Thursday 20 October 2016

பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை- மார்க்ஸ் (நூல் அறிமுகம்)

பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை- மார்க்ஸ்

விலை.ரூ.95/-

வெளியீடு:
பாரதிபுத்தகாலயம்
சென்னை


தொலை பேசி- 044-24332424, 24356935       
விற்பனை 044-24332924
"பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை" என்ற நூலின் முதல் திட்டப்படி நான்காவது கட்டுரை "இங்கிலாந்தில் இன்றைய நிலை". இந்தக் கட்டுரை "புதிய ரைனிஷ் பத்திரிகை"யில் வெளிவரவில்லை. 1849 ஆண்டு நிகழ்ச்சிகள் மாகண்டத்தின் மீது ஏற்படுத்திய செல்வாக்கு மற்றும் இங்கிலாந்தின் நிலைமை போன்ற பிரச்சினைகளைப் பற்றி "புதிய ரைனிஷ் பத்திரிகை"யில் வெளிவந்த இதர கட்டுரைகளின் அடிப்படைகளைக் கொண்டு, 1895ஆம் ஆண்டு எங்கெல்ஸ் இந்நூலை வெளியிடும் போது நான்காம் அத்தியாயமாக "1850ல் அனைவருக்கும் வாக்குரிமை ஒழிப்பு" என்று தலைப்பிட்டு வெளியிட்டார். மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் கருத்துக்கள் இந்தப் பகுதியில் இடம் பெறுகிறது. இதனை எங்கெல்ஸ் தமது முன்னுரையில் கூறுகிற முறையில் அறியலாம். முதல் மூன்று அத்தியாயத்தைப் பற்றி தமது முன்னுரையில் எங்கெல்ஸ் கூறுகிறார்:-

"..1847ஆம் ஆண்டின் உலக வாணிக நெருக்கடியே பிப்ரவரி, மார்ச் புரட்சிகளின் மெய்யான தாயாக இருந்து வந்துள்ளது என்பதும், 1848 நடுப் பகுதிக்குப் பின்னர் படிப்படியாகத் திரும்பிவந்து கொண்டிருந்ததும், 1849 மற்றும் 1850ல் முழு மலர்ச்சி அடைந்ததுமான தொழில்துறை செழிப்பு புதிதாக வலுவாக்கப்பட்ட ஐரோப்பிய பிற்போக்கு நிலைக்கு புத்துயிர்பெற்ற சக்தியாக இருந்தது என்பதும் தெட்டத்தெளிவாகியது. அது தீர்மானகரமானதாக இருந்தது. முதல் மூன்று கட்டுரையில் புரட்சிகர சக்தியின் புதிய எழுச்சி விரைவில் ஏற்படலாம் எனும் எதிர்பார்ப்பு இன்னமும் காணப்பெற்றது,.."1

நான்காம் அதியாயத்தைப் பற்றி எங்கெல்ஸ் கூறுகிறார்:-
"..ஆனால், 1850 முன்பனிக் காலத்தில் வெளியான கடைசி இதழான, இரட்டை இதழில் (மே முதல் அக்டோபர் வரை) மார்க்சும் நானும் எழுதிய வரலாற்று விமர்சனம் இந்த பிரமைகளில் இருந்து முற்றாக முடிவாக முறித்துக் கொள்கிறது: "ஒரு புதிய நெருக்கடியின் பின்விளைவாக மட்டுமே ஒரு புதிய புரட்சி சாத்தியம் ஆகும். ஆயினும் இது இந்த நெருக்கடி எவ்வளவு நிச்சயமானதோ அவ்வளவுக்கு அதுவும் நிச்சயமானது." ஆனால், செய்யப்பட வேண்டியிருந்த முக்கியமான மாற்றம் அது மட்டுமே. முந்திய அத்தியாயங்களில், அல்லது அவ்விடத்தில் நிறுவப்பெற்றதான காரணகாரியத் தொடர்புகளிலும், கொடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றிய மேல்விளக்கத்தில் மாற்றப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள 1850ஆம் ஆண்டு மார்ச் 10லிருந்து இலையுதிர் காலம் வரையிலுள்ள கட்டுரைகளின் தொடர்ச்சி இதை நிரூபிக்கிறது. ஆகவே, இந்தப் புதிய பதிப்பில் இத்தொடர்ச்சியை நான்காவது கட்டுரையாக நான் சேர்த்துள்ளேன்."2

