Sunday 15 May 2022

3 யோகம் எளிய அறிமுகம்


(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

62 வது வார வகுப்பு – 14-05-2022)



 

      இந்திய தத்துவத்தில் ஐந்து தரிசனங்கள் என்று கூறப்படுபவைகளில் யோகம் இரண்டாவதாக வைத்து எண்ணப்படுகிறது. பதஞ்சலி எழுதிய யோக சூத்திரம் என்ற நூலின் அடிப்படையில் யோக தத்துவம் விளக்கப்படுகிறது. யோக சூத்திரம் வெளிவருவதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே யோகம் நம் நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.

சிந்துவெளி நாகரீகத்தில் யோகம் கடைபிடிக்கப்பட்டதற்கு சான்றாக பல முத்திரைகள் அங்கே கிடைத்துள்ளன. உடலை பேணுவதில் அக்கறை உள்ள தாந்தரீகத்திலும் யோகம் காணப்படுகிறது.

யோகத்திற்கு தொடக்க காலப் பொருள் “மனதை ஒருமுகப்படுத்தல்” ஆகும்.

மேலும் மனதின் சஞ்சலத்தை நீக்குவதற்கும், ஒன்றுபட்ட சிந்தனையை உருவாக்குவதற்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகம் முதலில் கடைபிடிக்கப்பட்டது. “மனம் வசப்பட்டால் வாழ்க்கை வசப்படும்” என்கிற அடிப்படையே யோகத்தின் நோக்கமாக இருந்தது. பிற்காலத்தில் தோன்றிய பெரும்பாலான மதங்கள் யோகத்தை தன்னுள் நுழைத்துக் கொண்டன.

வைதீகத்துக்குள் வரும் போது யோகத்தின் பொருள், உடலைப் பேணுதல் என்பதை கடந்து பிரம்மத்தோடு ஒன்றுதல் என்று விளக்கப்படுகிறது. ஆனால் யோக சூத்திரத்தில் “பிரிதல்” என்றே யோகத்துக்கு பொருள் கொள்ளப்படுகிறது. பிரகிருதியின் தொடர்பில் இருந்து புருடனாகிய ஆத்மா பிரிவதையே முக்தி என்கிறது. பிரகிருதியின் தொடர்பு என்றால் உலகத் தொடர்பு, உலகியலில் இருந்து அத்மா பிரிந்து தனது தன்மையானதில் ஒடுங்குவதையே இது குறிப்பிடுகிறது. அவ்வாறு ஒடுங்குவதே கைவல்யம், அதாவது பிறப்பற்ற நிலையான முக்தி.

டி.எம்.பி.மகாதேவன்:-

“சிறப்பான பழங்காலத்தில் யோகப் பயிற்சி சாங்கியத்தோடு தொடர்புள்ள ஒன்றென எண்ணப்பெற்றாலும், மனத்தைக் கட்டுப்படுத்தும் மதிநுட்பம் எல்லாத் தத்துவ முறைகளுக்கும் உரிய ஒரு பொதுச்செல்வமாகக் கருதப்பட்டது. இணைப்பு என்ற பொருளுடைய யோகம் என்ற பதம் 'யுஜ்' என்னும் சொல்லிலிருந்து எடுக்கப்பட்டது; ஆங்கிலச் சொல்லான 'யோக்' (Yoke) என்னும் சொல்லின் பொருளுடையது. 'முடிவான உள்பொருளோடு ஒன்றாக இணைவதற்கு வழி' என்று பல தத்துவக் கருத்துக் கோட்பாட்டுக் கிளைகளில் அதற்குப் பொருள் கூறப்படுகிறது. சாங்கிய யோக தத்துவ முறைமையில் மட்டும் ஏனோ 'வியோகம்' அல்லது 'பிரிதல்' என்று பொருள் கூறப்படுகிறது. அதாவது புருஷன் பிரகிருதியினின்று பிரிதல் என்பதாகும்.”

(இந்து சமயத் தத்துவம்- பக்- 178-179)

      யோக சூத்திரம், பிரகிருதியில் இருந்து புருஷன் பிரிதலையே யோகம் என்றும் அதுவே முக்திக்கான வழி என்றும் கூறுகிறது.

வெறும் முக்தியை மட்டும் பேசும் யோகத்தை எப்படி தத்துவம் என்று கூறிட முடியும்?

யோகத்தை தத்துவப்படுத்துவதற்கு சாங்கியத்தை சார்ந்திருக்க வேண்டி வருகிறது. அவ்வாறு சார்ந்திருக்கும் போது படைப்புக்கு ஈஸ்வரனை யோக சூத்திரம் சேர்த்துக் கொள்கிறது.

படைப்புக்கு வைதீக சாங்கியம் 25 தத்துவங்களை பேசுகிறது என்று சாங்கியத்தில் பார்த்தோம். அதனை அப்படியே எடுத்துக் கொண்ட யோக சூத்திரம் கூடுதலாக, படைப்புக்கு துணை காரணமாக ஈஸ்வரன் என்ற ஒன்றை புதியதாக சேர்த்துக் கொள்கிறது. ஈஸ்வரனை சேர்த்துக் கொண்டதால் தத்துவங்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்தது. கலப்புற்ற சாங்கியமான வைதீக சாங்கியம் யோகத்தில் ஈஸ்வர சாங்கியமாக முழுமை பெறுகிறது.

