Tuesday, 11 April 2017

ஏப்ரல் ஆய்வுரைகள்- லெனின் (நூல் அறிமுகம்)

(இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள், இரட்டை ஆட்சி, செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள், நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்.)

-இந்நூல் என் சி பி எச் புத்தக நிறுவனத்தினால் 1967ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது-

நாடு கடந்து வாழ்ந்து வந்த லெனின், 1917ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் பெத்ரோகிராத்திற்கு சென்றார். புரட்சிகர ருஷ்யா லெனினை உற்சாகத்துடன் வரவேற்றது.

       பின்லாந்து ரயில் நிலையத்தில் வந்திறங்கிய லெனினை வரவேற்க தொழிலாளர்களும் விவசாயிகளும் மக்களும் குழுமியிருந்தனர். தரைப்படை, கடற்படை வீரர்களின் புரட்சிகரப் பிரிவுகள், லெனினுக்கு ராணுவ மரியாதையை அளித்தன. கூடியிருந்த மக்களிடம் லெனின் உரை நிகழ்த்தினார்.

       பெத்ரோகிராத் வந்தடைந்த உடனே அடுத்த நடவடிக்கைகளில் இறங்கினார். ஏப்ரல் மாதம் 4ஆம் நாள் போல்ஷிவிக்குகளின் கூட்டத்தில், புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்தினார். பெத்ரோகிராத் வருவதற்காக ரயிலில் பயணிக்கும்போது லெனின் இதனை எழுதினார். இந்த ஆய்வுரையை இரண்டு இடங்களில் நிகழ்த்தினார். போல்ஷிவிக்குகள் கூடியிருந்த கூட்டத்திலும், தவ்ரீதா மாளிகையில் போல்ஷிவிக்குகள் மற்றும் மென்ஷிவிக்குகள் சேர்ந்திருத்த கூட்டத்திலும் இவ்வுரையை நிகழ்த்தினார். இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (1917ஆம் ஆண்டு எப்ரல் 4-5) என்ற தலைப்பில் இந்த ஆய்வுரை பிராவ்தாவில் ஏப்ரல் 7ஆம் நாள் வெளியிடப்பட்டது. இவையே பின்னால் ஏப்ரல் ஆய்வுரைகள் என்று புகழ்பெற்றது. இந்த ஆய்வுரையில் கூறிய கருத்தை விரிவாக்கி எழுதிய செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள் (ஏப்ரல் 8-13), நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (ஏப்ரல் 10) ஆகியவற்றை இணைத்து ஏப்ரல் ஆய்வுரைகளாக கூறுவது வழக்கம்.

இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்

                இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் என்ற கட்டுரையில் பத்து ஆய்வுரைகளை வைக்கிறார் லெனின்.

1) தற்போது ஏற்பட்ட புரட்சியில் தோன்றிய இடைக்கால அரசு, முதலாளித்துவத் தன்மை கொண்டதாக இருப்பதனால் கொள்ளைக்கார ஏகாதிபத்தியப் போராகவே தொடர்கிறது. இதன் காரணமாக “புரட்சிகரப் பாதுகாப்புவாதத்திற்கு” என்ற முழக்கத்தின் மூலம் இந்த இடைக்கால அரசை ஆதரிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறார். இந்தப் புரட்சிகரப் பாதுகாப்புவாதத்தில் நம்பிக்கை வைத்துள்ள மக்களின் நேர்மையைச் சந்தேகிக்க முடியாது என்றும் கூறுகிறார். அவர்களிடம், முதலாளித்துவ வர்க்கத்தின் வார்த்தைகளால் ஏமாற்றப்படுவதை, விடாப்பிடியாகவும், பொறுமையுடனும் விளக்கிக் கூற வேண்டுவது அவசியமானதாகும். மூலதனத்தை வீழ்த்தாமல் இந்தப் போரை நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்ட முடியாது.

“மூலதனத்தை வீழ்த்தாமல் இந்தப் போரை உண்மையிலேயே ஒரு ஜனநாயகப்பூர்வமான சமாதானத்தோடு, வன்முறையால் திணிக்கப்படாத ஒரு சமாதானத்தோடு முடித்துக் கொள்வது சாத்தியமல்ல என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.” 1

2, தற்போதைய புரட்சியின் முதல் கட்டத்தின் பிரத்தியேக நிலைமைகளை கூறுகிறார். பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வின் ஒழுங்கமைப்பு போதாமையினால், அதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்திடம் சென்று விட்டது. புரட்சியின் இரண்டாவது கட்டமாக ஆட்சி அதிகாரம் பாட்டாளி மற்றும் விவசாயிகளிடம் வந்தடைய வேண்டும்.

3) இடைக்கால அரசின் பிரமைகளை அம்பலப்படுத்த வேண்டும். இந்த அரசினுடைய வாக்குறுதிகளின் பித்தலாட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும்.

4)தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளில் போல்ஷிவிக்குகள் சிறுபான்மையாகவே இருக்கின்றனர். மக்கள் சோஷலிஸ்டுகள் என்ற குட்டி முதலாளித்துவ கட்சியினர், பல்வேறு நரோத்னிக்கு குழுக்களையும் இணைத்து நிறுவிய சோஷலிஸ்ட்-புரட்சியாளர் கட்சியினர் போன்றோர்களே பெரும்பான்மை இடங்களில் அமர்ந்துள்ளனர். இவர்கள் இடைக்கால அரசை மறைமுகமாக ஆதரித்தனர். முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்குக்கு இவர்கள் பணிந்து கிடக்கின்றனர் என்பதை பாட்டாளி வர்க்கத்திடம் அம்பலப்படுத்த வேண்டும்.

5) தொழிலாளர்களின் பிரதிநிதிகளடங்கிய சோவியத் தோன்றிய பிறகு நாடாளுமன்றக் குடியரசுக்குத் திரும்புதல் என்பது பின்நோக்கிச் செல்வதாகும். தேர்வு செய்யப்படவும் எந்த நேரமும் திரும்பி அழைக்கப்படக் கூடியவர்களுமான  பிரதிநிதிகளடங்கிய, அடிமுதல் முடிவரை தொழிலாளர், விவசாயத் தொழிலாளர் ஆகியோர்களைக் கொண்ட சோவியத்துகளின் குடியரசு வேண்டும். இவர்களின் ஊதியம் ஒரு தொழிலாளியின் சாராசரி ஊதியத்தைவிடக் கூடுதலாக இருக்கக் கூடாது.

6) நாட்டில் உள்ள நிலம் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படும். வட்டார சோவியத்துகள் நிலத்தை விநியோகிக்கும். பெரிய எஸ்டேட்டுகள் ஒவ்வொன்றிலும் மாதிரிப் பண்ணைகள் அமைக்கப்படும்.

7) நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளையும் உடனடியாக தனியொரு தேசிய வங்கியில் இணைத்தல்.

8)“சோஷலிசத்தைப் “புகுத்துவது” எமது உடனடிக் கடமை அல்ல, ஆனால் சமூக உற்பத்தியையும் பொருட்களின் விநியோகத்தையும் மட்டும் உடனடியாக தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளின் கண்காணிப்புக்குள் கொண்டு வருவோம்”.

9) கட்சிக் காங்கிரசை கூட்டுவது, வேலைத்திட்டத்தை மாற்றுவது, பாரிஸ் கம்யூனை முன்மாதிரியாகக் கொண்ட அரசமைத்தல், மற்றும் கட்சியின் பெயரை மாற்றுவது.

10)  சமூக-தேசிய வெறியர்களையும், நடுநிலைவாதிகளையும் எதிர்க்கின்ற ஒரு புதிய அகிலம் உருவாக்குதல்.

இந்த பத்து ஆய்வுரைகளும் ஏப்ரல் மாதத்தில் 7ஆம் நாளில் பிராவ்தாவில் வெளிவந்ததன.

இரட்டை ஆட்சி

                ருஷ்யாவில் இரட்டை ஆட்சி ஏற்பட்டதின் சூழ்நிலைமையைப் பற்றி இரட்டை ஆட்சி என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை லெனின் எழுதினார். இது ஏப்ரல் மாதம் 9ஆம் நாளில் பிராவ்தாவில் வெளியிடப்பட்டது. இதில் தற்கால சூழ்நிலையைப் பற்றிய விளக்கம் கொடுத்து அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு லெனின் அழைப்புவிடுத்தார்.
               
                இந்த இரட்டை ஆட்சி என்கிற யதார்த்தத்தை முதலில் ஏற்றுப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
:
“நமது புரட்சியின் மிகவும் குறிப்பிடத்தக்கதான இயல்பு என்னவென்றால் இது இரட்டை ஆட்சியைக் கொண்டுவந்திருக்கிறது என்பதே. இந்த உண்மையை முதலாவதாயும் முதன்மையாயும் கிரகித்துக் கொள்ள வேண்டும், இது புரிந்து கொள்ளப்படா விட்டால் நாம் முன்னேற முடியாது. பழைய “சூத்திரங்களை” உதாரணமாக போல்ஷிவிசத்தின் சூத்திரங்களை எவ்வாறு நிறைவு செய்வது, திருத்தம் செய்வது என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும். மொத்தத்தில் அவை சரியாகவே இருந்தன என்ற போதிலும் அவற்றின் ஸ்தூலமான செயலுருவம் வேறாக மாற்றம் அடைந்திருக்கிறது. ஓர் இரட்டை ஆட்சி குறித்து இதற்கு முன்னால் எவருமே நினைக்கவில்லை, அல்லது நினைத்திருக்கவும் முடியாது.” 2

                இதற்கு அடுத்து இரட்டை ஆட்சியின் தன்மையை விவரிக்கிறார். முதலாளித்துவ வர்க்கத்தின் அரசுக்குப் பக்கத்தில் தொழிலாளர் மற்றும் படைவீரர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத் இருக்கிறது. இந்த சோவியத் பலவீனமாகவும், முளைப்பருவத்திலும் இருந்தாலும் உண்மையில் வளர்ந்து வருகிற ஓர் அரசாகும். இந்த அரசு கீழிருந்து மக்களின் நேரடியான முன்முயற்சியின் அடிப்படையில் அமைந்த புரட்சிகரமான சர்வாதிகாரமாகும். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும் நடாளுமன்றத்தைப் போன்றதல்ல. இது பாரிஸ் கம்யூன் வழியில் வந்தது என்றும், அதன் தன்மைகளைத் தொகுத்தும் தருகிறார்.

