Tuesday 17 July 2012

மார்க்சின் மூலதனம் பற்றி... எங்கெல்ஸ்


வெளியீடு: பாரதி புத்தகாலயம்

முதற்பதிப்பு : டிசம்பர், 2010

421, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018.
பக்: 144, விலை: ரூ.70/-

நூல் அறிமுகம்

பாட்டாளி வர்க்கத்துக்கு வல்லமை சேர்க்கும் 
ஆயுதமான மார்க்சின் 'மூலதனம்'

மார்க்சியம், என்பது காரல் மார்க்ஸ் தமது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எழுதிய கருத்துக்கள் முழுவதையும் குறிப்பதாகும். இதில் தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்ற மூன்று உட்பிரிவுகள் கொண்டுள்ளது. மூன்று உட்பிரிவுகளும் தம்முள் உள்ளிணைப்புக் கொண்டவையாகும்.

தத்துவம் என்பது இயற்கை, சமூகம் பற்றிய அறிதலின் பொதுவான விதிகளை பற்றிய விஞ்ஞானமாகும்.

அரசியல் பொருளாதாரம் என்பது மனிதச் சமூக வாழ்வின் அடித்தளமான பொருளாயாச் செல்வ உற்பத்தியை எடுத்துரைக்கிறது. அதாவது உற்பத்தியின் சமூக அமைப்பு, உற்பத்தி நிகழ்வின் போது மனிதர்களிர்களுக்கு இடையே ஏற்படுகிற பொருளாதார உறவுகள், மனித சமூக வளர்ச்சியில் தோன்றுகின்ற பொருளாயத நலன்களின் உற்பத்திவினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை நிர்வகிக்கும் விதிகளை ஆராய்கிறது.

விஞ்ஞான சோஷலிசம் என்பது அரசியல் பொருளாதாரத்தையும், தத்துவத்தையும் ஆதாரமாகக் கொண்டு முதலாளித்துவ சமூக நிலைமைகளையும், முரணையும், அது இறுதியில் அழிந்து போவது பற்றியும், அதன் தொடர்ச்சியாக நிகழும் சோஷலிச புரட்சியினை எட்டும் நியதிகளை வெளிப்படுத்துகிறது.

இம்மூன்றில் பொருளாதாரம் முதன்நிலை பெறுகிறது. ஏன் என்றால் பொருளாதார முறையே சமூக வளர்ச்சியின் அடித்தளம் என்றும், இந்த அடித்தளமே மேற்கட்டமைப்பான தத்துவம், அரசியல், மதம், சட்டம் போன்றவற்றை நிர்ணயிக்கிறது என்றும் மார்க்சியம்  கூறுவதால் பொருளாதாரமே முதன்மையாகவும், இம்மூன்றினில் அடிப்படையாகவும் இருக்கிறது. மார்க்சியப் பொருளாதாரம் வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பார்வையில் அணுகப்பட்டது. அதனால் வரலாறியல் பொருள்முதல்வாதம் இல்லை என்றால் இந்தப் பொருளாதாரம் இல்லை என்பதையும் சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்சின் "மூலதனம்" முதல் தொகுதி கி.பி.1867, செப்படம்பரில் வெளிவந்தது.   
  
முதலாளித்துவ சமூகம் இந்நூலை வெளிவந்த நேரத்தில் அதுபற்றி ஏதும் பேசாது மரணமவுனத்தைச் சாதித்தது. இந்த மவுனசதிதான் மாபெரும் இந்நூலுக்கு  எதிரான போராட்டமாக முதலாளித்துவ நினைத்திருந்தது. ஆனால் மகத்தான இப்படைப்பு மீதான, இந்த மவுனசதி வெகு காலத்துக்கு நீடிக்கவில்லை. மூலதன முதல் தொகுதியின் வெளியீடுகள் பெருகின, புதிய மொழிபெயர்ப்புகள் பல மொழிகளில் வெளிவந்தன.