      யோக சூத்திரம் என்ற நூலை எழுதியவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்  வாழ்ந்த பதஞ்சலி ஆவார். யோகத் தத்துவத்துக்கு இந்த நூலே ஆதாரமாக கூறப்படுகிறது.

யோக சூத்திரம் என்ற நூல் நான்கு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. முதல் அத்தியாயமான சமாதி பாதம் என்பதில் 51 சூத்திரங்களும், இரண்டாம் அத்தியாயாயமான சாதானை பாதம் என்பதில் 55 சூத்திரங்களும், மூன்றாவது அத்தியாயாயமான விபூதி பாதம் என்பதில் 56 சூத்திரங்களும், நான்காவது அத்தியாயமான கைவல்ய பாதம் என்பதில் 33 சூத்திரங்களும் காணப்படுகிறது. மொத்தம் 195 சூத்திரங்கள் அதில் உள்ளது.

      டி.எம்.பி.மகாதேவன் எழுதிய இந்து சமயத் தத்துவம் என்ற நூலில் யோக சூத்திரத்தின் பொருளை யோகமுறை என்று சுருக்கமாகவும் சாரமாகவும் கூறியுள்ளார். இதனைப் படித்துவிட்டு, விளக்கத்திற்கு செல்வது எளிதாக இருக்கும்.

“யோக முறைமைக்குத் தனிப்பட்ட அடிப்படைத் தத்துவம் இல்லை. இது சாங்கியத்தின் தத்துவத்தையே ஏற்றுக்கொள்கிறது. இத்தத்துவ முறைமை மனிதனுடைய இலட்சியத்தை அடைவதற்குரிய ஒரு முறையை வகுத்துக்கொடுக்கிறது. புருஷனைப் பிரகிருதியின் பிடியினின்று நீக்கித் தனிப்படுத்துவதே இம்முறையாகும். இத்தனிப்படுத்தலை மனத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமே செய்ய இயலும், புருஷனுடைய பிரதிபலிப்பை மனத்தில் காணலாம், புருஷன் தனது மனத்தில் உண்டாகும் பிரதிபலிப்போடு தன்னை ஒன்றாக்கிக் கொள்வதே, அவன் படும் அல்லல்கள் அனைத்துக்கும் காரணம். மனத்தினைச் சலனமற்றதாகவும் வெறுமையானதாகவும் செய்ய இயலுமானால், மனத்தில் எந்தவிதப் பிரதிபலிப்பும் இல்லாதபடி செய்யக்கூடுமானால், புருஷன் தன் இயல்பான தன்மை உணர்ந்து பிரகிருதியின் கண்ணிகளிலிருந்து தப்பிவிடுவான். இதைச் சாத்தியமாக்கும் முறையே யோகம் எனப்படும்.”

(இந்து சமயத் தத்துவம்-பக்-173)

இந்த மேற்கோள் என்ன சொல்கிறது என்றால், மனிதன் இந்த உலகப்பொருளோடு உறவாடுவதினால் மனம் சஞ்சலம் அடைகிறது. அதாவது உலகப் பொருளோடு மனிதன் இயங்கும் போது நிம்மதி இழந்த நிலையினால் மனதில் கலக்கம் ஏற்படுகிறது. இந்த கலக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமானால், மனதில் கலக்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு வழி என்னவென்றால். நித்தியமான ஆத்மாவை விடுத்து, அநித்தியமான இந்த உலகின் மீது மனம் செல்வதை தடுக்க வேண்டும். தடுப்பதற்கு யோகம் செய்ய வேண்டும். யோகத்தின் மூலம் மனமானது உலகப் பொருட்களில் இருந்து விலகி, சலனமற்று வெறுமையாக மாறும்.  அந்த வெறுமையே ஆத்மாவை (புருடனை) பிரகிருதியின் பிடியில் இருந்து, அதாவது உலகத் தொடர்பில் இருந்து நீங்க செய்யும், இந்த நீக்கத்தின் மூலம் ஆத்மா தன் உண்மை நிலையை அறிந்து அதிலேயே கலந்து போகும்.

      முதல் அத்தியாயம் சமாதி பாதம்.

இதன் இரண்டாம் சூத்திரம், மனம் விரிந்து செல்வதை கட்டுப்படுத்துவதே யோகம் என்று கூறுகிறது. (யோகச் சித்த விருத்தி நிரோத:)

மனதில் சிந்தனைகளின் சலசலப்பு ஏற்படாமல் அமைதியாக்க வேண்டும். அந்த நிலையில் ஆழ்மனதை முழுமையாக அறிப்படும். இந்த அறிதல் மூலம் பிரகிருதியில் இருந்து புருடன் என்கிற ஆத்மா வேறுபட்டது என்கிற ஞானம் பெறப்படுகிறது. ஆத்மா தன்னிலையில் ஒடுங்குகிறது. இதுவே யோக சூத்திரத்தின் சுருக்கம்.

