Sunday 17 January 2021

லெனின் எழுதிய “மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்” – சுருக்கமும் சாரமும்

(“செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட வகுப்பின் குறிப்பு) 

மார்க்சியம் தோன்றிய போது, வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள முதலாளித்துவ விஞ்ஞானிகளிடம் இருந்து மார்க்சியத்தின் மீது விரோதமும், வெறுப்பு ஏற்பட்டது. அது மார்க்சியத்தை ஒரு தீங்கு தரக்கூடிய போக்கு என்று கருதியது. வர்க்கமாகப் பிரிந்துள்ள சமூகத்தில், ஒரு சார்பற்ற சமூக விஞ்ஞானத்தை எதிர் பார்க்க முடியாது. அதாவது வர்க்க சமூகத்தில் சுரண்டுபவர்களுக்கும் சுரண்டலுக்கு ஆளானவர்களுக்கும் ஒரே நலன் இருக்காது. இருவர்களின் நலன்கள் முரணாகவும், பகையாகவும் இருக்கும். அவர்களின் தத்துவமும் அவரவரர்களின் நலனையே பிரதிபலிக்கும். 

இந்த முதலாளித்துவ விஞ்ஞானம் ஏதாவது ஒரு வகையில் கூலி அடிமை முறையை ஆதரித்து வருகிறது. மார்க்சியமோ கூலி முறையை எதிர்த்துப் போராடுகிறது. அதனால் இந்த முதலாளித்துவ விஞ்ஞானம் மார்க்சியத்தை விரோதமாகக் கருதியது ஆச்சரியப்படக் கூடியது அல்ல.

 

முதலானித்துவ விஞ்ஞானம் ஒரு சார்ப்பற்றது, அனைவருக்கும் ஆனது என்று கூறிட முடியாது. இதற்கு ஒரு உதாரணத்தை லெனின் தருகிறார். முதலாளி தமக்குக் கிடைக்கும் லாபத்தைக் குறைத்து, அதன் மூலம் தொழிலாளிக்கு கூலியை உயர்த்த முன்வருவார் என்று எப்படி எதிர் பார்க்க முடியாதோ, அது போல வர்க்க சமூகத்தில் ஒரு சார்பற்ற சமூக விஞ்ஞானத்தைக் காணமுடியாது. அவரவர்களின் வர்க்க நலனை அவரவர்களது தத்துவம் கோரும். 

மார்க்சியம் ஒரு குறுங்குழுவாதமல்ல, எந்தத் தனிப்பட்டவரின் மூளையில் உதித்த கருத்தைக் கொண்டு மார்க்சியம் உருவாக்கப்படவில்லை. ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியாக உருவானது தான் மார்க்சியம். இதுவரை மனித குல சிந்தனையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, மார்க்சியம் பதிலளிக்கிறது. அது தான் மார்க்சியத்தின் சிறப்பு. மார்க்சியத்தின் உள்ளடக்கமான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானச் சோஷலிசம் ஆகியவை, திடீர் என்று மூளைத்தவை அல்ல. இந்த மூன்றும் வரலாற்றுத் தொடர்ச்சியை ஒட்டியே தோன்றியவை ஆகும். 

மார்க்சியம் உண்மையானது, பிழையற்றது என்று கம்யூனிஸ்டுகள் கூறுவதற்குக் காரணம் இருக்கிறது. மார்க்சியம் என்பது உள்ளிணக்கம் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த போதனையாகும். தத்துவம், அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றை முன்வைத்து, விஞ்ஞானத் தன்மையில் முதலாளித்துவ ஒடுக்கு முறையை மார்க்சியம் எதிர்க்கிறது. அதனால் இந்த மார்க்சியத்தில் எத்தகைய மூடநம்பிக்கைக்கும், பிற்போக்குக்கும் சிறிதும் இடம் கிடையாது. 

