சோசலிசத்துக்கான போராட்டத்திற்குத் தேவைப்படும் படைக்கலன்களில் வலுமிக்க, மிகவும் கூர்மையானதோர் ஆயுதமாக இச் சித்தாந்தம் அமைவதுடன் அதற்கு அவனது தேசியப் பாரம்பரியத்தின் அங்கீகாரமும் உண்டு என்கிற தெளிவு அவனை மேலும் உற்சாகப்படுத்தும்."

(இந்திய நாத்திகம், பக்கம்-7)

இயற்கையை, பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் அணுகுவதைப் போல, சமூகம் பற்றிய விஷயத்தில் பொருள்முதல்வாதப் பார்வையில் அணுகுவது அவ்வளவு எளிதல்ல. இருக்கும் சமூகத்தை விமர்சிக்கும் வழியில் தான் புதிய சமூகத்தைப் படைக்க முடியும். இருக்கும் கருத்துமுதல்வாத தத்துவத்தை விமர்சிப்பதின் மூலம்தான் பொருள்முதல்வாத தத்துவம் வளம்பெறும்.

“இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் தொகுதி – I என்ற இந்த நூல் ஒரு தொடக்கம்தான். இதில் இந்து தத்துவத்தின் அடிப்படைக்கான நூல்கள் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்றவைகள் அடுத்த தொகுதியில் இடம்பெறும்.

இந்தியத் தத்துவங்கள் வேதத்தை ஒட்டியும் வெட்டியும் பேசப்பட்டுள்ளது. அதனால் வேதத்தை  அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது

விமர்சனப் பார்வையில்லாமல் எதையும் ஏற்கவோ, மறுக்கவோ முடியாது. விமர்சனம் இல்லாமல் எதையும் வெளிப்படுத்த முடியாது. இந்த நூலில் பெரிய விவாதங்கள் எதுவும் நிகழ்த்தப்படவில்லை, கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படவில்லை. அறிமுகம் என்பதனால் விமர்சனங்கள் மேம்பட்ட நிலையில் (Advanced Level) செய்யப்படவில்லை. எதையும் அறிந்தால் தான் அதனை விமர்சிக்க முடியும். அதனால் இந்த அறிமுகத்துக்குத் தேவைப்படுகிற விமர்சனம் மட்டும் இந்நூலில் வைக்கப்பட்டுள்ளது. தொடக்க நிலை வாசகர்களுக்குத் தேவைப்படுகிற விமர்சனம் இதில் உள்ளது.

இந்த நூலுக்கு இந்தியத் தத்துவம் என்று தலைப்பிடப்பட்டிருந்தாலும், இந்த முதல் தொகுதியில் இந்துத் தத்துவத்தின் அடிப்படைகள் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்து தத்துவத்தின் அடிப்படை நூல்கள் மூன்று (பிரஸ்தானத்திரயம்) மட்டுமே விளக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நூலில், இந்து தத்துவத்தின் அடிப்படை நூல்களின் கருத்துக்கள் உள்ளது உள்ளபடி (As it is) தொகுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கள் இந்து தத்துவ நூல்களின் கருத்தாகவே கொள்ள வேண்டும், எனது கருத்துக்கள் போகிற போக்கில் சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் உள்ளவை இந்து தத்துவ நூலின் கருத்தாகவே கொள்ள வேண்டும்.

 இதற்கு அடுத்தத் தொகுதியில்தான், இந்துத் தத்துவத்தின் போக்குகளான துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் போன்ற தத்துவங்கள் விளக்கப்பட இருக்கின்றன. மேலும் தொடக்கக் காலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தத்துவ-மதக் கருத்துக்கள் (பரிபாடல், திருமுருகாற்றுப்படை), மணிமேகலையில் காணப்படும் தத்துவங்கள், நீலகேசியில் காணப்படும் தத்துவங்கள், சித்தர் தத்துவம், பக்தி இயக்கம், சைவ சித்தாந்தம், சிறு தெய்வ வழிபாடு, ஆசீவகம் போன்றவை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியத் தத்துவத்தில் காணப்படும் கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் ஆகிய இரு சிந்தனைப் போக்குகளை பிரித்து விளக்கம் கொடுக்கப்பட இருக்கிறது.

