Sunday 29 November 2020

வகுப்பு 4 :- “காரல் மார்க்ஸ்” – மார்க்சின் பொருளாதாரப் போதனை (-லெனின்)

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட வகுப்பின் குறிப்பு)

லெனின் எழுதிய “காரல் மார்க்ஸ்” (மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்) என்ற கட்டுரையைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். 

போன வகுப்பில் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றும் வர்க்கப் போராட்டம் ஆகிய இரண்டையும் பார்த்தோம். வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை. 

வாழ்நிலை என்றால் என்ன? 

ஒவ்வொரு மனிதனும் தமது வாழ்வாதரத்துக்காக வேலை செய்யும் போது பொருளாதார உறவுகள் ஏற்படுகின்றன. இந்த உற்பத்தி உறவுகளே வாழ்நிலை எனப்படுகிறது. 

இந்த வாழ்நிலை என்கிற உற்பத்தி உறவுகளில் இருந்துதான் சிந்தனை தோன்றுகிறது, அதாவது உணர்வு தோன்றுகிறது. சிந்தனையில் இருந்து வாழ்நிலை தோன்றவில்லை. 

இதைத்தான் போன வகுப்பில் பார்த்தோம். 

இன்றைய வகுப்புக்குச் செல்வோம். “மார்க்சின் பொருளாதாரப் போதனை”யைப் பற்றி இன்று நாம் பார்க்கப் போகிறோம். 

இந்தப் பகுதியை லெனின் தொடங்கும் போது மார்க்ஸ் “மூலதனம்” நூலில் எழுதிய முன்னுரையை மேற்கோளாகக் கொடுத்துள்ளார். நவீன முதலாளித்துவச் சமூகத்தின் இயக்கத்திற்கு உரிய பொருளாதார விதியை வெளிப்படுத்திக் காட்டுவதுதான் இந்த நூலின் இறுதி நோக்கமாகும் என்று மார்க்ஸ் அதில் கூறியுள்ளார். 

அடுத்து அரசியல் பொருளாதாரம் எதை விளக்குகிறது என்பதைக் கூறுகிறார். 

குறிப்பிட்ட சமூகத்தில் காணப்படும் உற்பத்தி முறையின் தோற்றம், வளர்ச்சி, நலிவு ஆகிய கட்டங்களை ஆராய்வதே அரசியல் பொருளாதாரத்தின் பணியாகும். 

முதலாளித்துவ உற்பத்தி முறையை மார்க்ஸ் ஆராய்கிறார். முதலாளித்துவச் சமூகத்தில் ஆட்சி செலுத்துவது சரக்குகளின் உற்பத்திதான், அதனால் மார்க்ஸ் தமது பகுப்பாய்வை “சரக்கில்” இருந்து தொடங்குகிறார். 

சரக்கு என்பது மனிதத் தேவைகளை நிறைவேற்றுகிற ஒரு பொருள். 

மனிதனின் தேவை எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம், பசியாக இருக்கலாம், உடையாக இருக்கலாம், இருப்பிடமாக இருக்கலாம், கேளிக்கையாகக்கூட இருக்கலாம். இது போன்ற தேவைகளை நிறைவு செய்கிற பொருள் தான் சரக்கு. 

உணவு என்னும் சரக்கு பசியைப் போக்குகிறது. சட்டை, வேட்டி என்னும் சரக்கு உடைத் தேவையைத் தீர்த்து வைக்கிறது. வீடு என்கிற சரக்கு இருப்பிடத் தேவையை நிறைவேற்றுகிறது. இவ்வாறு ஒவ்வொரு சரக்கும் மனிதனின் தேவைகளை நிறைவேற்றுகிறது. 

சரக்கு இரண்டு தன்மைகளைக் கொண்டுள்ளது, ஒன்று “பயன்மதிப்பு” மற்றொன்று “பரிவர்த்தனை மதிப்பு.” 

பயன்படாத பொருளை சரக்கு என்று சொல்ல முடியாது. பயனில்லாத பொருளை உற்பத்தி செய்தால் அதைச் சந்தையில் விற்கமுடியாது. அதனால் முதலாளி பயனுள்ள சரக்கையே உற்பத்தி செய்கிறார். 

சரக்கின் பயன்பாட்டையே பயன்பதிப்பு என்று கூறப்படுகிறது. 

சரக்கிற்குப் பயன்மதிப்பைப் போலவே இன்னொரு மதிப்பு இருக்கிறது என்று பார்த்தோம் அதுதான் பரிவர்த்தனை மதிப்பு. 

சந்தையில் பொருட்கள் சம மதிப்புக்குத்தான் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பயனுள்ள சரக்குக்கு, சம மதிப்புள்ள மற்றொரு பயனுள்ள சரக்குக்குப் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. 

இரண்டு சட்டைக்கு, ஒரு வேட்டி பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இந்தப் பரிவர்த்தனை பயன்மதிப்பைக் கொண்டு அளவிட முடியாது. அதாவது இரண்டு சரக்கின் சம மதிப்பை பயன்மதிப்பைக் கொண்டு அளந்திட முடியாது. பரிவர்த்தனை மதிப்பைக் கொண்டுதான் அளவிட முடியும், 

அப்படி என்றால் பரிவர்த்தனை மதிப்பு எவ்வாறு அளவிடப்படுகிறது? 

இரண்டு பொருட்களில் அடங்கியுள்ள உழைப்பின் அளவைக் கொண்டே பரிவர்த்தனை மதிப்பு அளக்கப்படுகிறது. 

இரு சரக்கும் உழைப்பின் உற்பத்திப் பொருளாக இருப்பதனால் தான் மதிப்பை ஒப்பிட்டுப் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. சமூக வழியிலான உழைப்புப் பிரிவினையின் வளர்ச்சிக் கட்டத்தில்தான் சரக்கு உற்பத்தி முழு வளர்ச்சி பெறுகிறது. 

சரக்கின் இரட்டைத் தன்மையை மேலே பார்த்தோம். சரக்கு என்பது பயன்மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு என்கிற இரண்டு தன்மைகளைக் கொண்டுள்ளது. அதே போல உழைப்பிலும் இரட்டைத் தன்மை இருக்கிறது. ஒன்று “ஸ்தூலமான உழைப்பு” மற்றது “ஸ்தூலமற்ற உழைப்பு”. 

ஒரு தச்சன் கட்டிலை செய்கிறார், ஒரு நெசவாளி துணியை நெய்கிறார் இது ஒரு ஸ்தூலமான உழைப்பாகும். ஆனால் உழைப்பில் இன்னொரு உழைப்பும் அடங்கி இருக்கிறது என்று பார்த்தோம். அது ஸ்தூலமற்ற உழைப்பு. இது ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த உழைப்பு அல்ல. சூட்சுமமான மனித உழைப்பு என்பதையே ஸ்தூலமற்ற உழைப்பு என்று கூறுகிறோம். 

பொருளை உற்பத்தி செய்யும் போது மனிதனின் மூளை, தசை, நரம்பு ஆகியவற்றை இயக்கி அதன் மூலம் செலவிடப்படுகிற சக்தியே ஸ்தூலமற்ற உழைப்பு எனப்படும். 

ஸ்தூலமான உழைப்பைச் சாராது தனியே பரிசீலனை செய்திடும்போது உழைப்பு மனிதனது உழைப்புச்சக்தி என்ற நிலையில் அது ஸ்தூலமற்ற உழைப்பு எனப்படுகிறது. 

ஸ்தூலமான உழைப்புக் கட்டில், துணி என்கிற பயன்மதிப்பைப் படைக்கிறது. அனைத்துப் பொருட்களுக்கு உள்ளும் பொதுவாகக் காணப்படும் மனித உழைப்பு என்பது ஸ்தூலமற்ற உழைப்பு ஆகும். உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள் அனைத்தும் சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டுதான் அளக்கப்படுகிறது. மதிப்புகள் என்ற முறையில் அனைத்து சரக்குகளும் கெட்டியாக்கப்பட்ட உழைப்பு நேரத்தின் திட்டவட்டமான திரள்களே என்று மார்க்ஸ் கூறுகிறார். 

ஸ்தூலமான உழைப்பு சரக்கின் பயன்மதிப்பைப் படைக்கிறது, ஸ்தூலமற்ற உழைப்புப் பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது. 

இந்த இரட்டை தன்மையை முதன்முதலில் மார்க்ஸ்தான் கண்டு பிடித்தார். இதனைச் சரியாகப் புரிந்து கொண்டால்தான் மார்க்சின் அரசியல் பொருளாதாரத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். 

அடுத்து லெனின் பணத்தைப் பற்றிப் பேசுகிறார். சரக்கு பரிவரித்தனையின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் தோன்றியது. 

பணம் பல்வேறு பணிகளைச் செய்கிறது. சேர்த்து வைத்தல், கொடுப்புச் சாதனம், உலகப் பொதுப் பணம் ஆகிய வேலைகளைப் பணம் செய்கிறது 

இதுவரை மதிப்புப் பற்றிதான் லெனின் விளக்கி வந்தார். இதற்கு அடுத்ததாக உபரி மதிப்பு பற்றி விளக்குகிறார். 

உபரி மதிப்பு 

முதலாளித்துவச் சமூகத்திற்கு முன்பு உள்ள சமூகத்தில், தமக்குத் தேவைப்படுவதையே உற்பத்தி செய்தனர். தேவை போக மீதமுள்ளதை பண்ட மாற்றாக மாற்றிக்கொள்வர். அதாவது தாம் உற்பத்தி செய்த மிகைப் பொருளை தமக்குத் தேவைப்படுகிற பிற பொருளுக்காகப் பரிவர்த்தனை செய்து கொள்வர். 

ஆனால் முதலாளித்துவச் சமூகத்தில் சரக்கு விற்பதற்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாற்றத்தை கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ உற்பத்திக்கு முன்பு, தம்மிடம் உள்ள மிகையான உற்பத்திப் பொருளை பணத்திற்கு விற்று அந்தப் பணத்தைக் கொண்டு தேவைப்படுகிற பொருளை வாங்குவர். இதனைச் சரக்கு-பணம்-சரக்கு என்று கூறலாம். அதாவது தம்மிடம் உள்ள சரக்கை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு தமக்குத் தேவையான சரக்கு வாங்கப்படுகிறது. இந்தச் சரக்கு புழக்கத்தின் பொதுச் சூத்திரம் ச-ப-ச அதாவது சரக்கு-பணம்-சரக்கு ஆகும். 

ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையில், மூலதன ஆதிக்கம் தொடங்கிவிட்டது. மூலதனத்தின் பொதுச் சூத்திரம் பணம்-சரக்கு-பணம் என்கிற முறையில் நடைபெறுகிறது. ப-ச-ப என்று இதைச் சுருக்கலாம். 

முதலாளித்துவ உற்பத்தி முறையில் சரக்கு விற்பதற்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது என்று பார்த்தோம். பணத்தைக் கொண்டு சரக்கும், அதைக் கொண்டு பணமும் பெறப்படுகிறது. ஆனால் கூடுதலாகப் பணம் பெறப்படுகிறது. அந்தக் கூடுதலான பணம் எவ்வாறு பெறப்படுகிறது என்பதைப் பற்றி மார்க்சுக்கு முன்பாக ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ என்கிற பொருளாதார அறிஞர்கள் ஆராய்ந்தனர். அவ்வாறு ஆராய்ந்து அவர்கள் மதிப்பு பற்றிய உழைப்புக் கோட்பாட்டைப் படைத்தனர். 

