Wednesday, 10 August 2016

சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியம் தேவை- நூலுக்கு எதிர்வினை

மூல நூல் ஆசிரியர்- ரங்கநாயகம்மா
ஆங்கிலம் வழி தமிழில்-கொற்றவை

விலை: ரூ80/-

Published by
SWEET HOME PUBLICATION
Hyderbad

Distributed by
Kurali Pathippagam
Mobile- 9500150047
email Id- kotravaiwriter@gmail.com


ரங்கநாயகம்மா அவர்கள் தெலுங்கில் “சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியம் தேவை!” என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்நூலின் ஆங்கில வழி தமிழில் கொற்றவை மொழி பெயர்ப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. அம்பேத்கர் எழுதிய “புத்தரா! காரல் மார்க்சா!” என்ற கட்டுரைக்குக் கம்யூனிஸ்டுகள் எதிர்வினையாற்ற வேண்டும் என்ற எனது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வந்துள்ள நூல் இது. அந்த வகையில் நான் வெகுகாலமாக எதிர்பார்த்த நூல்.

நமக்கு மார்க்ஸ் அல்ல புத்தர் தான் தேவையானவர் என்று அம்பேத்கர் கூறியதற்கு மார்க்ஸ் எந்த வகையில் தேவையானவர் என்பதைக் கூறியாக வேண்டிய நிலையில் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் இது போன்ற நூல்கள் வரவேண்டியது அவசியமாகிறது.

மார்சியத்தைவிடப் பவுத்தமே மகத்தானக் கோட்பாடு, அதுவே தமக்கான பாதை என்று அம்பேத்கர் நம்முன் முன்வைக்கிறார். ரங்கநாயகம்மா இதனை மறுத்து மார்க்சியமே சாதியத்திற்குச் சரியான தீர்வளிக்கிறது என்று மார்க்சிய அணுகுமுறையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பழங்குடி மக்களின் மிச்ச சொச்சம் சாதியமாக உருமாறியிருக்கும் என்ற கருத்தைவிட, உழைப்புப் பிரிவினை, தொழில் முறை ஆகியவற்றால் தோன்றியவையே சாதி என்பதையே பெரும்பான்மையினர் ஏற்பதாகக் கூறுகிறார். அடுத்து, அம்பேத்கர் கேட்கின்ற ஒரு கேள்வியை நல்ல கேள்வி என்று ரங்கநாயகம்மா முன் வைக்கிறார். உழைப்புப் பிரிவினை எல்லா நாடுகளில் காணப்பட்டலும் சாதி இந்தியாவில் மட்டும் ஏன் இருக்கிறது? இந்தியாவின் சில விஷேச சூழ்நிலை பங்களித்தது என்று பதிலளித்தாலும் அந்த விஷேச சூழ்நிலை என்னவென்று விளக்க முடியவில்லை. இந்த நிலையில் அம்பேத்கர் அக்கேள்விக்கு 1916ஆம் ஆண்டு எழுதிய “இந்தியாவில் சாதிகள்” என்ற நூலில் பதில் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறியுள்ளார். அம்பேத்கார் அகமணமுறையின் தொடக்கமே சாதியத்தின் தோற்றுவாய் என்கிறார்.

அம்பேத்காரிடம் முரண்பாடு காணப்படுவதாக ரங்கநாயகம்மா கூறுகிறார். அம்பேத்கர் ஓரிடத்தில் அகமணமுறை என்பது காரணம், சாதி என்பது அதன் விளைவு. இதன்படி இரண்டும் ஒத்ததல்ல, ஆனால் மற்றொரு இடத்தில் அகமணமறையும் சாதியும் இரண்டும் ஒன்று தான் இந்த இரண்டில் எதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ரங்கநாயகம்மா கேள்வி எழுப்புகிறார்.

அம்பேத்கரின் நால்வருணம் பற்றிய கருத்தை ரங்கநாயகம்மா ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார். அம்பேத்கரைப் பொருத்தளவில் நால் வருணமும் சாதியமும் வேறுவேறு, வருண அமைப்பில் ஒருவர் தன்னுடைய வருணத்தை மாற்றிக் கொள்ள முடியும் ஆனால் சாதியத்தில் அவ்வாறு முடியாது. வருணம் தொழில் அடிப்படையிலும், சாதி அகமணமுறை அடிப்படையிலும் தோன்றுவதாக (34) அம்பேத்கர் கூறுகிறார். மேலும் சாதியத்தைப் பற்றிக் கூறும் போது மனுவோ அல்லது பிராமணர்களோ மக்கள் மீது சாதியத்தைச் சுமத்தவில்லை, மக்களே முழு மனதுடன் தங்களுக்குள் சாதியை அறிமுகம் செய்து கொண்டதாக அம்பேத்கர் கூறுகிறார். இதற்கு ரங்கநாயகம்மா கேள்வியை எழுப்புகிறார்.

தீமையான ஒன்றை மக்கள் ஏன் அறிமுகம் செய்ய வேண்டும்?, அதுவும் அதனைச் சகித்துக் கொள்ளக் கூடாது என்று உணர்ந்தபின்னர்?. இது போன்ற கேள்வி அம்பேக்கருக்கு ஏன் எழவில்லை என்று ரங்கநாயகம்மா கேட்பதுடன், இதனை நம்பமுடியவில்லை என்றால் அவருடைய சொற்கள் இதோ என்று அவரது தொகுதியில் இருந்து பேராபேராவாக நமக்கு அள்ளித் தெளிக்கிறார். இந்த நூலில் ஆதாரத்திற்காக அம்பேத்கரின் வார்த்தைகள் நேரடியாக மேற்கோளாக அதிகம் பக்கங்களில் இடம்பெறுகிறது. அம்பேத்கர் முரணாகக் கூறிய பலவற்றைத் தொகுத்தளித்துள்ளார். தவறானதை சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் பக்கங்கள் அதிகம் கொண்ட நூலாக உருவெடுத்துள்ளது.

சிறுமி திருமணம், சதி போன்றவை அகமணமுறையினால் உருவானவை என்று அம்பேத்கர் கூறியதை ரங்கநாயகம்மா விமர்சித்துள்ளார். மனைவி இறந்து கணவன் உயிருடன் இருந்தால் அவன் ஒரு ‘கூடுதல் ஆண்’, அதே போல் கணவன் இறந்து மனைவி இறந்தால் அந்தப் பெண் ‘கூடுதல் பெண்’, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இந்துசமூக அமைப்பு சதி என்கிற இறந்த கணவனின் உடலோடு மனைவியையும் சேர்த்து எரித்தல். இரண்டாவது விதவை மறுமணத்தைத் தடுக்கக் கட்டாய விதவைக் கோலம் பூணவைப்பது. மூன்றாவதாகச் சிறுமித் திருமணம். அகமணமுறை வழக்கத்தைக் கட்டிக்காக ஆண்கள், பெண்கள் ஆகியோரின் எண்ணிக்கை சம அளவினதாக இருக்குமாறு பேணுவதற்காக இந்து சமுகம் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளதாகக் கூறுகிறார். ரங்கநாயக்கம்மா இதனை முன்வைத்துக் கேள்வி எழுப்புள்ளார், ஒரு கூடுதலான ஆண் சிறுமையைத் திருமணம் செய்தால் அதே பிரச்சினை தொடரத்தானே செய்கிறது, ஆண்களும் பெண்களும் சம அளவிலேயே சமூகத்தில் காணப்படுவர் என்றால் சிறுமியை மனைவி இழந்தவர் திருமணம் புரிந்ததால் சிறுவன் ஒருவனுக்கு நாளை பெண் கிடைக்காமல் கூடுதல் ஆணாகத் தானே இருப்பான். இதுபோன்று நிறைய இடங்களில் அம்பேத்கரின் வாதங்கள் உடைந்து தொடர்பற்றுப் போய்விடுகின்றன என்கிறார் ரங்கநாயக்கம்மா

சூத்திரர்களைப் பற்றி அம்பேத்கர் கூறும் போது நிகழ்காலச் சூத்திரர்களுக்கும், கடந்தகாலச் சூத்திரர்களுக்கும் தொடர்பே இல்லை என்று (52) கூறுகிறார். தன்னுடைய கோட்பாடு எல்லாப் புதிர்களுக்கும் பதிலளிக்கும் என்று முழுஉரிமை கோருகிறார், ஆனால் பிற இடங்களில் தன்னடக்கத்துடன் எழுதிகிறார் என்று ரங்கநாயக்கம்மா சுட்டிக்காட்டியுள்ளார். அம்பேத்கருக்கு மதச் சடங்குகள் பற்றி விவரிப்பது மிகவும் பிடித்திருப்பதாகவும், மதச் சடங்குகளை விளக்குகையில் அம்பேத்கர் ஒரு பரவச நிலை அடைகிறார் என்றும் கூறுகிறார்.(63)

பிராமணர்கள் தங்கள் குடியிருப்பிற்குள் நுழைந்தால் தங்களுக்குத்தான் கேடு விளைவுகள் எற்படும் என்று தீண்டப்படாதவர்கள் கருதியதாக அம்பேத்கரின் ஆய்வுகள் வியக்கவைக்கிறது!!(92) தீண்டப்படாவதர்களை, சாதி இந்துக்கள் தாழ்த்தவில்லை தாங்களே தாழ்த்திக்கொண்டனர் என்பது என்ன வகையான ஆய்வு!!!!!! இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்தவகையில் உதவும்???

சாதியம் இந்தியாவில் மட்டும் காணப்படுகிறது என்று கூறப்படும் போது சிலர் பிற நாடுகளில் அடிமைத்தனம் உள்ளன. அக் கொடுமைக்கு முன்னால் தீண்டாமை ஒரு பெரிய விசயமா? என்ற கேள்விக்கு அடிமைத்தனத்தைவிடத் தீண்டாமை அதிக ஒடுக்கும் தன்மை கொண்டது என்பதற்காக அம்பேத்கர் அதிக மெனக்கிடுகிறார். இரண்டும் ஒடுக்குமுறைக்கு உட்பட்டது என்ற பதிலே போதுமானது அனால் இதற்காகப் பெரிய விவாதங்களைத் தொடுக்கிறார்.

