Friday 19 January 2018

02, ஹூனான் விவசாயின் இயக்கம் பற்றி ஓர் அறிக்கை (மா சே துங்) - கே.என்.சிவராமன்

(சிவந்த மண்- மார்க்சிய கோட்பாடுகளுடன் ரஷ்ய – சீன புரட்சியின் வரலாறு- என்ற நூலில் இருந்து)

“விவசாய சங்கம் குற்றம் இழைத்துவிட்டதாக கூறுபவர்களிடம் மாவோ சொல்கிறார். உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக் குடியினர், அராஜக நிலப்பிரபுக்களுக்கு எதிரான உழைக்கும் மக்க ளின் போர் இது எவ்விதத்திலும் இது குறைகூறத்தக்கதல்ல. என்று. தான் பயணம் செய்த போது விவசாய சங்கத்தின் சாதனைகளை பட்டியலிடுகிறார்.

மாபெரும் 14 சாதனைகளை கூறும் மாவோ இப்புரட்சி சரியான திசை வழியில் செல்வதை தெளிவாக அறிகிறார். மக்களை அமைப் பாக்கியதே மாபெரும் சாதனை ஹுனான் மத்திய மாவட்டத்தில் எல்லா விவசாயிகளும், தெற்கு ஹுனானில் பாதி விவசாயிகளும், மேற்கு ஹுனானில் இப்போது அமைப்பாக்கும் நிலையிலும் சங்கத் தில் இணைந்திருக்கின்றனர்.

ஆனால், சில மாவட்டங்களை அமைப்பு இன்னும் சேரவில்லை. நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினைத் தாக்கும் விவசாய சங்கம் தன் பலத்துக்கேற்றவாறு செயல்பாட்டில் இறங்குகிறது. அரசியல்ரீதியாக தாக்க கணக்குகளை சரிபார்ப்பது

அதாவது, பொதுப்பணத்தினை கையாடல் செய்த தீய மேட்டுக் குடிக்கு எதிரானநடவடிக்கை - பணத்தினை மீட்பதோடு அந்தஸ்தினை அடித்து வீழ்த்தவும் பயன்படுகிறது. ஒழுங்கினங்களுக்கு எதிராக நன்கொடை வசூலிக்கப் படுகிறது. அத்துடன் அவன் தன் மானம் மரியாதையை முற்றிலும் இழக்கவும் வைக்கிறது சங்கம். நன்கொடைகள் மூலம் தண்டனை வழங்கப்படுகிறது.

உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மிகவும் முக்கியமானவை. சியாங்டனில் 15 ஆயிரம் விவசாயிகள் தியமேட்டுக்குடியினரின் வீட்டில் நுழைந்துதுவம்சம் செய்து 4நாட்கள் தங்கி தின்று தீர்க்கின்றனர். பின்னர் வழக்கமான அபராதம் வேறு. உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர்,அராஜகநிலப் பிரபுக்கள் ஆகியோரை தெருவில் காகிதத்தொப்பி அணிந்து இழுத்து வரும் இந்நிகழ்வு மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

முன்னர் நிலப்பிரபுவின் ஆணைக்கிணங்க சிறையில் தள்ளிய நீதிபதி - இப்போது விவசாய சங்கம் காலையில் சொன்னால் மதியம் பிடி ஆணை பிறப்பிக்கப்படுகிறார். மிக மோசமான குற்றங்கள் புரிந்த உள்ளூர் கொடுங்கோலர் தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப் பிரபுக்கள் தன் வசதிக்கேற்றவாறு தப்பி ஓடுகின்றனர்.

சிலர் அரசால் திருப்பி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மிக மிக மோசமான கொடுங்கோலர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான குறிப்புக்களும் அவன் இழைத்த குற்றங்களும் என அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான விவசாயிகளை வறுமையால் கொன்றவன், பிச்சைக்காரர்களை கொன்று ஆரம்பிக்கிறேன்" என சொன்ன வன் என முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப் பட்டிருக்கிறது. ஹனான் மாகாணத்தில் விவசாய சங்கத்தின் அதிகாரத்தின் கீழுள்ள பகுதிகளில் எல்லாம் எங்குமே தானிய பதுக்கலோ, வெளியே அனுப்புவதோ, விலையேற்றம் செய்வதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. குத்தகையை காரணமின்றி அடிக்கடி உயர்த்திகொள்ளை அடித்தல் தடைசெய்யப்பட்டிருக்கிறது.

டு எனப்படும் மாவட்டமும் டுவான் எனப்படும் மாவட்டநிர்வாகமும் இப்போது அமைதியாய் ஒதுங்கியிருப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றாகிவிட்டது.

மக்களை சித்திரவதை செய்யும் போலீசு இப்போது ஒதுங் கிச் செல்கிறது. நிலப்பிரபுக்களின் ஆயுதப்படையை தூக்கியெ றிந்து விவசாயிகள் தங்களின் படைகளை நிறுவியிருக்கிறார்கள் சியாங் சியாங்கில் ஒரு லட்சம் ஈட்டிகளும், மற்ற மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஈட்டிகளும் இருக்கின்றன.

ஈட்டியை கண்டு உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக் குடியினர், அராஜக நிலப் பிரபுக்கள் தான் பயம்கொள்ள வேண்டும். புரட்சியாளர்கள் அல்ல.
சீனாவில் மதிக்கும் எந்த ஒரு சாதாரண மனிதனும் அரசியல் ஆதிக்கம்(மாகாண அமைப்புமுறை,குல ஆதிக்கம், கடவுளாதிக்கம் என 3 வகையான ஆதிக்கத்தின் கீழ்தானிருக்கின்றனர். ஆனால், பெண்கள் இந்த மூன்றையும் சேர்த்து கணவன் ஆதிக்கத்திலும் உழல்கின்றனர்.

நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான இப்போராட்டம் நால்வகை ஆதிக்கத்தையும் தகர்க்கிறது. பெண்களுக்கு சம உரிமை என சுதந்தி ரம், ஜனநாயகம், சமத்துவம் என அனைத்தும் பரவலாக்கப்படுகிறது. இந்தப்புரட்சி மாபெரும் கல்வி அறிவினை மக்களுக்கு கொடுத் திருக்கிறது. அன்னியப்பாணி கல்வியினை வெறுத்த மக்கள் சீனப் பாணிகல்விமுறையை ஆவலோடுகற்கிறார்கள். அரசியல் கல்வியில் இரு குழந்தைகள் விளையாடும் போது கூட ஏகாதிபத்தியம் ஒழிக’ என முழக்கமிடுவதன் மூலம் மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ள அரசியலை அறியமுடிகிறது, தீய பழக்கங்களான சூதாட்டம், ஆபாச நடனம், அபின் புகைத்தல், சாராயம் காய்ச்சுதல் தடைசெய்யப்பட்டு ஒழிக்கப்பட்டுவிட்டது. எருதுகள் கொல்வதற்குதடையும்,கோழிகள், வாத்துகள், பன்றிகள், வளர்க்க கடும் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருக் கிறது. கொள்ளையடித்தல் ஒழிக்கப்பட்டு, கொள்ளையர்கள் விரட்டி யடிக்கப்பட்டுள்ளனர். மேலும் மிக அதிகமான நன்கொடைகூட தடை செய்யப்பட்டிருப்பது என்பது பணக்கார விவசாயிகள் மத்தியில் கூட நல்ல பெயரை கொடுத்திருக்கிறது. கடனுக்காக கூட்டுறவு இயக்கம், தானியத்துக்கான கூட்டுறவு என பலவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பல்லாண்டுகளாக போடப்படாத சாலை, துர்வாரப்படாத குளங்கள் என அனைத்தும் நான்கு மாதங்களில் சீர்செய்யப்பட்டுள்ளன... என்றெல்லாம்பட்டியலிட்டு இதுமக்களின் போராட்டமே.உழைக் கும் விவசாயிகளின் புரட்சியே என ஆணித்தரமாக நிறுவுகிறார் தோழர் மாசேதுங். இதை ஆதரிக்க வேண்டியது நம் கடமை என்றும் அப்போதிருந்த வலது தலைமை புரட்சியை புறக்கணித்தது தவறு என்பதையும் தெளிவிக்கிறார்.

புத்தகம் முடிந்தவுடன் அவரது வார்த்தைகள் ஆழமாகப் பதிகின்றன.

