Thursday 29 January 2015

“மார்க்ஸ் - எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும்” என்ற எனது நூலுக்கு எழுதிய முகவுரை

மார்க்ஸ் - எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும்
-
.கா.ஈஸ்வரன்
விடியல் பதிப்பகம். கோவை.4
விலை-175/-

முகவுரை


“மார்க்சையும் எங்கெல்சையும் நான் தொடர்ந்து “நேசிக்கிறேன்” அவர்களைப் பற்றிய எத்தகைய தவறானதையும் (any abuse) என்னால் அமைதியாகப் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் உண்மையான மனிதர்கள். நாம் அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலிருந்து நாம் விலகக் கூடாது….”- லெனின்
(லெனின் தொகுப்பு நூல் (ஆங்கிலம்) 35 பக்கம் 281)

கடந்த 1000 ஆண்டுகளின் மிகப் பெரிய சிந்தனையாளர் யார்? என்று பிபிசி செய்தி நிறுவனத்தால் பொதுமக்களிடம் கேட்கப்பட்டதில், முதலிடம் பிடித்தவர் காரல் மார்க்ஸ். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தனையாளரான காரல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றையும், அவரின் கூட்டுப் படைப்பாளியும் நண்பருமான பிரெடெரிக் எங்கெல்ஸ் அவர்களது வாழ்க்கை வரலாற்றையும் இணைத்து  இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரின் வாழ்க்கையும் சேவையும், மிகவும் நெருங்கிய உறவுடையது. அவர்களைத் தனித்தனியாகப் பிரிக்க முடியாது என்று மார்க்சின் இளைய மகள் எலியனோர் கூறுவது மிகைப்படுத்தாத உண்மையாகும். மேலும் அவர் கூறுகிறார், "இந்த இரு மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றினை எழுத வேண்டும் என்றால் "கற்பனாவாதத்திலிருந்து விஞ்ஞானம் வரை" சோஷலிசத்தின் வளர்ச்சி வரலாற்றை மட்டுமின்றி, அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிவர்க்க இயக்கம் முழுவதன் வரலாற்றையும் எழுதியாக வேண்டும்." இந்நூலை எழுதும் போது இந்த உண்மையை முழுமையாக உணரமுடிந்தது.

இந்த வாழ்க்கை வரலாறு நூல் சாதாரண வாசகர்களை மனதில் கொண்டு எழுதப்பட்டது. மார்க்சும் எங்கெல்சும் இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்துக்கும், விஞ்ஞான கம்யூனிசத்துக்கும் எவ்வாறு வந்தடைந்தனர் என்பதை இவர்களது வாழ்வோடும், இவர்களது படைபோடும் அளித்திடும் போது புதிய வாசகர்களுக்கு மார்க்சியத்தை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.


மார்க்சின் குடும்பம் வறுமைத் துயரங்களுக்கு உள்ளானது என்பது, பொதுவாக அறியப்பட்டது தான். குழந்தைக்கு தொட்டில் வாங்கவும், இறந்த குழந்தையை இடுவதற்கு சவப்பெட்டி வாங்கவும் பணமில்லா நிலையில் குடும்பம் தவித்தது உண்மைதான். இந்த வறுமைத் துயரத்தை பற்றி அதிகம் பேசுவதைவிட, இந்த துயரத்தை அவர்கள் சுமந்து எதனை சாதிக்க நினைத்தார்களோ அதற்கு போராடுவதே மார்க்சுக்கு நாம் செய்யும் கைமாறு என்று நான் கூறுவது வழக்கம். இருந்தாலும், இந்நூல் எழுதும் போது சிலஇடங்களில் எனது கண்களில் நீர் தழும்பியதை தவிர்க்க முடியவில்லை.

மார்க்சும் எங்கெல்சும் கம்யூனிச கோட்பாட்டை உருவாக்கினார்கள், லெனின் அதனை கட்சி அமைத்து நடைமுறைப்படுத்தினார் என்று மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வகையில் புரிந்து கொள்பவர்களை இன்றும் நம்மிடையே காணமுடிகிறது. மார்க்சும் எங்கெல்ஸ்சும் சர்வதேச இயக்கத்தை அமைத்து பாட்டாளி வர்க்கத்துக்கான புரட்சிகர கட்சியினை தோற்றுவிக்கப் பாடுபட்டார்கள் என்பதை இவர்களின் வாழ்கையை படிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.