ஜூன் வீழ்ச்சிக்குப் பிறகு முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளிவர்க்கத்துக்கு எதிராக திரும்பியதைப் பற்றி மார்க்ஸ் "அப்போது முதலாளித்துவ வர்க்கப் பாரிஸ் தீப அலங்கார வீழா நடத்தியது, அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கப் பாரிஸ் எரிந்தது, இரத்தம் சிந்தியது, மரண வேதனையில் அவதியுற்று அரற்றியது. முதலாளித்துவ வர்க்கத்துக்கும், பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையே பொதுவான நலன்கள் இருந்த காலம்வரை மட்டுமே இந்த சகோதரத்துவம் நீடித்தது."3

மேலும், மார்க்ஸ் அந்தப் புரட்சிகர எழுச்சி, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்குமான போராக இறுதியில் மாறிவிடும் என்று நினைத்தார். இது நிகழாமல் போய்விட்டது.

"1848 பிப்ரவரி 25 பிரான்சுக்கு குடியரசை வழங்கியது, ஜூன் 25 அதன் மீது புரட்சியைத் திணித்தது, ஜூனுக்குப் பிந்திய புரட்சி என்பதன் அர்த்தம் முதலாளித்துவ சமூகம் வீழ்த்தப்படுதல் என்பதாகும், அப்படியிருக்க பிப்ரவரிக்கு முன்னால் இதன் அர்த்தம் அரசாங்கத்தின் வடிவத்தை வீழ்த்துவது என்பதாகும்.

ஜூன்  போராட்டத்துக்கு முதலாளிவர்க்கத்தின் குடியரசுவாதிப் பிரிவு தலைமை தாங்கியது, அது வெற்றி பெற்றது அரசியல் அதிகாரம் தவிர்க்க முடியாதபடி அதன் வசம் கிட்டியது."4

ஆனால் நிலைமை மாறிவிட்டது. இதனை எங்கெல்ஸ் நான்காம் அத்தியாயத்திற்கு முகவுரையாக எழுதியுள்ளார்:-

""புதிய ரைனிஷ் பத்திரிகை"யின் இறுதியாக வெளிவந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது இரட்டை இதழின் விமர்சனத்தில் முதல் மூன்று அத்தியாயத்தின் தொடர்ச்சி காணப்படுகிறது. 1847ல் இங்கிலாந்தில் வெடித்தெழுந்த மாபெரும் வாணிக நெருக்கடி முதலில் வருணிக்கப்பட்ட பின்னர், 1848 பிப்ரவரி மார்ச் புரட்சிகளில் ஐரோப்பா மாகண்டத்தில் அரசியல் சிக்கல்கள் முன்னணிக்கு வந்தது. அங்கு அதன் எதிர்விளைவுகள் மூலம் விளக்கப்பட்ட பின் 1848ஆம் ஆண்டின் போது வாணிகம் மற்றும் தொழில் துறையின் செழிப்பு எவ்வாறு அங்கு மீண்டும் ஏற்பட்டு 1849ல் மேலும் கூடுதலாக அதிகரித்தது என்பதும், இது புரட்சிகர எழுச்சியை முடமாக்கி, உடன் இணைவாகப் பிற்போக்கின் வெற்றிகளை சாத்தியமாக்கியது என்பதும் எடுத்துக் காட்டப்பட்டது."5

