Monday 24 July 2023

ஸ்டாலின் எழுதிய “அராஜகவாதமா? சோஷலிசமா?” (இரண்டாம் பகுதி)

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 93- வது வார வகுப்பு  – 23-07-2023  )

2. பொருள்முதல்வாதக் கோட்பாடு

                இயக்கவியல் முறையை பார்த்துவிட்டோம், அடுத்து பொருள்முதல்வாதக் கோட்பாட்டைப் பார்க்கப் போகிறோம்.

      இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் ஸ்டாலின் மார்க்சின் ஒரு புகழ்பெற்ற கருத்தை மேற்கோளாகக் கொடுத்துள்ளார்.

“மனிதர்களது சிந்தனை அவர்களுடைய வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை, இதற்கு மாறாக, அவர்களது சமூக வாழ்நிலையே அவர்களுடைய சிந்தனையைத் தீர்மானிக்கிறது

(மார்க்ஸ்)

    இதுதான் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை. வாழ்நிலை என்பது அடித்தளம் சிந்தனை என்பது மேற்கட்டமைப்பு. அடித்தளம்தான் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது. இந்த அத்தியாயத்தில் ஸ்டாலின் இந்தப் பொருள்முதல்வாதத்தைத் நமக்கு விளக்குகிறார்.

      இந்த உலகில் உள்ள ஒவ்வொன்றும் மாறிக் கொண்டே இருக்கிறது, வாழ்க்கையில் உள்ள ஒவ்வொன்றும் வளர்ச்சி அடைகிறது, இந்த மாற்றங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன?, எந்த வடிவத்தில் முன்னேறுகிறது? என்கிற கேள்விக்கு பொருள்முதல்வாதம் என்ன வகையில் பதிலளிக்கிறது என்பதை இந்த அத்தியாயத்தில் பார்க்கப் போகிறோம்.

உலகம் ஒரு காலத்தில் ஒளிஉமிழும் நெருப்புக் கோளமாக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக குளிர்ச்சி அடைந்தது. குளிர்ச்சி அடைந்தப் பின்னர் தாவரங்களும் விலங்குகளும் தோன்றின. விலங்கினப் பெரும்பிரிவின் பரிணாம வளர்ச்சியைத் தொடர்ந்து வாலில்லாக் குரங்குகள் தோன்றின. இதன் தொடர்ச்சியாகவே மனிதன் தோன்றினான் என்பது நாம் அறிந்ததே. இந்த நிலையினை அடைவதற்கு பல லட்சம் ஆண்கள் கடந்து வர வேண்டியிருந்தது.

இயற்கையில் இருந்து உயிரினம் தோன்றியது பற்றிய பொதுவான வளர்ச்சியின் வரலாறு இதுவே ஆகும்.

சமூக வரலாறும் அப்படியே தான் வளர்ச்சி அடைந்தது. இன்று பார்க்கிற வளர்ச்சி அடைந்த நிலையில் சமூகம் என்றும் இருக்கவில்லை. இது நமக்கு தெரிந்த வரலாறுதான். அதனை சுருக்கமாகப் பார்க்கலாம்.

ஆதி கம்யூனிச சமூகம் தான் முழுவளர்ச்சி அடைந்த முதல் சமூகம், இதற்கு அடுத்து அடிமை சமூகம், நிலப்பிரபுத்து சமூகம், முதலாளித்துவ சமூகம் என்று ஸ்டலின் 1905 ஆம் ஆண்டு எழுதியுள்ளார். 1917ஆம் ஆண்டுக்குப் பிறகு ருஷ்யாவில் சோஷலிச சமூகம் தோன்றியது. இதுதான் பொதுவான சமூக வளர்ச்சியின் செவ்வியல் வடிவம்.

இது அப்படியே அனைத்து நாடுகளிலும் நடை பெற்றாக வேண்டும் என்று நாம் கூறவரவில்லை. இதுவே பொது விதி. செவ்வியல் வடிவத்தையே பொதுவிதியாகக் கொள்ள முடியும்.

சமூகம் படிப்படியாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பது நமக்கு நன்றாகத் தெரிகிறது. இந்த வளர்ச்சி எப்படி நடந்தேறியது என்பதை பொருள்முதல்வாத வழியில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் ஸ்டாலின் கேள்வியைக் கேட்டு பதிலையும் தருகிறார்.

சமூக வளர்ச்சி எப்படி ஏற்பட்டது?

மனிதனுடைய உணர்வுநிலையினால் இயற்கையும் சமூகமும் வளர்ச்சி அடைந்ததா?

அல்லது, இதற்கு நேரெதிராக, இயற்கை சமூகம் ஆகியவற்றின் வளர்ச்சியானது மனிதனுடைய உணர்வுநிலையை வளர்த்ததா?

இதற்கு பதிலளிக்கும் போதுதான் தத்துவம் இருபெரும் பிரிவாக பிரிகிறது. ஒரு பிரிவு கருத்துமுதல்வாதம் மற்றொரு பிரிவு பொருள்முதல்வாதம்.

இந்த இரண்டு தத்துவங்களும் இதற்கு என்ன பதில் அளிக்கிறது என்பதை அடுத்துப் பார்ப்போம்.

இயற்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் முன்னரே அனைத்தையும் தழுவிய “கருத்து” இருக்கிறது. இந்த அனைத்தையும் தழுவிய கருத்துதான், இயற்கை மற்றும் சமூக வாழ்க்கையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கிறது என்பது கருத்துமுதல்வாதம். இதன் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கருத்துமுதல்வாதம் காணப்படுகிறது.

அடுத்து பொருள்முதல்வாதம் கூறுவதைப் பார்ப்போம்.