முன்பே சொன்னது போல, மார்க்சியம் வரலாற்று தொடர்சியானது, திடீரென்னு தனித்து முளைத்தது கிடையாது. மார்க்சிய தத்துவம் ஜெர்மன் தத்துவத்தின் தொடர்ச்சியாகும், மார்க்சியத்தின் அரசியல் பொருளாதாரம் ஆங்கில அதாவது இங்கிலாந்து அரசியல் பொருளாதாரத்தின் தொடர்ச்சியாகும். மார்க்சியத்தின் சோஷலிசமானது பிரெஞ்சு நாட்டு சோஷலிசத்தின் தொடர்ச்சியாகும். அதனால் மார்க்சியத்தை 19ஆம் நூற்றாண்டில் மனிதகுலம் படைத்தளித்த தலைசிறந்த படைப்புகளின் தொடர்ச்சி என்றும் வாரிசு என்றும் கூறலாம். இதனைத் தொடர்ந்து மார்க்சியத்தின் மூன்று உட்பிரிவுகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானச் சோஷலிசம் அகியவற்றை லெனின் எவ்வாறு விளக்கியுள்ளார் என்பதைப் பார்ப்போம். 

தத்துவம் 

மார்க்சியத்தின் தத்துவம் பொருள்முதல்வாதமாகும். இது கருத்துமுதல்வாதத்திற்கு எதிரானது. கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்பது பற்றி இதுவரை தெரிந்து கொள்ளாத தோழர்கள் இதனைக் கேட்டு மிரள வேண்டாம். படிப்பாகப் பல நூல்களைப் படிக்கும் போதும், பல வகுப்புகளைக் கேட்கும் போதும் படிப்படியாகப் புரிந்து கொள்ளலாம். இன்று எந்தளவுக்குப் புரிந்து கொள்ள முடிகிறதோ, அதுவரை புரிந்து கொள்ளுங்கள். 

மார்க்சிய தத்துவமான பொருள்முதல்வாதமானது முரணற்ற தத்துவமாகும். கருத்துமுதல்வாத மூடநம்பிக்கைகளுக்குப் பகையானது, எதிரானது. இந்தச் சோஷலிசக் கருத்து பிரெஞ்சு தேசத்தில் 18ஆம் நூற்றான்டின் இறுதியில் தோன்றியது. மத்திய காலத்தில் காணப்பட்ட நிலப்பிரபுத்து பழைய கருத்துக்களையும், நவீன ஐரோப்பியா கருத்துக்களையும் எதிர்த்துப் போராடி நிலைபெற்றது. 

மார்க்சியத்திற்கு எதிரானவர்கள், பொருள்முதல்வாதத்தை மறுப்பதற்கும், பழிப்பதற்கும் முழு மூச்சுடன் பாடுபட்டனர். அவ்வாறு எதிர்ப்பவர்கள், பொருள்முதல்வாதத்திற்கு எதிரான கருத்துமுதல்வாதத்தின் பல போக்குகளை ஆதரித்தனர். மார்க்சியத்தை எதிர்க்கும் கருத்துமுதல்வாதமானது இறுதியில் மதத்தை ஆதரிப்பதில் போய் முடிகிறது. 

மார்க்சும் எங்கெல்சும் தாம் படைத்த பொருள்முதல்வாத தத்துவத்தை மிகுந்த உறுதியோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். பொருள்முதல்வாதத்தில் இருந்து விலகும் ஒவ்வொரு போக்கையும், அது எவ்வகையில் தவறானது என்பதை விளக்கினர். எங்கெல்ஸ் எழுதிய லுத்விக் ஃபாயர்பாக், டூரிங்கக்கு மறுப்பு என்கிற நூல்களில் மார்க்சிய தத்துவக் கருத்துக்கள் முழுமையாக விளக்கப்படுத்தப்பட்டுள்ளது, மார்க்சும் எங்கெல்சும் சேர்ந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்கிற நூலைப் போலவே இந்த இரண்டு நூல்களையும் கம்யூனிஸ்டுகளும், தொழிலாளர்களும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார். 