“இந்த ஆட்சி 1871 பாரிஸ் கம்யூனுடையது போன்ற அதே மாதிரியானது. இந்த மாதிரியின் அடிப்படை குணாம்சங்களாவன,

1) ஆட்சியின் மூலாதாரம் முன்னதாக விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டதான ஒரு சட்டம் அல்ல, மாறாக கீழிருந்து அந்தந்த இடங்களில் மக்கள் மேற்கொண்டதன் நேரடி முன்முயற்சி, நடப்புத் தொடரைப் பயன்படுத்திக் கூறினால் நேரடிப் “பற்றுகை”,

2) மக்களிடமிருந்து விலகி நின்று மக்களுக்கு எதிராக இயக்கப்படும் அமைப்புகளான போலீசையும், ராணுவத்தையும் அகற்றி அதற்குப் பதில் மக்கள் அனைவரையும் நேரடி ஆயுதமேந்தச் செய்தல், இத்தகைய ஆட்சியின் கீழ் உள்ள அரசில் ஒழுங்கமைதியை ஆயுதமேந்திய தொழிலாளர்களும் விவசாயிகளும் தாமாகவே ஆயுதமேந்திய மக்களும் கட்டிக் காப்பார்கள்,

3) பணித்துறையாளர், அதிகார வர்க்கத்தார் இதே போன்று மக்கள் தாமாகவே நடத்தும் நேரடி ஆட்சியால் மாற்றீடு செய்யப்படுவர் அல்லது குறைந்தபட்சம் தனிப்பட்ட கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுவர், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணித்துறையாளர்கள் ஆவது மட்டும் அல்ல, ஆனால் மக்களின் முதல் கோரிக்கையின் பேரில் திருப்பி அழைக்கப்படுவதற்கும் உட்பட்டோராவர், அவர்கள் சாமான்ய இயக்கிகள் நிலைக்குத் தாழ்த்தப்படுவர், உயர்ந்த முதலாளித்துவ விகிதத்தில் ஊதியம் பெறும் “தொழில்களை” வைத்திருக்கும் தனிச்சலுகை பெற்ற குழு என்பதிலிருந்து தாழ்த்தப்பட்டு, அவர்கள் “சேவைத் துறையின்” விசேஷ “பிரிவின்” ஊழியர்களாவர், அவர்களது ஊதியம் ஒரு திறம்படைத்த தொழிலாளியின் சாமான்ய சம்பளத்தைவிட அதிகமாக இருக்காது.”3

                சோவியத்தின் தனிமாதிரியான அரசை இவ்வாறு லெனின் விளக்கியிருக்கிறார். இடைக்கால அரசு உடனடியாக வீழ்த்தப்பட வேண்டுமா? என்ற கேள்வியை அவரே எழுப்பி அதற்கு பதிலளிக்கிறார்.

“இடைக்கால அரசாங்கம் உடனடியாக வீழ்த்தப்பட வேண்டுமா? என்ற கேள்வியை “அப்படியே” முன்வைக்கும் போது, நமது தோழர்களும் கூட ஏன் இத்தனை பல தவறுகளைச் செய்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிய வரும்.

இதற்கு எனது விடை:
1) அது வீழ்த்தப்பட வேண்டும், காரணம் அது ஒரு சிலராட்சி, முதலாளித்துவ அரசாங்கம், மக்கள் அரசாங்கமல்ல, மேலும் அதனால் சமாதானம், உணவு அல்லது முழு சுதந்திரத்தை வழங்க முடியவில்லை.

2) அதை இந்தக் கணத்தில் வீழ்த்த முடியாது. ஏனெனில் அது, தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளுடன், முதன்மையாயும் பிரதான சோவியத்தான பெத்ரோகிராத் சோவியத்துடன் நேரடியாயும் நேரடியின்றியும், ஒரு சகஜமான மற்றும் மெய்யான உடன்பாட்டின் மூலம் அதிகாரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

3) பொதுவாக அதை சாதாரண வழியில் “வீழ்த்த” முடியாது, காரணம் அது இரண்டாவது அரசு – தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்- முதலாளித்துவ வர்க்கத்திற்கு அளிக்கும் “ஆதரவின்” மீது நிற்கிறது.” 4

                இறுதியாக லெனின் கூறுகிறார், குட்டி முதலாளித்துவ பிரமைகளுக்கு எதிராக, தேசியவெறிக்கு எதிராக, சொற்ஜாலம் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தை சார்ந்து இருப்பதற்கு எதிரான போராட்டத்தை நடத்துவோம். பாட்டாளி வர்க்க இயல்புடைய கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்டு முறியடிப்போம். பாட்டாளி வர்க்கப் பணிகளுக்காக அணிகளை ஒன்றுதிரட்டி போராடுவோம். குட்டி முதலாளித்துவ மயக்கங்களில் இருப்பவர்களின் மனங்களில் தெளிவு ஏற்படுத்தப் போராடுவோம், முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கில் இருப்பவர்களிடம், நமது வர்க்க நலனுக்கு உகந்த அரசாக செயற்படாத இடைக்கால அரசை அப்பலப்படுத்துவோம். இவ்வரசு சமாதானம், உணவு அல்லது முழு சுதந்திரம் வழங்காததை மக்களுக்கு சுட்டிக்காட்டி விழிப்படையச் செய்வோம்.

செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள்

ஏப்ரல் மாதத்தில் எழுதிய கட்டுரைகளில் செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள் அதிக விவரங்களைக் கொண்டுள்ளது. நிதானமாகவும், முழுமையாகவும் இதனைப் படிக்க வேண்டும்.

நமது போதனை செயலுக்கு வழிகாட்டியே அன்றி வறட்டுச் சூத்திரம் அல்ல என்று மார்க்சும் எங்கெல்சும் கூறியதை வலியுறுத்தி லெனின் கூறுகிறார்

“இந்தச் சூத்திரங்கள் அதிகபட்சமாகச் சொன்னால் பொதுவான கடமைகளை வரையறுக்க மட்டுமே முடியும், இந்தப் பொதுவான கடமைகள் சரித்திர இயக்கப் போக்கின் குறிப்பிட்ட ஒவ்வொரு காலப்பகுதிக்கும் உரிய ஸ்தூலமான பொருளாதார அரசியல் நிலைமைகளால் அவசியம் மாற்றப்படவே செய்யும்” 5

மார்க்சியப் பகுப்பாய்வைப் பற்றி முதலிலேயே லெனின் சொல்லிவிடுகிறார்.

“வர்க்கங்களுக்கு இடையிலான பரஸ்பர உறவுகளையும் ஒவ்வொரு வரலாற்று நிலைமைக்கும் தனிச்சிறப்பாயுள்ள ஸ்தூலமான இயல்புகளையும் பற்றிக் கறாராகத் துல்லியமான எதார்த்த வழியில் சரிபார்க்கத்தக்க பகுப்பாய்வு செய்யுமாறு மார்க்சியம் கோருகிறது.6

இதன் அடிப்படையில், ருஷ்யாவின் ஸ்தூலாமான இந்த இரட்டை ஆட்சி நிலைபெற்றிருப்பதை மனதில் கொண்டே நமது செயற்பாட்டை வகுத்துக் கொள்ள  வேண்டும். பிப்ரவரிப் புரட்சிக்கு முன்பு பிரபுத்துவ நிலச்சுவான்கள் கையில் அரசு இருந்தது. புரட்சியின் போது வேறு வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கத்தின் கைக்கு மாறியுள்ளது. இந்த அளவுக்கு, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ருஷ்யாவில் முடிந்து முற்றுப் பெற்றுள்ளது என்பதை கூறுகிறார். இந்தக் கூற்றை நிறுவுவதே ஏப்ரல் கட்டுரைகளின் பணியாகும்.

“1917ஆம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் புரட்சிக்கு முன்பு ருஷ்யாவின் அரசு அதிகாரம் பழைய வர்க்கத்தின் கையில், அதாவது நிக்கொலாய் ரொமானவ் தலைமை தாங்கிய பிரபுத்துவ நிலச்சுவான்தார்கள் கையில் இருந்தது.

இப்புரட்சிக்குப் பிறகு அதிகாரம் வேறு ஒரு வர்க்கத்தின், ஒரு புதிய வர்க்கத்தின், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் கையில் இருக்கிறது.

இரண்டு வகையிலும், சரியான விஞ்ஞான அர்த்தத்திலும், நடைமுறை அரசியல் அர்த்தத்திலும், அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்தின் கையிலிருந்து மற்றொன்றுக்கு வந்து சேருவது தான் புரட்சியின் முதற் பெரும் அடிப்படை அறிகுறி.

இந்த அளவுக்கு, முதலாளித்துவ அல்லது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ருஷ்யாவில் முடிந்து முற்றுப் பெற்றுவிட்டது.”7

லெனினது இந்த முடிவை ஏற்காமல், சில போல்ஷிவிக்குகள் ஆட்சேபித்தனர். இவர்கள் பழைய போக்கையே பிடித்துக் கொண்டிருக்கிறபடியால் இவர்களை பழைய போல்ஷிவிக்குகள் என்கிறார் லெனின். பாட்டாளி, விவசாயி ஆகிய வர்க்கங்களின் ஜனநாயக சர்வாதிகாரத்தின் மூலமாகத்தான் முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றிட முடியும் என்றுதானே இதுவரை சொல்லி வந்துள்ளோம். அது இன்னும் தொடங்கக்கூட இல்லை. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முற்றுப் பெற்றுவிட்டதா? என்பதே இவர்களின் ஆட்சேபம்.

இதற்கு பதிலாக லெனின்:-
“போல்ஷிவிக்கு முழக்கங்களும் கருத்துகளும் பொதுப்படையாய் வரலாறு முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் ஸ்தூலமான விவகாரங்கள் வேறு விதமாக உருவாகியுள்ளன, அவை யாரும் எதிர்ப்பாத்திருக்கக் கூடிய அளவுக்கு மேலாகத் தனிமாதிரியாகவும், சிறப்பாகவும் பலவாறாகவும் உருவாகியுள்ளன.

இந்த உண்மையைப் புறக்கணிப்பது அல்லது பார்க்கத் தவறுவது என்பதற்கு பொருள், புதிய உயிர்ப்புள்ள எதார்த்தத்தின் பிரத்தியேக இயல்புகளைப் பயில்வதற்குப் பதிலாகப் பொருள் விளங்காமல் மனப்பாடம் செய்து கொண்ட சூத்திரத்தை திருப்பிச் சொல்லி, நம் கட்சியின் வரலாற்றில் ஏற்கெனவே ஒரு தடமைக்கு மேலாகவே எவ்வளவோ வருந்தத்தக்க பாத்திரம் வகித்த அந்தப் “பழைய போல்ஷிவிக்குகளைப்” பின்பற்றிச் செல்வதேயாகும்.” 8

                மாறிய சூழ்நிலைக்கு ஏற்ப செயற்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். நேற்றைய (பழைய) முடிவுகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. மாறிய சூழ்நிலைக்கு ஏற்ப செயற்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்திடவில்லை என்றால் உயிர்ப்புள்ள மார்க்சியத்தை உயிரற்ற எழுத்துகளுக்கு பலியிடுவதாகிவிடும்.