      ஆனால், மூல சாங்கியம் வளமைக் கோட்பாட்டின் அடிப்படையில் உலகில் சிறப்பாக வாழ்வது பற்றி பேசுகிறது. இந்த சாங்கியயோகம் வாழ்வில் காணப்படும் இன்ப-துன்பங்களில் இருந்து முற்றிலும் விடுபட்டு ஆத்ம ஒன்றிப்பு பற்றி பேசுகிறது.

      உறங்கி விழித்தால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது, புத்துணர்ச்சியினால் இந்த உலகில் சிறப்பாக செயல்பட முடிகிறது. மனதுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது, அதனால் தான் தியானம் அதாவது யோகம் செய்யப்படுகிறது. தியானத்தினால் கிடைத்த ஓய்வானது, புத்துணர்ச்சியுடன் உலகில் செயல்பட மனதுக்கு உதவுகிறது. இதுதான் யோகத்தின் அடிப்படை. ஆனால் ஆத்ம போதத்துடன் இணைக்கப்பட்ட யோக சூத்திரம் வாழ்வை விடுத்து முக்தியை போதிக்கிறது.

சிந்திக்கும் மனமே சித்தம். சித்தத்தை செயல்படுத்தாமல் அடக்குவது பற்றி இரண்டாம் சூத்திரம் பேசியது. அடக்குவதன் மூலம் எதை அடைய வேண்டும் என்பதை மூன்றாம் சூத்திரம் கூறுகிறது.

“அப்போது காண்பவன் தனது சொந்த நிலையில் இருக்கிறான்” (1-3).

      மனதை உலகில் காணப்படும் வெளிப்பொருட்களின் மீது கவனம் செலுத்தாமல், அகத்தின் உள்ளே பயணிப்பதின் மூலம் ஆத்மா, தனது சொந்த ஆத்ம நிலையினை அறிகிறது.

இயல் உலக வெளிப்பொருட்களை பற்றி சிந்திப்பது தவறான அறிவு. ஏன் என்றால் இந்த உலகப் பொருட்கள் நிலையாக இல்லாது மாறிக் கொண்டிருக்கிறது, மாறுகின்ற அனைத்தும் நிலைத்த பொருள் அல்ல, நித்தியமானது அல்ல. ஆத்ம அறிவே சரியானது. ஆத்மா-பரமாத்மா மாறுபாடு அற்றது மாறுபடாத பொருளே சிறந்தது. அதனை அறிவதே சரியான அறிவு என்று யோக சூத்திரம் கூறுகிறது. 

 

“தவறான அறிவு என்பது பொய்யறிவு, அது உண்மை இயல்பில் நிலைபெறாதது.” (1-8)

      இந்த உலகின் மீதான அறிவு தவறானது, மாயையில் அகப்பட்டது. இந்த உலக மாயையில் இருந்து விடுபட்டு, ஆத்ம தேடலில் செல்கிற அறிவே சரியானது. அந்த ஆத்மாவே நிலையானது, இறுதியானது, உண்மையானது என்கிறது யோக சூத்திரம்.

      இந்த ஆத்ம நிலையை அடைவதற்கு உலகத்தின் மீதான பற்று விடுபட வேண்டும் என்று பற்றின்மையை போதிக்கிறது. பற்றின்மை ஏற்படுவதற்கு பயிற்சி அவசியமாகிறது. உலகில் காணப்படும் பொருட்களின் மீதான ஆசையை விட்டுவிடுவதே பற்றின்மை.

      15ஆம் சூத்திரத்தை விவேகானந்தர் விவரிக்கிறார், “பார்த்த அல்லது கேட்ட விஷங்களின் மீதுள்ள ஆசையை விட்டவர்களிடம் எந்த மனநிலை வந்து சேர்கிறதோ, எந்த மனநிலையில் பொருட்களின் மீதுள்ள ஆசையை எல்லாம் அவர்கள் அடக்க முடியுமோ அதுவே பற்றின்மை.” (ஞான தீபம்-2)

      யோகம் செய்பவரின் வெற்றியானது, செய்கின்ற முறைக்கு ஏற்ப மெதுவாகவோ, நடுத்தரமாகவோ, விரைவாகவோ கிட்டும். இந்த முறைகளை கையாள முடியவில்லை என்றால் “தெய்வத்திடம் பக்தி கொள்வதால்”(1-23) முடியும்.

      சாங்கியத்தி அடிப்படைகளை தத்துவமாக ஏற்ற யோகம் மூல சாங்கியத்தில் இல்லாத தெய்வத்தை தத்துவத்துக்குள் நுழைக்கிறது.

கி.லஷ்மணன்:-

“யோக மதத்தினர் கொள்கைப்படி பிரகிருதி உலகைச் சிருட்டிப்பதற்கு இறைவனும் ஒரு காரணமாவான். இறைவன் படைப்பவனல்லன். படைப்புக்குத் துணைபுரிவது மட்டுமே அவன் செயல். கடவுளை ஒப்புக்கொள்ளாத சாங்கியத்திலே பக்திக்கு இடமில்லை….”

