Saturday 28 March 2015

கூலியுழைப்பும் மூலதனமும்- மார்க்ஸ்

தமிழில் மு.சிவலிங்கம்
விலை-ரூ.40/-

வெளியீடு:
பாரதிபுத்தகாலயம்
சென்னை

தொலை பேசி- 044-24332424, 24356935 விற்பனை 044-24332924


(“மார்க்ஸ்-எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பு” என்ற எனது நூல் அண்மையில் விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலில் மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும் மூலதனமும்” என்ற நூலைப் பற்றி எழுதியவைகளை இங்கே தொகுத்துள்ளேன். இந்நூலுக்கான அறிமுகமாகவும் படிக்க வேண்டியதின் அவசியத்தையும் இது வலியுறுத்தும்)

பெல்ஜியத்தில் வசித்த ஜெர்மன் தொழிலாளர்களின் அரசியல் வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு அவர்களிடம் விஞ்ஞான கம்யூனிசக் கருத்துக்களைப் பரப்புவதற்கு 1847ல் மார்க்ஸ் ஜெர்மன் தொழிலாளர்கள் சங்கத்தை நிறுவினார். அதன் மூலம் செய்முறைக் கிளர்ச்சியை தொடங்கினார். நடப்பு அரசியல் நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்வதற்கு வாரத்தில் இருமுறை கூடினர். இங்கு தொடர்ச்சியாக மார்க்சால் பல விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன. அப்படி நிகழ்த்தப்பட்ட விரிவுரைகளில் குறிப்பிடத்தக்கவை இந்த "கூலியுழைப்பும் மூலதனமும்".

கூலியுழைப்பும் மூலதனமும் (படைப்பு)

எதிர்ப்புரட்சி சக்திகள் "புதிய ரைனிஷ் பத்திரிகை"யை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. மார்க்சும் எங்கெல்சும் "அதிகாரத்தை அவமதித்ததாக" காரணம் காட்டி 1849 பிப்ரவரி 7ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது. நீதிமன்றத்தில் மார்க்ஸ், அரசு சட்டத்தின்படி நடக்காமல் வன்முறையால் ஒடுக்கியது என்று வாதாடினார். பின்பு நிராபராதி என்று தீர்ப்பளித்து விடுவிக்கப்பட்டார். எதிர்ப்புரட்சியின் தாக்குதலை எதிர்கொள்ள மக்களை திரட்டிய போது "புதிய ரைனிஷ் பத்திரிகை"யின் பாட்டாளி வாக்கத் தன்மை மேலும் வலுப்பட்டது. புரட்சிகர போராட்டம் நடைபெறும் காலத்தில், பாட்டாளிவாக்கத்தின் மீதான முதலாளிவர்க்கத்தின் சுரண்டலுக்கு காரணமாகிற பொருளாதார உறவுகளை விவரிப்பது தேவை என்று மார்க்ஸ் கருதினார்.

வர்க்கப் போராட்டத்திற்கு பொருளாதார உறவே அடிப்படை ஆதாரம் என்பதை நிலைநாட்ட விரும்பினார், பெல்ஜியத்தில் ஜெர்மன் தொழிலாளகளிடம் முன்பு அவர் நிகழ்த்திய (1847) "கூலியுழைப்பும் மூலதனமும்" விரிவுரையின் அடிப்படையில் எழுதப்பட்டதை இப்பத்திரிகையில் 1849ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐந்து இதழ்களில் தொடராக வெளியிட்டார். கடைசித் தொடரின் இறுதியில் தொடரும் என்று போடப்பட்டும் இந்தப் பத்திரிகையை தொடர முடியாமல் நசுக்கப்பட்டதால், இது நிறைவு பெறவில்லை. மார்க்ஸ் மறைந்த பிறகு அவரது கையெழுத்துப் பிரதிகளில் இதன் குறிப்புகள் கூட எதுவும் கிடைக்காமல் போனது.

