Friday 1 March 2019

ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு


அத்வைதத்தைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அளவுக்குச் சிறிய மற்றும் பெரிய நூல்களை ஆதிசங்கரர் எழுதியுள்ளார். அத்வைதத்தைப் புரிந்து கொள்வதற்கு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு அறிந்து கொள்வது அவசியமா? என்ற கேள்வி கேட்டால், அதற்கான பதில் இதுதான். ஆதிசங்கரர் வரலாறு அவரது அத்வைதத்திற்குப் பொருந்தாத அற்புதங்களைக் கொண்டுள்ளது. அந்த அற்புதங்கள் அத்வைத தத்துவத்தை விளக்குவதற்குத் தேவையற்றதாக இருக்கிறது என்பது உண்மையே.


ஒரு தத்துவத்தை நிலைநிறுத்திய ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை அறிகிறோமோ இல்லையோ, அவர் காலத்தை அறிந்தாக வேண்டும். அந்தக் காலத்தோடு அவரைப் பற்றிய சில விவரங்கள் அறிந்திருப்பது தேவையான ஒன்றே. இருந்தாலும் ஆதிசங்கரைப் பற்றிய வரலாற்றை அத்வைதிகள் எவ்வாறு கூறுகின்றனர் என்பதை அறிந்து கொள்வது அவரைப் பின்பற்றுகின்ற அத்வைதிகளை அறிந்து கொள்வதற்கு உதவிடும்

இன்று கேரளம் என்று அழைக்கப்படுகிற மாநிலத்திலுள்ள காலடி என்ற சிற்றூரில் ஆதிசங்கரர் பிறந்தார். அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் “சங்கர விஜயம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதே பெயரில் பலநூல்கள் இருக்கின்றன. அதில் குறிப்பிடத் தக்கவை, ஆனந்தீய சங்கர விஜயம், சித்விலாசீய சங்கர விஜயம், வியாஸாசலீய சங்கர விஜயம், குருரத்னமாலாஸ்தவம் போன்றவையாகும். இந்நூல்கள் ஆதிசங்கரர் பிறந்து பல நூற்றாண்டுகள் கடந்த பின்பு எழுதப்பட்டது. அதனால் இந்நூல்களுக்கு இடையே முரண்பாடுகள் காணப்படுகின்றன.

ஆதிசங்கரர் காலத்தைச் சிருங்கேரி மடம் கி.பி.788-820 என்று அம்மடத்தின் ஆசாரியர் வரிசையைக் கொண்டு கணக்கிட்டுள்ளனர். பொதுவாக ஆய்வாளர்கள் இந்த ஆண்டையே ஏற்கின்றனர். ஆதிசங்கரர் அமைத்த நான்கு மடங்களில் வராத காஞ்சி மடம் ஆதிசங்கரர் காலத்தைக் கி.மு 509 என்று கணக்கிடுகிறது. சிருங்கேரி மடத்தைத் தவிர மற்ற மதங்கள் காஞ்சி மடம் குறிப்பிடுகிற ஆண்டையே ஏற்றுக் கொண்டுள்ளது. ஆதிசங்கரர் முப்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதில் எல்லா மடங்களும் ஒத்த கருத்தையே கொண்டுள்ளன.

ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை அவர் பிறந்து ஆண்டுகள் பல கடந்து எழுதப்பட்டுள்ளதால், அவரது வாழ்க்கையில் சில அற்புதங்கள் நிகழ்த்தாக கதை இணைக்கப்பட்டுள்ளது.

சிவகுரு ஆரியாம்பாள் என்ற தம்பதிக்கு வெகு காலம் குழந்தை பேறு இல்லாமல் இருந்தது. சிலரது ஆலோசனையின்படி, திருச்சூரில் (சிவபுரம்) உள்ள வடக்கு நாதன் என்கிற சிவனிடம் பிள்ளை வரம் வேண்டிய வழிபடச் சென்றனர். அங்கு அவர்களின் கனவில் சிவபெருமான் தோன்றி, “வேண்டுதலை ஏற்று நிபந்தனைக்கு உட்பட்டு உங்களுக்குப் பிள்ளை வரம் தருகிறேன். நல்லறிவும், நற்குணமும் கொண்ட ஆனால் ஆயுள் குறைந்த ஆண் குழந்தை வேண்டுமா? அல்லது அறிவற்ற, கெட்ட குணங்களைக் கொண்ட பல குழந்தைகள் வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு அத்தம்பதியினர் ஆண்டவனிடம், “எங்களுக்கு வேண்டியதையும், வேண்டாதவையும் அறிந்த ஆண்டவரே, இதற்கு நீங்களே முடிவெடுத்து எங்களுக்கு எது நன்மை பயக்குமோ அதனை அருள்வீர் என்று வணக்கத்துடன் தெரிவித்தனர். ஆண்டவர் அவர்களிடம் “சோதனையில் வென்ற உங்களுக்கு நானே மகனாகப் பிறக்கிறேன் என்று கூறி மறைந்தார்.

தத்துவ மசி என்ற மகாவாக்கியத்திற்கு, “நீயே அது என்று அத்வைதப்படி விளக்கம் அளித்த ஆதிசங்கரரின் பிறப்பு இந்தவகையில் இறையருள் பெற்றதாகக் கதைகட்டுவது வியப்பாக இருக்கிறது. இந்தக் கதையினை வடித்தவர்கள் ஞானவழியை மட்டும் செல்வதாக இல்லாது, கர்ம வழியினையும் பின்பற்றுபவராக இருந்து எழுதியது போல் இருக்கிறது. அல்லது கர்ம வழிபட்டவர்களுக்காக ஞானவழியில் நிற்பவர்கள் எழுதியதாகவும் கொள்ளலாம். கதை வழியில் தொடர்வோம்.

பத்து மாதம் சென்ற பிறகு ஆரியாம்பாள் ஆண் மகவை பெற்றார். சிவபெருமானே குழந்தை வடிமாக வந்துள்ளதால் அந்தக் குழந்தைக்குச் சங்கரன் என்று பெயரிட்டனர். சங்கரன் என்பதற்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் என்று பொருளாகும். அச்சங்கரன் சத்சித்ஆனந்தம் (இயல்பிலேயே ஆனந்தமயம்) என்ற அத்வைத சித்தாந்தத்தைத் தமது வாழ்நாளில் தனது எழுத்துக்களால் நிலைநிறுத்தினார்.

சங்கரனுக்கு மூன்று வயதிலேயே படிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுத்தனர். தாய் மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் சங்கரன் சிறந்த தேர்ச்சி பெற்றார். இங்கே தாய் மொழி என்று கூறியவுடன், காடிலயில் இன்று பேசப்படுகிற மலையாளத்தையே குறிப்பதாகப் பலரும் எண்ணுகின்றனர்.