மூன்று நாடுகளில் காணப்பட்ட போக்குகளில் இருந்து மார்க்சியம் தோன்றியது என்று கூறுவதால், எதோ அந்தக் கருத்தை அப்படியே ஏற்றுப் பயன்படுத்திக் கொண்டத என்று பொருள் கொள்ளக் கூடாது. அவைகளை விமர்சனப் பூர்வமாகச் செழுமைப்படுத்தினார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிச் செழுமைப்படுத்தியதில் இயக்கவியல் மிகவும் முக்கியமானது ஆகும். இயக்கவியல் என்றால் வளர்ச்சியைப் பற்றிய விதி ஆகும். இயற்கை விஞ்ஞானம் அனைத்தும் மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதமே சரி என்பதை நிரூபித்து வருகிறது. இந்த நிரூபனத்தை, பழைய கருத்துமுதல்வாதப் போக்கு, புதிய வியாக்கியானப்படுத்தி மார்க்சியத்தைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது, ஆனால் அது முடியாமல் போகிறது. காரணம் மார்க்சியம் விஞ்ஞானத் தன்மையானது. 

மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதம்கூட இயற்கைக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தது. ஆனால் மார்க்ஸ் இந்தப் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை வரலாற்றுக்குப் பயன்படுத்தினார். அந்தத் தத்துவப் பிரிவுக்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்று பெயர். பொருள்முதல்வாதத்தை வரலாற்றுக்குப் புகுத்தியது சமூகம் பற்றிப் புரிதலுக்கு மிகப் பெரிய வெற்றியாகும். இந்த வெற்றியை வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பற்றிப் படிக்கும் நன்றாக அறிந்து கொள்ளலாம். 

மார்க்சுக்கு முன்பாக, வரலாற்றைப் புரிந்து கொள்வதில் குழப்பம் மிகுந்து காணப்பட்டது. வரலாற்றை, பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கியவுடன், தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது என்று லெனின் கூறுகிறார். இது பற்றிய விளக்கங்களை இங்கே பார்க்க வேண்டாம். அது ஒரு தனி வகுப்பெடுக்க வேண்டும். இங்கே அந்த வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் சுருக்கத்தை மட்டும் பார்ப்போம். 

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ன சொல்கிறது, ஒரு சமூக அமைப்பில் இருந்து மற்றொரு சமூக அமைப்புக்கு மாறுவதற்கு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியே காரணம் ஆகும். ஆதியில் பழங்குடி சமூகம் இருந்தது, அதற்கு அடுத்து அடிமை சமூகம் தோன்றியது, அதற்கு அடுத்து நிலப்பிரப்புத்துவச் சமூகம் தோன்றியது, அதற்கு அடுத்து முதலாளித்துவச் சமூக அமைப்பு தோன்றியது, முதலாளித்துவச் சமூகத்திற்கு அடுத்து சோஷலிச சமூகம் என்ற புதிய சமூகம் தோன்றும் என்பதையே வரலாற்றியல் பொருள்முதல்வாதம் சுட்டிக்காட்டுகிறது. 

இயற்கையும், வெளியே உள்ள பருப்பொருளும் மனிதனைச் சாராமல் புறநிலையில் இருக்கிறது. மனிதனுக்குப் புறத்தில் காணப்படும் இந்த இயற்கையை, மனிதன் அறிய முடியும், அப்படி அறிவதையே, புறநிலை மனிதனிடம் பிரதிபலிக்கிறது என்று கூறப்படுகிறது. இது தனிநபரிடம் புறநிலை பிரதிபலிப்பது பற்றிப் பேசுகிறது. அதே போலத் தான் சமூக உணர்வு என்று கூறப்படுகிற சமூக அறிவு என்பதும் சமூகத்தில் காணப்படும் பொருளாதார அமைப்பு முறையினால் பிரதிபலிக்கப்படுகிறது. இதனை அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டின் மூலம் மார்க்சியம் நிறுவுகிறது. உற்பத்தி முறை என்பது அடித்தளம், இந்த அடித்தளமே மேற்கட்டமைப்பான தத்துவம், மதம், அரசியல் போன்ற சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது. அதாவது அடித்தமே மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது. 