அதாவது உழைப்பே மதிப்பைப் படைக்கிறது. இதில் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் பல குழறுபடிகள் இருந்தது. இந்தக் கோட்பாட்டில் பல குறைபாடுகளை மார்க்ஸ் கண்டுபிடித்து அதனை நீக்க முயற்சித்தார், அப்படிப்பட்ட முயற்சியில் கிடைத்ததுதான் உபரி மதிப்புக் கோட்பாடு. 

முதலாளித்துவ உற்பத்தி முறையில் மூலதனத்தின் பொதுச் சூத்திரம் பணம்-சரக்கு-பணம். பணத்தில் தொடங்கி இறுதியில் பணத்தில் முடிகிறது. ஆனால் அந்தப் பணம் முதலில் போட்ட பணத்தைவிடக் கூடுதலாகக் கிடைக்கிறது. 

இந்தக் கூடுதல் பணமே உபரி மதிப்பு. 

இந்தக் கூடுதல் பணம்தான் மூலதனமாக மாறுகிறது. பணமும் மூலதனமும் ஒன்றல்ல. உற்பத்தியின் ஒரு தனி வரலாற்று வழியில் நிர்ணயிக்கப்பட்ட, சமூக உற்பத்தி உறவு என்ற முறையில்தான் பணம் மூலதனமாக மாறுகிறது. 

உபரி மதிப்பு எவ்வாறு தோன்றுகிறது என்று பார்ப்போம். 

சரக்குப் புழக்கத்தில் உபரி மதிப்பு உருவாக முடியாது. ஏன் என்றால் சரக்குகள் சம அளவு மதிப்புக்குத்தான் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. விலையைக் கூட்டுவதனாலும் உபரி மதிப்பு ஏற்படாது. ஏன் என்றால் வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையே பரஸ்பர நஷ்டங்களும் லாபங்களும் ஒன்றுக்கொன்று சமன் செய்துவிடும். அதாவது ஒருவரின் நஷ்டம் தான் மற்றவருக்கு லாபமாகிறது. கூடுதல் பணம் என்று கூறுவது இங்கே நிகழவில்லை. 

சரக்குகள் சம அளவுக்கே பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. ஆனால் ஒரு சரக்கை நுகர்கிற இயக்கப் போக்கில் மதிப்பும் கூடுதலாகப் படைக்கப்படுகிறது. 

அதுதான் மனித “உழைப்பு சக்தி”. 

மூலதனம் வைத்துள்ள முதலாளியிடம் ஒரு தொழிலாளி விற்பது உழைப்பை அல்ல. உழைப்பு சக்தியை. இது மார்க்சின் கண்டுபிடிப்பாகும். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம்தான் பழைய அரசியல் பொருளாதார அறிஞர்களின் குறைகள் நீக்கப்படுகின்றன. 

அதனால் இந்தப் பகுதியை மிகவும் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். உழைப்பை விற்பதற்கும். உழைப்பு சக்தியை விற்பதற்கும் வேறுபாடு உள்ளது. ஒரு முதலாளி, தொழிலாளியின் உழைப்பு சக்திக்கே கூலி கொடுக்கிறார். 

ஒரு தொழிலாளி வாழ்வதற்கும், அவனது குடும்பம் வாழ்வதற்கும் தேவைப்படுவதே கூலியாகக் கொடுக்கப்படுகிறது. இது சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது. 

நவீன உற்பத்தியில் உழைப்புச்சக்தி ஒரு சரக்காகப் பரிணாமம் பெற்றுள்ளது. சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கத்திற்குச் சரக்கு உள்ளவாது போல் இந்த உழைப்பு சக்தி என்கிற சரக்கும் சந்தையின் போக்கால் ஏற்றமும் இறக்கமும் பெறுகிறது. அதனால் இன்றை நவீன உற்பத்தியில் மனிதனின் உழைப்புச்சக்தி ஒரு சரக்காகக் காணப்படுகிறது. 

உழைப்பு சக்தியை வாங்கியை முதலாளி, உழைப்பாளியின் உழைப்பை நாள் முழுதும் வேலை வாங்குவதற்கு முதலாளித்துவச் சமூகத்தில் உரிமை பெற்றவராக உள்ளார். அதனால்தான் மூலதனத்தை வைத்துள்ள முதலாளியால் உபரி மதிப்பைப் பெற முடிகிறது. வேறுவகையில் கூற வேண்டுமானால் லாபம் பெற முடிகிறது. உபரி மதிப்பு முழுமையாக லாபமாக மாறுவதில்லை. பல செலவீனங்கள் செலுத்திய பிறகுதான் லாபமாகக் கிடைக்கிறது. 

ஒரு ஆலை முதலாளி, உற்பத்தியை தொழிலாளியைக் கொண்டு மட்டும் உற்பத்தி செய்யவில்லை. அந்த முதலாளி உற்பத்திக்கு, கச்சாப் பொருளைப் பயன்டுத்துகிறார், நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார், இயந்திரங்களை வைப்பதற்குப் பெரிய அளவிலான தொழிற்சாலையை நிறுவிகிறார். உற்பத்தி செய்வதற்கு மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார், தொழிற்சாலையில் தொழிலாளியை வேலை வாங்குவதற்கும் மற்ற அலுவல் வேலைக்கும் பணியாளர்களைப் நியமித்துள்ளார். 

இவைகள் எல்லாம் மதிப்பைப் படைக்கவில்லையா? 

உழைப்பாளியின் உழைப்பு சக்தி மட்டும்தான் மதிப்பைப் படைக்கிறதா? 

என்ற கேள்வி எழுவது இயற்கையே. 

இதனை மார்க்சின் மூலதனம் பற்றிய ஆய்வு விடை கண்டுள்ளது. மார்க்ஸ் மூலதனத்தையும் இரண்டாகப் பிரிக்கிறார். ஒன்று மாறா மூலதனம் (constant capital) மற்றொன்று மாறும் மூலதனம் (variable capital). 

இயந்திரம், உழைப்புக் கருவிகள், கச்சாப் பொருட்கள், மின்சாரச் செலவுகள் ஆகியவற்றுக்கு முதலாளி பயன்படுத்தும் மூலதனத்தை மாறா மூலதனம் என்று மார்க்ஸ் கூறுகிறார். அதே நேரத்தில் உழைப்பாளியிடம் இருந்து பெற்ற உழைப்பு சக்திக்கு, முதலாளி கொடுக்கும் மூலதனத்தை மார்க்ஸ் மாறும் மூலதனம் என்று கூறுகிறார். 

மாறும் மூலதனத்திற்கும் மாறா மூலதனத்திற்கும் என்ன வேறுபாடு என்று பார்ப்போம். இதற்கு ஏன் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தாலே இந்த வேறுபாட்டை எளிதில் புரிந்து கொள்ளலாம். மாறா மூலதனம் செலவிடப்பட்டதில், புதிய சரக்கில் எந்த மதிப்பும், புதியதாய்ப் படைக்கப்படுவதில்லை. 

உழைப்பாளியின் உழைப்பு சக்திக்குக் கொடுக்கப்பட்ட மாறும் மூலதனம் கொடுக்கப்பட்ட பணத்தை மீட்டுக் கொள்வதுடன், புதிய மதிப்பையும் படைக்கிறது. இதனால்தான் இது மாறும் மூலதனம் என்று பெயர் பெற்றுள்ளது. 

மாறா மூலதனம் என்ன செய்கிறது? 

மாறா மூலதனத்தால் செலவிடப்பட்ட இயந்திரம், கருவிகள், கச்சாப் பொருட்கள் போன்றவற்றின் மதிப்புப் பகுதிகள், புதிய சரக்கில் பகுதிபகுதியாக இடம் பெறுகிறதே தவிர, புதிய மதிப்பு உதையும் படைக்கவில்லை. மாறா மூலதனம் மதிப்பை படைப்பதில்லை என்பதால் மார்க்ஸ் அதனைப் பூஜ்யம் என்கிறார். 

அடுத்து தொழிலாளியால் எவ்வாறு புதிய மதிப்புப் படைக்கப்படுகிறது, அதாவது உபரி மதிப்பு எவ்வாறு தோன்றுகிறது என்பதைப் பார்ப்போம். 

ஒரு தொழிலாளியின் நாள் கூலியை வைத்து உபரி மதிப்பு கணக்கிடுவோம். 

கூலி என்றாலும் சம்பளம் என்றாலும் ஒன்று தான். மாதக் கூலி, வாரக் கூலி, நாட் கூலி ஆகிய முறைகளில் கூலி கொடுக்கப்படுகிறது. கணக்கிடுவது எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் நாட் கூலியை எடுத்துக் கொள்வோம். 

ஒரு தொழிலாளியின் உழைப்பு சக்திக்கு கொடுக்கப்படுகிற கூலி நாள் ஒன்றுக்கு 1,000/- ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இந்த 1,000/- ரூபாய் தொழிலாளியின் உழைப்பு சக்திக்குக் கொடுக்கப்படுகிற கூலி ஆகும். அதாவது அந்தத் தொழிலாளி தான் இழந்த சக்தியை மீட்டுக் கொள்வதற்கும், தமது குடும்பம் வாழ்வதற்கும் தேவைப்படுகிற பொருட்களின் மதிப்பின் அளவைக் கொண்டும், உழைப்பு சக்தியின் மதிப்பாகக் கணக்கிடப்படுகிறது என்று முதலில் பார்த்தோம். இந்த மதிப்பைப் படைப்பதற்குத் தேவையான உழைப்பின் நேரம்தான் அவசியமான உழைப்பு நேரம் என்று அழைக்கப்படுகிறது. 

தொழிலாளி ஒரு நாளில் உழைக்கும் நேரத்தை 8 மணியாகக் கொள்வோம். இன்றைய நவீன இயந்திரங்களின் மூலம் நடைபெறும் உற்பத்தி முறையில் தொழிலாளிக்குத் தமக்கான பிழைப்புச் செலவை சரிக்கட்ட, அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் போதுமானது. இங்கே நாம் ஒரு மணி நேரம் என்று கொள்வோம். 

அதாவது தொழிலாளிக்கு அளிக்கப்படும் நாட் கூலியான 1,000/- ரூபாய் முதல் ஒரு மணி நேரத்தால் ஈடு செய்யப்படுகிறது. தொழிலாளியை வேலைக்கு அமர்த்திய முதலாளி ஒரு நாள் வேலையை வாங்க உரிமை பெற்றவராக இருக்கிறார். அதனால் தொழிலாளி மேலும் கூடுதலாக ஏழு மணி நேரம் உழைக்க வேண்டி இருக்கிறது. 

இந்த ஏழு மணிநேர உழைப்புக்கு, முதலாளி பணம் கொடுப்பதில்லை. இந்த நேரமே உபரி உழைப்பு நேரம் என்று அழைக்கப்படுகிறது, இந்த உபரி உழைப்பு நேரத்தில் உழைக்கப்பட்டதில் இருந்தே உபரி மதிப்புக் கிடைக்கிறது. 