உண்மையில் ஆதிசங்கரர் பிறந்த போது அங்கே தமிழ்தான் பேசப்பட்டது. மலையாளம் என்கிற மொழி தோன்றி கிட்டதட்ட ஆயிரம் ஆணடுகள் தான் ஆகிறது. ஆதிசங்கரர் மலையாளம் தோன்றுவதற்குக் கிட்டதட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவர். அதனால் அவரது தாய் மொழி தமிழேயாகும். தமிழ் மூவேந்தர்களில் சேர அரசர்கள் ஆண்டப் பகுதியாகத்தான் காலடி பலகாலமாக இருந்தது. ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆர்.பி.வி.எஸ்.மணியன் அவர்கள், “ஆகவே சங்கரர் தமிழ்தான் பேசியிருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை (பக்கம்- 19) என்று எழுதியுள்ளார்.

சங்கரருக்கு நான்கு வயதை எட்டிய போது தகப்பனார் சிவகுரு இயற்கை எய்தினார். இந்தத் துயரத்தின் தொடர்ச்சியிலும் ஆரியாம்பாள் தமது பிள்ளையின் ஐந்தாம் வயதில் உபநயனம் செய்வித்தார். பூணூல் அணிந்த பின் சங்கரர் தாயைப் பிரிந்து குருகுலவாசம் சென்றார். அங்கு வேதம் மற்றும் பிற சாஸ்திரங்களைக் கற்றார். குருகுலவாசத்தின் போது பிள்ளைகள் பொதுமக்களிடம் சென்று பிச்சைப் பெற்றே உண்பர். அவ்வாறு பிச்சை ஏற்கும் போது நடந்த நிகழ்வில் தான் சங்கரர் “கனகதார ஸ்தோத்திரம் பாடியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது ஆதிசங்கரர் பாடியது தானா? என்ற சந்தேகம் எழுப்படுகிறது.

ஸ்ரீ ஜகத்குரு க்ரந்தமாலா என்ற பெயரில் ஆதிசங்கரரின் ஸ்தோத்திரங்கள் மற்றும் பிரகரணங்கள் ஆகியவற்றைப் பத்துத் தொகுதியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இத் தொகுப்பில் கனகதார ஸ்தோத்திரம் இடம் பெறவில்லை.

குருகுலத்தில் கற்றுமுடித்த சங்கரன் வீடுதிரும்பினார். தமது தாயாரை அன்போடு கவனித்துக் கொண்டார். வைதீக முறையிலான மனித வாழ்க்கை நான்கு ஆசிரமங்களைக் கொண்டுள்ளது. மாணவ ஆசிரமம், இல்லற (கிரகஸ்தா) ஆசிரமம், வானப்பிரஸ்த ஆசிரமம், சந்நியாச ஆசிரமம். இதில் மாணவ ஆசிரமத்தை சங்கரர் முடித்துவிட்டார். அடுத்து ஏற்க வேண்டிய இல்லற ஆசிரம். ஆனால் சங்கரர் சந்நியாசதை ஏற்கவே விரும்பினார். இதற்குத் தமது தாயிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்று தெரிந்திருந்தது. அதனால் தகுந்த நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இதனை அறிந்து கொண்ட தாய் சங்கரருக்குத் திருமணம் நடத்து முடிப்பதற்கான முயற்சியைத் தொடங்கினார். தயாரின் அனுமதியுடன் எப்படியாவது விரைவில் சந்நியாசம் ஏற்க வேண்டும் என்பதே சங்கரரின் முடிவு.

ஆதிசங்கரர் வரலாற்றை எழுதியவர்கள் முதலையைக் கொண்டு ஒரு அற்புத நிகழ்வை குறிப்பிடுகின்றனர். தாயாரோடு சங்கரர் பூர்ணா ஆற்றில் வழக்கம் போல் நீராடிக்கொண்டிருந்தார். அப்போது அவரது ஒரு காலை முதலை கவ்வி கொண்டது. அவர் தாயரிடம் என்னைக் காப்பாற்றுவது உனது கையில்தான் இருக்கிறது. இந்தப் பிறவியில் முதலையால் கொல்லப்பட வேண்டும் என்பது விதி. இந்த விதியில் இருந்து விடுபடத் தான் சந்நியாசம் ஏற்க வேண்டும். சாஸ்திரப்படி சந்நியாசம் என்பது மறுபிறவியாகும். அடுத்தப் புதிய பிறவியை எடுத்துக் கொண்டால் முதலை என்னை ஒன்றும் செய்திட முடியாது. உயிரோடு இருந்தால் தான் உனது இறுதிகாலக் கிரியைகளைச் செய்ய முடியும். சந்நியாசத்தை ஏற்றாலும் உயிர் பிரிகின்ற நேரத்தில் உன்னிடம் வந்து சேருவேன். இறுதிகாரியங்களைப் பிள்ளை என்ற முறையில் செய்து முடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன் என்று தாயிடம் கூறினார். தாயாரும் இதற்கு ஒப்புக் கொண்டார். பிரைஷ மந்திரத்தை உச்சரித்துச் சங்கரர் சந்நியாசம் ஏற்றார். குரு இல்லாமல் தானே ஏற்கும் இத்தகைய சந்நியாசத்திற்கு ஆபத் சந்நியாசம் என்று பெயர். முதலை வாயில் இருந்து காலை விடுவித்துக் கரைக்குத் திரும்பினார்.

சந்நியாசம் ஏற்றுக் கொண்டவர்களுக்கு அக்னி கார்யம் செய்யும் அதிகாரம் கிடையாது. மரபுக்கு மாறாக ஆதிசங்கரர் தமது தாயாருக்காக இறுதிகாரியம் செய்வதற்கு உரிய காலத்தில் வருவதாக வாக்குக் கொடுத்துள்ளார்.

ஆபத் சந்நியாசம் செய்து கொண்டாலும் சங்கரர் குருவின் மூலம் சந்நியாச தீட்சை பெறுவதற்காக நர்மதா ஆற்றின் கரையில் தவம் செய்து கொண்டிருந்த கோவிந்த பகவத் பாதரை சந்திப்பதற்குக் காலடியைவிட்டு கிளம்பினார். அவ்வாறு செல்லும் போது துங்கா நதி, இடையில் காணப்பட்டது. சுற்றிலும் நிறைய மரங்கள் அடர்ந்து இருந்தது. நீராட ஆற்றை நோக்கி நடந்தார். அப்போது அதிசயக் காட்சியை அவர் கண்டார்.

கடும் வெயிலின் தகிப்பில் வருந்திய நிறை கர்ப்பிணியான தவளைக்கு ஒரு பாம்பு படமெடுத்து நிழல் கொடுத்தது கொண்டிருந்தது. இதனைக் கண்டு வியந்தவண்ணம் ஆற்றை நோக்கி சென்று கொண்டிருந்த சங்கரர் மற்றொரு அதிசயத்தைக் கண்டார்.