ஒரு புரட்சி என்பது மாலைநேர விருந்தோ, ஒரு கட்டுரை எழுதுவதோ ஒவியம் தீட்டுவதோ, பூதையல் வேலைப்பாடோ அல்ல. ஒரு புரட்சி நிதானமுள்ளதாகவும் பொறுமை, கருணை, பெருந் தன்மையுள்ளதாகவும் இருக்கமுடியாது. புரட்சி என்பது ஒருவர்க்கம் இன்னொருவர்க்கத்தினை தூக்கியெறிவதாகும். இது ஒருபலாத்கார நடவடிக்கை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருக்கும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை வீழ்த்த, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பலத்தை பயன்படுத்தாமல் சாத்தியமில்லை.

உயிர்ப்புமிக்க எழுச்சிமட்டுமே லட்சக்கணக்கான விவசாயிகளை தட்டி எழுப்பி பலம் வாய்ந்த சக்தியாக உருவாக்கும்!”

01, ஹூனான் விவசாயின் இயக்கம் பற்றி ஓர் அறிக்கை (மா சே துங்) - கே.என்.சிவராமன்

(சிவந்த மண்- மார்க்சிய கோட்பாடுகளுடன் ரஷ்ய – சீன புரட்சியின் வரலாறு- என்ற நூலில் இருந்து)

“சீனாவின் ஹீனான் மாகாணத்தில் 1927ம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சியைக் குறித்தும் –

அப்போது இருந்த தவறான புரிதல்கள் குறித்தும், சீன கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த வலதுசாரி பிரிவான சென் டு ஷி தலைமையிலானவர்கள் மேற்கொண்ட விவசாய இயக்கத்துக்கு எதிரான செயல்பாடுகள் குறித்தும், தோழர் மாசேதுங் இந்த அறிக்கையில் தெளிவாக விளக்குகிறார்.

கோமிண்டாங் என முதலாளிகளின் ஜனநாயகக் கட்சியை திருப்திப்படுத்த விவசாய வர்க்கத்தை கைவிட்டு தொழிலாளி வர்க்கத்தை தனி மைப்படுத்தியதை அம்பலப்படுத்தி கண்டிக்கிறார். இந்த விவசாயிகள் இயக்கத்தினைப் பற்றி மேட்டுக்குடியினரும், செல்வந்தர்களும் ஏன் கட்சியிலிருந்த வலது பிரிவினரும் பேசியதற்கு மாறாக தன்னுடைய நேரடி பயணத்தின் விளைவாக கண்டதை அறிக்கையாக எழுதி கட்சியில் சமர்பித்திருக்கிறார். அதுவே ஹூனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வறிக்கை.

1927ம் ஆண்டு ஹூனானில் வளர்ந்த விவசாய இயக்கத்தினை இரண்டு காலகட்டமாக பிரிக்கலாம்.

முதல் காலகட்டம் 1926 ஜனவரிமுதல் செப்டம்பர் வரையிலானது. அக்கட்டம் அமைப்பைக் கட்டும் காலகட்டம், அதில் ஜனவரி முதல் ஜூன் வரை தலைமறைவாக செயல்பட்டது. புரட்சிகரராணுவம் சாவோஹெங் டியை (யுத்த பிரபு) விரட்டிய காலமே வெளிப்படையான காலம், அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரை.

முதல் காலக்கட்டத்தில் 3 முதல் 4 லட்சம் வரைதான் உறுப் பினர்கள் இருந்தார்கள் அமைப்பின் நேரடி தலைமையின் கீழிருந்த மக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டவில்லை.

ஆனால், இரண்டாவது காலகட்டமான 1926 அக்டோபர் முதல் 1927 ஜனவரி வரை சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. அதன் நேரடி தலைமையின் கீழிருந்த மக்களின் எண்ணிக்கையோ கோடிக்கும் அதிகமானது விவசாயிகள் தங்களின் பலத்தை சார்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். நான்கு மாதங்களுக்குள்ளாகவே ஒரு புரட்சியைத் தோற்றுவித்தனர். ஈடு இணையில்லா சாதனை இது.

விவசாயிகளின் முக்கியத் தாக்குதல் இலக்காக இருந்தவை உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள். ஆனால், நிலபிரபுக்களை வீழ்த்துகிற போக்கில் வம்சா வரிக் கோட்பாடு, ஊழல் அமைப்புக்கள் மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராக தங்கள் போராட்டத்தை கட்டியமைத்தனர்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலப்பிரபுக்களின் வாரிசாய், தகுதியாய், வளர்ந்த சலுகைகள் தூள்தூளாக்கப்பட்டது. நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை பறித்து அந்த இடத்தில் விவசாய சங்கம் அமர்கிறது.

இதுவரை மக்களை ஒடுக்கியே வந்த அதிகாரம் - இப்போது ஒடுக்கப்பட்டவர்களால் ஒடுக்கியவர்களை அடக்கப் போகிறது. மாபெரும் முழக்கம் உதயமாகிறது.அதுதான் அனைத்து அதிகாரமும் விவசாய சங்கங்களுக்கே" இது நடைமுறையிலும் சாத்தியமாக்கப்படுகிறது. உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக் குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோர் பேசுவதற்கான எல்லா உரிமையும் மறுக்கப் படுகிறது. பணத்தைக் கொடுத்து சங்கத்தில் சேர முயற் சிக்கும் நிலப்பிரபுக்களை நோக்கி, து. யாருக்கு வேண்டும் உன் எச்சில் காசு. என்ற வார்த்தைகள் தெறித்து விழுகின்றன.

நான்கு மாதங்களுக்குமுன்மந்தையாக இருந்த-அதாவது அப்படி அழைக்கப்பட்ட - சங்கம்தான் இப்போது மிக மிக மதிப்புக்குரியது. நகரத்துக்கு தப்பிச் சென்ற உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர்,அராஜகநிலப்பிரபுக்கள் ஆகியோர் உச்சரிக்கும் இது பயங்கரமானது” என்ற சொல், முதலாளித்துவாதிகளை மட்டுமல்ல. புரட்சிகர எண்ணம் கொண்டோரையும் பிடித்தாட்டியிருக்கிறது.

இதற்கு பதில் சொல்கிறார் மாவோ, எப்படி தெரியுமா? இது அருமையானது என்று.” மக்கள் கிளர்ந்து எழுந்து நிலப் பிரபுக்களுக்கு எதிராக போராடும் போதும், திருப்பித் தாக்கும் போதும், பயங்கரமானது என்ற வார்த்தைகள் மக்களை பாய்ந்து கடித்துக் குதறுகிறது. இதே போலத்தான் சங்கம் தேவைதான். ஆனால், அத்து மீறுகிறார்கள். என்ற போர்வையும். அத்துமீறிய உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர். அராஜக நிலப்பிரபுக்களுக்கு எதிராக கிளம்பாத வார்த்தை மக்களுக்கு எதிராக கிளம்புகிறது.

யாரைகீழ் மக்கள் எனபணக்கார விவசாயிகள் இகழ்ந்தார்களோஅவர்கள் இப்போது பேரரசர்களாகிவிட்டார்கள். ஆம். மக்களின் ஆணைக்கிணங்க நிலப்பிரபுக்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இப்புரட்சியின் முன்னணியாளர்கள் யார் தெரியுமா? ஏழை விவசாயிகள்! மொத்த கிராமப்புற தொகையில் ஏழை விவசாயிகள் 70% நடுத்தர விவசாயிகள் 20% பணக்கார விவசாயிகள் 10% இருக் கிறார்கள். இதிலும் இந்த 70% ஏழை விவசாயிகளில் மிக மிக வறிய விவசாயிகள் 20%ம்; வறுமையில் வாடும் விவசாயிகள் 50%மும் இருக்கிறார்கள்.


இந்த ஏழை விவசாயிகள்தான் நம்முடைய இலக்கு அவர்கள் தான் இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். இந்த இலக்குதான் அந்த இலக்கினை (உள்ளூர் கொடுங்கோலர் தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள்) தாக்கி அழிக்கும்!

Monday 15 January 2018

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - வி.கெல்லி, எம்.கவல்ஸோன்


தமிழில் - தா.பாண்டியன்

முதல் பதிப்பு – 1982
இரண்டாம் பதிப்பு – 2013

விலை ரூ.390/-

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை 600 098.