ஒரு தொழிலாளி இந்தக் கணக்கின்படி ஒரு நாளைக்கு உழைத்துக் கொடுத்த மொத்த மதிப்பு 8,000/- ரூபாய். இதில் உழைப்பாளிக்கு கொடுக்கப்படுவது 1,000/- ரூபாய் தான், மீதி 7,000/- ரூபாய் எதுவும் செலவு செய்யாமல் முதலாளிக்குப் போய்ச் சேர்கிறது. இதுவே உபரி மதிப்பாக முதலாளிக்குக் கிடைக்கிறது. 

தொழிலாளிக்குக் கொடுக்கப்பட்ட கூலிக்கு இணையாகத் தொழிலாளி உழைப்பைத் தருவதோடு கூடுதலாக உழைப்பைச் செலுத்துவதால்தான் உபரி மதிப்புக் கிடைக்கிறது. தொழிலாளிக்குச் செலவளிக்கப்பட்ட மூலதனம் புதிய மதிப்பைப் படைப்பதனால் அது மாறும் மூலதனம் என்று பெயர் பெறுகிறது. 

இயந்திரம், உழைப்புக் கருவிகள், கச்சாப் பொருட்கள் போன்ற உற்பத்திச் சாதனங்களுக்குச் செலவிடப்பட்ட மூலதனம் மாறா மூலதனம் என்று அழைக்கப்படுகிறது. 

முன்பே கூறியது போல் இதற்குச் செலவிடப்பட்ட மூலதனம் எந்தப் புதிய மதிப்பையும் உருவாக்குவதில்லை. இந்த உற்பத்திச் சாதனங்களின் மதிப்புகளின் சில பகுதிகள் புதிய சரக்கில் மாற்றப்படுகிறது அவ்வளவுதான், கச்சாப்பொருளின் மதிப்பு புதிய சரக்கில் இடம் மாற்றப்படுகிறதே தவிர, புதிய மதிப்பை இது படைப்பதில்லை. 

மூலதனத்தின் தோற்றத்திற்கு வரலாற்று வழிப்பட்ட முன்தேவைகள் இருக்கின்றன. முதலாவதாகச் சிலநபர்களிடம் பணம் குவிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் சரக்கு உற்பத்திக்குத் தேவையான உழைப்புப் பிரிவினை சமூகத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும். 

இரண்டாவதாகச் உழைப்பு சக்தியைத் தவிர இழப்பதற்கு வேறெதுவும் இல்லாத சுதந்திரப் பாட்டாளி வர்க்கம் இருக்க வேண்டும். தமது உழைப்பு சக்தியை விற்பதற்காக, அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீங்கி இருக்க வேண்டும். நிலத்தில் இருந்தும், உற்பத்திச் சாதனங்களில் இருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். உழைப்பு சக்தியை விற்பதைத் தவிர வேறு வழியில் பிழைப்பதற்கு வாய்ப்பு இல்லாது இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தொழிலாளியையே பாட்டாளி என்று அழைக்கிறோம். இது தான் தொழிலாளிக்கும் பாட்டாளிக்கும் (Proletarian) உள்ள வேறுபாடு. 

அனைவரும் தொழிலாளர்கள்தான். ஆனால் இந்தப் பாட்டாளி என்கிற ஆலைத் தொழிலாளி மற்ற தொழிலாளர்களிடம் இருந்து வேறுபடுகிறார். இதை அறிந்து கொள்ளாதவரை மார்க்சியவாதி என்றே அழைக்க முடியாது. பாட்டாளி வர்க்கம்தான் புரட்சிகரமான வர்க்கம் என்று மார்க்சியம் ஏன் கூறுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கும் இந்த வேறுபாடு அவசியம் ஆகும். 

எங்கெல்ஸ் எழுதிய “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்ற கேள்வி பதில் பகுதியில் பாட்டாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதனால் கண்டிப்பாக இதனை நாம் படிக்க வேண்டும். 

உபரி மதிப்பு இரண்டு வகையில் முதலாளிக்குக் கிடைக்கிறது. 

இங்கே இதனைச் சுருக்கமாகப் பார்ப்போம். ஒன்று அறுதி உபரி மதிப்பு (Absolute Surplus-Value), மற்றொன்று ஒப்பீட்டு உபரி மதிப்பு (Relative Surplus-Value). இந்த இரண்டுக்கும் வெவ்வேறு மொழி பெயர்ப்புகள் இருக்கின்றன. Absolute Surplus-Value-வை அறுதி உபரி மதிப்பு என்றும், தனிமநிலை உபரி மதிப்பு என்றும் முழுமுதல் உபரி மதிப்பு என்றும் பலவாறு அழைக்கப்படுகிறது. அதே போல் Relative Surplus-Value-வை ஒப்பீட்டு உபரி மதிப்பு என்றும், சார்புநிலை உபரி மதிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மொழியாக்கங்களைக் கண்டு பல உபரி மதிப்பு இருப்பதாகக் குழம்பிக் கொள்ளக்கூடாது. இரண்டு உபரி மதிப்புதான் இருக்கிறது. 

தொழிலாளி உழைக்கின்ற கால அளவை நீட்டிப்பதின் மூலம் முதலாளிக்குக் கிடைக்கும் உபரி மதிப்புக்கு அறுதி உபரி மதிப்பு என்று பெயர். 

அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதின் மூலம் முதலாளிக்குக் கிடைக்கும் உபரி மதிப்புக்கு ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று பெயர். 

எட்டு மணிநேரம் உழைக்கின்ற தொழிலாளியை பத்து அல்லது பன்னிரண்டு மணிநேரம் உழைக்க வைப்பதின் மூலம் கிடைக்கும் உபரி மதிப்பானது அறுதி உபரி மதிப்பு ஆகும். 

அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பது எவ்வாறு நடைபெறுகிறது என்றால், தொழிலாளிக்கு உணவுப் பொருட்களைக் குறைவான விலைக்கு விற்பதின் மூலமும், பிற முதலாளிகளைவிட நவீன தொழில்நுட்பத்தினாலும், புதிய இயந்திரத்தைப் புகுத்துவதாலும் அவசிய உழைப்பு நேரம் குறைக்கப்படுகிறது, இந்தத் தனிப்பட்ட முதலாளிக்குக் கிடைப்பது ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகும். 

அறுதி உபரி மதிப்புக்காக முதலாளி தொழிலாளியின் உழைப்பு நேரத்தைக் கூட்டும் போதெல்லாம் உழைப்பாளர்கள் போராடிய வரலாற்றை மார்க்ஸ் “மூலதனம்” நூலில் விளக்கி இருக்கிறார். வேலை நேரத்தைக் குறைப்பதற்காகத் தொழிலாளிகள் போராடி சட்டமாக்கியதை அதில் படித்து அறிந்து கொள்ளலாம். “மூலதனம்” நூலுக்குப் பிறகு வளர்ச்சி அடைந்த நாடுகளில் இதே போன்ற போராட்ட வரலாறு தொழிலாளர் இயக்கம் கண்டிருக்கிறது. கண்டும் வருகிறது. 

ஒப்பீட்டு உபரி மதிப்பு எவ்வாறு பெறப்படுகிறது என்பதை மார்க்ஸ் மூலதனம் நூலில் விளக்கி இருக்கிறார். அதை லெனின் மூன்றாக இந்தக் கட்டுரையில் தொகுத்தளிக்கிறார். 

1) சாதாரணக் கூட்டுறவு – ஒரே இடத்தில் பல தொழிலாளர்கள் ஒன்றாக உழைப்பதினால் கிடைக்கக்கூடியது. 

2) உழைப்புப் பிரிவினையும் பட்டறைத் தொழிலும். 

பட்டறைத் தொழிலில் ஒரே நபர் அனைத்து வேலையையும் செய்கிறார். ஆனால் உழைப்புப் பிரிவினையில் ஒரு குறிப்பிட்ட பொருளை பல்வேறு தொழில் பிரிவினர் பகுதிபகுதியாகச் செய்து ஒரே பொருளாக உருவாக்குகின்றனர். நவீன உற்பத்தியில் ஒரு குண்டூசி கூடப் பல்வேறு உழைப்புப் பிரிவுகளின் மூலம் தான் செய்யப்படுகிறது. 

குண்டூசி செய்வதற்கு, உலோகம் உருக்கப்படுவது, அதனைக் கம்பியாக நீட்டப்படுவது, கம்பியை வெட்டுவது, அதனைக் கூர் தீட்டுவது, தலை உருவாக்குவது இது போன்ற பல வேலைப் பிரிவுகளால் செய்யப்படும் போது, வேலை விரைவாக நடைபெறுகிறது, உற்பத்தி பன்மடங்கு பெருகுகிறது. 

3) இயந்திரங்களும் பெருவீதத் தொழிலும் ஒப்பீட்டு உபரி மதிப்பைப் படைக்கிறது. 

இதுவரை மார்க்ஸ் கூறியதை லெனின் வழியில் விரிவாகப் பார்த்தோம். ஒரே நேரத்தில் அனைத்தையும் விரிவாகப் பார்ப்பது சோர்வை ஏற்படுத்தும். லெனின் இந்தக் கட்டுரையில் அரசியல் பொருளாதாரப் பகுதியைத்தான் அதிகமாக எழுதியிருக்கிறார். அனைத்தையும் ஒரே நேரத்தில் அறிந்து கொள்வது சிரமம் என்பதை உணர்ந்து சிலவற்றைச் சொல்வதோடு இந்த வகுப்பை முடித்துக் கொள்கிறேன். 

இந்தப் பகுதியின் இறுதியில்,

முதலாளித்துவ மூலதனத் திரட்சியின் வரலாற்று வழிப்பட்ட போக்கு,

மொத்த சமூக மூலதனத்தின் மறுவுற்பத்தி,

விவசாயத்துறையில் முதலாளித்துவத்தன் பரிணாமம், 

-ஆகியவைகளை லெனின் மார்க்சின் மூலதனம் நூலின் மேற்கோள் அடிப்படையில் விளக்கி இருக்கிறார். இதனைப் பின்பொரு நாள் பார்ப்போம். இன்றைக்குச் சிலவற்றைச் சொல்வதோடு வகுப்பை முடித்துக் கொள்கிறேன். 

மார்க்சின் மூலதனம் தொகுதி ஒன்றை முழுமையாகத் தோழர் த.ஜீவானந்தம் அவர்கள் வகுப்பெடுத்துள்ளார். அதன் காணொளி தற்போது விற்பனையில் கிடைக்கிறது. இது 15 மணிநேரத்திற்கு மேல் செல்கிறது. இதனைப் பல தோழர்கள் சேர்ந்து வாங்கிக் கேட்டுப் பயன் அடையலாம். ஒவ்வொரு கம்யூனிஸ்டும் மார்க்சின் அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். 

மேலும் தோழர் த.ஜீவானந்தம் மார்க்சின் “மூலதனம்” மூன்று தொகுதியையும் சுருக்கமாக எழுதியுள்ளார். அது பாரதிப் புத்தகாலயத்தில் கிடைக்கிறது. மற்றும் பல தோழர்களும் அரசியல் பொருளாதாரம் பற்றி எழுதியுள்ளனர் அதனைப் படித்துப் பயனடையலாம். 

அடுத்து லெனின் மூலதனத் திரட்சியைப் பற்றிப் பேசுகிறார். இந்த அரசியல் பொருளாதாரப் பகுதி அனைத்தையும் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் மூன்று தொகுதியைக் கொண்டு விளக்கி உள்ளார். 