“ஒரு மார்க்சியவாதி உண்மையான வாழ்க்கையை, எதார்த்தத்தின் உண்மையான நிலவரங்களைக் கண்டுணர்ந்து கொள்ள வேண்டும், நேற்றைய கோட்பாட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது (not cling to a theory of yesterday). அது எல்லாக் கோட்பாடுகளையும் போல் அதிகபட்சமாக போனால் பிரதானமானதையும் பொதுவானதையும் மட்டுமே குறிக்கக் கூடியது, வாழ்க்கையை அதன் எல்லாச் சிக்கலோடும் முழுமையாய்க் காட்டும் நிலையை நெருங்குவதோடு நின்றுகொள்வது- என்கிற மறுக்க முடியாத உண்மையைப் புரிந்து கொள்வதன் அவசியத்தை இங்கு வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
..
பூர்ஷ்வாப் புரட்சியின் “நிறைவேற்றம்” என்கிற பிரச்சினையைப் பழைய வழியிலே அணுகுவதானது உயிர்ப்புள்ள மார்க்சியத்தை உயிரற்ற எழுத்துக்குப் பலியிடுவதாகும்.” 9

                ஒரு ஸ்தூலமான இடத்திற்கு கூறியதை மற்றொரு பொருந்தாத எதார்த்தத்திற்கு பொருத்தக் கூடாது. மார்க்சியத்தைப் பொறுத்தளவில் கோட்பாடு (theory) என்பது ஒரு ஸ்தூலமான நிலைமைக்கு எடுக்கப்பட்ட முடிவாகும். கோட்பாடு (theory) என்பது அந்தந்த காலத்திற்கு உரிய நடைமுறையை (practice) வகுத்தளிக்கிறது. சமூக வளர்ச்சியோடு ஏற்படும் மாற்றத்தோடு கோட்பாட்டையும் (theory) மாற்ற வேண்டும். புதிய நிலைமைக்கு பொருந்தாத பழையக் கோட்பாட்டை பிடித்துத் தொங்கக்கூடாது.

                எதார்த்தத்தை புரிந்து கொண்டு நடவடிக்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். மிகமிக சுயமான புதிதான, முன்னெப்போதும் கண்டிராதபடி ஒரே நேரத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியான இடைக்கால அரசும், பட்டாளி - விவசாயிகளின் சோவியத்தும் அக்கம் பக்கமாக இருக்கின்றன. இத்தகைய இரட்டை ஆட்சி முறையை ருஷ்யா மட்டுமல்ல எந்த நாடும் கண்டதில்லை.

தொழிலாளர்களின் சோவியத்தின் மீது இடைக்கால அரசு தாக்குதல் தொடுக்கவில்லை, தொடுக்கவும் முடியாது. காரணம் அந்த அரசாங்கத்திடம் போலீஸ், ராணுவம் இல்லை. மக்களுக்கு மேல்நிலையில் நிற்கும் பலம் பொருந்திய அதிகார வர்க்கம் இல்லை. இந்த நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

                ருஷ்யப் புரட்சியை உடனடியாக, சோஷலிசப் புரட்சியாக மாற்ற வேண்டும் என்று தான் திட்டமிடவில்லை என்றும், தமது ஏப்ரல் ஆய்வுரை ஏட்டில் “சோஷலிசத்தைப் புகுத்துவது” எமது உடனடிக் கடமை அல்ல, ஆனால் சமூக உற்பத்தியையும் பொருட்களின் விநியோகத்தையும் மட்டும் உடனடியாக தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளின் கண்காணிப்புக்குள் கொண்டு வருவோம்” என்று கூறியதை லெனின் நினைவுபடுத்துகிறார். அங்கு கூறப்பட்ட உற்பத்தி விநியோகத்தை இந்தக் கட்டுரையில் சற்று விரிவாக்கி எழுதியுள்ளார்.

“அதிக அளவில் தானியம் உற்பத்தி செய்தல், அதைத் திறம்பட விநியோகித்தல், படைவீரர்களுக்குத் திறம்படக் கிடைக்கச் செய்தல் முதலான கடினமான நடைமுறைப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகளைக் காட்டிலும், போலீசைக் காட்டிலும் தொழிலாளர்கள், படைவீரர்கள், விவசாயிகள் சிறந்த முறையில் தீர்வு காண்பார்கள்- இந்த ஒன்றின் மீது மட்டுமே, முழுக்க முழுக்க இதன்மீதுதான் நான் “திட்டமிடுகிறேன்”” 10

                இதனைப் பாராளுமன்ற குடியரசைக் காட்டிலும் சோவித்துகள் விரைவாகவும் பயனுள்ள முறையிலும் செய்திட முடியும். இந்த முடிவு விருப்பம் சார்ந்த முடிவு கிடையாது. இந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி சூழ்நிலைமைகளே கட்டாயப்படுத்துகின்றன. “பஞ்சம், பொருளாதாரச் சீர்குலைவு, நெருங்கிவரும் தகர்வு, போரின் பயங்கர விளைவுகள், போரால் மனிதகுலத்துக்கு ஏற்படும் பயங்கர கொடுமைகள்,” இவைகளே இன்றைய புரட்சியை, சோஷலிசப் புரட்சியை நோக்கி இட்டுச் செல்வதாக லெனின் இக் கட்டுரையிரையில் வலியுறுத்துகிறார்.


நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (படைப்பு)

நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் என்ற இக்கட்டுரை ஏப்ரலில் நடக்க இருக்கும் ருஷ்ய சமூக-ஜனநாயக தொழிலாளர் கட்சியின் (போல்ஷிவிக்) ஏழாவது அகில ருஷ்ய மாநாட்டிற்கு எழுதிய நகல் அறிக்கையாகும்.

நிலப்பிரபுக்களின் எதேச்சதிகார ஜார் அரசு நீக்கப்பட்டு, முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவப் போக்குடைய நிலவுடைமையாளர்களின் கைக்கு அரசு மாறிய வகையில், ருஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமை அடைந்து விட்டது என்று இந்த அறிக்கையின் முதல் பக்கத்திலேயே லெனின் கூறிவிடுகிறார்.

“ருஷ்யாவில் அரசு அதிகாரம் புதிய வர்க்கத்தின், அதாவது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் முதலாளித்துவப் போக்குள்ள நிலவுடைமையாளர் கைகளுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இந்த அளவுக்கு ருஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமையடைந்துவிட்டது” 11

                ஆனால் இந்த புதிய முதலாளித்துவ ஆட்சி, முடியாட்சிவாதிகளுடன் ஒரு கூட்டை நிறுவியுள்ளது. புரட்சிகரத் தொடர்களின் திரையின் பின்னே இந்த அரசாங்கம் பழைய ஆட்சியின் சார்பாளர்களை முக்கியப் பதவிகளில் நியமித்துள்ளது. புதிய அரசின் சீர்திருத்தங்கள் மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. அரசியல் நிர்ணய சபை அமைப்பதற்கான நாளைக்கூட முடிவு செய்யாமல் அறிவிப்போடு நிற்கிறது. அதனால் இந்த அரசு பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைப் பெறத் தகுதியானதல்ல என்பதை நடைபெற்றுள்ள புரட்சியின் வர்க்கத் தன்மை என்ற உட்தலைப்பில் லெனின்  விவரிக்கிறார்.

                புதிய அரசின் அயல்துறைக் கொள்கையும் இதனடிப்படையில் தான் அமைந்துள்ளது. அதனால்தான் ஏகாதிபத்தியப் போரை தொடர்ந்து நடத்துவதாகவே உள்ளது. இந்த அரசின் மீது மக்கள் சிறிதும் நம்பிக்கை வைப்பதற்கு அருகதையற்றதாகிறது.

                அடுத்து, இரட்டை ஆட்சியின் பிரத்தியேக இயல்பும் அதன் வர்க்க முக்கியத்துவமும் பற்றி பேசுகிறார். இன்றைய புரட்சி ருஷ்யாவில் இரட்டை ஆட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று முதலாளித்துவ இடைக்கால அரசு மற்றொன்று தொழிலாளர் மற்றும் படைவீரர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அதற்கு இணையான சோவியத் வடிவிலான ஒரு அரசு. இந்த அரசிற்கு அதிகார அமைப்புகள் எதுவும் இல்லை, ஆனால் நேரடியான மக்களின் பெரும்பான்மையைப் பெற்றுள்ள, ஆயுதம் ஏந்திய தொழிலாளர் படைகளையும் கொண்டுள்ளது.

                இப்படி இரட்டை வர்க்கத்தின் ஆட்சி பிணைப்புற்று நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாது என்பது சந்தேகத்துக்கு இடமேயில்லை.  இவற்றில் ஒன்று மறைந்தாக வேண்டும். முதலாளித்துவ இடைக்கால அரசு மக்களின் சோவியத்தை பலவீனப்படுத்த தன்னாலான அனைத்தையும் செய்துவருகிறது. இந்த மாறிவரும் கட்டத்தைப் பற்றி கூறுகிறார் லெனின்:-
“சாதாரண முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சிக்கு அப்பால் சென்று ஆனால் பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயி மக்களின் சுத்தமான சர்வாதிகாரத்தை இன்னும் எட்டியிராத பொழுதில் புரட்சியின் வளர்ச்சியில் ஒரு மாறிவரும் கட்டமாய் இருக்கிறது இந்த இரட்டை ஆட்சி”12

                இந்த அடிப்படையில்தான், இந்தப் பிரத்யேகத் தன்மைக்கு ஏற்றப்படியான செயற்தந்திரத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த செயற்தந்திரம் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும்.

“நமது பணி விமர்சனப் பணியாக இருத்தல் வேண்டும். குட்டிமுதலாளித்துவ சோஷலிஸ்டு-புரட்சியாளரின் மற்றும் சமூக-ஜனநாயகக் கட்சிகளின் தவறுகளை விளக்குவதாக இருத்தல் வேண்டும். உணர்வு பூர்வமான பாட்டாளி வர்க்க, கம்யூனிஸ்டுக் கட்சி சக்திகளைத் தயாரித்து சீராக இணைப்பதாக இருத்தல் வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் “பொதுவான” குட்டிமுதலாளித்துவ போதை மயக்கத்தைப் போக்கிக் குணப்படுத்துவதாக இருத்தல் வேண்டும்.