ஒரு பசுவும், புலியும் ஆற்றில் அருகருகே நீர் அருந்திக் கொண்டிருந்தது. எதிரெதிர் உயிரனங்கள் இங்கே முரண்படாமல் அன்புடன் காணப்படுகிறது என்றால், இங்கே யாரோ ஒரு மகான் தவம் செய்து கொண்டிருக்க வேண்டும். அத்தகைய தவவலிமையே இப்படிப்பட்ட ஆன்மநேய சூழலுக்குக் காரணம் என்று சங்கரர் நினைத்தார். அதே நினைவில் ஆற்றில் நீராடிவிட்டு, அருகில் தென்பட்ட வீட்டையடைந்து தவமுனிவரைப் பற்றி விசாரித்தார்.

தற்போது எந்த முனிவரும் இங்கே தவம் செய்யவில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு ரிஷ்யச்ருங்கர் என்கிற முனிவர் இங்கே தவம் செய்ததாகக் கூறுவர். அதனால் இந்தப் பகுதிக்கு சிருங்ககேரி என்று பெயர் பெற்றது என்ற தகவலைக் கேட்டறிந்தார்.

ரிஷ்யயச்சருங்கர் வாழ்ந்து பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும் அவரது ஆன்மநேய அதிர்வலைகள் இன்னும் நிலவியதால் முரண்பாடான உயிரினங்கள் அன்போடு இணைந்திருக்கின்றன என்பதைச் சங்கரர் அறிந்து கொண்டார். எதிர்காலத்தில் இங்கே தென்திசைக்கான மடம் ஒன்றை அமைத்திட வேண்டும் என்று உறுதியேற்றார். அந்த உறுதியேற்பின் விளைவே இன்றைய சிருங்கேரி மடம்.

சிருங்கேரி மடம் இன்று இருப்பது வரலாற்றுச் சான்றுதான். ஆனால் அங்கே நிலவிய ஆன்நேய சூழலைப் பற்றிக் கூறியது, ஆதிசங்கரரின் அத்வைத சித்தாந்தத்திற்கு முரணாகக் காட்சியளிக்கிறது. மாறுகின்ற எவையும் உண்மையல்ல, மாறாத பிரம்மமே உண்மை என்கிற முடிவுக்கு வந்துள்ள ஆதிசங்கரர், இன்பம், துன்பம் ஆகியவற்றைப் போக்க முடியாது என்று கூறி சம்சாரத்திலிருந்து விடுபட்டு, முக்திக்கு அழைத்த ஆதிசங்கரர், இத்தகைய ஆன்மநேய சூழலின் பலத்தை ஏன் ஏற்காமல் போனார் என்ற கேள்வி எழத்தான் செய்யும். ஆன்மநேய சூழல் உலகில் அமைதியை உருவாக்கும் என்பது உண்மையனால், இன்பம், துன்பம் போன்ற இருமைகளை ஒதுக்கி, சம்சாரத்தில் இருந்து விடுபடுகிற அத்வைத சித்தாந்தத்தை ஏன் போதிக்க வேண்டும்.

ஆதிசங்கரரின் ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை விவரிக்கிற அத்வைத சித்தாந்தத்திற்கு முரணாகவே இந்நிகழ்வுகள் அவரது வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. மாறும் தன்மையுடையவை அனைத்தும் உண்மையல்ல என்கிற மாயைக் கோட்பாட்டிற்கு இதுபோன்றவை எதிராகவே காணப்படுகிறது.

இதுபோன்ற அற்புதம் நர்மதை ஆற்றைச் சங்கரர் அடைந்த போதும் நிகழ்ந்ததாகப் பதியப்பட்டுள்ளது. இந்த அற்புதங்கள் சங்கரரின் சக்தியை குருவுக்குக் காட்டுவதற்குக் கூறப்பட்டதாகத் தெரிகிறது. அதே போல் சிறுவயதில் தமது அன்னைக்காக ஆற்றின் திசையை மாற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்த அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றால் சம்சாரத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று கூறுவதற்குப் பதில் சம்சாரத்தில் ஏற்படும் பாதகங்களை அற்புதங்களின் மூலம் சாதகமாக்கி தந்துவிடலாமே. சம்சாரத்தை விடுத்து முக்தி பாதைக்கு அழைத்திட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காதே. இது போன்ற கேள்விகள் எழத்தான் செய்கிறது.

நர்மதை ஆற்றுக்கரையில், குருவின் இருப்பிடத்தை, அருகில் இருந்தவர்களிடம் கேட்டார். ஒரு குகையைக் காட்டி, அதில் ஒரு மகான் சமாதி நிலையில் அமர்ந்துள்ளார், அவர் நீங்கள் தேடிவந்த குருவாக இருக்கலாம் என்று கூறினர்.

அக்குகை மிகவும் குறுகலாவும், இருட்டாகவும் காணப்பட்டது. குகையை, சங்கரர் முன்றுமுறை வலம்வந்து குருவை நோக்கி சுலோகத்தால் வணக்கம் செலுத்தினார். எதற்கும் இதுவரை திறவாத கோவிந்தரின் கண்கள் சங்கரரின் ஸ்தோத்திரத்திற்குப் பணிந்து திறந்தது. தாம் எதிர்பாத்த சீடர் வந்துவிட்டதாகக் கோவிந்தர் கருதி “யார் நீ?” என்று கேட்டார். இந்தக் கேள்விக்குப் பொதுவாக எவரும் பதிலாகத் தமது பெயரையும், அல்லது தமது ஊரையும் சேர்த்துக் கூறுவர். ஆனால் சீடனாகும் தகுதியை உணர்த்தும் பொருட்டு, சங்கரர் பத்துச் சுலோகத்தால் பதில் அளித்தார். கர்ம நிலையைக் கடந்து ஞான நிலையை அடைந்ததைக் காட்டும் விதமாக இந்தப் பத்து பாடலும் அமைந்துள்ளது.


“யார் நீ?” என்று கேட்டதற்குக் கர்மநிலையைப் பின்பற்றுபவன் தனது பெயரையே கூறுவான். இதற்கு மாறாக ஞானநிலையை அடைந்தவன் இகலோக இருமைகளைக் கடந்த ஒருமை நிலையாகவே தன்னைக் கருதுவான்.