பிற்போக்கின் வெற்றிக்குப் பிறகு புரட்சிகர எழுச்சி முடங்கிப் போனதைத் தொடர்ந்து, நான்காம் அத்தியாயத்தில், எதிர்காலத்தில் வரப்போகிற புரட்சிகர சூழ்நிலைக்கு,  புறநிலைக் காரணமான பொருளாதார நெருக்கடியின் அவசியத்தை, வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின்படி விவரித்துள்ளார்கள்:-
"முதலாளித்துவ உறவுகளின் அகத்தே ஆகச் சாத்தியமான அளவுக்கு செழுமையுற்று வளரும் முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி சக்திகளைக் கொண்டு விளங்கும், இந்தப் பொதுவான செழுமை ஏற்பட்டதோடு மெய்யான புரட்சி பற்றிய பேச்சுக்கே இடமில்லை. நவீன உற்பத்தி சக்திகள் மற்றும் முதலாளித்துவ உற்பத்தி வடிவங்கள் எனும் இந்த காரணிகள் இரண்டும் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் காலப்பகுதிகளில் மட்டுமே இத்தகைய ஒரு புரட்சி சாத்தியமாகும்.

மாகண்டத்தின் முறைமைக் கட்சியின் தனிப்பட்ட பிரிவுகள் இப்போது ஈடுபட்டும் மற்றும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்தும் வரும் பல்வேறு பூசல்கள் புதிய புரட்சிகளுக்கு எவ்வகையிலும் சந்தர்ப்பம் அளிப்பனவாக இல்லை. ஆனால் நேர்மாறாக, உறவுகளின் அடிப்படை தற்காலிகமாக மிகவும் பத்திரமாக இருப்பதாலும் மிகவும் முதலாளித்துத் தன்மை கொண்டதாக இருப்பதாலும் மட்டுமே இந்தப் பூசல்கள் சாத்தியமாகின்றன. இது பிற்போக்கு சக்திகளுக்குத் தெரியாது.

முதலாளித்துவ வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கான சகல பிற்போக்கு முயற்சிகளும், ஜனநாயகவாதிகளின் அனைத்து தார்மிக ஆக்ரோஷமும் எல்லா உற்சாகமான பிரகடனங்களுக்கும் ஏற்பட்டது போலவே அதே அளவு நிச்சயமாக எதிர் தாக்குதலுக்கு இலக்காகும். ஒரு புதிய நெருக்கடியின் பின்விளைவாக மட்டுமே ஒரு புதிய புரட்சி சாத்தியம். ஆயினும் இது இந்த நெருக்கடி எவ்வளவு நிச்சயமானதோ அவ்வளவுக்கு அதுவும் நிச்சயமானது."6 

பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி பெறும் என்று தவறாக எதிர்பார்த்த மார்க்ஸ், தமது தவறுக்கான புறநிலைமைகள் மாறிவிட்டதை அறிந்த பின்பு, தமது கருத்தை மாற்றிக் கொண்டு, அடுத்த பணியில் இறங்கிவிட்டார். அப்பணி என்னவென்றால், நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ சோஷலிசம், மற்றும் தொழிலாளர்களின் தன்னியல்பான கம்யூனிசம் ஆகியவற்றில் இருந்து தனியாக வேறுபடுத்தி, வளர்த்தெடுத்து, முறைப்படுத்தப்பட்ட விஞ்ஞான சோஷலிசத்தை பாட்டாளி வர்க்கத்துக்கு அளித்துள்ளார் என்பதாகும். ஆனால் மார்க்ஸ் மீது அவதூறு செய்பவர்கள் இதனை கண்டுகொள்ளாமல், அவர் கூறியவற்றில் பாதியை மட்டும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கூறிவருக்கின்றனர். "மார்க்ஸ் தவறிழைத்து விட்டார்" என்று கூறியதையே கூறும் நண்பர்களுக்கு மார்க்ஸ் வளர்த்தெடுத்ததில் அக்கறையில்லாமல், அவதூறை மட்டுமே இன்றுவரை தொடர்ந்து முன்வைக்கின்றனர்.