அலைபேசி எண்: 26258410 -26251968 – 26359906


அடித்தளத்தின் தீர்மானகரமான (புறநிலை-சூழ்நிலை) சக்தியைப்
பற்றி மார்க்ஸ்:-

"மனிதர்கள் தங்களுடைய வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விருப்பத்திற்கேற்ப அதை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை, தாங்களே தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்றபடி இல்லாமல் கடந்த காலத்திலிருந்து கைமாற்றிக் கொடுக்கப்பட்ட, தயாராயுள்ள சூழ்நிலைமைகளுக்கு, தாங்கள் நேரடியாகச் சந்திக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்பவே வரலாற்றை உருவாக்குகிறார்கள்."   
                 (லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்)
********************************************************************************************************************** 

“வரலாற்றுப் பொருள்முதல்வாதம்” என்ற நூல் தமிழில் 1982ஆம் ஆண்டு தோழர் தா.பாண்டின் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதன் மறுபதிப்பு 2013ஆம் ஆண்டு என்.சி.பி.எச் வெளிட்டுள்ளது. இந்த பதிப்புக்கு தோழர் ந.முத்துமோகன் அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார். அதற்கு “வித்தியாசமான ஒரு நூல்” என்று தலைப்பிட்டுள்ளார். வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பற்றி இந்நூல் வெளிவருவதற்கு முன்பும் பின்பும் பல நூல்கள் வெளிவந்துள்ளது, அப்படியிருக்க இந்நூலை ஏன் வித்தியாசமானது என்று தோழர் கூறிப்பிடுகிறார்?.

“வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனில் சமூகச் சூழல்களைக் கொண்டு ஒரு நிகழ்வினை விளக்குவது என்ற ஓர் எளிதான புரிதல் நம்மில் பலரிடையில் வழக்கில் உள்ளது” என்று ஒரு குறைபாட்டை சுட்டிக்காட்டி, இந்நூல் அவ்வாறு எழுதப்படவில்லை என்று எழுதியுள்ளார். சமூக சூழல்களில் இருந்து வரலாற்றியல் பொருள்முதல்வாதம் தொடங்கவில்லை, மார்க்சுக்கு முந்திய பொருள்முதல்வாதிகள் தான் அப்படித் தொடங்கினர், இதற்கு மாறாக “இந்நூல் மனிதரின் ஊடுசெயல்கள் என்ற கருத்தாக்கத்தை முதன்மைப்படுத்துகிறது”.

இந்தப் பார்வை வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை புதியதாக கற்பவர்களுக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்துகிறது. இது போன்ற பார்வை ஐரோப்பாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. நமது நாட்டிலும் தற்போது மிகுந்த அளவுக்குக் காணப்படுகிறது.

இந்த நூல் பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ந.முத்துமோகன் கூறியது போல் தான் எழுதப்பட்டுள்ளதா? என்பதைப் பரிசீலிப்போம்.

1. சமுதாயத்தைப் புரிந்து கொள்வது எப்படி?

“மனித சமுதாயம் வித்தியாசமான விஷயமாகும். மனிதர்களின் செயல்களும், அவர்களின் ஊடுசெயல்பாடும்தான் மனித சமுதாயத்தில் நிகழும் ஒவ்வொன்றுக்கும் காரணமாகும். மனிதர்கள் அறிவு உணர்வு உள்ளவர்களாக இருத்தலால், அவர்களால் செய்யப்படும் ஒவ்வொரு காரியமும், முதலில் அவர்களது மூளை மூலமாகச் செல்கிறது. மனிதர்கள் உணர்ச்சி வயப்பட்ட வேகத்தாலோ, அல்லது எதிரொலியாகவோ, அல்லது மிக மோசமாக மனம் போனபடியோ செயல்படக்கூடும். இவ்வாறு இருப்பதால், இயற்கையைப் போல் சமுதாயத்தை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்த இயலாது என்ற பொதுவான கருத்தோட்டம் நிலவுகிறது.” (முதல் அத்தியாயத்தின் - பக்கம்-7)

இதற்கு அடுத்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கணக்கில் கொள்ளாமல் இருந்தால் ந.முத்துமோகன் கூறியது போல் இந்நூல் எழுதப்பட்டது என்று கூறிடமுடியும்.

ஆனால் இந்நூல் ஆசிரியர்கள், புகழ்பெற்ற பிரெஞ்சு நாட்டு சித்தாந்தவாதியான பல்-டி-ஹால்பாக் எழுதியதை குறிப்பிட்டு, “ஹால்பாக் தவறான நிலையில் நிற்கிறார். பொருள் பிரிவுகளின் ஊடுநடவடிக்கைகளைப் பரிசீலிக்கிறபோதுகூட அவற்றின் ஊடுநடவடிக்கையில் சந்தர்ப்பங்களுக்கும் அவசியத்தன்மையும் கலந்தே இருப்பதால், பௌதீகவாதிகள் இதனால், இந்த முடிவுதான் வரும் என்ற திட்டவட்டமான முன் அறிவிப்பைக் கொடுக்க மறுக்கிறார்கள்” (பக்கம் 7-8). ஆக ந.முத்துமோகன் போன்றோர்களின் கருத்துடைய ஹால்பாக்கை இந்நூலாசிரியர்கள் மறுக்கத்தான் செய்கின்றனர்.

ந.முத்துமோகன் போன்றோர்கள் மார்க்ஸ் வரலாற்றியல் பொருள்முதல்வாதமாக எதைக் கருதவில்லை என்று கூறுகிறார்களோ, அதுதான் மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்று இந்நூலாசிரியர்கள் கூறியுள்ளனர்.

“கருத்தா? பொருளா? இதில் எது முதலில்? என்பதுதான் சித்தாந்தத்திற்கு வரும் அடிப்படைக் கேள்வியாகும். பலவகைப்பட்ட சித்தாந்தவாதக் குழுக்களை இரண்டு மையமான பிரிவுகளாக – கட்சிகளாகப் பிரித்துவிடலாம். பொருள்முதல்வாதம் பொருளுக்கு முதன்மையான இடத்தை வழங்குகிறது. கருத்துமுதல்வாதம் என்பது தார்மீக, இலட்சிய உணர்வுகளுக்கு முதலிடத்தை வழங்குகிறது. எனவே இந்த இரண்டு வகை சிந்தனைப் போக்குகளும் உலகத்தைப் பற்றிய தங்களது கண்ணோட்டத்திற்கான தத்துவத்தை உருவாக்கியுள்ளன.

மனிதர்களுக்கு ஏற்படும் உணர்வுகளும், உருவாகும் கருத்துகளும், இதனால் தோன்றும் அறிவும், பொருளிலிருந்து கிடைக்கும் பிரதிபலிப்புகள் ஆகும் என்று பொருள்முதல்வாதம் கூறுகிறது.” (பக்கம் -15)

இந்நூலாசிரியர்கள் மார்க்ஸ் கூறிய முறையில், வரலாற்றை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் விளக்குகின்றனர். சமூக வளர்ச்சியை புறநிலையின் அடிப்படையில் விளக்குவதினால் தான் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை, சமூகம் பற்றிய விஞ்ஞானம் என்று கூறுகிறோம்.

இந்நூல் ஆசிரியர்கள் வரலாற்று விதிகளை மேலும் தெளிவுபடுத்துகிறார்கள்.

“சமூக வளர்ச்சிக்கான புறவய விதிகளைக் காண முடிந்தால் தான், சமூக விஞ்ஞானத்திற்கு கடந்த காலத்தைப் பற்றி விளக்கம் தரவும், நிகழ்காலத்தப் பரிசீலிக்கவும், வருங்காலம் குறித்து முன்கூட்டி கூறவும் இயலும். முன்கூட்டியே வருங்காலத்தைப் பற்றி உணர்ந்து கூறுவது என்று நாம் கூறும்போது, வருங்காலத்தில் நிகழப்போகும் திட்டவட்டமான சம்பவங்களை அல்லாமல், சமூக வளர்க்சிப் போக்கின் பொதுத் தன்மைகளையே குறிப்பிடுகிறோம். மனிதன் இயற்கை வரலாற்று விதிகளை ஒருமுறை தெரிந்துகொள்வானேயானால், அதனை அவனால் மாற்றவோ இல்லாமல் செய்துவிடவோ முடியாது என்பதையும் உணர வேண்டியிருக்கும். ஆனால், புதிதாகப் பிறக்கப் போகும் பிரசவத்தின் சிரமங்களையாவது குறைக்க அவனால் முடியும். இதில்தான் சமூக விஞ்ஞானத்தின் பெரும் முக்கியத்துவமே அடங்கியிருக்கிறது.” (பக்கம் - 31)