முதலாளி உற்பத்தியின் போது கிடைத்த உபரி மதிப்பில் தமது செலவுக்கும் மற்றவற்றுக்கு எடுத்துக் கொண்டது போக, மீதமுள்ள அனைத்தையும் புதிய உற்பத்திக்குப் பயன்படுத்துகின்றார். 

ஆடம் ஸ்மித் முதலாகப் பழைய செம்மை பொருளாதார அறிஞர்கள் அனைவரும் செய்த தவறை மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். 

செம்மை பொருளாதார அறிஞர்கள், மூலதனமாக மாற்றப்படும் உபரி மதிப்பு முழுதும், மாறும் மூலதனமாகும் என்று நினைத்தனர். ஆனால் உண்மையில் உபரி மதிப்பு உற்பத்திச் சாதனங்களுக்கு ஒரு பங்கும், மாறும் மூலதனத்தற்கு மற்றொரு பங்காகவும் பிரிக்கப்படுகிறது. 

மார்க்சின் ஒரு கருத்தை லெனின் இங்கே சொல்வதை மிகவும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

மார்க்சின் ஒரு கருத்தை, லெனின் இங்கே குறிப்பிட்டுச் சொல்வதை, மிகவும் நாம் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

மாறும் மூலதனத்தைவிட மாறா மூலதனத்தின் பங்கு அதிக விரைவுடன் வளர்ச்சி பெறுகிற நிகழ்ச்சியானது, முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்குக்கு மட்டும் முக்கியமானது அல்ல. 

இந்த வளர்ச்சிப் போக்குதான் முதலாளித்துவம், சோஷலிசமாக மாறுவதற்கான இயக்கப் போக்கிலும் மகத்தான முக்கியத்துவம் பெறுகிறது. 

வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் பிரம்மாண்டமான உற்பத்திச் சாதனங்களை நாம் பார்க்கிறோம். இந்த வளர்ச்சியில் ஏற்படுகிற முரண்பாட்டினால் முதலாளித்துவம் சிக்கலுக்கு உருவாகி, தவிர்க்க முடியாமல் சோஷலிச உற்பத்தி முறைக்கு மாற வேண்டி வருகிறது. ரோபோட்டாக இருந்தாலும் சரி, மற்ற எந்த நவீன வளர்ச்சியான எந்திரமானாலும் சரி, அந்த வளர்ச்சியே சோஷலிசத்தைக் கொண்டுவருகிறது. 

தொழிலாளர்களுக்குப் பதிலாக எந்திரங்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரிக்கும் போது, ஒரு இடத்தில் செல்வத்தையும் மறுகோடியில் வறுமையையும் ஏற்படுத்துகிறது. முதலாளிகளுக்கு இடையே உள்ள போட்டியினால் மிகை உற்பத்தி ஏற்படுகிறது. அதனால் பொருளாதார நெருக்கடி உண்டாகிறது. இது பத்தாண்டுகளுக்கு ஒரு முறையும், பிறகு இதைவிட நீண்ட கால இடைவெளியிலும் ஏற்படுகிறது. 

இந்தப் பொருளாதார நெருக்கடியே முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கான புறநிலைக் காரணமாகும். இந்த நிலைமையைக் கணக்கில் கொண்டு புரட்சிக்குத் தயார் படுத்திய கம்யூனிஸ்ட் கட்சி, உழைக்கும் மக்களைக் கொண்டு புரட்சி செய்து சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையே, மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும், அரசியல் பொருளாதாரமும் நமக்குச் சொல்லித் தருகிறது. 

குறிப்பிட்ட சமூகத்தில் காணப்படும் உற்பத்தி முறையின் தோற்றம், வளர்ச்சி, நலிவு ஆகிய கட்டங்களை ஆராய்வதே அரசியல் பொருளாதாரத்தின் பணியாகும் என்று முதலில் பார்த்தோம். அதை மீண்டும் நினைவில் கொண்டு இன்றைய வகுப்பை முடித்துக் கொள்வோம்.

 வகுப்பு 5:- “காரல் மார்க்ஸ் – சோஷலிசம் (-லெனின்)


Saturday 21 November 2020

வகுப்பு 3 :- “காரல் மார்க்ஸ்” – வரலாற்றியல் பொருள்முதல்வாதம் - வர்க்கப் போராட்டம் (-லெனின்)

(“செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட வகுப்பின் குறிப்பு) 

லெனின் எழுதிய “காரல் மார்க்ஸ்” (மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்) என்ற கட்டுரையைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். 

போன வகுப்பில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் இயக்கவியல் ஆகிய இரண்டையும் பார்த்தோம். அதில் பருப்பொருள் என்பது மனிதனை சாராது புறத்தே இருக்கிறது. உலகில் நடைபெறும் அனைத்து இயக்கமும் பருப்பொருளைச் சார்ந்தே நடைபெறுகிறது. பருப்பொருள் இல்லாமல் இயக்கம் இல்லை, இயக்கம் இல்லாமல் பருப்பொருள் இல்லை என்பதைப் போன வகுப்பில் பார்த்தோம். 

இன்றைய வகுப்பில் “வரலாற்றியல் பொருள்முதல்வாதம் - வர்க்கப் போராட்டம்” ஆகிய இரண்டையும் பார்க்கப் போகிறோம். 

மார்க்ஸ் பழைய பொருள்முதல்வாதத்தில் உள்ள குறைபாட்டை அறிந்து கொண்டவுடன், சமூகத்தை இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கம் கொடுத்தார். 

வாழ்நிலையில் இருந்து உணர்வு தோன்றுகிறதே அன்றி, உணர்வில் இருந்து வாழ்நிலை தோன்றுவது இல்லை. 

இது தான் வரலாறு பற்றிய பொருள்முதல்வாதத்தின் அடிப்படை. இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்நிலை என்பது பற்றி, போன வகுப்பில் பார்த்தோம். அதை மீண்டும் ஒரு முறை நினைவில் பதிய வைத்துக் கொள்வோம். 

ஒவ்வொரு மனிதனும் தமது வாழ்வாதரத்துக்காக வேலை செய்யும் போது பொருளாதார உறவுகள் ஏற்படுகின்றன. இந்தப் பொருளாதார உறவுகளே உற்பத்தி உறவுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த உற்பத்தி உறவுகளே வாழ்நிலை எனப்படுகிறது. 

இந்த வாழ்நிலை என்கிற உற்பத்தி உறவுகளில் இருந்து தான் சிந்தனை தோன்றுகிறது, அதாவது உணர்வு தோன்றுகிறது. சிந்தனையில் இருந்து வாழ்நிலை அதாவது உணர்வு தோன்றுவது இல்லை. 

வாழ்நிலையில் இருந்து சிந்தனை தோன்றுகிறது என்பது பொருள்முதல்வாத கண்ணோட்டம். 

சிந்தனையில் இருந்து வாழ்நிலை தோன்றுகிறது என்பது கருத்துமுதல்வாத கண்ணோட்டம். 

தனி மனிதனது உணர்வுநிலை அவனது வாழ்நிலையில் இருந்து தோன்றுகிறது என்று பொருள்முதல்வாதம் கூறுகிறது. அதே போலத்தான் சமூக உணர்வு என்பதும் சமூக வாழ்நிலையில் இருந்தே தோன்றுகிறது என்று பொருள்முதல்வாதம் விளக்குகிறது. 

முதலாளிகளின் வர்க்க உணர்வும், தொழிலாளர்களின் வாக்க உணர்வும் இந்தச் சமூக வாழ்நிலையில் இருந்து தான் தோன்றுகிறது. இதனை மார்க்சின் “மூலதனம்” நூல் தொகுதி ஒன்றில் இருந்து மேற்கோள்களின் மூலம் லெனின் விளக்குகிறார். 

மனிதன் உயிர்வாழ்வதற்கு உரிய உற்பத்தி முறையின் போது ஏற்படுகிற உற்பத்தி உறவுகளில் இருந்து தான் கருத்துக்கள் சிந்தனைகள் ஏற்படுகிறது. 

அடுத்து லெனின், மார்க்ஸ் எழுதிய “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்ற நூலின் முன்னுரையில் இருந்து ஒரு பெரிய மேற்கோளைக் கொடுத்துள்ளார். இதுதான வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை. 

இந்த அடிப்படையில் தான் அரசியல் பொருளாதாரமும் அணுகப்பட்டுள்ளது. அதனால் கம்யூனிஸ்டுகள் இந்த மார்க்சின் மேற்கோளை பல முறை நன்றாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே நான் அதன் சுருக்கத்தையும்-சாரத்தையும் தருகிறேன். இதனைப் புரிந்து கொண்டு, இந்த மார்க்சின் நேரடியான எழுத்துக்களைப் படித்துச் சொந்தமாகப் புரிந்து கொள்ள வேண்டியது. ஒவ்வொரு கம்யூனிஸ்டுகளின் கடமை ஆகும். 

மார்க்ஸ் தன்னுடைய முன்னுரையில், கூறுகிறார் தாம் உருவாக்கிய இந்தப் பொதுவான முடிவு, தன்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கோட்பாடாக ஆனது என்று கூறியுள்ளார். மார்க்சுக்கு வழிகாட்டும் கோட்பாடே நமக்கும் அதாவது மார்க்சியவாதிகளுக்கும் கோட்பாடாகும். அதனால் இதனை ஆழ்ந்து படித்துப் புரிந்து செயற்பட வேண்டும். 

வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தைச் சுருக்கமாக நமக்கு இந்த முன்னுரையில் மார்க்ஸ் தந்துள்ளார். 

மனிதர்கள் தங்களது வாழ்க்கைக்காக உழைத்திடும் போது, சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் மனிதனது மனதைச் சாராமல் புறநிலையில் இருக்கிறது. 

ஏன் மனிதனை சாராமல் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது என்றால், மனிதனது விருப்பபடி உற்பத்தி உறவுகள் உருவாவது இல்லை. 

உழைப்பவர்கள் பயன்படுத்துகிற, உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் தான் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகள் தோன்றுகிறது. 

மார்க்ஸ் இங்கே உற்பத்தி சக்திகள் என்று கூறுவது கருவிகள், இயந்திரங்கள் போன்றவையே. உற்பத்தி உறவுகள் மனிதர்களிடையே தான் நடைபெறுகிறது, ஆனால் அதனை உற்பத்திக் கருவிகளே மனிதர்களது உழைப்பை நிர்ணயிக்கின்றன. 

உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே, சமூகத்தின் பொருளாதார அமைப்பாகவும், சமூகத்தின் உண்மையான அடித்தளமாகவும் அமைகிறது. இந்த அடித்தளத்துக்குப் பொருந்தக்கூடிய சமூக உணர்வுகள் குறிப்பிட்ட வடிவங்களாக மேற்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது. 

உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே அடித்தளம், இதன் மீது சட்டம், மதம், கலை, தத்துவம், அரசியல் போன்ற மேற்கட்டமைப்பு ஏற்படுகிறது. 

அடித்தளமே மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது. மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது. தாக்கம் என்பது அடித்தளத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தலாம், அல்லது தாமதப்படுத்தலாம். மார்க்சின் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாடு இதைத்தான் கூறுகிறது. இதற்கு மாறாக அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்வரம் வினைவுரிகிறது என்று கூறுவது மார்க்சின் கோட்பாட்டைச் சரியாகப் புரிந்து கொள்ளததின் விளைவாகும். 

