Saturday 28 May 2022

5. நியாயத் தத்துவம் எளிய அறிமுகம்

 

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

64 வது வார வகுப்பு – 28-05-2022)


 

இந்தியத் தத்துவத்தில் முக்கியமானதாக ஒன்பது தத்துவங்கள் கூறப்படுகிறது. உலகாயதம், சமணம், பவுத்தம், சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், மீமாம்சை, வேதாந்தம் இதில் உள்ள முதல் மூன்றை அவைதீகத் தத்துவம் என்றும் பின்னால் உள்ள ஆறு தத்துவங்களை வைதீகத் தத்துவம் என்று கூறுவது நம் நாட்டு மரபு. ஆனால், வேதாந்தத்தைத் தவிர மற்றவை அனைத்தும் கடவுள் கொள்கைக்கு எதிராகவே இருக்கிறது.

ஐந்து தரிசனங்களில் இறுதியான மீமாம்சையுடன் வேதாந்தம் தம்மை உத்திர மீமாம்சை என்று கூறிக்கொண்டு மீமாம்சையுடன் ஒட்டிக் கொண்டது. மீமாம்சையை பூர்வ மீமாம்சை என்றும் வேதாந்தத்தை உத்திர மீமாம்சை என்றும் கூறி இரட்டைத் தன்மையோடு காணப்படுவது போல், ஐந்து தரிசனங்களில் மற்ற நான்கு தத்தவங்களையும் இரண்டாக இணைத்து, இரட்டைத் தத்துவமாக சேர்க்கப்பட்டுள்ளது.

      சாங்கிய-யோகம், நியாய-வைசேஷிகம், பூர்வ மீமாம்சை-உத்திர மீமாம்சை.

கடவுளை ஏற்றுக் கொள்ளாதத் தத்துவங்களோடு மூன்றாக இணைத்துக் கூறும்போது கடவுள் உள்ளே நுழைக்கப்படுகிறது என்பதே உண்மையாகும். எவ்வளவுதான் இணைத்து விளக்கம் கொடுக்கப்பட்டாலும் முரணில்லாமல் அத்தத்துவங்கள் காணவில்லை. அந்த தத்துவங்களுக்கே உரிய கடவுள் அற்றத் தன்மையை முழுமையாக நீக்க முடியவில்லை.

      இந்த இரட்டைத் தரிசனங்களைப் பற்றி பத்மன் தமது நூலில் சிறப்பாக கூறியுள்ளார்.

 

“… வைதீக ஷட்தர்சனங்களில் (வேதம் சார்ந்த ஆறு நோக்குகளில்) 3 இரட்டைத் தரிசனங்கள் உள்ளன.

 

அந்த வகையில், அணுவியல் பேசும் வைசேஷிகத்தோடு, அளவையியல் என்ற தர்க்கவாதப் பகுப்பாய்வின் மூலம் இறைவனை முன்னிறுத்தும் நியாயம் உடன்பிறப்புத் தத்துவமாகத் திகழ்கிறது. இதேபோல், பிரகிருதி - புருஷக் கோட்பாட்டின் துணைகொண்டு பரிணாமவாதம் பேசும் சாங்கியமும், உடல் - மனப் பயிற்சிகள் மூலம் மனிதனை இறைநிலைக்கு உயர்த்தும் யோகமும் ஓர் இரட்டைத் தரிசனங்கள். தேவர்களை (தெய்வங்களை) திருப்திப்படுத்திப் பயன்பெறும் வேள்விச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் தரும் கர்ம காண்டமாகிய பூர்வ மீமாம்சையும், ஆத்ம விசாரத்தின் மூலம் ஆண்டவனோடு ஒன்றிணையும் முக்தியை வலியுறுத்தும் உத்தர மீமாம்சையாகிய வேதாந்தமும் மற்றோர் இரட்டைத் தரிசனங்கள்.

 

 

இதில் விசித்திரம் என்னவென்றால், இந்த இரட்டைத் தரிசனங்களில் மூத்தவைகளான வைசேஷிகம், சாங்கியம், (பூர்வ) மீமாம்சை ஆகிய மூன்றும், ஆண்டவனை மறுக்கின்றன அல்லது முக்கியத்துவம் தராமல் ஒதுக்குகின்றன. ஆனால், அவ்வவற்றோடு தொடர்புடைய பிந்தைய தரிசனங்களான நியாயம், யோகம், வேதாந்தம் ஆகியவை, ஆண்டவன் இருப்புக்கான காரணங்களைக் கூறி வலியுறுத்துகின்றன.”

(தத்துவ தரிசனங்கள்- பக்-69)

      அந்த மூன்றில் யோகம் மனதையும், உடலையும் பேணுவதற்கான வழிமுறை ஆகும். கடவுள் கோட்பாடு தேவையில்லாது சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்து நியாயம், தொடக்கக்காலத்தில் கடவுளைப் பற்றி இத் தத்துவம் பேசவில்லை, பிற்காலத்தில்தான் இணைக்கப்பட்டுள்ளது. இறுதியில் உள்ள வேதாந்தம் தான் கடவுள் தன்மையுடன் காணப்படுகிறது. இந்த ஆறில் வேதாந்தம் தனித்துக் காணப்படுகிறது. அதுவும் ஐந்தாவதான மீமாம்சையில் பிற்சேர்கையாக ஒட்டப்பட்டுள்ளது. மீமாம்சையை பூர்வ மீமாம்சை என்றும் வேதாந்தததை உத்திர மீமாம்சை என்று கூறி ஐந்து தரிசனங்களுள் நுழைக்கப்பட்டுள்ளது.

      அடுத்து நியாயத் தத்துவத்தின் அடிப்படைகளைப் பார்ப்போம்.

      நியாயம் என்ற சொல்லுக்கு தர்க்கம் (அளவையியல்), வாதாடுதல் என்று பொருள் கொடுக்கப்படுகிறது. தர்க்கத்தின் அடிப்படையில் வாதாடுதல் என்பதே  நியாயத் தத்துவத்தின் போக்காகும். வைசேஷிக தத்துவத்தின் முக்கிய அடிப்படை அணுக்கோட்பாடு என்றால், நியாயத் தத்துவத்தின் அடிப்படை தர்க்கித்தல் என்று கூறலாம். இதனை, 

கி.லக்ஷ்மணன் கூறுகிறார்:-

 

“தர்க்கத்தின் முடிவைவிட, தர்க்க முறைக்கே அவர்கள் முக்கியத்துவம் அளித்தனர். நியாயிப்பதால் அடையும் முடிவுகளைவிட்டு, நியாயிக்கும் முறையிலே சென்றது அவர்களுடைய கவனம். இத்துறையிலே வேறு எம் மதத்தினரும் செலுத்தாத அளவு கருத்தைச் செலுத்தி, செம்மையாக நியாயிப்பது எங்ஙனம் என வரையறை செய்து, வரம்பு அமைக்க முற்பட்ட பெருமையினால்தான், நையாயிகர் என்ற சிறப்புப் பெயரும் இவர்களுக்கு ஏற்படலாயிற்று.”

(இந்திய தத்துவ ஞானம், பக்-247)

 

      நியாயத் தத்துவத்துக்கு கிடைக்கும் முதல் நூல் கவுதமர்  என்பவரால் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் எழுதிய “நியாய சூத்திரம்” ஆகும். இந்த நூல் ஐந்து அத்தியாயங்களையும் 548 சூத்திரங்களையும் கொண்டுள்ளது.

      இந்தியத் தத்துவத்தில் அறிவதற்கான வழிகளாக பிரமாணங்களைப் பின்பற்றினர். பிரமாணங்கள் பலவைகளாக இருந்தாலும் ஆறு முக்கியமானதாகும், அதில் உள்ள 1..பிரத்தியட்சம், 2.அநுமானம், 3.ஆப்தவாக்கியம், 4.உபமானம் என்கிற முதல் நான்கை மட்டுமே நியாய தத்துவவாதிகள் ஏற்கின்றனர், இறுதி இரண்டையும் ஏற்கவில்லை. ஏற்றுக் கொண்ட நான்கை சுருக்கமாகப் பார்ப்போம்.

முதல் பிரமாணம் பிரத்தியட்சம். இதை ஒர் எளிமையான உதாரணத்தின் மூலம் விளக்குவோம். வெளி ஊரில் வேலைக்கு சென்ற முருகன் கிராமத்துக்கு வந்த தகவலை அறிதலை வைத்து நான்கு பிரமாணங்களைப் பார்ப்போம்.