இது பிரச்சாரப் பணி “மட்டுமே” என்று தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இது மிகப்பெரும் நடைமுறைப் புரட்சிகரப் பணியாகும். ஏனெனில் நிலைத்து நின்றுவிட்ட புரட்சி முன்னேற வழியில்லை.” 13

                புரட்சி தொடராமல் போனதற்கான முட்டுக்கட்டை வெளிக்காரணங்களால் ஏற்பட்டதல்ல, முதலாளித்துவ வர்க்கத்தின் வன்முறையும் காரணமல்ல, இவர்களின் மீதான மக்களின் நியாமற்ற நம்பிக்கையே காரணமாகும் என்கிறார் லெனின். அவர்களின் வர்க்கச் சார்பை புரிந்து இந்த போக்கில் இருந்து விடுபட வேண்டும். குட்டிமுதலாளித்துவத் தலைவர்கள் இடைக்கால அரசை நம்பும்படி போதிக்கின்றனர். முதலாளிகளை நம்பக் கூடாது என்று பாட்டாளிகளுக்கு சமூக பொருளாதாரக் காரணங்களைக் கொண்டு விளக்க வேண்டும்.

“.. நாளுக்கு நாள் நம்பிக்கையுள்ள நியாயமின்மையும், நியாயமில்லாத நம்பிக்கையும் விஷேசமாயும் பாட்டாளிகள் மற்றும் ஏழ்மை மிக்க விவசாயிகளிடையே வீழ்ச்சி அடையும். முதலாளிகளை நம்பக் கூடாது என்று அவர்களுக்கு அனுபவம் (அவர்களது சமூக, பொருளாதார நிலை) போதிக்கிறது.”14

                ஏகாதிபத்திய போரிலிருந்து ருஷ்யாவை காப்பதற்காக, முதலாளித்துவ இடைக்கால அரசை காப்பது என்கிற “பாதுகாப்புவாதம்” பற்றி லெனின் எழுதுகிறார்.

                பாதுகாப்பு வாதத்தில் நம்பிக்கையுள்ள அணியினர், சாதாரண மனிதனைப் போன்று எளிய முறையில் இதனை நோக்குகின்றனர். பிரதேசக் கைப்பற்றல்களை விரும்பாதவன், ஆனால் ஜெர்மனி நம்மை தாக்கும் போது, நாட்டைக் காப்பது என்பது ஏகாதிபத்தியத்தின் நலன்களின் அடிப்படையிலானது கிடையாது என்கின்றனர். இந்த குட்டிமுதலாளித்துவ கண்ணோட்டம், புரட்சியின் மேற்பட்ட முன்னேற்றத்துக்கும் இறுதி வெற்றிக்கும் படுமோசமாக விரோதமானதாகும்.

“புரட்சிகரப் பாதுகாப்புவாதம் என்பது ஒரு புறத்தில் முதலாளித்துவ வர்க்கத்தால் மக்கள்திரள் ஏமாற்றப்படுவதன் விளைவாகும், விவசாயி மக்கள் மற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினரிடம் நிலவும் நியாயமில்லாத நம்பிக்கையின் விளைவாகும். மறுபுறத்தில் இது சிறு உடைமையாளரின் நலன்கள் மற்றும் கருத்து நிலையின் ஒரு வெளியீடாகும்.” 15

                காலகாலமாக இருந்து வருகிற தப்பெண்ணங்களின் தொடர்ச்சியே பெரும்பாலும் இத்தகைய நம்பிக்கைக்கு காரணமாகிறது. அதனால் இந்த நம்பிக்கைகளின் தவறை மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்குரிய திறமைகள் போல்ஷிவிக்குகளுக்குத் தேவைப்படுகிறது. தவறுகள் நேராமல் இதனை உடனடியாகச் செய்வது எளிதானதல்ல என்பதையும் லெனின் சுட்டுகிறார்.

முதலாளித்துவ வளர்ச்சியில் ஏகாதிபத்தியக் கட்டத்தின் உள்முரண்பாட்டால் போர் தோன்றியது. இது ஏகாதிபத்தியவாதிகளின் சித்தத்தில் தோன்றியது கிடையாது. மூலதனத்தின் அதிகாரத்தை வீழ்த்தாமல், அரசு அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் கையில் எடுத்துக் கொள்ளாமல், போரில் இருந்து விடுபட முடியாது.

“கொடுங்கொள்ளைக்கார முதலாளிகளினுடைய நலன்களுக்காக மட்டுமே போர் நடத்தப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை, அதனால் செல்வம் குவிப்போர் அவர்கள் மாத்திரமே என்ற போதிலும் போர் அவர்களின் தீய சித்தத்தின் விளைவு அல்ல. இந்தப் போர் உலக முதலாளித்துவத்தின் அரை நூற்றாண்டுக் கால வளர்ச்சி மற்றும் அதன் லட்சக்கணக்கான இழைகளினுடைய தொடர்புகளின் விளைவாகும். மூலதனத்தின் ஆட்சி அதிகாரத்தை வீழ்த்தாமல், அரசு அதிகாரத்தை இன்னொரு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்துக்கு மாற்றி அளிக்காமல் ஏகாதிபத்தியப் போரிலிருந்து வெளியேறி ஒரு ஜனநாயகமான பலவந்தமில்லாத சமாதானத்தை அடைவது சாத்தியமல்ல.” 16

                ருஷ்ய புரட்சியின் இக் கட்டத்தில் காணப்படும் இந்த நிலைமைகளை அறிந்து கொள்ளாமல், ருஷ்யாவின் சோஷலிசப் புரட்சியைப் பற்றி லெனின் குறிப்பிடுகின்றவைகளை புரிந்து கொள்ளமுடியாது. அனைத்து நிலத்தையும் தேசவுடைமையாக்க வேண்டும் என்பது போன்ற மக்களின் சோஷலிசக் கோரிக்கையை, இரட்டை ஆட்சியில் ஒன்றான முதலாளித்துவ வர்க்கம் மற்றும் நிலப்பிரபுத்துவ இடைக்கால அரசால் நிறைவேற்ற முடியாது.

இரட்டை ஆட்சியில் ஒருபக்கம் சோவியத்தை வைத்துக் கொண்டு, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதில் மார்க்சிய வளர்ச்சி பற்றிய வறட்டுக் கண்ணோட்டத்தின் படி முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சிக்குப் பிறகு சோஷலிசப் புரட்சி என்று பேசிக் கொண்டிருப்பது, ருஷ்ய எதார்த்த சூழலுக்கு எதிரான போக்காகும்.  பழைய தப்பெண்ணங்களில் வீழ்ந்துகிடக்கும் பிளாகானவ், காவுத்ஸ்கி போன்ற போலி மார்க்சியவாதிகளிடம் இருந்து விடுபட வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார். இது பற்றி அடுத்த உட்தலைபான நமது புரட்சியிலிருந்து ஒரு புது மாதிரியான அரசு தோற்றமளிக்கிறது என்பதில் விவரிக்கிறார்.

“பொருளாதார வீழ்ச்சியும் போரினால் ஏற்பட்டதான நெருக்கடியும் எந்தளவு அதிக ஆழமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆக முழுநிறைவான அரசியல் வடிவத்தின் தேவையும் அதிக அவசரமானதாகி விட்டது. இது போர் மூலம் மனிதகுலத்தின் மீது சுமத்தப்பட்ட பயங்கரமான காயங்களை ஆற்றுவதற்கு நிச்சயம் துணை செய்யும். ருஷ்ய மக்களின் ஒழுங்கமைப்பு அனுபவம் எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உறுதியுடன் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் “நல்ல நிலையிலுள்ள” அதிகார வர்க்கத்தார் மூலம் மட்டும் அன்றி, மக்கள் தமக்குத் தாமே ஒழுங்கமைப்பை வளர்த்துக் கொள்ளுவதை செயலூக்கத்துடன் துவக்க வேண்டும்.

போலி மார்க்சியத்தின், பிளாகானவ் காவுத்ஸ்கி வகையறாக்களால் புரட்டப்பட்டதான மார்க்சியத்தின் பழைய தப்பெண்ணங்களை எவ்வளவு விரைவாக நாம் விட்டொழிக்கிறோமோ, அந்த அளவுக்கு அதிகச் செயலூக்கத்துடன் மக்கள் எல்லா இடங்களிலும் உடனடியாகவும் தொழிலாளர் விவசாயிகள் பிரதிநிதிகள் சோவியத்துகளை ஒழுங்கமைப்பதற்கு நாம் உதவி புரிய ஏற்பாடு செய்கிறோமோ- அந்த சோவியத்துகள் வாழ்க்கை முழுவதையும் தமதுகண்காணிப்புக்குள் மேற்கொள்ளலாம்- லுவோவ் வகையறாக்கள் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவதற்கு எந்தளவு அதிகத் தாமதம் செய்கிறார்களோ, அந்த அளவுக்கு மக்கள் தொழிலாளர் விவசாயிகள் பிரதிநிகளின் சோவியத்துகளின் குடியரசுக்குச் சாதகமாக முடிவு எடுப்பது எளிதாகும்.
..
நாம் நம்மையே ஒழுங்கமைத்துக் கொண்டு, நமது பிரசாரத்தைத் திறம்படச் செய்வோமானால், பாட்டாளிகள்  மட்டுமின்றி விவசாயி மக்களில் பத்தில் ஒன்பது பங்கினர் போலீஸ் மீண்டும் நிலைநாட்டப்படுவதை எதிர்ப்பார்கள். நீக்கம் செய்ய முடியாத தனியுரிமையுள்ள அதிகாரவர்க்கத்தையும், மக்களிடமிருந்து விலகி நிற்கும் ராணுவத்தையும் எதிர்ப்பார்கள். புதிய மாதிரியான அரசை ஆதரித்து நிற்பது இவற்றை குறித்தே.” 17


                இதற்கு அடுத்து, நிலம் மற்றும் தேசிய வேலைத்திட்டத்தைப் பற்றி பேசுகிறார். பாட்டாளி வர்க்கக் கட்சி உடனடியாக விவசாயிகளின் நலன்களுக்கு உகந்த ஒரு வேலைத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். எல்லா நிலமும் தேசவுடைமையாக்கப்பட வேண்டும், அதாவது நாட்டில் உள்ள நிலம் அனைத்தும் மைய அரசு அதிகாரத்தின் உடைமையாக்கப்பட வேண்டும்.

                தேசியத் திட்டத்தில், தேசிய இனப்பிரச்சினையைப் பற்றி பேசுகிறார். ஜாராட்சியால் ஒடுக்கப்பட்ட, அரசின் எல்லைக்குள் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள அனைத்து தேசங்களுக்கும் மக்களினங்களுக்கும் பிரிந்து போவதற்கான முழுசுதந்திரத்தை அறிவித்து அதனை உடனடியாக நிறைவேற்றுவதையும் ஆதரிக்க வேண்டும். இதற்கான காரணத்தை லெனின் கூறுகிறார்:-
“பிரிந்து போகும் உரிமையின் நடைமுறை நிறைவேற்றத்துடன் இணைக்கப் படாத, பிரதேசக் கைப்பற்றல்களைக் கைவிடுவது பற்றிய எல்லா அறிவுப்புகளும் பிரகடனங்களும் அறிக்கைகளும் மக்கள் மீது முதலாளித்துவத் தன்மையான ஏய்ப்புக்களே அல்லது குட்டிமுதலாளித்துவத் தன்மையானதே.