அடித்தளம் தான் தீர்மானிக்கிறது என்றால், வாழ்நிலை தான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்று பொருள், மேற்கட்டமைப்புத் தீர்மானிக்கிறது என்றால் சிந்தனை வாழ்நிலை தீர்மானிக்கிறது என்று பொருள். அடித்தளம் தீர்மானிக்கிறது என்றால் இது பொருள்முதல்வாத கண்ணோட்டம், மேற்கட்டமைப்புத் தீர்மானிக்கிறது என்றால் இது கருத்துமுதல்வாத கண்ணோட்டம். இதனை மறுத்து இரண்டும் தீர்மானிக்கிறது- பரஸ்பரம் வினைபுரிகிறது என்பது கதம்பவாதக் கண்ணோட்டமாகும். இந்தக் கதம்பவாத கண்ணோட்டம் எத்தகைய முற்போக்கான வேடம் போட்டாலும் இது இறுதியில் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தையே சென்று சேரும். 

பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டமைப்பு முழுவதையும் விரைவாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ மாற்றி அமைக்கின்றன. 

சமூக உற்பத்தி சக்திகளுக்கும். உற்பத்தி உறவுகளுக்கும் இடையே தோன்றுகிற மோதலைக் கொண்டு தான் சமூக உணர்வை விளக்க வேண்டும். அதாவது அன்றைய சமூக உற்பத்தி சக்திகளுக்கும் அதனால் தோன்றுகிற உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளில் தான் சமூக உணர்வு தோன்றுகிறது. 

அடித்தளத்தின் மேம்பட்ட வளர்ச்சிக்கு ஏற்ப, மேற்கட்டமைப்பு வளர்ச்சி பெற முடியாத போது, சமூகப் புரட்சிக்கான சகாப்தம் தொடங்குகிறது. 

அடித்தளத்தின் வளர்ச்சிக்கு மேற்கட்டமைப்புத் தடையாகப் போகும் போது அது தூக்கி எறியப்படுகிறது. ஏன் என்றால் அடித்தளம் தான் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கிறது. 

இது தான் வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் சுருக்கமும் சாரமும் ஆகும். 

இதற்கு அடுத்து, மார்க்சுக்கு முன்பு காணப்பட்ட வரலாறு பற்றிய கண்ணோட்டத்தின் இரண்டு குறைபாட்டை லெனின் எடுத்துரைக்கிறார். 

முதலாவது குறைபாடு, மனிதர்களின் வரலாற்று நடவடிக்கைகளின் சித்தாந்த நோக்கை மட்டுமே ஆராய்ந்தது. இந்த நோக்கங்கள் தோன்றுவதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கவில்லை. சமூகத்தில் காணப்படும் புறநிலை விதிகளைப் பழைய கண்ணோட்டம் புரிந்து கொள்ளவே இல்லை. 

மனிதனிடத்தில் இந்தச் சிந்தனை ஏன் தோன்றியது என்பதை நோக்காமல், சிந்தனையில் இருந்தே தமது ஆராய்ச்சியைத் தொடங்கியது. மனிதனிடத்தில் குறிப்பிட்ட சிந்தனை ஏன் தோன்றியது என்பதைப் பழைய தத்துவங்கள் கணக்கில் கொள்ளவே இல்லை. 

இரண்டாவது குறைபாடு, பழைய கண்ணோட்டங்கள் மக்கள் திரளின் நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கவே இல்லை. 

வரலாற்றியல் பொருள்முதல்வாதமானது பழைய கண்ணோட்டத்தில் காணப்பட்ட அகநிலைப் பார்வை கைவிட்டு, சமூகத்தில் காணப்படும் கருத்துக்கள் பொருளாயத உற்பத்தி சக்திகளின் நிலைமையிலேதான் வேர் கொண்டுள்ளது என்று விளக்கியது. 

மக்கள் தங்களுடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்கிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களுக்கு முன்னுள்ள சமூக உற்பத்தி சக்திகளுக்கும் அதனால் உருவான உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளின் அடிப்படையில் தான் மக்கள் தங்களது வரலாற்றை உருவாக்குகின்றனர். இதனை மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தை நமக்குச் சுட்டிக்காட்டுவதின் மூலம் லெனின் நமக்கு விளக்குகிறார். 

உற்பத்திச் சாதனங்களே, உழைப்பின் ஒழுங்கமைப்பை நிர்ணயிக்கிறது என்பதே தமது கோட்பாடு என்று மார்க்ஸ் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார். இதுவோ மார்க்சியத்தின் விஞ்ஞானவழிப்பட்ட வழிமுறையாகும். 

இதற்கு மாறாக நமது நாட்டில் பல மார்க்சிய மேதாவிகள்!!! உழைப்புக்கு மட்டுமே தனித்த முன்னுரிமை கொடுக்கின்றனர். இந்தப் போக்கு மார்க்சுக்கு எதிரானதாகும். தங்களது போக்கிற்கு ஏற்ப மார்க்சியத்தைத் திரித்துரைக்கின்றனர் அந்த மேதாவிகள். அந்த மேதாவித்தனங்கள் எல்லாம் மார்க்சிய எழுத்திற்கு முன்பாக அம்பலப்பட்டு நிற்கிறது. 

உழைக்கும் மக்களுக்கு மார்க்சினுடைய விஞ்ஞான வழிபட்ட கண்ணோட்டமே வழிகாட்டி ஆகும். 

வர்க்கப் போராட்டம் 

சமூகத்தில் சிலருடைய விருப்பங்கள் பலருடைய விருப்பங்களுடன் மோதுகின்றன. அதற்கு அந்தச் சமூகத்தில் காணப்படும் முரண்பாடுகளே காரணம் ஆகும். இந்த வேறுபாடுகள் மனிதர்களைச் சாராமல் அந்தச் சமூகத்தின் உற்பத்தி முறையில் காணப்படுகிறது. 

அதுவே சமூகத்தில் விருப்பங்களாகவும் மோதல்களாகவும் வடிவம் எடுக்கிறது. 

சமூகத்தில் ஏற்றக் காலங்களும் இறக்கக் காலங்களும் மாறிமாறி வருவதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். 

சமூகத்தில் ஏற்படும் குழப்பங்களுக்குக் காரணம் இருக்கின்றன, என்றும் அதற்கான ஆளும் விதிகள் உள்ளன என்பதை மார்க்சியம் கண்டுபிடித்துத் தந்துள்ளது, அது தான் வர்க்கப் போராட்டம். 

வர்க்கப் போராட்டமானது தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நடைபெறுவதில்லை. அந்தந்தக் கால உற்பத்தி முறையில் காணப்படும் முரண்பாடுகளே வாக்கப் பிரிவாக – வர்க்க மோதலாக வெளிப்படுகிறது.

     இதுவரை எழுதப்பட்ட வரலாறு அனைத்து வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்று “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” கூறியுள்ளதை நாம் அறிவோம். எழுதப்படாத வரலாறான, பழங்குடி சமூகத்தில், வர்க்க வேறுபாடுகள் காணப்படுவதில்லை, அதனால் அங்கே வர்க்கப் போராட்டம் ஏற்படவில்லை. 

சொத்துடைமை சமூகம் தோன்றியது முதல், அதாவது இந்தப் பழங்குடி சமூகத்தின் சிதைவின் போது வர்க்கங்கள் தோன்றின. 

நவீன சமூகத்தில் உள்ள ஒவ்வொரு வர்க்கத்தின் நிலைமைகளைப் பற்றிய புறநிலையிலான ஆராய்வு விஷயமாகச் சமூக விஞ்ஞானம் என்ன செய்ய வேண்டும் என்பதை மார்க்ஸ் தமது “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யின் வாயிலாகச் சுட்டிக்காட்டுகிறார். இங்கே லெனின் அறிக்கையில் இருந்து ஒரு பெரிய மேற்கோளை தருகிறார். அதை அப்படியே பார்த்துவிட்டு அதில் கூறப்பட்டதை அடுத்துப் பார்க்கலாம்.

 

“இன்று முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் எல்லா வர்க்கங்களிலும் பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் மெய்யாகவே புரட்சிகரமான வர்க்கமாகும். ஏனைய வர்க்கங்கள் நவீனத் தொழிலினது வளர்ச்சிக்கு முன்னால் நலிவுற்றுச் சிதைந்து, முடிவில் மறைந்து போகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும் தான் நவீனத் தொழிலுக்கே உரித்தான அதன் நேரடி விளைவாய் அமைகிறது.

 

மத்தியதரப் படிநிலைகளின் கீழ் பகுதிகளாகிய சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி - இவர்கள் எல்லோரும் தொடர்ந்து தாம் மத்தியதரப் படி நிலைகளின் கூறுகளாய் நீடித்திருப்பதற்காக முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆகவே, இவர்கள் பழமைப் பற்றாளர்களே அன்றிப் புரட்சித்தன்மை பெற்றவர்கள் அல்லர். அது மட்டுமல்ல, இவர்கள் பிற்போக்கானவர்களும் கூட; ஏனெனில் வரலாற்றின் சக்கரத்தை இவர்கள் பின்னோக்கி உருளச் செய்ய முயலுகிறார்கள். சந்தர்ப்பவசமாய் இவர்கள் புரட்சிகரமாய் இருப்பார்களாயின், இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குப் போய்விடும் தறுவாயில் இருக்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம்; இவ்வாறு இவர்கள் பாதுகாப்பது தமது எதிர்கால நலன்களையே அன்றி நிகழ்கால நலன்களை அல்ல; பாட்டாளி வர்க்கத்தின் நோக்கு நிலையை ஏற்கும் பொருட்டு, தமது சொந்த நோக்கு நிலையைக் கைவிடுகிறார்கள்.'' 

சிறுதொழில் புரிபவர்கள் பிரமாண்டமான முதலாளித்துவ உற்பத்திக்கு ஈடுகொடுக்க முடியாமல் போராடுகின்றனர். உண்மையாக முதலாளித்துவ உற்பத்திக்கு முன்பாக இவர்களால் வெற்றி பெற முடியாது, அதுமட்டுமல்லாது, அவர்கள் முதலாளித்துவ உற்பத்தியை எதிர்ப்பது, சிறுதொழில் நடத்துவதற்கே முனைகின்றனர். இவர்கள் வரலாற்றின் சக்கரத்தை பின்னோக்கி இழுக்குகிறார்கள். அதனால் இவர்கள் பிற்போக்கானவர்களே. 

      சந்தர்ப்ப சூழ்நிலைமைகளால் இவர்கள் புரட்சிகரமாக- முற்போக்கு உடையவர்களாகப் பேசத் தொடங்குகிறார்கள் என்றால், இவர்கள் முதலாளித்துவத்தால் வீழ்த்தப்பட்டுப் பாட்டாளிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே பொருளாகும். 

நவீன முதலாளித்துவ உற்பத்தியின் முன், மற்ற வர்க்கங்கள் ஈடுகொடுக்க முடியாத நிலையில், அனைத்து வர்க்கத்தைக் காட்டிலும் புரட்சிகரமான வர்க்கமாகப் பாட்டாளி வர்க்கம் காணப்படுகிறது. இதற்குக்குக் காரணம் பிற வர்க்கங்கள் நவீனத் தொழிலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அழிந்து போகின்றது. பாட்டாளி வர்க்கம் மட்டுமே நவீன தொழிலில் நேரடியாக ஈடுபடுவதனாலும், அந்த உற்பத்தியின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப பாதிக்கப்படுவதினாலும், பாட்டாளி வாக்கம் புரட்சிகரமாக முதலாளித்துவத்துடன் மோதுகிறது. 