அத்வைதத்தை அறிந்திடும் தகுதிபெற்ற சீடனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் வகையில் இந்தப் பத்துச் சுலோகங்கள் அமைந்துள்ளது. இது “தச சுலோகீ என்ற தனி ஸ்தோத்திரப் பாடலாக இன்று நமக்குக் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு பாடலின் இறுதியில், “ஆத்மாவை மறைத்துக்கொண்டு தானே ஆத்மா போல் தோற்றம்கொடுக்கும் அநாத்மாவை விலக்கிவிட்டால் மீதமிருக்கும் உண்மையே நான் என்று ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

கோவிந்த பகவத் பாதர் தமது சீடராகச் சங்கரரை ஏற்றுக் கொண்டு, மகா வாக்கியங்களைச் சங்கரருக்கு உபதேசித்தார்.

முன்பே தனக்குத்தானே தீட்சை பெற்ற சங்கரர், இப்போது குருவின் மூலமாகத் தீட்சைப் பெற்று தலை முடியைக் கலைந்து, கஷாயம் உடுத்தி துறவை மேற்கொண்டார். இனி சங்கரரை ஆதிசங்கரர் என்று அழைப்போம். ஆதிசங்கரருக்குப் பிறகு பல சங்கரர்கள் மடத்தின் தலைமையை ஏற்றுள்ளதால் பெயர் குழப்பத்தைத் தவிர்ப்பதற்குச் சங்கரரை ஆதிசங்கரர் என்று அழைக்கப்படுகிறார்.

சீடராகச் சிலகாலம் குருவுடன் ஆதிசங்கரர் தங்கினார். பின்பு குருவின் விருப்பத்திற்கு இணங்க பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கவுரை (பாஷியம்) எழுதுவதற்குக் காசிக்கு சென்றார். எல்லாச் சித்தாந்தவாதிகளும் விவாதிக்கும் இடமாகக் காசி விளங்கியதால், அங்குச் சென்று பிற சித்தாந்தவாதிகளுடன் வாதம் செய்து, அத்வைதத்தை பரப்புவதற்குக் காசியே சிறந்த இடம் என்பதனால் ஆதிசங்கரர் காசிக்கு அனுப்பட்டார்

காசியில் உள்ள விசுவனாதர் கோயிலுக்கு அருகில் மணிகர்ணிகா என்னும் இடத்தில் ஆதிசங்கரர் வசிக்கலானார். முக்தி மண்டபத்தில் நாள்தோறும் உபந்நியாசம் நிகழ்த்தினார். பலநாட்டுப் பண்டிதர்கள் அவரது உபந்நியாசத்தைக் கேட்டனர். அவரது போதனையில் கவரப்பட்டுப் பலபேர் ஆதிசங்கரின் சீடரானார்கள். அச்சீடர்கள் தாம் கற்ற அத்வைத சித்தாந்தத்தைத் தமது ஊருக்கு சென்று உபதேசித்தனர். ஆதிசங்கரரது அத்வைதம் என்கிற வேதாந்தம் நாடெங்கும் பரவத் தொடங்கியது.

இங்கே வசிக்கின்ற காலகட்டத்தில் பாதராயணர் எழுதிய பிரம்ம சூத்திரம், பத்து உபநிடதங்கள், கண்ணன் எழுதிய கீதை ஆகியற்றுக்கு விளக்கவுரை எழுதினார். இந்த மூன்று நூல்களே பிரஸ்தான திரயம் என்று அழைகப்படுகிறது. இந்த விளக்க உரைகள், அத்வைத சித்தாந்தாந்த்தின் விளக்கமாகவும், பிற சித்தாந்தவாதிகளின் கருத்துகளுக்கு எதிர்வாதமாகவும் அமைந்துள்ளது. பிரஸ்தான திரயத்திற்கு எழுதிய விளக்கவுரையுடன் பல பிரகரண நூல்களையும், ஸ்தோத்திர நூல்களையும் எழுதினார். இவை அனைத்தும் அத்வைதத்தை விவரிப்பதாக இருக்கிறது.

ஒரு நாள் கங்கையில் வழக்கம் போல் நீராடிவிட்டு தமது சீடருடன் விசுவநாதர் கோயிலுக்குச் செல்வதற்காக, காசி நகரின் குறுகலான சந்தில் சென்று கொண்டிருந்தார்.  நான்கு நாய்களுடனும் தோளில் கள்ளு கலயத்துடன் ஒரு புலையன் அப்போது எதிர்பட்டான். உடனே ஆதிசங்கரர், “போ, போ, விலகிப் போ என்று குரல் கொடுத்தார். அதற்கு அப்புலயன் “ஜீவ-பிரம்ம ஐக்கியத்தைப் போதிக்கும் அத்வைத துறவியே, எதை விலகச் சொல்கிறீர். உணவால் உண்டான இந்த உடலையா? அல்லது எனது உடலின் உள்ளிருக்கும் ஞான ஒளியான ஆத்மாவையா?” என்று கேட்டார்.

இந்த உடம்பைப் பற்றிய நினைப்பை விடுத்து அனைவரிடத்தும் இருக்கும் ஆத்மா பரமாத்மா என்பது தானே அத்வைத போதனை. அப்படியிருக உங்களது உடலின் அருகில் இருந்து எனது உடல் விலகிப் போக வேண்டும் என்று சொல்வதின் பொருள் என்ன? உங்களது உடலுக்குள் இருக்கும் ஞான ஒளியான ஆத்மாவும் எனது உடலுக்குள் இருக்கும் ஆத்மாவும் ஒன்றுதானே அப்படியிருக்க எப்படி விலகிச் செல்ல முடியும்.

இதனைக் கேட்ட ஆதிசங்கரர், புலையனின் காலடியில் வீழ்ந்து வணங்கினார். இந்த நிகழ்வை “மநீஷா பஞ்சகம் என்ற ஐந்து பாடலில் அவர் பதிந்துள்ளார். அத்வைத நிலையில் புலையனுக்கும் அந்தணனுக்கு வேறுபாடு கிடையாது என்பதையே இந்த ஐந்து பாடல் விவரிக்கிறது. அத்வைதத்தின் அடிப்படையாக இந்த ஐந்து பாடல்கள் அமைந்துள்ளதால் இங்கே அதனை முழுமையாகப் பார்ப்போம்.