இதனை விளக்குவதற்கு அன்றைய ஐரோப்பிய அரசு என்பது பாட்டாளி வர்க்கத்தை ஆதிக்கம் செலுத்துவதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். 

இந்த மார்க்சிய தத்துவமான பொருள்முதல்வாதமானது முழுநிறைவு பெற்ற தத்துவமாகும். இந்தப் பொருள்முதல்வாதம் தொழிலாளர்களுக்கும், மனிதனுக்கும் அறிவு பெறுவதற்கு உதவிடுகிறது. அதனால் முற்போக்கான தொழிலாளர்களும், முற்போக்கான அறிவாளிகளும் மார்க்சின் பொருள்முதல்வாதத்தை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். 

அரசியல் பொருளாதாரம் 

இங்கே லெனின் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைக் குறிப்பிடுகிறார். பொருளாதார உற்பத்தி உறவுகளால் தான் சிந்தனைகள் தோன்றுகின்றன என்கிற வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்டு பிடிப்புக்குப் பிறகு மார்க்ஸ் பொருளாதார அமைப்பு முறை மீதான கவனத்தை அதிகரித்தார். இந்த அடிப்படையில் தான் மூலதனம் என்கிற முக்கியமான நூலை மார்க்ஸ் எழுதினார். இந்த நூல் முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் உள்முரண்பாட்டை வெளிப்படுத்தி அந்த முரண்பாடே முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவதற்குக் காரணம் ஆகிறது என்பதை ஆராய்ந்து முடிவு செய்துள்ளது. 

இங்கிலாந்தில் தான் முதலாளித்துவம் முழுவளர்ச்சி பெற்றது, அதனால் தான் அங்கே செம்மை அரசியல் பொருளாதாரம் தோன்றியது. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பை ஆராய்ந்த செம்மை பொருளாதார அறிஞர்களான ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ மதிப்பு பற்றிய உழைப்புக் கோட்பாட்டின் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இந்த மதிப்புக் கோட்பாட்டை மார்க்ஸ் உபரி மதிப்புக் கோட்பாடாக வளர்த்தெடுத்தார். மதிப்பு பற்றிய உழைப்புக் கோட்பாட்டில் உள்ள மதிப்பு என்பதை மிகத் தெளிவ ஆராய்ந்து அது உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட சமூக வழியிலான அவசியமான உழைப்பு நேரத்தன் அளவே என்பதை நிறுவினார். இதைப் பொருளாதாரம் பற்றிய வகுப்பில் மிகவும் கவனமாகப் படிக்க வேண்டும். இங்கே இது போதும். 

பொருளாதார உறவில், முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் ஒரு சாரக்குக்கும் மற்றொரு சரக்குக்கும் இடையிலான உறவாகப் பார்த்தனர், மார்க்சோ மனிதர்களுக்கு இடையிலான உறவாகப் பார்த்தார். முதலாளித்துவ உற்பத்தியில் தனித்தனியாக உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள், சந்தை வாயிலாக இணைப்பை ஏற்படுத்துகிறது. இந்தச் சரக்குப் பரிமாற்றத்தில் பணம் என்பது தனிப்பட்ட உற்பத்தியாளர்கள் அனைவரையும் முழுமொத்தமாக இணைக்கிறது. 

பணமும் மூலதனமும் ஒன்றல்ல, இதை அரசியல் பொருளாதாரம் பற்றிப் படிக்கும் போது தெளிவாக்கலாம். தொழிற்சாலை முதலாளியிடம் தொழிலாளி தமது உழைப்பு சக்தியை விற்கிறார், தொழிலாளி முதலாளியிடம் தமது உழைப்பை விற்பதில்லை, உழைப்பு சக்தியைத் தான் விற்கிறார். உழைப்பு என்று பொதுவாகக் கூறினால் அது தொழிற்சாலையில் ஒருவர் உழைக்கும் நேரம் முழுவதையும் குறிக்கும். உழைப்பு சக்தி என்று மார்க்ஸ் எதைக் குறிப்பிடுகிறார் என்று பார்ப்போம். 