இப்படி விவாதங்களைத் தொகுத்ததால் ரங்கநாயகம்மா அவர்களின் இந்நூல் நானூறுபக்கத்தைத் தாண்டுகிறது. மார்க்சிய வழியில் பதிலளித்ததோ 10 பக்கம் மட்டுமே. அதற்கு 400 பக்கங்கள் படிக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பத்துப் பக்கத்தில் சாதியைப் பற்றிய அணுகுமுறையின் கருத்தாக்கத்தைத்தான் (concept) கொடுத்துள்ளார். அதற்கு அம்பேத்கரை இப்படி வறுத்தெடுக்க வேண்டுமா? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. காந்தியைப் பற்றியும் பக்கம்பக்கமாக அதே முறையிலேயே பேசுகிறார்.

அம்பேத்கரின் அணுகுமுறை மார்கசிய அணுகுமுறைக்கு மாறானது தான், ஆனால் அவர் எதற்காப் போராடினாரோ, அதனை சமூகத்தில் இருந்து களைவதற்கு கம்யூனிஸ்டுகளும் போராடுகின்றனர். அணுகுமுறைச் சிக்கலை அடிப்படைச் சிக்கலாக்கினால் எதிரிகளுக்கே ஆதரவாகப் போய்விடும். இதனை ரங்கநாயக்கமா கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோர்களின் சித்தாந்தங்கள் ஒன்று என்று கூறினால் அதனை அம்பேத்கரே ஒப்புக் கொள்ளமாட்டார். அம்பேத்கர் தமது அணுகுமுறையை "புத்தரா காரல் மார்க்சா?" வெளிப்படுத்தியிருக்கிறார். சமூக சீரழிவை எதிர்த்து போராட ஒன்றுபடுவோம், சித்தாந்தத்தை விவாதிப்போம்.
எந்த ஒரு சிந்தனையாளனும் தமது விமர்சனத்தைத் தனது கண்ணோட்டத்தின் வழியிலேயே அணுகுவர். ரங்கநாயகம்மாவும் அவ்வாறு தான் அணுகுகிறார் ஆனால் கூடுதலாக ஒவ்வொருரையும் எந்த வகையில் தனது சித்தாந்துக்குரியவர் அல்ல என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார். புத்தரை அணுகும் போது அவருக்கு மார்க்சியம் தெரியாமல் போனதில் வருத்தம் ஏற்படும் அளவுக்கு அவரை இன்றைய நிலையில் இருந்து விமர்சிக்கிறார். அம்பேத்கரின் பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பேசும் போதும் அவ்வாரே அணுகுகிறார். அம்பேத்கர் பேசுகிற அரசு சோஷலிசம் என்பதைக் கம்யூனிச அரசுக்கு இணையாக வைத்து விமர்சிக்கிறார். அரசு சோஷலிசம் கம்யூனிச அரசாகாது என்ற விமர்சனமே போதுமானது.

இந்த அரசு சோஷலிசத்தை லெனின் அமைத்த அரசு முதலாளித்துவத்தோடு இணைக்கும் போது விமர்சன தொனியே மாறும் என்பதே எனது கருத்து. புரட்சியை முடித்து ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் போதே லெனின் கம்யூனிச சமூகத்தை அடைவதற்கு அரசு முதலாளித்துவம், சோஷலிசம் என்ற இரண்டு கட்டங்களைக் கடக்க வேண்டும் என்கிறார். அம்பேத்கரின் அரசு சோஷலிசத்தின் எல்லைகளைக் குறிப்பிட்டு விமர்சித்தாலே போதுமானது.

புத்தரா காரல் மார்க்சா? என்ற கேள்விக்குப் புத்தரே போதும் என்று அம்பேத்கர் கூறியதால் புத்தரை கடுமையாக அணுகுகிறார். புத்தரை பகுத்தறிவாத கண்ணோட்டத்தோடு தான் அணுகியுள்ளார். பொருள்முதல்வாத கண்ணோட்டத்தோடு அணுகியிருந்தால் இந்தச் சிக்கல் நேர்ந்திருக்காது. காந்தியையும் அப்படித்தான் அணுகியிருக்கிறார். புத்தரை அம்பேத்கர் கதைகட்டி காப்பாற்றியது போலவே ரங்கநாயகம்மாவும் கதைகட்டி விமர்சிக்கிறார். கதையாலேயே தீர்வை சொல்கிறார். புத்தரின் அஷ்டாங்க மார்க்கம் அன்றைய நிலையில் அதற்கு மேல் செல்வதற்கு ஒன்றும் இல்லை. இதனை ரங்கநாயக்கம்மாவும் குறிப்பிடுகிறார் மார்க்சே அப்போது வாழ்ந்தாலும் செய்ய முடியாததைப் புத்தரிடம் எதிர்பார்க்க முடியாது என்கிறார். ஆனால் அம்பேத்கரை முன்னிட்டு புத்தரை கடுமையாகவே விமர்சிக்கிறார்.

ரங்கநாயக்கம்மா புத்தரை ஒட்டுண்ணி என்கிறார்(245). சந்நியாசியும் தன் கோட்பாட்டைப் பரப்புரை செய்ய வேண்டுமாயின் தன்னையும் பராமரித்துக் கொண்டு அதனைச் செய்ய வேண்டும் என்கிறார். தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர் இவ்வாறு செய்ய முடியாது என்பதையும் சேர்த்து சொல்கிறார்.

“ஒரு சந்நியாசி (பிட்சு) ஒட்டுண்ணியே. இது புத்தருக்கும் பொருந்தும்: அவருடைய கோட்பாடு எத்தனை மகத்தானதாக இருந்தாலும் ….” (பக்கம்263) அப்படி என்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமறைவாகச் செயல்படாத முழுநேர செயற்பாட்டாளர்கள் தினமும் சில மணிநேரம் உழைக்காமல் செயற்பட்டால் அதுவும் உழைப்புச் சுரண்டல் தானே. ஏன் மார்க்சும் எந்த உடல் உழைப்பையும் செய்திடாமல் பத்திரிகைக்குக் கட்டுரை எழுதியதும், தமது விஞ்ஞானப் பணியைத் தொடர்ந்து செய்ததும் தவறு தானே!!. எங்கெல்சின் உழைப்பில் வாழ்ந்தது ஒட்டுண்ணி வாழ்க்கை தானே!!!. இவரது விமர்சனத்தைத் தொடர்ந்து மார்க்சையும் எதிராளிகள் இப்படி விமர்சிக்கலாமே.

அஷ்டாங்க மார்க்கத்தையும் பகுத்தறிவு கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார், சொத்தை எப்படிப் பெருக்குவது என்று அஷ்டாங்க மார்க்கம் சொல்லவில்லை அதனால் எஜமானருககும் அது பயன்படாது என்கிறார் ரங்கநாயக்கம்மா. அஷ்டாங்க மார்க்கத்தில் உள்ள சரியான பார்வை, சரியான நடத்தை, சரியான சிந்தனை என்பவை நடைமுறைப்படுத்துவற்கு, வர்க்க சமூக இடம் கொடுக்காதது எஜமானருக்தானே பயன்படும்.

ரங்கநாயகம்மா புத்தத்தின் சாரமாகத் தொகுத்துக் கூறுகிறார்:-“சமூகம் குறித்து அவர் சொன்னவற்றில், “மனிதர்கள் நல்ல பண்புகளைக் கெண்டிருக்க வேண்டும்” என்ற கருத்தையும் மேலும் சில கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளலாம். இது மனித நடத்தையைப் பண்படுத்தும். இதுவே பௌத்த்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது. கூடுதலாக ஏதுமில்லை.”

மனித நடத்தையைப் பண்படுத்தும் பண்பாட்டிற்கு வர்க்க சார்பில்லை? எஜமானருக்கு அடிமைக்கும் ஒரே பண்பாடா?

வறுமை, செல்வம், எஜமானர் அடிமை, உறவுமுறை, சொத்து ஆகிய பிரச்சினைகளைப் பற்றி அன்றைக்குப் பவுத்தம் அறிந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறியதோடு, “மனித உறவுகள் (உழைப்புசார் உறவுகள்) பற்றிப் புத்தருக்கு ஏதும் தெரியவில்லை என்பதே இதன் பொருள்” என்று முடிக்கிறார். இங்கே ரங்கநாயக்கம்மா குறிப்பிடுவது உற்பத்தி உறவுகளைத்தான் ஆனால் இந்த உற்பத்தி உறவுகளைப் பற்றி இந்நூலில் எங்கேயும் விரிவாக விளக்கவில்லை. ஆனால் இது தான் அனைத்துக்கும் தீர்வு என்று நூல் முழுதும் சொல்லிவருகிறார். இவர் எழுதிய இந்தத் தொழில்சார் உறவை பற்றிப் பார்ப்பதற்கு முன் சாதியைப் பற்றி மார்க்ஸ் கூறியதைப் பார்ப்போம்.

“சாதி குறித்து மார்க்ஸ்” என்ற இறுதி பகுதியில் சாதி பற்றிய மார்க்சியத்தின் கண்ணோட்டத்தை ரங்கநாயகம்மா தொகுத்துத் தருகிறார். மார்க்ஸ் சாதி குறித்துச் சிறப்பு ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதவில்லை, ஆனால் இந்தியாவில் உள்ள சாதியைப் பற்றியும், மற்ற நாடுகளில் காணப்படும் சாதிக்கு இணையானதைப் பற்றியும் எதியுள்ளதை எடுத்துக் கொடுத்துள்ளார். “மார்க்ஸின் அவதானிப்புகளை உதவியாகக் கொண்டு சாதிக் கருத்தியல்களையும், அந்தப் பிரச்சனைக்குரிய தீர்வாக அவர் சுட்டிக் காட்டியுள்ளவற்றையும் நாம் புரிந்து கொள்ள முடியும்” என்று தொடக்கத்திலேயே அறிவுறுத்தியுள்ளார்.