நூலின் உள்ளே காணப்படும் விளக்கங்களுக்கு மேல்விவரமாக எங்கெல்ஸ் இந்நூலின் முன்னுரையில் (1895) தெளிவுபடுத்தியவை இத்தகைய அவதூறை தவிடுபொடியாக்குகிறது.

எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையில் கூறப்பட்டவை:-

“உடன்நிகழ்கின்ற வரலாற்றின் ஒரு பகுதியை வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் விளக்க எடுத்த முயற்சியில் மார்க்ஸ் எழுதிய "பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை" என்னும் நூல் முதல் இடம் பெறுகிறது. "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்" மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகிய இருவராலும் நவீனகால வரலாறு, இந்தக் கோட்பாட்டின்படி ஒரு பொதுவான பார்வையில் எழுதப்பட்டது. வரலாறு பற்றி பொருள்முதல்வாதம் என்பது, இறுதிப் பகுப்பாய்வில் பொருளாதாரக் காரணங்களின் விளைவாக அரசியல் நிகழ்வுகளை ஆராய்வதையே குறிக்கிறது.

நடப்புகால வரலாற்றின் நிகழ்ச்சிகளும் நிகழ்ச்சித் தொடர்களும் மதிப்பிடப்படும் போது இறுதியான பொருளாதாரக் காரணங்களை சென்றடைவது சாத்தியமல்ல. தொடர்ந்து மாறிவரும் காரணிகளில் மிகவும் முக்கியமான காரணிகள் மேல்மட்டத்தில் அவை வன்மையான முறையில் திடீரென்று தம்மை வெளிப்படுத்துவதற்கு முன்பாக பொதுவாக நீண்ட காலத்துக்கு ரகசியமாகவே செயல்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்கான பொருளாதார வரலாற்றின் ஒரு தெளிவான மதிப்பீட்டை உடன்நிகழ்வான முறையில் பெறுவது கடினம். ஆதார விவரங்களைத் திரட்டி சலித்தாராய்ந்ததின் பின்னால் மட்டுமே இது சாத்தியப்படும். இதற்குப் புள்ளி விவரங்கள் அவசியமான துணை சாதனங்களாக இருக்கின்றன. மேலும் இவை எப்போதும் காலாகாலத்தில் கிட்டுவதில்லை.

ஆராயவேண்டிய எல்லாப் போக்குகளின் அடிப்படையான பொருளாதார நிலையின் சமகால மாற்றங்களைத் தவிர்க்க முடியாதபடி கவனிக்காமல் விட்டுவிடுவது, பிழைக்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் சமகால வரலாற்றை ஆராய்வதற்கு இவை யாரையும் தடுத்துவிடவில்லை. மார்க்ஸ் இந்தப் படைப்பை எழுதும் போது மேலே குறிப்பிட்ட பிழையின் ஆதாரம் இன்னும் அதிகப்படியாகத் தவிர்க்க இயலாததாக இருந்தது. 1848-49ஆம் ஆணடுகளின் புரட்சிக் காலகட்டத்தில், நடைபெறும் பொருளாதார மாற்றங்களைக் கண்டுணர்வதோ அல்லது அவற்றைக் கருத்தில் வைத்திருப்பதோ அறவே சாத்தியம் அற்றதாக இருந்தது. 1849-50 ஆம் ஆண்டு வரையிலும் இதே நிலைமை தான் இருந்தது. இப்படிப்பட்ட நிலைமையில் தான் மார்க்ஸ் இந்த நூலை எழுதத் தொடங்கினார்.

