Saturday 25 September 2021

1) இயக்கவியல் பொருள்முதல்வாதம் = இயற்கைவியல் பொருள்முதல்வாதம்

மார்க்சியம்

இயற்கைவியல் பொருள்முதல்வாதம் 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

36 வது வார வகுப்பு – வகுப்பு 25-09-2021)  

     மார்க்சியம், என்கிற பொது தலைப்பில் எட்டு வகுப்புகள் எடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். 

1) இயற்கைவியல் பொருள்முதல்வாதம்= (இயக்கவியல் பொருள்முதல்வாதம்)

2) இயக்கவியல், இயக்கவியல் வகையினங்கள்

3) வரலாற்றியல் பொருள்முதல்வாதம்

4) அடித்தளமும் மேற்கட்டமைப்பும்

5) அரசியல் பொருளாதாரம்

6) உபரி மதிப்பு

7) கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்

8) விஞ்ஞான சோஷலிசம் 

இவை அனைத்தும் பல்வேறு நூல்களில் படித்ததை சுருக்கமாகத் தொகுத்து வகுப்பு எடுக்கப்பட இருக்கிறது. 

இன்று நாம் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை மிகமிக சுருக்கமாகப் பார்ப்போம். 

மார்க்சியம் என்றால் என்ன? 

மார்க்சியம், என்பது காரல் மார்க்ஸ் தமது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எழுதிய கருத்துக்கள் அனைத்தையும் குறிப்பதாகும். இதில் தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்ற மூன்று உட்பிரிவுகள் உள்ளது. மூன்று உட்பிரிவுகளும் தம்முள் உள்ளிணைப்புக் கொண்டவையாகும். எந்த ஒன்றையும் தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாது. 

பொருளாதார முறையே சமூக வளர்ச்சியின் அடித்தளம் என்றும், இந்த அடித்தளமே மேற்கட்டமைப்பான தத்துவம், அரசியல், மதம், சட்டம் போன்றவற்றை நிர்ணயிக்கிறது என்றும் மார்க்சியம் கூறுகிறவகையில் அரசியல் பொருளாதாரமே முதன்மையானதாகிறது. 

அரசியல் பொருளாதாரம் முதன்மையானது என்றாலும், மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்வதற்கு, அல்லது பொருளாதாரத்தை மார்க்சிய கண்ணோட்டத்தில் அணுகுவதற்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதமான மார்க்சிய தத்துவம் அவசியமாகிறது. அதனால் தத்துவப் புரிதல் இல்லாமல் அரசியல் பொருளாதாரத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. 

விஞ்ஞான சோஷலிசம் என்பதுதான் கம்யூனிஸ்டுகளின் நேரடி நடைமுறைக்கு வழிகாட்டி, அதுதான் அரசியலுக்கு வழிகாட்டுகிறது. கம்யூனிஸ்டுகளின் அரசியல் விஞ்ஞானத் தன்மை உடையது என்று கூறப்படுகிறது. இயக்கவியல் பொருள்முதல்வாதம், அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட சமூகக் கருத்தே விஞ்ஞான சோஷலிசமாகும். ஆக மூன்றையும் புரிந்து கொள்ளாமல் எந்த ஒன்றையும் தனித்து புரிந்து கொள்ள முடியாது. 

தத்துவம் என்பது இயற்கை, சமூகம் பற்றிய அறிதலின் பொதுவான விதிகளை பற்றிய விஞ்ஞானமாகும். 

அரசியல் பொருளாதாரம் என்பது உற்பத்தி நிகழ்வின் போது மனிதர்களுக்கு இடையே ஏற்படுகிற பொருளாதார உறவுகள், உற்பத்தி, விநியோகம், பரிவர்த்தனை, நுகர்வு ஆகியவற்றை ஆளுகின்ற பொருளாதார விதிகளை ஆராய்கிறது. 

விஞ்ஞான சோஷலிசம் என்பது அரசியல் பொருளாதாரத்தையும், மாக்சியத் தத்துவத்தையும் ஆதாரமாகக் கொண்டு முதலாளித்துவ சமூக நிலைமைகளையும், முரணையும், அது இறுதியில் அழிந்து போவது பற்றியும், அதன் தொடர்ச்சியாக நிகழும் சோஷலிச புரட்சியினை எட்டும் நியதிகளையும் வெளிப்படுத்துகிறது. 

      தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் ஆகிய மூன்று மார்க்சிய உள்ளடக்கத்தை எந்த ஒரு தனி நூலில் இருந்து எடுத்து விளக்காமல் பொதுவான தொகுப்பாக, தொடர் வகுப்பில் பார்க்கலாம். 

      இயற்கையையும் சமூகத்தையும் மார்க்சியம், இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் அணுகுகிறது. 

இன்றைய நிலையில் இயற்கையைப் பற்றி பேசும் தத்துவத்துக்கு இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றும்; சமூகம், வரலாறு ஆகியவற்றைப் பேசுவது வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற பெயரில் தான் அழைக்கப்படுகிறது. 

இதைப் பார்க்கும் போது இயற்கைக்குத்தான் இயக்கவியல் பொருந்துமா? சமூகத்துக்கு பொருந்தாதா என்கிற கேள்வி எழுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் இயற்கை பற்றிய மார்க்சியப் பார்வையை “இயற்கைவியல் பொருள்முதல்வாதம்” (Natural Materialism) என்றும், சமூகம் பற்றிய மார்க்சியப் பார்வையை “வரலாற்றியல் பொருள்முதல்வாதம்” (Historical Materialism) என்றும் அழைப்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இரண்டையும் சேர்த்து குறிப்பிடும் போது இயக்கவியல் பொருள்முதல்வாதம் (Dialectical Materialism) என்று கூறலாம். 

முதலில் இயற்கைக்கும் சமூகத்துக்கும் இடையுள்ள அடிப்படை வேறுபாட்டை பார்ப்போம். 

இயற்கையும் சமூகமும் புறநிலை விதியின் அடிப்படையில் செயல்படுகிறது. இயற்கை செயற்படுவதற்கு மனிதனின் நடவடிக்கை தேவையில்லை, ஆனால் சமூகத்தின் புறநிலை விதிகள் மனிதனைக் கொண்டே நடைபெறுகிறது. இந்த அடிப்படை வேறுபாட்டை நான்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

சமூகத்தின் புறநிலை விதிகள் மனிதனது வளர்ச்சிப் போக்கின் தேவையாக வெளிப்படுகிறது. 

இயற்கைவியல் பொருள்முதல்வாதம் பற்றி இன்றைய வகுப்பில் பார்ப்போம். 

இந்தப் பிரிவை சற்று விளக்கமாகப் படிக்க வேண்டும் என்றால் 300 பக்கம் உள்ள நூலைப் படிக்க வேண்டும். அப்படிப்பட்டதை இங்கே மிகமிக சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வகுப்பில் கலந்து கொண்ட பிறகு இது போன்ற விரிவான நூல்களை எடுத்துப் படிக்க வேண்டும். 

சுருக்கம் என்பதனால் இங்கே நாம் இயற்கைவியல் பொருள்முதல்வாதத்தில் உள்ள சிலவற்றை மட்டுமே அதையும் சுருக்கமாகவே பார்க்கப் போகிறோம். அது என்ன என்பதை முதலில் கூறிவிடுகிறேன். பருப்பொருள், பருப்பொருளும் இயக்கமும், பொருளாயத ஒருமை, விசும்பும் காலமும், உணர்வுநிலை, அறிவுத் தோற்றவியல், உண்மை என்கிற இந்த தலைப்புகளை மட்டுமே இன்றைய வகுப்பில் பார்க்கப் போகிறோம். 

இயக்கவியலையும் அதன் வகையினங்களையும் அடுத்த தனி வகுப்பில் பார்க்கலாம். 

பருப்பொருள் (Matter) 

ஆங்கிலத்தில் Matter (மேட்டர்) என்று சொல்வதையே பருப்பொருள் என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பொருள் என்று பொதுப்படையாகக் கூறினாலும் அது பருப்பொருளையே குறிக்கும். 

நம்மைச் சுற்றியுள்ள உலகம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? என்பதே தத்துவத்தில் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. 

இந்த பிரபஞ்சத்தில் மிகமிக சிறு பொருளில் இருந்து பிரம்மாண்டமான நட்சத்திரங்கள் வரை காணப்படுகிறது. அதே போல சிறு உயிரணு முதல் உயர்வான ஒழுங்கமைக்கப்பட்ட உயிரினமும் இருக்கின்றன. பழங் காலத்தில் இருந்தே பொருட்களின் மூல அடிப்படை எது என்ற தேடல் காணப்படுகிறது. அடிப்படையானது தண்ணீர் என்பதாகவே பெரும்பான்மையினர் அன்று கருதினர். மற்றும் சிலர் நெருப்பு, மண் என்றும் முடிவெடுத்தனர். 