மார்க்சிய எதிர்ப்பாளர்களிடம் காணப்படும் இரண்டு கருத்துக்களை ரங்கநாயகம்மா குறிப்பிடுகிறார். ஒன்று, மார்க்சின் கோட்பாடு 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவுக்குப் பொருத்தமானது, தற்காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லை. மற்றொன்று மார்க்சின் கோட்பாடு மற்ற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்கலாம், சாதியத்தைக் கொண்டுள்ள இந்தியாவுக்குப் பொருத்தமானதல்ல. இந்த இரண்டாவது கருத்து மார்க்சிய எதிர்ப்பாளர்களிடம் மட்டுமல்ல இங்குள்ள இடது சிந்தனையாளர்களிடமும் காணப்படுகிறது.

ரங்கநாயகம்மா இந்த இரண்டுவிதமான பார்வையும் தவறு என்று சரியாகவே சொல்கிறார். உற்பத்தி உறவுகள் (உழைப்புசார் உறவுகள்) பற்றிப் பேசுவது அனைத்து நாட்டிற்கு உரியதே என்று உறுதியாகக் கூறுகிறார். எங்கெல்சோடு மார்க்ஸ் எழுதிய ஜெர்மன் சித்தாந்தம், மார்க்ஸ் எழுதிய தத்துவத்தின் வறுமை, மூலதனம் என்ற நூலிலும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள் என்ற கட்டுரையிலும் இந்திய சாதியத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார். இதன் அடிப்படையில் அணுகுவதே மார்க்சியக் கண்ணோட்டம்.

மார்க்ஸ் கருத்தின் அடிப்படையில் ரங்கநாயகம்மா கூறுகிறார்:-“சாதிப் பிரச்சனையானது உற்பத்தி உறவின் வட்டத்திற்குள் வருகிறதா என்பதையும் நாம் உறுதிப்படுத்த்திக் கொள்ள வேண்டும். சாதிக்கும், உழைப்பிற்கும் தொடர்புள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் சந்தேகத்திறக்கிடமின்றி மார்க்ஸின் கோட்பாடு இந்தியாவுக்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம்”(405) என்று கூறுகிறார். இதனை விவராமாக விவரிக்கவில்லை. அதாவது சாதியப் பிரச்சினையின் தீர்வுக்கு மார்க்ஸ் அவசியத் தேவை என்று கூறும்போது புத்ததரும் அம்பேத்கரும் போதுமானவர் என்று ஏற்றுக் கொண்டவர்களுக்குப் புரியவைக்கும்படியான விளக்கம் தேவைப்படுகிறது.

எனது வலைப்பூவில் காணப்படும் “இந்தியாவில் சாதியம்”என்ற கட்டுரையின் பகுதியை கீழே பதிவிடுகிறேன்.

“மார்க்ஸ் மாற்றமின்றிக் காணப்படும் வேலைப் பிரிவினை பாரம்பரியமாகத் தொழில் புரிவதை சாதியத்தோடு இணைத்துக் காண்கிறார். சாதியத்தை உற்பத்தி முறையோடு இணைத்து புரிந்து கொள்ளும் போது, சாதியம் நிலவுடைமைச் சமூகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட வடிவமாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறும்போது நிலவுடைமை உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்படும் போது அதன் வடிவமான சாதியமும் மறைந்து போகும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இதன் மூலம் பொருளாதாரப் போராட்டத்தை மட்டுமே செய்திட வேண்டும், சாதியத்தை அதன் அழிவுவரை அல்லது அதன் மறைவுவரை பொருமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பொருள்கொள்ளப்பட்டால் அது பெரும் தவறாகும். சாதிப் போராட்டத்தைப் பொருளாதாரப் போராட்டத்துடன் உள்ளடங்கியதாகப் புரிந்து கொண்டு சாதியத்தை எதிர்த்து போராட வேண்டும் என்பது தான் மார்க்சிய வழிகாட்டுதலாகும்.

நிலவுடைமை மேலோங்கிய இடத்திலும் அதன் கூறுகள் இன்னும் உயிரோட்டத்துடன் காணும் இடங்களில் சாதியப் போராட்டம் பொருளாதாரப் போராட்டத்துடன் இணைந்தே நடத்தப்பட வேண்டும். வளர்ச்சியடைந்த நகர்புறங்களில் முதலாளித்துவத் தன்மைகள் தோன்றிய இடங்களில் சாதியப் போராட்டம், ஒரு கருத்தியல் போராட்டமாக, அதாவது பொருளாயத (material) உள்ளடத்திலிருந்து விடுபட்டும் சிந்தனையில் சாதியம் செயற்படும் போது இங்குச் சித்தாந்தப் போராட்டமாக நடத்தப்பட வேண்டும்.

முதலாளித்துவம் அனைத்துத் துறைகளில் வளர்ச்சியடையும் போது சாதியம் உள்ளடக்கத்திற்கான வடிவமாகக் காணப்படாமல், மீதமிச்சமாக உதிர வேண்டிய நிலையாக மாறிவிடும். அந்நிலையில் கருத்தியல் போராட்டமாக நடத்தப்பட்டுச் சாதியம் உலர்ந்து மறையும்.

மதம் எவ்வாறு வர்க்கத்தோடு தோன்றியதோ அதே போல் சாதியமும் வர்க்கத்தோடு தோன்றியது, சமூகத்தில் வர்க்கம் மறையும் போதுதான் மதம் மறையும் என்பது போலவே சாதியமும் வர்க்கத்தின் மறைவோடுதான் மறைந்து போகும் என்ற கருத்து சரியானதன்று.

சாதியத்தை உற்பத்தி உறவோடு புரிந்து கொள்ளும் போது, முதலாளித்துவ வளர்ச்சியில் சாதியத்தின் வடிவம் தேவையற்றதாகும். அதாவது முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் சாதிய அடிப்படையிலானதல்ல. ஆனால் கருத்தியலாகச் சாதியத்தை மேலும் நீடிக்கிறது என்று சொல்லாம், அதற்கெதிரான போராட்டம் கருத்தியலான மீதமிச்சத்துடனான கருத்தியில் போராட்டமாகவே இருக்கும்.

சாதியத்தைக் காப்பதால் அல்லது துணைபோவதால் தொழிலாளியின் நலன்கள் தான் பாதிக்குள்ளாகிறது என்பதைச் சாதியத்திற்கு ஆட்பட்ட தொழிலாளிக்கு உணர்த்த வேண்டும். முதலாளியின் நலன்கள் வேறு, தொழிலாளர்களின் நலன்கள் வேறு. இவைகளுக்கு அப்பாற்பட்டது சாதிய நலன்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். சாதிய நலன்களைவிட வர்க்க நலன்கள் வாழ்வியல் நலன்களின் அடிப்படையில் தோன்றுவதால் நிச்சயமாக வெல்லும்.

சாதிய நலன்களைவிட வர்க்க நலன் முனைப்போடே செயல்படும். சாதிய நலன்களைவிட வர்க்க நலனே வாழ்க்கைக்குப் பயன்படும். வர்க்க நலன் வாழ்வியல் நலன் என்பதை அறியும் போது சாதிய நலன் வலுவிழக்கும்.”

இந்திய கம்யூனிஸ்டுகள் பலரிடம் காணப்படும் பிரச்சினை அதாவது சாதி மேற்கட்டமைக்கு உரியதா? அடித்தளத்திற்கு உரியதா? என்ற பிரச்சனை ரங்கநாயகம்மாவிடம் காணப்படவில்லை, ஆனால் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டைப் புரிந்து கொள்வதில் பெரும் சிக்கல் அவரிடம் காணப்படுகிறது.

உற்பத்தி உறவுகள் என்ற சொல்லிற்குப் பதில் நூலில் அதிகமாக உழைப்புசார் உறவுகள் (labour relations) என்பதையே பயன்படுத்துகிறார். அடித்தளம் என்பதில் உற்பத்தி உறவு மட்டும் கூறிவிட்டு மிகவும் முக்கியான உற்பத்தி சக்திகளை மறைத்துவிடுகிறார். இந்த உற்பத்தி சக்திகள் அடிப்படையில் தான் உற்பத்தி உறவுகள் அமைகிறது. உழைப்பு சக்திகள் யாரிடம் இருக்கிறதோ அந்தத் தனியுடைமையே உறவுகளை அமைக்கிறது. இதுவே மேற்கட்டமைப்பில் சிந்தனைகளாகப் பிரதிபலிக்கிறது. இந்தப் பார்வை முற்றப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ரங்கநாயகம்மாவால் உழைப்பு சக்திகளைப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உழைப்புசார் உறவுகள் (உற்பத்தி உறவுகள்) புனிதப்படுத்தப்படுகிறது. புனிதமான ஒன்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், அதுவே சரியானது என்று மதவாதிகளைப் போல் கோரிக்கை வைக்கிறார். “மனித சமூகம் உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகளின் அடிப்படையிலானது என்னும் உண்மையை ஒருவர் அறியாதபோது அவர்களுக்கு உழைப்பு இழிவானதாகவும், உழைப்பிலிருந்து தப்பிப்பது மகத்தானதாகவும் தோன்றும். புத்தருக்கோ அல்லது அம்பேத்கருக்கோ அல்லது உற்பத்தி உறவுகள் குறித்து அறியாதவர்களுக்கோ அப்படித்தான் தோன்றும்”.(253) இந்தப் புனிதம் உற்பத்தி உறவு என்பது பிரம்மநிலைக்குக் கொண்டு செல்கிறது என்பதே உண்மை. இதன் காரணமாகச் சுரண்டல் பிரச்சினைக்கு அவர் அறநிலை வழிப்பட்ட தீர்வைவே முன்வைக்கிறார். “சுரண்டல் மீது எழுப்பப்பட்ட சமுதாயம் என்பதால் அதைமாற்றவேண்டும் என்கிறார் மார்க்ஸ்”.(300)

சாதியைப் பற்றிக் குறிப்பிடுகிற “தத்துவத்தின் வறுமை” என்கிற நூலில் மார்க்ஸ் எந்தவித குழப்பம் இல்லாமல் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் உள்ள உறவை இயக்கவியல் முறையில் நிலைநிறுத்தியுள்ளார்.