பாதகமான சூழ்நிலையிலும், பிப்ரவரி புரட்சிக்கு முன்பு பிரான்சில் நிலவிய பொருளாதார நிலைமை மற்றும் பிப்ரவரி புரட்சிக்குப் பிந்தியதான அந்த நாட்டின் அரசியல் வரலாறு ஆகிய இரண்டையும் குறித்த மார்க்சின் துல்லியமான அறிவு நிகழ்ச்சிகள் பற்றிய ஒரு சித்திரத்தை வழங்குவதைச் சாத்தியமாக்கியது. இந்தச் சித்திரம் அன்று முதல் இன்று வரை எவரும் அடைய முடியாததோர் அளவுக்கு அவைகளின் உள்ளார்ந்த தொடர்புகளை வெளிப்படுத்திக் காட்டியது. இதற்கு பின்னால் மார்க்ஸ் தாமே பிரயோகித்த இரட்டைச் சோதனையில் வென்று தேறியது.

1850க்குப் பின்னர் மார்க்ஸ் மீண்டும் ஒருமுறை பொருளாதார ஆராய்ச்சிகள் செய்தவதற்கு ஓய்வு நேரம் கிடைத்தது. கடந்த பத்து ஆண்டு காலத்திய பொருளாதார வரலாற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார் என்பதில் அவரது முதல் சோதனை அமைந்தது. இதன் மூலம் தொடர்ச்சியில்லாத ஆதாரங்களின் மீதும், பாதி ஊகத்தின் மீதும் அனுமானித்தவைகள் இப்போது உண்மையான விவரங்களின் அடிப்படையில் தெள்ளத்தெளிவாக மார்க்சுக்கு விளங்கிற்று.

1847ஆம் ஆண்டின் உலக வாணிக நெருக்கடியே பிப்ரவரி-மார்ச் புரட்சிகளின் மெய்யான தாயாக இருந்து வந்துள்ளது, 1848ஆம் ஆணடின் நடுப்பகுதிக்குப் பின்னர் அது படிப்படியாக செழுமை நிலைக்கு திரும்பிவந்து கொண்டிருந்தது, 1849 மற்றும் 1850ஆம் ஆண்டுகளில் முழு மலர்ச்சி அடைந்ததுமான தொழிற்துறை புதிதாக வலுப்படுத்தப்பட்ட ஐரோப்பிய பிற்போக்கு சக்திகளுக்கு மீண்டும் புத்துயிரூட்டும் சக்தியாக இருந்தது என்பதும் இதன் மூலம் தெட்டத்தெளிவாகியது.

இந்நூலின் முதல் மூன்று கட்டுரைகளில் புரட்சிகர சக்திகளின் புதிய எழுச்சி விரைவில் ஏற்படலாம் எனும் எதிர்பார்ப்பு இன்னமும் காணப்பெற்றது. 1850ஆம் ஆணடில் இறுதி வெளியீடான இரட்டை இதழில் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர் எழுதிய விமர்சனம் இந்தப் பிரமைகளில் இருந்து தீர்மானகரமாக முறித்துக் கொள்கிறது.

நான்காம் அத்தியாயத்தில் "ஒரு புதிய நெருக்கடியின் பின்விளைவாக மட்டுமே ஒரு புதிய புரட்சி சாத்தியம். ஆயினும் இது இந்த நெருக்கடி எவ்வளவு நிச்சயமானதோ அவ்வளவுக்கு அதுவும் நிச்சயமானது." இது ஒன்றுமட்டுமே செய்யப்பட வேண்டிய பெரிய மாற்றமாக இருந்தது. முந்திய அதிகாரங்களிலும் அவைகளில் நிலைநிறுத்தப்பட்ட காரணகாரியத் தொடர்புகளிலும், கொடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றிய விமர்சனத்திலும் மாற்றப்படுவதற்கு ஒன்றுமே இருக்கவில்லை

அவர் எதிர்கொண்ட இரண்டாவது சோதனை மேலும் கடினமானதாகும். 1851 டிசம்பர் 2ஆம் தேதி லுயீ போனப்பார்ட் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னால் உடனடியாக, 1848 பிப்ரவரி முதல், தற்போதைக்கு புரட்சிகரக் காலகட்டத்தை முழுமையாக நிறைவு செய்த இந்த நிகழ்ச்சி வரையிலான பிரான்சின் வரலாற்றை மார்க்ஸ் புதியதாக "லுயீ போனப்பாட்டின் பதினெட்டாவது புரூமேர்" என்ற நூலில் எழுதினார்.