“டேய் நமது கல்லூரி நண்பன் முருகன் கிராமத்துக்கு நேற்று வந்துள்ளான் என்று அவன் அம்மா கூறினார்.” முருகனின் வருகை பற்றி அவனது அம்மா கூறியதன் மூலம் முருகன் கிராமத்துக்கு வந்த செய்தி உறுதியாகிறது. இந்த உறுதி காது என்கிற புலனால் அறியப்பட்டது. “அப்படியா, வந்துட்டானா,” “ஆமாண்டா, நேற்று ராத்திரி அவன் வீட்டின் வாசலில் பார்த்தேன்” என்றான் மற்றொருவன்

இது கண் என்கிற புலனால் அறியப்பட்ட உறுதியான செய்தி. இந்த இரண்டும் காட்சி அளவையான பிரத்தியட்சமாகும்.

      வேறொரு நட்புவட்டதும் முருகனின் வருகையைப் பற்றி பேசிக் கொண்டன.

      “டேய் முருகன் வந்துட்டான்போல.” “உனக்கு எப்படி தெரியும்.” “அவனுடைய அப்பா அம்மா மட்டும் இருக்கும் போது வீட்ல சத்தம் எதுவும் இருக்காது, நேற்று அவங்க வீட்ல ஒரே சத்தம்”. முருகன் வந்தது அநுமானத்தால் அறியப்படுகிறது. இரண்டு பேர் பேசும் சத்தம் போல் இல்லாமல் நேற்று அதிகமாக இருந்தது என்பதின் மூலம் முடிவெடுப்பது அநுமானித்தல் எனப்படுகிறது. இது இரண்டாவது பிரமாணம் ஆகும்.

“டேய் முருகா, சென்னையில் எல்ஐசி தான் பெரிய கட்டிடமாடா”, “இத என்னடா அவன்கிட்ட கேட்கிற, செய்தித்தாளிலும் வாரப் பத்திரிகையிலும் படிக்கலையா, அதைவிட அதிக அடுக்குகளைக் கொண்ட கட்டிடங்கள் நிறைய சென்னையில்ல இப்போ இருக்கு” இது ஆப்தவாக்கியம். அதாவது அறிந்தோர் உரை. குறிப்பாக நூல்களினால் அறியப்பட்டது.

நான்காவது உபமானம். “டேய் முருகா, புதிசா சென்னையில் வந்திருக்கிற மெட்ரோ ரயில் எப்படிடா, மேலே பறக்குதாம், பூமிக்கு உள்ளே போகுதாம்.” “அது ஒண்ணும் இல்லைடா, நம் ஊர்ல போகிற ராயில் மாதிரிதான் கொஞ்சம் சிறியதாக இருக்கும், ஆனா வேகமா போகும்.” தெரிந்த ரயிலோடு ஒப்பிட்டு மெட்ரோ ரயில் இங்கே அறியப்படுகிறது. இது உபமானம் அதாவது ஒப்பிட்டு அறிதல்.

      நியாயவாதிகள் இந்த நான்கைக் கொண்டு உலகில் காணும் அனைத்தையும் அறிகின்றனர். சிந்துக்கும் மனங்களின் சார்பற்ற வகையில் புறவுலகு இருப்பதை நியாயத் தத்துவம் ஏற்கிறது.

      உலகைப் பற்றிய அறிவு உண்மையானது என்று தொடக்கக்கால வைசேஷிகர்களைப் போலவே தொடக்கக்கால நியாயத் தத்துவமும் கருதியது. தர்க்கமே உலகை அறிவதற்கான வழிமுறையாகும். ஆனால், கிடைக்கும் அறிவைவிட, அறிவை அடைவதற்கான வழிமுறைக்கே அதிக முக்கியத்துவம் நியாயம் தத்துவம் கொடுக்கிறது..

      வைசேஷிகத்தில் உள்ள ஏழு வகையினங்களையும் (பதார்த்தத்தையும்) நியாயத் தத்துவவாதி ஏற்றுக் கொள்வர், அந்த ஏழையும் பிரமேயம் என்ற ஒரே பதார்த்தத்துக்குள் அடக்குவர். மேலும் கூடுதலாக பதினைந்து பதார்த்தங்களை சேர்த்து அவர்கள் பேசும் பாதார்த்தங்கள் மொத்தம் பதினாறு ஆகிறது.

வைசேஷிகருக்கு பொருள் (திரவியம்) தான் முதன்மையானது, நியாய தத்துவாதிக்கு பிரமாணம் முக்கியமானது. வைசேஷிகம் பொருளை அடிப்படையாகக் கொண்டது, நியாயம் பொருளை அறியும் வழிமுறைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.

      ஆத்மா, தெய்வம், முக்தி ஆகியவை பற்றி நியாய தத்துவத்தின் கருத்துகளை சுருக்கமாக அடுத்து பார்க்கப்போம்.

      ஆத்மா நிலையானப் பொருள், அறிவுடைமை அதன் சிறப்பு. ஆத்மாக்கு உடலோடும் மனதோடும் தொடர்பு கொள்வதனாலேயே அறிவு கிடைக்கிறது.

பிற தத்துவங்களின் ஆத்மா பற்றிய கருத்தோடு ஒப்பிடும் போது இந்த ஆத்மா வித்தியாசமாக இருக்கிறது. ஆத்மாவுக்கு அறிவு உலகப் பொருளோடு தொடர்பு கொள்வதினால் ஏற்படுவதாகக் கூறுவது விநோதமாக இருக்கிறது. அத்மா பேருணர்வு கொண்டது, முழுநிறைவு பெற்றது என்றே மற்ற தத்துவங்கள் ஆத்மாவைப் பற்றி பேசுகின்றன. ஆத்மாவுக்கான அறிவு வெளியுலகால் பெறப்படுவதாக நியாயம் கூறுவது விநோதமாகவே இருக்கிறது.

      ஆத்மாக்கள் பல, ஒவ்வொரு ஆத்மாவும் கர்மவினையினால் பல பிறவிகள் எடுக்கின்றன என்பதே நியாயத் தத்துவத்தின கருத்து

      தொடக்க கால நியாய நூல்களில் தெய்வத்தைப் பற்றிய குறிப்புகள் கிடையாது. பின்பு வந்த நூல்களிலேயே தெய்வம் சேர்க்கப்பட்டுள்ளது.

கி.லஷ்மணன்:-

“நையாயிகம் பற்றிய முதனூலிலே இறைவனைப் பற்றி முக்கிய விவரம் எதுவும் கிடையாது. பின் வந்த நூல்களே இறைவனைப் பற்றி விவரமாகப் பேசுகின்றன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது”

(இந்தியத் தத்துவஞானம், பக்-266) 

நியாய தத்துவத்தில் காணப்படும் கடவுள் தன்மையப் பற்றி ஓ.ரா.கிருஷ்ணன் கூறுவதையும் சேர்த்துப் பார்போம்.

 

“நியாய தத்துவத்தின் ஆதிநூலில் கடவுள் பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. பிற்காலத்தில் நியாய தத்துவத்தில் இணைக்கப்பட்டுள்ள கடவுளும் ஒரு ஆன்மாவாகவே கருதப்படுகின்றது, ஆனால் கடவுள் ஆன்மாவாக இருந்தாலும், அவர் எல்லாம் வல்லவர் பிரபஞ்சத்தின் மூலபதார்த்தங்களாகக் காட்டப்படுபவற்றைக் கொண்டு உலகையும் உயிர்களையும் படைக்கிறார், காக்கிறார், அழிக்கிறார் என்று இங்கு கூறப்படுகின்றது ஆன்மாக்கள் எல்லாம் வல்லவையல்ல, அதனால் தான் ஆன்மாக்கள் ஜீவாத்மாக்கள் என்றும், கடவுள் பரமாத்மா என்றும் இங்கு கூறப்படுகின்றது.”

(இந்திய ஞான மரபுகள் பௌத்தத்தின் பார்வையில், பக்152)

      தெய்வத்தின் இருப்பை பிற தத்துவங்கள் என்ன அடிப்படைக் காரணத்தை கொண்டு விளக்க முயற்சித்ததோ அதையே முதலில் நியாயத் தத்துவவாதியும் கருதினர். பானை செய்வதற்கு ஒரு குயவன் இருப்பது போல உலகைப் படைப்பதற்கு ஒரு கடவுள் தேவை. குயவன் இல்லாது போனால் குடம் இல்லை, அதே போல கடவுள் இல்லாது உலகம் இல்லை.