மார்க்ஸ்:-
“சமுதாய உறவுகள் உற்பத்தி சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்படடுள்ளன. புதிய உற்பத்தி சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளின் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.”
-தத்துவவியலின் வறுமை

மேற்கட்டமைப்பை மாற்றுகின்ற உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலே தான் அமைந்துள்ளது என்பதை மார்க்ஸ் தெளிவாகவே எழுதியுள்ளார். உற்பத்தி உறவுகளை நிலைநிறுத்துவதில் கருவிகளே பெரும்பங்காற்றுகிறது. சுரண்டலை ஒரு அறநெறிக் கண்ணோட்டத்தில் தான் ரங்கநாயகம்மா அணுகியிருக்கிறார் இது மார்க்சிய பார்வைக்கு மாறானதாகும்.

“மாக்ஸியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ஓட்டுமொத்த இலாபமும் உழைப்பாளர்களிடமிருந்தே வருகிறது. முதலாளிகள் மூலதனத்தை 1) உற்பத்தி சாதனங்கள் மீதும் 2) தொழிலாளர்களின் கூலி மீதும் முதலீடு செய்கின்றனர். இந்த இரண்டில், உற்பத்தி சாதனங்கள் அதற்குரிய மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக எதையும் திரும்பத் தரப்போவதில்லை. “கூலி”க்கு அவர்கள் ஒதுககும் பணமே மேலும மதிப்பை திருமபத்தருகிறது. உழைப்பாளிகள் தங்கள் உழைப்பிற்கு ஈடாகக் கூலி பெறுகிறார்கள் என்பது உண்மையே, ஆனால், கூலி மட்டுமே உழைப்பின் மதிப்பில்லை. அது உழைப்பு மதிப்பின் ஒரு பகுதி மட்டுமே. மீதமிருக்கும் பகுதி இலாபம் (உபரிமதிப்பு). அதில் தொழிலாளர்களுக்கு மட்டுமே பங்கிருக்கிதே ஒழிய, தொடக்கத்தில் முதலீடு செய்த மூலதனத்தின் மதிப்பிலிருந்து மேலும மதிப்பை உயர்த்த உற்பத்தி சாதனம் எந்தப் பங்கையும் ஆற்றுவதில்லை. இது தான் மார்க்ஸி விளக்கம்.” (345-346)

ரிக்கார்டோவைப் போலவே ரங்கநாயகம்மா தொழிலாளர்களுக்கே விளைபொருள் முழுவதும் சொந்தம் என்கிறார். இதனைத் “தத்துவத்தின் வறுமை” என்கிற நூலின் முன்னுரையில் எங்கெல்ஸ் மறுத்துரைக்கிறார்:-
“சமுதாய விளைபொருள் முழுவதும் தமது விளைபொருள் என்கிற முறையில் தொழிலாளர்களுக்குச் சொந்தாகும். ஏனெனில் அவர்கள் மட்டுமே உண்மையான உற்பத்தியாளர்கள், என்னும்படியான ரிக்காடோ தத்துவத்தின் மேற்கூறி செயற்பாடு நேராகக் கம்யூனிசத்துக்குக் கொண்டு செல்கிறது. ஆனால் மேலே மேற்கோள் காட்டிய பகுதியில் மார்க்சும் குறித்துக் காட்டுகிறபடி, புறவடிவு வகையிலே அது பொருளாதார ரீதியிலே தவறாகும். ஏனெனில் அது வெறுமே நீதிநெறி முறைமையை அரசியல் பொருளாதாரத்தில் செயல்படுத்துவதாகும்.

முதலாளித்துவப் பொருளாதாரத்தின் விதிகளின்படி, விளைபொருளின் மிகப் பெரும் பகுதி அதை உற்பத்தி செய்த தொழிலாளர்களுக்குச் சொந்தமாக இல்லை. அது அநியாம், அப்படி இருக்கக் கூடாது என்று இப்போது சொல்வோமானால் அதற்கும் அரசியல் பொருளாதாரத்துக்கும் உடனடிச் சம்பந்தம் ஒன்றும் கிடையாது. இந்தப் பொருளாதார உண்மை நமது நீதிநெறி உணர்ச்சிக்கு முரண்படாக இருக்கிறது என்று மட்டுமே சொல்லிக் கொள்கிறோம். எனவே தான், இதனை எப்போதும் மார்க்ஸ் தமது கம்யூனிஸ்ட் கோரிக்கைகளுக்கு ஆதாரமாகக் கொள்ளவில்லை முதலாளித்துவ உற்பத்தி முறையின் தவிர்க்க முடியாத வீழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டார்- அவ்வீழ்ச்சி நம் கண்ணெதிரே மேன்மேலும் அதிகரித்த அளவிலே தினந்தோறும் நிகழ்ந்து வருகிறது, கூலி கொடுபடாத உழைப்பு அடங்கியதே உபரி மதிப்பு ஆகும் என்று மட்டுமே அவர் சொல்கிறார். அது ஒரு எளிய உண்மையாகும். ஆனால், புறவடிவு வகையிலே பொருளாதாரீதியிலே தவறாயிருக்கக் கூடியது உலக வரலாற்றின் பார்வை நிலையிலே சரியாயிருக்கக்கூடும்.”

அறநெறிமுறையிலேயே உற்பத்தி உறவை ராங்கநாயகம்மா கணிக்கிறார். வர்க்கப் போராட்டத்தை அறநெறி வழியிலேயே முன்வைக்கிறார்.

“எங்கெல்லாம் சமமின்மை நிலவுகிறதோ அங்கெல்லாம் உழைப்புசார் உறவுகளை மாற்ற வேண்டும். உழைப்பு பிரிவினையை மாற்றுவதென்பது எல்லா நிலைகளுக்கும் பொருந்தும். சாதிகளுக்கிடையில் நிலவும் உழைப்புப் பிரிவினை, ஆண் பெண்களுக்கிடையே நிலவும் பாரம்பரிய உழைப்புப் பிரிவினை- இவையாவுமே இதன் கீழ் வருகின்றன. சமூகத்தில் நிலவும் “தவறான சமூக உறவுகளை” (மார்க்ஸின் சொற்களில் சொல்வதானால்) மாற்ற வர்க்கப் போராட்டத்தின் பாதையிலிருந்து உழைப்புச் சுரண்டலுக்கெதிராகச் சரியான கண்ணோட்டத்தின் கீழ் தொடுக்கப்படும் போராட்டமே உழைக்கும் வர்க்கத்திற்கு உதவும்.”(பக்கம் 410)

ரங்கநாயகம்மாவின் வர்க்க கண்ணோட்டம் அறநெறிச் சம்பந்தப்பட்டது, அது பொருளாதாரத் தொடர்புடையதல்ல. அவருக்குப் பொருளாதாரம் என்றாலே ஒவ்வாமை அதனால் தான் அம்பேத்கர் மார்க்சின் கோட்பாடாக “முதன்மையாகப் பொருளாதார சக்திகளே வரலாற்றுப் போக்கை உருவாக்கும் சக்திகளாக உள்ளன”(பக்கம்294) என்று கூறிய போது உடனே, அவர் உற்பத்தி உறவுகள் என்னும் பொருளைக் கொண்டிருந்தால்தான் பொருளாதார சக்திகள் என்னும் அந்தச் சொல் சரியானதாக இருக்கும், என்று தெரிவிக்கிறார். உற்பத்தி சக்திகள் தான் உறவுகளைப் படைக்கிறது என்பதை எந்த நிலையிலும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில் காணப்படும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கருத்தாக்கத்தைப் பொருளாதார அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். இதனை எங்கெல்ஸ் தெளிவாக்குகிறார்.

எங்கெல்ஸ்:- "வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருத்தோட்டமானது (மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின்) உற்பத்தியும், அதற்கு அடுத்தபடி இந்த உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையும் தான், சமுதாயக் கட்டமைப்பு அனைத்துக்குமான அடித்தளமாகும் என்ற வரையறுப்பிலிருந்து தொடங்குகிறது. வரலாற்றில் தோன்றியுள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் எவ்விதம் செல்வம் வினியோகிக்கப்படுகிறது, சமுதாயம் எப்படி வர்க்கங்கள் அல்லது படிநிலைகளாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது, என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்திப் பொருள்கள் எவ்விதம் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பவற்றைச் சார்ந்தே உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தின் படி எல்லாச் சமுதாய மாறுதல்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான இறுதிக் காரணங்களைப் பொருளுற்பத்தி மற்றும் வினியோக முறைகளின் மாற்றங்களில் கண்டறிய வேண்டுமே அல்லாது, மனிதனது மூளையில் அல்ல, நிலையான சாசுவத உண்மை மற்றும் சாசுவத நீதி குறித்து மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வில் அல்ல. இவற்றை அந்தந்த சகாப்தத்தின் பொருளாதாரத்தில் கண்டறிய வேண்டுமே அல்லாது தத்துவத்தில் அல்ல." (டூரிங்குக்கு மறுப்பு)

பொருளாதாரப் பார்வையற்ற வகையிலேயே ரங்கநாயகம்மா அம்பேத்கரை விமர்சித்துள்ளார். நூல் முழுமையிலும் இது வெளிப்படவே செய்கிறது. “புத்தரர்? காரல் மார்க்சா?” கட்டுரைக்குப் பதிலளிக்கும் நிலையில், சோஷலிசம் தவிர்க்கயிலாதது என்பதைக் கேள்விக்குள்ளாக்கும் இடத்தில் ரங்கநாயகம்மா மனிதத் தலையீடின்றிச் சோஷலிசம் தமாகக் கனியும் என்று இதற்குப் பொருள் இல்லை (297) என்று கருத்தியல் ரீதியில் தான் பதிலளிக்கிறார். இதற்கான பொருளாதாய நிலைமைகளைச் சுட்டிக்காட்டவே இல்லை. முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் உள்முரண்பாடே வர்க்கப் போராட்டமாக வெளிப்படுகிறது என்பதைக் கூறவேயில்லை.

மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் காலத்திற்குச் சற்றுமுன் தோன்றிய கற்பனாவாத சோஷலிஸ்டுகளின் கற்பனாவாதத்தைக் குறிப்பிடும் போது, எங்கெல்ஸ், முதிர்ச்சியற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிலைமைகளுக்கும், முதிர்ச்சியற்ற வர்க்க நிலைமைகளுக்கும் இணைவாய் முதிர்ச்சியற்ற கோட்பாடுகளை அவர்கள் முன்வைத்தனர் என்கிறார்.

சுரண்டல் என்பது அநியாயமானது என்பதை ஆட்சியாளர்களுக்கும், ஆளும் வர்க்கத்துக்கும் புரிய வைத்தால் போதும், சமூகத்தில் அமைதியும் நல்வாழ்வும் கிட்டும் என்று அப்பாவித்தனமாகக் கற்பனாவாதிகள் எண்ணிக்கொண்டனர். முதலாளிகள், சமூகத் தர்மகர்ததாக்களாக, அனைவருக்கும் பொது அதிகாரிகளாக மாறவேண்டும் என்பதே கற்பனாவாத சோஷலிஷ்டுகளின் கோரிக்கையாக இருந்தது. இதனைத் தான் எங்கெல்ஸ் முதிர்ச்சியற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிலைமைகளால் தோன்றிய கோட்பாடாகக் கூறுகின்றனர்.

இந்நிலையில், அம்பேத்கரின் “புத்தத்தில்” காணப்படும் தூய்மை, நேர்மை, நற்குணம் போன்றவற்றின் வழியே அடையும் கம்யூனிசத்தின், இயலாத் தன்மையை இங்கே விவரித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. 2500 ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானச் சோஷலிசத்தைப் புத்தர் படைத்தார் என்ற அபத்தத்தை விவரிக்கத் தேவையில்லை.

அம்பேத்கரும் மார்க்சியத்தை அதன் விஞ்ஞானவழியில் புரிந்து கொள்ளவில்லை, ரங்கநாயகம்மாவும் இந்த விஞ்ஞான வழி மார்க்சியத்தைச் சுட்டிக்காட்டவும் இல்லை. ரங்கநாயகம்மாவிடம் பொருளாதயத (material) சிந்தனையே காணப்படவில்லை அதனால் தான் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் ஏற்படுகிற உற்பத்தி உறவின் இயலாத் தன்மையே சோஷலிசப் புரட்சியைத் தவிர்க்கவியலாததாக ஆக்குகிறது என்பதைச் சுட்டிக்காட்ட முடியவில்லை.

மூலதனம் நூலில்(முதல் தொகுதி- 1026-1027) மார்க்ஸ் வளர்ச்சியடைந்த பொருளுற்பத்தி முறைக்கு முதலாளித்துவ மேற்கட்டமைப்பு பொருத்தமற்றுப் போனதால் உடைத்தெறியப்படுகிறது என்றும் முதலாளித்துவத் தனியுடைமைக்குச் சாவு மணி ஒலிக்கிறது என்றும் உடமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது என்று தான் கூறுகிறார். உழைக்கும் மக்களின் புரட்சிக்கு பொருளாயதமே (material) அடிப்படை என்பதைப் புரிந்து கொள்ளாது, “உடைமையாளர்களின் எண்ணிக்கையை உழைக்கும மக்களின் எண்ணிக்கை விஞ்சுவதால் உழைப்போர் அரசாட்சியைக் கைப்பற்றித் தங்கள் ஆட்சியை நிறுவுவார்கள். இதைத்தான் காரல் மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று கூறுகிறார்” என்ற அம்பேத்கரின் கருத்தை மறுக்க வேண்டும் என்றுகூட ரங்கநாயகம்மாவுக்குத் தோன்றவில்லை.

ரங்கநாயம்மா, புதிய சிந்தனை, புரட்சிகர உறவு என்று கருத்தியில் ரீதியாகவே சிந்திக்கிறார். “தொழிலாளர் வர்க்கம் தன்னுடைய விடுதலைக்குப் புதிய சிந்தனைகளைக் கைக்கொள்ள வேண்டும். சமத்துவமற்ற உறவுகளைத் தனது போராட்டத்தின் மூலம் மாற்ற வேண்டும்.”(325), “புரட்சிகர உறவுகளை”(343) அதே போல் “சமத்துவ உறவு” என்று கூறுகிறார். அந்தச் சமத்துவ உறவுகளுக்குத் தேவைப்படுகிற பொருளாயத (material) நிலைமைகளைச் சுட்டிக்காட்டவே இல்லை, “ஏற்றத்தாழ்வு மிக்க உறவுகள் தகர்க்கப்பட்டு, வாழ்வின் எல்லா மட்டத்திலும் சமத்துவ உறவுகள் நிலைநாட்டப்பட வேண்டும்”(318) என்று கருத்தியில்ரீதியில் தான் உறவுகளைப் படைக்கிறார்.

கற்பனாவாத சோஷலிஸ்டுகளின் கோரிக்கை முதலாளிகளின் மனம் திரும்புதலில் இருக்கிறது. ரங்கநாயகம்மாவின் கோரிக்கை தொழிலாளிகள், வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற தூண்டுதலில் அடங்கியிருக்கிறது. முதலாவது முதலாளிகளை நம்பியிருக்கிற கற்பனாவாதம், இரண்டாவது தொழிலாளர்களை நம்பியிருக்கிற கற்பனவாதம். விஞ்ஞானச் சோஷலிசமானது முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்முரண்பாட்டில் அடங்கியிருக்கிறது.

“கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்” என்ற நூலில் எங்கெல்ஸ்:-
“சாத்தியமான அளவுக்குக் குறைகளற்ற முழுநிறைவான ஒரு சமுதாய அமைப்பை உற்பத்தி செய்வது சோஷலிசத்தின் பணியாக இனியென்றும் இருக்கப் போவதில்லை; இந்த வர்க்கங்களும் அவற்றுக்கு இடையேயான பகைமையும் தவிர்க்க முடியாதவாறு உதித்தெழக் காரணமாக இருக்கும் நிகழ்வுகளின் வரலாற்று-பொருளாதாரத் தொடர்ச்சியை நுணுகி ஆய்வதும், இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளில் இந்த மோதலுக்கு முடிவு கட்டுவதற்கான சாதனங்களைக் கண்டறிவதும்தான் சோஷலிசத்தின் பணியாகும்.” 

பொருளாயத சிந்தனையற்ற போக்கு என்னும் குறைபாட்டைக் கடந்து பார்க்கும் போது ரங்கநாயகம்மா அம்பேத்கரின் மார்க்சிய எதிர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் அவர் மார்க்சியம் எந்த வகையில் அவசியம் என்பதை விரிவாக எழுதவில்லை.

மார்க்சிய வழியில் சாதியம் பற்றிய விரிவான ஆய்வை முன்வைக்க வேண்டும். இதுவே இடதுசாரிகளின் உடனடிக் கடமையாகும்.

அம்பேத்கர்:- “..பொது உடைமைத் தத்துவமும் அதே போலத் தவறானதே. ஏனென்றால் அந்தத் தத்துவத்தின் நோக்கம், மனிதர்களும் பன்றிகளைப் போன்றவர்கள்தான் என்பது போல, அவர்களைக் கொழுக்க வைப்பதாகவே இருக்கிறது” (புத்தரா, காரல் மார்சா?)


       இதற்கு மார்க்சிவாதிகள் பதிலளிக்க வேண்டியுள்ளது.

Sunday, 10 July 2016

லெனின் வாழ்வும் படைப்பும்-முன்னுரை

ஆசிரியர்-அ.கா.ஈஸ்வரன்

வெளியீடு;-
பொன்னுலகம் பதிப்பகம்
விலை- ரூ.220/-

அலைபேசி- 94866 41586
மின்னஞ்சல்- ponnulagampathippagam@gmail.com

லெனின் வாழ்வும் படைப்பும்- முன்னுரை
பல நூற்றாண்டுகளாக கனவுக் கோட்பாடாக இருந்த கம்யூனிசத்தை மார்க்சும் எங்கெல்சும் விஞ்ஞானமாக்கினர்.

கற்பனாவாதிகளில் மேதையாகத் திகழ்ந்தர்வகள்கூட, சுரண்டல் என்பது அநியாயமானது, என்பதை ஆட்சியாளர்களுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் புரிய வைத்தால் போதும் சமூகத்தில் அமைதியும் நல்வாழ்வும் கிட்டும் என்று அப்பாவித்தனமாக எண்ணிக்கொண்டனர். முதலாளித்துவம் வளரும் தறுவாயில் இருந்ததால் அவர்களின் அறிவு எல்லைக்குட்பட்டதாகவும் வரம்பிடப்பட்டதாகவும் இருந்தது, முதிர்ச்சியற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிலைமைகளுக்கும் முதிர்ச்சியற்ற வர்க்க நிலைமைகளுக்கும் இணைவாய் முதிர்ச்சியற்ற கோட்பாடுகளை அவர்கள் முன்வைத்தனர் என்கிறார் எங்கெல்ஸ்.

1840களில் முதலாளித்துவம் முதிர்ச்சியடையத் தொடங்கியது. முதலாளித்துவத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் வகையில் வளர்ந்திருந்தது. முதலாளித்துவத்தைப் பற்றிய விமர்சனமும் விடிவும் கற்பனையில் அறிந்து கொள்ள வேண்டிய நிலையிலிருந்து விஞ்ஞான வழிப்பட்ட கோட்பாடாக மாற்றுவதற்கான சமூக பொருளாதரம் வளர்ச்சி பெற்றுவிட்டது.

மார்க்சின் சோஷலிசம் விஞ்ஞானத் தன்மை பெற்றதற்கு, வரலாற்றியல் பொருள்முதல்வாதம், உபரிமதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் ரகசியம் புலப்படுத்தப்படல் ஆகிய இருமாபெரும் கண்டுபிடிப்புகள் காரணமாகிறது.