இந்த மவுனசதியை உடைப்பதற்கு எங்கெல்ஸ்  மூலதனத்துக்கான மதிப்புரைகளை பலபத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவற்றில் மூன்று இந்த சிறுநூல் தொகுப்பில் இடம்பெறுகிறது. இரண்டாவதாக தொடக்கத்தில் வெளிவந்துள்ள மூலதன நூலின் முதல் தொகுதியின் முதல் நான்கு அத்தியாயங்களின் பொழிப்பு இடம் பெறுகிறது. இந்த பொழிப்புகளின் முதல் நான்கு அத்தியாயம், இன்றைக்கு கிடைத்திடும் நூலின் முதல் தொகுதியின் முதல் நான்கு பிரிவுகளில் அடங்கும். மூன்றாவதாக மூலதனத்தின் மூன்றாம் தொகுதிக்கு அனுபந்தமாகும். நான்காவது, "மூலதனம்" தொகுதி 3ல், அத்தியாயம் 27க்கு இடைச் சேர்ப்பாக எழுதியவை.

இவ்வகையில் எங்கெல்ஸ் தனது இறுதி காலம் வரை மூலதன நூலின் விளக்கத்துக்கான செழுமையினைச் செய்தார். அதாவது  மார்க்சின் பொருளாதாரக் கோட்பாடுகளை அதன் எல்லா வகையான எதிரிகளிடமிருந்து, விரோதிகளிடமிருந்தும் பாதுகாக்கும் பெரும் பங்களிப்பை செய்துள்ளதை இக்குறு நூல் வெளிப்படுத்துகிறது. இதனையே இந்நூலின் மார்க்சிய லெனினியக் கழகம் (மத்திய கமிட்டி, சோவித் கம்யூனிஸ்டு கட்சி) முன்னுரையில் வெளிடப்பட்டுள்ளது:-

"எங்கெல்சின் மதிப்புரையும் பொழிப்பும் மூலதனத்தைப் படித்தாய்வதற்கு உரிய மதிப்பும் மிகுந்த துணை நூல்களாகும். மூலதனத்தின் உள்ளடக்கம் அதில் பிரதானமாயும் மார்க்சின் சொற்களிலேயே தரப்பபட்டிருக்கிறது.

பொழிப்புரை மற்றும் மதிப்புரை இரண்டினதுமான ஈர்ப்புமையம், மார்க்சியப் பொருளாதார தத்துவத்தின் மூலைக்கல்லான உபரிமதிப்பின் தத்துவத்தில் காணக்கிடக்கிறது.பக்கம் 5-6

"மார்க்சை விமர்சனம் செய்த எண்ணற்ற பலர் மூலதனத்தின் முதல் தொகுதிக்கும் மூன்றாம் தொகுதிக்கும் இடையே "முரண்பாடுகள்" இருப்பதாகக் குறைகூறி அதை நிரூபிப்தற்கு என எழுதிக்குவித்து வீணாக்கிய காகித மலைகள் எத்தனையோ. தமது கட்டுரையில் எங்கெல்ஸ் அவர்களுக்கு உறுதியான பதிலடி கொடுத்தார். மார்க்சியத்தின் இந்தப் பகிரங்கமான விரோதிகளையும் மார்கசியத்தின் நண்பர்கள் போல வேஷமிடும் எதிராளிகளையும் ஒருங்கே முழுமையாக அம்பலப்படுத்தினார்"       பக்கம் 7-8

"எங்கெல்சின் கட்டுரை மதிப்புப் பற்றிய மார்க்சியத் தத்துவத்தின் மெய்யான பொருள்முதல்வாத விளக்கத்திற்கான ஓர் அரிய உதாரணமாகும். மார்க்சியத்தை ஊறு செய்யும் எல்லாவகையான சித்தாந்தப் புரட்டுகளையும் எதிர்த்துப் போராடுவதைற்குரிய ஈடும் எடுப்பும் மில்லாப் பேராயுதமாக இது இன்னும் விளங்ககுகிறது"          பக்கம் 8

எங்கெல்சின் மதிப்புரையும் பொழிப்புரையும் மூலதன வாசிப்புக்கு துணைபுரிவதையும், அத்துணைபுரிதல் மார்க்சின் சொற்களிலேயே தரப்பட்டுள்ளதையும் இம்முன்னுரை சுட்டுகிறது.

மார்க்சிய அரசியல் பொருளதாரம் என்பது பொருள்முதல்வாத விளக்கத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூலனத மூன்று தொகுதிக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக குறைகூறி, அதனை நிரூபிக்க முடியாமல் வீணாகிப் போன காகித மலைக்குவியலாக போவதற்கு, எங்கெல்ஸ் பதிலடிகொடுத்ததையும், மார்க்சிய விரோதிகளையும், மார்க்சியத்தின் நண்பர்களைப் போல வேடமிடும் எதிராளிகளையும் அம்பலப்படுத்துவதையும் இம்முன்னுரை குறிப்பிட்டுள்ளது.