தத்துவங்கள் வாழ்க்கைக்கு வழியாட்டியா? வாழ்க்கையை விடுவதற்கு (முக்திக்கு) வழியாட்டியா? என்ற கேள்வி இந்திய தத்துவங்களைப் பார்க்கும் போது ஏற்படுகிறது.

      இந்தியாவில் உள்ள பெரும்பாலான கருத்துமுதல்வாதத் தத்துவங்கள் வாழ்க்கையை விளக்குகிறது, அல்லது வாழ்க்கையை விட்டு விலகி முக்திக்கு வழிகாட்டுகிறது. ஆனால், பொருள்முதல்வாதம் வாழ்க்கையின் நிலைமையை அறிந்து கொள்வதோடு, அதனை மாற்றுவதற்கு வழியையும் காட்டுகிறது.

சுவேதாஸ்வதர உபநிடதம், ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. தத்துவங்கள் தோன்றுவதற்கு இந்த கேள்வியே அடிப்படையாகும். “சுகதுக்கங்களை ஏன் அனுபவிக்கிறோம்? உலகின் நடைமுறை எவ்வாறு அமைகிறது?”.

உபநிடதம் எழுப்பும் இந்தக் கேள்விக்கு சரியான விடையை, இந்த உலகத்திலேயே கண்டடைந்தால், அப்போது இந்த உலகில் சிறப்பாக வாழ்வதற்கு வழி பிறக்கும். அப்படிச் சிறப்பான வாழ்வு கிடைத்தால், ஏழு ஜென்மம் என்ன, தொடர் பிறப்பு கிடைக்கும் என்றால், அதை மக்கள் விரும்பி வரவேற்பர். அதாவது வாழ்வதற்கு விருப்பம் கொள்வர். மற்றவர்களை வாழ வைப்பதிலும் மகிழ்ச்சி கொள்வர். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்து கொள்வர்.

சுக-துக்கங்களை ஏன் அனுபவிக்கிறோம்?

இதற்கு ஆன்மீக தத்துவங்கள் கூறுவது என்ன?

கர்ம வினைகளால் ஏற்பட்டது என்பதே அதன் பதில், மேலும் சுகதுக்கங்கள் உலகின் இயல்பு, சுகதுக்கங்களில் இருந்து விடுபட வேண்டுமாயின், முக்தியை நாட வேண்டும். பிரச்சினைக்கானத் தீர்வை, பிரச்சினைத் தோன்றிய இடத்தில் தேடாமல், அதனை விட்டு விலகுவதற்கு வழிகாட்டுகிறது ஆன்மீகம்.

சுக-துக்கங்கள் சமூகத்தில் எப்போது ஏற்பட்டது, ஏன் ஏற்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டி, அதனைப் போக்கும் வழியினையும் பொருள்முதல்வாதம் எடுத்துக் காட்டுகிறது.

உலகில் ஏற்றத் தாழ்வு காணப்படுவதற்கான காரணத்தையும், அதனை மாற்றுவதற்கான வழியையும் பொருள்முதல்வாதம் காட்டுகிறது. இந்த நவீனப் பொருள்முதல்வாதம் மார்க்சியத் தத்துவமாகும். இதனை அடுத்தத் தொகுதியில் காணலாம்.

      இந்த நூலில் இடம் பெற்ற தொடக்கப்பகுதிகள் நீயூஸ்கடை (https://www.newskadai.com) என்கிற இணையத் தளத்தில் வெளிவந்தவையாகும், மற்றவைகள் அதன் தொடர்ச்சியாக எழுதப்பட்டவையாகும். இந்த நேரத்தில் நீயூஸ்கடை நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாகத் தோழர் மகிவர்மனுக்கு மிக்க நன்றி.

இந்த நூல் இந்தளவுக்குச் சிறப்பாக வந்துள்ளது என்றால், அதற்கு உழைத்த தோழர்கள் இரா.புருஷோத்தமன், த.ஜீவானந்தன், தா.சந்திரன், சுந்தரசோழன் ஆகியோர்களுக்கு நன்றி.