                மார்ச்சிய தத்துவமான வரலாற்றியல் பொருள்முதல்வாதம், முதலாளிக்கும் பாட்டாளிக்கும் இடையேயான பகைமையில் காணப்படும் முரணில் உருவான வர்க்கப் போராட்டத்தை எடுத்துரைக்கிறது. மார்க்சும் எங்கெல்சும் தொழில்துறை பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தை கண்ணுற்று அவர்களை உணர்வுபூர்வமாக ஆதரித்து அதன் வழியில் தமது கோட்பாட்டை வகுத்துக் கொண்டனர்.

      சோஷலிசத்தை கற்பனாவாத நிலையிலிருந்து விஞ்ஞான வகைப்பட்டதாக மாற்றுவதற்கு, தொழில்துறை பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க நிலைமைகளை அடிப்படையாக மார்க்சும் எங்கெல்சும் அமைத்துக் கொண்டனர். முதலாளித்துவ சமூகம் வளர்ச்சியுற்று இறுதியில் தன்னை நிலைநிறுத்த முடியாமல் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தால் எவ்வாறு வீழும் என்பதை மார்க்சும் எங்கெல்சும் அரசியல் பொருளாதாரம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையாகக் கொண்டு உறுதிப்படுதினர்.

      இந்த மார்க்சியத்தை லெனின் வறட்டுச் சூத்திரமாக கொள்ளாமல், அதன் படைப்பாற்றலோடு புரிந்து கொண்டு ஏகாதிபத்திய காலத்திய மார்க்சியமாக லெனினியத்தை அமைத்தார். மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரமாகக் கொண்டவர்கள், மார்க்சிய முடிவுகளை மட்டும் படித்துவிட்டு, லெனின் மார்க்சியத்துடன் முரண்டுகிறார் என்றும் ருஷ்யப் புரட்சி மார்க்சின் மூலதன நூலுக்கு எதிரானது என்றும் அதனால் இதுகாறும் நம்பப்பட்டு வந்தது போல் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் விதிகள், அவ்வளவு இறுக்கமானவை அல்ல என்று விளக்கப்படுத்தத் தொடங்கினர்.

லெனினது நடைமுறையும், படைப்பும் இந்தக் கூற்றுக்கு எதிரானதாகவே இருக்கிறது என்பதை இந்த லெனின் வாழ்வும் படைப்பும் என்ற நூலின் மூலம் அறிந்து கொள்ளலாம். லெனினியம் என்பது ருஷ்யாவின் தனித்துவமான போக்கை தவிர அதில் சர்வதேச பொதுத் தன்மை ஏதும் கிடையாது என்று கூறுபவர்களும் இருக்கின்றனர். இதனை லெனின் படைப்புகளே மறுதலிக்கின்றன. ருஷ்யப் புரட்சியை அப்படியே தமது நாட்டில் நடத்துவது பற்றிய சிந்தனைப் போக்கையும், அதற்கு மாறாக இது ருஷ்ய நாட்டிற்கு மட்டுமானது என்பதாக புரிந்து கொள்வதையும்  லெனின் தமது இடதுசாரி” கம்யூனிசம்- ஓர் இளம்பருவக் கோளாறு என்ற நூலில் மறுத்துரைக்கிறார்.

வளர்ச்சியுறாத நாட்டில் லெனின் சோஷலிசத்தை நிர்மாணிக்கிறார் என்று பலர் விமர்சிக்கின்றனர், ஆனால் இதற்கு மாறாக, சற்று பின்னோக்கிச் சென்று புதிய பொருளாதாரக் கொள்கையை அமைத்து, இதனை நிறைவேற்றியப் பிறகே சோஷலிச நிர்மாணத் திட்டங்களை செயற்படுத்தியுள்ளார் என்பதை லெனினது படைப்புகளின் தொடர்ச்சி நமக்கு விளக்குகிறது. இயக்கவியல் அடிப்படையில் புரிந்து கொண்டவர்களுக்கு லெனினியம் மார்க்சியத்தின் தொடர்ச்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை வறட்டுத் தனமாக ஏற்றுக் கொண்டவர்களுக்கே சிக்கல் ஏற்படுகிறது.

ருஷ்யப் புரட்சியின் நூறாவது ஆண்டை கொண்டாட முடியாமல், அதன் நினைவு நாளையே கொண்டாட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். புரட்சிக்கு முன்பு போல்ஷிவிக்குக்கள் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தாலும் அதனை நீடித்து அரசாள முடியுமா? என்ற கேள்விவை எழுப்பியிருந்தனர். போல்ஷிவிக்குகள் நீடித்து அரசாள முடியுமா? என்ற நூலில் இதற்கு முடியும் என்று லெனின் பதில் அளித்துள்ளார். ஆனால் இன்று போல்ஷிவிக்குகளின் ஆட்சி ருஷ்யாவில் இல்லை. இதனை விவரிப்பது தேவையான ஒன்றாகும். இருந்தாலும் இந்த நூலின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இந்நூலின் இறுதி, இதன் விவாதத்தை தொடங்கும் முகமாகவே முடிக்கப்பட்டுள்ளது.

“லெனின் விட்டுச் சொன்ற பணியினை ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் அரசும் செய்து முடித்தது. முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிச சமூகத்திற்கு மாறிச் செல்வதற்கு தேவைப்பட்ட இடைக்காலத்தை முடித்துக் கொண்டு 1935ஆம் ஆண்டில் சோஷலிச சமூகத்திற்குள் சோவியத் நுழைந்தது. 1940ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் தொழிற்துறை உற்பத்தியின் அளவு ஐரோப்பியாவில் முதல் இடத்தையும், உலக உற்பத்தியின் அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்றது.

 

1940 களில் எற்பட்ட இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய பாசிச ராணுவம் சோவியத் ஒன்றியத்தின் நகரங்களையும் தொழிற்கூடங்களையும் அழித்தது. இதனோடு 55 ஆயிரம் டாங்கிகள், 62 ஆயிரம் விமானங்கள், 80 லட்சத்துக்கு மேற்பட்ட போர்வீரர்கள் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர். நாட்டைக் காப்பதற்கான இந்த தேசபக்த போரின் போது, போர்வீரர்கள் மற்றும் மக்களின் பேராற்றலை உலகுக்கு எடுத்துக்காட்டியது. அது மட்டுமல்லாது போரின் விளைவாக ஏற்பட்ட அழிவில் இருந்து மீள்வதற்கு பல பத்தாண்டுகள் தேவைப்படும் என்று உலகம் கணித்துக்கொண்டிருக்க, சோவியத் ஒன்றிய உழைக்கும் மக்கள், போருக்கு முன்பான உற்பத்தியின் அளவை, முதல் மூன்று ஆண்டிலேயே எட்டினர். மக்களின் இந்த பேராற்றலுக்கு ஸ்டாலின் தலைமை தாங்கினார். மக்கள், கட்சி, தலைவர் ஆகியோர்களிடையே காணப்பட்ட ஐக்கியமே இந்த வெற்றிக்கு வழிவகுத்தது.”


            பின்தங்கிய ருஷ்யாவை சோஷலிச நிர்மாணத்திற்கு தேவையான வகையில் வளர்ச்சியடைய போல்ஷிவிக்குகளால் முடிந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. ஆனால் ஸ்டாலினின் தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பதாக கூறிக்கொண்ட, பின்வந்த ருஷ்ய அதிபர்கள் சோவியத் வளர்ச்சியடைந்த சோஷலிச சமூகமாக மேம்பட்டுவிட்டது, இதற்கு அடுத்தக் கட்டமான கம்யூனிச சமூகத்தில் நாம் கால்பதிக்க வேண்டும்.  இந்த சமூகத்தில் முதலாளித்துவத்தின் முயற்சிகள் பலனளிக்காது என்று கூறி, சோவியத்தில் கொண்டுவந்த மாற்றங்கள் மீண்டும் முதலாளித்துவத்தையே கொண்டு வந்திருக்கிறது. ஸ்டாலினிடம் காணப்படும் தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பதாக கூறியது உண்மையில் மார்க்சிய எதிர்ப்பேயாகும். இன்றுவரை ஸ்டாலின் எதிர்ப்பென்பது மார்க்சிய எதிர்ப்பாகவே காணப்படுகிறது.

      இப்போது ஆய்வு செய்து பார்க்க வேண்டியது, எப்போது எப்படி போல்ஷிவிக்கல்லாதவர்கள் சோவியத் கம்யூனிஸ்ட் கடசியிலும் தலைமையிலும் இடம்பெற்றார்கள் என்பதேயாகும். அதாவது சோவியத் தகர்வின் போது போல்ஷிவிக்குகள் ஆட்சியில் இல்லை என்பதே உண்மையாகும். இதனை ஆய்வு செய்ய வேண்டியது சர்வதேச இடதுசாரியினரின் கடமையாகும். ருஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை இந்த ஆய்வுடனேயே கொண்டாட வேண்டும். சோவியத் தகர்வு என்பது கம்யூனிச சித்தாந்தத்தின் தகர்வாகாது, சித்தாந்தத்தின் சிதைவினால் உண்டான தகர்வேயாகும். இந்த சித்தாந்த சிதைவை விமர்சித்து மார்க்சியத்தை நிலைநிறுத்துவது பெரும் கடமையாகும்

இன்றைய ருஷ்யாவில் பெரும்பாலான இளைஞர்களின் கவனம் சோஷலிசத்தின் பக்கம் திரும்புவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இது ருஷ்யப் புரட்சியின் நூறாவது ஆண்டின் நற்செய்தியாகும். நாளைய உலகம் உழைப்பாளர்களுக்கேயாகும்.