அரசியல் பொருளாதாரத்தை பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கும் போதுதான், முதலாளித்துவத்தின் முரண்பாடுகளும் அதனைத் தொடர்ந்து பழையதை வீழ்த்தி புதிய சோஷலிஸ்ட் புரட்சிக்கு இட்டுச் செல்வதையும் எங்கெல்ஸ் விளக்குவதை இம்முன்னுரை தெளிவுபடுத்துகிறது.

" வர்க்க முரண்பாடுகள் உக்கிரமடைவதானது எவ்வாறு "பழமையை வீழ்த்தும் சக்திகளும், புதிய சமுதாயத்தை உருவாக்கும்    சக்திகளும் முதிர்ச்சி பெற" இட்டுச் செல்கிறது. அதாவது பாட்டாளிகளின் சோஷலிஸ்டு புரட்சிக்கு இட்டுச் செல்கிறது என்பதையும் எங்கெல்ஸ் காட்டுகிறார்." பக்கம் 5-6

            மூலதன நூல் சோஷலிசப்புரட்சியைப் பற்றி ஒன்றும் கூறவில்லை, அல்லது முதலாளித்துவமே இறுதியானது என்பது போன்ற முடிவுகள் எல்லாம், அரசியல் பொருளாதாரத்தை பட்டாளி வர்க்க சார்பாக புரிந்து கொள்ளாமையே காரணமாகும்.     

எங்கெல்ஸ் மூலதனநூலின் அடிப்படையில் முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழிப்பது பற்றி கூறுகிறார்:-
".. நம்முன் இருக்கும் நூலின் ஆசிரியர். பொருளாதார  விஞ்ஞானம் முழுவதுடனும் சம்பந்தப்பட்ட வகையில் மூலதனம், உழைப்பு ஆகியவற்றின் உறவு முழுவதையும் மறுக்க முடியாத அரிய அறிவுடன் விளக்குகிறார். "முதலாளித்துவ உற்பத்தி முறை" முழுவதும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்" பக்கம் 15 

மேலும்:-
"மூலதனத்தின் ஒரு முகமான குவிதல் மற்றும் திரட்சி என்பதோடு அக்கம்பக்கமாயும் அதே வேகத்தோடும் உழைக்கும் மக்கள் உபரி தொகையின் திரட்சியும் நடைபெறுகிறது. இவ்விரண்டும் சேர்ந்து முடிவில் ஒரு புறம் சமூகப் புரட்சியை அவசியமாக்கும் மறு புறத்தில் அதை சாத்தியமாக்கும் என்பதை நிரூபிக்கச் செய்யும் மாக்சின் தற்படைப்பான சாதனையாகும்"  பக்கம் 15

மூலதனத்தை பாட்டாளி வர்க்கத்தின் அணுகுமுறையில் பார்க்கும் போது தான், இது போன்ற முடிவுகள் கிடைக்கும்.

மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை கேள்விக்குள்ளாக்கும் முதலாளித்துவ பார்வையின் வாசிப்பில் மூலதனத்தில் சோஷலிசப் புரட்சியைப் பற்றி கூறியிருப்பது கண்ணிற்கு படாமல் உறுத்தும்.
                                                                                                           
       சமூகம் வர்க்கமாக பிரிந்துள்ள நிலையில், அரசியல் பொருளாதாரம் வர்க்கத் தன்மை பெற்றதாகவே இருக்கும். முதலாளித்துவ வர்க்க சமூகத்தில், முதலாளித்துவ அரசியல் பொருளாதாரமும், பாட்டாளி வர்க்க அர்சியல் பொருளதாரமும் தத்தம் வர்க்கத்தின் நலன்களின் அடிப்படையில் அணுகப்படுகின்றன.

       மார்க்சிய அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான வழியில் சமூகத்தின் வளர்ச்சியின் புறநிலை விதிகளை ஆராய்ந்து. முரண்பாட்டில் சிக்கிக் கொண்ட முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து, சோஷலிசப் புரட்சியை அடைவதற்கான வழியினை பாட்டாளி வர்க்க கட்சிக்கு காட்டுகிறது.
      
       கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வல்லமை சேர்க்கும் இதுபோன்ற நூல்களை பாரதி புத்தகாலயம் தொடர்ந்து வெளியிட வேண்டும்.

No comments:

Post a Comment