2. சமூக ஆராய்ச்சிக்கான மெய்யறிவியல் முன்தேவைகள்

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல் எங்கிருக்கிறது என்றால், மனிதன் பொருளோடு அதாவது உற்பத்தியின் போது ஏற்படுகிற உற்பத்தி உறவோடு ஊடு செயலில் தான் கருத்துக்கள் தோன்றுகின்றன என்பதில் இந்த ஊடு செயலில் மனிதனை மட்டுமே முதன்மைப் படுத்துகிற சிலபேரும், பொருளை மட்டும் முதன்மைப்படுத்துகிற இயந்திரத் தன்மையும் காணப்படுகிறது. இதனை மறுத்தே மார்க்ஸ் தமது “ஃபாயர்பக் ஆய்வுரை”யில் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த ஆய்விரையில் உள்ள மூன்றாவதை, தட்டையாகப் புரிந்து கொண்டு மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதிகள் புறநிலைக்கு முதன்மை இடம் கொடுத்தனர். இங்கே மார்க்ஸ் அகநிலைக்கு முதன்மை இடம் கொடுக்கிறார் என்று, இந்த ஆய்வுரைக்கு முரணாக விளக்கம் கொடுக்கின்றனர். இங்கே மார்க்ஸ் மனிதனின் செயற்பாட்டை மறுக்கின்ற அதாவது அவனது ஊடு செயலை மறுக்கின்ற போக்கைத்தான் மறுதலித்துள்ளார். மனிதனின் செயற்பாட்டை முதன்மைப்படுத்தவில்லை.

மூன்றாம் ஆய்வுரை:-
"மனிதர்கள்தாம் சூழ்நிலைமைகளை மாற்றுகிறார்கள் என்பதையும், கற்பிக்கிறவனுக்கே கற்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் மறக்கிறது. எனவே, இப்போதனை சமுதாயத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பதில் தவிர்க்க முடியாதவாறு வந்து சேர்கிறது. அவ்விரண்டு பகுதிகளில் ஒன்று சமுதாயத்துக்கு மேம்பட்டதாக உள்ளது. (எடுத்துக்காட்டாக, ராபர்ட் ஓவன் நூல்).சூழ்நிலைமைகளின் மாற்றமும் மனிதச் செயல்பாடும் சேர்ந்தே நிகழ்வதை (coincidence), நடைமுறையைப் புரட்சிகரமயமாக்கல் என்பதாக மட்டுமே கருதிக் கொள்ள முடியும், பகுத்தறிவு ரீதியாகப் புரிந்து கொள்ள முடியும்."

இங்கே பழைய பொருள்முதல்வாதம் ஆழ்சிந்தனை அதாவது, புலனுணர்வை நடைமுறைச் செயல்பாடாகப் புரிந்து கொள்ளாததையே விமர்சிக்கப்படுகிறது. புறநிலையின் தீர்மான போக்கை அல்ல.

ஒன்பதாவது ஆய்வுரை
“ஆழ்சிந்தனைப் பொருள்முதல்வாதம் (contemplative materialism), அதாவது, புலனுணர்வை நடைமுறைச் செயல்பாடாகப் புரிந்து கொள்ளாத பொருள்முதல்வாதம் எட்டிய மிக உயர்ந்த கருத்துநிலை, “குடிமைச் சமுதாயத்தில்” (civil society) உள்ள தனிப்பட்ட நபர்களின் ஆழ்சிந்தனையே (contemplation of single individuals) ஆகும்.”

மூன்றாவது ஒன்பதாவது ஆகிய இரண்டு ஆய்வுரைகளை மட்டும் முன்வைத்து மார்க்ஸ் மனிதனின் புலனுணர்வுக்கே அதாவது புறநிலைமையின் தீர்மானகர பாத்திரத்திற்கு மாறாக மனிதனின் செயல்பாட்டையே முதன்மைப்படுத்துகிறார் என்று கூறிவிடுகின்றனர்.

இந்த ஆய்விரைகளின் ஆறாவதை மறந்தும்  - மறைத்தும் விடுகினறனர். “மனித சாராம்சம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட நபரிலும் உள்ளார்ந்து இருக்கின்ற அருவமான விஷயம் அல்ல. அதன் எதார்த்த நிலையில் அது சமுதாய உறவுகளின் கூட்டுத் தொகுப்பே ஆகும்.”

மார்க்ஸ் கூறியதை ஒருங்கிணைந்து புரிந்து கொள்ளாமல் ஒரு பகுதியை மட்டும் முன்வைப்பதானால் தான் சிக்கல் ஏற்படுகிறது.

ஆனால், இந்நூல் ஆசிரியர்கள், மனிதனுக்கும் பொருளுக்கும் இடையில் ஏற்படுகிற ஊடுசெயலில் பொருளாதாரமே தீர்மானிக்கிற சக்தி என்று இந்த அத்தியாயத்தில் கூறியுள்ளனர்.

“வரலாற்றுப் பார்வையில் பொருள்முதல்வாதத்தின் பொருள் என்னவென்றால், சமூகத்தின் பொருளாதார வாழ்வை அங்கீகரிப்பதாகும், முதலில் பொருளாதார உற்பத்தியின் சமூகப் போக்கையும், அதாவது சமூக வாழ்க்கைக்குத் தேவையான இன்னொரு ஆதார விஷயம் என்றல்லாமல், எல்லா சமூகத் தன்மைகளுக்கும் போக்குகளுக்கும் ஊடு இணைப்பாக உள்ள அடிப்படைப் பொருளாதாரமே என்றும், அதுதான் சமூகத்தின் ஆன்மிகப் பிரிவு உள்ளிட்ட இதர எல்லா சமூக வெளிப்பாடுகளுக்கும் இறுதியில் தீர்மானிக்கிற சக்தியாக இருக்கிறது என்றும் அங்கீகரிப்பதாகும்.” (பக்கம் - 38)

இந்த நூலில் எங்கேயும் மார்க்ஸ் புறநிலையினை முதன்மைப்படுத்துகின்ற போக்கிற்கு மாறாக எழுதப்படவில்லை என்பதே உண்மையாகும். சூழ்நிலைமைகளின் தாக்கத்திற்கு உட்பட்டே, சூழ்நிலைமை மனிதர்கள் மாற்றுகிறார்கள் என்பதே இயக்கவியலாகும் என்றே இந்நூல் தெளிவாக கூறுகிறது.

“இத்தகைய புறவயச் சுற்றுச் சூழ்நிலை நிலவுவது என்பது, எந்த வகையிலும் மனிதனின் செயலினுடைய முக்கியத்துவத்தையோ, தனித் தன்மையையோ குறைத்து விடுவதாக ஆகாது. மாறாக, அதனை மேலும் நன்கு புரிந்து கொள்ளவே அது உதவுவதாக அமைந்துள்ளது.

திட்டவட்டமான குறிப்பிட்டதக்க வரலாற்றுக் கட்டங்கள் என்பதே, சமூக மாற்றத்திற்கான போக்குகளைக் காட்டும் சான்றாகும். அதாவது, வரலாற்று வளர்ச்சியின் விதிமுறைகளைக் காட்டுவதாகவும், வரலாற்று எதார்த்தத்தின் இன்றியமையாத தன்மைகளைக் காட்டுவதாகவும் உள்ளது. புறவயமான சமூக விதிமுறைகளுக்கும், மனிதனின் செயல்களுக்கும் இடையில் காணப்படும் இணைப்பை விளக்குவதற்கான பொதுவான தத்துவக் கண்ணோட்டம் கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.
சமூக வளர்ச்சி விதிமுறைகள் எதுவுமே, மனிதர்களின் நடைமுறைச் செயல்களுக்கு அப்பால் இருக்கவே முடியாது. ஆனால் சூழ்நிலைகளின் தாக்கத்திற்கு உட்பட்டே சூழ்நிலையை மனிதர்கள் மாற்ற முயல்கிறார்கள் என்பதுதான் வரலாற்றின் இயக்க இயலாகும். இதுவும் மனிதர்களின் நடைமுறைச் செயல்கள் மூலம்தான வெளியிடப்படுகிறது. வளர்ச்சியின் விதிமுறைகள் இத்தகைய செயல்களின் போக்கையும் உள்ளடக்கத்தையும் தீர்மானிக்கின்றன” (பக்கம் 55-56)

வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் காணப்படும் இந்த புறநிலையின் தீர்மானகர போக்கை, ந.முத்துமோகன் போன்றவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

3. சமூக அமைப்பு

வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை, சமூகச் சூழ்நிலைமைகளைக் கொண்டு விளக்குவது என்கிற ஓர் எளிதான புரிதல் பலபேரிடம் வழக்கில் உள்ள குறைபாடாக ந.முத்துமோகன் கூறியுள்ளார். அவர் குறிப்பிடுகிற குறைபாடு இந்நூல் ஆசிரியர்களிடையேயும் காணப்படுகிறது.