எனது எழுத்துக்களை ஊக்கப்படுத்திய தோழர்கள் த.ந.தனராமன், ஆ.பத்மாவதி, மகேஷ் ராமநாதன், பழனி சின்னசாமி ஆகியோருக்கு நன்றி. இதனைச் சிறப்பாக வெளியிட்ட பொன்னுலகம் புத்தக நிலையத் தோழர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அட்டைப்பட ஓவியர் தோழர் மாணிக்கம் நூலின் சாரத்துக்கு ஏற்ப அட்டைப் படத்தை வடிவமைத்துத் தந்துள்ளார் அவருக்கும் நன்றி.

இந்த நூல் எழுதும் போதும் சரி, எழுதி முடிக்கும் போதும் சரி, ஏன் எப்போதும் எனது நினைவில் வாழும் தோழர் கோவை ஈஸ்வரன் அவர்களைப் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்தியத்துவ மார்க்சியம் (அத்வைத மார்க்சியம்) என்ற பெயரில் கூறப்படும் தோழர் காலன்துரை அவர்களின் கருத்தை இருபது ஆண்டுகளுக்கு முன் விமர்சித்து எழுதினேன். அந்த விமர்சனத்தை படியெடுத்து காலன்துரை நாடுமுழுதும் எடுத்துச் சென்று பல தோழர்களுக்கு படிக்கக் கொடுத்தார். (இதற்குப் பதில் விமர்சனம் இதுவரை காலன்துரை அளிக்கவில்லை). அந்த விமர்சனத்தைக் கோவை ஈஸ்வரன் அவர்களும் படித்தார், படித்தது முதல் என்னை இந்தியத் தத்துவத்தை மார்க்சிய அணுகுமுறையில் எழுதும்படி கேட்டுக் கொண்டார். ஒவ்வொருமுறை நேரில் சந்திக்கும் போதெல்லாம் இதையே வலியுறுத்தி வந்தார். அவர் நம்மோடு வாழ்கின்ற போதே எழுதி முடிக்கவில்லை என்பது வருத்தத்தைத் தருகிறது. இருந்தாலும் இந்த அறிமுக நூலை எழுதுவதற்குக் கோவை ஈஸ்வரன் அவர்கள் அன்று கொடுத்த ஊக்கமே பெரும் காரணம் ஆகும், அதனால் இந்த நேரத்தில் கோவை ஈஸ்வரன் அவர்களின் நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

      இந்த நூலுக்கு மூன்று பேர் அணிந்துரை அளித்துள்ளனர். ஒவ்வொரு அணிந்துரையும் ஒவ்வொரு பார்வையில் எழுதப்பட்டுள்ளது. இந்த அணிந்துரைகள் இந்த நூலைப் படிக்கு வாசகனை தயார்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

எனது தத்துவத் தேடல் சுமார் பதினெட்டு வயதில் தொடங்கியது. அப்போதே உபநிடதங்களைப் படிக்கத் தொடங்கிவிட்டேன். பவுத்தம், சமணம் போன்ற தத்துவங்களையும் இளமைக் காலத்திலேயே படித்தேன். சைவ சித்தாந்தம் நான் பிறந்ததில் இருந்தே எனது காதில் விழுந்து கொண்டிருந்தது. வைணவம் தேடிபிடித்துப் படித்தேன். தொடக்கக் காலத்தில் இருந்தே அத்வைதம் படித்துவருகிறேன். ஆதி சங்கரரின் “விவேக சூடாமணி” என்ற நூலை இளமையிலேயே படித்தேன். அத்வைதத்தின் சாரம் விளக்கத்துடன் இந்நூலில் முழுமையாக உள்ளது.

எனது தத்துவத் தேடலின் தொடர்ச்சியானது பொருள்முதல்வாதத்தில் நிறைவடைந்தது. அதன் பிறகு தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, நா,வானமாமலை போன்றோர்களின் தத்துவ நூல்களைப் படித்தேன், அது என் தத்துவக் கண்ணோட்டத்தை வளப்படுத்தியது.

என்னை ஒரு தத்துவ அறிஞராகவோ, தத்துவ எழுத்தாளராகவோ என்றுமே கருதியதில்லை. தத்துவம் படிக்கும் மாணவன் அவ்வளவுதான். நான் படித்ததை உங்களோடு பகிர்கிறேன். எனக்குப் புரிந்த தத்துவத்தை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முயல்கிறேன். சிரமப்பட்டுப் படித்ததை, மற்றவர்கள் குறைந்த சிரமத்திலேயே படித்து புரிந்து கொள்வதற்கு உதவி செய்ய நினைக்கிறேன்.