ஒன்றேயானதும் பிரிக்க முடியாததுமான இயற்கையானது, கருத்து பொருள் என்று இருவேறுபட்ட வடிவங்களில் வெளிப்படுகிறது. அதாவது ஒன்றேயானதும் பிரிக்க முடியாததுமான சமூக வாழ்க்கையானது, கருத்து மற்றும் பொருள் என்ற இருவேறுபட்ட வடிவங்களில் காணப்படுகிறது. இவ்வாறுதான் இயற்கை மற்றும் சமூக வாழ்க்கையின் வளர்ச்சி இருக்கிறது. இதுவே பொருள்முதல்வாதக் கோட்பாட்டின் ஒருமைவாதம் ஆகும்.

இந்த அடிப்படையை ஏற்று விளக்குவதில் பரிவுபட்டு பொருள்முதல்வாதம் பல பிரிவுகளாக பிரிந்து இருக்கிறது.

மார்க்சிய பொருள்முதல்வாதமானது கருத்துமுதல்வாதத்தை நிராகரிக்கிறது. எவ்வாறு நிராகரிக்கப்படுகிறது என்பதை ஸ்டாலின் அடுத்து விளக்குகிறார்.

பொதுவாக உணர்வுநிலை என்பதும் கருத்து என்பதும் பொருளாயத வளர்ச்சிக்கு முந்தியது என்று கருத்துமுதல்வாதம் கருதுகிறது. சிந்தனையில் இருந்தே வாழ்நிலை வந்தது என்பது கருத்துமுதல்வாதம். அதாவது சிந்திக்கின்றபடியே வாழ்நிலை அமைகிறது. சிந்தனை முதலானது வாழ்நிலை இரண்டாவது என்பது கருத்துமுதல்வாதம். இது தவறு என்கிறார் ஸ்டாலின்.

உயிரனங்கள் தோன்றுவதற்கு முன்பே உலகம் இருக்கிறது, இயற்கை இருந்திருக்கிறது. உலகம் தோன்றி பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகே உயிரினம் தோன்றியது. முதலில் தோன்றிய உயினத்துக்கு உணர்வுநிலை கிடையாது. வெகுகாலத்துக்குப் பிறகு புறத்தூண்டுதலிலான உயிர்ப்பியக்கமும் புலனுணர்வின் தொடக்கக் கூறுகளும் ஏற்பட்டது. இதற்கு பின்னரே விலங்குகள் புலனுணர்வுச் சக்திகளைப் படிப்படியாக வளர்த்துக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக புலனுணர்வு மெதுவாக உணர்நிலையாக வளர்ச்சி பெற்றது.

வாலில்லாக் குரங்குகானது நான்கு கால்களிலேயே நடந்து கொடிருந்தது. மரம் செடிகளில் காணப்படும் கனிகளை எட்டிப்பறிப்பதற்கு முயற்சிக்கும் போது இரண்டு கால்களில் நிற்கவும் நடக்கவும் தொடங்கியது. இரண்டு கால்களில் நிமிர்ந்து நிற்கும் போது அந்த வாலில்லா குருங்குகளின் நுரையீரல், குரல்வள நாளத்தையும் சரளமாகப் பயன்படுத்தியது. இதன் விளைவாகவே பேச முடிந்தது உணர்வும் வளர்ச்சி பெற்றது. இதைவிட முக்கியமானது என்னவென்றால் நிமிர்ந்து நடக்கும் போது மூளை வளர்ச்சி அடைந்தது. இவை அனைத்தினாலும் தான் உணர்வுநிலை பெறப்பட்டது.

இந்த வாலில்லாக் குரங்கு தனது மூளை வளர வேண்டும் உணர்வுநிலை பெற வேண்டும் என்று சிந்தித்து இதனை செய்திடவில்லை என்பது நமக்குத் தெரிகிறது. தேவையின் அடிப்படையில் செயல்படும்போது புறநிலைமைக்கு ஏற்ப உணர்வுநிலை தோன்றுகிறது.

“மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்” என்கிற எங்கெல்ஸ் எழுதிய நூலில் இதைப் பற்றிய விவரங்கள் இருக்கிறது. அதில் எங்கெல்ஸ் உழைப்பே ஒரு வகையில் மனிதனைப் படைத்தது என்று கூறுவார். பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்வதற்கு எங்கெல்சின் இந்த நூல் நமக்குப் பயன்படும்.

இயற்கையினுடைய வளர்ச்சியின் வரலாற்றை விவரிப்பதின் மூலம் ஸ்டாலின் கருத்துமுதல்வாதத்தை முற்றிலும் மறுப்பதைப் பார்த்தோம்.

இந்த இயற்கையின் வரலாறு எப்படி புறநிலைக்கு அடுத்தபடியாக அகநிலை மாறுகிறதோ அதைபோலவே மனித சமூகத்தினுடைய வளர்ச்சி பற்றிய வரலாறும் மாறுகிறது என்பதை அறுதியிட்டுக் கூற முடியும் என்கிறார் ஸ்டாலின்.

மனிதகுலம் தோன்றியது முதல், ஒரே கருத்தைக் கொண்டோ, ஒரே விருப்பத்தைக் கொண்டோ இருக்கவில்லை என்பது நமக்குத் தெரிகிறது. வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு கருத்துகளாலும் விருப்பங்களாலும் ஊக்குவிக்கப்பட்டனர். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்ன என்பதை பொருள்முதல்வாதம் விளக்குகிறது. சமூக மாற்றத்தைக் காரண-காரிய அடிப்படையில் விளக்குவதினால்தான் பொருள்முதல்வாதம் விஞ்ஞானத் தன்மை பெற்றதாக கூறப்படுகிறது. சோஷலிச சமூக மாற்றம் தவிர்க்க முடியாது என்று விஞ்ஞான அடிப்படையில் கூறுவதற்கு இந்த பொருள்முதல்வாதப் பார்வையே காரணம் ஆகும். இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது, சமூக மாற்றத்துக்குப் போராடும் ஒரு கம்யூனிஸ்ட் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை நன்றாகத் தெரிந்து இருக்க வேண்டும். அப்போதுதான் அவனது செயற்பாடு விஞ்ஞானத் தன்மை கொண்டதாக இருக்க முடியும்.

வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கருத்துக்களும் வெவ்வேறு  விருப்பங்களும் உருவாவதற்குக் காரணத்தை பொருள்முதல்வாதம் எவ்வாறு விளக்குகிறது என்பதை அடுத்துப் பார்ப்போம்.

எந்தெந்த உற்பத்தி முறையில் மனிதன் வாழ்கிறானோ, அந்தந்த உற்பத்தி முறைக்கு ஏற்பவே மனிதன், சிந்திக்கிறான் விரும்பம் கொள்கிறான் என்பதை அறிய முடிகிறது.

பழங்குடி சமூகம் என்று கூறப்படுகிற ஆதி பொதுவுடைமை சமூகத்தில் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு இயற்கையை எதிர்த்து போராடினர். கையாளப்படுகிற கருவிகள் அனைவருக்கும் பொதுவுடைமையாக இருந்தது. அந்த சமூகத்தில் “எனது” “உனது” என்கிற வேறுபாடு தோன்றவில்லை. அனைவரும் சேர்ந்தே உணவு சேகரித்தனர், சேகரித்ததை அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். அன்றைய சமூகத்தில் உள்ள மக்கள் அனைவரும் பொதுவுடைமை சிந்தனையிலேயே காணப்பட்டனர். அதாவது கூட்டாக உழைக்கும் போது கூட்டுச் சிந்தனையில் இருந்தனர்.

இதற்குப் பிறகு தனிவுடைமையும் வர்க்கமும் தோன்றியது. ஆதி பொதுவுடைமை சமூகம் சிதைந்து அடிமை உற்பத்தி முறை தோன்றியது. இந்த சமூகத்தில் மக்களிடையே தனிவுடைமை சிந்தனையினால் உந்தப்பட்டனர். இதே போலத்தான் நிலப்பிரப்புத்துவ சமூகத்திலும் முதலாளித்துவ சமூகத்திலும் அந்தந்த உற்பத்தி முறைக்கு ஏற்ப சிந்தனைகளும் கருத்துகளும் தோன்றின.

இதற்கு அடுத்து ஒரு எளிய எடுத்துக்காட்டை ஸ்டாலின் தருகிறார்.

செருப்பு தைக்கும் பட்டறை வைத்துள்ள உற்பத்தியாளர், பெரு உற்பத்தியாளரான முதலாளியுடன் போட்டி போடமுடியாமல் தனது பட்டறையை மூடிவிடுகிறார். பிறகு பெருமுதலாளி நடத்தும் செருப்பு தைக்கும் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்கிறார். பாட்டாளிகளுடன் வேலை செய்தாலும் இவர் சிந்தனை எவ்வாறு இருக்கிறது என்றால், இந்த உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தைச் சேர்த்து திரும்பவும் பட்டறையைத் தொழிலைத் தொடங்க வேண்டும். இதுவே இவரது சிந்தனையாக, குறிக்கோளாக இருக்கிறது. இவர் ஏற்கெனவே பாட்டாளியாக்கப்பட்டுள்ளார் ஆனால் அவர் இன்னும் குட்டி முதலாளித்துவ உணர்விலேயே காணப்படுகிறார். உண்மையில் தமது குட்டிமுதலாளித்துவ உற்பத்தையை இழந்துவிட்டார், தற்போது பாட்டாளியாகத் தள்ளப்பட்டுள்ளார். ஆனால் புதிய வாழ்நிலைமைக்கு இவரது சிந்தனை மாறாமல் பின்தங்கி உள்ளது.

இதில் இருந்து நமக்கும் என்ன தெரிகிறது.

மனிதர்களின் சூழ்நிலைமைகள் முதலில் மாறுகின்றன, அதன் பின்னரே, அதற்கு ஏற்ப அவர்களின் உணர்வுநிலை மாறுகின்றன.

காலம் செல்லசெல்ல இந்த பட்டறை உற்பத்தியாளர் தம்மால் பழையநிலைக்கு செல்ல முடியாத நிலையை உணர்ந்து கொள்கிறார். கிடைக்கும் கூலியே குடும்பத்தை பராமரிப்பதற்கு போதுமானதாக இல்லை. முதலில் கூலி உயர்வைப் பெற வேண்டும். இதை தனித்து செய்திட முடியாது, உடன் உழைக்கும் தொழிலாளர்களிடம் பேசுகிறார். தொழிலாளர் சங்கத்தைப் பற்றி தெரிந்து கொள்கிறார். கூட்டாக் கூலி உயர்வுக்காகப் போராடுகிறார், தனது குட்டி முதலாளித்துவ சிந்தனையில் இருந்து படிப்படியாக விடுபட்டு பாட்டாளி வர்க்க உணர்வை பெறுகிறார். பாட்டாளி வர்க்க உணர்வைப் பெற்றவுடன் சோஷலிசக் கருத்தால் ஈர்க்கப்படுகிறார்.

புறநிலை மாற்றம் முதலில் ஏற்படுகிறது இரண்டாவதாக சிந்தனையில் அது பிரதிபலிக்கிறது. ஆக இதன் மூலம் நமக்கு என்ன தெரிகிறது, சூழ்நிலையில் ஏற்படுகிற மாற்றமே சிந்தனையாக மாறுகிறது.

தனிமனித உணர்வு போலவே சமூக உணர்வும் ஏற்படுகிறது. இந்த இடத்தில் ஸ்டாலின் மார்க்சின் புகழ்பெற்ற கருத்தை மேற்கோளாகக் காட்டுகிறார்.

