Friday 11 September 2020

என்ன செய்ய வேண்டும்? – லெனின் (இரண்டாம் அத்தியாயம்)


(“மார்க்சியர் மேடை” என்கிற படிப்பு வட்டத்தில், லெனின்  எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலின் இரண்டாம் அத்தியாயத்தை வகுப்பெடுப்பதற்கு எழுதப்பட்ட குறிப்பு.

 

வகுப்பின் காணொளியை கீழே காணும் இணைப்பில் காணலாம்

https://www.youtube.com/watch?v=Iy9CSs0ZaFc

 

அனைத்தையும் பார்க்க:-

https://www.youtube.com/channel/UCN4ahSJzeZcpsRtuh0myX5g)              

 


இன்று லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலின் இரண்டாவது அத்தியாயத்தைப் பார்க்கப் போகிறோம். அதற்கு முன், போன வகுப்பில் பார்த்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம். 

போன வகுப்பின் தலைப்பு, “1) வறட்டுச் சூத்திரவாதமும் “விமர்சன சுதந்திரமும்”. 

புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மாறாமல், பழைய கோட்பாட்டைப் பிடித்துக் கொண்டிருப்பதையே வறட்டுச் சூத்திரவாதம் என்று கூறுவோம், ஆனால் லெனின், ஒரு புதிய போக்கினரை இங்கே குறிப்பிடுகிறார். 

முதலாளித்துவம் வளமையாக இருக்கின்ற காலத்தைக் கணக்கில் கொண்டு, இனிமேல் முதலாளித்துவம் மறையாது, அதனால், பழைய பாணியிலான மார்க்சியம் மறைந்துவிட்டது. அதனால் பழைய மார்க்சியத்தைப் பிடித்துக் கொண்டு இருப்பது வறட்டுச் சூத்திரவாதம்.

பழைய மார்க்சியத்தை விமர்சிப்பதற்கு விமர்சன சுதந்திரம் வேண்டும், என்பதே இந்தப் புதிய போக்கினரின் கோரிக்கை. 

உண்மையில், இந்தப் புதிய போக்கினர் விமர்சனம் செய்ய விரும்புவது, மார்க்சிய அடிப்படைகளையே, கம்யூனிசத்தில் உள்ள விஞ்ஞானத் தன்மையையும், புரட்சிகரத் தன்மையையும் ஒழிப்பதே இதன் நோக்கமாகும். இத்தகைய புதிய போக்கை லெனின், புரட்சிகரப் போக்குகளை மறுக்குகிற சீர்திருத்தவாதம் என்று விமர்சித்துள்ளார். 

இது தான் இந்த முதல் அத்தியாயத்தன் சாரம். 

இன்றைக்கு இரண்டாம் அத்தியாயம், 2) “மக்களின் தன்னியல்பும் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வும்.” 

இந்த அத்தியாயம் சுமார் 40 பக்களைக் கொண்டிருக்கிறது. இதனை வரிக்குவரியாக விளக்காமல், இதன் சாரத்தை மட்டும் சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம். 

இந்த அத்தியாயத்தில் மூன்று கலைச்சொற்கள் இருக்கிறது:- 

மக்களின் தன்னியல்பு,

தன்னியல்பு வழிபாடு,

கம்யூனிஸ்டுகளின் உணர்வு, 

புத்தகத்தில் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு என்று தான் இருக்கும், அதனைக் கம்யூனிஸ்டுகளின் உணர்வு என்று புரிந்து கொள்ள வேண்டும். 

இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே லெனின் ஒன்றை குறிப்பிடுகிறார். அதனை முதலில் படித்துப் பார்ப்போம். 