விழிப்பிலும் கனவிலும் உறக்கத்திலும் எந்தத் தூய உணர்வு தெளிவாக வெளிப்படுகிறதோ, பிரபஞ்சத்தின் சாட்சியாக எது பிரம்மா முதல் எறும்பு வரை அனைத்து உடல்களிலும் ஊடுருவியுள்ளதோ அதுதான் நான். நான் காணப்படும் பொருள் அல்ல என்று எவருக்கு உறுதியான ஞானம் இருக்கிறதோ அவன் சண்டாளனாக இருந்தாலும் சரி அல்லது பிராம்மணனாக இருந்தாலும் சரி அவனே என் குரு என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. (1)

நான் பிரம்மம் தான். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பிரம்மம்தான். தூய உணர்வுதான் இந்தப் பிரபஞ்சமாக விரிந்துள்ளது. சத்வம், ரஜஸ், தமஸ் மற்றும் அறியாமையினால் நான் பொருட்களைப் பிரம்மம் அல்லாததாகக் கருதுகிறேன். ஒன்றும் மீதமில்லாமல் அனைத்தும் என் கற்பனையே. பேரானந்தமான அழிவில்லாத தூய வடிவான பிரம்மம் தான் எங்கும் நிறைந்துள்ளது என்று எவனுக்கு உறுதியான ஞானம் உள்ளதோ அவன் சண்டாளனாக இருந்தாலும் சரி அல்லது பிராம்மணனாக இருந்தாலும் சரி அவன் என் குரு என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. (2)

குருவின் உபதேசத்தின் மூலம் இந்தப் பிரபஞ்சம் எப்பொழுதும் அழியக்கூடியது என்று உறுதி பெற்றுக் கொண்டு சஞ்சலமில்லாத தூய்மையான மனதுடன் இடைவெளியில்லாத பிரம்மத்தை தியானிப்பதால் கடந்தகால, வருங்காலக் கர்மங்களையும் மற்றும் பாவச் செயல்க்ளையும் தூய உணர்வான நெருப்பில் எரித்துவிட்டு இந்த உடல் பிராரப்த கர்மத்தினிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதுதான் என்னுடைய உறுதியான நம்பிக்கை, (3)

எந்தத் தூய உணர்வு, மிருகம், மனிதன் மற்றும் தேவர்களால் நான் என்று அகத்தில் தெளிவாக உணரப்படுகிறதோ, எதன் பிரகாசத்தினால் ஜட இயல்பைக்கொண்ட மனம், புலன்கள், உடல், விஷங்கள்- இவையனைத்தும் விளங்குகின்றனவோ, சூரியன் மேகங்களால் மறைக்கப்படுவது போல, காணப்படும் பொருட்களினால் அந்தத் தூய உணர்வு மறைக்கப்படுகிறது. அந்தத் தூய உணர்வை எப்பொழுதும் தியானம் செய்து கொண்டு, யோகி அமைதியான மனதை அடைகிறார். அவர் என் குரு என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. (4)

எந்தப் பேரானந்தக் கடலின் சிறு துளியினால் கூட இந்திரன் போன்ற தேவர்கள் திருப்தி அடைகிறார்களோ, முற்றிலும் அமைதியான மனதை அடைந்து முனிவர்கள் நிறைவு பெறுகிறார்களோ, அந்த அழிவற்ற பேரானந்தக் கடலில் ஒன்றுபட்டவர் பிரம்மத்தை உணர்ந்தவர் மட்டுமல்லாமல் பிரம்மமே ஆவார். அவர் யாராக இருந்தாலும் சரி இந்திரனால் பூஜிக்கப்பட வேண்டிய பாதங்களை உடையவர் என்பது என்னுடைய நிச்சயமான உறுதியான நம்பிக்கை, (5)”

இந்தப் பாடல்களைப் படிக்கும் போது சாதியை ஆதிசங்கரர் மறுத்துள்ளார், இதனைப் பின்னால் வந்த அத்வைதிகள் மறைத்துவிட்டனர் என்பதாகப் பலபேர் கூறுகின்றனர். இது தவறான கருத்தாகும். ஐந்து பாடலும் அத்வைத நிலையைப் பற்றிப் பேசுகிறதே தவிர வியவகார உலகைப் பற்றியல்ல. வியவகார உலகில் வர்ணாஸ்ரமம் (சாதி) உண்டு என்பதை ஆதிசங்கரர் ஏற்றுள்ளார். அவரது படைப்புளைப் பற்றிப் பார்க்கும் இடத்தில் இதனைச் சற்று விரிவாகக் காணலாம். ஆனால் இந்தப் பாடலில் ஜீவ-பிரம்ம ஐக்கியத்தில் எவருக்கு உறுதியான ஞானம் இருக்கிறதோ அவன் சண்டாளனாக இருந்தாலும் சரி அல்லது பிராம்மணனாக இருந்தாலும் சரி அவனே என் குரு என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. அதாவது அத்வைத குருவாகச் சண்டாளனாகவோ, பிராம்மணனாகவோ, யாராகவோ இருந்தாலும் அவரை அத்வைத குருவாக ஏற்கிறேன் என்பதை வெளிப்பாடையாக ஆதிசங்கரர் கூறியுள்ளார்.

நாட்டின் பிறயிடங்களுக்குச் சொன்று அத்வைதத்தைப் பரப்ப ஆதிசங்கரர் எண்ணினார். இந்த நிகழ்வையே திக்விஜயம் என்று கூறப்படுகிறது.

முதலில் பூர்வமீமாம்சைக் கோட்பாட்டை வெற்றிக் கொள்ள வேண்டும் என்று குமாரிலபட்டரை சந்திக்க முடிவெடுத்தார். அன்று நாட்டில் பூர்மமீமாசைக் கோட்பாடே அதிகமானவர்களால் பின்பற்றப்பட்டுவந்தது. இந்தப் பூர்வமீமாசையும் வேத தொடர்புடையதே. வேதத்தில் பூர்வமீமாம்சை உத்ரவீமாம்சை என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. பூர்வமீமாம்சையைக் கர்மகாண்டம் என்றும் உத்ரமீமாம்சையை ஞானகாண்டம் என்று அழைப்பர். பூர்வமீமாம்சை சடங்குகளுக்கே முதன்மையிடம் கொடுக்கிறது.

சடங்குகளைத் தவிர்த்த, கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற விசாரணை தேவையற்றது, வேதத்தில் விதித்திருக்கும் சடங்குகளைத் தவறாமல் செய்ய வேண்டும். அச் சடங்குகளின் மூலம் நற்பலன்களைப் பெற்று வாழவேண்டும். இந்தச் சடங்கினால் பெறப்படும் பலனுக்குக் கடவுள் எந்த வகையிலும் காரணமாக மாட்டார். இதுவே பூர்வமீமாம்சையர்களின் கருத்தாகும்.

உண்மையில் வேத சம்கிதையில் இருந்து ஒரு மதம் உருவானால் அது பூர்வமீமாம்சையாகத் தான் உருவெடுக்கும். சிலை வழிபாட்டையும், லிங்க வழிபாட்டையும் வேத சம்கிதை மறுக்கிறது. வட்டார மக்களிடம் காணப்பட்ட சிலை வழிபாட்டை உள்வாங்கிக் கொண்டு, அக்னி வழிபாட்டையும் இழக்காமல் புதிய மதமாக இன்றைய இந்து மதம் காட்சியளிக்கிறது. வேத சம்கிதையில் லிங்க வழிபாடு காணப்படவில்லை. சிஷ்ன தேவன் என்று இழிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படும் சிவனுக்கு முந்தய வடிவத்தின் (proto siva) தொடர்சியான சிவனைத் தற்போதைய இந்து மதத்தில் காணலாம்.