(இந்திய தத்துவஞானம்-பக்-227) 

தெய்வத்தின் சொல்வடிவமாக “ஓம்” என்று குறிப்பிட்டு, ஓம் என்ற சொல்லை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதும், அதன் பொருளை சிந்திப்பதுமே வழி என்கிறது (1:27-28) யோக சூத்திரம்.

“ஓம்” என்ற சொல்லை ஏன் திரும்பத்திரும்ப சொல்ல வேண்டும்? உலகியல் சிந்தனைகளின் பதிவுகள், மனதில் படிந்திருக்கும், இந்தப் பதிவுகளே சமஸ்காரம் என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது. இந்தப் பதிவுகள் எழாமல் மறைந்து போக வேண்டுமானால், தெய்வத்தை முன்வைத்து ஓம் என்ற சொல்லை தொடர்ந்து தியானிக்க வேண்டும். உலகப் பதிவுகள் அதாவது உலக அனுபவங்கள் தவறானதாகவும் தீயவையாகவும் பார்க்கிறது யோக சூத்திரம்.

      தீயவையான உலகப் பொருட்களோடு தொடர்பை ஏற்படுத்தும் ஆசைகளை மனதில் இருந்து முழுமையாக நீக்கிவிட்டு, ஆதியான ஆத்மாவோடு அதாவது பரமாத்மாவோடு ஒன்றுபட வேண்டும் இதுவே சமாதி. ஆதியோடு சமமாக ஒன்றுபடுதலே சமாதி. அதாவது முக்தி.

வெளிப்புற பொருட்களில் இருந்து விடுபட்டு, ஆத்ம சிந்தனையில் ஒன்றி போவதே தியானமாகும். விருத்திகள் தேய்ந்து நாசம் அடையும் போது சுத்த ஸ்படிக மணி எப்படி அருகிலுள்ள பொருளின் நிறத்தை ஏற்கிறதோ, அதேபோல புத்தி தான் கிரகிக்கும் பொருளாகவே மாறிவிடுகிறது. அதாவது குணங்கள் அற்ற நிலையில், தியானிக்கப்படும் பொருள் மட்டுமே மீதம் இருக்கும். அப்போது கேள்விகள் எழாத சமாதி நிலை ஏற்படுகிறது. (1:41-42)

இந்த சமாதி நிலையில் நல்வினை தீவினை என்கிற பதிவுகள் (சமஸ்காரங்கள்) முற்றும் அழிந்து, சிந்தனை அற்று, விதைகள் அற்று காணப்படுகிறது. விதைகள் அற்று போனதால் முளைப்பதற்கு ஏதும் இல்லாது பிறவி தொடர் முடிவுக்கு வருகிறது. இத்துடன் சமாதி பாதம் என்கிற முதல் அத்தியாயம் நிறைவடிடைகிறது. முதல் அத்தியாயத்தில் தியான யோகத்தால் கிட்டும் பலனாக சமாதி கூறப்பட்டுள்ளது.

      இரண்டாவது அத்தியாயம் சாதானை பாதம், இதில் தியானப் பயிற்சிகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

மூன்றாம் அத்தியாயம் விபூதி பாதம், இதில் யோக சித்திகள் அதாவது யோகப் பலன் பற்றி கூறப்பட்டுள்ளது. யோகத்தின் எட்டு உறுப்புகளில் சில இரண்டாவது அத்தியாயத்திலும் மீதமுள்ளவை மூன்றாம் அத்தியாயத்திலும் தொடர்கிறது. அதனால் இரண்டாம் மூன்றாம் அத்தியாயங்களை இணைத்தே பார்க்கலாம்.

      உலகத்தின் நிகழ்வுகள் உண்மையானதாக கருதுவதற்கு அவித்தையே காரணமாகும். அவித்தை என்றால் அறியாமை.

“அநித்தியத்தை நித்தியமெனவும், தூய்மையற்றதை தூய்மையெனவும், துக்கமானவற்றை சுகமெனவும், அநாத்ம விஷயங்களை ஆத்மாவாகவும் கருதுதல் அவித்யை.” (2:5)

      நித்தியமானது எது? அநித்தியமானது எது?, ஆத்மா எது? அனாத்மா எது? என்று வேறுபாடு அறியாத நிலையே அறியாமை (அவித்தை) ஆகும்.

      வேறுபாடுகள் அடைவது அநித்தியமானது, வேறுபாடுகள் அற்றது நித்தியமாது என்று வைதீகம் கருதுகிறது. உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் வேறுபாடு அடைகிறது. வேறுபாடுகளை அடைவதினால் இந்த உலகம் அனாத்மா. அதாவது உண்மையானது அல்ல. ஆத்மா அல்ல என்கிறது.