      பிரபஞ்சப் படைப்புக்கு தெய்வம் நிமித்த காரணம். இறைவன் நித்திய திரவியங்களை அதாவது நிலையானப் பொருட்களை படைக்கவில்லை, இந்தப் பொருளை துணையாகக் கொண்டே பிரபஞ்சத்தை தெய்வம் படைக்கிறார். படைத்ததை காப்பதும் அழிப்பதும் கடவுளின் செயலே இதுவே பிற்கால நியாய தத்துவத்தின் கடவுள் பற்றி கொள்கை.

      ஒன்றும் இல்லாதத்தில் இருந்து தெய்வம் இந்த உலகத்தைப் படைக்கவில்லை. படைப்புக்கு வேண்டிய பொருட்கள் நிலையாக இருக்கின்றன அந்தப் பொருளைப் பயன்படுத்தியே உலகம் தெய்வத்தால் படைக்கப்படுகிறது. அதனால் படைப்புக்கு தெய்வம் நிமித்தக் காரணனே.

      நிமித்த காரணன் என்று தெய்வத்தை ஏன் கூறப்படுகிறது?.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். குடம் செய்ய வேண்டும் என்றால் கழிமண் தேவை. இந்தக் கழிமண் உபாதானக் காரணம், கழிமண்ணை பானையாக செய்வதற்கு ஒரு குயவன் தேவை, அந்தக் குயவனே நிமத்த காரணன். உலகப் படைப்புக்கு திரவியங்கள் அதாவது பொருட்கள் உபாதானக் காரணம், தெய்வம் நிமித்தக் காரணன். குயவனைப் போல் தெய்வம் பொருட்களைக் கொண்டே உலகைப் படைக்கிறார்.

      கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உதயணர் என்பவர் “நியாய குசூமாஞ்சலி” என்கிற நியாயத் தத்துவ நூலை எழுதியுள்ளார். அதில் கடவுள் இருப்புக்கு ஒன்பது காரணங்கள் கூறப்பட்டுள்ளது. அதனை சுருக்கமாகப் பார்ப்போம்.

1. செயலால் (கார்யாத்)   

      பொருட்கள், செயல், வினையாற்றுதல் இந்த மூன்றையே பிரபஞ்சப் படைப்புக்கு காரணங்களாக நியாயத் தத்தும் கூறுகின்றது. ஒரு விளைவுக்கு சில பொருட்கள் தேவைப்படுகிறது, அது செயல்பட்டால்தான் விளைவை நிறைவேற்ற முடியும். அந்த செயலை திறம்பட செய்வதற்கு ஒரு செயற்பாட்டாளர் வேண்டும், அந்த செயல்பாட்டாளரே கடவுள்.

உலகம் சிறப்பாக படைக்கப்பட்டுள்ளது என்றால் அதனை ஒரு திறமையான ஒருவன் செய்திருக்க வேண்டும். அந்த ஒருவனே கடவுள்.

2. ஒருங்கிணைப்பால் (அயோஜனாத்)

      படைப்புக்கு அணுக்களே அடிப்படை, ஆனால் இந்த அணுக்கள் உணர்வற்றவை.

உணர்வற்றப் பொருள் தானே செயல்பட முடியாது. “அதிர்ஷ்டம்” என்ற செயற்பாட்டின் தொடக்கமே படைப்பை நிகழ்த்துகிறது. இந்த “அதிர்ஷ்டம்” உணர்வற்றது. அதனால் செயல்பாடு திறம்பட நடைபெறுவதற்கு உணர்வுள்ள ஒருவன் தேவை, அந்த ஒருவன்தான் கடவுள்.

அணுக்களின் சேர்க்கையே பொருட்கள். இந்த அணுச்சேர்கையை நேர்த்தியாக செய்ய வேண்டும் என்றால் உணர்வுள்ள கடவுளால்தான் முடியும். இது பிற்கால நியாய தத்துவத்தின் கருத்து. “அதிர்ஷ்டம்” என்ற படைப்புத் தன்மையை பிற்கால நியாய தத்துவம் உணர்வற்ற, அறிவற்ற பொருளாக கருதி, உணர்வுள்ள கடவுளை நுழைத்தது.

3. ஆதாரம் (த்ரிதே)

      ஆதாரம் இல்லாது எந்த பொருளுக்கும் இருப்பு இல்லை. இந்தப் பிரபஞ்சம் நிலைத்திருப்பதற்கு ஒர் ஆதாரம் தேவை, அந்த ஆதாரமே கடவுள். இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை ஒழுங்குபடுத்த, கடவுள் என்ற உணர்வுள்ள ஆதாரத்தால் தான் முடியும்.

4) சொல் (பதாத்)

      ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் இருக்கிறது. அந்தப் பொருள் குறிப்பிட்ட நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. நெருப்பு என்றால் வெப்பத் தன்மையை குறிப்பிடுகிறது, தண்ணீர் என்றால் குளிர்ச்சியை குறிக்கிறது, பறவை என்றால் பறப்பதைக் குறிக்கிறது. அதேபோல பிரபஞ்ச படைப்பு நிகழ வேண்டும் என்றால் உணர்வுள்ள ஒன்று, படைப்பைப் பற்றி நினைக்க வேண்டும், நினைத்ததை நிறைவேற்ற வேண்டும். அந்த ஒன்றே கடவுள்.

கடவுளின் சங்கல்பம் இல்லாது படைப்பு நிகழ்வதில்லை. செய்ய வேண்டியதை வரையறுத்து அதற்கான ஆயத்தம் செய்வதே சங்கல்பம். “அதிர்ஷ்டம்” என்ற செயல் நிகழவேண்டும் என்றால் அதற்கு கடவுள் சங்சல்பிக்க வேண்டும்.

5) நம்பிக்கை (பிரத்யதஹ்)

      வேதங்கள் பல்வேறு ரிஷிகளின் பெயரால் கூறப்பட்டுள்ளது. ரிஷிகள் மனிதர்கள், மனிதர்கள் சரியானதையும் தவறானதையும் சேர்த்துச் செய்யக்கூடியவர்கள். வேதம் தீர்க்க தரிசனமானவை, அதாவது வேதம் தவறு அற்றவை என்பதினால் இதனைப் படைத்தது தவறே செய்யாத கடவுளே ஆவார்.

6) வேதத்தால் (ஸ்ருதி)

      உலகைப் படைத்து, காத்து, அழிப்பவர் கடவுள் என்று வேதம் கூறியுள்ளது. இந்த சாஸ்திர பிரமாணம் கூறுகிறபடி கடவுள் உண்டு. அதாவது வேதமே பிரமாணம், வேதத்தில் கடவுளின் இருப்பைப் பற்றி கூறியுள்ளது அதனால் கடவுள் உள்ளார்.

7) கட்டளைகளால் (வாக்யாத்)

      ஆன்மீகக் கட்டளைகள் தெய்வத்திடம் இருந்துதான் வரமுடியும். வேதம் தெய்வத்தின் கட்டளைகள். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்கிற முக்காலத்துக்குமான கட்டளைகளைக் கொண்டுள்ளது வேதம். முக்காலத்தைப் பற்றி மனிதன் அறிய முடியாது, முக்காலத்தையும் அறிந்த கடவுளே வேதத்தை படைத்திருக்க வேண்டும். இந்த வேதம் ரிஷிகள் மூலம் அறியப்பட்டு உலகுக்கு அறிவிக்கப்படுகிறது. சமூகத்தில் கடைபிடிக்க வேண்டிய அறநெறிகள், சட்டங்கள் போன்றவற்றை வேதம் கூறுகிறது.

இந்த வேதத்தை உருவாக்கியது மனித சக்திக்கு அப்பாற்பட்ட அதாவது மனிதனுக்கு அப்பாற்பட்ட கடவுளாகவே இருக்க முடியும்.

8) எண்களின் சிறப்பால் (சங்க்யாவிசேஷாத்)

      அணுக்களின் எண்ணிக்கைப் படியே உலகில் உள்ள பொருட்கள் தோன்றியுள்ளது. அணுக்களின் எண்ணிக்கையின் அளவைப் பொருத்தே பொருட்கள் வேறுபடுகின்றன. அணுக்களின் சேர்க்கை தற்செயல் நிகழ்வல்ல, அதனை ஒழுங்காக நெறிப்படுத்த ஒருவர் வேண்டும். அந்த ஒருவர் கடவுளாகத்தான் இருக்க முடியும்.