கிரேக்க தத்துவ அறிஞரான டெமாக்கிரீடிஸ், மூலத்தை மிகமிக சிறியதான, பிரிக்க முடியாத பொருளான அணு என்று அன்று கூறினார். இதுவே அனைத்துக்குமான “முதல் செங்கல்”. இதில் இருந்தே அனைத்தும் படைக்கப்பட்டதாக அவர் கருதினார். ஆனால் விஞ்ஞானம் அணுவை பிளந்து அது சிக்கலான அமைப்பு கொண்டுள்ளதையும், அதற்குப் பின்னால் நேர்மின்மம், நொதுமம் இன்னும் பல பிரிக்க முடியாத துகள்கள் இருப்பதை கண்டுபிடித்தது. இந்த அணுவை அனைத்துப் பொருள்களையும் உருவாக்கக் கூடிய எளிய தொடக்க கட்டிடப் பொருளாக குறிபிட முடியாது. இயற்கையின் வற்றாத வளத்தை “முதல் செங்கலாக” சுருக்க முடியாது என்பதை, நவீன இயற்கை விஞ்ஞான கண்டுபிடிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. 

இயற்கையில் உள்ள அனைத்துப் பொருட்களும் எத்தகைய தனித்தன்மை பெற்றிருந்தாலும் அவையனைத்தும் ஒரு பொதுத் தன்மையைக் கொண்டுள்ளது. அது என்னவென்றால், அனைத்துப் பொருட்களும் மனிதனது உணர்வுநிலையைச் சாராது இருக்கின்றது. 

மனிதன் இதனைப் பார்க்கிறானா? இத்தகையப் பொருட்களை புரிந்து கொண்டானா? என்பதை சாராது இருக்கிறது. அதனால் தான் பருப்பொருள் புறநிலையானது என்று கூறப்படுகிறது.  இப்படி மனிதனைச் சாராது இருக்கிற புறப்பொருட்களை மார்க்சிய தத்துவம் பருப்பொருள் என்ற சொல்லின் மூலம் அனைத்தையும் பொதுக் கருத்தாக ஒன்றிணைக்கிறது. 

வெளியுலகில் காணப்படும் பருப்பொருட்கள், நமது புலன் உறுப்புக்களின் மீது தாக்கம் செலுத்தி, நம் உணர்ச்சிகளில் பிரதிபலிக்கின்றன என்பதில்தான் இவற்றின் பொருளாயதத் தன்மை அடங்கி உள்ளது. 

ஐம்புலன்களால் அறியக்கூடியது பருப்பொருள். ஆனால் ஐம்புலன்களால் அறியக் கூடியது மட்டுமே பருப்பொருள் என்று புரிந்து கொள்ளக்கூடாது. ஏன் என்றால் குறிப்பிட்ட குறைந்த ஒலியையும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் உள்ள ஒலியையும் நாம் உணர்ந்து கொள்ள முடியாது. இருந்தாலும் இதை கருவிகளின் உதவியால் அறிந்து கொள்ள முடியும். 

நாம் அறிந்து கொள்ளாத எத்தனையோ பருப்பொருட்கள் இவ்வுலகில் இருக்கலாம், ஆனால் அவை அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்றே மார்க்சியம் கூறுகிறது. 

பருப்பொருளும் இயக்கமும் (Matter and Motion) 

உலகில் உள்ள அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. முற்றிலும் இயக்கம் இல்லாத எந்த பொருளும் உலகில் காண முடியாது. ஒவ்வொரு பொருட்களுக்கு உள்ளும் இயற்பியல், வேதியியல் மாற்றங்கள் இடையறாது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. 

உலகில் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையே இது உணர்த்துகிறது. நிலவுவது, வாழ்வது என்றாலே அது இயக்கத்தில் இருக்கிறது மாற்றங்களை நடத்திக் கொண்டிருக்கிறது என்றுதான் பொருள். 

இயக்கம் இல்லாமல் பருப்பொருள் இல்லை என்பது போலவே பருப்பொருள் இல்லாமல் இயக்கமும் இல்லை. பொருளற்ற “சக்திவாதம்” என்பது பொருளற்றதே ஆகும். பொருட்களை இயக்குவது சக்தியே என்று கருதுவது சக்திவாதம். பொருளுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியே பொருட்களை இயக்குவதாக இந்தவாதம் கூறுகிறது. 

பொருளின்றி சக்தியை தனித்து பேசுவது, அதாவது புறநிலை என்கிற எதார்த்தத்துக்கு வெளியே சக்தி நிலவ முடியும் என்று கருதுவது, ஒன்றுமே இல்லாததில் இருந்து உலகைப் படைக்க வல்ல கடவுளை அங்கீகரிப்பதில் போய் முடியும். இது அப்பாலைத் தத்துவமே (Metaphysics) ஆகும்.   

சில இயக்க வடிவங்களைப் பார்ப்போம். 1) இயந்திரவியல் இயக்கம் 2) இயற்பியல் இயக்கம் 3) வேதியல் இயக்கம் 4) உயிரியல் இயக்கம் 5) சமூகவியல் இயக்கம். 

விசும்பில் நடைபெவறுகிற பருப்பொருளின் இருப்பும் இடபெயர்ச்சியும் (Mechanics) இயந்திரவியல் இயக்கங்களாகும். விசும்பு என்றால் வெளி. இந்த வெளியில் தான், அனைத்துப் பருப்பொருட்களும் இருக்கின்றன. பருப்பொருளுக்கு இடையே உள்ள இடைவெளியும் இருக்கின்றன. இடைவெளி பருப்பொருள் அனைத்தையும் சேர்த்தே விசும்பு என்று கூறப்படுகிறது. 

வெப்பம், அணுவினுள் நடைபெறும் நகர்வுகள், மின்சாரம் போன்றவற்றின் இயக்கங்கள் (Physics) இயற்பியல் இயக்கங்களாகும். 

மூலக்கூறுகளின் சேர்க்கையும் பிரிதலும் (Chemistry) வேதியல் இயக்கங்களாகும். 

உயிரினங்களின் வாழ்க்கை, வளர்ச்சி, மறைவு ஆகியவைப் பற்றியது (Biology) உயிரியல் இயக்கங்களாகும். 

சமூக உற்பத்தி முறையும், அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியையும் பற்றியது (Sociology) சமூகவியல் இயங்களாகும். 

பொருளாயத ஒருமை (Material Monotheism) 

அளவற்ற பொருட்களால் மனிதன் சூழப்பட்டுள்ளான். அந்த பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்ட உறவுநிலையில் செயற்படுகின்றன. 

ஒரு பருப்பொருள் தன்னுள்ளும் பிறவற்றோடும் சேர்ந்தே இயங்குகிறது. எந்தப் பருப்பொருளும் பிரபஞ்சத்தில் தனித்து ஒதுங்கி இருக்க முடியாது. ஒவ்வொரு பருப்பொருளும் மற்ற பருப்பொருட்களுடன் இணைந்தே செயற்படுகிறது. எந்த ஒரு தனிப் பருப்பொருளும் எத்தகைய தனித் தன்மை பெற்றிருந்தாலும் உலகில் காணப்படும் பிற பருப்பொட்களோடு பல லட்சம், பல கோடி இழைகளால் பிணைக்கப்பட்டே காணப்படுகிறது. 

அனைத்து இயக்கத்தையும் பிணைப்பையும் சேர்த்து பொருளாயத ஒருமை (Material Monotheism) என்று கூறப்படுகிறது. இந்த பொருளாயத ஒருமையில் ஏற்படுகின்ற இயக்கங்கள் அனைத்தும் விசும்பிலும் காலத்திலும் நிகழ்கிறது. பருப்பொருளின் வாழ்நிலை என்பது விசும்பிலும் காலத்திலும் தான் இருக்கிறது. 

விசும்பும் காலமும் (Space and Time) 

பருப்பொருளினுடைய வடிவத்தின் இடம் சார்ந்தது, விசும்பு என்றும், அந்தப் பருப்பொருளின் தொடர் நிகழ்வை சார்ந்தது காலம் என்றும் அழைக்கப்படுகிறது. காலமும் விசும்பும் பருப்பொருள் இருத்தலின் சர்வப்பொது வடிவமாகும். 

காலமும் விசும்பும் இல்லாது பரப்பொருள் இல்லை. அதே போல் பருப்பொருள் இல்லாத காலமும் விசும்பும் கிடையாது. 

விசும்பில் இருக்கிறது என்றால் ஒன்றின் அருகே மற்றொன்று என்ற வடிவத்தில் நிலவுகிறது, அதே போல் காலத்தில் இருப்பது என்றால் ஒன்றினை அடுத்து மற்றொன்று என்ற வரிசைபடியான வடிவத்தில் நிலவுகிறது, அதாவது நேற்று இன்று நாளை என்று தொடர்கிறது. 

      பருப்பொருளைப் போலவே விசும்பும் காலமும் மனிதனைச் சாராது புறநிலையில் இருக்கிறது. 

      இன்றைய இயற்கை விஞ்ஞானத்தின் கண்டு பிடிப்புகள் பருப்பொருள், இயக்கம், விசும்பு, காலம் ஆகியவற்றின் ஒருமையை உறுதிப்படுத்துகிறது. அதாவது ஒற்றுமையை வலியுத்துகிறது. 

      பலகோடி ஆண்டுகளாக இருக்கின்ற கோள்களுக்கும் தொடக்கம் உண்டு, அதே போல அழிவும் உண்டு. அவ்வாறு அழியும் போது அது ஒன்றும் இல்லாது மறைந்து போவதில்லை. மற்றொரு மூலக்கூறுகளாக மாற்றம் பெறுகின்றன. அதனால் தான் பொருள்முதல்வாதத் தத்துவமானது, பருப்பொருள் காலத்தில் நிரந்தரமானது என்று கூறுகிறது. 