      அறியாமையில் இருந்து நீங்கப்பெற்ற அறிவே, துன்பமயமான சம்சாரத்தில் இருந்து விடுபட தூண்டுகிறது. சம்சாரம் என்றால் இல்வாழ்க்கை. சம்சாரத்தில் அனைத்தும் துக்கமயமானது என்கிறது யோக சூத்திரம். (2:15)

இவ்வுலக வாழ்க்கை அறியாமையின் விளைவு, ஆன்மீக வாழ்க்கையே அறிவு மயமானது. ஆன்மீக வாழ்க்கை என்றால் ஆத்மாவோடு ஒன்றிய வாழ்க்கை. இதுவே அறியாமையற்ற விவேகம் (அறிவு) ஆகும். இந்த விவேகத்தைப் பெற வேண்டுமானால் அறியாமையை ஒழிக்க வேண்டும் (2:26).

“அறியாமை இல்லாததால், விலக்க வேண்டிய சேர்க்கை நீக்கப்பட்டுள்ளது. அதுவே காண்பவனுடைய கைவல்யம் ஆகும்.” (2:25)  

கேவல நிலையை அடைவதே கைவல்யம். தமிழில் கேவலம் என்பதை வேறு பொருளில் கொள்வோம். வடமொழியில் கேவலம் என்றால் தனியானது, ஒன்றேயானது என்று பொருளாகும். அனைத்துக் கலப்புகளையும் நீங்கியதும், தன்நிலையில் ஒன்றித்து இருக்கும் ஆத்மாவையே கைவல்யம் என்று கூறப்படுகிறது.

      பிரகிருதியோடு புருடன் என்கிற ஆத்மா சேர்வதே அறியாமையாகும். உலகப் பொருளோடு புருடன் இணைவது அறியாமை என்கிறது யோக சூத்திரம்.

சடங்குகள், சாஸ்திரங்கள், கோவில்கள் போன்றவை இரண்டாம் நிலையானவை, ஆத்ம நிலையில் ஒன்றிப்பே முதன்மையானது இறுதியானது.

25ஆம் சூத்திரத்துக்கான விவேகானந்தரின் விளக்கம்:-

“யோகத் தத்துவப்படி அறியாமையின் காரணமாகவே பிரகிருதியுடன் ஆத்மா இணைந்தது. இயற்கை நம் மீது அதிக்கம் செலுத்துவதை அகற்றுவதே நோக்கம். எல்லா மதங்களின் நோக்கமும் இதுவே. ஒவ்வோர் ஆத்மாவும் உள்ளடங்கிய தெய்வீகம் நிறைந்தது. புற மற்றும் அக இயற்கையை அடக்குவதன்மூலம் இந்த அக தெய்வீகக்கை வெளிப்படுத்துவதே நோக்கம். செயல் அல்லது வழிபாடு அல்லது பிராணனைக் கட்டுப்படுத்தல் அல்லது அராய்ச்சி-இவற்றுள் ஒன்றாலோ பலவற்றாலோ எல்லாவற்றாலுமோ இதனைச் செய்து சுதந்திரனாக இரு! இதுவே மதத்தின் முழு உண்மை. கொள்கைகளும் கோட்பாடுகளும், சடங்குகளும் சாஸ்திரங்களும், கோயில்களும் உருவங்களும் இரண்டாம் நிலையிலுள்ள விளக்கங்களே. பிராணனை வசப்படுத்தும் பயிற்சியின்மூலம் யோகி இந்த இலக்கை அடைய முயல்கிறான்.

இயற்கையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளாதவரை, நாம் அடிமைகள். அதன் கட்டளைப்படியே நாம் நடக்க முடியும். மனத்தை வசப்படுத்துபவன் ஜடப்பொருளையும் வசப்படுத்தலாம் என்கிறான் யோகி. அக இயற்கை, புற இயற்கையை விட மிகவும் உயர்ந்தது. அதனுடன் போராடுவது கடினமானது, வசப்படுத்துவதோ அதைவிடக் கடினம். அதை அடக்குபவன் பிரபஞ்சத்தையும் அடக்கியாள்வான், அது அவனுக்கு அடிமையாகிறது. இயற்கையை வெல்வதற்கான முறைகளை ராஜ யோகம் காட்டுகிறது.” (ஞான தீபம் -2)

      யோக சூத்திரம், இந்த உலகை விடுத்து ஆன்மீக உலகுக்கே வழிகாட்டுகிறது. அதற்கான தயாரிப்பே யோகம் பயிலுதல்.

எட்டு உறுப்புகளாக யோகம் விளக்கப்படுகிறது.

 

“யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன யோகத்தின் எட்டு உறுப்புகள்.” (2:29)    

      யோக முறையினர் இந்த ஏழு உறுப்புகளை எவ்வாறு விளக்குகின்றனர் என்பதைப் பார்ப்போம்.

      1)யமம் என்றால் செய்யக் கூடாததில் இருந்து விலகுதல். முதலில் அகிம்சை. அகிம்சை என்றால் பிற உயிர்களை துன்புறுத்துதலில் இருந்து விலகுதல், பொய் பேசுவதில் இருந்து விலகுதல், திருடுவதில் இருந்து விலகுதல், காம இச்சைகளில் இருந்து விலகுதல், தானமாக ஏற்பதில் இருந்து விலகுதல்.