 

“மனிதர்களது சிந்தனை அவர்களுடைய வாழ்க்கை நிலையைத் தீர்மானிப்பதில்லை. இதற்கு மாறாக அவர்களது சமூக வாழ்நிலையே அவர்களுடைய சிந்தனையைத் தீர்மானிக்கிறது.”

பொருளாதார நிலைமைகளான புறச் சூழ்நிலைகள் “உள்ளடக்கம்” என்றும் கருத்து வழிப்பட்ட உணர்வுநிலைகள் “வடிவம்” என்றும் கூறப்படுகிறது.

மார்க்சின் கருத்துப்படி, பொருளாதார வளர்ச்சிதான் சமூக வாழ்நிலையின் “பொருளாயத அடித்தளமாக” சமூகத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது, அதே நேரத்தில் சட்டம், அரசியல், மதம், தத்துவம் போன்ற சிந்தனைகள் அடித்தளத்தின் மேற்கட்டமைப்பாக இருக்கிறது. இதிலிருந்து மார்க்ஸ் வந்தடைந்த முடிவாக ஸ்டாலின் நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.

 

“பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றமானது ஒட்டுமொத்த மேற்கட்டமைப்பையும் கூடுதலாகவோ, குறைவாகவோ வேகமாகவோ மாற்றம் கொள்ள வைக்கிறது”

அராஜகவாதிகள் கற்பனை செய்வது போல வடிவம் இல்லாமலேயே உள்ளடக்கம் சாத்தியம் என்று மார்க்ஸ் கருதினார் என்பதல்ல. வடிவம் இல்லாமல் உள்ளடக்கம் சாத்தியமற்றது. உள்ளடக்கம் முதலில் மாற்றம் அடைகிறது அதற்கு ஏற்ப வடிவம் உடனே மாற்றம் பெறாமல் பின் தங்கி இருக்கி இருக்கிறது. உள்ளடக்கத்துக்கு கனப்பொருத்தமாக வடிவம் இருப்பதில்லை என்பதே உண்மையாகும்.

புதிய உள்ளடக்கத்துக்கு ஏற்ப வடிவம் மாறாது இருப்பது மட்டுமல்லாமல் முரணாகவும் போய்விடுகிறது. இந்த முரண் உள்ளடக்கத்துக்கும் வடிவத்துக்கும் மோதலை ஏற்படுத்துகிறது. முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி சமூகத் தன்மை உடையதாக இருக்கிறது வினியோக முறை தனிச்சொத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. உற்பத்தியின் சமூகத் தன்மை என்பது உள்ளடக்கம், வினியோக முறை என்பது வடிவம். இந்த முரணே முதலாளித்துவ சமூகத்தில் மோதலுக்குக் காரணம். இந்த முரண் முற்றி இந்த உற்பத்தி முறையில் தீர்வு கிட்டாமல் சமூக மாற்றத்தைக் கோருவதே சோஷலிசப் புரட்சியாகும்.

உள்ளடக்கம் வடிவம் ஆகியவற்றை முன்வைத்து சமூக உணர்வு நிலையும் சிந்தனையும் சமநிலையில் இருக்கிறது என்று நினைப்பது கொச்சைப் பொருள்முதல்வாதம் என்கிறார் ஸ்டாலின்.

மார்க்சினுடையப் பொருள்முதல்வாதத்தின்படி, உணர்வுநிலையும் வாழ்நிலையும், கருத்தும் பொருளும், ஒரே நிகழ்ச்சிப் போக்கின் வெவ்வேறான இரு வடிவங்களாகும். இதன் காரணமாக இவ்விரு நிகழ்ச்சிப் போக்கும் ஒன்றை மற்றொன்று மறுப்பதில்லை, அவை இரண்டும் ஒரே நிகழ்ச்சிப் போக்காகவும் இல்லை. இப்படி கூறுவதினால், உள்ளடக்கத்துக்கும் வடிவத்துக்கும் இடையில் மோதல் இருக்கிறது என்ற கருத்துடன் முரண்படவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். உள்ளடக்கமும் வடிவமும் இருவடிவங்களாக இருப்பதினால்தான் மோதலே ஏற்படுகிறது. உள்ளடக்கம் முதலில் மாறுகிறது. வடிவம் அதற்கு பொருத்தமாக மாறவில்லை என்றால் பழைய வடிவம் தூக்கி எறியப்படுகிறது. இதுவே சமூகப் புரட்சிக்கான புறநிலை ஆகும்.

நமது மூளையில் உதிக்கும் உணர்வுநிலைக்கு முன்னரே இதற்குப் பொருத்தமான பொருளாயத வழியிலான மாறுதல் ஏற்பட்டு விடுகிறது என்பதை பொருள்முதல்வாத நமக்கு கூறுகிறது. ஒரு பொருளாயத மாற்றமானது விரைவிலோ அல்லது சிறிது காலம் கழித்தோ, அதற்குப் பொருத்தமான கருத்தியல் மாற்றத்தை தவிர்க்க இயலாதவாறு ஏற்படுகிறது.

இதுதான் மார்க்சினுடைய பொருள்முதல்வாதக் கோட்பாட்டின் சுருக்கமான அடிப்படை என்கிறார் ஸ்டாலின்.

பொருளாதார நிலைமைகள் முதலில் மாற்றம் ஏற்படுகிறது அதற்கு ஏற்றதான மாற்றம், மனித மூளைகளில் பின்னர் நடந்தேறுகிறது. இதன் மூலம் என்ன தெரிகிறது. மனிதர்களின் குறிக்கோள்கள் அவர்களின் மனத்தின் கற்பனைகிடையாது. புறத்தில் உள்ள பொருளாதார சூழ்நிலைமைகளின் வளர்ச்சி மனதில் பிரதிபலிக்கிறது

புறநிலையில் உள்ள பொருளாதார சூழ்நிலைகளை அலட்சியம் செய்து உருவாகும் குறிக்கோள்கள் பயனற்றவையும் ஏற்கத் தகாதவையும் ஆகும். புறநிலையில் உள்ள பொருளாதார சூழநிலைகளின் அடிப்படையில் எடுக்கின்ற குறிக்கோள்கள் சிறப்பானதும் ஏற்கக்கூடியதும் ஆகும்.