பாட்டாளி வர்க்கக் கட்சி எவ்வளவு பெரிதாக முடியுமோ அவ்வளவு பெரிதான ஓர் அரசை உருவாக்கவே முயல்கிறது. காரணம் இது உழைக்கும் மக்களுக்குச் சாதகமானது. இது தேசங்களை ஒன்றுக்கொன்று மேலும் நெருக்கமாக இணையச் செய்கிறது, அவை வருங்காலத்தில் முற்றிலும் இணையும்படி செய்கிறது, ஆனால் இந்த நோக்கத்தை வன்முறை மூலம் அடைவதற்கு அது விரும்பவில்லை மாறாக, அனைத்து தேசங்களின் தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் சுதந்திரமான சகோதர ஒன்றியம் மூலம் மட்டுமே அடைய விரும்புகிறது.
..
முழுமையான பிரிந்து போகும் சுதந்திரம், ஆக விரிவான ஸ்தல (மற்றும் தேசிய) சுயாட்சி, தேசியச் சிறுபான்மையினர் உரிமைகளுக்கு விரிவான உத்தரவாதம்- இதுவே புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் வேலைத்திட்டம்.” 18

                பாட்டாளி வர்க்கத்தினுடைய கட்சியின் வேலைத்திட்டத்தில் சுயநிர்ணய உரிமையை சுருக்கமாகவும் தெளிவாகவும் லெனின் முன்வைத்துள்ளார். பிரிதலை மறுக்கவும் இல்லை அதே நேரத்தில் இந்தப் பிரிதல் பின்னாளைய இணைவுக்காகவே என்பதையும் தெளிவுப்படுத்தப்படுகிறது. அதனால் இங்கே குட்டி முதலாளித்துவ கோட்பாடான “தேசிய-கலாசார தன்னாட்சி”யை ஏற்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எந்த விலை கொடுக்க நேர்ந்தாலும் சிறிய இனங்கள் அப்படியே என்றென்றும் இருந்தாக வேண்டும் என்பது சர்வதேசியவாதமல்ல.

                லெனின் ருஷ்யாவில் சோஷலிசத்தை உடனடியாகப் புகுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் கூறுகிறார்.

“சோஷலிஸ்டுப் புரட்சியின் அவசியத்தை மக்கள் தொகையின் மிகப் பெரிய பெரும்பான்மை தெளிவாக உணராத காலம் வரையில், ஒரு சிறு விவசாயிகளின் நாட்டில் சோஷலிசத்தைப் “புகுத்தும்” நோக்கத்தைப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி எந்தவொரு சந்தர்ப்ப சூழ்நிலையின் கீழும் முன்வைக்கக் கூடாது.

ஆனால், “மார்க்சியத்திற்கு நெருங்கியதான” கவர்ச்சித் தொடர்களின் பின்னே ஒளிந்து நிற்கும் முதலாளித்துவக் குயுக்திவாதிகள் மட்டுமே, இந்த மெய்விவரத்தில் இருந்து, உடனடியாக புரட்சிகர நடவடிக்கைகளை ஒத்திப்போடுவதற்கான ஒரு கொள்கையை நியாயப்படுத்த முடியும். இந்த நடவடிக்கைகளுக்கான உரிய காலம் ஏற்கெனவே கனிந்துவிட்டது. இவை பல முதலாளித்துவ நாடுகளால் போரின் தறுவாயில் ஏற்கெனவே அடிக்கடி கையாளப்பட்டன. வர இருக்கும் முழுமையான பொருளாதாரக் குலைவு மற்றும் பஞ்சத்தை எதிர்த்துப் போராட இவை முற்றிலும் இன்றியமையாதவை.

நிலம், அனைத்து வங்கிகள் மற்றும் முதலாளித்துவ சிண்டிகேட்டுகளை சேதவுடைமையாக்குதல் அல்லது குறைந்த பட்சம் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துக்களின் கட்டுப்பாட்டை உடனடியாக அவற்றின் மீது நிலைநாட்டுதல் போன்ற நடவடிக்கைகள் (எந்த வழியிலும் சோஷலிசத்தைப் “புகுத்துவது” என்று அமையாத நடவடிக்கைகள்) முழுமையாக ஆதரிக்கப்பட வேண்டும். எப்பொழுது சாத்தியமோ அப்பொழுது இவை புரட்சிகரமான வழியில் செய்து முடிக்கப்பட வேண்டும்” 19

                அடுத்து இரண்டாம் அகிலத்தின் நிலையினை விமர்சிக்கிறார். முதலாளிகளுக்கு இடையேயான ஒர் போர் எற்படும்போது அதனை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்பது அகிலத்தின் முடிவு. ஏகாதிபத்திய உலகப் போர் தொடங்கிய போது மேலே எடுக்கப்பட்ட கருத்தோடு சோஷலிஸ்டுகள் முரண்பட்டனர். அப்போது மூன்றுவிதமான போக்குகள் தோன்றியது. முதல் போக்கு, ஏகாதிபத்தியப் போரை எதிர்க்காமல் தாயகத்தைப் பாதுகாப்போம் என்று பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் விளைவித்து முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் போய்ச் சேர்ந்த தேசிய வெறியர்கள். சொல்லில் சோஷலிசம் செயலில் தேசியவெறி.

                இரண்டாவது, “நடுநிலைவாதிகள்” இவர்கள் சமூக தேசிய வெறியர்களுக்கும் உண்மையான கம்யூனிச சர்வதேசியவாதிகளுக்கும் இடையே ஊசலாடினர். சொல்லில் சர்வதேசியம் செயலில் கோழைத்தனமான சந்தர்ப்பவாதம்.

மூன்றாவது, உண்மையான சர்வதேசியவாதிகள். நமது முதன்மையான எதிரி உள்நாட்டில் என்ற அடிப்படையில், ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்பதை ஏற்றவர்கள்.

அடுத்து, மூன்றாவது அகிலத்தை நிறுவ வேண்டியதின் அவசியத்தை கூறுகிறார். இரண்டாம் அகிலத்தினுடைய தகர்வின் காரணமானவர்களையும் அவர்களின் கருத்துக்களையும் கொண்டிராத புதிய மூன்றாம் அகிலத்தை அமைக்க வேண்டும். செயலிலும் சர்வதேசிய வாதிகளாக செயற்படுகிற ருஷ்ய போல்ஷிவிக்குகளுக்கே இத்தகைய பெரும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

“நாம்தான் இக்கணமே எவ்விதத் தயக்கமும் இன்றி ஒரு புதிய புரட்சிகரமான பாட்டாளி வர்க்க அகிலத்தை நிறுவ வேண்டும். அதைவிடவும் இந்தப் புதிய அகிலம் ஏற்கெனவே நிலைநாட்டப்பட்டு விட்டது, இயங்கி வருகிறது என்பதைப் பகிரங்கமாக அங்கீகரிப்பதற்கு நாம் அஞ்சக்கூடாது.”20

                கட்சியின் பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என்று மாற்றிக் கொள்வது பற்றி இக்கட்டுரையின் இறுதியில் லெனின் பேசுகிறார். சமூக ஜனநாயகம் என்பது விஞ்ஞான வழியில் பிழையாகாது. ஜனநாயகம் என்பது அரசின் ஒரு வடிவம். மார்க்சியவாதிகள் ஒவ்வொரு வகையான அரசையும் எதிர்ப்பவர்களே. ஆனால் இன்றைய நிலையில் அதாவது சோவியத்துக்கு எதிராக செயற்படும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் சார்பாளர்களையும் இவர்கள் முற்ற முழுக்க எதிர்த்தாக வேண்டும். அதனால் ருஷ்யாவிற்கு ஆயுதமேந்திய படைகள் தேவை, ஆனால் இந்த வழக்கமான அரசு அச்சொல்லின் சரியான பொருளில் அரசு அல்ல. ஏன் என்றால் இந்த அரசில் ஆயுதமேந்திய படைகள் மக்கள் திரளினரிடையே தாமே தோன்றியதாகும். மக்களுக்கு மேல் அமர்த்தப்பட்ட எந்த அதிகார சக்தியும் இதில் கிடையாது. இது முதலாளித்துவ மாதிரியான ஜனநாயகமாக அல்லாது புதியதாய் பிறந்து வரும் புதிய ஜனநாயகமாகும். இதன் தொடர்ச்சியாய், வளர்ச்சியாய் எல்லா விதமான அரசும் உலர்ந்து உதிர்வதன் முன்னடையாளமான அரசாகும்.

பயன்படுத்திய நூல்கள்

1.இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் – தேர்வு நூல்கள் 5 பக்கம் 31
2.இரட்டை ஆட்சி - தேர்வு நூல்கள் 5 - பக்கம்- 39
3. மேற்கண்ட நூல் -பக்கம்- 40-41
4. மேற்கண்ட நூல் - 5 பக்கம்- 42
5.6.7.8.9&10.செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள்
11.நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் - தேர்வு நூல்கள் 5 - பக்கம்- 45
12. மேற்கண்ட நூல் - பக்கம்- 51-52
13. மேற்கண்ட நூல் - பக்கம்- 54-55
14. மேற்கண்ட நூல் - பக்கம்- 56
15. மேற்கண்ட நூல் - பக்கம்- 57
16. மேற்கண்ட நூல் - பக்கம்- 61
17. மேற்கண்ட நூல் - பக்கம்- 64-65-66
18. மேற்கண்ட நூல் - பக்கம்- 70-71
19. மேற்கண்ட நூல் - பக்கம்- 72-73
20. மேற்கண்ட நூல் -பக்கம்- 85

Sunday, 26 March 2017

ஆதிசங்கரர் எழுதிய மநீஷா பஞ்சகம்

ஆசிரியர் = ஆதிசங்கரர்
விலை = ரூ.3/-
விளக்கவுரை = ஸ்வாமி சின்மயானந்தர்
தமிழாக்கம் = ஸ்ரீமதி. காயத்ரீ பாலசுப்ரமணியன், பிர.ப்ரணிபாத சைதன்ய
வெளியீடு = சென்ட்ரல் சின்மயா மிஷன் ட்ரஸ்ட்
            2, 13வது அவென்யூ ஹரிங்கடன் சாலை,
சேத்துப்பட்டு,
சென்னை 600031.


“மநீஷா பஞ்சகம்” என்ற நூலையொட்டி மரபுவழிக் கதை இருக்கிறது. ஆதிசங்கரர் வடஇந்தியாவிற்குச் சென்றிருந்தபோது காசி நகரில் இது நடந்தாகக் கூறப்படுகிறது. ஆதிசங்கரர் தம் சீடர்களுடன் கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதரை வணங்குவதற்குக் கோவிலை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவருக்கு எதிரில் அழுக்கடைந்த தோற்றத்துடன் ஒரு சண்டாலன், தன்பிழைப்பிற்காக இசைக்கருவியை வைத்துகொண்டு இசைத்த வண்ணம் வந்தார். அப்போது ஆதிசங்கரர் எதிரில் வந்த அவரை “விலகு, விலகு” என்று கூறினார். அதற்கு அந்தச் சண்டாலன் கூறினார்.