“தற்கால இயக்கத்தின் பலம் மக்களின் (முதன்மையாக, தொழில் துறைப் பாட்டாளி வர்க்கத்தின்) விழிப்புணர்வில் அடங்கியிருக்கிறது, அதன் பலவீனம் புரட்சிகரமான தலைவர்களின் உணர்வு இன்மையிலும் முன்முயற்சி இன்மையிலும் அடங்கியுள்ளது, இதை யாரும் இதுவரை சந்தேகித்ததில்லை” 

தொழிலாளர்கள், நேரடியாகப் பிரச்சினைகளைச் சந்திப்பதனால் அவர்கள் அதனை உணர்ந்து, உடனடியாக எதிர்பை தெரிவிக்கின்றனர். நிச்சயமாக அது தன்னியல்பான போராட்டம் தான் இருக்கும். தன்னியல்பான போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக மாற்றுவது கம்யூனிஸ்ட் கட்சியின் பணி. 

இந்தப் பணி தான் பலவீனமாக இருப்பதாக, லெனின் அன்றைய ருஷ்ய நிலைமையை முன்வைத்துக் கூறியுள்ளார். 

இங்கே தலைவர்கள் என்று பொதுப்படக் கூறப்பட்டிருந்தாலும், கட்சி தலைமையில் உள்ளவர்களை மட்டும் குறிப்பிடவில்லை. வெகுஜன அமைப்பில் உள்ள தலைவர்களையும் சேர்த்துத் தான் கூறப்பட்டுள்ளது. 

இதனைப் பொதுவாகக் கம்யூனிஸ்டுகளின் குறைபாடாக எடுத்துக் கொள்ளலாம். கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களுக்கு வழிகாட்டுவதானால், கம்யூனிஸ்டுகளும் தலைவர்களே. அதனால் கம்யூனிஸ்டுகளின் குறைபாடாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். 

தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிற, கம்யூனிஸ்டுகளின் விழிப்புணர்வைப் பற்றித் தான் இந்த நூல் பேசுகிறது. 

அதனால், இந்த நூலை கம்யூனிஸ்டுகள் அனைவரும் நன்றாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வகுப்பு, இந்த நூலைப் பற்றிய அறிமுகமே… சாரமே.. அதனால் இந்த அறிமுகத்தை நன்றாகப் புரிந்து கொண்டு “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலை முழுமையாகப் படித்து அறிய வேண்டும். 

கம்யூனிஸ்டுகள், தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், தொழிலாளர்களின் தன்னியல்புக்கும், கம்யூனிஸ்டுகளின் உணர்வுநிலைக்கும் உள்ள வேறுபாட்டை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 

தன்னியல்பான எழுச்சியின் தொடக்கத்தைப் பற்றி லெனின் கூறுகிறார். 

தொழிலாளர்களின் தன்னியல்பான போராட்டம் என்றால், முதலாவதாக இயந்திரங்களுக்கு எதிரான தொழிலாளர்களின் தொடக்ககாலப் போராட்டத்தைக் குறிப்பிட வேண்டும். நவீன இயந்திரங்கள் முதலில் புகுத்திய போது, தொழிலாளர்களில் பலர் வேலைகளை இழந்தனர். இந்த நிலைமைக்குக் காரணம் இயந்திரம் என்று நினைத்து அவர்கள் உடைத்தனர். இது தான் பாட்டாளிகளின் முதலாவதான தன்னியல்பான போராட்டம். 

அடுத்தப் படியாக வேலைநிறுத்தத்தைத் தன்னியல்பான போராட்டம் என்று சொல்லலாம். அதாவது கூலி உயர்வுக்கான போராட்டம் போன்றவை ஒரு தன்னியல்பான போராட்டமே. 

இந்தத் தன்னியல்புப் போராட்டம் கரு வடிவிலான வர்க்கப் போராட்டமே. கருவடிவிலான வர்க்கப் போராட்டம், சமூகத்தை மாற்றுகிற முழுமையான வர்க்கப் போராட்டமாக மாற வேண்டும் என்றால், தொழிலாளர்கள் கம்யூனிச உணர்வு பெற வேண்டும். 

தொழிலாளர்கள் கம்யூனிச உணர்வு பெற வேண்டும். 