இது பொருள்முதல்வாதத்தின் முதல் முடிவு என்கிறார் ஸ்டாலின்.

மனிதர்களின் உணர்வுநிலைகளும், அவர்களுடைய பழக்க வழக்கங்களும் புறச்சூழ்நிமைகள் தீர்மானிக்கின்றன என்று பொருள்முதல்வாதம் கூறுகிறது. அப்படி என்றால், பொருளாதார உள்ளடக்கத்துக்கு பொருத்தமற்ற சட்டம், அரசியல் வடிவங்கள் அதன் மீது வலிந்து நிற்கின்றன என்றால் பொருள்முதல்வாதிகள் என்ன செய்ய வேண்டும்?

பொருளாதார உறவுகளில் தீவிர மாற்றத்தைக் கொண்டு வரவும். அத்தகைய மாற்றத்துடன் மக்களின் பழக்க வழக்கங்களிலும் அவர்களுடைய அரசியல் கட்டமைப்பிலும், தீவிர மாற்றங்கள் கொண்டு வருவதற்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கூறுகிறார். இது பொருளமுதல்வாதத்தின் இரண்டாவது முடிவு

      இதற்கு எடுத்துக்காட்டாக ஸ்டாலின், மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுதிய “புனித குடும்பம்” என்கிற நூலில் இருந்து ஒரு மேற்கோளைத் தருகிறார்.

 

"பொருள்முதல்வாதமானது.... சோசலிசத்துடன் என்ன உள்ளார்ந்த தொடர்பைக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுணர்வதற்கு பேரளவிலான ஆழ்ந்த புலமை ஒன்றும் தேவையில்லை. மனிதன் தனது அறிவு, உணர்வு, இன்னும் மற்றவை அனைத்தையும் தனது புலன்களின் மூலம் பெறுகிறான் என்றால்..

 

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?

 

புற உலகைத் தக்கபடி மாற்றியமைப்பதனால்தான், மனிதன் புற உலகில் மனிதத் தன்மையைக் காணவும், தனது நேரடி உலக அனுபவத்திலேயே உண்மையான மனிதத்தன்மையை தானே உணரவும் முடியும்.... பொருளாயதரீதியில் மனிதன் சுதந்திரமற்றவனாக இருப்பானானால்; அவன் சுயேச்சைநிலையைப் பெறுவது என்பது வேண்டாதவற்றில் ஒன்று அல்லது மற்றொன்றை தவிர்ப்பதனால் அல்லாமல்; மாறாக, தனது தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கான ஆக்கபூர்வ சக்தியை பெறுவதனால்தான் என்றால்; தனிநபர்களின் குற்றங்களுக்காக அவர்களைத் தண்டிக்காமல், அந்த சமூக விரோதக் குற்றங்கள் தோன்றுவதற்கான சூழ்நிலைமைகளை அழிக்க வேண்டும்....

 

மனிதன் சூழ்நிலைகளால்தான் வார்த் தெடுக்கப்படுகிறான் என்றால், அப்போது செய்ய வேண்டி யது என்னவென்றால், சூழ்நிலைகளையே மனிதத் தன்மை உள்ளவையாக மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான்"

(புனிதக் குடும்பம்)

      குற்றங்கள் நடைபெறுகின்றது என்றால் அதற்கான சூழ்நிலைமைகள் இருப்பதே காரணமாகும். குற்றங்கள் நிகழ்வதை தடுக்க வேண்டுமானால் கடுமையான சட்டங்களைப் போட்டால் மட்டும் போதாது, அதற்கான சூழ்நிலைகளை மாற்ற வேண்டும், அழிக்க வேண்டும். தனிநபவரை தண்டிப்பதினால் குற்றங்கள் மறைந்து போகாது. சூழ்நிலைமைகள் இருக்கும் வரை குற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

      அண்மைய எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.

      நம் நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்த தகவர். தற்கொலை என்பது சட்டத்துக்கு விரோதமானது என்று கடுமையான சட்ட நடவடிக்கைகளின் மூலம் இந்தத் தற்கொலைகளை தவிர்க்க முடியாது. விவாசாயிகள் வாழ்வாரத்துக்கான சூழ்நிலை மாற்றாமல் தற்கொலை என்பதைத் தடுக்க முடியாது. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையைத் தீர்த்தால்தான் விவசாயத் தற்கொலைகள் தடுக்கப்படும்.

மற்றொரு ருஷ்ய எடுத்துக்காட்டைப் பார்ப்போம்..

ருஷ்யாவில் நடந்த நவம்பர் புரட்சி ஒரு சிறந்த எடுத்துககாட்டாகும். சோவியத் என்கிற சோஷலிச அரசு இருக்கிறது, ஆனால் சோஷலிச நிர்மானத்துக்கு உரிய உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை, இதற்கு லெனின் என்ன செய்கிறார், சோஷலிச உற்பத்தி முறைக்கு ஏற்ற வளர்ச்சியை எட்டுவதற்கு புதிய பொருளாதாரக் கொள்கையை அமைத்து சோஷலிச உற்பத்திக்கு தயார்படுத்தினார்.

இதற்கு அடுத்து ஸ்டாலின் மார்க்சிய பொருள்முதல்வாதம் பற்றிய அராஜகவாதிகளின் கண்ணோட்டத்தைப் பற்றிக் கூறுகிறார்.

இங்கே ஸ்டாலின் ஜார்ஜிவாவில் காணப்படும் அராஜகவாதிகளைப் பற்றியே பேசுகிறார். அவர்களை குறிப்பிட்டே பேசுகிறார்.