அதாவது, கொல்லாமை, உண்மை பேசுதல், களவு செய்யாமை, பிரம்மச்சரியம், தானம் ஏற்காமை ஆகியவையே யமம் எனப்படுகிறது. செய்யக் கூடாததில் இருந்து விலகுதலே யமம் என்று பார்த்தோம். இந்த பயிற்சி மனதை உலகப் பொருட்களின் மீது செல்லாமல் தடுக்கிறது.

      2)நியமம் என்றால் கடைபிடித்தல்.  அக-புறத் தூய்மை, ஆன்மதிருப்தி, தவம், சுயக்கல்வி, இறைவனை வழிபடல் ஆகியவைகளை கடைபிடித்தல் என்பது நியமம். இந்தக் கடைபிடித்தல்களே மனதை அலைபாயாமல் கட்டுப்படுத்துகிறது.

      3)ஆசனம் என்றால் யோக நிலைக்கு உரிய வகையில் அமர்தல். யோகம் செய்வதற்கு வசதியாக அமர்வதே ஆசனம்.

4)பிராணாயாமம் என்றால் மூச்சுப் பயிற்சி. மூச்சுக் காற்றை உள் இழுத்தல் வெளிவிடுதல் இதுவே மூச்சுப் பயிறிசி. முதலில் மூக்கின் இடது துவாரம் வழியாக காற்றை உள்ளே இழுத்து, வலது துவாரம் வழியாக வெளியில் விட வேண்டும். அடுத்து வலது துவாரம் வழியாக காற்றை இழுத்து இடது துவாரம் வழியாக விட வேண்டும். இதே முறையில் மாறிமாறி செய்ய வேண்டும்.

5)பிரத்தியாகாரம் என்றால் புலன்களால் அறியப்படும் பொருட்களில் இருந்து மனதைத் திருப்புதல். அதாவது புலன்களால் அறியப்படுகின்றவற்றில் இருந்து மனதை திருப்புதல். 6)தாரணை என்பது புலன்களையும் மனதையும் உலக வெளிப் பொருள்களை நாடிச் செல்லாமல் கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தல். 7)தியானம் ஒருமுகப்பட்ட நிலையில் தொடர்ந்து இருத்தல்.  உடலின் மூலம் மனதை அடையும் பயிற்சியே தியானம். தியானத்தின் மூலமே ஆத்மாவானது, புற உலகையும் உடலையும் மறந்து அக நுழைவாக, தன்னியல்பில் ஒடுங்குகிறது.

      8)சமாதி என்றால் தியானிக்கப்படும் பொருளின் வடிவத்தை படிப்படியாக விடுத்து அகத்தில் முழுமையாக ஒடுங்குவது. உண்மைக்கு மாறான இந்த உலகில் இருந்து விடுபடுவதற்கு எதையேனும் ஒரு தூலப் பொருளை முதலில் தியானிக்க வேண்டும், அடுத்து நுண்பொருளை தியானிக்க வேண்டும், இறுதியாக எந்த பொருளையும் துணைக்கு அழைக்காமல் தியானிக்க வேண்டும் அப்போது ஆத்மா ஒரே உண்மையான அகத்தில் ஒடுங்கும்.

      கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் ஏற்படுகின்ற மாறுதல்களால் பாதிக்கப்படுவதே குணங்களுக்கு காரணாகும். இந்த குணங்களின் வேறுபாடுகள் பிறப்புக்கும் சம்சாரத்துக்கும் காரணமாகிறது. குணங்களை பெறால் இருக்க வேண்டுமானால், அநித்தியமான இந்த புறப்பொருளில் இருந்து மனதை விடுத்து, ஒரே உண்மைப் பொருளான ஆத்மாவில் நிலைபெறுவதே கைவல்யம்.

      நான்காவது அத்தியாயம் கைவல்ய பாதம். கைவல்யம் என்றால் பிறப்பைத் தடுத்தல் அதாவது முக்தி அடைதல்.

      நற்செயலால் நன்மையும் தீயச்செயலால் தீமையும் விளையும் என்று கர்மக் கோட்பாடு கூறுகிறது. கர்மக் கோட்பாட்டினால் ஆத்மாவுக்கு எந்தப் பயனும் இல்லை என்று யோக சூத்திரம் கருதுகிறது. உலகம் மாறுபாடுகளுடன் கூடிய அநித்தியமானது, ஆத்மா மாறுபாடற்ற நித்தியமானது.

      அநித்தியமான உலகை மனது நாடுவதற்கு மனதில் பதிந்துள்ள நிகழ்வுகளே காரணமாகும். மனப் பதிவுகளே சமஸ்காரம். நித்திய ஆத்மாவை அடைவதற்கு தடையாக இருப்பது மனதின் விருப்பங்களே.

      “அதற்குத் தடையாக எழும் எண்ணங்கள் சமஸ்காரங்களில் இருந்து வருபவை” (4:26) 

      நான்காம் அத்தியாயத்திற்கு விவேகானந்தர் எழுதிய விளக்கங்கள் மேலே தொகுத்தவற்றைத் தெளிவுபடுத்துகிறது. நான்காவது யோக சூத்திரத்துக்கு (4:4) விளக்கமாக விவேகானந்தர் கூறியதை பார்ப்போம்.