      ஒன்றுமில்லாததில் இருந்து எதையும் தோற்றுவிக்க முடியாது, அதே போல இருக்கும் ஒன்றை ஒன்றுமில்லாததாக அழித்திட முடியாது. இதை தான் பேச்சு வழக்கில் “உள்ளது போகாது இல்லது வராது” என்று கூறப்படுகிறது. 

      மதமும், கருத்துமுதல்வாதத் தத்துவமும் உலகமானது ஒரு கடவுளால்- ஒரு சக்தியால் படைக்கப்பட்டது என்று இதுநாள்வரை கூறிவந்தது. இன்றைய புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இந்தக் கருத்தை தகர்தெறிந்து விட்டது. பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதை நவீன விஞ்ஞானம் மறுதலிக்கிறது. 

விசும்பு வரம்பற்றது, காலம் முடிவற்றது என்பதையே விஞ்ஞானம் நிரூபிக்கின்றன.  பிரபஞ்சமானது விசும்பிலும் காலத்திலும் இயங்கும் பருப்பொருளாகும். ஆகவே விசும்பும் காலமும், பருப்பொருள் போன்று நிலைத்தவை- முடிவற்றவை ஆகும். 

உணர்வுநிலை (Consciousness) 

மனிதனது உணர்வுநிலை எத்தகையது? அவனது சிந்தனைகள் எங்கிருந்து வருகின்றன? அவனது அறிவுலகம் எத்தகையது என்ற கேள்வியை நெடுங்காலமாக மனிதகுலம் எழுப்பட்டு வருகிறது. 

மனிதன் தன்னுடைய உணர்வுநிலையின் மூலமே நிகழ்ச்சிகளையும், பிற மனிதர்களையும் மதிப்பீடு செய்கிறான். அதனால் உணர்வுநிலையைப் பற்றிய ஆராய்ச்சி தத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. 

கருத்துமுதல்வாதமும் மதமும் உணர்வுநிலையானது “ஆத்மா”வின் பண்பு என்று கருதியது. இந்த ஆத்மாவானது மனிதனது உடலைவிட்டு தனியாக இருப்பதாக அது கூறியது. ஆழ்ந்த உறக்கத்தில் கனவு காண்பது ஏன் என்றால், மனிதன் அப்போது ஆத்மாவில் ஒன்றுபடுகிறான் (ஒடுங்குகிறான்). அந்த ஆத்மாவே கனவுகளை தோற்றுவிக்கிறது என்று மதமும்-கருத்துமுதல்வாதமும் கருதியது. இன்றைய நவீன உலகில் உள்ள உளவியல் இதனை ஏற்றுக் கொள்ளாது. 

உணர்வுநிலைக்குக் காரணமானதை, இயற்றைக்கு மேம்பட்ட ஒன்றாகப் பார்ப்பதை நவீனப் பொருள்முதல்வாதம் நிராகரிக்கிறது.  

புலனுணர்வுகளை அனுபவிக்காத ஒருவனால் எந்த சிந்தனையையும் கருத்தினையும் உருவாக்க முடியாது. புறநிலையோடு உறவுகொள்ளாமல் உணர்வுநிலை ஏற்படாது. ஆனால் மார்க்சுக்கு முன்பான பழையப் பொருள்முதல்வாதமானது கொச்சைத் தன்மையுடையதாக இருந்தது. அது கல்லீரலில் இருந்து பித்தநீர் சுரப்பது போலவே மூளையில் இருந்து சிந்தனை உருவாகிறது என்று கருதியது. கருத்துமுதல்வாதமும் மூளையில் இருந்து கருத்துக்கள் தோன்றுவதாகக் கருதியது. 

மார்க்சிய பொருள்முதல்வாதமானது மூளையில் இருந்து சிந்தனை பிறக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறது. ஆனால், அத்துடன் நில்லாமல் மூளையில் எப்படி கருத்துக்கள் உருபெறுகின்றன என்பதை தொடர்ந்து ஆய்வு செய்தது. உணர்வுநிலையானது மூளையின் நேரடிப் படைப்பு அல்ல, அதற்கு மாறாக பொருளாத உலகுடன் பரஸ்பர உறவின் மூலம் மூளைக்கு கிடைக்கின்ற தரவுகளின் அடிப்படையில் முடிவெடுத்ததின் விளைவாகவே உணர்வுநிலை ஏற்படுகிறது. 

உணர்வுநிலையானது சமூக உறவுகளின் பிரதிபலிப்பாகும். மனிதனும் மனித சமூகமும் தோன்றிய போது அது தோன்றியது. சமூகக் கருத்துக்கள் அந்த சமூகத்துக்கு வெளியில் இருக்க முடியாது. சமூக உறவுகளில் உள்ள முரண்களில் இருந்துதான் சமூகக் கருத்துக்கள் –சமூகச் சிந்தனைகள் தோன்றுகின்றன.  

மூளை செயல்பாடாதவனிடம் கருத்துக்கள் தோன்றுவதில்லை, அவன் இந்த புற உலகோடு தொடர்பு ஏதும் கொள்வதில்லை. மனிதனது உணர்வுநிலையானது தன்னை சுற்றி நிகழ்கின்றவற்றில் இருந்துதான் தோன்றுகிறது. பருப்பொருள் இன்றி உணர்வுநிலை ஏற்படாது. 

புறநிலை உலகின் அகநிலைப் பிரதிபலிப்பே உணர்வுநிலை. 

எதார்த்த உலகில் இருந்தே மனிதன் பிரதிபலிப்புக்கான தகவல்களை பெறுகிறான். அந்தத் தகவல்கள் கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து பெற்றதாகும். அந்த அனுபவங்களின்படி அடுத்த செல்வழியை அவன் வகுத்துக் கொள்கிறான், அவ்வாறு அறிந்ததில் தவறானதை தவிர்க்கிறான், சரியானதில் பயணிக்கிறான். 

அறிந்தவற்றில் இருந்துதான் மனிதன் தனது எதிர்காலத்தை நோக்கி செல்கிறான். சமூகத்தின் புறநிலை விதியை அறிந்தவனே சமூக மாற்றத்தில் வெற்றி பெறுகிறான். சமூகத்தின் புறிநிலை விதியை புரிந்து கொள்ளாதவன் தோல்வி காண்கிறான். 

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உயர்வாக ஒழுங்கமைக்கப்பட்ட பருப்பொருளின் பண்புதான் உணர்வுநிலை. பருப்பொருளுக்கும் உணர்வுநிலைக்கும் உள்ள உறவை நான்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 

அறிவுத்தோற்றவியல் (Epistemology) 

இயற்கையையும் சமூகத்தையும் அறிய முடியுமா? என்பது தத்துவத்தில் மிகவும் முக்கியமான கேள்வியாகும். தத்துவத்தில் இந்தப் பிரிவுக்கு  அறிவுத்தோற்றவியல் (Epistemology) என்று பெயர். அனைத்துத் தத்துவங்களையும் வேறுபடுத்துவதில் மிகவும் முக்கியமானது இந்த அறிவுத்தோற்றவில். அதாவது அறிவுத்தோற்றவியல் அடிப்படையில்தான் தத்துவங்களுக்கு இடையே வேறுபாடு காணப்படுகின்றன. 

இயற்கையையும் சமூகத்தையும் அறிய முடியும் என்பதை மறுக்கின்ற தத்துவப் போக்கு இருக்கிறது, அதற்குப் பெயர் அறிவொணாவாதம் (Agnosticism). மனிதனால் அனைத்தையும் அறிந்து கொள்ள இயலாது. எதார்த்தத்தை சரியாக அறிந்து கொள்ள மனிதனால் முடியாது என்பது இந்த தத்துவத்தின் கருத்து. 

மார்க்சியத் தத்துவமான, இயக்கவியல் பொருள்முதல்வாதம் இயற்கையும் சமூகத்தையும் அறிய முடியும் என்று கூறுகிறது. மனிதர்கள் தங்களது நோக்கங்களை இயற்கையையும் சமூகத்தையும் அறிந்து கொண்டதின் விளைவாகவே அமைத்துக் கொள்கின்றனர். 

நடைமுறையே அறிதலுக்கான தொடக்கம். தன்னைச் சுற்றியுள்ள உலகோடு மனிதன் எந்தளவுக்கு உறவாடுகிறானோ அந்தளவுக்கு அவனது அறிவு வளர்கிறது. 

ஆதி மனிதன் தனது அறிதலை ஐம்புலன்களின் முலம் மட்டுமே பெற்றான். பின்பு கருவிகளைப் பயன்படுத்தி மனிதன் அறிதலை அதிகப்படுத்திக் கொண்டான். வெளிப்படையான அறிதலில் இருந்து நுட்பமான அறிதலுக்கு பயிற்சி பெற்றான். 