பூர்வமீமாம்சையைப் பின்பற்றும் குமாரிலபட்டரை சந்தித்து அவருக்குப் பிரஸ்தான திரியத்திற்குத் தாம் எழுதிய அத்வைத வழிபட்ட விளக்கவுரையை எடுத்துரைத்து, அவரை ஞானவழியை ஏற்கும்படி செய்ய வேண்டும். இது இந்தத் திக் விஜயத்தின் நோக்கம்.

குமாரிலபட்டரை நெருங்குவதற்கு முன் ஆதிசங்கரருக்கு ஒரு சேதி கிடைத்தது. குமாரிலபட்டர் துஷாக்கினி பிரவேசம் செய்ய இருக்கிறார் என்பதே அச்செய்தி. துஷம் என்றால் தவிடு, இந்தத் தவிடால் உடல் முழுமைக்கும் மூடி, தீயிட்டுக் கொண்டு சிறுகசிறுக கருகி, உயிர் போகும்படி செய்வதற்கே துஷாக்கினி பிரவேசம் என்று பெயர். தாம் செய்த தவறான காணத்திற்குத் தண்டனையாக உயிர்விடுவதற்கே துஷாக்கினி பிரவேசம் செய்வர்.

குமாரிலபட்டர் செய்த தண்டனைக்குரிய பாவம் என்ன வென்றால், “வஞ்சனையாகத் தன்னை ஒரு பௌத்தன் என்று சொல்லிக் கொண்டு பௌத்த ஆசிரியர்களிடம் கற்றுப் பிறகு அவர்களுடைய சாத்திரக் கொள்கைகளை மறுத்து ஒழித்தது (சங்கரர்- டி.எம்.பி.மகாதேவன், நேஷனல் புக் டிரஸ்ட், பக்கம்-31) ஆகும்.

குமாரிலபட்டர் இவ்வாறு செய்ததற்குக் காரணமாக “சித்திர ஆதிசங்கரர் என்ற நூல் கூறுகிறது, “புத்த மதத்தவர்களுக்கு வேதகர்மங்கள் கிடையாது. ஆதியில் அவர்களது கருத்துக்களை வெல்ல எண்ணிய இந்தக் குமாரில பட்டர் பௌத்தகனாக மாறுவேஷம் பூண்டு பௌத்தர்களுடனேயே வசித்தால்தான் அவர்களது கருத்துக்களை ஏற்கலாம். பிறகு அவற்றை எதிர் வாதத்தால் முறிக்கலாம் என்றெண்ணினார். அவ்விதமே பௌத்தராக வேஷம் போட்டு அம் மதக்கொள்கைகள் முழுவதையும் கற்றுக் கொண்டார். பிற்பாடு வேத கர்மங்கள் அவசியம் என்பதை நிலைநாட்டும் போது, இக்கர்மங்களை விலக்கும் புத்த மதத்தை ஆணித்தரமாகக் கண்டித்தார். கடைசியில் ஒருநாள் அவருக்கு வருத்தம் உண்டாயிற்று. 'அடடா! என்னைத் தங்களில் ஒருவனாக எண்ணி அந்தப் பௌத்தர்கள் பேணிக் காத்தனரே! தங்களது மர்மக் கருத்துக்களைப் போதித்தனரே! இவர்களிடம் வேஷம் போட்டு வஞ்சனை செய்துவிட்டேனே" என்று பச்சாதாபம் கொண்டார்," இதற்குச் சாஸ்திரம் கூறும் ஒரே பிராயச்சித்தம் 'துஷாக்னிப் பிரவேசம்' தான்.” (காஞ்சி மட இணையதளம்)

பிராயச்சித்தமாகத் 'துஷாக்னிப் பிரவேசம்' செய்கின்ற இந்த இக்கட்டான நிலையில் தான் ஆதிசங்கரர் குமாரிலபட்டரை நேரில் சந்தித்தார். உடல் முழுதும் வெந்து கொண்டிருக்கும் போது குமாரிலபட்டர் ஆதிசங்கரரைக் கண்டு மகிழ்ச்சி கொண்டார். ஆதிசங்கரர் தமது அத்வைத விளக்கத்தை (பாஷியத்தை) அவருக்குப் படித்துக் காட்டினார். இதனைக் கேட்ட குமாரிலபட்டர் ஆதிசங்கரைப் பாராட்டினார். இந்த அத்வைத சித்தாந்தத்தை நாடுமுழுதும் பரப்ப வேண்டும், உயிரை விடும் தறுவாயில் உள்ள தம்மால் ஏதும் தெய்திட முடியாது. தனது சீடனான மண்டனமிச்ரரை சந்தித்து அவரிடம் வாதம் புரிந்து, அவரை அத்வைத தத்துவத்தை ஏற்கும்படி செய்ய வேண்டும். அவரைக் கொண்டு அத்வைதத்தைப் பரப்புங்கள் என்று கூறினார்.

ஞான வழியே முக்திக்கு வழிவகுக்கும். ஞானத்தை ஏற்பதற்கான மனத்தூய்மையை (சித்தசுத்தியை) வேத கர்மங்கள் கடைப்பிடிபதனால் ஏற்படலாம். ஆனால் வேத கர்மங்களைச் செய்வதனால் முக்தி ஏற்படாது. இதுவே அத்வைதத் தத்துவத்தின் முடிபாகும். அதனால் கர்ம வழியைப் பின்பற்றுபவர்களை ஞான வழிக்கு கொண்டுவருவதற்காக ஆதிசங்கரர் பூர்வமீமாம்சகர்களை வாதில் வெல்ல நினைத்தார்.

மண்டனமிச்ரரை சந்திப்பதற்காக மாகிஷ்மிதி நகரை நோக்கி சென்றார். மண்டனமிச்ரர் வாதத்திற்கு ஒப்புக் கொண்டார். அதற்கு அவரது மனைவி சரஸவாணி நடுவராகத் தெரிவு செய்யப்பட்டார். வாதத்தில் மண்டனமிசரர் தோற்றால், துறவுறம் ஏற்று ஆதிசங்கரின் கொள்கையான அத்வைதத்தைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆதிசங்கரர் தோற்றால் பூர்மமீமாம்சத்தை ஏற்றுக் கொண்டு மண்டனமிச்ரர் வழியில் இல்லறத்தை ஏற்க வேண்டும்.