இந்தச் சிற்றேட்டில் மிகவும் சுருக்கமாகவே என்றாலும், நமது இந்தப் பிரசுரத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கும் இந்தக் காலப்பகுதி மீண்டும் எடுத்தாளப்பட்டிருக்கிறது. ஓராண்டுக்குப் பின்னால் நிகழ்ந்த தீர்மானகரமான சம்பவத்தின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதான இந்த இரண்டாம் விளக்கத்தை நமது விளக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், மாற்றுவதற்கு என மிகச் சொற்பமே இருந்தது என்பது தெரியவரும்.”

மார்க்ஸ் எழுதிய இந்தப் படைப்புக்கு உள்ள சிறப்பியல்பு என்னவென்றால், உலகின் எல்லா நாடுகளது தொழிலாளர் கட்சிகள் பொருளாதார மாற்றத்துக்கான தமது கோரிக்கையை சுருக்கமாக தெரியப்படுத்திய வழிமுறையை முதன்முறையாக வெளியிட்டதேயாகும். சமூகம் உற்பத்தி சாதனங்களை தன்வயப்படுத்திக் கொள்வதாகும். அதாவது சமூக உடைமையாக்கப்படுதலைக் குறிப்பதே இந்த சிறப்பியல்பாகும். இதனை மார்க்ஸ் இரண்டாம் அத்தியாயத்தில் கூறுகிறார்:- "..வேலை செய்யும் உரிமையின் பின்னால் மூலதனத்தின் மீதான அதிகாரம் நிற்கிறது."

மூலதனத்தின் மீதான அதிகாரத்துக்குப் பின்னால் உற்பத்தி சாதனங்கள் தன்வயப்படுத்துவதும், அவை ஒன்றிணைந்த தொழிலாளி வர்க்கத்தின் கீழ் வைக்கப்படுவதும், எனவே கூலி உழைப்பும் மூலதனமும் மற்றும் அவற்றின் பரஸ்பர உறவுகளும் ஒழிக்கப்படுவதும் இதில் அடங்கியிருந்தன. இந்தக் கருத்துரையில்தான் நவீன தொழிலாளியான பாட்டாளி வர்க்கத்தின் கோட்பாடாக விஞ்ஞான சோஷலிசம் நிறுவப்படுகிறது. நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ சோஷலிசம், மற்றும் தொழிலாளர்களின் தன்னியல்பான கம்யூனிசம் ஆகியவற்றில் இருந்து தனியாக வேறுபடுத்தி, முதல்முறையாக விஞ்ஞான சோஷலிசம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்சில் பாட்டாளி வர்க்கப் புரட்சி உடனடியாக ஏற்படப் போகிறது என்ற தவறான கணிப்புக்குப் பின்னணியில் அமைந்த காரணங்களை மார்க்சும் எங்கெல்சும் எடுத்துச்சொல்லி, அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டத்துக்கான செயல்தந்திரங்களையும் வகுத்துக் கொடுத்த பின்பும் மார்க்ஸ தவறு செய்துள்ளார் என்பதாக வரலாற்று நிகழ்வின் முதல்பாதியை மட்டும் ஒருதலைப்பட்சமாக முன்னிறுத்தி, மார்க்சையும் அவரது வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும் தவறாக சிலர் சித்தரிக்கின்றனர். இந்த அவதூறு இன்றும் தொடர்கிறது.