அறிதலுக்கு மூன்று தேவைப்படுகிறது. அறிதலுக்கான பொருள் (Object), அறிகின்ற மனிதன் (Subject), பொருளோடு செயற்படுவதனால் மனிதன் பெறப்படுகிற அறிதல் (Cognition). அறிவை பெறுவதற்கு இந்த மூன்றும் அவசியமாகும். இதனை தொகுத்து சொல்லும் போது அறிபடுபொருள்-அறிபவன்-அறிதல் என்று கூறப்படுகிறது (Subject Object Cognition).

அறிதல் நிகழ்ச்சியை சற்று விரிவாக புரிந்து கொள்வோம். முதலில் அறிவதற்கான பொருள், இரண்டாவது கருவிகளின் உதவுயுடன் பொருட்கள் மீது மனிதன் செய்யும் செயல், மூன்றாவது இந்தச் செயல்களின் விளைவாக ஏற்படுகின்ற பொருட்களுடைய பண்புகளின் சிறப்பியல்புகள் மூளையில் பிரதிபலிப்பாக பெறுதல். 

அறிதலை இப்படி சுருக்கமாகப் பார்ப்பது எளிதாகத் தோன்றும், ஆனால் அதன் நடைமுறையானது அவ்வளவு எளிதானது அல்ல, மிகவும் சிக்கலானது. 

அறிதலுக்கான மூன்று படிநிலைகள் இருக்கின்ற. 1) புலனுணர்ச்சி (Sensation) 2) புலனறிவு (Perception) 3) எண்ணம் (Notion). 

புலனுணர்ச்சி (Sensation) 

நடைமுறையே அறிதலின் தொடக்கம் என்று முதலில் பார்த்தோம். நடைமுறை மூலமாகப் பெறுவதே புலனுணர்ச்சி. 

ஒவ்வொரு பொருட்களின், தனித்தனி இயல்புகள், புலன்கள்மீது பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த பாதிப்புகள் மூலமே அந்தப் பொருட்களின் பண்புகள் அறியப்படுகிறது. 

புலனுணர்ச்சி இரண்டு வகையில் நிகழ்கிறது, முதலாவது வெளிப் பொருட்களுடன் புலனுறுப்புகள் கொள்ளும் பரஸ்பர செயல்கள். இரண்டாவது இந்த பரஸ்பர செயல்களால் மூளையில் பிரதிபலிப்பு ஏற்படுவது. 

இங்கே பிரதிபலிப்பு என்று கூறுவதனால் இதனை மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அதன் செயல்முறை நேரடியானது அல்ல. பரஸ்வர வினைகளால் எற்படுகிறது. கைவிளக்கின் மூலம் ஒளையைப் பாய்ச்சுவதும், நிறுத்துவதினால் அணைந்து போவது போன்று பிரதிபலிப்பானது எளிதானது அல்ல. 

அறிதலுக்கு புறநிலையே அடிப்படைக் காரணம் என்று கூறுவதனால், புறநிலையில் இருந்து அறிவை அகநிலை நேரடியாக அப்படியே பெறுகிறது, அதைப் பிடித்துக் கொண்டால் மட்டும் போதும் என்று சுருக்கிப் புரிந்து கொள்ளக்கூடாது. புறநிலையோடு உறவாடுவதின் மூலமே மனிதன் அறிவைப் பெறுகிறான். 

அறிதலுக்கு புறநிலையில் இருந்து வரும் தகவல்களும், மூளையும் மட்டும் இருந்தால் போதுமானதல்ல. அகப்பொருள், புறப் பொருள் ஆகிய இரண்டுக்கும் இடையே தீவிர பரஸ்பர செயல்களால் தான் அறிதல் பெறப்படுகிறது. 

புலனறிவு (Perception) 

புலன்களின் மூலம் கிடைப்பவை தனித்தனியான தன்மைகளே ஆகும்.  ஒரு பொருளைப் பற்றி, ஒரு புலன் அந்த புலனில் மூலம் கிடைக்கம் தன்மையை மட்டுமே வெளிப்படுத்துகிறது. ஒரு இனிப்பு தின்பண்டம் இருக்கிறது என்றால், மூக்கு அந்த பொருளின் மணத்தை மட்டுமே பெற்று தருகிறது. கண் அந்தப் பொருளின் வடிவத்தை மட்டுமே தருகிறது. அதே போலத்தான் மற்றவையும். 

அந்த பொருளை முழுமையாக அறிய வேண்டுமானால், ஐந்து புலன்களும் தருவதை, இணைத்து புரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஒன்றைப் பற்றி முழுமையான ஒன்றாகத் திரட்டித்தருவதை புலனறிவு என்று கூறப்படுகிறது. 

எண்ணம் (Notion) 

புலன்களால் அறிந்தவற்றை மூளை, தன் நினையில் வைத்துக் கொள்கிறது, அப்பொருள் இல்லாத போதும் நினைவில் வைத்திருந்த தோற்றங்களை மீண்டும் கொண்டு வருவதையே எண்ணம் என்று அழைக்கப்படுகிறது. 

புலனறிவுகள், எண்ணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் கருத்து (concept) உருவாகின்றன. அனைத்துக் கருத்துக்களையும் உருவடிவமாகப் பார்க்க முடியாது.  ஆட்டையோ மாட்டையோ நாம் வடிவமாகப் பார்க்கலாம், ஆனால் விலங்கை வடிவமாகப் பார்க்க முடியுமா? முடியாது, மா மரத்தைப் பாக்கலாம், பலா மரத்தைப் பார்க்கலாம், ஆனால் தவாரயினத்தைப் பார்க்க முடியுமா? முடியாது. அதே போல சமூகத்தை வடிவமாகப் பார்க்க முடியாது. ஆனால் புரிந்து கொள்வதற்கு இத்தகைய கருத்துக்கள் அவசியமாக இருக்கிறது. 

கருத்து வழிபட்ட அறிதல் என்பது மிகவும் சிக்கலுள்ள, முரண்களைக் கொண்ட செயல்முறையாகும். கருத்துக்கள் எதார்த்தத்தில் இருந்து விலகிவிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எதார்த்தத்தில் இருந்து விலகுவதே தோல்விக்குக் காரணமாகும். இதனை நடைமுறையில் பல நேரங்களில் நாம் கண்டுள்ளோம். அதனால் எதார்த்ததுக்கு பொருத்தமான கருத்துக்களே சரியானது என்றும் எதார்த்தத்துக்கு பொருந்தாதக் கருத்துக்கள் தவறானது என்றும் முடிவெடுக்கிறோம். தவறை சரி செய்கிறோம், சரியானதை பின்பற்றுகிறோம். 

அறிதலுக்கு புறநிலையும் அகநிலையும் அவசியமானது. புறநிலை அறிவுக்கு ஆதாரமானது, அறிதலை பெறுவற்கு புறநிலையும் அகநிலையும் பரஸ்பர வினைபுரிய வேண்டும்.  

உண்மை (Truth) 

அறிதலின் நோக்கம் உண்மையை கண்டு அதன்படி செயல்படுவதற்கே ஆகும். 

உண்மை என்று சொன்னால் மதமும், கருத்துமுதல்வாதமும் இந்த உலகுக்கு அப்பால் அதைத் தேடிக் கொண்டிருக்கிறது. முடிவல் அது பிரம்மம் (absolute) என்கிறது. எதார்த்தத்தை அறிதலே உண்மை என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது. இதன சற்று விரிவாக பார்ப்போம். 

புறநிலை எதார்த்தம், மனிதனிடம் சரியாகப் பிரிதிபலிக்கப்படுதைத்தான் உண்மை என்று கூறப்படுகிறது. எதார்த்தம் எப்படி நிலவுகிறதோ அப்படியே உணர்வில் மீண்டும் கொண்டுவருதலே உண்மை. உண்மை என்றால் எதார்த்தத்தை உணர்தலே ஆகும். 

இறுதியான உண்மை (Ultimate Truth) என்று எதையும் கூறிட முடியாது. உண்மையானது எதார்த்தின் சார்பானதே ஆகும். அறிதல் என்பது புறநிலையானது, புறநிலை மாறிக் கொண்டே இருக்கிறது, அதனை ஒட்டி உண்மையும் மாறிக் கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கிறது. அதனால் இறுதியான உண்மை என்பதாக எதுவும் கிடையாது என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது. 

       எதார்த்த உண்மையை, அறிதல் என்பது புறநிலை விதியை அறிந்து, அதன் வழியில் விரைவாக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கே ஆகும். 

       இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுபவனால் தான் சமூகத்தை விரைவாகவும், புரட்சிகரமாகவும் மாற்ற முடியும். 

      இயற்கையும் சமூகமும் இயக்கவியல் அடிப்படையில்தான் செயல்படுகிறது. அதனால் இயக்கவியலை நன்றாகப் புரிந்து கொள்வது அவசியமாகும். அடுத்த வகுப்பில் இயக்கவியல் மற்றும் அதன் வகையினங்களைப் பார்ப்போம்.

  (மார்க்சியம் - சிறிய அறிமுகம் / அனைத்து வகுப்புகளும்)

Saturday 18 September 2021

எங்கெல்சின் “லுத்விக் ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்” (மூன்று-நான்கு அத்தியாயங்கள்)

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

35 வது வார வகுப்பு – வகுப்பு 18-09-2021) 

      சென்ற வாரம் எங்கெல்ஸ் எழுதிய “லுத்விக் ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்” என்ற நூலின் முதலிரண்டு அத்தியாயங்களைப் பார்த்தோம். முதல் அத்தியாயம் ஹெகலைப் பற்றிய விமர்சனம். இரண்டாவது அத்தியாயத்தில் ஃபாயர்க்கின் பொருள்முதல்வாதம் பற்றி பார்த்தோம். 