தத்துவத்தைப் படிக்கின்ற போதும் சரி, சமூகத்தை கவனிக்கும் போதும் சரி என்னுள் ஏற்படுகிற விமர்சனத்தை உங்கள் முன் வைக்கிறேன். இது ஒரு தொடக்கப் புள்ளிதான். இடதுசாரிகள் தத்துவத்தில் எவ்வளவோ கடக்க வேண்டியிருக்கிறது. தொடங்காமல் கடக்க முடியாது. யாராவது தொடங்கித்தானே ஆக வேண்டும். தொடக்கம் சரியாக இருந்தால், பயணம் விரைவாக செல்லும். தத்துவத்தில் விருப்பம் உள்ள அனைவரையும் இணைத்துப் பயணத்தைத் தொடர்வோம்.

தத்துவத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்குத் தேவைப்படுகிற நூல்கள் தமிழிலேயே கிடைக்கின்றன. படித்தறிவதற்கு நாம்தான் தயாராக வேண்டும். படித்ததை ஒழுங்குபடுத்த வேண்டும், அப்போதுதான் அது கண்ணோட்டமாக மாறும். கண்ணோட்டத்தின் வழியே தத்துவத்தை நடைமுறையில் செயல்படுத்த முடியும்.

ஒவ்வொரு தத்துவத்துக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. எதார்த்தத்தைப் விமர்சிப்பதிலேயே, வியாக்கியானம் செய்வதிலேயே காலம் கடத்துகிற தத்துவம் இருக்கிறது, அந்தத் தத்துவம் கருத்துமுதல்வாதம். இந்தக் கருத்துமுதல்வாதத் தத்துவம் வாழ்ந்த வாழ்க்கையை விளக்குகிறது.

எதார்த்தத்தைப் புரிந்து சமூகத்தை மாற்றும் தத்துவமாக இருப்பது பொருள்முதல்வாதம் ஆகும். பொருள்முதல்வாதம் வாழ்ந்த வாழ்க்கையைப் புரிந்து கொண்டு, வாழ்கின்ற வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. பொருள்முதல்வாதத் தத்துவம் இந்த உலகை வெறுக்கவில்லை, உலகைப் புரிந்து மாற்றுகிறது. இதனை அடுத்த தொகுதியில் பார்க்கப் போகிறோம். அதற்கு முன் இந்த முதல் தொகுதியை படிப்போம்.

      படிப்படியாக புரிந்து கொள்வதற்கு மாறாக உடனடியாக படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களை மனதில் கொண்டு, இந்நூலின் இறுதியில் ஒரு பின்னிணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. “சுவாமி விவேகானந்தரின் “செயல்முறை வேதாந்தம் என்கிற நூலுக்கு பொருள்முதல்வாதப் பார்வையில் விமர்சனம்” இதுவே அந்தப் பின்னிணைப்பு. இதைப் படித்தால் கருத்துமுதல்வாதத்தை பொருள்முதல்வாதம் எவ்வாறு விமர்சிக்கிறது என்பதை சுருக்கமாக அறிந்து கொள்ள முடியும். இந்த அடிப்படையில்தான் கருத்துமுதல்வாதத்தின் வர்க்க சார்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் தொகுதி – I - அணிந்துரை - முனைவர். இரா. புருஷோத்தமன்

 அணிந்துரை:- 

                                      முனைவர். இரா. புருஷோத்தமன்

                               ஆய்வுத் திட்ட உதவியாளர்

தத்துவத்துறை

சென்னைப் பல்கலைக்கழகம்



தத்துவம் என்றால் ஞானத்தின் மீதான காதல் (Love of Wisdom)  என்பது பொதுவான வரையறை. தத்துவத்துக்கு பல்வேறு வரையறை கூறப்படுகிறது. எந்த வரையறையாக இருந்தாலும் அது சமூகத்துக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

கிரேக்க தத்துவ அறிஞர் சாக்ரடீஸின் மாணவரான பிளேட்டோ, தத்துவத்தின் நோக்கமானது இயற்கையைக் கண்டுபிடிப்பதும், அதன் உண்மைப் பொருளைக் கண்டடைவதும் என்கிறார். தத்துவம் ஒர் அறிவுத்துறை, இது இயற்கை, சமூகம் பற்றிய உண்மைகளையும், அது கொண்டுள்ள காரணகாரியத் தொடர்புகளையும் ஆராய்கிறது.