9) காண இயலாததால் (அதிருஷ்டாத்)

      சமூகத்தில் உள்ள மனிதர் அனைவரும் இன்பம்-துன்பம், நல்லது-கெட்டது என்கிற இரட்டைகளை அனுபவிக்கின்றனர். ஆனால் சிலர் மட்டும் பணக்காரராக இன்பத்தை அதிகம் அனுபவிக்கின்றனர், பலர் கடுமையாக உழைத்தும் ஏழ்மையால் துன்பப்படுகின்றனர். இதற்கு காரணமாக ஆன்மீகம் வினைக் கோட்பாட்டை முன்வைக்கிறது. இந்த பிறவியில் சிலர் வேதக் கட்டளைக்கு மாறாக நடந்து கொண்டாலும் பணக்காரர்களாக இருப்பதற்கு போன ஜென்மத்தில் அவர்கள் செய்த புண்ணிய காரியமே காரணம் ஆகும். சாதிய விதிப்படி கடுமையாக உழைத்தும் ஏழைகள் துன்பத்துக்கு ஆளாகிறார்கள் என்றால் போன ஜென்மத்தில் அவர்கள் செய்த பாவ காரியமே காரணம் ஆகும். போன ஜென்மத்தில் செய்த பாவ-புண்ணிய காரியத்துக்கு ஏற்ப பிறப்பெடுத்த மனிதனுக்கு பணக்கார-ஏழைத் தன்மைகள் கிடைக்க வேண்டுமானால் அதை செய்வதற்கு ஒரு சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தியே கடவுள்.

போன ஜென்மத்தில் செய்ததை இப்பிறப்பில் மனிதர்களால் அறியமுடியாது மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுளாலேயே  அறிய முடியும்.

      கடவுள் இருப்புக்கான ஒன்பது காரணங்களை இவ்வாறு நியாய தத்துவம் விளக்குகின்றது.

இதனை தொகுத்து சுருக்கமாக மு.கு.ஜகந்நாத ராஜா கூறியுள்ளார்:-

“நியாயம் கடவுள் உண்மையை நிரூபிக்கக் கூறும் தருக்கத்தில் முக்கியமானது இந்த உலக சிருஷ்டிக்குக் காரண கர்த்தாவாக ஒரு அறிவுடைய பொருள் இருக்க வேண்டும். மனித ஆன்மா சிற்றறிவுடையது. இப்பரந்த பிரபஞ்சத்தை அறிவற்ற ஜடம், யாதொரு நோக்கமுமின்றிச் சுயமாகத் தோற்றுவிக்க முடியாது. ஆதலால் முற்றறிவுடைய ஒரு பரம்பொருள்தான் சிருஷ்டிக்கு மூல காரணமாகும். குடத்தைச் செய்ய ஒரு குயவன் வேண்டும். நாற்காலி செய்ய ஒரு தச்சன் வேண்டும். மண்ணோ மரமோ தானாக குடமாவதும், நாற்காலியாவதும் இல்லை. அது போன்றே இப்பிரபஞ்சமும் படைப்போனாகிய ஈசுவரன் (கடவுள்) ஒருவனால் தான் தோன்ற முடியும். அது முற்றறிவுடைய மாபெரும் சக்தியாகிய மூலப் பரம்பொருள் ஆகும் என்று நியாயம் கூறுகிறது.”

(தத்துவ தரிசனங்கள், பக்-165)

தொடக்கக் கால நியாய தத்துவத்தின் அணுக்கோட்பாடு, பிற்காலத்தில் கடவுள் கோட்பாட்டுக்குள் அடக்கப் பட்டுள்ளது.

      சமூகத்தில் ஏழை-பணக்காரன் என்று இரு வர்க்கங்களாக பிரிந்து போனதற்குக் காரணத்தை, சமூகத்தில் தேடாது, போன ஜென்மத்தின் விளைவாக பிற்கால நியாய தத்துவம் கூறுகிறது. சமூகப் பார்வையற்று, வர்க்க வேறுபாட்டை புரிந்து கொண்டதாலும், ஆத்மா, கடவுள் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டதாலும் நியாய தத்துவம் மனித வாழ்க்கையை துன்பமயமானதாகவும், பிறவிச் சுழற்சியாகவும் கண்டது. அதனால் இந்த உலகில் இருந்து விடுபடுவதே விடுதலை என்று முக்திக்கு வழிகாட்டியது.

      துன்பமயமான உலகில் விடுதலைக் கிடையாது, ஆத்வை விடுவிப்பதே விடுதலை ஆகும். இந்த விடுதலையே மோட்சம்-முக்தி எனப்படுகிறது

முக்தி

இங்கே நியாய-வைசேஷிகர்களின் முக்தி பற்றிய கூறுவதைப் பார்ப்போம்.

      உலகில் மனிதன் துன்பத்தை அனுபவிப்பதற்கு, உண்மையல்லாத இந்த உலகை உண்மையாக கருதியதே காரணம், ஆத்மாவே உண்மையானது. அந்த ஆத்மா இயல்பிலேயே ஆனந்த மயமானது. இந்த ஆத்ம ஆனந்தத்தை அடைய வேண்டும் என்றால் இன்பம்-துன்பம், நன்மை-தீமை, பணக்காரன்-ஏழை என்கிற இரட்டைத் தன்மையுள்ள உலகத்தை விடுத்து, தன்னியல்பான ஆத்மாவில் (பரமாத்மாவில்) ஒடுங்க வேண்டும்.

      பழங்குடி சமூகத்தில் மனிதர் எவ்வளவு கஷ்டங்களுக்கு ஆளானாலும் அதை ஒற்றுமையாக எதிர்த்து ஒன்றுபட்டு வாழ்ந்தனர். கிடைத்தவற்றை சமமாக பங்கிட்டுக் கொண்டனர். உழைப்புப் பிரிவினையும், சொத்துடைமையும் தோன்றிய பிறகு உழைப்பைப் பெறுபவன் உழைப்பை செலுத்துபவன் என்று இரு வர்க்கமாக சமூகம் பிளவுபட்டது. உடல் உழைப்பு இழிவாகவும் மூளை உழைப்பு உயர்ந்ததாகவும் கூறப்பட்டது. அதுமுதல் வர்க்க முரண் முற்றி வருகிறது. வர்க்க போராட்டத்தை மழுங்கடிக்க, இந்த உலகம் துன்பமயமானது என்ற கருத்தை கருத்துமுதல்வாதத் தத்துவம் பரப்புகிறது. இந்த உலகினால் மனிதனுக்குக் கிடைத்து கைவிலங்கே, இன்பத்தால் கிடைப்பது பொன் விலங்கு, துன்பத்தால் கிடைப்பது இரும்பு விலங்கு. ஆக இரண்டும் விலங்கே என்று கருதுகிறது.

விலங்கிட்ட இந்த உலகம் மாயையானது அதாவது உண்மைக்கு மாறானது, ஆத்மாவே உண்மையானது. இந்த ஆத்மா இயல்பிலேயே ஆனந்தமயமானது. ஆகவே பொய்யான, அடிமைத்தனமான உலகில் இருந்து விடுபட்டு ஆத்மாவில் ஒடுங்குவதே விடுதலை-முக்தி என்கிறது நியாய-வைசேஷிகம்.

      ஆத்மாவின் ஒன்பது இயல்புகளை முடிவுக்கு கொண்டுவருவதே முக்தி.

தேவிபிரசாத் சட்டோபாத்யாயா:-

“1.உணர்வு அறிவு 2.மகிழ்ச்சி 3.வேதனை 4.விருப்பு 5.வெறுப்பு 6.ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதல் 7.தர்மம் 8.அதர்மம் 9.பழைய வினைக்கேற்பச் செயல்படுதல், என்பவையே அவை. இவை அனைத்தும் அழிந்தொழிந்தால் ஆத்மா விடுதலை பெற்று விடுவதாகக் கொள்ளலாம். அவ்வாறு விடுதலை பெறும் போதும் ஆத்மாவின் நிலை எப்படி இருக்கும்? அப்போது ஆத்மா வெறும் ஜடமாய் - உணர்வும் அறிவும் இல்லாமலும் வேறு எத்தகைய உடலுக்குரிய செயல் இல்லாமலும் இருக்கக்கூடிய பொருளாக ஆகிவிடுகிறது; மண் போலவும் கல் போலவும் கண்கூடாகவே ஒரு வெறும் பௌதீகப் பொருள் ஆகிவிடுகிறது என்பதுதான் முடிவாகும்.”

(இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும், பக்-646)

      ஆத்மாவில் ஒடுங்கி “கல்” போன்றும் “மண்” போன்றும் கிடக்க வேண்டுமா? சமூக முரணை எதிர்கொண்டு போராட வேண்டுமா? எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை அவரவர் சொந்தமாக முடிவெடுக்க வேண்டும்.

      நியாய-வைசேஷிகத் தத்துவம் உண்மையில் அணுக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது இதற்கு முரணாகவே ஆத்மா, கடவுள், முக்தி ஆகியவை பிற்காலத்தில் இணைக்கப்பட்டது. தொடக்கநிலை பொருள்முதல்வாதமாக இருந்த நியாய-வைசேஷிகத் தத்துவம் பிற்காலத்தில் கருத்துமுதல்வாதமாக மாற்றப்பட்டது.

இந்தக் கருத்துக்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் அது அணுக் கோட்பாட்டுக்கு முரணாக இருப்பதையும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறுவதைப் பார்ப்போம்.

 

“இது மிகவும் சுவையான விஷயம்; எங்கிருந்து மோக்ஷத்தைப் பற்றிய விஷயங்களைக் கடனாகப் பெற்று ஒட்டி வைத்தார்கள் என்பது இதனால் தெரிய வருகிறது. தத்துவ ஞானத்தால் இவ்வுலகத்துப் பாச பந்தங்கள் அகலும் என்பது உபநிஷத்தின் முக்கியமான விஷயம். கருத்தமுதல்வாதத்தின் வெறும் ஊகமானது இது; இதைத்தான் அத்வைதிகளும் மஹாயானிகளும் ஒத்துப் பாடினார்கள். இதன் அடிப்படை இரண்டு. ஆத்மா ஒன்றுதான் பரமஸத்யம் என்பதும் ஜட இயற்கையான உலகம் நிஜமில்லை என்பதுமே அவை. இவை இரண்டையும் கற்றுக் கொண்டால் ஆத்மாவுக்கும் இதற்கும் தொடர்பும் உண்டு என்பதை, அக்ஞானத்தால் விளையும் பாச பந்தமான தளையைத் தெரிந்து கொள்ளலாம். இந்த ஞானம் அக்ஞானத்தை அகற்றி, பரமஸத்யத்தை ஆத்மாவை அடையச் செய்யும். அதுதான் மோக்ஷம். இப்படிக் கொள்வது நியாய சாத்திரத்திற்குப் பொருந்தாது; இதை ஏற்றால்தான் மோக்ஷத்தை ஒப்புக் கொள்வது பொருந்தும்.

 

இதைக் கருத்துமுதல்வாதத்திலிருந்து பிரித்துக் கொண்டு வந்து ஒட்ட வைப்பதால் கருத்துமுதல்வாதத்தின் எதிர்தரப்பான நியாய சாத்திரம் முரண்பட நேர்கிறது.”

(இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும், பக்-657)

      நியாய-வைசேஷிகம் தொடக்கநிலை பொருள்முதல்வாதமாகும். அணுக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவத்தில் ஆத்மா, தெய்வம், முக்தி என்று பேசுவது முரணானது.

      உலக வாழ்வில் நம்பிக்கை அற்று விலகி ஓடுபவர்கள், ஆத்மாவை ஏற்று முக்தியை நாடுவார்கள். அவர்களுக்கு கருத்துமுதல்வாதம் துணைநிற்கிறது. சமூக வாழ்வில் நம்பிக்கை கொண்டு எதிர் நீச்சல் போடுபவர்கள், கருத்துமுதல்வாதத்தை விடுத்து சமூக விடுதலைக்கு வழிகாட்டும் பொருள்முதல்வாதத் தத்துவத்தை நாடுவார்கள்.

அவரவர்களின் முடிவு அவரவர்களின் கைகளில் இருக்கிறது. உன் முடிவு உன் கையில்.

 பொருளடக்கம்

Saturday 21 May 2022

4. வைசேஷிகம் எளிய அறிமுகம்

 

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

63 வது வார வகுப்பு – 21-05-2022)


அறிவைப் பெறுகிற வழியை இந்தியத் தத்துவங்கள் பிரமாணங்கள் என்று கூறுகிறது. இந்த பிரமாணங்களை முதலில் நன்றாகப் புரிந்து கொண்டால் தத்துவங்களை படித்தறிவது எளிதாக இருக்கும். தத்துவங்களை அறியத் தொடங்குவதற்கு முன்பே இதனை அறிந்து கொள்ள வேண்டும்.

பிரமாணங்கள்

பிரமாணங்கள் என்றால் அறிவதற்கான வழிமுறை. இந்தப் பிரபஞ்சத்தை அறியவேண்டுமானால் அதற்கான வழிமுறையை சரியாக ஏற்க வேண்டும். எந்த பிரமாணங்களைக் கொண்டு அறிகிறோமோ முடிவுகள் அதன் தன்மையினதாகவே இருக்கும். பிரமாணங்கள் பலவாகும்.

பிராமாணங்களில் சிலவற்றைப் பார்க்கலாம். 1.பிரத்தியட்சம் (புலனுணர்வு), 2.அநுமானம் (உய்த்துணர்வு), 3.ஆப்தவாக்கியம் (உரைச்சான்று), 4.உபமானம் (ஒப்புநோக்கு), 5.அர்த்தாபத்தி (சூழ்நிலைசார் உய்த்துணர்வு), 6.அனுபலப்தி (எதிர்மறைச் சான்று).

1.பிரத்தியட்சம் என்பது நேரடியாக அறிவதாகும், பார்வை முதலான புலன்களின் உதவியினால் அறிவது அனைத்தும் பிரத்தியட்சம். இதனை தமிழில் காட்சியளவை, காண்டலளவை, புலனுணர்வு என்பர்.

2.அநுமானம் என்றால் காட்சிக்கு தெரியாதப் பொருளை, இதற்கு முன் நேரடியாக அறிந்ததைக் கொண்டு ஊகிப்பது. அதாவது உய்த்துணர்தல். வீட்டின் உள்ளே இருக்கும் போது வெளியே பெய்யும் மழையை கண்ணும் காதும் அறிவதில்லை, ஆனால் திடிரென்று ஏற்பட்ட குளிர்ச்சியின் மூலம் மழை பெய்வதை அறியலாம், அவ்வாறு ஊகித்து அறிவது அநுமானம். மழை பெய்யும் போதெல்லாம் குளிர்ச்சி ஏற்பட்ட நேரடி அனுபவங்களின் அடிப்படையில் இவ்வாறு முடிவெடுத்தல் அநுமானம். பிறர் அனுபவங்களின் அடிப்படையிலும் முடிவெடுப்பதும் அநுமானமாகும். ஊட்டி, கொடைக்கானல் என்கிற ஊர்கள், மலைகளைக் கொண்டது என்பதை நேரில் சென்று பார்க்காதவர்களும், பிறரது அனுபவத்தால் கூறிட முடியும். நெருப்பு சுடும் என்பதை அனுபவிக்காது கூறுவது பிறரது அனுபவமே.

3.ஆப்தவாக்கியம் என்றால் நேரடியாகவும் அநுமானத்தாலும் அறிய முடியாததை நூல்களின் மூலம் அறிந்து கொள்வது. ஆப்தவாக்கியத்தை சாஸ்திர பிராமாணம் என்றும் கூறுவர். தமிழில் இதனை உரைச்சான்று என்று கூறப்படுகிறது. முன்னோர்கள் கூறியது, பெரியோர்கள் கூறியது அனைத்தும் உரைச்சான்றே. கடவுள் உலகைப் படைத்தார் என்பது உரைச்சான்று. கடவுள் உலகத்தைப் படைக்கவில்லை என்பதும் உரைச்சான்றுதான். ஏதை ஏற்பது என்பதை அவரவர் அனுபவங்களின்படி உரைச்சான்றை முடிவெடுப்பர். பிரத்யட்சம், அனுமானம், ஆப்தவாக்கியம் என்கிற இந்த மூன்றே பிரமாணங்களில் முதன்மையானதாகும்.

4.உபமானம் என்றால் தெரியாத ஒன்றை, தெரிந்ததை கொண்டு ஒப்பிட்டு அறிதல். அறிந்த ஒன்றின் அடிப்படையில் அறியாத ஒன்றை அறிதல், அதாவது ஒப்புநோக்குதல். பலவற்றில் உள்ள வேறுபாடுகளை ஒப்பிட்டு அதல் உள்ள ஒற்றுமை வேற்றுமை ஆகியவற்றைக் கொண்டு முடிவெடுப்பது.