இன்று நாம் அடுத்த இறுதி இரண்டு அத்தயாயங்களைப் பார்க்கப் போகிறோம். மூன்றாவது அத்தியாயம் ஃபாயர்பாக்கின் பொருள்முதல்வாதம் பற்றிய விமர்சனம், நான்காவது அத்தியாயத்தில் மார்க்சிய தத்துவமான பொருள்முதல்வாதம் ஆகிவற்றைப் பார்க்கப் போகிறோம். 

முதலில் மூன்றாவது அத்தியாத்துக்குச் செல்வோம். 

இயற்கையைக் கடந்து சமூகம், சமூகக் கருத்துக்கள் ஆகியவற்றுக்கு வந்தவுடன் ஃபாயர்பாகினுடைய கருத்துமுதல்வாதப் பார்வை வெளிப்பட்டு விடுகிறது. குறிப்பாக மதம், அறநெறி ஆகியவற்றைப் பற்றிய பேசும் போது ஃபாயர்பாகின் கருத்துமுதல்வாதம் அம்பலப்பட்டுவிடுகிறது. ஃபாயர்பாக் மதத்தை ஒழிக்க விரும்பவில்லை, அதனை நிறைவு செய்ய விரும்புகிறார். 

மனிதகுலத்தின் காலகட்டங்கள் மதத்தில் ஏற்படுகிற மாற்றங்களின் அடிப்படையில்தான் நடைபெறுவதாக ஃபாயர்காக் கருதினார். ஃபாயர்பாக் கருத்துப்படி, மதம் என்பது மனிதர்களுக்கு இடையே உள்ள உறவாகும். இதயத்தை ஆதாரமாகக் கொண்ட உறவாகும். இந்த உறவை இதுவரை கற்பனையான கடவுளிடம் தேடப்பட்டது. இவர் இருநபர்களின் அன்பில் தேடிக் கொண்டிருக்கிறார். இறுதியாக அவரது மதமானது பாலுணர்வுக் காதலாக உச்ச வடிவமாகக் காணப்படுகிறது. 

ஃபாயர்பாகின் நூலில் இருந்து எங்கெல்ஸ் காட்டும் மேற்கோளை அப்படியே படிக்கிறேன். 

“மதத்தில் ஏற்படும் மாற்றங்கள் மூலமாக மட்டுமே மனிதகுலத்தின் காலகட்டங்கள் வேறுபடுத்திப் பார்க்கப் படுகின்றன. ஒரு வரலாற்று இயக்கம் மனிதர்களின் இதத்தில் வேரூன்யிருக்கிற போதுதான் அது அடித்தளத்தை எட்டுகிறது. இதயம் என்பது மதத்தின் ஒரு வடிவம் அல்ல. எனவே மதம் இதயத்திற்குள்ளும் இருக்க வேண்டும் என்று சொல்லக் கூடாது. இதயம் சமயத்தின் சாரமே.” 

ஃபாயர்பாகின் தத்துவம் மனிதாபமானத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையை விஷயத்தில் அவரது அணுகுமுறை பொருள்முதல்வாதமாக இருந்தது. சமூகம் பற்றிய விஷயத்தில் அவரது பார்வை கருத்துமுதல்வாதமாகக் காணப்படுகிறது. 

இயற்கைக்கு புறநிலையே அடிப்படை என்று கூறியவர், சமூகத்தைப் பற்றி பேசும்போது மனிதனின் இதயத்தை அதாவது மனித மனதை முதன்மைப்படுத்துகிறார். சமூக நிகழ்வுக்கான புறநிலைமைகளை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

      காதல், நட்பு, பரிவு, சுயத்தியாகம் முதலியவற்றை மனிதர்களிடையே உள்ள மனச்சார்புகளை அடிப்படையாகக் கொண்ட பரஸ்பர உறவுகளை மதத்தோடு இணைத்துப் புரிந்து கொண்டுள்ளார். 

      மதம் என்ற சொல்லுக்கு விளக்கமாக, இரண்டு நபர்களிடையே ஏற்படுகிற பிணைப்பு என்று கூறப்படுகிறது. இப்படி சொல்லைக் கொண்டு செய்கின்ற தந்திரமானது கருத்துமுதல்வாதத்தின் கடைசிப் புகலிடமாகும். மேலும் கருத்துமுதல்வாத நினைவுகளுக்கு மிகவும் பிடித்தமான மதம் என்னும் சொல், மொழிவழி விளக்கத்துக்கு இணங்கவே இருநபர்களுக்கு இடையே உள்ள அன்பாக… காதலாக… விளக்கம் கொடுக்கப்படுகிறது. மதமற்ற மனிதனை ஓர் அரக்கப் பிறவியாகவே இத்தகையவர்களால் கருதப்படுகிறது. அதனால் தான் நாத்தியகத்தையும் ஒரு மதமாக அவர்களால் பார்க்கப்படுகிறது. 

இறுதியாக எங்கெல்ஸ், “மதத்தில் ஏற்படும் மாற்றங்கள் மூலமாக மட்டுமே மனிதகுலத்தின் காலகட்டங்கள் வேறுபடுத்திப் பார்க்கப் படுகின்றன.” என்று ஃபாயர்காக் வலியுறுத்துவது தவறாகும் என்கிறார். 

ஃபாயர்பாகின் அன்புவழிபட்ட, புதிய மதத்தைப் போற்றி பேசுகிற, அவரது மிகச் சிறந்த நூற்பகுதிகள் இன்று முற்றிலும் படிக்க முடியாதவை ஆகிவிட்டன. 

ஒழுக்கநெறியை பற்றிய ஃபாயர்பாகின் கருத்தை, ஹெகல் கருத்தோடு ஒப்பிடும் போது ஃபாயர்பாகின் அறிவு வறட்சி வியப்பில் ஆழ்த்துகிறது என்கிறார் எங்கெல்ஸ். 

ஹெகலுடைய ஒழுக்கநெறி அல்லது அறநெறி பற்றிய போதனையானது ஒரு உரிமைப் பற்றிய கோட்பாடாகும். அது சூட்சுமமாமான உரிமையையும், ஒழுக்கநெறியையும், சமூக அறநெறியையும் தழுவியதாகும். ஹெகலுடைய இந்தப் பார்வை கருத்துமுதல்வாத வழிபட்டதாக இருக்கிறது. ஃபாயர்பாகின் விஷயத்தில் இது அப்படியே தலைகீழாக இருக்கிறது. வடிவத்தல் அவர் எதார்த்த வழிப்பட்டவராக இருக்கிறார், அதாவது மனிதனில் இருந்து தொடங்குகிறார், ஆனால் இந்த மனிதன் வாழ்கிற உலகத்தைப் பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை. கருத்துமுதல்வாதத்தில் காணப்படும் அதே சூட்சும மனிதனாகவே இவரது மனிதனும் இருக்கிறான். அதாவது கருத்துமுதல்வாத வழிபட்டதாகவே இந்த மனிதனும் இருக்கிறான். 

அதே போல், நன்மை, தீமை ஆகிய எதிர்நிலை பற்றிய விளக்கத்தில் ஹெகலுடன் ஒப்புநோக்கும்போது ஃபாயர்பாக் ஆழமற்வராக இருக்கிறார். 

ஹெகலைப் பொறுத்தளவில் தீமை என்பது வரலாற்று வளர்ச்சியின் உந்துசக்தி ஆகும். அறநெறியின் பாற்பட்ட தீமையின் வரலாற்றுப் பாத்திரத்தை ஆராய வேண்டும் என்று ஃபாயர்பாக்குக்கு தோன்றவே இல்லை. அதனால் தான் அன்பு வழிபட்ட மனிதாபிமானத்தோடு ஃபாயர்பாக்கின் பார்வை நின்றுவிடுகிறது. 

ஃபாயர்பாக் தம்மளவில் அறநெறி பற்றி விரும்பியதும், கற்பனை செய்ததும் எப்படி இருந்த போதிலும், அவரின் அறநெறி நவீன முதலாளித்துவ சமுதாயத்தின் அமைப்புச் சட்டத்துக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது. 

வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களுக்கு அன்பினால்தான் தீர்வுகொடுக்க முடியும், அன்புதான் அற்புதம் செய்யும் கடவுள் என்று ஃபாயர்பாக் கருதுகிறார். வர்கங்களாக பிளவுபட்டுள்ள சமூகத்தில் எப்படி பொதுப்படையான அன்பை செலுத்த முடியும். ஃபாயர்பாகின் புரட்சித் தன்மையின் கடைசி மிச்சமும் மறைந்து விடுகிறது. இதனை எங்கெல்ஸ் எவ்வாறு கூறியுள்ளார் என்பதை அவர் மொழியிலேயே பார்ப்போம். 