ஞானமே முக்திக்கு வழிவகுக்கும் என்று சாஸ்திரம், உக்தி, அனுபவங்கள் ஆகியவற்றால் ஆதிசங்கரர் தமது கொள்கையை விளக்கினார். தனது வாதம் ஆதிசங்கரரின் முன் தோற்றதை ஒப்புக் கொண்டு, ஞான வழியை ஏற்கத் தயாரானார். நடுவராக இருந்த சரஸவாணி தம் கணவர் துறவியாகி தம்மை விட்டுப் பிரிவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தார். முடிவாக அவர் கூறினார், “எனது கணவர் தோற்றது உண்மையே, கணவனும் மனைவியும் ஈருடல் என்றாலும் ஓருயிரே, அதனால் கணவனின் பாதியாகிய என்னையும் நீங்கள் வெற்றி பெற்றால் தான் முழுமையான வெற்றிப் பெற்றதாகக் கருதமுடியும் என்று கூறி வாதிடுவதற்கு ஆதிசங்கரரை அழைத்தார்.

சகல கலையிலும் வல்லவரான சரஸவாணியுடன் வாதிட ஆதிசங்கரர் ஒப்புக் கொண்டார். ஆதிசங்கரர் எட்டுவதிலேயே துறவை ஏற்றவர், காமக்கலையின் நுட்பமோ, அனுபவமோ அவருக்கு ஏற்பட்டிருக்காது, அதனால் ஆண்- பெண் உறவுபற்றிய கேள்விகளைக் கேட்டார். அதற்கு ஆதிசங்கரர் சிறிது காலம் அவகாசம் கொடுத்தால் காமக்கலையில் தேர்ச்சி பெற்றுப் பதிலளிப்பதாகக் கூறினார். ஒரு மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டது.

சீடருடன் ஆதிசங்கரர் அங்கிருந்து புறப்பட்டார். செல்லும் வழியில் ஒரு நாட்டைக் கடக்கும் போது அந்நாட்டு மன்னனான அமாருகன் இறந்துவிட்ட சேதி கிடைத்தது. கூட வந்த சீடரிடம் ஆதிசங்கரர் கூறினார்:-

நூறு அழகிய இளம் பெண்களை மனைவிகளாகக் கொண்ட இம்மன்னனின் உடலில் யோக சக்தியால் நான் நுழைந்து அவனுடைய உடல் மூலம் இப்பெண்களோடு வாழ்ந்து காமக்கலையில் தேர்ச்சி பெற்று வர எண்ணுகிறேன். அதன் மூலம சர்வக்ஞ் பீடம் ஏறுவதற்கு நான் தகுதி பெற்றவன் ஆவேன். அது மட்டுமின்றிக் காமவயப்பட்ட பெண்களின் நடத்தையைப் பற்றி நேரில் அறிந்து கொண்டு ஸரஸவானியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியும்
(ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர்- ஆர்.பி.வி.எஸ்.மணியன் - பக்கம் -123)

கூறியது போலவே மன்னன் அமாருகன் உடலில் புகுந்து காமக்கலைக் கேள்விக்கான பதிலை அறிந்து சரஸவாணியை ஆதிசங்கரர் வெற்றி பெற்றார். சங்கர விஜயம் வாதிட்டு வென்ற வரலாறாக இந்தக் கதையையே கூறுகின்றன.

வாதில் வென்றவரின் கொள்கையை, தோற்றவர் பின்பற்ற வேண்டும் என்பது எந்த வகையிலான தர்க்கம் என்று தெரியவில்லை.  

காமக்கலையை அறியாத ஆதிசங்கரர் தோற்றவராக அறிவிக்கப்பாடாமல் அதனைக் கற்றுவருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டதாகவே கதையில் கூறப்படுகிறது. அதே போல் வாதத்தில் ஒருவர் தோற்றார் என்றால் அவர் வெற்றிப் பெறுவதற்கு அவகாசம் தேவைப்படுகிறது என்பது தான் உண்மையாக இருக்க முடியும். ஒருவர் ஒரு தத்துவத்தை ஏற்பது என்பது தானே எடுத்த முடிபாகத்தான் இருக்க வேண்டும், அப்போது தான் அதனை அவர் கடைபிடிக்க முடியும் அதாவது செயற்படுத்த முடியும். தோற்ற ஒரே காணரத்திற்காக ஒரு புதிய கோட்பாட்டைக் கடைப்பிடிப்பது என்பது திணிக்கப்பட்ட ஒன்றாகத்தான் இருக்குமே ஒழிய, அதில் சிறந்தவராக விளங்க முடியாது. அதுமட்டுமல்லாது ஆதிசங்கரர் தமது விளக்கவுரையிலும் (பாஷியத்திலும்) பிரகரண வேதாந்த நூல்களிலும் பிற சித்தாந்தத்தைக் கூறி அதனை விமர்சித்து அத்வைதத் சித்தாந்தத்தை நிலைநிறுத்தியுள்ளார். அதில் எங்கேயும் வாதில் வெற்றிப் பெற்றதாகக் கூறவில்லை. இவ்வகையில் அவரது நூலுகளுக்கு மாறாகச் சங்கர விஜயம் எழுதப்பட்டுள்ளது.


ஆதிசங்கரரின் வாழ்வில் அவரது எழுத்துக்களைத் தவிர அறிய வேண்டியது என்னவென்பதை “சித்திர ஆதிசங்கரர் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

கடவுளிடம் உண்மையான அன்பு செலுத்துவதே பக்தி. உண்மையான அன்பு யாதெனில், அந்தக் கடவுளேதான் எல்லாமும் எனவே அவனை வழிபடும் நானும் கூட அவனேதான் என்பதை உணர்ந்து, அன்பினால் அவனன்றித்தானில்லாமல் கரைந்து ஒன்றாகி விடுவதுதான். ஆனால் சங்கரின் காலத்திலிருந்த பக்தி இவ்வாறு அத்வைத ஞானத்தோடு இணைந்ததாக இருக்கவில்லை. பல வேறு தெய்வங்களும் ஒரே கடவுள் எடுத்துக்கொள்ளும் பல வடிவங்கள்தான் என்பதை மறந்து-அவரவரும் தான் வழிபடுகிற தெய்வமே மற்ற தெய்வங்களைவிட உயர்ந்தது என்று வாதப்போர் செய்து வந்தனர். இது போதாது என்று அன்பே வடிவான கடவுளின் உக்கிர ரூபங்களைப் பலர் வழி பட்டு, அதற்காகக் தாங்களும் மிகப் பயங்கரமான வழிபாட்டு முறைகளை மேற்கொண்டனர். கர்ம. ஞான வழிகளைச் செம்மைசெய்த சங்கரர்-அன்பு மயமான ஆண்டவன் வழி பாட்டில் புகுந்துவிட்ட அச்சமூட்டுகிற, அருவருப்பூட்டுகின்ற அம்சங்களை விலக்கிக்கொண்டு நாட்டில் அருள்மாரியாகச் சஞ்சரித்து வந்தார்.”
(சித்திர ஆதிசங்கரர்- காஞ்சி மடத்தின் இணையதளம்)

அடுத்து அறிய வேண்டியது நான்கு திசையில் ஏற்படுத்திய மடங்களாகும். வடக்குத் திசையில் பத்ரி என்ற இடத்தில் தோடகாசர்யார் அவர்களைத் தலைவராகக் கொண்ட ஜியோதி பீடம், கிழக்குத் திசையில் பூரி என்ற இடத்தில் பத்மபாதர் அவர்களைத் தலைவராகக் கொண்ட கோவர்தன பீடம், தெற்கு திசையில் சிருங்கேரி என்ற இடத்தில் சுரேச்வரர் அவர்களைத் தலைவராகக் கொண்ட சாரதா பீடம், மேற்கு திசையில் துவாரகை என்ற இடத்தில் அஸ்தாமலகர் அவர்களைத் தலைவராகக் கொண்ட துவாரகா பீடம்.