அதனால் தான், முதலாளித்துவ உற்பத்தில் காணும் முரண்பாட்டின் நேரடி விளைவாகப் பாட்டாளிகள் இருப்பதனால், அவர்கள் புரட்சிகரமாகச் செயற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. பிற வர்க்கங்கள் முதலாளித்துவ நவீன உற்பத்தி முறைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அழிந்து போகிறது, ஆனால் பாட்டாளி வர்க்கம் மட்டுமே முதலாளித்துவ முரண்பாட்டை எதிர்த்துப் போராடுகிறது. 

வரலாற்றுத் துறையைப் பற்றி மார்க்ஸ் எழுதிய பலநூல்களை லெனின் பிற்சேர்க்கையாக, பட்டியல் இட்டிருந்தார். ஆனால் இதனை முதன்முறையாகப் பதிப்பிக்கும் போது அந்தப் பட்டியல் விடுபட்டுள்ளது. பின்னாலில் அது கிடைக்காமலே போய்விட்டது. இருந்தாலும் அதில் உள்ள நூல்களை அறிய முடிகிறது, கடிதங்கள் மட்டும் எவை என்று ஒரளவுக்குத் தான் சரியாகக் காண முடிகிறது. 

ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அரசியல் போராட்டம் தான். தொழிலாளர்களின் வாக்கப் போராட்டம் வெறும் பொருளாதாரப் போராட்டமாகவோ, சித்தாந்தப் போராட்டமாகவோ நின்று போவதில்லை. அது அரசியல் போராட்டமாக வலுப்பெறுகிறது. அதனால் தான் பாட்டாளி வர்க்கமானது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்குப் போராடுகிறது. 

இந்தப் பகுதியின் இறுதியில் லெனின், மார்க்சின் கோட்பாடு மிகவும் ஆழ்ந்த முழுமையான வகையிலும், விவரமாகவும் உறுதிப்படுத்திச் செயல்படுத்த வழிக்காட்டுவது மார்க்சின் பொருளாதாரப் போதனையே என்று கூறியுள்ளார். 

அடுத்த வகுப்பில் மார்க்சின் பொருளாதாரப் போதனையைப் பற்றிப் பார்ப்போம். மார்க்சின் பொருளாதாரத்தை அறிந்து கொள்வதற்கு, பொருளாதாரத்தின் வர்க்க சார்பை அறிந்து கொள்ள வேண்டும், அதற்கு மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதப் புரிதல் அவசியமாகிறது. இன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் பார்த்தோம். அடுத்த வகுப்பில் மார்க்சின் அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்வோம்.

வகுப்பு 4 :- “காரல் மார்க்ஸ் – மார்க்சின் பொருளாதாரப் போதனை (-லெனின்)

Sunday 15 November 2020

வகுப்பு 2 :- “காரல் மார்க்ஸ்” தத்துவஞானப் பொருள்முதல்வாதம், இயக்கவியல் (-லெனின்)

     (“செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட வகுப்பின் குறிப்பு) 

லெனின் எழுதிய “காரல் மார்க்ஸ்” (மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்) என்ற கட்டுரையைப் பார்த்து வருகிறோம். 

முதல் வகுப்பில், மார்க்ஸ் - வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தைப் பார்த்தோம். அதில் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறே, மார்க்சிய அடிப்படையின் வரலாறு என்று பார்த்தோம். 

இந்தத் தொடர் வகுப்பில், மார்க்சிய அடிப்படைகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானச் சோஷலிசம் ஆகியவற்றைப் பார்க்கப் போகிறோம். 

மார்க்சிய போதனையைப் பற்றிக் கூறுவதற்கு முன் லெனின் முதலில் மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களைப் பற்றிக் கூறியுள்ளார். இன்று அதைப் பார்த்துவிட்டுப் பொருள்முதல்வாத தத்துவம் பற்றியும் இயக்கவியல் பற்றியும் பார்க்கலாம். 

மார்க்சினுடைய கருத்துக்கள், போதனைகள் ஆகிய அனைத்தையும் மார்க்சியம் என்று கூறலாம். 19ஆம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான சித்தாந்தப் போக்குகள் தோன்றின. 1)தத்துவம், 2)அரசியல் பொருளாதாரம் 3)சோஷலிசம். 

இந்த மூன்றும் முன்னேறிய மூன்று நாடுகளில் உருவானது. ஜெர்மனியில் தத்துவம், இங்கிலாந்தில் அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சில் சோஷலிம். மார்க்ஸ், இந்த மூன்னேறிய மூன்று சித்தாந்தங்களையும் தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றை முழுநிறைவு அடையச் செய்தார். 

இந்த முழுநிறைவே நமக்கு மார்க்சியமாகும். 

இந்த மார்க்சியமே முன்னேறிய நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்கங்களுக்கு வழிகாட்டும் கோட்பாடாகவும், வேலைதிட்டமாகவும் அமைந்தது. 

இதற்கு அடுத்து லெனின் மார்க்சின் பொருளாதாரப் போதனையை விரித்துரைப்பதற்கு முன்பாக, அவரது உலகக் கண்ணோட்டத்தைப் பார்ப்போம் என்கிறார். அதாவது தத்துவத்தை முதலில் பார்ப்போம் என்கிறார்.

 இன்றைய வகுப்பில் தத்துவஞானப் பொருள்முதுல்வாதம் மற்றும் இயக்கவியல் ஆகிய இரண்டையும் அறிந்து கொள்ளலாம். 

தத்துவஞானப் பொருள்முதல்வாதம் 

மார்க்ஸ் தத்துவ ஆய்வு செய்யும்வரை ஒரு கருத்துமுதல்வாதியாகவே இருந்தார். ஆனால் வலதுசாரி ஹெகல் போக்கினரை விமர்சிப்பதின் மூலம் படிப்படியாகப் பொருள்முதல்வாதியாக மாறிக் கொண்டிருந்தார். மார்க்ஸ் எந்த ஆண்டு ஒரு முழுமையான பொருள்முதல்வாதியாகிறார் என்பதைக் காலக்கணக்கோடு லெனின் நமக்குச் சுட்டிக்காட்டியுள்ளார். 

1844-45 ஆம் ஆண்டு மார்க்ஸ் முழுமையான பொருள்முதல்வாதியாகிறார். 

ஃபாயர்பாக் எழுதிய “கிறித்துவ மதத்தின் சாரம்” என்ற நூல் இடதுசாரி ஹெகல்வாதிகள் பொருள்முதல்வாதத்தற்குச் செல்வதற்குத் துணைபுரிந்தது. ஹெகலின் கருத்துமுதல்வாதத்தில் இருந்து ஃபாயர்பாக் முற்றிலும் முறித்துக் கொண்டு பொருள்முதல்வாதத்தைப் பிரகடனம் செய்தார். 

இதை லெனின் ஒரு சகாப்தத்தை உருவாக்கும் செயலாகக் கருதுகிறார். ஆனால், ஃபாயர்பாகின் பொருள்முதல்வாதம், முரண்களோடும், முழுமை பெறாமலும் இருந்தது. மார்க்ஸ் இதை அதன் பலவீனமாகக் கருதினார். 

ஃபாயர்பாகின் பொருள்முதல்வாதம் மதத்தையும் இறையியலையும் மட்டும் எதிர்த்திடவில்லை, அப்பாலைத் தத்துவத்துவம் அனைத்தையும், அதாவது கருத்துமுதல்வாத தத்துவம் அனைத்தையும் எதிர்த்துப் போர் புரிந்தது. 

ஜெர்மன் கருத்துமுதல்வாதம் ஹெகலிடம் உச்சத்தை அடைந்தது. 

உலகத்தைத் தோற்றுவித்தது “முழுமுதல் கருத்து” (Absolute Idea) என்று ஹெகல் கருதினார். பிரபஞ்சத்தின் அடிப்படையானது நமது உணர்வுகளுக்கு அப்பால் இருக்கிற கருத்துருவங்களே என்கிறார் ஹெகல். 

இந்திய தத்துவத்தில் கூறப்படுகிற பிரமம் என்பது இத்தகையதே. பிரபஞ்சத்தைப் படைத்து ஆள்வது அந்த “முழுமுதல் கருத்து” என்பது ஹெகலின் தத்துவம். இது புறநிலை கருத்துமுதல்வாதமாகும். 

கருத்துமுதல்வாதம் இரண்டு வகைப்படும், ஒன்று புறநிலைக் கருத்துமுதல்வாதம் மற்றொன்று அகநிலைக் கருத்துமுதல்வாதம். பிரபஞ்சத்தைப் படைக்கும் சக்தி இந்த உலகுக்கு அப்பால் இருக்கிறது என்று கூறுவது புறநிலைக் கருத்துமுதல்வாதம். மனமே உலகைப் படைத்தது, என்பது அகநிலைக் கருத்துமுதல்வாதம். புறநிலையில் காணப்படும் அனைத்தும் அகநிலையின் அதாவது மனதின் படைப்பே என்பது அகநிலைக் கருத்துமுதல்வாதம். 

ஹெகல் ஒரு புறநிலைக் கருத்துமுதல்வாதி. அவர் பிரபஞ்சத்தின் படைப்பாளரை உலகுக்கு அப்பால் இருப்பதாகக் கருதுகிறார். அந்தப் படைக்கும் சக்தி உலகுக்கு அப்பால் இருப்பதாகக் கருதுவது புறநிலைக் கருத்துமுதல்வாதம். 

இந்தியாவைப் பொருத்தளவில் ராமாநுஜரும், மத்துவரும் புறநிலைக் கருத்துமுதல்வாதிகள். இருவருமே உலகத்தைப் படைத்தது பிரம்மம் என்கிற உலகத்திற்கு அப்பால் இருக்கிற சக்தி என்கின்றனர். 

அந்தச் சக்தியை அகத்தில் அதாவது மனதில் பார்ப்பவர்கள் அகநிலைக் கருத்துமுதல்வாதி. இந்தியாவைப் பொருத்தளவில் ஆதிசங்கரர், விவேகானந்தர், ரமண மகரிஷி போன்றோர்கள் அகநிலைக் கருத்துமுதல்வாதிகள். மேலைநாடுகளில் அகநிலைக் கருத்துமுதல்வாதம் மிகமிகக் குறைவாகவே காணப்படுகிறது. அதில் குறிப்பிடத் தக்கவர் பெர்க்லி, மாஹியவாதிகள். 

மார்க்ஸ், ஹெகலின் கருத்துமுதல்வாதத்தை மறுத்துப் பொருள்முதல்வாதத்தை விளக்குகிறார். மூலதன நூலில் மார்க்ஸ் கூறுகிறார், “கருத்து என்பது மனித மனத்தில் பிரதிபலித்துச் சிந்தனையின் வடிவங்களாக உருவம் பெறும் பொருளாயத உலகமே தவிர வேறு எதுவுமில்லை.” (மூலதனம் I) அதாவது சிந்தனை என்பது பொருளாயத உலகின் பிரதிபலிப்பாகும். சிந்தனை தானே தோன்றுவதில்லை, பொருளாத உலகோடு உறவாடும் போது ஏற்படுகிறது. 