ஒரு தொழிலாளி தொழிற்சாலையில் உழைக்கும் வேலை நாளின் ஒரு பகுதி, தன்னையும் தமது குடும்பத்தையும் பராமரிப்பதற்காக உழைக்கிறார் அதற்கே கூலி கொடுக்கப்படுகிறது. இந்த உழைப்பு நேரப் பகுதியில் தமக்குக் கூலியாகக் கொடுக்கப்படும் தொகைக்கு ஈடுசெய்யப்படுகிறது. வேலை நாளின் மறுபகுதிக்கு ஊதியம் எதுவும் பெறாமல் உழைக்கிறார். இந்த மறுபகுதியில் உழைப்பதே உபரி மதிப்பை படைக்கிறது. இந்த உபரி மதிப்பே லாபத்தின் தோற்றுவாய் ஆகும். இந்த லாபமே முதலாளி வர்க்கத்தின் செல்வத்தை அதிகரிக்கிறது. இந்த உபரி மதிப்பு கோட்பாடு தான் மார்க்சின் பொருளாதாரக் கோட்பாட்டின் மூலைக்கல் என்று லெனின் கூறுகிறார். 

இந்த உபரிமதிப்பே மூலதனமாகத் திரள்கிறது, இந்த மூலதனம் சிறு உற்பத்தியாளர்களைப் படிப்படியாக அழித்து அவர்களை வேலையில்லாதவர்களாக ஆக்குகிறது. வேலை இல்லாதவர்களின் இத்தகைய பட்டாளம் தொழிலாளர்களின் கூலியை குறைத்து நெருக்குகிறது. தொழிற்துறையிலும், விவசாயத்திலும் நவீன இயந்திரங்கள் புகுத்தப்பட்டு உற்பத்தி பெருகுகிறது. விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சியினால் சிறிய அளவு விவசாயிகள் சீர்குலைவுக்கு ஆளாகுகிறார்கள். தொழிற்சாலையின் விரிவான உற்பத்தியினால் சிறு தொழிலாளர்கள், கைவினைஞர்கள் படிப்படியாக அழிக்கப்படுகின்றனர். அதே போல விவசாயத்தில் முதலாளித்துவ மூலதனம் புகுத்தப்படுவதினால், சிறு உற்பத்தி விவசாயிகள் படிப்படியாக அழிக்கப்படுகின்றனர். இந்த அழிவு மறுக்க முடியாத உண்மையாகப் பட்டவர்த்தனமாகத் தெரிகிறிது. 

மூலதனம் இத்தகைய சிறிய உற்றத்தியாளர்களை ஒழித்து, உழைப்பின் உற்பத்தித்திறன் அதிகரிப்பதும், ஏகபோக நிலை ஏற்படுவதும் நிகழ்கிறது. முதலாளித்துவ உற்பத்தியின் வளர்ச்சிக் கட்டத்தில் உற்பத்தியானது சமூகத்தன்மை வெளிப்படுகிறது. இந்தச் சமூகத் தன்மையான உற்பத்தியில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பிணைக்கப்படுகிறார்கள். ஆனால் இந்தச் சமூகத்தன்மையான உற்பத்தியின் பலனை சில ஏகபோக முதலாளிகளே உடைமையாக்கிக் கொள்கின்றனர். உற்பத்தி சமூகத் தன்மை பெற்றதாக இருக்கறிது, ஆனால் வினியோகம் தனிவுடையின் அடிப்படையில் சிலரிடம் அதிகம் செல்கிறது. இன்றைய சமூகப் பிரச்சினைக்கு இதுவே காரணமாகிறது. 