“… மனிதர்களின் செயலால் சமூக வளாச்சிகள் ஏற்படுகின்றன என்பதையும் அத்தகைய மனிதர்களின் செயல்கள், வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட கட்டத்திலான சமூகத்தில், அதன் சூழ்நிலைகளுக்கு உட்பட்டு மனிதர்கள் இயங்குகிறார்கள் எனபதற்கான இணைப்பையும் புரிந்துகொள்ள உதவுவதாக இருக்கிறது. வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திற்கு சமுக வடிவம் என்பது மூலைக்கல்லாகும்” (பக்கம் - 68)

இதே நூலில் மார்க்சும் எங்கெல்சும் சேர்ந்து எழுதிய “ஜெர்மன் சித்தாதந்தம்” நூலில் கூறியதை மேற்கோளாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இம் மேற்கோள், மனிதனின் நடவடிக்கையின் தன்மை என்பது சடப்பொருளின் சூழ்நிலைகளைச் சார்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.

“”இந்தத் தனிநபர்களின் குறிப்பிட்ட நடவடிக்கைகளை, செயல்களைக் காட்டுவதாக, அவர்களது வாழ்க்கையை ஒரு திட்டவட்டமான வடிவத்தில் காட்டுவதாக, அவர்களைப் பொருத்த அளவில் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையைக் காட்டுவதாக அமைகிறது. அவர்களது வாழ்க்கை வெளிப்பாடுகளுக்கேற்பவே அவர்களும் அமைகிறார்கள். அவர்கள் எவ்வாறோ, அதற்கொப்பவே, அவர்களது உற்பத்தியும் ஒத்தாக இருக்கிறது. அவர்கள் எதை உற்பத்தி செய்கிறார்களோ அதற்கேற்பவும், எவ்வாறு உற்பத்தி செய்கிறார்களோ அதற்கேற்பவும் அமைகிறது. இதனால், தனிநபர்களின் தன்மை, அவர்களது உற்பத்திக்கு சடப்பொருள் சூழ்நிலைகளைச் சார்ந்து இருக்கிறது” (ஜெர்மன் சித்தாதந்தம்) இதனால்தான் ஒவ்வொரு சமூக-பொருளாதார வடிவமும், அந்தந்தச் சமுக வாழ்க்கைக்குத் தேவையான உற்பத்தி முறையினாலேயே தீர்மானிக்கப்படுகிறது.” (பக்கம் - 71)

மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற நூலில் இருந்தும் ஒரு மேற்கோளின் மூலலை இந்நூலில் இடம் பெற்றுள்ளது. மனிதர்களின் எண்ணங்களும் விருப்பங்களும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மட்டத்தின் தன்மைக்கேற்ப அமைவதை இம்மேற்கோள் வலியுறுத்துகிறது.

"உற்பத்தி உறவுகள் மனிதர்களின் எண்ணங்கள், விருப்பங்களின்படி அல்லாமல், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மட்டத்தின் தன்மைக்கேற்பவே அமைகின்றன. இறுதியில் உழைப்பைச் செலுத்தும் சாதனங்களே இந்த உறவைத் தீர்மானிக்கின்றன. மார்க்ஸ் “உழைப்புக் கருவிகள் அல்லது சாதனங்கள், மனித உழைப்பு சக்தி வளர்ந்து அடைந்திருக்கிற மட்டத்தினைக் காட்ட உதவும் தர நிர்ணயிப்புக்கும் உதவுவதோடு, அந்த உழைப்பு எந்தச்  சமூகச் சூழ்நிலையின் கீழ் நிறைவேற்றப்படுகிறது என்பதையும், காட்டுவதாக அமைந்துள்ளது” என்று எழுதினார்.” (பக்கம் - 83)

4. உலக வரலாற்றின் புறவயமான மாறாநியதிகள்

இந்த அத்தியாயத்தின் தலைப்பே மனிதர்களின் நோக்கங்கள், நடவடிக்களும் புறநிலை சூழ்நிலையால் தீர்மானிக்கப்படுவதையே விவரிக்கிறது

“சமுதாய வளர்ச்சி என்பது, சமூக பொருளாதார வடிவ அமைப்புகளின் வளர்ச்சியும், தொடார்ச்சியும் ஆகும். இது உற்பத்தி வளர்ச்சியால் தீர்மானிக்கப்படுகிறது. உற்பத்திதான், ஒவ்வொரு சமூக வடிவ அமைப்பின் கட்டமைப்பையும், வளர்ச்சியையும் தீர்மானிப்பதாக உள்ளது. ஒரு வடிவ அமைப்பு இன்னொன்றாக மாறுவது, வரலாறு செல்லும் பாதையாவது இவையனைத்தையும் முழுமொத்தமாக உற்பத்திதான் தீர்மானிக்கிறது. எலலாச் சமூக அமைப்புகளிலும் உற்பத்தியின் தீர்மானமான பாத்திரம் இதுவாகும்.

தொடக்கத்திலிருந்தே வரலாற்றிற்கு ஒரு உள்ளார்ந்த பயன்நோக்கம் எதுவும் கிடையாது எனலாம். அது ஒரு விதிமுறைப்பட்ட போக்காகும். மனித நடவடிக்கைகளுக்குத் தான் நோக்கம் உண்டு. இந்த நோக்கங்களும், அவற்றை அடைவதற்கான வாய்ப்பு வசதிகளுடன், ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் சடப்பொருள் சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகின்றன.” (பக்கம் -150)

5. சமுதாயமும் பண்பாடும்

இந்த நூலில் எங்கு நோக்கினும் சமூகத்தின் சூழ்நிலையின் தீர்மானத்தையே வலியுறுத்துகிறது. பக்கத்திற்கு பக்கம் இதனையே விவரித்திருந்தாலும், ந.முத்துமோகன் “வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனில் சமூகச் சூழல்களைக் கொண்டு ஒரு நிகழ்வினை விளக்குவது என்ற ஓர் எளிதான புரிதல் நம்மில் பலரிடையில் வழக்கில் உள்ளது” என்றும் “இந்நூல் மனிதரின் ஊடுசெயல்கள் என்ற கருத்தாக்கத்தை முதன்மைப்படுத்துகிறது” என்று தமது அணிந்துரையில் எழுதியிருக்கிறார்.

கலாசாரத்தின் தன்மை சமூகத்தின் தேவையில் இருந்தே தோன்றுவதனால், சமூகத்தின் சூழ்நிலைமையால் தீர்மானிக்கப்படுவதாகவே இந்நூல் கூறுகிறது.

“சமுகத்தின் தேவைகளால் கலாசாரத்தின் தன்மை தீர்மானிக்கப்படுவதாக இருப்பதால், இது சமூகத்தின் சூழநிலையால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் கூறலாம்.” (பக்கம் -204)

6. வரலாற்று நடவடிக்கைக்கான உட்சக்திகள்

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் புறநிலை விதியைப் பற்றி பேசுவதனால், மனிதனின் சிறப்புத் தன்மையை அறிந்து கொள்ளாது அவனது செயற்பாட்டை கொச்சைப்படுத்துவதாக விமர்சிப்பவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு இந்நூல் தெளிவான பதிலை புறநிலை – அகநிலை ஆகியவற்றின் செயற்பாட்டை தெளிபடுத்துகிறது. இதற்கு மேலும் குழம்புபவர்கள் அவர்கள் சுயதெளிவை நோக்கி போவதற்கு சுய முயற்சிதான் அவசியம், விளக்கங்கள் போதுமான அளவுக்கு இருக்கிறது.

இந்த அத்தியாத்தின் தொடக்கமே இதனைத் தான் பேசுகிறது.