5. அர்த்தாபத்தி என்றால் சூழ்நிலைசார்ந்து உய்த்துணர்தல். மேலே கண்ட பிரத்தியட்சம், .அநுமானம், .ஆப்தவாக்கியம், உபமானம் ஆகிய நான்கு வழிகளில் கிடைக்காததைப் “பெறும் வழி” என்று கூறலாம். அதாவது இந்த நான்கு வழியில் கிட்டாததை அறியும் “வழி முறையே” அர்த்தாபத்தி. தொடர் உண்ணா நோன்பு இருப்பதாக கூறியவன், ஒரு வாரத்துக்குப் பிறகும் சோர்வு அடையாமல் இருக்கிறான் என்றால், யாரும் அறியாத போது உணவு சாப்பிட்டிருக்கிறான் என்று அறிவது அர்த்தாபத்தி.

6.அனுபலப்தி என்றால் இல்லாத ஒன்றை “இல்லை” என்று அறிவது. அலுவலகத்தில் உள்ள கணவர் மனைவியிடம் அலைபேசியில், வீட்டிற்கு விருந்தினர் வந்துள்ளனரா என்று கேட்டதற்கு, “இல்லை” இதுவரை வரவில்லை என்று வராததை அறிவது அனுபலப்தி. நெல்லை விரைவு ரயில் வந்துவிட்டதா? என்று கேட்பவரிடம் ரயில் வரவில்லை என்பதை அறிந்து அவருக்கு சொல்வது அனுபலப்தி. இதை எதிர்மறைச் சான்று என்று கூறலாம்.

பிரத்யட்சம்  என்ற ஒரு பிரமாணத்தை மட்டும் ஏற்பவர் உலகாயதர். பிரத்யட்சம், அநுமானம் ஆகிய இரண்டை மட்டும் ஏற்பவர் வைசேஷிகர். பிரத்யட்சம், அநுமானம், ஆப்தவாக்கியம் ஆகிய மூன்றை ஏற்பவர் சைவசித்தாந்தி. பிரத்யட்சம், அநுமானம், ஆப்தவாக்கியம், உபமானம் ஆகிய நான்கை ஏற்றுக் கொள்பவர் நியாய தத்துவவாதி. பிரத்யட்சம், அநுமானம், ஆப்தவாக்கியம், உபமானம், அர்த்தாபத்தி ஆகிய ஐந்தையும் ஏற்பவர் மீமாம்சைப் பிரிவில் உள்ள பிரபாகரர். பிரத்யட்சம், அநுமானம், ஆப்தவாக்கியம், உபமானம், அர்த்தாபத்தி, அனுபலப்தி  ஆகிய ஆறு பிரமாணங்களையும் ஏற்றுக் கொள்பவர்கள் மீமாம்சைப் பிரிவில் உள்ள பட்டர், வைதீக வேதாந்திகள்.

வைசேஷிகம்

ஐந்து தரிசனங்கள் என்று கூறப்படுகிற மரபில் வைசேஷிகம் மூன்றாவதாக வருகிறது. இதுவும் மிகமிக பழையான தத்துவப் போக்காகும்.

      வைசேஷிகத்துக்கு தொடக்க நூலாகக் கிடைப்பது “வைசேஷிக சூத்திரம்”. இந்த நூலை கணாதர் என்பவர் சுமார் கி.மு. 200 ஆம் ஆண்டில் எழுதினார். பத்து அத்தியாயங்களையும் மொத்தம் 374 சூத்திரங்களையும் கொண்டது இந்த நூல்.

      பிரபஞ்சம் தோன்றுவதற்கு அணுவே அடிப்படை என்று வைசேஷிகம் அணுக்கோட்பாட்டை முன்வைக்கிறது. இந்தியத் தத்துவங்களில் அணுவை அடிப்படையாக பல தத்துவங்கள் கூறினாலும் வைசேஷிகம் அணுக் கோட்பாட்டை சிறப்பாக கூறியுள்ளது.

      அனைத்தும் அணுவில் இருந்து தோன்றுகிறது என்று கூறுகிற வைசேஷிகம். எந்த பொருளையும் பிரித்துப் பார்த்தால் இறுதியில் பிரிபடாத அணு காணப்படும், அந்த அணுவே பொருளாக பிறப்பெடுப்பதற்குக் காரணம் ஆகும். அத்தகைய அணுவை ஒற்றைப் பொருளாக பார்க்கவில்லை பல என்று கருதினர். ஒவ்வொரு பொருளுக்கு பல அணுக்கள் தேவைப்படுகிறது.

சிறிய பொருளுக்கு சிறிய தொகை அளவிலா அணுக்களும் பெரிய பொருளுக்கு பெரிய தொகை அளவிலான அணுக்களும் அடிப்படையாகும்.

ஒவ்வொரு பொருள் தோன்றுவதற்கும் ஒவ்வொரு அணு இருப்பதாக கூறுவதால், வைசேஷியர்கள் பன்மைவாதிகள் ஆவார். ஒவ்வொரு தனிப்பொருளும் பல்வேறு கூட்டுப்பொருளால் ஆனது, அந்த கூட்டுப் பொருளை ஒவ்வொன்றாக பிரித்தால் இறுதியில் அந்த பொருளுக்கு உரிய அணுவைக் காணலாம். இந்த அணுவை பிரிக்க முடியாது என்று வைசேஷியர்கள் கருதினர். இந்த அணு நிலைத்தவை. இதற்கு தொடக்கமோ இறுதியோ கிடையாது. அணுக்களால் உருவான பொருட்களே அழிவடையும், இந்த அணு அழியாது என்பதே வைசேஷிகத்தின் கருத்து.

      வைசேஷிகத்தின் அணுக் கோட்பாடு கிரேக்க சிந்தனையில் இருந்து வந்ததாக சில தத்துவ அறிஞர்கள் கருதுகின்றனர். எந்த கருத்தும் அது தோன்றுவதற்கு சூழ்நிலை இல்லாமல் ஏற்படாது. இதனடிப்படையில் எந்த சூழ்நிலைமையினால் கிரேக்கத்தில் அணுக் கோட்பாடு உருவாக்கியதோ, அதே நிலைமை இங்கே உருவான போது வைசேஷிகம் போன்று நம் நாட்டு தத்துவங்களில் அணுக் கோட்பாடு தோன்றி இருக்கலாம் என்று கருதுவது தவறாகாது.

      பொருட்களின் தோற்றத்துக்கு அணுக்களின் தொகையே காரணமாக கூறப்படுகிறதே தவிர, அணுவில் உள்ளே, அந்த பொருளுக்கான காரணம் இருக்கிறது என்று வைசேஷிகம் கருதவில்லை. அதனால் வைசேஷிகத்தை அசத்காரியவாதம் என்று கூறப்படுகிறது.

      காரணத்தில் இருந்தே காரியம் நிகழ்கிறது என்பது சத்காரியவாதம். வைசேஷிகத்தில் அணுவானது பொருளுக்கு காரணமாக கூறப்படவில்லை. தோற்றத்துக்கு அடிப்படையான அணுவை தொகை அளவால் விளக்கப்படுகிறது. அணுவே காரணம் என்று கூறப்படவில்லை என்பதனால் வைசேஷிகம் சத்காரியத்துக்கு எதிரான அசத்காரியவாதம் என்று அழைக்கின்றனர். காரணத்தில் இல்லாதது காரியத்தில் காணப்படுவதால் அசத்காரியவாதமாக கூறப்படுகிறது. அதாவது எந்த அணுவிலும் பொருள் உருவாவதற்கான காரணம் அதில் அடங்கி இருக்கவில்லை.

இருந்தாலும் உலகப் படைப்புக்கு, உலகுக்கு அப்பாற்பட்ட சக்தியாக-தெய்வமாக எதையும் வைசேஷிகத் தத்துவம் கூறாததால், இதனை தொடக்கநிலை பொருள்முதல்வாதமாகக் கூறலாம். தொடக்கால வைசேஷியத்தில் தெய்வத்தைப் பற்றி கூறவில்லை, உலகப் படைப்புக்கு தெய்வத்தை காரணமாகக் காட்டவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

      அறியப்படும் உலகம் உண்மை எனவும் இந்த புறநிலையாக இருக்கிற உலகை அறிய முடியும் என்று வைசேஷிகம் உறுதியாகக் கூறுகிறது. அறியப்படும் பிரபஞ்சமே உண்மையானது என்று கருதுவதினால் படைப்புக்கு வைசேஷிகம் தெய்வ சக்தியை கூறவில்லை. அதற்கு பதில் பொருள்தன்மை உடைய “அதிர்ஷ்டம்” என்பதையே, பிரபஞ்சத் தொடக்கத்துக்கு உரியதாகக் கூறியது.