“சிறந்த சந்யாசியே, உணவால் உண்டான சரீரத்திலிருந்து, உணவாலான சரீரத்தையா? அல்லது சைதன்யத்தில் இருந்து சைதன்யத்தைத்தானா? எதை விலகுவிலகு என்று தூரத்தில் விலக்குவதற்கு விரும்புகிறாய் சொல்.” (1)

அந்தச் சண்டாலன் ஞானம் பெற்ற சந்யாசியான ஆதிசங்கரரைப் பார்த்து இவ்வாறு கேட்கிறார். ஒரு சரீரத்திலிருந்து மற்றோர் சரீரத்தை விலகிப் போகச் சொல்கிறாயா? அல்லது ஆத்மாவிலிருந்து ஆத்மாவை விலகச்சொல்கிறாயா?. இருவருக்கும் உணவால் உண்டான சரீரமே இருக்கிறது. எங்கும் நிறைந்த ஆத்மாவே இருவரிடமும் இருக்கிறபடியால் விலகு என்று சொன்னது எதனை என்று கேட்கிறார்.

இதற்கு அடுத்தப்பாடல், இதனையே நேரடியாகத் தெளிவாகக் கேள்வி வைக்கப்படுகிறது.

“கங்கை நீரில் மற்றும் சேரியில் காணப்படும் குட்டையில் உள்ள நீரில் பிரதிபலிக்கும் சூரியனிடம் வேறுபாடு உண்டா? மேலும் பொற்குடத்தில் மற்றும் மண்குடத்தில் உள்ளேயுள்ள ஆகாயத்திடம் வேறுபாடு உண்டா? எண்ண அலைகளற்ற தன்னிலைபெற்ற ஆனந்தமயமான ஞானக் கடலில் ஆத்மவிஷயத்தில், இவன் பண்டிதன், இவன் புலயன் என்ற இந்த மாபெரும் விபரீத மனமயக்கம் ஏன்?” (2)

சரீர தொடர்புள்ள சம்சாரிக்கே வேறுபாடுகள் உண்டு, ஞானம் பெற்ற சன்யாசிக்கு இந்த வேறுபாடு கிடையாது, அப்படியிருக்க இந்த மாபெரும் விபரீர மனமயக்கம் ஏன் என்று கேள்வி எழுப்படுகிறது.

சந்யாசிக்கு, பண்டிதன் என்றோ? புலையன் என்றோ? வேறுபாடு இருக்கிறதா? என்ற கேள்விக்கு ஐந்து பாடல்களால் பதிலளிக்கப்படுகிறது.

“நனவு, கனவு, தூக்கம் ஆகிய மூன்று நிலைகளில் தெளிவாக எந்த ஒரு ஞானம் உண்டாகிறதோ, பிரம்மா முதல் எறும்பு வரையிலானவற்றின் உடலில் நெருங்கி உலகத்தின் சாட்சியாக எந்த ஞானம் உள்ளதோ அதுதான் நான், “காணும் பொருளல்ல” என்று உறுதியான ஞானம் எவனுக்கு உள்ளதோ அவன் சண்டாளராக இருந்தாலென்ன பிராமணராக இருந்தாலென்ன அவனே குரு என்பதே என்னுடைய எண்ணம்.” (1)

இந்த நூலை வைத்து, ஆதிசங்கரர் வர்ணாசிரமத்தை ஆதிரிக்கவில்லை, இதனை மதவாதிகள் மறைத்துவிட்டனர் என்பதாகக் கருத்து தெவிக்கின்றனர். ஆனால் இது தவறாகும். வர்ணசிரம தர்மம் தேவையில்லை என்று எந்த இடத்திலும் அவர் கூறவில்லை. ஞானம் ஏற்படும்வரை உலகத்தில் வேறுபாடுகள் இருக்கும். சம்சாரத்தில் ஈடுபட்டுள்ள கிரகஸ்தன், சுயதர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றே எழுதியிருக்கிறார். “உபதேச பஞ்சகம்” என்ற பிரகரணத்தில், வேதமானது தினந்தோறும் அத்யயனம் செய்யப்பட வேண்டும். அதில் கூறப்பட்ட நித்யநைமித்திக கர்மாவானது நன்கு அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று கிரகஸ்தனுக்கு உரியதை வலியுறுத்தப்பட்டுள்ளது.

“விவேக சூடாமணி”யின் 94வது பாடலில் (சில பதிப்பில் 91) பிறப்பு, இறப்பு முதலிய இயல்புகளும், பருமன் முதலிய பல மாறுதல்களும், குழந்தை முதலான நிலைகளும் வர்ணாச்ரமாதி நியமங்களும் எல்லாம் ஸ்தூல சரீரத்துடையவையே, என்று சரீரத்தைக் கொண்டு செயற்படுகிற சம்சாரத்தில் காணப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஞானம் பெறுவதற்கு முதலில் சித்தசுத்தி (மனத்தூய்மை) பெற வேண்டும். அதற்குச் சுயதர்மத்தை (பிறப்பால் உருவாகும் தர்மம்- சாதிய தர்மம்) கடைப்பிடிக்கும்படி ஆதிசங்கரர் கூறியுள்ளார்.

“வேதாந்த பிரமாணத்தில் சஞ்சலமற்ற திடநம்பிக்கை உள்ளவனுக்குச் சுயதர்மத்தை கடைப்பிடிப்பதும் அதனால் அந்தக்கரணச் சுத்தியும் ஏற்படுகின்றது. மனத்தூய்மை பெற்ற அவனுக்கு இறை அனுபூதி கிடைக்கிறது. அதுவே சம்சாரத்தை நாசயடையச் செய்கிறது.” (148 சில பதிப்பில் 150)

சாம்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பிறப்பால் உருவான் சாதிய தர்மம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதே அத்வைத சித்தாந்தியான ஆதிசங்கரரின் கருத்தாகும்.


Thursday, 16 March 2017

மார்க்சியம் என்றால் என்ன?

நூலின் தலைப்பு : மார்க்சியம் என்றால் என்ன?  (கேள்வி - பதில்)

ஆசிரியர் : அ.கா.ஈஸ்வரன்

முதல் பதிப்பு : டிசம்பர் 2016

பக்கங்கள்: 64

விலை : ரூ.50/-

வெளியீடுபரிசல் புத்தக நிலையம்,
71-A, ராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர்,
 சென்னை 600 004
தொடர்புக்கு : 93828 53646 | parisalbooks@gmail.com


மார்க்சியம் என்றால் என்ன?  நூலில் உள்ள முன்னுரை

“மார்க்சியம் ஏற்கெனவே பொய்யென நிரூபிக்கப்பட்டுவிட்டது” என்ற கூக்குரல் மார்க்சியம் தோன்றியது முதலாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. தனிச்சொத்துடைமையின் அழிவுவரை இந்தக் கூக்குரல் கேட்டுக் கொண்டுதான் இருக்கும். தனிச்சொத்து முழுமையும் அழிந்து, மறைந்து போவதற்கு மார்க்சியம் வழிகாட்டியாக இருக்கும். தனிச்சொத்தின் உடைமையாளர்களும், அதன் அடிவருடியான அறிவுத்துறையினர்களும் கூக்குரலை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருப்பர். தனிச்சொத்துடைமையின் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மார்க்சியம் உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டும். அவ்வழியில் சென்று சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகே இந்தக் கூக்குரல் முழுமையாக முடிவுக்கு வரும்.

மார்க்சியம் நமக்கு எந்த வகையில் வழிகாட்டுகிறது என்பதை அறிந்து கொள்வதற்கு இந்த நூல் தொடக்கமாக இருக்கும். எதனையும் முழுமையாக அறிவதற்கு ஒரு தொடக்கம் தேவை. தொடக்கம் எளிமையாக இருக்க வேண்டும், இந்த எளிமையில் இருந்து தான் மேலானவற்றை முழுமையாக அறிந்திட முடியும். இந்த நூல், மார்க்சியம் என்றால் என்ன? என்பதை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. எளிமைக்காகவே கேள்வி பதில் (135) வடிவம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்சியம் பேசுகின்ற தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் ஆகியவைகளை அறிந்து கொள்வதற்கான கலைச்சொற்களை அறிமுகம் செய்து விளக்குகிறது. இந்த விளக்கத்தின் தெளிவு, மார்க்சிய நூல்களைப் படித்தறிவதில் உள்ள சிரமத்தைக் குறைக்கும். இந்த நூல் கேள்வி பதில் வடிவில் இருப்பதால் மிகமிக எளிமையானது என்று நினைத்திடக் கூடாது, திரும்பத்திரும்பப் படித்தறிய வேண்டும். படிக்கும் போது ஏற்படுகிற சந்தேகங்களைப் பிற தோழர்களின் உதவியை நாட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்கிற வகுப்புகள் புரிதலை முழுமைப்படுத்தும்.

மார்க்சிய அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் போன்றோர்களின் நூல்கள் பெரும் பயனளிக்கும். அவ்வகையான அறிமுக நூல்களை ஒவ்வொரு பிரிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. சற்று விரிவாக இறுதியில் பட்டியல் இடப்பட்டுள்ளது. இதனைப் படித்துவிட்டு அவர்களின் விரிவான நூல்களைப் படிக்கத் தொடங்கலாம். இதற்கு இணையாக இந்த ஐவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படித்தறிவது அவசியமானதாகும். ஏன் என்றால் அவர்களின் வாழ்க்கையின் மூலம், ஒரு கம்யூனிஸ்ட்டின் வாழ்க்கையை அறிவதோடு, அவர்கள் எழுதிய நூல்கள் எப்போது, எதற்காக எழுதப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ள ஏதுவாகிறது. ஒரு நூலைப் படிப்பதற்கு அந்நூல் எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டது என்பதை அறிந்து படிக்கத் தொடங்கும் போது அந்த நூலில் காணப்படும் பொருள் எளிதில் பிடிபடுகிறது.

தத்துவப் பகுதியில் கேள்விக்கு பதிலாக, நான் எழுதிய “மார்க்சிய தத்துவம்” என்ற நூலில் இருப்பவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மார்க்சிய அடிப்படைகளை அறிந்து கொள்வதற்கான நூல்களையே, தற்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். மார்க்சிய நூல்களை சுமார் 30 ஆண்டுகளாக படித்ததின் அடிப்படையில் எழுதப்படுகிறது. இதுவெறும் நூலறிவாகக் கொள்ள முடியாது. ஏன் என்றால் மார்க்சியம் என்பது வெறும் படிப்பறிவு கிடையாது. மார்க்சியப் படிப்பறிவு என்பதே எதார்த்த உலகோடு ஒப்பிட்டு அறிவதாகும். இதனை லெனின் தமது “இளைஞர் கழகங்களின் பணிகள்” என்ற கட்டுரையில் தெளிவாக்குகிறார்.