ஏடேறிய வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறே என்று இருவரும் கூறினார்கள். இந்த வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய ஒரு விஞ்ஞானப் பார்வையினை நமக்களித்தனர். இவ்விருவருக்கு முன்பே, முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்களும், முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களும் வர்க்கப் போராட்டத்தினை விரித்துரைத்துள்ளனர். மார்க்ஸ், வர்க்கங்களின் இருத்தல் என்பது பொருளுற்பத்தியின் வளர்ச்சியிலான குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களுடன் தொடர்புடையவை என்பதையும், வர்க்கப் போராட்டம் தவிர்க்க முடியாத வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்கிறது என்பதையும், இந்த சர்வாதிகாரம் மட்டுமே சகலவித வர்க்கங்களின் ஒழிப்பு மற்றும் வர்க்கங்களற்ற சமுதாயத்திற்கான மாறுதல் கட்டமாக அமையும் என்பதையும் விஞ்ஞான வழிமுறையில் நிரூபித்துக் காட்டினார். மார்க்சும் எங்கெல்சும் வாழ்ந்த வாழ்க்கை மற்றும் அவர்கள் படைத்தளித்த எழுத்துக்களின் அடிப்படையில் இந்த விஞ்ஞான முடிவிற்கு எவ்வாறு வந்தடைந்தனர் என்பதை இந்நூல் விவரிக்கிறது.

இந்த விஞ்ஞானக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்கு அவர்கள், பல்வேறு சோஷலிச கோட்பாடுகளை எதிர்க்க வேண்டியவந்தது. குட்டிமுதலாளித்துவ சோஷலிசம், முதலாளித்துவ சோஷலிசம், கற்பனாவாத சோஷலிசம் போன்றவற்றுடன் இணக்கம்காணாமல் போராட்டத்தை மார்க்சும் எங்கெல்சும் நடத்தியே தங்களை கோட்பாட்டை  நிறுவினர். அவர்கள் வாழ்வில் சந்தித்த இத்தகைய சோஷலிசம் இன்றும் புதுப்புது வடிவெடுத்து மார்க்சியத்தை விமர்சிக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு, மார்க்சும் எங்கெல்சும் எவ்வாறு அன்று போராடினர் என்பதை அறிவதற்கு இந்த மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும் என்ற நூல் உதவிடுகிறது.

இருவரது வரலாறு என்பது தொழிலாளர்களின் விடுதலைக்கான போராட்ட வாழ்க்கையாகவே இருந்ததையும், அதற்கான கோட்பாட்டை வகுத்தளித்ததையும் இந்நூலைப் படிக்கும் போது அறிந்து கொள்ள முடியும்.

இந்நூல் மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்வும், அவர்கள் வகுத்தளித்த கோட்பாடான மார்க்சியத்தையும் அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஓர் அறிமுகமாக அமையும். இருவரின் படைப்புகள் எந்த சூழ்நிலையில் ஏன்? எழுதப்பட்டது, அதில் காணப்படும் கோட்பாடுகள் எவை? என்பதை இந்த சிறுநூல் விளக்குகிறது. இந்த சுருக்கமான வாழ்க்கை வரலாற்று நூலில் வாழ்க்கைச் சுருக்கத்துடன், அவர்களது நூல்களின் அறிமுகமும் சுருக்கமாக அளிக்கப்பட்டுள்ளது.

மார்க்சியத்தை அதன் வேரில் இருந்து அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்நூல் சிறந்த கையேடாக அமையும். இந்த நூலில் கொடுக்கப்பட்ட இருவர்களது நூல்களின் அறிமுகம், மூல நூலை வாசிப்பதற்கு துணைவனாக (Study Guide) அமையும்.

முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடிக்கு; பாட்டாளி வர்க்க அரசும், கம்யூனிச உற்பத்தி முறையும் தான் தீர்வு என்பதை மார்க்சும் எங்கெல்சும் தங்களது படைப்புகளின் வாயிலாக நமக்களித்துள்ளனர்.

2007 முதல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் பொருளாதார நெருக்கடியின் சூழல் காரணமாக, மார்க்சைப் பற்றியும், அவரது பொருளாதார நெருக்கடி பற்றிய கோட்பாட்டையும் அறிந்து கொள்வதற்கு உலகு தழுவிய ஆர்வம் தோன்றியுள்ளது. மார்க்ஸ் எழுதிய "மூலதனம்" நூல் தற்போது அதிகமாக விற்கப்பட்டு படிக்கப்படுகிறது.
தமிழ் வாசகர்களை மனதில் கொண்டு தமிழில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இறுதி அத்தியாயமாக, மார்க்சின் பொருளாதார நெருக்கடிக் கோட்பாடு பற்றிய மார்க்சிய முதலாசிரியர்களின் நேரடி வார்த்தைகளின் அடிப்படையில் சிறு அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது
.
இந்நூலை விடியல் பதிப்பகம் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இதுவரை மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்க்கைப் பற்றி எவ்வளவே நூல் வெளிவந்திருந்தும், இந்நூலை வெளியிடுவதற்கும் அதனை சிறப்பாக படங்களுடன் வெளியிட விரும்பியதற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.கா.ஈஸ்வரன்                           மின்னஞ்சல்: marxistwriter@gmail.com
சென்னை                                அலைபேசி எண்: 9283275513


No comments:

Post a Comment