கொள்கை வழியிலான தரவுகளை மட்டுமல்லாது அன்றாட வாழ்க்கை அனுபவங்களையும், சமூகப் பிரச்சினைகளையும் ஆராய்கிற ஒரு பரந்துபட்ட துறையாக தத்துவம் விளங்குகிறது. இது கடந்த காலத்தை மட்டும் பேசுவதில்லை, இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றையும் ஆராய்கிறது.

ஒவ்வொரு தேசத்துக்கும் என்று  ஒவ்வொரு தத்துவம் இருக்கின்றது. மேலைநாட்டு தத்துவம் (Western Philosophy). கீழை நாட்டு தத்துவம் (Eastern Philosophy), சீனத் தத்துவம் (Chinese Philosophy), ஆப்பிரிக்க தத்துவம் (African Philosophy), அரேபிய தத்துவம் (Arabian philosophy) போன்ற பல்வேறு வகையில் தத்துவத்தை பிரிக்கிறோம். எத்தகைய தத்துவமாக இருந்தாலும் அனைத்துக்கும் அடிப்படை ஒன்றுதான்.

சிலவற்றுக்கு சில நாடுகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மேலைநாடுகளில் புறநிலை நோக்கில் இருந்து அனைத்தையும் ஆராய்ந்து உலகை அறிவதில் கவனம் செலுத்துகிறது. இந்தியத் தத்துவத்தை ஒட்டுமொத்தத்தில் பார்க்கும் போது, ஆன்மாவின் இயல்பு, பிரம்மத்தின் தன்மை, முக்தியின் அவசியம், பாவம், புண்ணியம், மறுபிறப்பு, மற்றும் அகநிலை உலகுக்கு (உணர்வுக்கு) மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு துறைக்கும் பல்வேறு கிளைகள் (Branches) இருப்பது போல,  தத்துவத்திற்கும் பல்வேறு கிளைகள்  இருக்கின்றன. அவையாவன: புலன் கடந்த அறிவியல் (Metaphysics),  அறிவு ஆராய்ச்சி இயல் (Epistemology), அறவியல் (Ethics), அளவை இயல் (Logic), அழகியல் (Aesthetics) சமூகத் தத்துவம் (Social Philosophy). மேலும், தத்துவம் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

.கா.ஈஸ்வரன் தனது நூலில் சமூகக் கண்ணோட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியாதாகத் தெரிகிறது.

இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் கல்வி வெளியிலும் சரி, கல்வி வெளியையும் தாண்டி தத்துவத்துறையில் பல்வேறு ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. ஆனால், தமிழ்ச்சூழலில் விரல் விட்டு எண்ணி விடலாம். இங்கே மிகவும் சொற்ப அளவில் தான் கல்லூரியில் பல்கலைக்கழகத்தில் தத்துவம் ஒரு பாடமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. இது தான் இன்றைய எதார்த்த நிலை. தத்துவம் கேட்பாரற்று இறக்கும் தருவாயில் உள்ள துறை (Philosophy is a dying subject) என்ற எண்ணமும் உள்ளது. ஆனால், தத்துவத்தின் அருமைத் தெரிந்தவர்கள் உணர்ந்தவர்கள் மட்டும்,   கல்விப்புலத்திலும் சரி, சமூகத்திலும் சரி, தத்துவத்தைப் போற்றுகிறார்கள்; கொண்டாடுகிறார்கள். அதில் இயங்குகிறார்கள், அதைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள், மேலும் அதை வளர்ப்பதற்கும் காப்பாற்றுவதற்குமான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில், .கா.ஈஸ்வரன் தத்துவத்தில் இயங்குவதும் தத்துவத்தைப் பற்றி எழுதுவதும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

தோழர் .கா.ஈஸ்வரன் எனக்கு முகநூல் மூலம் தான் அறிமுகமானவர். அதற்கு முன்பு, எனது நண்பர்களும் தோழர்களும் அவரைப் பற்றி சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இணையதளத்தில் தத்துவம், பொதுவுடைமை சித்தாந்தம், சமூகம் சார்ந்து எழுதியும் பேசியும் வருபவர். தொடர்ந்து மார்க்சிய வகுப்புகள் எடுத்து வருகிறார். அவர் பேசிய ஒரு சில யூடுப் காணொளிப்பதிவுகள் கேட்டு இருக்கிறேன். இந்நூலாசிரியர் மார்க்சிய தத்துவம், மதத்தைப் பற்றி மார்க்சியம், லெனின் வாழ்வும் படைப்பும், மார்க்ஸ்-எங்கெல்ஸ் வாழ்வும்-படைப்பும் போன்ற நூல்களின் தலைப்புகளை இணையத்தில் பார்த்து இருக்கேன். ஆனால், எதுவும் படித்தது இல்லை.