 

“நாம் செய்த நல்ல அல்லது தீய செயல்களாலேயே நாம் துன்புறுகிறோம் என்பது கர்மக் கோட்பாடு. மனிதன் தனது மகிமையை மீண்டும் பெறச் செய்வதே எல்லா தத்துவ சாஸ்திரங்களின் நோக்கம். அனைத்து சாஸ்திரங்களும் மனிதனுடைய ஆத்மாவின் பெருமையையே பாடுகின்றன; அதே மூச்சில் கர்மத்தைப்பற்றியும் போதிக்கின்றன. நற்செயலால் இது விளையும், தீய செயலால் அது விளையுமென்று கூறுகின்றன. ஆனால் இந்த நல்ல மற்றும் தீய செயல்களால் ஆத்மா பாதிக்கப்படும் என்றால் அது ஒன்றுமே இல்லை. தீய செயல்களே புருஷனின் இயல்பை தடுக்கின்றன. நற்செயல்கள் அந்தத் தடைகளை நீக்குகின்றன, புருஷனின் பெருமை வெளிப்படுகிறது. புருஷன் ஒருபோதும் மாறுபடுவதில்லை. நீங்கள் எது செய்தாலும் சரி, அது உங்கள் மகிமையை, உங்கள் சொந்த இயல்பை அழிப்பதில்லை. ஏனெனில் எதனாலும் ஆத்மா பாதிக்காது. ஒரு திரை மட்டுமே அதன் முன்னால் தொங்குகிறது, அது அதன் நிறைநிலையை மூட மட்டுமே செய்துள்ளது, அவ்வளவுதான்.”

      மேலும் 4:25 சூத்திரத்துக்கு விவேகானந்தர் கூறிய விளக்கத்தையும் சேர்த்துப் பார்ப்போம்.

 

“…யோகப் பயிற்சி நமக்கு விவேகத்தை அளிக்கிறது. அதனால் நமது காட்சி தெளிவாகிறது. கண்ணின் முன் உள்ள திரை நீங்கப்பெற்று, பொருட்களை நாம் உள்ளது உள்ளபடி காண்கிறோம். இயற்கை ஒரு சேர்க்கைப் பொருள், அது சாட்சியான புருஷனுக்காகவே தனது அழகிய காட்சிகளை விரிக்கிறது என்றும், இயற்கை தலைவன் அல்ல, அகத்திலே அரசனாக அமர்ந்துள்ள புருஷனுக்காகவே தனது சேர்க்கைகளையும் அற்புதங்களையும் காட்டுகிறதென்றும் அறிகிறோம். நீண்ட காலப் பயிற்சியால் விவேகம் வரும்போது, அச்சம் அகல்கிறது; சித்தம் கைவல்யம் பெறுகிறது.”

      மூல சாங்கியத்தில் புருடன் என்பது பொருள் தன்மை உடையது. யோக சூத்திரத்தில் புருடனை ஆத்மாவாக விளக்கப்படுத்தி வெறும் சாட்சியாகப்பட்டுள்ளது. அவ்வாறு சாட்சியாக்கினால் புருடன் என்கிற ஆத்மா, முக்தியை நோக்கி தான் செல்ல வேண்டிவருகிறது.

      அநித்திய பொருளான உலகத்தின் மாயைத் தன்மையை உணர்ந்த புருடன் என்கிற ஆத்மா, நித்தியமான ஆத்மாவே நிலையாது என்று அறிந்து, தியானித்து இறுதியில் ஆத்மாவில் ஒடுங்குகிறது. ஆத்மா தன் சொந்த இயல்பை அடைவதே கைவல்யம்.

 

“எந்த நோக்கமும் இன்றி, புருடனுக்காக வேலை செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் நீங்கப்பெற்று குணங்கள் படிப்படியாக மேலே போய் ஒடுங்கிவிடுவது கைவல்யம்.” (4:33)

      உலகம் அநித்தியம் என்பதை அறிந்து, அறிந்ததின் மூலம் அதனை வெறுத்து, நித்தியமான ஆத்மாவில் ஒன்றுபடுவதே புருடனின் இறுதி நோக்கம் என்கிறது யோக சூத்திரம். அந்நிலையில் ஆத்மாவுக்காக வேலை செய்ய வேண்டும் என்கிற சிந்தனையையும் இழந்து ஆத்மாவில் ஒடுங்குவதே கைவல்யம் என்கிறது.

      பொருட்களின் வேறுபாடுகள், சாதிய வேறுபாடுகள், வர்க்க வேறுபாடுகள் போன்றவற்றுக்கு விளக்கமோ, தீர்வோ கொடுக்காமல் யோகத் தத்துவம் இந்த சமூகத்தை அப்படியே ஏற்க வைத்துவிட்டு, மக்களை ஆத்மாவோடு ஒன்றிட போதிக்கிறது. இந்தத் தத்துவம் ஆளும் சக்திகளுக்கு ஆதரவாக இருக்கிறது.