நான்கு வேதங்களை விளக்குவதற்கு நான்கு மடங்களை அதிசங்கரர் அமைத்தார் என்று கூறுவது வழக்கம். ரிக் வேதத்திற்கு உரிய மடம் கோவர்தன பீடம் (பூரி). இம் மடத்திற்கு உரிய மகாவாக்கியம் ஐத்ரேய உபநிடத்தில் உள்ள “ப்ரஜ்ஞானம் பிரம்ம என்பதாகும். யசூர் வேதத்திற்கு உரிய மடம் சாரதா பீடம் (சிருங்கேரி). இம் மடத்திற்கு உரிய மகாவாக்கியம், பிருகதாரண்ய உபநிடத்தில் உள்ள “அகம் பிரம்மாஸ்மி. சாம வேதத்திற்கு உரிய மடம் துவாரகா பீடம் (துவாரகை). இம் மடத்திற்கு உரிய மகாவாக்கியம் சாந்தோக்கிய உபநிடத்தில் உள்ள “தத்துவம்மசி. அதர்வண வேதத்திற்கு உரிய மடம் ஜியோதி பீடம் (பத்ரி). இந்த மடத்திற்கு உரிய மகாவாக்கியம், மாண்டூக்கிய உபநிடத்தில் உள்ள “அயம் ஆத்மா பிரமம்.

வாதத்தில் தோற்ற மண்டனமிச்ரர் துறவறம் ஏற்று, சுரேச்வரர் என்ற பெயரைப் பெற்று சங்கரரின் சீடரானார். சிருங்கேரியில் ஆதிசங்கரர் அமைத்த மடத்திற்குச் சுரேச்வரரையே தலைவராக நியமித்தார்.

ஆதிசங்கரரின் தாயார் மரணப் படுகையில் வீழ்ந்தார். ஒப்புக் கொண்டதிற்கு ஏற்ப, அவர் காலடிக்கு சென்றார். தாயாரின் இறுதி காரியங்களைச் செய்து முடித்தார். பிறகு, நாடு முழுதும் சென்று மக்களிடம் அத்வைத வேதாந்தத்தைப் பரப்பும் பணியைத் தொடர்ந்தார். இமாலயத்திற்குச் சென்று கேதாரத்தில் இயற்கை எய்தினார்.


பயன்பட்ட நூல்கள்:-

1.ஸ்ரீ சங்கர விஜயம் – ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
2.சங்கரர் – டி.எம்.பி.மகாதேவன்
3.ஆதி சங்கரர் – எஸ்.வைத்தியநாதகிருஷ்யன்
4.ஆதிசங்கரர் – சுகி சிவம்
***************************************************

அண்மையில் (2023) வெளிவந்த "பொருள்முதல்வாதப் பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்" என்கிற நூலில் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளை என்கிற பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது,

https://www.commonfolks.in/books/d/porulmuthalvaatha-paarvaiyil-aathisankararin-athvaitham

நூலின் பொருளடக்கம்

பகுதி - 1

1. ஆதி சங்கரரின் வாழ்க்கை

2. ஆதி சங்கரரின் அத்வைதம் 

3. இயக்கவியல் பொருள்முதல்வாதம் 

4: பொருள்முதல்வாதப் பார்வையில் ஆதி சங்கரரின் அத்வைதம் 

   பகுதி - 2      

5, ஆதி சங்கரரின் படைப்புகள் 



அண்மையில் (2021) நான் எழுதிய “இந்தியத் தத்தவம் ஓர் சிறிய அறிமுகம்” தொகுதி I என்ற நூலை பொன்னுலகம் புத்தக நிலையம் வெயிட்டுள்ளனர். ஆன்லைனில் அது கிடைக்கிறது.

https://www.commonfolks.in/books/d/indiya-thaththuvam-oru-siriya-arimugam





 
மேலும் வாசிக்க:

7 comments:

  1. ஆர்.பி.வி.எஸ். மணியன் போன்ற இந்துத்துவவாதியின் நுாலை நீங்கள் பிரதானமாக பயன்படுத்தியிருக்கிறீர்கள். சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை இன்னும் நுணுக்கமாக வரலாற்றுரீதியாக தகுந்த ஆதாரங்களுடன் கட்டமைக்கும் ஆசிரியர்களையும் அவர்களுடைய விளக்கங்களையும் நீங்கள் தேடிப்பிடித்து அறிமுகம் செய்திருக்கலாம். அவருடைய சரியான காலத்தை குறித்த ஆய்வுகளைப் பற்றிய ஆய்வுகளை அறிமுகப்படுத்தலாம்.

    ReplyDelete
  2. நான் அத்தைவத தத்துவத்துவத்தை விவரிதிது அத் தத்துவத்தற்கம் மார்க்சிய தத்துவத்திற்கும் உள்ள வேறு பாடு அதுவும் குறிப்பாக இரண்டுக்கும் உள்ள ஒருமையின் வேறுபாடு பற்றி எழுதுவது தான் திட்டம். ஆனால் அத்வைதத்தை தெளிவாக விளக்கியுள்ளேன். விரைவில் நூலாக வெளிவரும்

    ReplyDelete
  3. ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாறு Pdf வடிவில் கிடைக்குமா?

    ReplyDelete
  4. ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாறு Pdf வடிவில் கிடைக்குமா

    ReplyDelete
  5. கிடைப்பதாகத் தெரியவில்லை

    ReplyDelete
  6. இல்லை... என்பதே ..இல்லை... அதுதான் நமது ஆச்சாரியார் கொடுத்த பரிசு... முயல்கிறேன்...

    ReplyDelete
  7. இல்லை, இருக்கிறது என்பதெல்லாம் மாயை என்பதே ஆச்சாரியார் உபதேசம்.

    ReplyDelete