“மனிதகுலத்தின் மொத்தமான வரலாற்று வளர்ச்சியை நாம் பார்க்கிறபோதும், உலக வரலாற்றின் புறவயமான விதிகளை நாம் காட்டுவதாலும், நாம் வரலாற்றில் அனைத்துமே தாமாகவே நிகழ்கின்றன என்றோ, மனிதர்களின் குறிக்கோளுக்கு அப்பாற்பட்டே நிகழ்கின்றன என்றோ நாம் கூறவில்லை. சமுக வரலாற்று வளர்ச்சிப் போக்கில் ஓர் அம்சத்தை அணுகுவதற்கான ஒருமுறை என்ற அளவில் மட்டுமே சொல்லியிருக்கிறோம்.

சமூக அமைப்பு எதார்த்தமான ஒரு சமூக வடிவமாக, தனி அங்கமாகக் கருதப்படுகிறபோது, அதன் பரிணாம வளர்ச்சியின் வெளிச்சத்தில் பரிசீலிக்கிறபோது, அதன் மாற்றம் மேலும் வேறு ஒரு சமூக அமைப்பிற்கு மாறுவது என்பது வரலாற்று வளர்ச்சிப் போக்கில் உயர்மட்டமாகவே நிகழ்கின்றது. இந்த அணுகுமுறையில், சமூக அமைப்பில் மனிதனும் ஓர் அவசிய அங்கப்பகுதி என்பது அங்கீகரிக்கப்படுகிறது. அவனுடைய செயல்களால்தான் இந்த அமைப்பே நிலைத்து இருக்கிறது என்பதும், இயங்குகிறது, மாறுகிறது என்பதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரியான சமூக இயல் பரிசீலனை, வரலாற்றைப் புறவயப்பட்ட இயற்கையான வரலாற்றுப் போக்காகப் பார்க்க உதவுகிறது. அதன் விதிமுறைகளை வெளிக் கொணரவும் உதவுகிறது. இந்த முறையைத்தான் காரல்மார்க்ஸ் தனது மூலதனத்தில், முதலாளித்துவ உற்பத்தியின் வளர்ச்சி, வரலாற்றுத் தன்மைகளைப் பரிசீலிக்கிற போது பயன்படுத்தினார்.” (பக்கம் – 223)

புறநிலை விதிகளால் சமூகம் வளர்ச்சிப் பெறுகிறது என்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம் கூறியவுடனே, மனிதனின் செயற்பாடு இல்லாமல் தானே செய்வதாக புரிந்து கொள்கிற இயந்திதனமானப் போக்கையும் இந்நூல் விமர்சித்து தெளிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.

எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும், என்று “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” கூறுகிறது. இந்த வர்க்கப் போராட்டத்தில் தீர்மானகரமான பாத்திரத்தை அறிந்தால் தான், வர்க்கப் போராட்டங்களின் அடித்தளத்தைப் புரிந்து போராட முடியும். வரலாற்றின் உந்து சக்தியை புரிந்து கொண்டால் தான் அதனடிப்படையில் உழைப்பாளர்கள் தமது செயல்களை அமைத்துக் கொள்ள முடியும். வர்க்கப் போராட்டத்திற்கான காரணத்தை பொருளாயத நிலைமைகளில் சுட்டிக்காட்டுவதனால் தான் வரலாற்றுப் பொருள்முதல்வாததை ஒரு விஞ்ஞானமாக கருதப்படுகிறது.

“வர்க்கங்களுக்கு இடையிலான சமூக வேறுபாடுகளை ஏற்படுத்துவதற்கான காரணங்களையும், அதை எது தீர்மானிக்கிறது என்பதையும், ஒருவர் புரிந்து கொண்டாலன்றி, இந்தச் சமூக வேறுபாட்டின் தன்மைகளையும் புரிந்து கொண்டாலன்றி, ஒருவரால் அதன் நலன்களை, உறவுகளை, போராட்டங்களை பெரும்பகுதி மக்களின் கருத்தோட்டங்களைப் புரிந்து கொள்ள இயலாது.” (பக்கம் - 227)

வர்க்கப் போராட்டத்தின் இறுதிவிளைவுகள், மனிதனின் விருப்பங்களில் இருந்தல்லாமல், அந்த விருப்பங்களைத் தூண்டுகிற பொருளாயத நிலைமகளை அதாவது அதன் புறநிலைமைகளைக் கொண்டு வரலாற்றியல் பொருள்முதல்வாதம் முடிவெடுக்கிறது. இதனைப் புரிந்து கொள்ளாமல் கம்யூனிஸ்ட் கட்சி தமது செயற்பாட்டை அமைத்துக் கொள்ள முடியாது.

“புரட்சிகர சக்திகள், அவர்கள் வெற்றி பெறுவதற்குரிய சடப்பொருள் முன்தேவைகள் பக்குவமடைகிறபோது வெற்றி பெறுகின்றன. சமுதாயத்திற்குள்ளாகவே பழைய உற்பத்தி உறவு பெறுகின்றன. சமுதாயத்திற்குள்ளாகவே பழைய உற்பத்தி உறவுகளுக்கும் புதிய உற்பத்தி சக்திகளுக்கும் இடையிலான மோதுதல் முற்றுகிறபோது இது நடக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில் இந்த மோதுதல்களைத் தீர்க்க முடியாது. உற்பத்தி சக்திகளின் இன்னும் அதிகமான வளர்ச்சிக்கானப் பாதை திறந்துவிடப்பட வேண்டுமென்றால் புரட்சிகர வர்க்கப் போராட்டம் ஒன்றின் மூலமே அது சாத்தியமாகும். இதற்குரிய சமூக சக்திகள் பழைய பொருளாதார வடிவங்களை நொறுக்கியாக வேண்டும். இத்தகைய உறவுகளுக்கு வாகனங்களாக இருக்கக் கூடிய வர்க்கங்களுக்கு எதிராகவும் போராடியாக வேண்டும்.

சமுதாய வளர்ச்சியில் வரலாற்று ரீதியில் முற்றக்கூடிய கடமைகளை, முரண்பாடுள்ள வடிவ அமைப்புகளில் தீர்வு காண்பாதற்கும், பழையவற்றின் மீது புதியது வெற்றி பெறுவதற்கும் புரட்சிகர வர்க்கப் போராட்டம் ஒன்றே வழியாகும். இதனால்தான் முரண்பாடுள்ள சமுதாய வடிவ அமைப்புகளின் வளர்ச்சியின் இதுதான் பிரதானமான ஊற்றாக இருக்கிறது. இதுவே வளர்ச்சியின் பிரதானமான வடிவமாகவும், சமுதாயத்தில் உள்ள சமூக முரண்பாடுகளைத் தீர்ப்பதாகவும் அதன் வளர்ச்சியில் ஒரு ஒழுங்குத் தன்மை உடையதாகவும் இருக்கிறது. இந்த முரண்பாடுகள் புரட்சியினால் தீர்க்கப்படுகின்றன. அது பழைய அமைப்பை அழித்து புதிய உற்பத்தி முறையின் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.

வர்க்ப் போராட்டத்தின் வளர்ச்சியில் புரட்சி என்பது அதன் இறுதி முடிவாகும். எனவே புரட்சிகர வர்க்கங்களின் போராட்டம் வரலாற்று ரீதியில் மிக முக்கியமான சமூக நடவடிக்கையாகும். அது காலங்கடந்த சமூக, பொருளாதார வடிவ அமைப்பின் கட்டுக்கோப்பிற்கு அப்பாலும் இட்டுச் செல்லும். இதன் மூலம் சமுதாயத்தை முன்னேற்றி மேலும் ஒரு புதிய உயர்மட்டத்திற்கு உயர்த்தும். அதனுடைய சடப்பொருள் சூழ்நிலைகள் உற்பத்தி வளர்ச்சியால் தயாரிக்கப்படுகின்றன.” (பக்கம் – 250 - 251)

இந்நூல், சூழ்நிலை என்கிற புறநிலைமையை வலியுறுத்து நேரடியாகவே மார்க்சியத்தின் சாதனையாக தெரிவிக்கிறது.

“தொழிலாளிகளின் வர்க்கப் போராட்டம், அதற்கான காரணங்கள், சூழ்நிலைகள், அதன் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை விஞ்ஞான ரீதியில் பகுப்பாய்வு செய்தது மார்க்சிய – லெனினியத்தின் வரலாற்றுச் சாதனையாகும்.” (பக்கம் - 251)

7. சமுதாயத்தினுடைய அரசியல் நிறுவனம் : கட்டுமானமும் அதன் வீச்சும்

வர்க்க சமூகத்தில் ஏற்படுகிற வர்க்க உறவுகளும் அதனால் ஏற்படுகிற சமூக புரட்சியையும் மார்க்ஸ் புறநிலை விதிகளின் அடிப்படையில் விளக்கியதையே இந்நூல் வெளிப்படுத்துகிறது. இதனை இந்நூல் மார்க்சின் மேற்கோளோடு நிறுவுகிறது.