      யோக தத்தவத்தை விளக்குகிறேன் என்று கூறிவிட்டு வர்க்க வேறுபாடு, ஆளும் சக்தி என்று அரசியல் பேசுவது சரியா என்று சிலருக்குத் தோன்றும்.

யோகத் தத்துவம் உண்மையில் இதனைவே விளக்குகிறது. இங்கு கூறியவை சரி என்பதை விவேகானந்தரின் வரிகளில் இருந்து தெளிவடையலாம்.

 

"ஒவ்வோர் இன்பத்திற்குப் பின்னரும் துன்பம் வருகிறது. அது விரைந்தும் வரலாம், காலம் தாழ்ந்தும் வரலாம். ஆத்மா பக்குவமடையுந்தோறும் ஒன்று மற்றொன்றைத் தொடர்கின்ற வேகமும் அதிகரிக்கிறது. நமக்கு வேண்டுவது இன்பமும் அல்ல, துன்பமும் அல்ல. இரண்டும் நமது உண்மை இயல்பை மறக்கச் செய்கின்றன; இரண்டும் சங்கிலிகளே-ஒன்று இரும்புச் சங்கிலி, மற்றொன்று பொன் சங்கிலி. இரண்டின் பின்னணியிலும் இருப்பது ஆத்மா. அது இன்பம், துன்பம் இரண்டையும் அறியாதது. இவை இரண்டும் குறிப்பிட்ட நிலைகளே இவை; நிலைகள் எப்போதும் மாறியே ஆகவேண்டும். ஆனால் ஆத்மாவின் இயல்பு மாற்றமில்லாத ஆனந்தம், மாற்றமில்லாத அமைதி. நாம் அதை அடைய வேண்டுவதில்லை. அது நம்மிடமே உள்ளது. மாசுகளைக் கழுவுங்கள், அது தெரியும்.

… … …

துன்பம் இல்லாத இன்பமோ, தீமை இல்லாத நன்மையோ ஒருபோதும் இருக்க முடியாது. வாழ்வு என்பது சமச்சீர் நிலையை இழந்த ஒரு நிலை. நாம் விரும்புவது முக்தியே தவிர வாழ்வு அல்ல, இன்பம் அல்ல, நன்மையும் அல்ல.

… … …

எதையும் தேடிச் செல்லாதே, விலக்கவும் செய்யாதே. வருவதை அப்படியே ஏற்றுக்கொள். எதனாலும் பாதிக்கப்படாமல் இருப்பதே சுதந்திரம். பொறுத்துக் கொள்வது மட்டும் போதாது, பற்று அற்று இருப்பது அவசியம்."

(ஞானதீபம், சுடர் (அருளுரையில்1895) 2, பக்-375, 377, 378-379)

      விவேகானந்தர் கூறுகிற, பற்று அற்று இருப்பது, வருவதை அப்படியே ஏற்றுக்கொள்வது, விரும்புவது முக்தியே தவிர, வாழ்வு அல்ல, என்கிற இவைகள் அனைத்தும் அரசியல் கலந்த தத்துவமே.

இருக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக் கொள்ள வைத்து, முக்தி தான் உண்மையான விடுதலை என்று கூறுவது, உழைப்பாளர்களுக்கு பாதகமாகவும் உழைப்பைப் பெறுபவர்களுக்கு சாதகமாகவும் இருக்கிறது.  வர்க்க சார்பற்ற தத்துவம் என்று எதுவும் கிடையாது. பொருள்முதல்வாதமாக இருந்தாலும்சரி, கருத்துமுதல்வாதமாக இருந்தாலும்சரி அனைத்துத் தத்தவங்களும் வர்க்க சார்புடையவையே ஆகும். ஒருவன் எந்த வர்க்கத்தை சார்ந்திருக்கிறானோ, அந்த வர்க்க நலன்களைக் கொண்ட தத்துவத்தையே தெரிவு செய்கிறான்.

கருத்துமுதல்வாதம் உழைப்பை வாங்குபவர்களுக்கு சாதகமாகவும் பொருள்முதல்வாதம் உழைப்பை செலுத்துபவர்களுக்கு சாதகமாகவும் இருக்கிறது. கருத்துமுதல்வாதம் உழைப்பாளர்களுக்கு பாதகமாக இருப்பது போலவே பொருள்முதல்வாதம் ஆதிக்க வர்க்கத்துக்கு பாதகமாக இருக்கிறது. வர்க்க வேறுபாடுகளே தத்துவத்தை தோற்றுவிக்கிறது. பொருள்முதல்வாதத்தின் மீது கருத்துமுதல்வாதம் தொடர்ந்து தாக்குதல்களை செலுத்துவது வெறும் தத்துவத்துக்கானது மட்டுமல்ல அந்த தத்துவத்தில் உள்ள வர்க்க சார்புக்காகவே ஆகும்.

தத்துவத்தின் அடிப்படை வர்க்க சார்பானதே ஆகும்.

******************

பொருளடக்கம்

No comments:

Post a Comment