முதலாளிகளுக்கு இடையே உள்ள போட்டி, ஏகபோகக் காலக்கட்டத்தில் போடியில்லாமல் திட்டமிட்ட உற்பத்தி நிகழ்த்தப்படுவதாகக் கருதப்படுகிறது. ஆனால் ஏகபோக உற்பத்தியிலும் போட்டியும், மிகை உற்பத்தி என்கிற அராஜகத் தன்மை காணப்படவே செய்கிறது. பொருளதார நெருக்கடிகளும் ஏற்படுகிறது. சந்தைகளைப் பிடிப்பதற்கான போட்டிகளும் தொடர்கிறது. மொத்தத்தில் மக்களின் பாதுகாப்பு இன்மை அதிகரிக்கவே செய்கிறது. 

மூலனத்தைத் தொழிலாளர்கள் அண்டிப் பிழைக்க வேண்டியநிலையை இந்த ஏகபோகம் அதிகரித்தாலும், ஒன்றுதிரண்ட உழைப்பு என்கிற மாபெரும் வலிமையைப் படைத்துள்ளது. இதுவே இந்த ஏகபோக முதலாளித்துவம் அழிவுக்குக் காரணமாகப் போகிறது 

சரக்குப் பரிமாற்றம் என்கிற தொடக்க நிலையில் இருந்து, சரக்கு உற்பத்தியில் மிக உயர்ந்த நிலையான முதலாளித்துவத்தின் வளர்ச்சியை மார்க்ஸ் ஆராய்ந்து காட்டியுள்ளார். 

மார்க்சின் ஆராய்ச்சி நமக்கு என்ன சொல்கிறது என்றால், பழைய முதலாளித்துவமானலும், புதிய வளர்ச்சி அடைந்த முதலாளித்துவமானலும் மார்க்சின் கோட்பாடு தவறில்லை என்பதையே உணர்த்துகிறது. அவ்வப்போது ஏற்படுகிற பொருளாதார நெருக்கடிகள் மார்க்ஸ் கூறியது நிகழ்ந்தே தீரும் என்பதை உறுதிப்படுத்துகிறது. 

இப்போது பெற்றுவருகிற முதலாளித்துவத்தின் வெற்றி என்பது இறுதியில் முழுமையாக முதலாளித்துவத்தை உழைப்பு அடையப்பபோகிற வெற்றியின் முன்னறிவுப்பாகும். முதலாளித்துவத்தின் தோல்வி தள்ளிப் போகலாம், ஆனால் முதலாளித்துவத்தை உழைப்பு தூக்கி எறியப் போவது தவிர்க்க முடியாது. மார்க்சியத்தை அறிந்தவர்களுக்கு இதில் எந்தச் சந்தேகமும் ஏற்படாது. 

சோஷலிசம் 

நிலப்பிரபுத்துவ அமைப்பை வீழ்த்தி முதலாளித்துவம் தோன்றும் போது “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்று முழக்கம் இட்டது. ஆனால் இந்த முதலாளித்துவச் சமூகம் தொழிலாளர்களை ஒடுக்கவும், சுரண்டவும் அமைந்த புதிய உற்பத்தி முறை என்பதை உடனேயே வெளிப்படுத்திவிட்டது. வர்க்க வேறுபாடுகள் முதலாளித்துவ அமைப்பில் வெட்டவெளிச்சமாக வெளியே தெரிகிறது. இதனைப் போக்குவதற்குப் பல்வேறு சோஷலிச போதனைகள் அப்போது தோன்றின. முதலாளித்துவம் தோன்றிய தொடக்கக் காலத்தில் தோன்றிய போதனைகள் கற்பனா சோஷலிசமாகத்தான் இருந்தது. 

இந்தக் கற்பானவாத சோஷலிசம், முதலாளித்துவச் சமூகத்தை விமர்சிக்கிறது, ஒழிய வேண்டும் என்று கனவு கண்டது, மேலான சமூக அமைப்பை பற்றிய ஆகாயக் கோட்டை கட்டியது. சுரண்டல் என்பது ஒழுக்கக் கேடான செயல் என்று பணக்காரர்களுக்கு உணர்த்த முயற்சித்தது. முதலாளிகள் இந்த அறநெறி போதனையைப் பெற்று சோஷலிச சமூகத்திற்கு இடம் கொடுப்பர் என்று கனவு கண்டது. 