“வர்க்க சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையிலான சமூக உறவுகளில் ஏற்படும் புரட்சி உற்பத்தி வளர்ச்சிப் போக்கினை நடத்துகின்ற புறவயமான விதிமுறைகளால் தீர்மானிக்கப்படுகிறது. நாம் ஏற்கெனவே நிறுவிக் காட்டியது போல (இரண்டாம், மூன்றாம் அத்தியாயங்களைப் பார்க்கவும்) ஒரு உற்பத்தி முறையிலிருந்து இன்னொரு உற்பத்தி முறைக்கு மாறுவது என்பது, இசைவு விதிகளின் இயக்கத்தால் ஏற்படுகின்றது எனலாம். அதாவது உற்பத்தி உறவுகளுக்கும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மட்டத்திற்கும் இடையிலான உறவுகளிலிருந்து எழுகிறது.

பழைய உற்பத்தி உறவுகளுக்கும், புதிய உற்பத்தி சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடுதான் எந்தவொரு சமூகப் புரட்சிக்குமான பொருளாதார அடிப்படையாகும். இது இறுதியவரை கூர்மைப்படுத்தப்படுகிறபோது இது நடக்கிறது. இந்த முரண்பாட்டை மேற்கொள்வதுதான் புரட்சியின் நோக்கமாகும். உற்பத்தி சாதனங்களில் காலாவதியாகிவிட்ட சொத்துடமை முறையை நீக்கிவிடுகின்ற வரலாற்றின் முதிர்ந்த கடமையைப் பூர்த்தி செய்கிற வேலையை சமூகப் புரட்சி நிறைவு செய்வதோடு, பழைய உற்பத்தி உறவுகளையும் அப்புறப்படுத்தி, புதிய உற்பத்தி சக்திகளின் பாதையையும், அடைந்துள்ள வள்ச்சி மட்டத்திற்கு ஏற்ப, புதிய உற்பத்தி உறவுகளை நிறுவுவதற்கான பாதையையும் அமைக்கின்ற கடமையையும் நிறைவு செய்கிறது.

புரட்சிக்கான இந்த மாபெரும் விதி மார்க்சினால் கண்டுபிடிக்கப்பட்டது. “ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் சமுதாயத்தின் சடப்பொருள் உற்பத்தி சக்திகள், நடப்பிலுள்ள உற்பத்தி உறவுகளுடன் முரண்படுகின்றன. அல்லது, இதனையே சட்டமன்ற பாணியில் சொல்வதானால், இதுவரை எந்தக் கட்டமைப்பிற்குள்ளாக இவை இயங்கி வந்தனவோ, அந்தச் சொத்துடமை உறவுகளுடன் முரண்படுகின்றன” என்று மார்க்ஸ் எழுதினார். “உற்பத்தி சக்திகளின் அமைப்பு வடிவ வளர்ச்சியாக மாறிவிடுகின்றது. இதன் பிறகு சமூகப் புரட்சி தொடங்குகிறது.” என்று மார்க்ஸ் எழுதினார்” (பக்கம் – 296 - 297)

சமூக வளர்ச்சியைப் பற்றிய புறநிலை விதி என்று கூறினாலே பலருக்கு, தவறாகப்படுகிறது. விதி என்றாலே விதிவாதமாகவே அவர்கள் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இந்நூலாசிரியரும் மார்க்சும் விதி என்றே கூறகின்றனர்.

8. வரலாற்றுப் போக்கின் ஆன்மீக அம்சம்

சமூக வளர்ச்சியை புறிநிலை விதியின் அடிப்படையில் கூறுவதினால், மனிதனின் உயிரோட்டமான செயற்பாட்டை குறைத்து மார்க்சியம் மதிபிடுவதாக பூர்ஷ்வா எழுத்தாளர்கள் கூறுவதை இந்நூல் மறுக்கிறது. இந்தப் போக்கை அணிந்துரை ஆசிரியரான ந.முத்துமோகன் மார்க்சியத்தன் பேரால் செய்கிறார்.

“சமுதாயத்தின் வளர்ச்சியை, பொருளாதார வளர்ச்சியாக மட்டும் மதிப்பிட்டு மனிதனையேகூட ஒரு உற்பத்தி அங்கமாகவே பரிசீலித்தும், மனிதனுடைய வேட்கைகளை பொருளாதார வசதிகளைப் பெறுவதாக மட்டும் கணித்தும், சமுதாயத்தில் மனிதனுடைய ஆன்மீக வாழ்க்கையைக் குறைத்து மதிப்பிட்டும், சமுதாய வளர்ச்சிப் போக்கையே, இதற்குள்ளாகக் குறைத்து விடுகிறது மார்க்சியம் என்று பூர்சுவா எழுத்தாளர்கள் அடிக்கடி குற்றம் சாட்டியுள்ளனர். அத்தகைய குற்றச்சாட்டுக்கள் எங்கு இல்லையோ, அங்கு சுமத்தப்படுவது, அவர்களது மார்க்சிய எதிர்ப்பிலிருந்து பிறப்பதாகும். இது சமூக வளர்ச்சி பற்றிய மார்க்சிய தத்துவம் குறித்த மேலோட்டமான அவர்களது நுனிப்புல் அறிவைக் காட்டுவதாக மட்டுமே இருக்கிறது.

இந்தத் தத்துவம் கூறுவதற்கொப்பவே சமூக வளர்ச்சியானது, சில விதிகளின் செயல்முறைக்கேற்பவே நடக்கிறது என்பதையும், அது மனித உணர்வுகளுக்கும், விருப்பத்திற்கும் அப்பாற்பட்டும், சுயேச்சையாக ஏற்படுகிறது என்பதையும் நாம் ஏற்கெனவே பார்த்தோம். இந்த முறையில் பார்க்கிறபோது, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், இயற்கையின் வளர்ச்சிக்கும் வித்தியாசமே இல்லை. இயற்கையின் விதிகள், ஒரு மொட்டையான, குருட்டுத்தனமான, பௌதீக சக்திகளின் ஊடுசெயலால், நிகழ்ச்சிகளால் ஏற்படுகிறபோது, சமுதாய வளர்ச்சி விதிகள் மனித நடவடிக்கைகள் மூலமே வெளிப்படுகின்றன.” (பக்கம் – 337 -338)

இங்கு இந்நூலாசிரியர் புறநிலை விதிகள், மனித நடவடிக்கை மூலமே செய்றபடுவதாக கூறியுள்ளார். அதாவது இந்த ஊடுசெயலில் புறநிலை முதன்மையாகவும், அதனை செயற்படுத்தும் மனிதன் இரண்டாம் நிலையினதாகவும் கூறுகிறார். ஆனால் ந.முத்துமோகன் “இந்நூல் மனிதரின் ஊடுசெயல்கள் என்ற கருத்தாக்கத்தை முதன்மைப்படுத்துகிறது” என்று ஆதாரமற்ற முறையில் இந்நூலுக்கு எதிராக எழுதியுள்ளார்.

9. சமுதாயமும் தனிநபரும்

இந்த அத்தியாயம் தனிநபரின் சிறப்பியல்புகளைப் பற்றி பேசுகிறது. இந்த தனிநபரின் சிறப்பியல்புகள், அவன் வாழக்கூடிய தனிப்பட்ட சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகிறது என்றே இங்கு கூறப்பட்டுள்ளன.

“..தனிமனிதச் சிறப்பியல்பின் குறிப்பிட்ட தன்மைகள் எது தீர்மானிக்கிறது? அதுபோல் ஒவ்வொரு தனிநபரினுடைய தனித்தன்மையை எது தீர்மானிக்கிறது?  அன்றாட அனுபவத்திலிருந்த நமக்கு ஒன்று தெரியும். அதாவது பெரிய சமூகக் குழுக்கள், தேசங்கள் போன்றவை ஒரு தனித்த முழுவடிவமாக இருந்தபோதிலும் அவற்றில் மனிதனின் பல்வேறு வகையான தனிச்சிறப்பியல்புகள் இருக்கவே செய்கின்றன.