கருத்துமுதல்வாதம் சிந்தனை- கருத்து என்பதை ஒரு சிறந்த தலைவரின், அல்லது ஞானியின் படைப்பாகக் கருதுகின்றது. மார்க்சின் பொருள்முதல்வாதமானது கருத்து என்பது பொருளாயத உலகத்துடன் மனிதன் உறவாடும்போது ஏற்படுகிறது என்கிறார். 

இதையே பொருள்முதல்வாதம் வேறுவகையிலும் விளக்குகிறது. “சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை, வாழ்நிலையே சிந்தனை தீர்மானிக்கிறது.” 

வாழ்நிலை என்றால் என்ன?, 

ஒவ்வொரு மனிதனும் தமது வாழ்வாதரத்துக்காக வேலை செய்யும் போது பொருளாதார உறவுகள் ஏற்படுகின்றன. இந்த உறவுகளால் ஏற்படுகிற பொருளாதார நலன்களே அவர்களின் சிந்தனையைத் தீர்மானிக்கின்றது. 

   லெனின், இந்தக் கட்டுரையில் மார்க்சின் பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்வதற்கு, “மூலதனம்” முதல் தொகுதியின் முன்னுரை, மற்றும் எங்கெல்ஸ் எழுதிய “டூரிங்குக்கு மறுப்பு”, “லுத்விக் ஃபாயர்பாக்கும் செம்மை ஜெர்மன் சித்தாந்தத்தின் முடிவும்” ஆகிய நூல்களில் இருந்து மேற்கோள்களின் மூலம் விளக்கியுள்ளார். லெனின் காலத்தில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுதிய “ஜெர்மன் சித்தாந்தம்” வெளியாகவில்லை. இந்த “ஜெர்மன் சித்தாந்தம்” என்ற நூலையும், மார்க்ஸ் எழுதிய “ஹெகலின் சட்டம் பற்றிய தத்துவம் குறித்த விமர்சனத்துக்குப் பங்களிப்பு" என்ற நூலின் முன்னுரையையும் மார்க்சின் பொருள்முதல்வாத தத்துவத்தை அறிந்து கொள்வதற்கு உதவிடும். 

உலகில் காணப்படும் இயக்கம் அனைத்தும் பருப்பொருளின் நிலைநிற்பு பாங்காகும். இயக்கம் என்பது பருப்பொருள் இல்லாமல் நிகழாது, அதே போலப் பருப்பொருள் இன்றி இயக்கமும் இல்லை. இந்தப் பருப்பொருளின் இயக்கம் காலத்திலும் விசும்பிலும் நடைபெறுகிறது. 

“லுத்விக் ஃபாயர்பாக்கும் செம்மை ஜெர்மன் சித்தாந்தத்தின் முடிவும்” என்கிற நூல் மார்க்சிய பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்வதற்கு ஒரு முழுமையான நூல் என்று கூறலாம். இந்த நூலின் இரண்டாம் அத்தியாயத்தை லெனின் இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார். 

கடவுள் உலகத்தைப் படைத்தாரா அல்லது உலகம் எப்போதுமே நிரந்தரமாக இருந்து வருகிறதா?

இதுதான் தத்துவத்தின் அடிப்படைக் கேள்வி. 

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் போது தத்துவத்தில் இருபெரும் பிரிவுக்குள் ஏற்படுகிறது. ஒன்று கருத்துமுதல்வாதம் மற்றொன்று பொருள்முதல்வாதம். 

உலகம் படைக்கப்பட்டது என்று கூறுகிற அனைத்து தத்துவங்களும் கருத்துமுதல்வாத முகாமை சேர்ந்தது. 

இயற்கையே முதன்மையானது, அதாவது பிரபஞ்சம் என்றும் இருக்கிறது. அதில் மாற்றங்கள் மட்டுமே நிகழ்கிறது என்று கூறுபவர்கள் பொருள்முதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். 

முகாம் என்று ஏன் கூறப்படுகிறது என்றால், கருத்துமுதல்வாதத்தில் பல போக்குகள் இருக்கின்றன, அனைத்தையும் சேர்த்து கருத்துமுதல்வாத முகாம் என்று கூறப்படுகிறது. அதே போல், பொருள்முதல்வாதத்திலும் பல போக்குகள் இருக்கின்றன. அனைத்தையும் சேர்த்து பொருள்முதல்வாத முகாம் என்று அழைக்கப்படுகிறது. 

   தத்துவத்தில் இரண்டு போக்கு தான் இருக்கிறது. ஒன்று கருத்துமுதல்வாதம் மற்றொன்று பொருள்முதல்வாதம். இதற்கு அப்பாற்பட்டோ, இடைப்பட்டோ எந்தத் தத்துவமும் கிடையாது. 

அடுத்து லெனின் சுதந்திரத்துக்கும் அவசியத்திற்கும் இடையே உள்ள உறவு பற்றிப் பேசுகிறார். எங்கெல்ஸ் எழுதிய “டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலில் இருந்து ஒரு மேற்கோளின் மூலம் லெனின் இதனை விளக்குகிறார்.

 “அவசியத்தை அறிந்து ஏற்றுக் கொள்வதுதான் சுதந்திரம். அவசியம் என்பது நாம் புரிந்து கொள்ளாத வரை, கண்மூடித்தனமாக இருக்கும்”

(டூரிங்குக்கு மறுப்பு). 

வர்க்க சமூகத்தில் முழுச் சுதந்திரம் என்பது கிடையாது. சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமானால், அவசியமானது எது? என்பதை அறிந்து அதன் வழியில் செல்வதே சுதந்திரமானதாகவும் வெற்றி பெறக்கூடியதாகவும் இருக்கும். வர்க்க சமூகத்தில் நமது பயணம் வெற்றிப் பாதையில் செல்ல வேண்டுமானால் அவசியத்தை அறிந்து அதன் வழியில் செயல்பட வேண்டும். 

இயற்கையிலும், சமூகத்திலும் “புறநிலை விதிகள்” செயற்படுகின்றன, அதனை மீறி எதையும் செய்திட முடியாது. 

அந்த விதியை அறிந்து கொண்டால், அதன் அடிப்படையில் பலவற்றைச் சாதிக்கலாம். 

புவி ஈர்ப்பு விசை என்பது புறநிலையானது. இந்தப் புவிஈர்ப்பு விசையை மீறி விண்ணிற்கு ராக்கெட் அனுப்படவில்லை. புவி ஈர்ப்பு விசையை அறிந்து கொண்டதினால் தான் சிறப்பாக ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்ப முடிகிறது. புவி ஈர்ப்பு விசையை எவ்வளவுக்கு எவ்வளவு துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு வெற்றி கிட்டும். 

இதைத் தான் பொருள்முதல்வாதம் அவசியத்தை அறிந்து கொள்வதே சுதந்திரம் என்கிறது. 

புவி ஈர்ப்பு விசை என்பது இயற்கை பற்றியதாகும். சமூகமும் புறநிலை விதிக்குள் தான் செயற்படுகிறது. அதனை அறிந்து கொண்டால், சுதந்திரமாகச் செயற்பட்டாலாம். 

இயற்கைக்கும் சமூகத்திறகும் உள்ள புறநிலை விதியில் முக்கியமான வேறுபாடு இருக்கிறது. 

இயற்கை விதி மனிதனை சாராது இருக்கிறது. ஏன் மனித இனம் தோன்றாத காலத்திலும் இயற்கை செயற்பட்டது. ஆனால் சமூகம் என்பது உணர்வுள்ள மக்களின் செயற்பாடாகும், இந்தச் செயற்பாட்டைத் தீர்மானிப்பது புறநிலையாகும். 

சமூகத்தின் புறநிலை விதியானது, மனிதனின் மூலம் செயற்படுகிறது. புறநிலை விதி தானே செயற்படமுடியாது, மனிதனைக் கொண்டே செயற்படுகிறது. இதுதான் இயற்கைக்கும் சமூகத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு. 

அடுத்து, லெனின் மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதத்தைப் பற்றிப் பேசுகிறார். மார்க்சுக்கு முன்பு காணப்பட்ட பொருள்முதல்வாதம், பெருமளவுக்கு எந்திரத்தனமாக இருந்தது. 

இயற்பியல், வேதியல், உயிரியல், மின்னியல் போன்ற நவீனமான முன்னேற்றத்தை பழைய பொருள்முதல்வாதம் கணக்கில் கொள்ளவில்லை. இது பழைய பொருள்முதல்வாதத்தின் முதல் குறைபாடு என்கிறார் லெனின். 

இரண்டாவது குறைபாடு, வளர்ச்சி பற்றிய கண்ணோட்டத்தில், வரலாறுக்குப் புறம்பாகவும், இயக்கவியலுக்கு மாறாகவும் காணப்பட்டது. 

மூன்றாவது குறைபாடு, “மானித சாரம்” என்பதைச் சூட்சுமமாகவே பார்த்தது. 

சமூக உறவுகளின் ஒரு தொகுதியே இந்த “மானித சாரம்” என்பதை அது புரிந்து கொள்ளவில்லை. 

பொருள் உற்பத்தியின் போது ஏற்படுகிற உறவுகளில் தோன்றும் பொருளாதார நலன்களின் வெளிப்பாடே சிந்தனை - என்பதைப் பழைய பொருள்முதல்வாதம் அறிந்து கொள்ளவில்லை. அதாவது உழைக்கும் மக்கள் தங்களது வாழ்க்கைக்காக உழைக்கும் போது ஏற்படுகிற பொருளாதார உறவுகளே, உற்பத்தி உறவுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த உற்பத்தி உறவுகளின் நலன்களின் அடிப்படையில் தான், அவரவருக்கான சிந்தனைகள் தோன்றுகிறதன. 

இதனை மார்க்ஸ் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டின் மூலம் தெளிவாக விளக்கி உள்ளார். இந்த வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பற்றி அடுத்த வகுப்பில் பார்க்கலாம். 

இயக்கவியல் 

அடுத்து இயக்கவியல். இது தொடக்கக் காலத்தில் தர்கவியல் என்று அழைக்கப்பட்டது. ஐரோப்பிய தத்துவவாதிகள் தொடக்கத்தில் இயக்கவியல்வாதிகளாகவே இருந்தனர். ஆனால் அது அவர்களுக்குப் பின் கைவிடப்பட்டது. வெகு காலத்திற்குப் பிறகு ஹெகல் என்கிற கருத்துமுதல்வாதத் தத்துவவாதி இயக்கவியலை மீண்டும் கொண்டு வருகிறார். 

மீண்டும் இயக்கவியலை ஹெகல் கொண்டு வந்ததை, மார்க்ஸ் பெரும் சாதனையாகக் கருதினார். 

இயக்கவியலானது வளாச்சியைப் பற்றியும், மாற்றத்தைப் பற்றியும் உள்ள விதியாகும். 

இயக்கவியலானது வளர்ச்சியைப் பற்றிய விதியாகும். இயக்கவியலுக்கும் பரிணாமவாதத்துக்கு வேறுபாடு இருக்கிறது. இந்தப் பரிணாமவாதத்தையும் டார்வினின் பரிணாமத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பக்கூடாது. 

பரிணாமவாதமானது வளர்ச்சியை ஒரு தொடர் நிகழ்வாகப் பார்க்கிறது. அதவாது தொடக்க நிலையில் இருந்த முதலாளித்துவம், பின்பு ஏகாதிபத்தியமாக, உலகமயமாக, நிதி மூலதனமாக மாறிக் கொண்டே இருக்கும். 