உண்மையில் இந்தக் கற்பனாவாத சோஷலிசத்தால் முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவதற்கும், புதிய சமூக அமைப்பை எப்படி நிறுவப் போகிறோம் என்பற்கான வழியை அதனால் சுட்டிக்காட்ட முடியவில்லை. முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் கூலி முறையின் உண்மைத் தன்மையினைக் கற்பனாவாத சோஷலிசத்தால் உணரமுடியவில்லை. முதலாளித்துவ வளர்ச்சி அதாவது சமூக வளாச்சி என்பது ஒரு விதிக்குள் செல்கிறது என்பதையும், முதலாளித்துவ வளர்ச்சிமையும் வீழ்ச்சியையும் பற்றிய விதியை கற்பனாவாத சோஷலிசத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு சிறந்த அறிஞரின் முளையையே அது நம்பிக் கொண்டிருந்தது, புதிய சமூகத்தைப் படைக்கும் சக்தியாக, பாட்டாளி வர்க்கம் வளர்ந்து வருவதை அதனால் சுட்டிக்காட்ட முடியவில்லை. 

ஐரோப்பாவில் நிலப்பிரப்புத்துவம் வீழ்ச்சி அடைந்து, முதலாளிததுவம் வெற்றி பெற்ற போது, வாக்கப் போராட்டம் தான் அனைத்து வளர்ச்சிக்கும் உந்து விசை என்பது தெளிவாக வெளிப்பட்டது. 

நிலப்பிரப்புத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவம் அடைந்த வெற்றியானது, தோல்வி அடையும் வர்க்கத்தின் மூர்கமான எதிர்ப்பை சந்திக்காமல் பெறவில்லை. அதே போல முதலாளித்துவச் சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களின் ஜீவமரணப் போராட்டம் இல்லாமல் எந்த முதலாளித்துவ நாட்டிலும் ஓரளவுக்கான சுதந்திரமும், ஜனநாயகமும் கிடைத்திடவில்லை. 

சமூகம் வர்க்கப் போராட்டத்தில் தான் இயங்குகிறது என்று மார்க்ஸ் கண்டு பிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில் சமூகத்தின் செல்வழியை முன்னறிந்து மார்க்சால் கூற முடிந்தது. அதன் வழியில் நடைமுறைப்படுத்தவும் அவரால் முடிந்தது. 

சமூகம் வர்க்கமாகப் பிளவுபட்டுள்ளது என்று அறிந்த பின்பு, சமூகத்தில் தோன்றும் கருத்துக்களும் வர்க்க சார்பாகத் தான் இருக்கும். இதனைப் புரிந்து கொள்ளாதவரை ஏமாளிகாளகவும், முட்டாள்களாகவும் இருக்க வேண்டியது தான். நீதி, மதம், அரசியல், சமூகம் ஆகியவை பற்றிய கருத்துக்களில் வர்க்க சார்பு நிச்சயமாக இருக்கிறது. அதனால் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை தொழிலாளர்களின் நலன் சார்ந்ததாகத் தான் இருக்க முடியும். முதலாளிகளின் நலனை ஆதரிக்கிற கருத்துமுதல்வாத போக்குகளுக்கு எதிரான, பொருள்முதல்வாத போக்கை தொழிலாளர்களும், கம்யூனிஸ்டுகளும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். 

மதம் போன்ற பழைய கருத்துக்கள் எவ்வளவு அநாகரீகமாகத் தோன்றினாலும் எதாவது ஒரு ஆளும் வர்க்கத்தின் நலன்களை அது பிரதிபலிக்கவே செய்கிறது. அதனால் சுரண்டும் வர்க்கம் அதை நிலைநிறுத்துகிறது. சீர்திருத்தங்கள், மக்களின் மேம்பாடுகள் போன்றவற்றை முன்வைத்துப் போராடுபவர்கள், இதனை உணராத வரையில், பழைய அமைப்பு முறையின் ஆதரவாளர்கள் அவர்களை என்றைக்கும் முட்டாள்களாக்கிக் கொண்டே தான் இருப்பார்கள். 