“ஃபாயர்ப்காக்கைப் பொறுத்தவரை அன்புதான் எங்கும், எப்போதும், அற்புதங்கள் செய்யும் கடவுள், நடைமுறை வாழ்க்கையின் துன்பங்கள் அனைத்தையும் நீக்கிக் கொள்வதற்கு அதுதான் உதவித் தீரவேண்டும்.  நேரேதிரான நலன்களையுடைய வர்க்கங்களாகப் பிளிவுபட்டுள்ள ஒரு சமுதாயத்திலே அன்பாம்! இப்படியாக, அவருடைய தத்துவத்திலிருந்து அதன் புரட்சித் தன்மையின் கடைசி எச்சமிச்சமும் மறைந்து விடுகிறது. ஒருவரையொருவர் நேசியுங்கள் – ஆண், பெண் என்று பால் வேறுபாடு பாராமல், பட்டம் பதவிகளைக் கருதாமல் ஒருவரையொருவர் தழுவிக் கொள்ளுங்கள் – உலகளாவிய சமரசப் போதையான அன்பில் திளையுங்கள்!” 

நம் நாட்டில்கூட மார்க்சியமே மிகச் சிறந்த மனிதாபிமானம். மனிநேயத்தின் அடிப்படையில்தான் மார்க்சியம் தோன்றியது என்று விளக்கம் கொடுப்பவர்கள் இருக்கின்றனர். மார்க்சியத்தை அறிந்தவர்கள் இப்படி கூறமாட்டார்கள்.  மார்க்சியத்துக்கு முந்திய தத்துவ மயக்கங்களில் மூழ்கியவர்கள்தான் இப்படி கூறிடுவர். 

ஃபாயர்பாகின் ஒழுக்கநெறிக் கோட்பாடுகள், அனைத்துக் காலங்களுக்கும், அனைத்து மக்களுக்கும், அனைத்து நிலைமைகளுக்கும் பொருந்தும்படியாக கூறப்பட்டுள்ளது. அதனால் தான் அதனை என்றைக்கும் செயற்படுத்த முடியாததாக உள்ளது. அவரின் இந்தக் கோட்பாடு, பழைய போட்பாடுகள் அடைந்த கதியினையே அடைகிறது. அதாவது நடைமுறைப்படுத்த முடியாத அறநெறியாக உள்ளது. 

எதார்த்த உலகில் ஒவ்வொரு வர்க்கத்துக்கும் சொந்தமான அறநெறிதான் இருக்கிறது. ஒரு வர்க்கத்துக்கு அறநெறியாகப்பட்டது எதிர் வர்க்கத்துக்கு எதிரான அறநெறியாக காணப்படுகிறது. அதனால் அனைத்துக் காலத்துக்கும், அனைவருக்கும் பொதுவான அறநெறி என்பது இருக்க முடியாது. அப்படி கூறுகிற பொதுவான அன்புவழிபட்ட அறநெறியானது எதார்த்தத்தில் சாத்தியமான அளவுக்கு ஒருவரை சுரண்டுவதவதற்கு ஆதரவாகத்தான் கொண்டு செல்கிறது. இதனை எங்கெல்ஸ் கூறும் மொழியிலேயே பார்ப்போம். 

“எதார்த்தத்தில் ஒவ்வொரு வர்க்கமும், ஒவ்வொரு தொழிலும்கூட தனக்கே உரிய ஓர் அறநெறியைக் கொண்டுள்ளது. தண்டனைக்குச் சிக்காத வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இதையுங்கூட அது மீறுகின்றது. அனைவரையும் ஒன்றுபடுத்த வேண்டிய அன்பு, போர்களிலும், தகராறுகளிலும், சட்ட வழக்குகளிலும், குடும்பச் சண்டைகளிலும், விவாகரத்துகளிலும், சாத்தியமான அளவுக்கு ஒருவரை ஒருவர் சுரண்டுவதிலும்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.” 

ஃபாயர்பாகிடம் காணப்படும் குறைபாட்டுக்குக் காரணம் அவர் எதார்த்த உலகில் இருந்து ஒதுங்கி இருத்தலே ஆகும் என்கிறார் எங்கெல்ஸ். 

ஃபாயர்பாக் எடுத்து வைக்காத அடியை மார்க்ஸ் தமது “புனிதக் குடும்பம்” என்ற நூலில் வைக்கிறார். ஃபாயர்பாக்கினுடைய புதிய சமயத்தின் உட்கருவாக அமைந்த அருவ மனிதனினுக்கு பதிலாக அந்த இடத்தில் எதார்த்தமான மனிதர்கள் மற்றும் அவர்களின் வரலாற்று வளர்ச்சி பற்றிய விஞ்ஞானத்தை மார்க்ஸ் வைத்தார். இதனை எங்கெல்ஸ் அடுத்த அத்தியாயத்தில் விளக்குகிறார். மூன்றாம் அத்தியாயம் இத்துடன் முடிகிறது. 

இப்போது நான்காம் அத்தியாத்துக்கு வந்துள்ளோம். இது இந்த நூலின் இறுதி அத்தியாயம் ஆகும். இந்த அத்தியாயத்தில் மார்க்சிய தத்துவம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது. 

ஃபாயர்பாக் ஒருவர்தான் தத்துவவாதி என்ற வகையிலே குறிப்பிடத் தக்கவராய் இருந்தார். தனிப்பட்ட அனைத்து விஞ்ஞானங்களுக்கும் மேலே இருப்பதாக, அனைத்து விஞ்ஞானங்களையும் இணைக்கும் விஞ்ஞானமாக இருக்கிறது என்று சொல்லப்படும் தத்துவம், ஃபாயாபாகுக்கு கடக்க முடியாத தடைச்சுவராகவும் மீற முடியாத புனித விஷயமாகவும் இருந்தது. அதுமட்டுமல்ல, தத்துவவாதி என்ற வகையில்கூட அவர் பாதி வழியிலேயே நின்று விட்டார். கீழே பொருள்முதல்வாதியாகவும் மேலே கருத்துமுதல்வாதியாகவும் இருந்தார். அன்பின் வழிப்பட்ட வெளிப்பகட்டான மதத்துக்கும், அற்பமான, மலட்டுத்தன அறநெறிக்கும் அப்பால், தம்மளவில் உருப்படியாக எதையும் அவர் சாதிக்கவில்லை. 

இந்நிலையில், விமர்சனம் மூலமாக ஹெகலை வெற்றி கொள்ளும் தகுதியற்றவராக உள்ள ஃபாயர்பாக், ஹெகலை பயனற்றவர் என்று சொல்லி வெறுமனே ஒதுக்கித் தள்ளிவிடுகிறார். 

ஆனால் எங்கெல்ஸ் என்ன கூறுகிறார் என்றால், ஹெகலியக் கருத்துப்போக்கின் சிதைவிலிருந்து புதிய போக்கு ஒன்று வளர்ச்சி பெற்றது, அதுவே பலன் கொடுத்தது. இந்த போக்கு மார்க்ஸ் பெயரோடு தொடர்புடையது என்று கூறியுள்ளார். அதுதான் மார்க்சியம். அதாவது ஹெகலினுடைய கருத்துப் போக்கின் சிதையில் இருந்துதான் மார்க்சியம் தோன்றியது. 

இந்த இடத்தில் எங்கெல்ஸ் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். மார்க்சிய அடைப்படைகளை அமைத்துக் கொடுத்ததில் மார்க்சின் பங்களிப்போடு எங்கெல்சின் பங்களிப்பும் இருக்கிறது. ஆனால் அது மார்க்சியம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இது ஏன் என்பதற்கு எங்கெல்ஸ் இங்கே பதிலளித்துள்ளார். 

எங்கெல்ஸ் தமது பங்களிப்பை மறுக்கவில்லை, ஆனால் மார்க்சியத்தின் முக்கியமான பெரும் பகுதியை இறுதியாக வரையறுத்தது மார்க்சையே சாரும். மார்க்ஸ் சாதித்ததை தன்னால் சாதித்திருக்க முடியாது என்கிறார் எங்கெல்ஸ். மார்க்ஸ் ஒரு மேதை (genius), தாங்கள் அனைவரும் சிறந்த திறமைசாலிகள் (Best Talented). மார்க்ஸ் இல்லாமல் இந்தக் கோட்பாடு இன்றைய நிலையை அடைந்திருக்காது. அதனால் தான் இந்த கோட்பாடு மார்க்சியம் என்று மார்க்ஸ் பெயரை தாங்கி இருக்கிறது என்று எங்கெல்ஸ் விளக்கம் கொடுத்துள்ளார். 

      இதனைப் புரிந்து கொள்ளாமல் பலர் மார்க்சையும் எங்கெல்சையும் பிரித்து விளக்கம் கொடுக்கின்றனர். அதே போல இளம் மார்க்ஸ் முது மார்க்ஸ் என்று இரண்டாகப் பிரித்து மார்க்சியத்தின் அடிப்படையை திரித்துரைப்பர். மார்க்சியம் அறிந்தவரிடமும், மார்க்சியத்தைப் படித்தவரிடமும் இந்த திரித்துரைக்கும் வேலை எடுபடாது. 

மார்க்சிய அடிப்படைப் புரிதலுக்கு மார்க்ஸ் எழுதிய அனைத்து நூலையும் படிக்க வேண்டியத் தேவையில்லை. இன்று ஆங்கிலத்தில் 50 தொகுதிகள் இருக்கிறது. தமிழில் 18 தொகுதிகள் இருக்கின்றது. 