இந்த இயந்திரத்தை உடைத்தல், வேலை நிறுத்தம் போன்ற போராட்டம் ஒரு வகையான அரசியல் போராட்டம் தான், ஆனால் அது கம்யூனிஸ்டுகளின் அரசியலாக இல்லாது, முதலாளித்துவ அமைப்புக்குள் போராடுகிற சீர்திருத்த வகைப்பட்ட போராட்ட அரசியலாகவே இருக்கிறது. 

இத்தகைய சீர்திருத்த அரசியல் போராட்டம், தொழிலாளர்களின் அன்றைய மேம்பாட்டை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளது. அந்த மேம்பாடு தொழிலாளர்களின் பிரச்சினைகளை முழுமையாகப் போக்காது. 

ஏன் என்றால் முதலாளி, தொழிலாளிகளுக்கு ஒரு வகையில் கொடுத்ததை, மற்றொரு வகையில் பறித்துக் கொள்ளவார். 

கூலி உயர்வுக்கான போராட்டம், “கூலை முறை”யை ஒழிப்பதற்கான போராட்டமாக மாறாதவரை, தொழிலாளர்களுக்கு அவ்வப்போது கிடைக்கிற மேம்பாடு என்பது, நிரந்திரத் தீர்வாக இருக்காது. 

பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதைத் தொழிலாளர்களும் காணாமல் இருக்க மாட்டார்கள். 

இந்தக் கூலிக்கான போராட்டத்தைக் கூலி உயர்வுக்கானப் போராட்டமாக மாற்ற வேண்டும் என்கிற உணர்வு கண்டிப்பாகத் தன்னியல்பில் கிடையாது. இதற்கு, மார்க்சியப் புரிதல் அவசியமாகிறது. 

மார்க்சியப் புரிதல் உள்ள கம்யுனிஸ்டுகளின் கடமை:- 

இந்தத் தன்னியல்பான போராட்டத்தின் எல்லைகளை, தொழிலாளர்களுக்குப் புரியவைத்து, கூலி உயர்வுக்காணப் போராட்டத்தை, கூலி முறை ஒழிப்பதற்கான போராட்டமாக உயர்த்த வேண்டும் என்பதை விளக்க வேண்டும். 

இந்தக் கடமையைக் கம்யூனிஸ்டுகள் உணரவேண்டும் என்பதையே இந்த அத்தியாயமும் இந்த நூலும் நமக்குச் சொல்லித் தருகிறது. 

இதுரைவரைப் பார்த்ததைத் தொகுப்போம்:- 

தொழிலாளர்களிடம் தன்னியல்பான போராட்டத்தை மட்டுமே எதிர்பார்க்க முடியும். 

தொழிலாளர்கள் தமது சொந்த முயற்சியால், தொழிற்சங்க உணர்வை மட்டுமே பெறமுடியும். 

அதாவது தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது, அவசியமான தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்ற, அரசை கட்டாயப்படுத்துவது. 

இந்தத் தன்னியல்பான போராட்டத்தைத் தாண்டி தொழிலாளர்கள் கம்யூனிச உணர்வு பெற வேண்டும். இந்த உணர்வை ஊட்டுவதற்கு வெளியில் இருந்து தான் அறிவு சக்தி வரவேண்டும் 

அந்த வெளி சக்தி தான் கம்யூனிஸ்டுகள். 

இந்த நூல் எழுதுகிற காலத்தில், அத்தகையா அறிவு சக்தி, வெளியில் இருந்து வரவேண்டிய நிலை இருந்தது. இன்று தொழிலாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் skilled labour-ராக, அதாவது கல்விபெற்ற தொழில்நுட்ப தொழிலாளர்களாக வளர்ந்துள்ளனர். 

அதனால் இன்றைய நிலையில், பாட்டாளி வர்க்கத்திற்குத் தேவையான அறிவுத் தலைமை, தொழிலாளர் மத்தியிலும், தொழிலார் குடும்பங்களில் இருந்தும் வருவதற்கு வாய்ப்பு பெருகி உள்ளது. இதையும் கணக்கில் கொள்ள வேண்டும். 