அணுக்கள் பொருளாக மாறுவதற்கு “அதிர்ஷ்டம்” என்ற ஒன்றை தொடக்க கால வைசேஷியர்கள் கூறினர். காரணம் எதுவும் இல்லாது இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதே வைசேஷிகர் கொள்கை. அணுக்களை ஒன்றிணைப்பது “அதிர்ஷ்டம்”. இந்த அதிர்ஷ்டம் என்பது பிரம்மம், தெய்வம் போன்றதல்ல. அணுக்களை பொருளாக மாற்றுவதற்கு சேர்க்கையின் தொடக்கத்தையே “அதிர்ஷ்டம்” என்றனர். “அதிர்ஷ்டம்” என்றால் தொடக்கம் என்று பொருள்கொள்ளலாம். இந்த “அதிர்ஷ்டம்” என்பதை சாங்கியம் கூறுகிற சுபாவத்தோடு இணைத்துப் பார்க்கலாம்.

      நெருப்பு மேல்நோக்கி எரிவதற்கும், காற்று நாலாபக்கம் வீசுவதற்கும், அணுக்கள் செயல்படத் தொடங்கியதற்கும் “அதிர்ஷ்டம்” தான் அடிப்படை என்கிறது (5:2.13) வைசிஷேக சூத்திரம்.

தொடக்கால சைவேஷிகத்தில் தெய்வம் படைப்புக்குக் காரணமாகக் கொள்ளவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால் பிற்காலத்திய வைசேஷிக நூல்களிலும், விளக்கங்களிலும் தெய்வம் சேர்க்கப்பட்டுள்ளது.

      இது பற்றி கி.லக்ஷ்மணன் கூறுவதைப் பார்ப்போம்.

 

“வைசேடிகருள், காலத்தால் முற்பட்டோர் “அதிர்ஷ்டம்” என்ற தத்துவம் அணுக்களை இயக்குகின்றது எனக் கொண்டனரேனும், பின்வந்தோர் அணுக்களை ஒன்று சேர்த்து உலகை ஆக்குவோனும், பின் அவற்றைப் பிரிப்பதன் மூலம் உலகை அழிப்போனும் இறைவனே எனக் கொண்டனர்”

(இந்தியத் தத்துவஞானம்- பக்- 241)

      அனைத்து தொடக்கநிலை பொருள்முதல்வாதத் தத்துவத்துக்கு என்ன நேர்ந்ததோ அதுவே வைசேஷிகத்துக்கும் நேர்ந்தது. அதனால் இன்றைய நிலையில் உள்ள வைசேஷிக விளக்கங்கள் கலப்புற்றதாகவே காணப்படுகிறது.

      இந்த உலகம் ஏழு வகையினங்களால் (பதார்த்தங்களால்) ஆனதாக பிற்கால வைசேஷிகம் கருதுதியது.

      1) பொருள் (திரவியம்) 2) பண்பு (குணம்) 3) செயல் (கர்மம்) 4) பொதுவானது (சாமான்யம்) 5) சிறப்பானது (விசேஷம்) 6) இயல்பு (சமவயம்) 7) இன்மை (அபாவம்).

1) திரவியம் என்றால் பொருள். ஏழு வகையினங்களில் பொருள் முதன்மையானது. உயிருள்ள பொருள், உயிரற்றப் பொருள் ஆகிய அனைத்தையும் பொருள் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு பொருளும் ஒன்பது கருப்பொருளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பொருளின் பண்புகளும் அதற்கான செயல்களும் கருப்பொருளில் உள்ளடங்கி உள்ளது.

1) நிலம் (பிருதிவி) 2) நீர் (அப்பு) 3) நெருப்பு (தேஜஸ்) 4) காற்று (வாயு) 5) வானம் (ஆகாசம்) 6) காலம் 7) திசை (திக்கு) 8) ஆத்மா 9) மனம்.

      முதல் ஐந்தும் ஐந்து பூதங்களே ஆகும். இதில் முதல் நான்கு நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது, வானத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்று வைவேஷிகம் கருதியது. முதல் நான்கும் இயக்கங்களைக் கொண்டதாகவும் வானம் இயக்க மற்றது என்றும் கூறுகிறது. காலம், திசை ஆகிய இரண்டும் வானத்தைப் போன்றே முடிவற்றவை அழியாதவை. ஆத்மா என்பது பேருணர்வு. இந்தப் பேருணர்வு உடலின் பகுதியாக கருதப்படவில்லை. பிறப்புக்கு முன்பும் இறப்புக்குப் பின்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

கண்களால் அறிய முடியாதது ஆத்மா. ஆத்மா பல என்பதே வைசேஷியர்களின் முடிவு. ஆத்மாவோடு இணைகிற இன்பம்-துன்பம், சிறப்பு-இழிவு ஆகியவை நிலைத்தவை அல்ல. விடுதலை அடையும் போது ஆத்மாவிடம் எந்தப் பண்புகளும் இருப்பதில்லை என்பதே பிற்கால வைசேஷிகத்தின் ஆத்மா பற்றிய கருத்தாகும். பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட ஆத்மா என்பது அணுக் கொள்கைக்கு முரணாக இருக்கிறது.

அடுத்து மனம். அனைத்து ஆத்மாவுக்கும் மனம் என்ற ஒன்று இருக்கிறது. மனம் அறிதலுக்கான கருவியாக கருதினர். மனத்தின் மூலமே பொருட்களுடன் தொடர்பு கொள்ளப்படுகிறது மேலும் பொருட்கள்  அறியப்படுகிறது.

2) குணம் என்பது பொருட்களின் பண்பு ஆகும். பொருளுக்கான பண்புகளாக சிலவற்றைப் பார்ப்போம். நிறம், சுவை, மணம், ஊறு, ஓசை, எண், அளவு, தனித்திருத்தல், சேர்தல், பிரிதல், சேய்மை, அண்மை, அறிவு, இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, முயற்சி, மந்தம், நீர்மை, தீமை என்கிற இவை அனைத்தும் பொருட்களின் பண்புகளாகும்.

3) செயல் என்பது பொருளின் இயக்கம். அந்த இயக்கம் ஐந்து வகையினதாகும். மேல்நோக்கிய இயக்கம், கீழ்நோக்கிய இயக்கம், சுருங்குதல், விரிதல், இடப்பெயர்வு ஆகிய இவைகளே ஐந்து இயக்க வகைகள் ஆகும்.

4) பொதுவானது (சாமான்யம்) என்பது பொருட்களின் பொதுத்தன்மை ஆகும். அதாவது பல்வேறு பொருட்களுக்கு இடையே காணப்படும், குறிப்பிட்ட ஒத்த தன்மையைக் குறிக்கிறது. சிவப்பு, கருப்பு, பச்சை, மஞ்சள், நீலம் என்பது தனிப்பட்ட நிறங்கள். அனைத்தையும் குறிக்கும் பொதுவான சொல் நிறம். இங்கே நிறம் என்பது பொதவானது. பொன் மீன், நட்சத்திர மீன் என்பது குறிப்பானது, மீன்கள் என்பது பொதுத்தன்மை ஆகும்.

5) சிறப்பானது (விசேஷம்) என்பது பல்வேறு பொருட்களுக்கு இடையே தனித்து காணப்படும் தன்மையைக் குறிக்கிறது. நிறம் என்பது பொதுவானது, சிவப்பு, கருப்பு, பச்சை, மஞ்சள், நீலம் என்பது குறிப்பானது-சிறப்பானது. அதே போல் மீன்கள் என்பது பொதுவானது. பொன் மீன், நட்சத்திர மீன் என்பது சிறப்பானது. ஒவ்வொரு பொருளுக்கும் உரிய குறிப்பானதையே சிறப்பானது என்று கூறப்படுகிறது. மனிதன் என்பது பொதுவானது, மார்க்ஸ், லெனின், பெரியார், அம்பேத்கர் என்பது சிறப்பானது.

6) இயல்பு (சமவயம்) என்பது “பிரிக்க முடியாது இணைந்தே” இருப்பதைக் குறிக்கிறது. நெருப்போடு வெப்பம் இணைந்திருப்பது இயல்பு, நீரோடு குளிர்ச்சி இணைந்திருப்பது இயல்பு. புயல் என்பதில் காற்றுக்கும் அதன் வேகத்துக்கும் உள்ள இணைப்பு இயல்பானது.