கம்யூனிசமானது குருட்டு மனப்பாடமாய்க் கற்க வேண்டிய ஒன்றாய் அமையாது, நேரடியாய் நீங்களே சிந்தித்துப் பார்த்த ஒன்றாய், தற்காலக் கல்வியின் கண்ணோட்டத்தில் இருந்து  எழும் தவிர்க்க முடியாத முடிவுகள் உள்ளடங்கிய ஒன்றாய் அமையும்படி, இந்த ஒட்டுமொத்த மனித குல அறிவைப் பெற வேண்டும்.
வளர்ந்து வரும் இளந் தலைமுறையினர் எப்படிக் கம்யூனிசம் கற்றறிய வேண்டும் என்கிற கேள்விக்கு இதுவே பதில்.

இவர்கள் தமது படிப்பு, பயிற்சி, கல்வி இவற்றின் ஒவ்வொரு படியையும், சுரண்டலாளர்களது பழைய சமுதாயத்தை எதிர்த்துப் பாட்டாளிகளும் உழைப்பாளி மக்களும் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலமே கம்யூனிசத்தைக் கற்றறிய முடிவும்.

       மார்க்சிய நூல்களைக் குருட்டு மனப்பாடமாகக் கொள்ளாமல், அதனை நடைமுறையோடு இணைத்து, படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் படித்தறிந்த மார்க்சியத்தின் அடிப்படைகள், நடைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கும்.

ருஷ்ய நவம்பர் புரட்சியின் நூற்றாண்டான இந்த ஆண்டு முற்போக்கு இளைஞர்களை மார்க்சியத்தின் பக்கம் ஈர்ப்போம். அவ்விளைஞர்கள் மார்க்சிய அடிப்படைகளைப் படித்தறிந்து சிறந்த கம்யூனிஸ்ட்டாகச் செயற்பட உதவுவோம். கம்யூனிஸ்ட் கட்சி என்பது உழைக்கும் தொழிலாளர்களின் முன்னணிப் படையாகும், அப்படைக்கு மார்க்சியம் வழியாட்டியாகும். சிறந்த கம்யூனிஸ்டாகச் செயற்பட இந்த நூல் அவர்களுக்குத் தொடக்க வழிகாட்டியாக அமையும்.

       இந்நூலை பதிப்பதற்குப் பரிசல் சிவ.செந்தில்நாதனை அணுகிய போது, உடனே பதிப்பிக்க எடுத்துக் கொண்டு, தோழர் வே.மீனாட்சிசுந்தரம் அவர்களின் அணிந்துரையையும் பெற்றுக் கொள்வோம் என்று கூறி பதிப்பு வேலையைத் தொடங்கிவிட்டார். அவருக்கும், அருமையான அணிந்துரை வழங்கிய தோழர் வே.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


.கா.ஈஸ்வரன்                             மின்னஞ்சல்: marxistwriter@gmail.com
சென்னை                                  அலைபேசி எண்: 9283275513-9884092972


Saturday, 28 January 2017

மார்க்சியமும் மொழியியலும்

-லெனின், ஜே.வி.ஸ்டாலின்
தமிழில்: பாரதி

விலை- ரூ.70/-

புதுமைப் பதிப்பகம்,
61.2, பாரதி சாலை,
ஜாம் பஜார் சாலை, திருவல்லிக்கேணி,

சென்னை- 600 005
புதிமை பதிப்பகத்தின் புதிய வெளியீடாக “மார்க்சியமும் மொழியியலும்” என்ற நூல் வந்துள்ளது. இந்நூல் ஸ்டாலினால் அளிக்கப்பட்ட பேட்டிகள், கட்டுரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக லெனினது இரண்டு சிறு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளன. மொழி மீதான கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்நூலைப் படித்தறிந்து கொள்ளத் துணைபுரிகிறது.

ஸ்டாலின் தன்னடக்கத்துடன் தனது கருத்தை முன்வைத்துள்ளார். தான் மொழியியல் வல்லுணர் இல்லை எனினும் மொழியியலைப் பற்றிய மார்க்சிய நிலைப்பாடு என்பது, மற்ற சமூக விஞ்ஞானங்களைப் போன்று எமது துறையுடன் ஓரளவு நேரடியான தொடர்புடையதே என்கிறார்.

மொழியை மேற்கட்டமைப்புக்கு உரியதாகக் கருதுகிற போக்கை மிக மோசமான தவறு என்கிறார் ஸ்டாலின். இதனை விளக்குவதற்கு ருஷ்ய சோஷலிசப் புரட்சியோடு அதற்கு 30ஆண்டுக்கு முந்திய முதலாளித்துவ அடித்தள அமைப்பை ஒப்பிட்டுக் காட்டுகிறார். புரட்சியின் போது முதலாளித்துவ அமைப்பின் அடித்தளத்தோடு அதன் மேற்கட்டமைபும் தூக்கி எறியப்பட்டுச் சோஷலிச அடித்தள அமைப்பிற்குப் பொருத்தக்கூடிய ஒரு புதிய மேற்கட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ அரசியல், நீதி மற்றும் இதர நிறுவனங்கள் இருந்த இடத்தில், சோஷலிசத்துக்குப் பொருத்தமான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில் ருஷ்ய மொழியானது சோஷலிசப் புரட்சிக்கு முன்பு இருந்ததைப் போலவே இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

மொழியை உற்பத்திக் கருவிகளுடன் ஒப்பிட்டு இரண்டும் முதலாளித்துவ அமைப்பிற்கும் சோஷலிச அமைப்பிற்கும் சமமாகவே சேவை செய்கின்றதை எடுத்துக் காட்டியுள்ளார். புஷ்கின் படைப்புகள் எழுதிய பின்பு, நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவமும் தூக்கி எறியப்பட்டு மூனறாவதாக ஒரு சோஷலிச அமைப்பும் உருவாகிவிட்டப்பிறகும் ருஷ்ய மொழியில் எந்தவொரு அடிப்படையான மாற்றமும் அடையவில்லை என்பதை ஸ்டாலின் கூறுகிறார்.

“எல்லா இடங்களிலும் கணங்களின் மொழியிலிருந்து பழங்குடிகளின் மொழியாகவும், பழங்குடிகளின் மொழியிலிருந்து தேசிய இனங்களின் மொழியாகவும், தேசிய இனங்களின் மொழியிலிருந்து தேசிய மொழியாகவும் மாறிய இந்தவளர்ச்சிப் போக்கின் எல்லாக் கட்டங்களிலும், ஒரு சமூகத்தில் உள்ள மக்களிடையே தொடர்பு ஏற்படுத்துகின்ற சாதனம் என்ற வகையில் மொழியானது, அந்தந்தச் சமூகத்தின் ஒரே பொதுவான மொழியாகவே விளங்கி வந்திருக்கிறது. சமூகத்தின் உறுப்பினர் அனைவருக்கும் அவர்களின் சமூக அந்தஸ்தைப் பற்றிக் கவலைப்படாமல் சமமாகவே பணியாற்றி வந்திருக்கிறது” (பக்கம்- 31-32)

மொழி வர்க்க சார்புடையது கிடையாது அதனால் அடித்தள மாற்றத்தோடு மொழி மாற்றம் பெறுவதில்லை. குறிப்பிட்ட வர்க்கத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மொழி உருவாக்கப்படவில்லை. சமூகத்தில் காணப்படும் அனைத்து வர்க்கங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. மொழியானது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஏதாவது ஒரு பழைய அல்லது புதிய அடித்தள அமைப்பின் படைப்பல்ல. அதற்கு மாறாக, சமூகத்தின் வரலாறு முழுவதாலும், பல நூற்றாண்டுகளாக இருந்து வந்து பல அடித்தள அமைப்புகளின் வரலாறு முழுவதாலும் உருவாக்கப்பட்டதாகும் என்கிறார் ஸ்டாலின்.

சோஷலிசப் புரட்சிக்குப் பின் ருஷ்ய சொற்தொகுதியில் குறிப்பிட்ட அளவு மாற்றம் பெற்றது. பல பழைய சொற்களின் பொருள் மாறி புதிய முக்கியத்துவம் அடைந்தது. தேவையற்ற சொற்கள் மறைந்துபோயின. புதிய சோஷலிச உற்பத்தி முறையினால் புதிய சொற்கள் சேர்க்கப்பட்டது. முதலாளித்துவ அமைப்பு தூக்கி எறியப்பட்ட பிறகு, ஒரு புதிய அடிப்படை சொற்தொகுதியாலும், புதிய இலக்கண அமைப்பாலும் முற்றிலும் அகற்றப்படுவதற்கு மாறாக ருஷ்ய மொழியில் முழுமையாகப் பேணப்பட்டதோடு, கடுமையான மாற்றங்களுக்கு உட்படவில்லை என்கிறார் ஸ்டாலின்.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் கருத்துக்களை நூலின் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, அது எந்தக் காலத்தில், எந்தச் சூழ்நிலையில் கூறப்பட்டது என்பதையும் அதற்கு மேலேயும் கீழேயும் என்ன விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் பாராது “மேற்கோள்களுக்கு” தவறான விளக்கம் கொடுப்பதை ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டி மறுக்கிறார் ஸ்டாலின்.

மார்க்சியத்தை வறட்டுச்சூத்திரமாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதைப் பலநேரங்களில் அறிவுறுத்தப்பட்ட ஒன்றே. இங்கே ஸ்டாலினும் வலியுறுத்துகிறார்.