மார்க்ஸ் கூறுகிறார்:-
"வர்க்கங்களுக்கு இடையேயும், தேசங்களுக்கு இடையேயும் தற்போது நடைபெறும் போராட்டங்களுக்குப் பொருளாயத அடிப்படையாக விளங்கும் பொருளாதார உறவுகளை நாம் தக்கபடி எடுத்து விளக்கத் தவறிவிட்டோம் என்பதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் நம்மைப் பற்றிக் குறை கூறியுள்ளனர். குறிப்பிட்ட காரணத்தோடுதான், இதுவரையில் நாம் இந்த உறவுகளை, அவை அரசியல் மோதல்களில் வலிய தம்மை வெளிப்படுத்திக் கொண்டபோது மட்டும், சுருக்கமாகத் தொட்டுக் காட்டியுள்ளோம்."2

மேலும் முகவுரையில், தனது கருத்துக்களைக் கூடுமான வரை எளிதாகவும் மிகப் பலரும் படிக்கத்தக்க விதத்திலும் எடுத்துரைக்க முயற்சித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் பொருளாதார அரிச்சுவடிப் பாடத்துக்குரிய கருத்துக்களைக்கூட தெரிந்திராதவர்களுக்கும் புரியும்படி எடுத்துரைத்திருப்பதாகக் கூறியுள்ளார். தொழிலாளர்கள் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எமது விருப்பம் என்று பேசியுள்ளார்.

கூலியுழைப்பும் மூலதனமும்" 1891ஆம் ஆண்டு எங்கெல்ஸ் மறுபதிப்பு கொண்டுவந்தார். அப்போது, குறிப்பிடுகிறார், இதுவரை இந்நூல் பல்வேறு மறுபதிப்புகளை கண்டுள்ளது. இவைகளில் மூலத்தின் வாசகம் எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே வெளியிடப்பட்டது, இந்தப் பதிப்பு 10,000 படிகளைக் கொண்டதாகப் பதிப்பிக்கும்போது மார்க்ஸ் இருந்திருந்தால் மாற்றமின்றி பதிப்பிப்பதை ஆமோதித்திருப்பாரா என்று கேள்வி எழுப்பி கூறுகிறார்:-
"நாற்பதாம் ஆண்டுகளில் மார்க்ஸ், அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய தமது விமர்சனத்தை இன்னும் முடித்தாகவில்லை. ஐம்பதாம் ஆண்டுகளின் கடைப் பகுதியில் தான் இது முடிவடைந்தது. ஆகவே "அரசியல் பொருளாதார விமர்சனத்துக்குப் பங்களிப்பு" (1859) என்னும் நூலின் முதற் பாகத்துக்கு முன்னதாய் வெளிவந்த அவருடைய நூல்கள், 1859க்குப் பிற்பாடு எழுதப்பட்டவற்றிலிருந்து சில விவரங்களில் மாறுபடுகின்றன, பிற்காலத்திய நூல்களின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கையில் விரும்பத் தகாதனவாயும் தவறானவையாகவுங்கூட தோன்றும் தொடர்களும், முழு வாக்கியங்களும் அந்நூலில் அடங்கியுள்ளன."

இதன் அடிப்படையில் தாம் மாற்றி அமைத்துள்ள பகுதியை விவரிக்கிறார் எங்கெல்ஸ்:-
"என்னுடைய மாற்றங்கள் ஒரேயொரு விவகாரம் பற்றியவை. மூலத்தின்படி தொழிலாளர் தமது உழைப்பைக் கூலிக்காக முதலாளியிடம் விற்கிறார், ஆனால் இங்குள்ள வாசகத்தின்படி அவர் தமது உழைப்புச் சக்தியை விற்கின்றார். இப்படி நான் மாற்றம் செய்திருப்பதற்குரிய விளக்கத்தைக் கூறுவது எனது கடமையாகும். இது வெறும் சொற் சிலம்பமல்ல, மாறாக அரசியல் பொருளாதாரம் அனைத்திலுமே மிக முக்கிய விவகாரங்களில் ஒன்றாகும் என்பதைத் தொழிலாளர்கள் கண்டு கொள்ளும் பொருட்டு, நான் அவர்களுக்கு இந்த விளக்கத்தைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்."

மார்க்ஸ் எழுதிய நூல்களின் காலத்தையும், மார்க்சின் புதிய கண்டுபிடிப்புகளையும் மனதில் கொண்டு வாசிக்க வேண்டும். மேலும் இந்த முன்னுரையில், எங்கெல்ஸ் உபரிமதிப்பு பற்றி எளிய முறையில் நாடகப் பாணியில் எழுதியிருக்கிறார். இதே போல் "பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை" என்று நூலுக்கு எழுதிய முன்னுரை ஒரு சிறந்த ஆய்வு முன்னுரைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 1895ஆம் ஆண்டு வெளியிட்ட இம்முன்னுரை முப்பத்து ஐந்து பக்கங்களுக்கு மேல் போகிறது.


No comments:

Post a Comment