அண்மையில் தான் நேரிடையாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எழுதிவரும் இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் என்கிற நூலைப் படித்து கருத்துரைக்கும்படி கேட்டார். முதல் முறையாக அவரின் எழுத்தை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதுவும் நூலின் கையெழுத்துப் பிரதியிலேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அ.கா.ஈஸ்வரனுடன் உரையாடும் போது தத்துவத்தின்மீது அவருக்கு இருக்கிற காதல் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. அவரிடம் தத்துவம் சம்பந்தமாக விவாதிக்கும்போது சரி; அலுவலகத்தில் சேகரிச்சு வைத்த தத்துவம் மற்றும் சமூகம் சார்ந்த பல புத்தகங்களைப் பார்க்கும் போதும் சரி, இவரின் எழுத்துக்களை இணையத்தில் கூர்ந்துக் கவனிக்கும் போதும் சரி, இவர் எழுத்துத்துறையில் இயங்குவதைப் பார்க்கும்போது சரி, இவர் கல்விப் புலத்தில் தத்துவ பேராசிரியராக இருந்தால் எப்படி இருக்கும் என்று பல முறை யோசித்து இருக்கேன்.

நாங்கள் இளங்கலை முதுகலை பட்டம் மெய்யியல் துறை படிக்கும் போது யாராவது தமிழில் தத்துவப் புத்தகம் எழுதி இருக்க மாட்டார்களா என்று நூலகம் நூலகமாக தேடுவோம். நேரடி தமிழில் தத்துவ நூல்கள் மிகவும் குறைவாகத்தான் வெளிவந்துள்ளன.

      இந்நிலையில் இன்று அ.கா.ஈஸ்வரன் எழுதிய இந்திய தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் என்ற தமிழ் நூல் வெளிவந்துள்ளதைப் பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

முதல் தொகுதியான இந்த நூலில் வேத சம்கிதைகள், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், கீதை ஆகியவற்றை மட்டுமே பேசுகிறது.

வேத சம்கிதையின் உண்மைத் தன்மையையும், அதன் சமூகத்தையும் இந்த நூல் அப்படியே படம்பிடித்து காட்டுகிறது. இதனடிப்படையில், வேதங்களில் இல்லாதது ஒன்றுமே இல்லை என்று பொதுச்சமூகத்தில் வேதத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட கருத்தாங்கள் கேள்விக்கு உள்ளாகிறது. அத்துடன் சிந்துவெளி நாகரீகத்தோடு இதனை ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளப் பகுதிகள், பொதுவாசகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இந்தப் பகுதியில் கூறப்பட்டதை புதியதாக படிப்பவர்கள், சிந்துவெளியைப் பற்றி அறிவதற்கு பயணிப்பர் என்று எதிர்பார்க்கலாம். நூலாசிரியர் தமது கண்ணோட்டத்துக்கான ஆதாரத்தை பல ஆய்வாளர்களிடம் இருந்தும், அறிஞர்களிடம் இருந்தும் எடுத்துக் காட்டியுள்ளார்.

உபநிடதங்களில் காணப்படும் தத்துவங்களை தேடி திரட்டித் தொகுக்கப்பட்டுள்ளதை காணும் போது .கா.ஈஸ்வரன் அவர்களின் கடினமான உழைப்பு தெரிகிறது. குறிப்பாக சாந்தோக்கியம்,  பிருகதாரண்யகம் ஆகிய இரண்டு பெரிய உபநிடதங்களில் உள்ள தத்துவங்களை மட்டும் திரட்டித் தந்துள்ளது அவ்வளவு எளிதான செயலாகத் தெரியவில்லை.

