Sunday, 18 June 2023

03) லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” சுருக்கமும் சாரமும் (மூன்றாம் பகுதி)

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில்  

                     எடுக்கப்பட்ட 88- வது வார வகுப்பு – 18-06-2023  )


 இதுவரை லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” என்கிற நூலில் உள்ள மூன்று அத்தியாயங்களை இரண்டு வகுப்புகளில் பார்த்துவிட்டோம். இன்னும் மூன்று அத்தியாயங்கள் இருக்கின்றன. இன்றைய வகுப்பில் நான்காம் அத்தியாயம் முழுமையாகப் பார்க்கப் போகிறோம். இந்த நான்காம் அத்தியாயம் 50 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. பிற அத்தியாயத்தைவிட இந்த அத்தியாயமே அதிக பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. அதனால் இதனை இன்றைய வகுப்பில் தனித்துப் பார்க்கலாம். 5,6 ஆகிய இரண்டு அத்தியாயங்களையும் அடுத்த வகுப்பில் பார்க்கலாம். அடுத்த வகுப்புடன் இந்த தொடர் வகுப்பு நிறைவடையும்.

 பாரிஸ் கம்யூன் அனுபவத்தின் முக்கியத்துவத்தை மார்க்ஸ் எழுதினார். எங்கெல்ஸ் பலமுறை இதே பொருளைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுதினார். மேலும் மார்க்ஸின் பகுப்பாய்வு மற்றும் முடிவுகளை விளக்கினார். சில நேரங்களில் இப்பிரச்சினையின் பிற கூறுகளை வலிமையோடு தெட்டத் தெளிவாக எங்கெல்ஸ் விளக்கினார். அதனால் கம்யூனைப் பற்றி எங்கெல்ஸ் விளக்கியதை லெனின் இந்த தனி அத்தியாயத்தில் பேசுகிறார். எங்கெல்சை இவ்வாறு லெனின் சிறப்பிக்கும்போது ஒன்றைப் பற்றி பேச வேண்டும்.

       மார்க்சியம் என்கிற சித்தாந்தத்திற்கு எங்கெல்ஸ் சிறந்த பங்களித்திருக்கிறார். அப்படியிருக்க மார்க்ஸ் பெயரோடு எங்கெல்ஸ் பெயரையும் இணைத்திருக்க வேண்டும் என்று பலர் கருதக்கூடும். மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு இதற்கு எங்கெல்சே பதிலளித்துள்ளார். லுத்விக் ஃபாயர்பாக் என்கிற நூலின் அடிக்குறிப்பில் கூறியதை இங்கே பார்ப்போம்.

 

“அண்மைக் காலமாக, இந்தக் கோட்பாட்டில் என்னுடைய பங்கைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசப்பட்டு வருகிறது. எனவே இந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவர நான் இங்கே சில விவரங்களைச் சொல்லாமலிருக்க முடியாது. மார்க்சுடன் எனக்கிருந்த நாற்பது ஆண்டுகால ஒத்துழைப்பின் போதும், அதற்கு முன்னரும், இந்தக் கோட்பாட்டுக்கான அடித்தளத்தை உருவாக்குவதிலும், மேலும் குறிப்பாக, அக்கோட்பாட்டை விரித்துரைப்பதிலும் சற்றே சுதந்திரமான பங்கு எனக்கிருந்தது என்பதை நான் மறுக்க முடியாது. ஆனால் அதன் முதன்மையான அடிப்படைக் கொள்கைகளில், சிறப்பாகப் பொருளாதாரம் மற்றும் வரலாற்றுத் துறைகளில் மிகப் பெரும்பகுதியும், மேலும் அனைத்துக்கும் மேலாக, அவற்றின் முடிவான, துல்லியமான வரையறுப்பும் மார்க்சின் பங்களிப்பாகும்.

 

ஒரு சில தனிச்சிறப்பான துறைகளில் என்னுடைய பணியைத் தவிர்த்து, என்னுடைய பங்களிப்பினைத் தாராளமாக மார்க்ஸ் என் உதவியின்றியே செய்திருக்க முடியும். ஆனால் மார்க்ஸ் செய்து முடித்ததை நான் ஒருபோதும் சாதித்திருக்க முடியாது. எங்களுள் மற்ற எல்லோரைக் காட்டிலும் மார்க்ஸ் உயாந்து நின்றார், தொலைநோக்குடன் பார்த்தார், பரந்த விரைவான பார்வையைக் கொண்டிருந்தார். மார்க்ஸ் ஒரு மேதையாக (Genius) விளங்கினார். மற்றவர்களாகிய நாங்கள், அதிகமாகச் சொல்லிக் கொள்வதென்றால், சிறந்த திறமைசாலிகளாக (Best Talented) இருந்தோம். அவர்மட்டும் இல்லையென்றால், இந்தக் கோட்பாடு இன்று உள்ளதுபோல் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்காது. எனவே, இக்கோட்பாடு அவருடைய பெயரைத் தாங்கி நிற்பது பொருத்தமே.”