மார்க்சிய இயக்கவியல் என்பது ஹெகலின் இயக்கவியலில் இருந்தும், மார்க்சிய பொருள்முதல்வாதம் என்பது ஃபாயர் பாக்கின் பொருள்முதல்வாதத்திடம் இருந்தும் திருத்தம் பெற்று வளப்படுத்தியது என்பது நமக்குத் தெரியும். ஹெகல் பழைமைவாதி என்பதை விமர்சிப்பதாக அவரது இயக்கவியலையும் சேர்த்து அராஜகவாதிகள் விமர்சித்தனர். அதே போல ஃபாயர் பாக்கின் சில கருத்துகளை வைத்து விமர்சிக்கும் போது அவரது பொருள்முதல்வாததையும் சேர்ந்து அராஜகவாதிகள் விமர்சிக்கின்றனர்.

சமூக மாற்றம் என்பது சரியான மதங்களின் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று ஃபாயர்பாக் கருதினார். மனிதனை தெய்வமாக்கவும் செய்தார். இதுபோன்ற ஃபயர்பாக்கின் தவற்றை மார்க்சும் எங்கெல்சும் தான், முதன்முறையாக வெளிப்படுத்தினர். ஏற்கெனவே திரைகிழித்துக் காட்டப்பட்ட தவறுகளை மீண்டும் திரைகிழ்த்துக் காட்டுவதில் அரஜகவாதிகளின் ஒரு நோக்கம் ஒளிந்திருக்கிறது. அது என்னவென்றால், மார்க்சும் எங்கெல்சும் குறிப்பிட்ட ஃபாயர்பாகின் தவறை கூறுவதின்மூலம் அவரது பொருள்முதல்வாதத்தையும் குறைகூற முற்படுகின்றனர். இத்தகைய தந்திரங்களின் மூலம் அராஜகவாதிகள் தங்களது அறியாமையையே வெளிப்படுத்துகின்றனர்.

மேலும் அராஜகவாதிகள் மார்க்சின் பொருள்முதல்வாததை “தொப்பை கோட்பாடு "Belly Theory" என்கிற பழையபாட்டை பாடுகின்றனர். அதாவது மார்க்சியப் பொருள்முதல்வாதம் வாழ்க்கை ஆதார உற்பத்தியைப் பற்றி பேசுவதை இவ்வாறு அவர்கள் திரிக்கின்றனர்.

அராஜகவாதிகள் எவ்வாறு திரித்துள்ளனர் என்பதைப் பார்ப்போம்.

சமூக வாழ்க்கையை சாதிப்பதற்கான ஒரே வழிமுறை தின்பதும் பொருள் உற்பத்தியும்தான் என்று சொல்வது தவறு. தின்பதினாலும் பொருளாதா சூழ்நிலைகளாலும் சித்தாந்தம் தீர்மானிக்கப்படுமானால், பெரும்தீனி தின்பவர்களே மேதைகளாவர். இது அராஜகவாதிகளின் குற்றச்சாட்டடு.

ஆ..கா.. எவ்வளவு எளிதாக மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் பொருள்முதல்வாதத் தத்துவத்தை அராஜகவாதிகள் நிராகரிக்க நினைத்துள்ளனர்.

ஸ்டாலின் அராஜகவாதிகளைப் பார்த்துக் கேட்கிறார், “தின்பதுதான் சித்தாந்தத்தை தீர்மானிக்கிறது என்று எங்கே, எப்போது, எவ்வுலகில், எந்த மார்க்ஸ் சொன்னார்? சொல்லுங்கள் கனவானகளே, சொல்லுங்கள்!!...   பொருளாதார நிலைமைகள்தான் மனிதர்களின் உணர்வுநிலையை, அவர்களின் சித்தாந்தத்தைத் தீர்மானிக்கிறது என்று மார்க்ஸ் சொன்னது உண்மைதான். ஆனால் தின்பது பொருளாதார சூழ்நிலைகளும் ஒன்றே என்று யார் சொன்னார்கள்.” 

-என்று ஸ்டாலின் கட்டமாகக் கேட்கிறார்.

தின்பது உடலியல் நிகழ்ச்சிப் போக்காகும், இது, மனிதர்களின் பொருளாதார நிலைமைகள் போன்ற சமூக வழியிலான நிகழ்ச்சிப் போக்கில் இருந்து அடிப்படையிலேயே வேறுபடுகிறது என்பது அராஜகவாதிகளுக்குத் தெரியாதா என்ன? வேண்டும் என்றே அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

வாழ்வாதாரத்துக்காக தான் அம்பானியும் தொழில் புரிகிறார். அவர் எவ்வளவு சம்பாதித்தாலும் எவ்வளவு சேகரித்தாலும் பணத்தை உண்பதில்லையே, வாழுவதற்கு வீடு, உடுத்துவதற்கு உடைகள், உண்பதற்கு உணவு. இவைகள்தான் நமக்கும் தேவை அம்பானி போன்றோர்களுக்கும் தேவை. நாம் நான்கு பேர் வாழக்கூடிய வீட்டில் 8-10 பேர் வாழ்கிறோம். அம்பானி போன்றோர்கள் 500 - 800 பேர் வாழக்கூடிய இடத்தில் 5 பேர் வாழ்கிறார்கள்.

இந்த 5 பேருக்கு சமைப்பவர்களின் எண்ணிக்கை ஒரு ஓட்டலில் பணிபுரிவர்களின் எண்ணிக்கைத் தொடுகிறது. உணவும் ஓட்டலில் இருப்பது போல பலவிதங்களில் இருக்கிறது. இதை வைத்து அம்பானி போன்றேர்கள் தின்பதே பிரதானம் என்ற கொள்கை உடையவர்கள் என்று கூறப்படுகிறதா? இல்லையே உழைப்பாளர்களைப் பார்த்துதான் இப்படி கேட்கப்படுகிறது.