7) இன்மை (அபாவம்)  என்பது எதிர்மறை சொல். நான்கு வகையான இன்மை கூறப்படுகிறது. முன் இன்மை (பிராக அபாவம்), பின் இன்மை (பிரத்துவம்ச அபாவம்), நெருங்கிய இன்மை (அன்யோன்ய அபாவம்), முற்றிலும் இன்மை (அத்யந்த அபாவம்). 

ஒரு பொருள் உருவாக்காத போது கூறப்படுவதே முன்இன்மை. மரம் இருக்கிறது, அதனை செய்வதற்கு தச்சர் இருக்கிறார், தச்சுக்குத் தேவையான கருவிகளும் இருக்கிறது. நாற்காலி இல்லை என்று நாற்காலி செய்து முடிக்காதவரை கூறுவதே முன் இன்மை என்று கூறப்படுகிறது. நாற்காலி செய்யப்பட்டவுடன் முன் இன்மை முடிவுக்கு வருகிறது.

பின் இன்மை என்பது இருப்பது இல்லாது போதல், அதாவது அழிந்து போதல். புயலுக்கு முன் இங்கே ஒரு பெரிய மரம் இருந்தது. புயலுக்குப் பின் மரம் இல்லாது போனது, இந்த இல்லாததையே பின் இன்மை என்று கூறப்படுகிறது.

நெருங்கிய இன்மை என்பது பொருட்களின் வேறுபாட்டைக் குறிக்கும். குரங்கு என்பது மனிதன் அல்ல, மனிதன் மாடு அல்ல, மாடு ஆடு அல்ல, ஆடு வீடு அல்ல, வீடு அலுவலகம் அல்ல என்பது போன்று உள்ளவற்றைப் பிரித்தறிவதாகும்.

      இதுவரை ஏழு வகையினங்களை சுருக்கமாகப் பார்த்தோம்.

      சைவேஷிகத் தத்துவத்தின் அடிப்படை அணுக்கோட்பாடாகும் என்பதை அறிந்தோம். அனைத்தும் அணுக்களால் ஆனது, அனைத்தையும் பிரிக்கலாம், பிளக்கலாம், ஆனால்  அணுவைப் பிளக்க முடியாது. இதுவே அன்றைய அணுக்கோட்பாட்டின் அடிப்படை. இன்றைய விஞ்ஞானம் அணுவை பிளந்து காட்டி உள்ளது. இதை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவர்கள் அறிந்திருக்க முடியாது. இருந்தாலும் பிரபஞ்சப் படைப்புக்கு பொருள்சாரா ஒரு சக்தியை கூறாது அணுவைக் கூறியது, அன்றைய நிலையில் அது போற்றத் தக்கதே. அணுவை இன்று பிளந்தாலும் அதன் பொருள் தன்மை மறைந்திடவில்லை, அணுவை ஒன்றுமில்லாது ஆக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

      19ஆம் நூற்றாண்டு இறுதியில் அணுக்கள் பிளவுபடக்கூடியது என்று விஞ்ஞானத்தால் அறிவிக்கப்பட்டது. அப்போது அனைத்துப் பொருட்களின் அடிப்படை அணுக்கள் என்ற கருத்து கேள்விக்கு உள்ளானது. அந்த நேரத்தில் சில கருத்துமுதல்வாதிகள் பொருளே மறைந்து போய்விட்டது, அதனால் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் தவறு என்பதை நிரூபித்துவிட்டது என்று கூக்குரல் இட்டனர்.

பருப்பொருள் மறைந்திடவில்லை, பருப்பொருளைப் பற்றி நாம் எந்தளவுக்கு தெரிந்திருந்தோமோ அந்த எல்லை தான் மறைந்தது என்று லெனின் கூறினார்.

 

““பருப்பொருள் மறைந்து விடுகிறது” என்றால் நாம் பருப்பொருளைப் பற்றி இதுவரை அறிந்திருக்கின்ற எல்லைகள் மறைந்து விடுகின்றன, நம் அறிவு மேலும் ஆழமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று பொருள், பருப்பொருளின் குணாம்சங்களும் (ஊடுருவ முடியாத் தன்மை, சடத்துவம், திண்மை, இதரவை) மறைந்து கொண்டிருக்கின்றன, முன்னர் அறுதியானவையாக, மாறாநிலை உடையவையாக, முதன்மையாகத் தோன்றியவை தற்பொழுது சார்பு நிலையானவையாக, பாருப்பொருளின் சில நிலைகளுக்கு மட்டுமே குறியடையாளமானவையாக தம்மை வெளிப்படுத்துகின்றன. ஏனென்றால் பருப்பொருளின் ஒற்றை “குணாம்சம்” புறநிலை யதார்த்தமாக இருத்தல், நம்முடைய உணர்வுக்கு வெளியே இருத்தல் என்ற குணாம்சமாகும், அதை அங்கீகரிப்பதுடன் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் சம்பந்தப்பட்டிருக்கிறது”

(பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்)

      அணு பிளக்கப்பட்டதை அறிந்த பிறகு லெனின் பருப்பொருளைப் பற்றிய கருத்தை நுட்பமாக மேம்படுத்தினார். மனிதனுக்குப் புறத்தே இருப்பது பருப்பொருள். புறநிலையானது அனைத்தும் பருப்பொருள் என்று லெனின் விளக்கம் கொடுத்தார். இது போன்று ஒவ்வொரு புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கும் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கம் கொடுக்க வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.

      பிற்காலத்தில் ஆத்மாவை வைசேஷிகத்தில் சேர்க்கப்பட்டாலும் தொடக்கக் கால வைசேஷிகத்தில் ஆன்மீகக் கலப்பற்றதாகவே இருந்துள்ளது என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர். ஹிரியண்ணா என்கிற அறிஞர் கூறுவதைப் பார்ப்போம்.

 

“இக் (வைசேஷிகத்தில்) கொள்கையைப் பற்றிப் பேசும்போது இந்தத் தர்சனத்தில் கடவுள் பற்றிய கருத்தைக் குறிப்பிடவேண்டும். இதுபற்றிய குறிப்புக்கள் இந்தத் தர்சனத்தில் இருக்கின்றன என்று உரையாசிரியர்கள் கூறினாலும், அவை அங்கே காணப்பெறவில்லை. கடவுளைப் பற்றிக் கௌதமர் தற்செயலாக மட்டுமே குறிப்பிடுகிறார். தொடக்கத்தில் நியாய தர்சனம் கடவுள் கொள்கை உடையதாயிருந்ததா என்பதைப் பற்றிச் சிலர் ஐயங் கொள்கின்றனர்”

(இந்தியத் தத்துவம்- பக்-74)

 

வைசேஷிகத்தை மட்டும் குறிப்பிடாது நியாயத்தையும் சேர்த்தே ஹிரியண்ணா கூறியுள்ளார். வைசேஷிகத்தை ஆன்மீகமாக அல்லாது, அணுக்கோட்பாட்டின் அடிப்படையாகக் கொண்ட தொடக்க நிலை பொருள்முதல்வாதத் தத்துவமாகத்தான் கூறிட முடியும். 

 

      ஆத்மாவையும், கடவுளையும் ஏற்றுக் கொண்ட பிற்கால வைசேஷிகம், இந்த உலகம் துன்பயமானதாக கருதி, இதனை விடுத்து ஆத்ம விடுதலைப் பற்றி பேசுகிறது. வைசேஷகரின் முக்தி பற்றிய கருத்தை அடுத்தப் பகுதியான நியாயத்தில் காண்போம். ஏன் என்றால் முக்தி பற்றிய ஒத்த கருத்தையே பிற்கால சைவேஷிக தத்துவமும் நியாயத் தத்துவமும் கூறுகிறது.

 

வைசேஷிகத்தில் ஆன்மீக கலப்பும், கடவுள் கலப்பும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணம் என்ன? அதற்கு முக்கியமானக் காரணம், நம் நாட்டுத் தத்துவங்களில் பெரும்பான்மையான தத்துவங்கள் ஆன்மீகத்துக்கு மாறாக, தொடக்கநிலை பொருள்முதல்வாதமாக இருப்பதே ஆகும்.

 

அவர்கள் வேலையை அவர்கள் செய்தார்கள் நமது வேலையை நாம் செய்வோம்.

 

இந்திய தொடக்கநிலைப் பொருள்முதல்வாத வழியில் மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை சென்று அடைவோம்.

பொருளடக்கம்