      மூலதனம் தொகுதிகளில் 2-3 ஆகியவற்றை மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு எங்கெல்ஸ் பதிப்பித்தார். அதுவும் எங்கெல்சின் சிறந்த பங்களிப்பு ஆகும். மார்க்சின் கையெழுத்தை எங்கெல்சைத் தவிர மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. எங்கெல்ஸ் இல்லையேல் மார்க்சியம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரின் பங்களிப்பு இருக்கிறது.

       நான் ஒன்றை எப்போதும் சொல்வது வழக்கம். மார்க்சைப் படிக்க வேண்டுமானால் எங்கெல்சை படிக்க வேண்டும். மார்க்சையும் எங்கெல்சையும் படிக்க வேண்டுமானால் லெனினை படிக்க வேண்டும். ஏன் என்றால் மார்க்சியத்தை திரிபுயில்லாமல் படிப்பதற்கு இவர்களின் நேரடிப் பங்களிப்பு நமக்குப் பயன்படுகிறது.

       இந்த நான்காவது அத்தியாயத்தில் லெனின், அரசு பற்றி எங்கெல்ஸ் விளக்குவதைத் தொகுத்துத் தந்துள்ளார். அரசும் புரட்சியும் நூலில் உள்ள அத்தியாயங்களில் எங்கெல்சைப் பற்றி எழுதிய அத்தியாயமே அதிக பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. எங்கெல்சை படிக்காமல் மார்க்சியத்தைப் புரிந்து கொள்ள முடியாது. மார்க்சியத்தை அறிவதற்கு எங்கெல்ஸ் எழுதிய நூல்களை பட்டியலிடுவோம்.

1) டூரிங்குக்கு மறுப்பு,

2) லுத்விக் ஃபாயர்பாகும் செவ்வியல் ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்,

3) குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்,

4) இயற்கையின் இயக்கவியல்.

இந்த நான்கு நூல்களின் வழியே தான் மார்க்சிய அடிப்படைகளை நாம் கற்க முடியும். மார்க்சியத்தின் உள்ளடக்கக் கூறுகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் என்று பிரிப்பது ருஷ்ய மார்க்சியம். லெனின் தான் இப்படி பிரித்தார் என்று கூறுபவர்களை ஐரோப்பாவில் மட்டுமல்ல நமது நாட்டிலும் பார்க்க முடிகிறது. ஆனால் எங்கெல்ஸ் டூரிங்கை விமர்சித்து எழுதிய டூரிங்கு மறுப்பு என்கிற நூலில் மார்க்சியத்தை தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் என்று மூன்றாகப் பிரித்தே பதிலளித்துள்ளார். மூன்று உள்ளக்கமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளதே, ஆனால் ஒவ்வொன்றும் தனித்தப்  போக்குடையதாகும். எதையும் மார்க்சிய வழியில் அணுகுவதற்கு இந்த மூன்றையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.

நான்காவது அத்தியாயம்

எங்கெல்ஸ் அளித்த கூடுதல் விளக்கங்கள்.

      நான்காம் அத்தியாயத்தின் முதலாவது பிரிவு, “குடியிருப்புப் பிரச்சினை”

       1972ஆம் ஆண்டு எங்கெல்ஸ் “குடியிருப்புப் பிரச்சினை” என்கிற கட்டுரையை எழுதுயுள்ளார். இதில் பாரிஸ் கம்யூனுடைய அனுபவத்தின் அடிப்படையில் அரசு தொடர்பாக புரட்சியின் பணிகளைப் பற்றி இதில் பலயிடங்களில் எழுதியுள்ளார். அப்படி பேசும் போது, பாட்டாளி வர்க்க அரசுக்கும் தற்போதுள்ள முதலாளித்துவ அரசுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

       மேற்கோள் மூலம் எங்கெல்சின் கருத்துக்களை நமக்கு லெனின் காட்டுகிறார். குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எப்படி? இதற்கு பதிலாக எங்கெல்ஸ், கூறுவது என்னவென்றால், இன்றைய சமூகத்தில் ஏனைய சமூகப் பிரச்சினையைப் போலவே இதுவும் தீர்க்கப்படுகிறது. தேவையும் அளிப்பையும் பொருளாதார வழியில் படிப்படியாய் சமன் செய்வதின் மூலம் தீர்வாக வைக்கிறது. ஆனால் இதை தேவை – அளிப்பு என்கிற வழியில் தீர்வை காணமுடியவில்லை.

 சமூகப் புரட்சிக்குப் பிறகு இதற்கு தீர்வு காணும் என்பது குறிப்பிட்ட அந்தந்த சந்தர்ப்பத்திலும் நிலவும் சூழ்நிலையைமச் சார்ந்தது. மேலும் பன்மடங்கு ஆழமான பிரச்சினைகளுடன் இணைந்தும் இருக்கும். புரட்சியின் அடிப்படையான பிரச்சினையில் ஒன்று நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையே உள்ள முரணை ஒழித்தல்.