இன்று நாம் காண்கின்ற ஆங்கில நூல்களில் சிறு பகுதியைத் தான் லெனின் கண்டிருப்பார்.  அன்று கிடைத்த அனைத்து நூலையும் லெனின் படித்திருப்பார என்று தெரியவில்லை. ஆனால் மார்க்சிய அடிப்படைகளை சிறப்பாக லெனின் புரிந்து கொண்டுள்ளார். 

அடிப்படைப் புரிதலுக்குத் தேவைப்படுகிற நூல்களைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். 

      அந்த வகையில் இந்த “லுத்விக் ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்” என்ற நூல் மிகவும் முக்கியமானதாகும். மார்க்சியத் தத்துவம் தோன்றியது பற்றி இந்த நூல் சிறப்பாக விளக்குகிறது. 

போன வகுப்பில் டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில் கூறியதைப் பார்த்தோம். அதாவது பழைய பொருள்முதல்வாதம் பழைய கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது, தற்போது புதிய இயற்கை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் மூலமும், தத்துவ வளர்ச்சியின் மூலமும் கருத்துமுதல்வாதம் இன்றைய நவீன பொருள்முதல்வாதத்தால் நிலை மறுக்கப்படுகிறது. 

மீண்டும் பொருள்முதல்வாதம் நிலைபெறுவதைப் பற்றியே இந்த நான்காவது அத்தியாயம் விளக்குகிறது. 

      எதார்த்த உலகம் எப்படி காட்சி தருகிறதோ அப்படியே அதைப் புரிந்து கொள்கிற பொருள்முதல்வாதக் கருத்து மேலோங்கி வந்தது. ஹெகல் வெறுமே ஒதுக்கித் தள்ளப்படவில்லை, அதற்கு மாறாக. அவருடைய தத்துவத்தில் காணப்பட்ட இயக்கவில் வழிமுறை தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. ஆனால் ஹெகலிய கருத்துமுதல்வாத வழிபட்ட இயக்கவியலை அல்ல, பொருள்முதல்வாத வழியில் திருத்தப்பட்ட வடிவிலான இயக்கவியல் அடிப்படையில் பொருள்முதல்வாதம் நிறுவப்பட்டது. 

      தத்துவத்துறையில் இயக்க மறுப்பியல் போக்குக்கு இறுதிக் காலம் வந்துவிட்டது. இயக்கவியல் மீண்டும் வரலாற்றில் இடம்பிடித்தது. தொடக்க கால கிரேக்க தத்துவத்தில் இயக்கவியல் என்கிற தர்க்கவில் கையாளப்பட்டது. பின்பு அது கைவிடப்பட்டது. இப்போது இயக்கவியல் மீண்டும் நடைமுறைக்கு வந்தது. 

இந்தக் காலத்தில் இயற்கை விஞ்ஞானம் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்தது. அதன் மூலம் இயற்கையினுடைய நிகழ்வுப் போக்குகளின் பரஸ்பர தொடர்பு பற்றிய அறிவு எட்டுக்கால் பாய்ச்சலில முன்னேற்றம் கண்டது என்கிறார் எங்கெல்ஸ். 

அதில் மூன்று கண்டுபிடிப்புகள் முக்கியமானது ஆகும்.  1) உயிரணு 2) ஆற்றலின் உருமாற்றம், 3) பரிணாமக் கோட்பாடு. 

உயிரணுக் கோட்பாட்டின் மூலம் அனைத்து உயர்நிலை உயிரினங்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும், தனியொரு பொதுவான விதிப்படி நடக்கிறது. ஆற்றலின் உருமாற்றம் என்கிற கோட்பாடானது, ஆற்றலின் வடிவங்கள் வரையறுக்கப்பட்ட அளவு விகிதங்களில் ஒன்று மற்றொன்றாக மாறிச் செல்கின்றது. அதனால் குறிப்பிட்ட அளவிலான ஆற்றலின் ஒரு வடிவம் மறைகின்ற இடத்தில், குறிப்பிட்ட அதே அளவிலான ஆற்றலின் மற்றொரு வடிவம் தோன்றுகிறது. அதாவது அற்றல் அழிக்கப்படுவதில்லை உருமாற்றம் பெறுகிறது. 

பரிணாமக் கோட்பாடு என்ன கூறுகிறது என்றால், உயிரினங்களின் முழுத் தொகுதியானது, ஆதியில் ஓர் உயிரணுவாக இருந்த, ஒரு சில மூலக்கருக்களில் இருந்து, பிரிணாம வளர்ச்சி பெற்ற ஒரு நீண்ட நிகழ்வுப் போக்கின் விளைவுதான் என்பது அறியப்பட்டது. அதாவது அனைத்து உயினங்களும் பரிணமா வளர்ச்சியினால் இன்றைய நிலையை அடைந்துள்ளது. 

இந்த மூன்றின் மூலம் இயற்கையை இயற்கையாக அறிந்து கொள்ள உதவியது. இயற்கையைப் புரிந்து கொள்வதற்கு இனி அயலான சக்தி எதுவும் தேவையில்லை என்பதை இந்த மூன்று இயற்கை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உணர்த்தியது. கருத்துமுதல்வாத விளக்கம் நிலை மறுக்கப்பட்டு பொருள்முதல்வாத விளக்கம் நிலைபெற்றது. 

இயற்கைத் துறையில் நிகழ்வது போன்று வரலாற்றுத் துறையிலும் எண்ணிறந்த தனித்தனி சித்தங்கள், தனித்தனி செயல்களின் மோதல்கள் சமூகத்திலும் நிலவுகிறது. மனிதர்களே தமது சொந்த வரலாற்றைப் படைக்கிறார்கள். ஏனென்றால் ஒவ்வொருவரும் உணர்பு பூர்வமாகவே தமது குறிக்கோளை அமைக்கின்றனர். இந்த குறிக்கோள் புறநிலைக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்கின்றனர். 

பழைய பொருள்முதல்வாதமானது வரலாற்றுத் துறையில் கருத்துமுதல்வாதக் கணோட்டத்தையே கொண்டிருந்தது.

 பழைய பொருள்முதல்வாதமானது வரலாற்றில் செயல்படும் மனிதர்களை பண்புடையோர், பண்பற்றோர் என்று பிரித்தது. சமூகத்தில் பண்புடையோர் வஞ்சிக்கப்படுவதையும் பண்பற்றோர் வெற்றி பெறுவதையும் காண்டது. ஆகவே வரலாற்றைக் கற்பதால் எந்தப் பயனும் இல்லை என்ற முடிவுக்கு பழைய பொருள்முதல்வாதம் வந்தது. 

மனிதர்களின் குறிக்கோள் வகைப்பட்ட உந்து சக்திகளின் பின்னே இருப்பது என்ன? இந்த உந்து சக்திகளை உந்துவது எது? என்று ஆராய்ச்சி செய்வதற்கு பதிலாக குறிக்கோள் வகைப்பட்ட உந்து சக்தியையே இறுதிக் காரணமாக பழைய பொருள்முதல்வாதம் கருதியது. அதாவது குறிக்கோளையே உந்து சக்தியாகப் பார்த்தது. 

மனிதர்களிடைய குறிக்கோள்கள் தோன்றுவதற்கக்கு காரணம் வர்க்கப் போராட்டமே ஆகும். வேறுபட்ட வர்க்கங்களுடைய           நலன்களின் மோதலில் போதுதான் குறிக்கோள்கள் உருவாகின்றன. வேறுபட்ட வர்க்களின் தோற்றமும் வளர்ச்சியும் முற்றிலும் பொருளாதார வகைப்பட்ட காரணங்களில் காணப்படுகின்றது. 

முதலாளித்து வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள போராட்டத்திலும் பொருளாதார நலன்களே அடிப்படையாக இருக்கிறது. இந்த பொருளாதார நலன்களே,    பொருளாதார நிலைமைகள் என்றும் உற்பத்தி முறை என்றும் அழைக்கப்படுகிறது. 

ஒர் உற்பத்தி முறையில் இருந்து மற்றொரு உற்பத்தி முறைக்கு மாறுகிறது என்றால் அதற்கு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியே காரணமாகும். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது குறிப்பிட்ட கட்டத்தை எட்டியவுடன், பழைய உற்பத்தி முறையோடு மோதுகின்றன. அந்த மோதலின் விளைவாக பழைய உற்பத்தி முறை தூக்கி எறியப்பட்டு புதிய உற்பத்தி முறை உருவாகிறது. 

நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் மேம்பட்ட நிலையில் தோன்றிய புதிய உற்பத்தி சக்திகள் அந்த உற்பத்தி முறையோடு பொருந்தாததாகி, நிலப்பிரபுத்துவம் தூக்கி எறியப்பட்டு முதலாளித்துவ உற்பத்தி முறை தோன்றியது. 

பழைய உற்பத்தி முறைக்கும் புதிய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் இடையேயான முரணே, கலகமாக… புரட்சியாக மாறி பழைய உற்பத்தி முறை தூக்கி எறியப்படுகிறது. 

இந்த முரணே வர்க்கத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் ஏற்படுத்துகிறது. ஒரு வர்க்கப் போராட்டம் எப்படி பொருளாதார உற்பத்தி முறையையே மாற்றுகிறது என்பது பற்றி எங்கெல்ஸ் கூறியதை அவரது மொழியிலேயே பார்ப்போம். 

“ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமாகும். விடுதலைக்காக நடக்கும் அனைத்து வர்க்கப் போராட்டங்களும், அவசியமாகவே அரசியல் வடிவம் பெற்றிருந்த போதிலும், இறுதியில் இப்போராட்டங்கள் அனைத்தும் பொருளாதார விடுதலையை நோக்கமாகக் கொண்டவை என்பது குறைந்தபட்சம் நவீன கால வரலாறு நிரூபிக்கிறது.” 

தனிநபரின் விருப்பமாக இருந்தாலும்சரி, அரசின் விருப்பமாக இருந்தாலும்சரி அவை அனைத்துக்குமான உள்ளடக்கம் எங்கிருக்கிருந்து பெறப்படுகிறது? அதனை நிர்ணயிப்பது எது? 

இறுதியாகப் பார்க்கும் போது உற்பத்திச் சக்திகள் மற்றும் பரிவர்த்தனை உறவுகளின் வளாச்சியே அதனை நிர்ணயிக்கிறது. 

உற்பத்தி முறையே அடித்தளமாகும் அதற்கு ஏற்பவே தத்துவம், மதம், அரசு, சட்டம், அறநெறி, பண்பாடு, கலை போன்ற மேற்கட்டமைப்பு தோன்றுகிறது. இதுவே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையாகும். 

பொருளாதார உறவுகள் அரசையும் அரசாங்க சட்ட முறையையும் நிர்ணயிக்கின்றன என்றால், அதே போன்று தனிநபர் பற்றிய சட்டத்தையும் அவை நிர்ணயிக்கின்றன. பார்வைக்கு தொடர்பு இல்லாமல் தனித்து உருவானதாகத் தோன்றுகிறது, ஆனால் அனைத்தும் பொருளாதார நலன்களின் அடிப்படையில் தோன்றியது என்பதை ஆராய்ந்து பார்த்தால் அறிந்து கொள்ள முடிகிறது. 

மதமும் அப்படியே, தொன்மையான மதம் தோன்றுவதற்கு உரிய நிலைமைகள் மாறிபோகலாம், ஆனால் அந்த மதமானது புதிய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப தன்னை வளர்த்துக் கொள்கிறது. அப்படி இல்லை என்றால் மதங்கள் அத்துடன் மறைந்துவிடும். 

மதங்களும் கடவுளும் சர்வ சக்தி பொருந்தியதாகவும் அனைத்து உலகத்துக்கு அதிபதியாகவும் கூறப்படலாம், ஆனால் குறிப்பிட்ட பிரதேசத்தில் தோன்றிய கடவுள்கள் தேசியக் கடவுள்காக இருந்தனர். உண்மையில் அவற்றின் ஆளுமை நாட்டின் எல்லைக்கு அப்பால் வேறெங்கும் அதிகாரம் செலுத்தப்படவில்லை. வேறு நாட்டில் உள்ள கடவுள்களே அங்கே ஆதிக்கம் செலுத்தின. 

இதுமட்டுமல்லாது  நாடு இருந்த வரையில் மட்டுமே கற்பனையான அக்கடவுள்கள் தொடர்ந்து இருந்துவர முடிந்தது. நாட்டின் வீழ்ச்சியுடன் அவையும் வீழ்ந்தன. இதுவே வரலாற்று உண்மை ஆகும். 

மார்க்சியம் ஒரு வறட்டுவாதமல்ல, அது வெறும் பொருளாதார நிலைமைகளை மட்டும் முன்வைக்கவில்லை, இறுதியில் பொருளாதாரக் காரணங்கள் நிர்ணயமான பங்கை வகிக்கிறது என்றுதான் கூறுகிறது. பொருளாதாரக் காரணங்களோடு பலவற்றையும் சமூகம் சந்தித்துதான் வருகிறது. அதில் முக்கியமானது மரபு வழிப்பட்டப் போக்காகும். மரபு ஒரு பழைய சக்தியாக இருப்பது போலவே மதம் தோன்றியவுடன் அதனோடு மரபு வழிபட்ட கருத்துக்களை கொண்டுள்ளது. ஆனால் நாளடைவில் பொருளாதார உறவுகளால் அவை நிலைநிறுத்தப்படுகிறது. 

இயற்கையிலும் வரலாற்றிலும் செம்மை ஜெர்மன் தத்துவம் அதாவது ஜெர்மன் கருத்துமுதல்வாதம் முடிவுக்கு வருகிறது. அதில் எஞ்சியுள்ளது இயக்கவியல் விதி மட்டுமே. 

சிந்தனையின் நிகழ்வுக் போக்கினது விதிகள் பற்றிய போதனையே இயக்கவியல் ஆகும். இங்கே எங்கெல்ஸ் சிந்தனையை முன்வைத்து இயக்கவியலை விளக்கியுள்ளார். 

எங்கெல்ஸ் எழுதிய இந்த நூலின் தலைப்பிலும் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் நம் நாட்டிலும் இருக்கின்றனர். “லுத்விக் ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்” என்ற நூலின் தலைப்பில் உள்ள “முடிவு” என்ற சொலுக்கு இணையாக ஜெர்மனி மொழியில் பல சொற்கள் இருக்கின்றன, முடிவு என்ற சொல் தவறானது என்று அவர்கள் கூறுகின்றனர். ஏன் என்றால் தத்துவத்துக்கு முடிவு கிடையாது. மார்க்சியம் ஒரு முடிவான தத்துவம் என்று தவறாகப் புரிந்து கொள்வதற்கு இந்த தலைப்பு ஒரு காரணமாகிறது என்று கூறப்படுகிறது. உண்மையில் இந்த முடிவு என்பது செம்மை ஜெர்மன் தத்துவமான -கருத்துமுதல்வாத தத்துவத்தின் முடிவில் இருந்து மார்க்சியம் தோன்றியது என்பதையே இந்த நூல் கூறியுள்ளது. இங்கே “முடிவு” என்பது கருத்துமுதல்வாதம் நிலைமறுக்கப்பட்டதையே குறிக்கப்படுகிறது. 

 நூலைப் படித்துப் புரிந்து கொள்ளாமலேயே இது போன்ற தவறான கருத்துக்களை பரப்புபவர்கள் உலகம் முழுதும் இருக்கின்றனர். முடிவு என்ற சொல் எதனையும் முடித்துவைக்கவில்லை. 

மார்க்சியம் மார்க்சோடு முடிந்து போயிருந்தால் லெனினியம் தோன்றி இருக்காது. 

இந்த நூலின் இறுதிப் பகுதி மிகவும் முக்கியமானதாகும். ஜெர்மன் கருத்துமுதல்வாதத்தின் சிதைவில் இருந்து தோன்றிய மார்க்சியக் கோட்பாடானது ஜெர்மானிய தொழிலாளி வர்க்கத்துக்கு முக்கியத்துவம் தந்து, தன்னுடைய கவனத்தை அதன் பக்கமே திருப்பியது பற்றி இங்கே எங்கெல்ஸ் கூறியுள்ளார். 

இந்த வரலாற்று சிறப்புமிக்க போக்கை எங்கெல்ஸ் கூறிய மொழியிலேயே படித்துப் பார்ப்போம். 

“கோட்பாட்டின்பாலுள்ள ஜெர்மானிய நாட்டம் தொழிலாளி வர்க்கத்திடைம்தான் பாதிப்பின்றி இருந்து வருகிறது. இவர்களிடையே இதை ஒழித்துக் கட்ட முடியாது. இவர்கள் பதவி வேட்டையிலும், இலாபம் ஈட்டுவதிலும், மேலிடத்தின் அருள்மிக்க ஆதரவைப் பெறுவதிலும் அக்கறை ஏதும் இல்லாதவர்கள். மாறாக, விஞ்ஞானம் எவ்வளவு அதிகமாகக் கொடூரத்துடனும் அக்கறையின்றியும் செயல்படத் தொடங்குகிறதோ, அவ்வளவு அதிகமாகத் தொழிலாளர்களின் நலன்களுக்கும் அபிலாசைகளுக்கும் இசைவாக இருக்கிறது. [ஜெர்மனியில் காணப்படும்] புதிய எண்ணப்போக்கு, சமுதாயத்தின் மொத்த வரலாற்றையும் புரிந்து கொள்வதற்கான திறவுகோல், உழைப்பின் வளர்ச்சி பற்றிய வரலாற்றிலே உள்ளது என்பதைக் கண்டு கொள்கிறது. புதிய போக்கு, தொடக்கத்திலிருந்தே தொழிலாளி வர்க்கத்துக்கு முக்கியத்துவம் தந்து, தன்னுடைய கவனத்தை அதன் பக்கமே திருப்பியது. அதிகாரபூர்வமான விஞ்ஞானத்திடம் கேட்க முடியாத, எதிர்பார்க்க முடியாத ஆதரவைத் தொழிலாளி வர்க்கம் இந்தப் புதிய எண்ணப்போக்கிடம் கண்டது. ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கம் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் வாரிசு ஆகும்.” 

      இத்துடன் இந்த வகுப்பு நிறைவு பெறுகிறது.

 *************************************************