இந்தப் பிரத்தியேகமான தனித்தன்மைகள் மனிதன் வாழக்கூடிய தனிப்பட்ட சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகினறன.” (பக்கம் – 434)

10. சமூக முன்னேற்றம்

புறநிலை விதிகளே சமூக முன்னேற்றத்தை தீர்மானிக்கிறது என்பதையே இந்த அத்தியாயம் கூறுகிறது. மனிதர்களின் உணர்வுபூர்வமான லட்சியங்கள், புறநிலை விதிக்கு ஒத்ததாக இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும், என்பதை சொல்லுவதின் மூலம் புறநிலை விதிகளை அறிய வேண்டியதில் அவசியத்தையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது.

“வரலாற்று முன்னேற்றம் என்பது சமுதாயத்தினுடைய தன்-வளர்ச்சியாகும். அது சமூக விதிமுறைகளால் தீர்மானிக்கப்படுகிறது. அது மனித நடவடிக்கைகள் மூலமாக, வழியாக நிகழ்கிறது. வரலாற்றுப் போக்கு குறித்த கண்ணோட்டம், விருப்பம், கருத்தின் அடிப்படையில் மட்டும் முனனேற்றத் திசைவழி இருப்பது இல்லை என்பதைக் கூறுவதாகவும், அவர்களது விருப்பங்கள், வேட்கைகள் ஆகியவற்றின்படியே அவை இயங்குகின்றன. மேலும், மனிதர்கள் மேற்கொள்ளும், உணர்வுபூர்வமான சமூக லட்சியத்திற்கேற்ப இது இயங்குகிறது. வரலாற்று வளர்ச்சியின் புறவயமான தன்மைகளுக்கு இது ஒத்ததாக எப்பொழுது இருக்கிறதோ, அப்பொழுது மட்டுமே இதனை வெற்றிகரமாகப் பெறவும் முடிகிறது.” (பக்கம் - 483)

ஒரு கம்யூனிஸ்ட் கட்சி சமூக வளர்ச்சியின் விதிக்கு ஏற்பவே தமது செயற்பாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அது வெற்றி பெறமுடியும். வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொள்வதில் உள்ள சிக்கலே கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு தடையாக இருக்கிறது.

இந்த பத்து அத்தியாயங்களின் கருத்தை படித்த பின்பும் புறநிலை விதிகளைப் பற்றிய சந்தேகம் ஏற்படுமாயின், இந்நூல், இதனை நேரடியாக கேள்வி கேட்டு பதிலும் தருவதைப் படித்து தெளிவைப் பெறலாம்.

“சமூக முன்னேற்றத்திற்கான புறவயமான கோட்பாடுகள் என்று எதாவது உண்டா?

சமூக வளர்ச்சிக்கு உற்பத்தி அடிப்படையாக இருப்பதால், அதிலிருந்துதான் சமூக முன்னேற்றத்திற்கான புறவயக் கோட்பாட்டைக் காண நாம் முயல வேண்டும். இதனை அளவுகோலாகப் பயன்படுத்தி, வரலாற்றுப் போக்கில் எழக்கூடிய வித்தியாசங்களை மதிப்பிடவும், சமுதாயம் அடைந்து விட்டிருக்கிற வளர்ச்சி மட்டத்த் தீர்மானிக்கவும் முடியும்.

உற்பத்தி வளர்ச்சி என்பது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மட்டத்தால் தீர்மானிக்கப்படுவதாக இருப்பதால், பொருள்முதல்வாத வரலாற்றுக் கண்ணோட்டத்திலிருந்து அவசியமாக எழுவது என்னவென்றால், சமூக முன்னேற்றத்திற்கான மிக உயர்ந்த புறவயமான கோட்பாடுகளை, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில்தான் காணவேண்டும், என்பதாகும்.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மனிதகுலம், சமூக முனனேற்றக் கட்டங்கள் மூலமாக முன்னேற ஆணிவேராகும். ஏனெனில், இதுதான், அவற்றை அவனுடைய சேவைக்காகப் பயன்படுத்துவதில் அவன் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறான் என்பதைக் காட்டுவதாகவும் இருக்கிறது. மனிதகுலத்தின் சமூக வளர்ச்சிக்கான வாய்ப்பு வசதிகளைத் திறந்து காட்டுவதாகவும் உள்ளது.

இந்தக் கோட்பாடு புறவயமானது. ஏனெனில், இதனைப் பயன்படுத்தி, சமூக வளர்ச்சி மட்டப்படிகளில், சமூகப் பொருளாதாரக் கட்டுமானத்தைத் தீர்மானிக்க உதவுவதாக இருக்கிறது.” (பக்கம் - 477)

இவ்வளவுத் தெளிவாக இந்நூல் கூறிய பின்பும், ந.முத்துமோகன், புறநிலை விதிகளின் அடிப்படையில், மனிதனின் செயல்களுக்கு  கொடுக்கும் விளக்கத்தை புறக்கணித்து, இது “வித்தியாசமான ஒரு நூல்” என்று நூலுக்குப் புறம்பாக அணிந்துரை எழுதியுள்ளார்.

ந.முத்துமோகன்:-
“..மார்க்சியத்தின் தத்துவம், வரலாற்றியல், பொருளாதாரவியல், புரட்சி பற்றிய கோட்பாடு, அழகியல் ஆகிய சகல பகுதிகளையும் தொகுத்து நிற்கும் கருத்தாக்கமாக சமூக வாழ்வில் மனிதரின் செயல்கள் விளங்குகின்றன என்பதைக் காண்கிறோம். இந்த அற்புதமான தத்துவ நோக்கை இந்த நூல் முன்னிலைப்படுத்துவதால்தான், இந்நிலைப்பாட்டை போதுமான தெளிவுடன் இந்நூல் எடுத்துரைப்பதால்தான், அந்நோக்கை மரியாதைக்குரிய தோழர் தா.பா அவர்கள் மிக உணர்வுபூர்வமாக மொழிபெயர்த்து வழங்கியிருப்பதால்தான், இந்நூல் ஒரு வித்தியாசமான நூல் என் நான் முகப்பில் சொல்லியுள்ளேன்,” (பக்கம் VII)

தத்துவம், பொருளாதாரம், புரட்சிக் கோட்பாடு, அழகியல் போன்ற சகல பகுதிகளையும் மொட்டையான மனிதரின் செயல்கள் என்ற ந.முத்துமோகனின் கருத்தை மறுப்பதாகவே இந்நூல் முழுமையும் காணப்படுகிறது. ந.முத்துமோகனின் மேற்குறிப்பிட்ட மேற்கோளுக்கு மறுப்பாக இந்நூலேயே குறிப்பிடப்பட்டுள்ள தோழர் தா.பா அவர்களின் மொழியாக்கத்தில் உள்ள லெனினது மேற்கோளைப் பதிவிடுகிறேன். இந்த லெனினது மேற்கோளில், மனிதன் விரும்பியபடி செய்து கொள்ள முடியாத புறநிலைத் தீர்மானகரப் பாத்திரத்தை வலியுறுத்தப்படுகிறது.

லெனின்:-
“தீர்மானிப்பது என்ற கருத்து, மனித நடவடிக்கைகள், தேவைகளால் உருவாக்கப்படுகின்றன என்ற கருத்தை முன்வைக்கிறது. சுதந்திரமான கருத்து என்ற அபத்தமான கட்டுக்கதையை நிராகரிக்கிறது. இது எந்த வகையிலும் மனிதனுடைய சிந்தனையையோ அல்லது மனச்சாட்சியையோ அழித்துவிடுவது இல்லை, அல்லது அவனது நடவடிக்கைகளை உருவாக்குவதிலும் இல்லாமல் இல்லை. முற்றிலும் மாறாக, தீர்மானித்தல் என்ற கருத்துத்தான் கறாரான, சரியான அளவீட்டை மேற்கொண்டு, அனைத்தையும் நீ விரும்பியபடி செய்துகொள் என்பது போல விடுவதில்லை.” (பக்கம் 377)

கட்சியோ, மக்களோ தமது இலட்சியத்தை அடைய வேண்டுமானால், அந்த இலட்சியம் புறநிலை விதிகளுக்கு ஒத்தாக இருக்க வேண்டும் என்பதையே இந்நூல் முழுமையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விமர்சனம், ந.முத்துமோகனின் அணிந்துரைப் பற்றியதாக இருந்தாலும், ஒவ்வொரு அத்தியாத்தின் சாரமும் எடுத்து தனித்தனயாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால், இந்நூலின் விமர்சனமாகவே அமைகிறது.