அந்த அவதூறு இவ்வழியிலேயே அமைந்துள்ளது:-
'இறுதி உண்மையைக் கண்டுவிட்ட ஞானிகளாக மார்க்சும், எங்கெல்சும் தங்களை எப்போதுமே கருதிக் கொண்டதில்லை என்பது தெளிவு. உண்மையைக் கண்டடைவதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அறிவியல் ஆய்வாளர்களாகவே அவர்கள் தங்களைக் கருதினார்கள். அந்தப் பொருளில்தான், மார்க்சிய வரலாற்று மாணவர்கள், இந்த நூலாசிரியர் உட்பட, வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையை ஏற்றுக் கொள்கின்றார்கள். வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் வரலாற்றைப் பயிலும், வரலாற்று ஆய்வில் ஈடுபடும் எவரொருவரும் இந்தக் கண்ணோட்டத்தைப் பின்பற்றாத மற்ற வரலாற்று ஆய்வாளர்கள் வெளிக்கொணரும் வரலாற்று உண்மைகளை அலட்சியப்டுத்தக் கூடாது.'

மாறாத அந்த இறுதி உண்மையைக் கண்டுவிட்ட மகானாக தம்மைப் பற்றி அவர்கள் கூறிக்கொள்ளவில்லை என்பது உண்மைதான். ஆனால் சமூக வளர்ச்சி அடிப்படையினாலான மாற்றத்தின் விதியை அவர்கள் கண்டுபிடித்தார்கள். வரலாறை விஞ்ஞான பூர்வமாக அணுகுவதற்கான - அதாவது வரலாற்றியல் பொருள்முதல்வாத- கண்ணோட்டத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மேலே கொடுக்கப்பட்ட அவதூறு செய்பவர்களின் தொனி மார்க்சும் தவறு செய்வார் என்றும் எனவே வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் தவறு செய்யும் என்பதாகவும் இருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சிப் பற்றிய, அணுகுமுறையைப் பொறுத்தவரை அவர் தீர்க்கமுடியாத தவறெதும் செய்திடவில்லை, வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஒன்றும் குறைப்பிரசவமில்லை.

எங்கெல்ஸ் தனது முன்னுரையில் கூறியது போல் இந்நூலின் முதல் மூன்று அத்தியாயங்களில் 1847ஆம் ஆண்டின் உலக வாணிக நெருக்கடியே பிப்ரவரி, மார்ச் புரட்சிகளின் தோற்றமாக இருந்தது. ஜூன் வீழ்ச்சிக்குப் பிறகு மார்க்ஸ் எதிர்ப்பார்த்தபடி புரட்சி தொடரவில்லை, புரட்சியின் தோற்றத்துக்கு அடிப்படையாக அமைந்த வாணிக நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது, என்று கூறியுள்ளார். நான்காம் அத்தியாயத்தில், ஒரு புதிய நெருக்கடியின் பின்விளைவாக மட்டுமே ஒரு புதிய புரட்சி சாத்தியம். ஆயினும் இந்த நெருக்கடி எவ்வளவு நிச்சயமானதோ அவ்வளவுக்கு அதுவும் நிச்சயமானது என்று கூறியுள்ளார். இதனைத் தனது முன்னுரையில் மிகத் தெளிவாக விவரித்தும் உள்ளார் எங்கெல்ஸ். இதைப் புரிந்து கொள்ள முடியாமல் அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத பலர், இன்றும் கூட மார்க்ஸ் தவறு செய்துவிட்டார். வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் தவறு செய்யும் என்பதாகத் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

பயன்படுத்திய நூல்கள்

1.பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை- முன்னுரை, மார்க்ஸ்
எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 1- பக்கம் 96)
2.,பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை- முன்னுரை, மார்க்ஸ்
                                                                                எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 1- பக்கம் 96-97)
3.,பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை- தேர்வு நூல்கள்  தொகுதி 2- பக்கம் 169-170)
4,பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை- தேர்வு நூல்கள்  தொகுதி 2- பக்கம் 174)
5.,பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை- தேர்வு நூல்கள் தொகுதி 2- பக்கம் 288)
6.,பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை"- தேர்வு நூல்கள் தொகுதி 2- பக்கம் 293-294

No comments:

Post a Comment