“மூல நூலை ஒப்புவிப்போரும், பாராயணம் செய்வோரும் சமூக வளர்ச்சி நிலைமைகளில் எவ்வளவு மாறுதல்கள் ஏற்பட்ட போதிலும் மார்க்சியமும், மார்க்சியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தனிப்பட்ட முடிவுகளும் கருதுகோள்களும் எப்போதும் மாறாதவை என்று கருதுகிறார்கள். இந்தக் கருதுகோள்களையும் முடிவுகளையும் மனப்பாடம் செய்துவிட்டு அவ்வப்போது மேற்கோள் காட்டிவிட்டாலே எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம். அந்த முடிவுகளும் கருத்துகளும் எல்லா நாடுகளுக்கும் எல்லாக் காலங்களுக்கும் வாழ்க்கையின் எல்லாச் சந்தப்பங்களுக்கும் அவர்களுக்கு உதவி செய்யும் என்று கருதுகிறார்கள், மார்க்சியத்தின் சாராத்தைப் பாராமல் அதன் சொற்களை மட்டுமே பார்க்கின்ற மார்க்சியத்தின் முடிவுகளையும் கருதுகோள்களையும் அதன் பொருளை உணராமல் மனப்பாடம் செய்பவர்களே இவ்வாறு கருதுவார்கள்,” (பக்கம் - 81)

பூர்ஷ்வாக்கள் ‘அவர்களுக்குச் சொந்தமான மொழியைக்’ கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்த மொழி பூர்ஷ்வாக்களால் உருவாக்கப்பட்டது என்றும் மார்க்ஸ் கூறிய மேற்கோளைப் பிடித்துக் கொண்டு, மொழியின் வர்க்க இயல்பை மார்க்ஸ் ஏற்றுக் கொண்டது போல் புரிந்து கொள்கின்றனர். இதனை ஸ்டாலின் மறுத்து இதே கட்டுரையில் மற்றொரு இடத்தில் அரசியல், பொருளாதாரப் பிடிப்பின் காரணமாகக் கிளைமொழிகள் ஒரு தேசிய மொழியின் பிடிக்குள் வருவதைப் பற்றிக் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையே ஸ்டாலின் வேறொரு இடத்தில், வர்க்கங்கள் மொழியைப் பாதிக்கின்றன, அவற்றிற்கே உரிய சொற்களையும் வெளிப்பாடுகளையும் மொழியில் புகுத்துகின்றன. சில நேரங்களில் ஒரே சொல் வெவ்வேறு விதமான பொருளைக் கொள்கின்றன என்பதில் ஐயமில்லை. இதனால் அனைத்து மக்களுக்கு உரிய ஒரு பொது மொழியின் வளர்ச்சிக்கு தடையாகவோ, அல்லது அதன் சிறப்புத் தன்மையை மாற்றி விடுமென்றோ பொருள் கொள்ள முடியாது என்கிறார். இதுபோன்ற தவறான புரிதல்களை இந்நூலில் ஸ்டாலின் சரிபடுத்துகிறார்.

பக்கம் 74-75ல் வளர்ச்சியடைந்த நாடுகள் ஒன்றுபட்டு கூட்டாகத் தாக்கினால் சோஷலிசப் புரட்சி ஏற்படும் என்று மார்க்ஸ் கூறியதற்கும், தனிநாட்டில் சோஷலிசப் புரட்சி தோன்றுவது பற்றிய லெனினது கருத்துக்கும் உள்ள வேறுபாட்டை ஸ்டாலின் இந்நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

மற்ற மார்க்சிய அறிஞர்கள் கூறுவதைப் போல மொழியானது ஒரு சமூகத்தின் மக்களிடையே தொடர்பு கொள்ளக்கூடிய கருவியாகவே இருக்கிறது, அந்தச் சமூகத்தின் அனைத்து வர்க்கங்களுக்கும் சமமாகவே பயன்படுகிறது என்று இந்நூலில் ஸ்டாலின் கூறியுள்ளார். இதனை மட்டும் அறிந்த தமிழ்நாட்டில் பலர், மார்க்சியம் மொழியை வெறும் ஊடகசாதனமாக மட்டுமே பார்க்கிறது என்று விமர்சிக்கின்றனர். ஊடக சாதனம் என்பதை இவர்கள் தான் மிகவும் குறைத்து மதிப்பிட்டுள்ளனர். மொழி, மனிதகுல வரலாற்றில் எவ்வகையில் எல்லாம் ஊடகமாகப் பயன்பட்டுள்ளதை ஸ்டாலின் எடுத்துக்காட்டியுள்ளார்.

“மனிதகுல வரலாற்றில், மனிதர்கள் விலங்கு உலகத்திலிருந்து தோன்றுவதற்கும், சமூகங்களாக இணைவதற்கும், அவர்கள் சிந்தனையை வளர்ப்பதற்கும், சமூக உற்பத்தியை ஒழுங்கமைப்பதற்கும், இயற்கை சக்திகளை எதிர்த்து ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்துவதற்கும், நாம் இப்போதுள்ள முன்னேற்றத்தை அடைவதற்கும் உதவி செய்த சக்திகளுள் பேசும் மொழியும் ஒன்றாகும்.” (பக்கம்- 71-72)

மேலும், உற்பத்தியிலும், பொருளாதார உறவுகளிலும், அரசியலிலும், கலாச்சாரத்திலும், சமூக வாழ்விலும் மொழி இணைந்து செயல்படுவதற்கு ஒன்று திரட்டும் சாதனமாக இருப்பதையும் இந்தச் சிறப்பியல்பு மொழிக்கு மட்டும் இருப்பதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மற்ற சமூக அம்சங்களிலிருந்து மொழியை வேறுபடுத்துகின்ற மொழிக்குரிய சிறப்பியல்புகள் யாவை?

மக்களுக்கிடையே தொடர்பு கொள்ளும் சாதனமாகவும், ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்ள உதவுவதோடு மனிதச் செயல்பாட்டின் அனைத்துத் துறைகளிலும், உற்பத்தியிலும், பொருளாதர உறவுகளிலும், அரசியலிலும், கலாச்சாரத்திலும், சமூக வாழ்விலும், அன்றாட வாழ்விலும் இணைந்து செயல்படுவதற்காக ஒன்று திரட்டும் சாதனமாகவும் மொழி விளங்குகிறது. இந்தச் சிறப்பியல்புகள் மொழிக்கு மட்டுமே உண்டு.” (பக்கம்- 60)

“தேசிய கலாச்சாரம்” என்பது முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கையாகும். இதனைப் பல கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ளாமல், தேசிய கலாச்சாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். “பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் முழுக்கம் ‘தேசியவாத கலாச்சாரம்’ அல்ல, மாறாக அது சர்வதேசிய ஜனநாயகக் கலாச்சாரமும், உலகு தழுவிய பாட்டாளி வர்க்க இயக்கமும் ஆகும்.” (பக்கம் 88)

இந்தப் பாட்டாளி வர்க்க சர்வதேச சிந்தனையோடு ஸ்டாலின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 16 காங்கிரசில், எதிர்காலத்தில் தோன்றக்கூடிய ஒரே உலக மொழியைப் பற்றிக் கூறியுள்ளார். சோஷலிசம் நிலைபெற்ற பிறகு தேசிய மொழிகள் தவிர்க்க முடியாமல் ஒரு பொது மொழியாக இணையும். தேசிய மொழிகளில் இருந்து வளம்மிக்க, ஒன்றுபட்ட மண்டல மொழிகள் முதலில் உருவாகும். அதன் பிறகு மண்டல மொழிகள் (zonal languages) அனைத்தும் ஒரு சர்வதேச மொழியாக இணைந்துவிடும். ஆனால் இந்தச் சர்வதேச மொழி ருஷ்ய மொழியாகவோ, ஜெர்மன் மொழியாகவோ, ஆங்கில மொழியாகவோ இருக்காது. மாறாக, இந்தப் புதுமொழியானது. தேசிய, மண்டல மொழிகளின் சிறப்பான கூறுகள் அனைத்தையும் கொண்ட ஒரு புதுமொழியாக விளங்கும்.

இந்த ஸ்டாலினது கூற்றுச் சர்வதேசியவாதிகளுக்கு ஆச்சரியமாக இருக்காது, ஆனால் “தேசிய கலாச்சாரம்” என்பதை முன்வைக்கிற தோழர்களுக்கு எற்படும் அச்சரியத்தைத் தவிர்க்க முடியாது.

லெனினது இரண்டு சிறு கட்டுரைகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் மொழியைப் பற்றி மார்க்சியவாதிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமானவை இருக்கின்றன. “கட்டாய அலுவல் மொழி அவசியமா?” என்ற கட்டுரையில் லெனின், “ருஷ்ய மார்க்சியவாதிகள் கட்டாய அலுவல் மொழி கண்டிப்பாக இருக்கக் கூடாது எனவும், அனைத்து உள்ளூர் மொழிகளிலும் கல்வி போதிக்கப்படும் பள்ளிகளை மக்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும் ஏதேனும் ஒரு குறிப்பிட்டதொரு தேசத்தின் அனைத்துச் சிறப்புரிமைகளையும் மற்றும் சிறுபான்மை தேசத்தாரின் உரிமை மீறல்கள் அனைத்தையும், இரத்து செய்யும் ஓர் அடிப்படைச் சட்டம் ஒன்று அரசியல் சட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கூறுகின்றனர்” (பக்கம்94-95)

“மொழிப் பிரச்சினை குறித்துத் தாராளவாதிகள் மற்றும் ஜனநாயகவாதிகள்” என்ற கட்டுரையில் பாட்டாளி வர்க்க ஜனாயகத்தின் தேசியஇனத் திட்டத்தில், எந்தவொரு தனிப்பட்ட தேசத்திற்கும், மொழிக்கும் சிறப்புரிமை மறுக்கப்படும் என்று லெனின் தெளிவாகக் கூறியுள்ளார். சிறிய நாடான ஸ்விட்சர்லாந்தை முன்வைத்து மூன்று மொழிகளை அலுவல் மொழியாகக் கொண்டுள்ளதால் அந்நாடு எதையும் இழக்கவில்லை என்று லெனின் கூறுகிறார்.

எந்த ஒரு மாற்றமும் அந்நாட்டில் வளர்ச்சிப் பெற்றுள்ள ஜனநாயத்தின் அடிப்படையில் நிலைமைக்கு ஏற்றப்படியான மாற்றங்கள் உண்டாகும்.
“பொருளாதாரப் பரிவர்த்தனையின் தேவைகள், ஒரு அரசின்கீழ் வாழும் தேசிய இன மக்களை (அவர்கள் அந்த அரசுடன் வாழ விரும்பும் காலம்வரை) பெரும்பான்மையினரின் மொழியைக் கற்றுக்கொள்ள எப்போதும் நிர்ப்பந்திக்கும். ரஷ்யாவில் அரசியல் அமைப்பு மேலும் ஜனநாயகத்தன்மை அடையும் போது, மேலும் வலிமையாக, விரைவாக, தீவிரமாக முதலாளித்துவம் வளரும், இது மேலும் அவசரமாக, பொருளாதாரப் பரிவர்த்தனையின் தேவைகள் காரணமாக. பல்வேறு தேசிய இனங்களை, பொது வர்த்தக உறவுகளுக்காக ருஷ்ய மொழியை மிகவும் இசைவுடன் கற்றுக்கொள்ளத் தூண்டும்” (பக்கம் – 86)

மொத்தத்தில் இந்த நூல் மொழியை முன்வைத்து எழுதப்பட்டாலும், மார்க்சிய அணுகுமுறையை அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மார்க்சிய அடிப்படைகளைப் புரிந்து கொள்ள விரும்பும், அரசியல் போராளிகள், இன்றைய, நாளைய அதாவது எதிர்காலத்திய போக்குகளை அறிந்து கொள்வதற்கு இந்நூலை கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.