முதலாளித்துவத்துக்கு மாற்று உண்டு என்பதைப் பரிணாமவாதம் மறுக்கிறது. 

ஆனால் இயக்கவியலானது ஒன்று வளர்ச்சி அடையும் போது அதன் முரண் முற்றி அந்த நிலையை அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறை என்கிற நிலையை மறுத்து சோஷலிச உற்பத்தி முறை என்கிற புதிய சமூகத்திற்கு மாறுவதைப் பற்றிக் கூறுகிறது. 

பரிணாமவாதமானது ஒன்றுக்குள்ளே ஏற்படுகிற மாற்றத்தை மட்டுமே கூறுகிறது. அந்த ஒன்று மற்றொன்றால் நிலை மறுக்கப்படும் என்பதைப் பார்க்கவில்லை. 

இந்த இயக்கவியல் என்கிற பகுதியை லெனின், எங்கெல்ஸ் எழுதிய “லுத்விக் ஃபாயர்பாக்கும் செம்மை ஜெர்மன் சித்தாந்தத்தின் முடிவும்” என்ற நூலின் அடிப்படையில் விளக்கி உள்ளார். பல மேற்கோள்களைக் கொடுத்துள்ளார். 

இயக்கவியலுக்கு நீருபணம் இயற்கை தான். இயற்கையின் வளர்ச்சி இயக்கவியல் வகைப்பட்டதே, அப்பாலைத் தத்துவம் கையாள்கிற இயக்கமறுப்பியல் அணுகுமுறையானது தவறு என்பதை நவீன இயற்கை விஞ்ஞானம் தொடர்ந்து நிரூபித்துவருகிறது. 

அடுத்து, எங்கெல்சின் எழுத்துக்களின் மூலம் லெனின், உலகத்தை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறார். உலகமானது அப்படியே தயார் நிலையில் உள்ள பொருட்களின் தொகுதியாகப் புரிந்து கொள்ளக்கூடாது. 

இயக்கப் போக்குகளின் ஒரு தொகுதியாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும். 

நாம் காணும் பொருட்கள், மாற்றம் அடையாதவைப் போல வெளித் தோற்றத்தில் தெரிகிறது. ஆனால் அந்தப் பொருட்கள், உள்முரண்பாட்டில் மாறிக் கொண்டும் வளர்ச்சி அடைந்து கொண்டும் இருக்கிறது. இயக்கவியலின் விதி இதைத்தான் கூறுகிறது. 

அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி. (The Law of the Transformation of Quantitative into Qualitative Changes) 

உலகில் காணப்படும் பொருட்கள் தம்முள் மாறிக் கொண்டும், அடுத்தப் பொருளோடு இணைந்து மாறிக் கொண்டும் இருக்கிறது. எந்தப் பொருளும் தனித்துக் காணப்படுவதில்லை, ஒவ்வொரு பொருளோடும் இணைந்தும் பிணைந்தும் காணப்படுகிறது. 

ஒரு தனிப் பொருளில் அளவு மாறுபாடு எவ்வாறு பண்புநிலையில் மாறுபாடு அடைகிறது என்பதைப் பார்ப்போம். 

ஹெகல் காலத்தில் இருந்தே “நீர்” என்கிற எளிய உதாரணத்தையே முதலில் எடுத்துக் கொள்வது வழக்கம். 

இது ஒரு எளிய உதாரணமே. ஒவ்வொரு உதாரணமும் அந்த விதியின் சில பகுதியைத் தான் விளக்குகிறது. அதனால் குறிப்பிட்ட உதாரணத்தை முழுமையாகக் கொண்டு விதியைப் புரிந்து கொள்ளக்கூடாது. முதலில் எளிய உதாரணத்தின் மூலம் அறிந்து கொண்டு, பிறகு சிக்கலான மேம்பட்ட உதாரணத்தை அறிந்து கொள்ள வேண்டும். இங்கே நாம் எளிய உதாரணத்தை மட்டுமே பார்க்கப் போகிறோம். 

நீரானது திரவ நிலையில் இருக்கிறது. அது சூடேற்றப்படும் போது அது ஆவியாக மாறிவிடுகிறது. இதை அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் சூடேறத் தொடங்கிய உடன் நீர் ஆவியாகிவிடுவதில்லை. அதன் கொதிநிலை படிப்படியாக அளவு மாற்றம் நிகழ்கிறது. 

அதன் கொதி நிலை 100 டிகிரியை எட்டிய உடன் திரவ நிலையில் உள்ள நீரானது ஆவியாக மாறிவிடுகிறது. 

திரவம் என்கிற குணத்தில் இருந்து ஆவி என்கிற புதிய குணத்தைப் பெறுகிறது. நீரை கொதிக்க வைத்தவுடன் இந்த மாற்றம் நிகழ்வதில்லை. கொதிநிலை படிப்படியாக அளவு மாற்றம் ஏற்பட்டு 100 டிகிரி என்கிற அளவைத் தொட்டவுடன் ஆவியாக மாறுகிறது. 

அளவுநிலை மாற்றம் குறிப்பிட்ட அளவைத் தொட்டவுடன் பழைய குணத்தை விடுத்து புதிய குணத்தைப் பெறுகிறது. 

இயக்கவியல் விதிக்கு எதுவும் இறுதியானது கிடையாது, பரமமானது கிடையாது, புனிதமானது கிடையாது என்கிறது. புனிதம் என்றால் மாறாதது என்பது தான் பொருள். இயக்கவியல், ஒவ்வொன்றின் தற்காலிகத் தன்மையை வெளிப்படுத்துகிறது. 

ஹெகலின் இயக்கவியலை மார்க்ஸ் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. ஹெகல் ஒரு கருத்துமுதல்வாதி ஆனதால் அவரது இயக்கவியலிலும் கருத்துமுதல்வாத மாயத் தன்மை காணப்படுகிறது. அந்த மாயத் தன்மையை நீக்கி இயக்கவியலை பொருள்முதல்வாதத் தன்மையினதாக வளர்த்து எடுக்கிறார் மார்க்ஸ். 

அறிவு எவ்வாறு பெறப்படுகிறது என்பதை “அறிவுத் தோற்றவியல்” என்கிற தத்துவப் பிரிவு ஆராய்கிறது. 

இயக்கவியல் வளர்ச்சியை, ஒரு சுருள்வளர்ச்சியாக விளக்குகிறது. ஒரு கட்டத்தைக் கடந்து சென்றது பின் மீண்டும் வருவது போல் தோன்றினாலும் இரண்டும் ஒன்றல்ல. 

ஆதிபொதுவுடைமை சமூகம் நிலை மறுக்கப்பட்டு அடிமை சமூகம் நிலைபெற்றது, அதன் வளர்ச்சிக் கட்டத்தில் அடிமைச் சமூகம் மறுக்கப்பட்டு நிலப்பிரத்துவச் சமூகம் நிலைபெற்றது, அதன் வளர்ச்சிக் கட்டத்தில் நிலப்பிரபுத்துவச் சமூகம் மறுக்கப்பட்டு முதலாளித்துவச் சமூகம் நிலைபெற்றது, அதன் வளர்ச்சிக் கட்டத்தில் முதலாளித்துவச் சமூகம் மறுக்கப்பட்டுப் பொதுவுடைமை சமூகம் நிலைபெற்றது. 

முதலில் காணப்பட்ட ஆதிபொதுவுடைமை சமூகமே மீண்டும் தோன்றியதாகக் கருதக்கூடாது. ஆதிபொதுவுடைமை சமூகத்தைவிட இந்த நவீன பொதுவுடைமை சமூகம் உயர்ந்த நிலையில் காணப்படுவதாகும். ஆதிபொதுவுடைமை சமூகத்தில் பற்றாக்குறையான நிலைமைகள் சமூகத்திற்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. நவீன பொதுவுடைமை சமூகத்தில் வளாச்சி அடைந்த உற்பத்திச் சாதனங்களால் சமூகத்திற்குப் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டுப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 

முந்தியதைவிட உயர்ந்த நிலையை அடைந்துள்ளதைக் கணக்கில் கொள்ள வேண்டும். 

இந்த மாற்றத்தைத் தான் இயக்கவியலின் “நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி” (The Law of the Negation of the Negation) என்கிற விதி விளக்குகிறது. 

ஒவ்வொரு நிலைபெற்றதும் மற்றொன்றால் நிலை மறுக்கப்படும் என்பதே இந்த விதி விளக்குகிறது. அதனால் இந்த விதியில் நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. 

அடுத்து, எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி. (The Law of the Unity and Struggle of Opposites) 

இந்த விதி ஒன்றினுள் ஏற்படுகிற முரண்பாட்டில் காணப்படும் ஒற்றுமையையும் சேர்த்து விளக்குகிறது. ஒரு பொருளின் இருப்பு என்பது இரண்டு தன்மைகளைக் கொண்டிருக்கின்றது. ஒன்று முரண்பாடு மற்றொன்று ஒற்றுமை. 

எதிர்நிலைகளின் ஒற்றுமை, அவற்றிடையேயான போராட்டம் என்ற இரண்டையும் பெற்றிருக்கின்றது. போராட்டம் என்பதை முரண்பாடு என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

முரண்பாடு என்னும்போது அவற்றில் ஒன்று இல்லாமல் ஒன்று இருக்க முடியாது என்ற வகையில் இணைந்தே காணப்படுகிறது. 

முதலாளித்துவச் சமூகத்தில் முரண்பாடு என்பது தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையே காணப்படுகிறது. முதலாளித்துவத்தில் தொழிலாளி இல்லாமல் முதலாளி இல்லை. அதே போல் முதலாளி இல்லாமல் தொழிலாளியும் இல்லை. 

இருவரும் முரண்பட்டுக் கொண்டிருந்தால் உற்பத்தி நிகழாது, உற்பத்தி நிகழ்வதற்கான ஒற்றுமை இருந்தாக வேண்டும். 

ஒற்றுமை ஒப்பீட்டுத் (Relative) தன்மையானது, அவற்றிடையே நடைபெறும் போராட்டம் அறுதியானது (absolute). 

ஒற்றுமை ஒப்பீடானது அதாவது அது இறுதிவரை தொடர்வதில்லை, ஒற்றுமை பலவீனபட்டுக் கொண்டே சென்று மறைந்துவிடும், ஆனால் போராட்டமானது இறுதிவரை வளர்ச்சி அடைந்து கொண்டே முதலாளித்துவத்தை வீழ்த்தும் வரை செல்கிறது. 

இயற்கையைப் புரிந்து கொள்வதற்கும், சமூகத்தை-வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கும் இயக்கவியலைப் அறிந்து கொள்வது அவசியமானதாகும். 

இயக்கவியல் விதி மூன்றையும் சுட்டிக்காட்டுவதோடு, இன்றைய வகுப்பை முடித்துக் கொள்வோம்.. 

1. அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி.

      (The Law of the Transformation of Quantitative into Qualitative Changes) 

2. நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி

    (The Law of the Negation of the Negation) 

3. எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.

     (The Law of the Unity and Struggle of Opposites) Struggle of Opposites)

வகுப்பு 3 :- “காரல் மார்க்ஸ் – வரலாற்றியல் பொருள்முதல்வாதம் - வர்க்கப் போராட்டம் (-லெனின்)