முதலாளித்துவ வர்க்கங்களின் எதிர்ப்பை தகர்ப்பதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. பழையதை துடைத்தெறிவதற்கும், புதியதை படைப்பதற்கும் திறன் பெற்ற ஒரு சக்தியை இன்றைய சமூகத்தில் கண்டறிய வேண்டும். அந்தச் சக்தி பாட்டாளிகள் தான், இங்கே பாட்டாளி என்று கூறப்படுவது ஆலைத் தொழிலாளர்களைத் தான். இந்தப் பாட்டாளிகளே இன்றைய உற்பத்தி முறையின் ஏற்ற இறக்கங்களின் காரணமாக உடனடியாகவும், அதிகமாகவும் பாதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட பாட்டாளிகளுக்கு அறிவொளி ஊட்டி, போராட்டத்திற்கு அவர்களைத் திரட்டி தயார்ப்படுத்த வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியம் இங்கே தான் நிலைபெற்றுள்ளது. இதனை அறிந்து கம்யூனிஸ்ட் கடசியில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் பாட்டாளி வர்க்கத்தை அறிவொளி ஊட்டுவதற்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்த வேண்டும். அதற்கு ஒரே வழி மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும், மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தையும் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் கம்யூனிஸ்டுகளின் அரசியல் விஞ்ஞானத் தன்மை பெற்றதாக இருக்கும். 

இங்கே லெனின் பொருள்முதல்வாதத் தத்துவத்தையும், மார்க்சின் அரசியல் பொருளாதாரத்தையும் அறிந்து கொண்டு பாட்டாளிகள் விழிப்பு பெற்று போராட வேண்டியதின் அவசியத்தைக் கூறியுள்ளார். இதல்லாமல் பழைய தப்பெண்ணங்களை ஒழித்துக்கட்டி பாட்டாளி வாக்கம் வெற்றியை சாதிக்க முடியாது. 

உலகெங்கிலும் பாட்டாளி வர்க்கம், போராட்டத்தின் மூலமே, அறிவொளியும் கல்வியும் பெற்று வருகிறது. பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போராட்டத்தின் வழியில் தான் மார்க்சிய கல்வியைப் பெறமுடியும். சமூகத்தில் இயல்பாகவே காணப்படும் முதலாளித்துச் சமூகத்திற்கு உரிய சார்புக் கருத்துக்களில் இருந்து, போராட்டத்தின் வாயிலாகப் பாட்டாளி வாக்கம் விடுவித்துக் கொள்கிறது. பாட்டாளிகளின் ஒற்றுமையின் அவசியத்தை அறிந்து கொள்கிறது, தனது வெற்றியின் பயணத்தை அறிந்து செல்கிறது, தனது சக்திகளை உறுதியாக்கி வருகிறது. இதை எல்லாம் பாட்டாளி வர்க்கம் போராட்டத்தின் வாயிலாகத்தான் கற்கு கொள்கிறது. 

சோவியத் யூனியன், சீனா மற்றும் பிற சோஷலிச நாடுகள் வீழ்ச்சிக்கு அதன் திரிபும் தவறுகளும் தான் காரணம். மார்க்சிய அடிப்படைகள் இன்றும் சரி என்பதை அவ்வப்போது ஏற்படுகிற பொருளாதர நெருக்கடிகள் உறுதிப்படுத்தி வருகின்றன. இந்த நெருக்கடிக்குத் தீர்வை, முதலாளித்துவச் சமூகத்தைத் தூக்கி எறிவதும், சோஷலிச சமூகத்தைப் படைப்பதும் மூலம் கிடைக்கும்.

No comments:

Post a Comment