இந்நூல் இந்தளவில் வந்திருப்பதற்கு பெரும் காரணமானவர்கள் .ஜீவானந்தம், மகேஷ் ராமநாதன் என்ற இரு தோழர்களாவர். நூல்வடிவம் பெறுவதற்கு முன்பே இவர்கள் படித்து திருத்தி உதவினர். எனது நூலின் ஆக்கத்திற்கு  தொடர்ந்து ஊக்கமளிக்கும் தோழர்கள் கோவை ஈஸ்வரன், பாஸ்கர், ஆ.பத்மாவதி, சுந்தர சோழன். இந்தத் தோழர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்தை ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் வாசகர்களுக்கும் நன்றி. இந்த ஆர்வமே என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது. எனது எழுத்தை தோழமையோடு வெளியிடும் தோழர் திருப்பூர் குணாவுக்குவுக்கு நன்றி. இந்நூலை அழகு வடிவத்தில் விரைந்து அச்சிட்டு முடித்தமைக்காக பொன்னுலகம் பதிப்பகத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அலைபேசி எண்: 92832 75513 - 098840 92972                                  அ.கா.ஈஸ்வரன்
மின்னஞ்சல்- marxistwriter@gmail.com                                                    சென்னை

    மே 2016

Saturday, 25 June 2016

மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவிகோல்

ஆசிரியர்-த.ஜீவானந்தம் B.Com., M.B.A.,

வெளியீடு;-
சுருதி வெளியீட்டகம்,
விலை- ரூ.100/-

அலைபேசி- 94440 09990
மின்னஞ்சல்- jeeva1953@yahoo.com



புவி ஈர்ப்பு விதி என்பது புறநிலையானது. அதனை நாம் மாற்றிடவோ அல்லது மீறிடவோ முடியாது. அதனைப் பற்றிய அறிவை மனிதன் பெற்றதனால், விமானங்களையும், புவி ஈர்ப்பு விசையை கடந்து செல்லக் கூடிய ராக்கெட்டுகளையும் உருவாக்கி அனுப்ப முடிகிறது. இது போன்றே புறநிலையான சமூக வளர்ச்சியின் விதியை தவிர்த்திடவோ மீறிடவோ முடியாது. இவ்விதிகளை அறிந்த மனிதன் சமூக மாற்றத்தை விரைவுபடுத்தலாம். மார்க்சியம் இந்த விதியை அறிந்து செயற்படுவதற்குத் தேவையான கண்ணோட்டத்தை வழங்குகிறது.

மார்க்சியம், தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்ற மூன்று உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இம் மூன்றும் தம்முள் உள்ளிணைப்பைப் பெற்றதாக இருக்கிறது. இம்மூன்றில் பொருளாதாரம் முதன்நிலை பெறுகிறது. ஏன் என்றால் பொருளாதார முறையே சமூக வளர்ச்சியின் அடித்தளம் என்றும், இந்த அடித்தளமே மேற்கட்டமைப்பான தத்துவம், அரசியல், மதம், சட்டம் போன்றவற்றை நிர்ணயிக்கிறது என்றும் மார்க்சியம்  கூறுவதால் பொருளாதாரமே முதன்மையாகவும், இம்மூன்றினில் அடிப்படையாகவும் இருக்கிறது. சமூகத்தை மாற்றுவதற்கு போராடுகின்ற கம்யூனிஸ்ட்டுகள் அரசியல் பொருளாதாரம் அறிந்திருக்க வேண்டியதின் அவசியத்தை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மார்க்ஸ் இந்த அவசியத்தை இளம்வயதிலேயே அறிந்துகொண்டார்அவர் "ரைனிஷ் ஜீட்டுங்" பத்திரிகையில் காட்டு விறகுகள் திருட்டு பற்றிய சட்டம், மோஸெல் விவசாயிகளுடைய நிலைமை ஆகியவைகளைப் பற்றி எழுதும் போது, இது போன்ற பிரச்சினைகளை அரசியல்  மற்றும் தத்துவக் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் உள்ள போதாமையை உணர்ந்தார். இவைகளுக்குப் பின்னுள்ள பொருளாதார உறவுகளில் அதாவது பொருளாயத நலன்களில் இருந்து அணுகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து சுமார் நாற்பது ஆண்டுகள் அரசியல் பொருளாதாரம் பற்றிய ஆய்வில் தமது கவனம் முழுமையையும் செலுத்தினார். இதன் விளைவே "மூலதனம்" என்கிற மூன்று தொகுதிகள். இவற்றில் முதல் தொகுதி தம்மளவில் முழுமைபெற்ற நூலாகும். மூன்றாம் தொகுதியைப் படிக்காமல் இரண்டாம் தொகுதி முழுமையடையாது.

காரல் மார்க்ஸின் “மூல்தனம்” நூலின் முதல் தொகுதியை முழுமையாக இரண்டு முறை வகுப்பெடுத்த அனுபவம் பெற்றவர் தோழர் த.ஜீவானந்தம். "மூலதன" நூலை பன்னிரண்டு வகுப்புகளில் நடத்த தயார் நிலையில் இருக்கிறார். இந்த இரண்டு வகுப்புகளிலும் (மார்க்சிய சிந்தனை மையம், மூலதன நூல் வாசிப்பு மன்றம்) கலந்து பயனடைந்தவன் நான். மார்க்சிய சிந்தனை மையம்ஆசான்களின் நூல்களை படித்தல் படிப்பித்தல் என்ற முறையில் செயல்பட்டது. அவ்வாறு இருக்கும் கட்டத்தில் நான் இந்த படிப்பு வட்டத்தில் இணைந்தேன். சில மாதங்கள் தொடர்ந்து கலந்து கொண்ட பிறகு ஒரு கருத்தை முன்வைத்தேன். இதுவரை நாம் எவ்வற்றை எல்லாம் வகுப்பெடுத்திருக்கிறோம், இன்னும் எவைகளை வகுப்பெடுக்க வேண்டும் என்று வகைப்படுத்தி செயல் பட்டால் நமது வகுப்புமுறை மேம்படையும் என்று எனது கருத்தை வைத்தேன். அப்போது தோழர் த.ஜீவானந்தம் ஒரு கருத்தை முன்வைத்தார். நம்மவர்களில் ஒருவர் தத்துவத்தையும், மற்றொருவர் அரசியல் பொருளாதாரத்தையும், வேறொருவர் அரசியலையும் தொடர்ந்து வகுப்பெடுக்கலாம். அதன் படி அரசியல் பொருளாதாரப் பகுதியை தோழர் த.ஜீவானந்தம் எடுப்பதாக முடிவெடுத்து செயல்பட்டோம்.

அரசியல் பொருளாதாரம் என்று பொதுவாக எடுப்பதைவிட மார்க்சின் மூலதனத்தை தொடர் வகுப்பாக எடுக்கிறேன் என்று தோழர் த.ஜீவானந்தம் கூறியதும் அவ்வகுப்பில் இருந்த என்னைப் போன்றோர் இந்த முயற்சியை பெரிதும் வரவேற்றனர். மூலதனம் எடுப்பதற்கு முன்பாக எங்களுக்கு ஆடம்ஸ்மித்தின் "நாடுகளின் செல்வம்" என்ற நூலைப் பற்றிய அறிமுகமாக ஒரு வகுப்பை எடுத்தார். அடுத்ததாக மார்க்சின் மூதனத்தின் முதல் தொகுதியை தொடர் வகுப்பாக எடுத்தார். இரண்டு மூன்று வகுப்புகள் சென்ற பின், அவரிடம் "உங்களது வகுப்பு  மிகவும் நன்றாக இருக்கிறது. எங்கெல்ஸ் எழுதிய "கா.மார்க்ஸ் "மூலதனம்" முதல்தொகுதியின் பொழிப்பு" என்ற நூல் படித்துப்பாருங்கள்" என்று கொடுத்தேன். அதனை படித்துவிட்டு இந்நூல் சிறப்பாக இருப்பதையும், மூலதன நூலைப் பற்றி வகுப்பெடுப்பதற்கான வழிமுறை எங்கெல்சின் நூலில் காணப்படுவதையும் குறிப்பிட்டார். ஒரு வகையில் எங்கெல்சின் வழிமுறையிலேயே எங்களது மூலதன வகுப்பு தடைபடாமல் தொடர்ந்தது.

மார்க்சிய தத்துவத்தையும், இந்திய தத்துவத்தையும் படிப்பதிலும் அது பற்றிய நூல்களை படைப்பதிலும் இருந்த எனது விருப்பம், அரசியல் பொருளாதாரம் பற்றி படிப்பதிலும் அதுபற்றிய வகுப்புகளில் கலந்து கொள்ளதிலும் இருந்த எனது கவனம் அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனம் எழுதும் அளவுக்கான தைரியம் தோழர் த.ஜீவானந்தம் எடுத்த வகுப்பில் கலந்துகொண்டபிறகே ஏற்பட்டது.

"மூலதன" நூல் வாசிப்பது இன்றைய நிலையில் சிரமமா? "மூலதன" முதல் தொகுதி வெளிவந்து சிலகாலம் வரை நூலைப் பற்றி முதலாளித்துவ சமூகம் ஏதும் பேசாது மவுன சதியாய் அமைதி காத்தது. ஆனால் இதனை சில காலகட்டத்துக்கு மேல் கடைபிடிக்க முடியவில்லை என்பது அன்றைய உண்மை.

"மூலதன" நூல் வாசிப்பது சிரமமானது என்ற வகையிலான சதியினை இன்றைக்கு சிலர் செய்து வருகின்றனர். வாசிப்பில் உள்ள சிரமம் பற்றி மார்க்சும் எங்கெல்சும் நூலின் முன்னுரையில் எழுதியிருப்பது உண்மையே. முதலில் இந்த எச்சரிக்கைகள் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்புள்ள நிலைமையினை குறிப்பிடுவதாகும்குறிப்பிட்ட சில சொற்களை, அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் சாதாரண அரசியல் பொருளாதாரத்திலும் அவற்றுக்குள்ள அர்த்தத்தில் இருந்து வேறான அர்த்தத்தில் பிரேயோகித்திருப்பதைச் சொல்கிறோம். என்று எங்கெல்ஸ் குறிப்பிடுவது இன்றைக்கு அப்படியே எவ்வாறு பொருந்தும்?. மார்க்சின் அரசியல் பொருளாதாரக் கலைச்சொற்கள் பயன்பாட்டுக்கு வந்து சுமார் 150 ஆண்டுகள் நெருங்கிவிட்டன. தமிழகத்திலும் மார்க்சின் அரசியல் பொருளாதாரம் அறிமுகமாகி பல பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. உபரி மதிப்பு, உழைப்பின் இரட்டைத் தன்மை, சரக்கின் இரட்டை மதிப்பு போன்றவை புத்தம்புதிய சொற்களாக இன்றும் எவ்வாறு இருக்க முடியும். அப்படி புதிதாக இருந்தால் இதுவரை மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை படிக்க முயற்சிக்கவே இல்லை என்பதே உண்மை. முயற்சிக்காதவருக்கு எப்போதும் எல்லாமும் சிரம்மே.