அராஜகவாதிகள் கருத்தின்படி மார்க்சின் பொருள்முதல்வாதம் இணைவு நிலைவாதமாக இருக்கிறது. பொருள்முதல்வாத ஒருமைவாதம் மாறுவேடம் போட்ட இருமைவாதமாகவும், இயக்கவியல் மறுப்பு வாதமாக இருக்கிறது. மார்க்ஸ் இருமைவாதத்தில் வீழ்கிறார். உற்பத்தி உறவுகளை பொருளாதார வழியிலானது என்கிறார்.

மனித முயற்சி விருப்பம் என்பதை மார்க்ஸ் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவில்லை. இதுவே அராஜகவாதிகள் மார்க்சின் மீது வைக்கும் குற்றச்சாட்டு.

ஸ்டாலின் ஒவ்வொன்றாக அராஜகவாதிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கிறார்.

அராஜகவாதிகள் கூறுகிற இணைவுநிலைவாதத்துக்கும் (Parallelism) மார்க்சியத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இணைவுநிலைவாதம் உண்மையில் மார்க்சியத்தை மறுக்கிறது. இணைவுநிலைவாதனது பொருளாயத வழிப்பட்டதோ கருத்து நிலையானதோ, இவை இரண்டும் எந்த ஒன்றும் முதலில் வருவதில்லை. அதாவது . இதில் முதலாவது இரண்டாவது என்று பிரிக்க முடியாது. அக்கம் பக்கமாக வளர்ச்சி அடைகிறது என்பதே இணைவுநிலைவாதம் உறுதியாகக் கூறுகிறது. ஆனால் பொருள்முதல்வாதம் பொருளாயத நிலைமை முதன்மையானது கருத்தியல் இரண்டாவதும் முதல் நிலையால் தீர்மானிக்கப்பட்டதும் என்கிறது. பொருளாயத நிலைமை உள்ளடக்கம் கருத்தியல் வடிவம். உள்ளடக்கமே வடிவத்தைத் தீர்மானிக்கிறது.

இது அராஜகவாததிகளுக்கு ஸ்டாலின் அளித்த முதல் பதில்.

“உற்பத்தி உறவுகள் பொருளாயத வழியிலானவை என்றும் மனித முயற்சியையும் விருப்பத்தையும் மாயையான கற்பனை” என்று மார்க்ஸ் கருதுவதாக அராஜகவாதிகள் கூறுகின்றனர். மார்க்ஸ் இப்படி கூறினா;h என்று பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் இந்தக் கூற்றின்படி அவர் எப்படி இருமைவாதியாக முடியும். இருமைவாதிகள் பொருளாயதத் தன்மை கருத்தியல் ஆகிய இரண்டையும் சம முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மேலும் இவ்விரண்டும் எதிரெதிரான போட்பாடுகளாகக் கருதுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அராஜகவாதிகள் கூறுகிறபடி மார்க்ஸ், பொருளாயதத் தன்மைக்கு முக்கியத்துவம் தருகிறார், கருத்தியல் தன்மையை கற்பனையானதாக இருப்பதினால் முக்கியத்துவம் தரவில்லை என்றே வைத்துக் கொண்டாலும் மார்க்ஸ் எப்படி இருமைவாதியாக கூற முடியும்.

இது அராஜகவாததிகளுக்கு ஸ்டாலின் அளித்த இரண்டாவது பதில்.

பொருளாயத ஒருமைக்கும் (Materialist Monism) இருமைவாதத்துக்கும் (Dualism) இடையில் என்ன தொடர்பு இருக்க முடியும். அராஜகவாதிகள் இருக்க முடியும் என்கின்றனர்.

      ஒருமைவாதமானது இயற்கை அல்லது வாழ்க்கை தொடர்பான ஒரே கோட்பாட்டில் இருந்து எழுகிறது. பொருளாயத வடிவம் கருத்தியல் வடிவம் ஆகிய இரண்டும் இந்தக் கோட்பாட்டில் இருக்கிறது, ஆனால் இருமைவாதமானது பொருளாயத வடிவம் கருத்தியல் வடிவம் இரண்டும் தனித்தனியானது என்கிற இரு கோட்பாட்பாடுகளில் இருந்து எழுகிறது. கருத்தியல் தன்மை, பொருளாயத தன்மை ஆகிய இரண்டும் ஒன்றையொன்று இருமைவாதம் மறுக்கிறது. அப்படி இருக்க பொருளாயத ஒருமைவாதமும் இருமைவாதமும் அராஜகவாதிகள் கூறுவது போல எப்படி உறவு இருக்க முடியும்.

இது அராஜகவாததிகளுக்கு ஸ்டாலின் அளித்த மூன்றாவது பதில்.

“மனிதனின் முயற்சியும் விருப்பமும் மாயையானது என்றும் கற்பனையானது என்றும்” மார்க்ஸ் கூறியதாக அராஜகவாதிகள் கூறுகின்றனர். ஸ்டாலின் அவர்களைப் பார்த்து மார்க்ஸ் எந்த இடத்தில் இவ்வாறு கூறியுள்ளார் என்று கேள்வி கேட்கிறார்.

பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் மனிதனின் முயற்சியும் விருப்பமும் இருக்கிறது என்று மார்க்ஸ் விவரித்துள்ளார் என்பது உண்மையே. சாய்வு நாற்காலியில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு எதார்த்த உலகுக்குப் பொருந்தாத தத்துவங்களை பேசுவது தோல்வி அடையும், இந்தத் தத்துவங்களை கற்பனையானது என்று மார்க்ஸ் கூறியது உண்மை. பொதுவான மனித முயற்சியே கற்பனையானது என்று மார்க்ஸ் கூறியதாக எப்படி பொருள் கொள்ள முடியும்.