உபநிடதங்கள் பகவத்கீதை ஆகியவற்றைப் பற்றி எழுதியதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பிரம்ம சூத்திரத்தை .கா.ஈஸ்வரன் இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. தத்துவ நூல்களில் பொதுவாக பிரம்ம சூத்திரத்தைப் பற்றி குறைவாகவே விளக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்நூலாசிரியர் பிரம்ம சூத்திரத்தின்  முதல் நான்கு சூத்திரங்களை விளக்கியுள்ளார். பிரம்ம சூத்திரம் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதற்கு இது சான்றாக அவர் காட்டியிருக்கலாம்.

உபநிடதம், பிரம்ம சூத்திரம் ஆகிய இரண்டிலும் உள்ள தத்துவத்தையும் ஓரளவுக்கு அன்றைய சமூகச் சூழ்நிலையை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளார். பகவத்கீதை பகுதிக்கு வந்தவுடன் அவரது விமர்சனங்கள் படிப்படியாக வெளிப்படத் தொடங்குகிறது.

பலன் கருதாமல் உனக்கு விதிக்கப்பட்ட கடமையை செய் என்கிற கீதையின் வாசகம் அவரை விமர்சிக்க வைத்துள்ளதாகத் தெரிகிறது. கீதையில் உள்ள அவரது விமர்சனங்களைப் பார்க்கும் போது இந்தியத் தத்துவங்கள் முழுமையும் அவர் எவ்வாறு எழுதப் போகிறார் என்பதை அறியத் தூண்டுகிறது.

இந்தப் புத்தகத்தை கூர்ந்து வாசிக்கும்போது பல இடங்களில் வஞ்சப்  புகழ்ச்சியாக தோன்றுகிறது.

ஒரு தேடல் தான் மற்றொரு தேடலுக்கு நம்மை இட்டுச்செல்லும். இந்தப் புத்தகம் ஒரு வித்து ஆகும். அந்த வகையில், இந்த நூலைப் படித்தப் பிறகு இத்துறைகளில் மார்க்சிய அணுகுமுறையில் ஆய்வு செய்த நா.வானமாமலை, கோ.கேசவன், தேவி பிரசாத் சட்டோபாத்யா, டி.டி கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா போன்றோர்களின் நூலை படிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலிடுகிறது.

தத்துவஞான விஷயங்களைக் கற்றவர்கள், அதைப் பலரும் புரிந்துக் கொள்ளும் வண்ணம் பல இடங்களுக்கு எடுத்துச்சென்று பிரசாரம் செய்யுங்கள்!” என்கிறார் எபிகூரஸ். அந்த வகையில், அ.கா.ஈஸ்வரன், இந்தியத் தத்துவத்தை விசாரணை செய்து,  நமக்கு கோர்வைப்படுத்தி எளிமையாக வழங்கி உள்ளார்.

தத்துவம் எல்லாத் தரப்பு மக்களுக்கும் சென்றுச் சேர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தான் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தை சர்வதேச மெய்யியலுக்கான வாரமாக கொண்டாடப்படுகிறது.

தத்துவத்தை பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும், இந்தியத் தத்துவத்தில் ஆய்வு செய்யும் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் இந்நூல் மிகவும் பயன்படும். தத்துவத் துறை சார்ந்தவர்கள் மட்டுமல்ல, மற்ற துறைகளில் இருப்பவர்களும் படிக்க வேண்டிய நூல் இது.

தமிழ்ச் சமூகத்திற்க்கு தத்துவத்தில் புதிய வரவான இந்த நூலைப் படிக்கும் போது அடுத்து இந்தியத் தத்துவம்: தொகுதி இரண்டு வெளிவர இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இரண்டாம் தொகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ஒரு எழுத்தாளனின் கடமை என்னவென்றால் தனது வாசிப்பனுவங்களை வாசகனுக்கு கடத்துதல். இதனை நூலாசியரியர் சரியாக செய்துள்ளார். இந்த நூலைப் படித்து பெற்ற வாசிப்பனுபவம், சமூக மாற்றத்துக்கான விதையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அணிந்துரை எழுத வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். தோழர் .கா.ஈஸ்வரனுக்கும், இதுபோன்ற தத்துவ நூலை வெளியிடுகின்ற பொன்னுலகம் புத்தக நிறுவனத்துக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.