மூலதன நூலின் பிரெஞ்சுப் பதிப்புக்கான முன்னுரையில் "உண்மையைக் காணத் துடிக்கிற வாசகர்களை முன்கூட்டேயே எச்சரித்து, முன்கூட்டியே ஆயத்தப்படுத்துவதன் மூலம் அல்லாமல் சங்கடத்தை சாமாளிக்கச் சக்தியற்றவனாய் இருக்கிறேன். விஞ்ஞானத்துக்கு ராஜபாட்டை ஏதுமில்லை, அதன் களைப்பூட்டும் செங்குத்துப பாறைகளில் ஏறத் துணிந்தவர்களுக்கே அதன் ஒளிரும் உச்சிகளை எய்துகிற வாய்ப்புண்டு" என்று மார்க்ஸ் எழுதினார். இதுபோன்ற எச்சரிக்கைகள் படிக்கத் தூண்டுவதற்கு எழுதப்பட்டவையே. ஆனால் இன்றுவரை இதனை நமது மக்களிடையே படிக்கத் தடை ஏற்படுத்துவதற்கே பயன்படுத்தப் படுகிறது. சிரமம் என்ற மாயை உடைத்து, படிப்பதற்கு துணைபுரிய வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதே தோழர் த.ஜீவானந்தம் "மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்" என்ற நூல்.

களைப்பூட்டும் செங்குத்துப் பாறைகளில் ஏறத் துணிந்தவர்கள் துணைகோலாக  இந்நூலை பயன்படுத்தினால் ஒளிரும் உச்சியினை அடையலாம். "மூலதனம்" நூலைப் புரிந்து கொள்வதில் வர்க்கச் சார்பும் ஒரு வகையில் துணைபுரியும். பாட்டாளி வர்க்கச் சார்பற்ற அறிஞர்கள் அல்லது நபர்கள் மார்க்சின் "மூலதன" நூலை மார்க்சிய வழியில் புரிந்து கொள்ள முடியாது. அது மட்டுமல்லாது மார்க்சின் பல முடிவுகளை அவர்களால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஏற்றுக் கொள்ளாமை என்பதை அவர்கள் சிரமம் என்பதாக, "மூலதன" நூலைப் பற்றிய விமர்சனமாக வைக்கின்றனர்.

முதலாளித்துவத்திலிருந்து விடுபடுவதற்கான ஆயுதத்தை மூலதன நூல் சுரண்டப்படும் பாட்டாளி பாட்டாளி வர்க்த்துக்கு வழங்குவதை, பாட்டாளியால் புரிந்து கொள்ள முடியாது என்ற கூற்று அபத்தமேயாகும். அவர்களின் வாழ்நிலையும் அவர்களுக்கான கோட்பாடும் எவ்வாறு அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகும். "மூலதன" நூல் என்ன கூறுகிறது என்பது கண்டிப்பாக பாட்டாளிக்கு புரியக்கூடியதே.

மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்பது பாட்டாளி வர்க்கத்துக்கான விஞ்ஞானம். இந்த அரசியல் பொருளாதாரம், முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை என்பது என்றும் நிலைபெற்று இருக்கக்கூடியதல்ல. சமூக வளர்ச்சியின் இடைகட்டத்தில் தான் முதலாளித்துவம் தோன்றியது. இதன் உற்பத்தி முரண்பாட்டால் குறிப்பிட்ட வளர்ச்சி கட்டத்தில், வளர்ச்சியுற்ற சமூக உற்பத்திச் சக்திக்கும், பழைமைப்பட்டு போன உற்பத்தி உறவுக்கும் இடையே முரண்முற்றி சமூக புரட்சியை தோற்றுவிக்கிறது. இந்த விஞ்ஞான வழிப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், பாட்டாளிக்கு மார்க்சிய அரசியல் பொருளாதாரம் சமூக வளர்ச்சிக்குரிய புறநிலை விதிகளை ஆராய்ந்து, பாட்டாளி வர்க்கத்தின் கடமையான முதலாளித்துவ சமூக அமைப்பை ஒழித்திடுவதற்கானக் கோட்பாட்டை வகுத்தளிக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்தின் அடிப்படையில் இந்தப் பாட்டாளி வர்க்கக் கடமைகளை நிறைவேற்றுகிறது.

வர்க்க சார்பற்ற முறையிலான "மூலதன" வாசிப்பு என்பது நூலின் முடிவுகளோடு முரண்பாட்டை ஏற்படுத்தும். தோழர் த.ஜீவானந்தம் இந்நூலை பாட்டாளி வர்க்க சார்பான புரிதலோடு நமக்கு அளித்துள்ளார். இதுவே இந்நூலின் வெற்றிக்கான முதல் படியாக நான் கருதுகிறேன்.  தொழிலாளி உழைப்பு நிகழ்முறையின் முடிவை, தமது மனதில் தோற்றுவித்துக் கொண்டு உற்பத்தி செய்கிறார் என்பதே, படு மோசமான கட்டக் கலைஞனை தலைசிறந்த தேனிக்களிடம் இருந்து  வேறுபடுத்திக் காட்டுகிறது என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார். இதனைப் படித்தவுடன்  மார்க்ஸ் இங்கு அதாவது அரசியல் பொருளாதார நூலை படைத்திடும் போது சிந்தனைகளும் மனச் செயல்களும் சுதந்திரமாக செயல்படுவதாக கூறி பொருள்முதல்வாதத்தைக் கைவிட்டுவிட்டார் என்பது போன்று கருத்துரைக்கின்ற மார்க்சின் "மூலதன" வகுப்பாசிரியர்கள் இருக்கின்றனர். ஆனால் தோழர் த.ஜீவானந்தம் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் இந்தப் பகுதியை நமக்களித்துள்ளார்அதே போல், மார்க்ஸ் தமது நூலை சரக்கு பற்றிய கருத்துடன் எழுதத் தொடங்கியதை, காரண காரிய விளக்கம் இன்றியும், வேண்டுமானால் எடுததுக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள் என்ற புதிரான முறையில் முன்வைத்திருப்பதாக சில "மூலதன" வாசிப்புக்கான வழிகாட்டும் நூல் கூறுகிறதுதோழர் த.ஜீவானந்தம் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையில் செல்வம் என்பது சரக்குகளின் பெருந்திரட்டாலாக காட்சி தருகிறது. இந்த செல்வத் திரட்டல் வடிவம் தான் சகலவிதமான சுரண்டலுக்கும் அடிப்படைக் காரணமாகும். சுரண்டல் முறைக்கு காரணமான சரக்கு பற்றிய ஆய்விலிருந்து மார்க்ஸ் தொடங்குகிறார், என்ற தெளிவோடு தமது நூலைத் தொடங்கியிருக்கிறார் தோழர் த.ஜீவானந்தம்.

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்குக் காரணம் மக்களின் குறைநுகர்வல்ல என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோர் கூறியிருப்பதற்கு மாறாக குறைநுகர்வே என்று பல பொருளாதார அறிஞர்கள் கூறிவருகின்றனர். இதில் என்ன கொடுமை என்றால் இப்படிச் சொல்பவர்களில் சிலர் மார்க்சிய பொருளாதார அறிஞராக அறியப்பட்டவர்களாக இருக்கின்றனர். தோழர் த,ஜீவானந்தம் 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடிக்குக் மிகை உற்பத்தியே காரணம் என்று மார்க்சிய முதலாசிரியர்களின் வழியில் விளக்கியிருக்கிறார். முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத உள்முரணின் வெளிப்பாடே பொருளாதார நெருக்கடி, வளர்ச்சியடைந்த சமூகவழிப்பட்ட உற்பத்திக்கு, தனிச்சொத்துடைமையாக்கான உற்பத்தி உறவுகள் பொருத்தமற்று போவதையும், அதன் தொடர்ச்சியாக சமூக புரட்சி ஏற்படுவதையும் மார்க்ஸ் தெளிவுபட விவரித்துள்ளார். இந்த விளக்கத்தில் காணப்படும் முரணை தவிர்க்க முடியுமா!! என்ற முயற்சியில் முதலாளித்துவ அறிஞர்கள் மார்க்சின் "மூலதன" நூலை படித்தாராய்கின்றனர். சமூகத்தை மாற்றுவதற்கு போராடுகின்ற கம்யூனிஸ்டுகளில் பலர் இதன் அவசியத்தை பற்றிய போதிய அறிவு பெறாமையினால், முதலாளித்துவ எதிர்ப்பு, புதிய சமூக மாற்றம் என்ற சொல்லோடு மார்க்சியத்தை சுருக்கி புரிந்து கொண்டவர்களாக இருக்கின்றனர்.


சமூகத்தைப் பற்றிய விஞ்ஞான புரிதலுக்கும், அதனை புரட்சிகரமாக  மாற்றுவதற்கும் தேவைப்படுகின்ற மார்க்சிய வழிப்பட்ட அரசியல் பொருளாதார அறிவை பெறுவதற்கு மார்க்சின் "மூலதன" நூலை படிக்க வேண்டும். "மூலதனம்" நூலில் காணப்படும் கடினமானப் பகுதியை நமக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் சுருக்கித் தந்துள்ளார். இந்த சுருக்கத்தை மட்டும படித்தால் "மூலதனம்" நூல் முழுமையையும் அறிந்து கொண்டதாகாது. முழுமையாக நூலை படிப்பதற்கு துணைபுரியும் வகையில் அனைத்து அத்தியாயத்தையும் அறிமுகப் படுத்தியுள்ளார்இதனை புரிந்து இந்நூலின் துணையோடு மார்க்சின் "மூலதனம்" நூலை படித்து நிறைவு செய்ய வேண்டும்.