கம்யூனிசம் என்பது, வெறும் அரசியல் செயற்பாடு மட்டும் கிடையாது. 

ஏன் என்றால் கம்யூனிஸ்டுகளின் அரசியல் செயற்பாடு, விஞ்ஞானத் தன்மை கொண்டது. 

விஞ்ஞானத் தன்மை பெற வேண்டும் என்றால், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றும் அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றிலும் திறம்பெற வேண்டியுள்ளது. 

விஞ்ஞானத் தன்மையான அரசியலாக இருக்க வேண்டும் என்றால், தத்துவத்திலும் பொருளாதாரத்திலும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 

இத்தகைய பயிற்சிக்கான முயற்சியே இந்த “மார்க்சியர் மேடை” போன்ற படிப்புவட்டம் செயற்படுகிறது. 

லெனின் இந்த நூலில் தன்னியல்பை மறுக்கவில்லை, இந்தத் தன்னியல்போடு நின்று போகாமல், கம்யூனிச உணர்வாக மாற வேண்டும் என்று தான் கூறுகிறார். ஆனால் அதே நேரத்தில் லெனின், தன்னியல்பு வழிபடுவதைக் கடுமையாக எதிர்க்கிறார். இதை நன்றாகக் கவனித்தில் கொள்ள வேண்டும். 

லெனின், தன்னியல்பான போராட்டத்தை, கருவடிவிலான வர்க்கப் போராட்டம் என்று குறிப்பிடுவதனால், தன்னியல்பை லெனின் மறுத்துள்ளார் என்று தவறாகச் சிலர் புரிந்து கொண்டுள்ளனர். அது தவறு. 

கருவடிவிலான வர்க்கப் போராட்டத்தை, முழுமையான வர்க்கப் போராட்டமாக மாறா வேண்டும். லெனின் மறுப்பது தன்னியல்பு வழிபடுவதை. அதாவது தன்னியல்பான போராட்டத்தோடு நின்றுவிடுவதையே மறுத்துள்ளார். 

தொழிற்சங்கப் போராட்டமே தன்னியல்பான போராட்டம் தான். இதனைக் கடந்து கம்யூனிச உணர்வுபெற வேண்டும். இதற்குத் தன்னியல்பை வழிபடுகிற போக்குத் தடையாக இருக்கிறது. 

பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கத்தை முடக்குவது, தன்னியல்பை வழிபடுவதாகும். 

பொருளாதாரப் போராட்டங்கள் தொழிலாளர்களின் முழுமையான விடுதலைக்கு உதவிடாது, அதனால், பொருளாதாரப் போராட்டத்தை, வர்க்கப் போராட்டமாக, முதலாளிதுவத்தைத் தூக்கி எறிவதற்கான போராட்டமாக மாற்ற வேண்டும். 

இன்று நமது நாட்டில், தொழிலாளர்களிடம் செயற்படுகிற கம்யூனிஸ்டுகள் இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தைக் கடந்து வர்க்கப் போராட்டத்திற்கு வழிகாட்டுகிறார்களா? என்பது கேள்வக்குறியாகவே இருக்கிறது. 

இதனை இங்கே விவாதம் வேண்டாம். விவாதிக்க வேண்டிய ஒன்று என்பதை மட்டும் நினைவில் கொள்வோம், சுய விமர்சனம் செய்ய வேண்டும் என்பதை மனதில் கொள்வோம். இங்கே மார்க்சியக் கல்வி பெறுவதோடு நிறுத்திக் கொள்வோம். 

தன்னியல்பு போராட்டத்துடன் நிறுத்திக் கொள்வதை லெனின் ஏன் எதிர்க்கிறார்? அதை அவரே விளக்குகிறார். 

தொழிலாளி வர்க்க இயத்தின் தன்னியல்பு மீதான வழிபாட்டுப் போக்கும், தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வு பெறுவதை மறுக்கிற போக்கும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தொழிலாளிகள் மீது, முதலாளி வர்க்க சித்தாந்தத்தின் செல்வாக்கைப் பலப்படுத்துவதாகவே அர்த்தம் என்கிறார் லெனின். 

பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கத்தைச் சுருக்கிக் கொள்வது, இறுதியில் அது தொழிலாளி வர்க்கத்தை, முதலாளித்துவ வர்க்க தத்துவத்திற்கு ஆட்படுத்துவதில் போய்முடியும். 

இந்த ஆபத்தை உணராதவரை தொழிலாளர்களுக்கு முழுமையான விடுதலைகிட்டாது. 

உலகில் இரண்டு தத்துவப் போக்கு தான் இருக்கிறது. ஒன்று தொழிலார்களுக்கான தத்துவம், மற்றது முதலாளிக்களுக்கான தத்துவம். இதைக் கடந்து நடுவழி என்று எதுவும் கிடையாது, அப்படி நடுவழியை முயற்சிக்கிற போக்கு, இறுதியில் முதலாளித்துவத் தத்துவத்துக்கே சேவை செய்யும். இது தான் நடைமுறையில் கண்ட உண்மை. 

கம்யூனிஸ்டுகளின் பணியாக லெனின் கோடிட்டுக் கூறுவதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த வகுப்பை முடித்துக் கொள்வோம். 

கம்யூனிஸ்டுகளின் பணி தன்னியல்பை எதிர்த்துப் போராடுவதேயாகும். முதலாளி வர்க்கத்தின் அரவணைப்பின் கீழ் செல்லும் இந்தத் தன்னியல்பான, தொழிற்சங்கவாத முயற்சியில் இருந்து தொழிலாளி வர்க்க இயக்கத்தைத் திசைமாற்றி, புரட்சிகரமான கம்யூனிசத்தின் அரவணைப்பின் கீழ் கொண்டுவருவதேயாகும் 

இந்த அத்தியாயம் நமக்கு என்ன சொல்கிறது என்றால், தொழிலார்களின் போராட்டம் இயல்பாகத் தன்னியல்போடு நின்றுவிடும். அது அதிகபட்சமாகச் சங்கமாக இணைந்து, முதலாளியை எதிர்த்துக் கொண்டிருப்பதோடு நின்றுவிடும். இந்தப் போக்கில் இருந்து மாறாது இருப்பது, தன்னியல்பை வழிபடுவதாகும். 

அதனால், பொருளாதாரப் போராட்டம், தொழிற்சங்கப் போராட்டம் என்பதோடு நின்றிவிடாமல், வர்க்கப் போராட்டமாக, முதலாளியை எதிர்க்கின்ற போராட்டம் முதலாளித்துவ உற்பத்தி முறையை எதிர்க்கின்ற போரட்டமாக, சமூக மாற்றத்திற்கானப் போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும். 

தொழிற்சங்கப் போராட்டத்தின் அவசியத்தை உணர வேண்டும், அந்தப் போராட்டம், பொருளாதாரப் போராட்டத்தோடு நின்றுவிடாமல், அரசியல் போராட்டமாக, சமூக விடுதலைக்கான போராட்டமாக மாற வேண்டும். 

இப்படிக் கற்பிக்கிற இந்த அத்தியாயத்தை, நாம் சரியாகப் புரிந்து, சிறந்த கம்யூனிஸ்ட்டாகத் திகழ வேண்டும். 

இந்த அத்தியாத்தைப் படிக்கும் போது நிச்சயமாக நமது நாட்டு நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. 1902ல் லெனின் ருஷ்ய நிலைமையாக என்ன சொல்கிறாரோ, அதைவிட மோசமாகத் தான். நமது நாட்டு நிலை இருக்கிறது. இதை ஒப்புக் கொள்வது கடினமாக இருந்தாலும். இந்த உண்மையை உணர்ந்து, சுய விமர்சனம் இடதுசாரிகள் செய்ய வேண்டும். 

இத்தோடு இந்த அத்தியாயம் முடிந்தது.



 

No comments:

Post a Comment