மனிதனின் முயற்சியைப் பற்றி, அரசியல் “பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்கிற நூலுக்கு எழுதிய முன்னுரையில் மார்க்ஸ், “மனிதகுலம் தன்னால் சாதிக்கக் கூடியதான கடமைகளை மட்டுமே எப்போதும் மேற்கொள்ளுகிறது” என்கிற கருத்தை அராஜகவாதிகள் படித்ததில்லையா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார்.

பொதுவாகக் கூறுவதானால் எதார்த்தத்துக்கு பொருத்தமற்ற குறிக்கோளையே நடைமுறைப்படுத்த முடியாது என்கிற பொருளில் மார்க்ஸ் கூறியுள்ளார். இந்த அராஜகவாதிகள் என்ன பேசுகிறோம் என்பதை அறியவில்லை அல்லது அவர் வேண்டுமென்றே உண்மையை திரித்தி வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

.இது அராஜகவாததிகளுக்கு ஸ்டாலின் அளித்த நான்காவது பதில்.

"மனிதனது முயற்சி, விருப்பம் ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் இல்லை” என்று மார்க்சும் எங்கெல்சும் கருதினார் என்று உங்களுக்கு யார் கூறினார்கள். எந்த இடத்தில் இப்படி எழுதியுள்ளனர் என்று நீங்கள் சுட்டிக்காட்டவில்லையே? என்று அராஜகவாதிகளைப் பார்த்து ஸ்டாலின் கேட்கிறார்.

“லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புருமேர்”, “பிரான்சில் வர்க்கப் போராட்டம்”, “பிரான்சில் உள்நாட்டுப் போர்” போன்ற நூல்களில் மனிதனது முயற்சியையும் விருப்பத்தையும் பற்றி எழுதியிருக்கிறார்கள். பாட்டாளிகளின் முயற்சியையும் விருப்பத்தையும் சோஷலிச உணர்வில் வளர்ப்பது பற்றி மார்க்சும் எங்கெல்சும் பேசியிருக்கிறார்களே.

மார்க்ஸ் மனிதனது முயற்சியையும் விருப்பத்தையும் மறுக்கவில்லை, இவை இரண்டும் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் தோன்றியது என்று கூறியது உண்மைதான். ஆனால் மனிதனது முயற்சியும் விருப்பமும் பொருளாதார நிலைமையின் மீது தாக்கம் செலுத்தவில்லை என்று கூறுவதாக பொருள்கொள்ள முடியுமா என்ன?

அராஜகவாதிகள் மற்றொரு குற்றச்சாட்டை மார்க்ஸ் மீது வைக்கின்றனர். உள்ளடக்கம் இல்லாமல் வடிவத்தைப் பற்றி நினைத்துப பார்க்க முடியாது, ஆகவே உள்ளடக்கத்துக்குப் பின்னரே வடிவம் தோன்றுகிறது என்று கூறமுடியாது. உள்ளடக்கமும் வடிவமும் இணைந்தே இருக்கின்றன. அப்படி இல்லை என்றால் ஒருமைவாதம் என்று பேசுவது அபத்தமானது என்கின்றனர் அராஜகவாதிகள்.

அராஜகவாத அதிமேதாவிகள் மீண்டும் மீண்டும் எப்படி குழப்பம் அடைந்திருக்கிறார்கள். வடிவம் இல்லாமல் உள்ளடக்கத்தை நினைத்துப் பார்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் நிலவுகின்ற வடிவம் நிலவுகின்ற உள்ளடக்கத்துக்கு அனைத்து நேரங்களிலும் முழுமையாக ஒத்திருப்பதில்லை என்பதும் உண்மைதானே. வடிவம் உள்ளடக்கத்துக்குப் பின்தங்கி இருக்கிறது. உள்ளடக்கமே முதலில் மாறுகிறது. புதிய உள்ளடக்கத்துக்கு பழைய வடிவம் பொருத்தமற்றுப் போவதே, இரண்டுக்கும் இடையே மோதலை ஏற்படுத்துகிறது. புதிய உள்ளக்கத்துக்குப் பொருத்தமற்ற பழைய வடிவம் தூக்கி எறியப்படுகிறது. இதுதானே உண்மை.

சமூகப் புரட்சி என்பது மனிதனது தனிப்பட்ட முயற்சி அல்லது விரும்பம் சார்ந்ததது அல்ல. அது உற்பத்தி முறையில் காணப்படும் புதிய உள்ளடக்கத்துக்கும் பழைய வடிவத்துக்கும் இடையே ஏற்படும் மோதலே சமூகப் புரட்சியாக வெடிக்ககிறது. இந்தப் புரிதலில்தான் மார்க்சிய பொருள்முதல்வாதத்தின் புரட்சிகர உணர்வு வெளிப்படுகிறது. புரட்சி என்பது தனிமனித விரும்பம் சார்ந்தது அல்ல மனிதனின் விருப்பம் முயற்சி என்பது புறநிலையின் தன்மைக்கு ஏற்பவே உருவாகிறது என்பதைத்தான் பொருள்முதல்வாதம் நிரூபிக்கிறது. அராஜகவாதிகளுக்கு இது புரியவில்லை என்றால் அது நிச்சயமாக பொருள்முதல்வாதத்தின் தவறு கிடையாது, அராஜகவதிகளின் தவறே ஆகும்.

இது அராஜகவாததிகளுக்கு ஸ்டாலின் அளித்த ஐந்தாவது பதில்.

ஸ்டாலின் இந்த அத்தியாயத்தில் மார்க்சின் பொருள்முதல்வாதத்தை அராஜகவாதிகள் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் பொருள்முதல்வாத ஒருமை என்ன கூறுகிறது என்பதையும் எளிமையாக விளக்கி உள்ளார்.

ஸ்டாலின் எழுதிய “அராஜகவாதமா? சோஷலிசமா?” (மூன்றாம் – இறுதிப் பகுதி)

No comments:

Post a Comment