       பெரிய நகரங்களில்  போதிய அளவுக்கு வீடுகள் இருக்கின்றன. நல்லறிவுக்கு உகந்த நேரிய வழியில் இவை பயன்படுத்தப்பட்டால் குடியிருப்புப் பற்றாக்குறையை உண்மையாகவே உடனடியாக தீர்க்கப்படலாம். ஆனால் தற்போதுள்ள உடைமையார்களிடம் இருந்து வீடுகளைப் பறிமுதல் செய்து  அதில் வீடில்லாத தொழிலாளர்களுக்கு இடம் கொடுக்கலாம்.

       எங்கெல்ஸ் இங்கே அரசு அதிகாரத்தின் வடிவடித்தில் உள்ள வேறுபாடுகளை பரிசீலிக்கவில்லை. அதன் செயற்பாட்டின் உள்ளடக்கம் மட்டுமே பரிசீலிக்கப்பட்டுள்ளது. அரசு உலர்ந்து உதிர்வதைப் பற்றி எங்கெல்ஸ் பேசியுள்ளார், அதை அடுத்த அத்தியாயத்தில் தனித்துப் பார்க்கலாம் என்று லெனின் கூறியுள்ளார்.

       வர்க்கங்கள் ஒழியும் போது அரசும் ஒழிக்கப்படும் என்பதே மார்சியக் கோட்பாடு. அதாவது அரசு ஒழிவதற்கான பொருளாதார நிலைமைகள் தோன்றிய பிறகு அரசு ஒழிக்கப்படுகிறது. ஆனால் அராஜகவாதிகள் அரசை உடனே ஒரே நாளில் ஒழித்துவிடலாம் என்கிறனர் இது மார்க்சிய கோட்பாட்டுக்கு எதிரானதாகும்.

 அராஜகவாதியின் மீதான மார்க்சியத்தின் விமர்சனம் அரசை ஒழிக்க விரும்புகிறார்கள் என்பதில் அல்ல, ஒழிப்புக்கான பொருளாதாரக் காரணங்களை கணக்கில் கொள்ளாமல் உடனடியாக ஒழிப்பைப் பற்றி பேசுவதையே மார்க்சியம் விமர்சிக்கிறது.

       அரசு ஒழிப்பு பற்றிய அராஜகவாதிகளை மார்க்சியம் எந்த வகையில் விமர்சிக்கிறது என்பதைப் பற்றி அடுத்த பிரிவில் லெனின் பேசுகிறார்.

       நான்காம் அத்தியாயத்தின் இரண்டாவது பிரிவு, அராஜகவாதிகளுடன் வாக்குவாதம்.

       இத்தாலிய சோஷலிஸ்டு ஆண்டு வெளியீடு ஒன்றில் மார்க்சும் எங்கெல்சும் எழுதியதை லெனின் இங்கே மேற்கோளாகத் தருகிறார். அதில் உள்ள ஒரு பகுதியைப் பார்ப்போம்.

 

"அரசியலை நிராகரிப்பதற்காக அராஜகவாதிகளைக் கேலி செய்து மார்க்ஸ் எழுதினார்: "தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் போராட்டம் புரட்சிகர வடிவங்களை ஏற்குமாயின், முதலாளித்துவ வர்க்கத்தாரின் சர்வாதிகாரத்துக்குப் பதிலாக, தொழிலாளர்கள் தமது புரட்சிகர சர்வாதிகாரத்தை நிறுவிக் கொண்டார்களாயின் அவர்கள் கோட்பாடுகளை இழிவுபடுத்திப் பயங்கரக் குற்றமிழைப்பவர்கள் ஆகிவிடுகிறார்கள்.""

 அராஜகவாதிகள் அரசு ஒழிபுப்புக்கான பொருளாதார வளர்ச்சி நிலையைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருப்பதையே இதில் மார்க்ஸ் விமர்சித்துள்ளார்.  வர்க்கம் மறையும் போது அரசு மறையும் என்பதை மார்க்ஸ் விமர்சிக்கவில்லை.

 முதலாளித்துவ வர்க்கத்தாரது எதிர்ப்பை எதிர்கொள்வதற்கான  பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசினை, அராஜகவாதிகள் கைவிட்டுவிட வேண்டும் என்று கூறுவதையே மார்க்ஸ் விமர்சிக்கிறார். அராஜகவாதத்துக்கு எதிரான தமது போராட்டத்தின் உண்மைப் பொருளை திரித்துப் புரட்டுவதைத் தடுக்கும் வகையில் பாட்டாளி வர்க்கத்துக்குத் தேவைப்படும் அரசு புரட்சிகரமான இடைக்கால வடிவம் கொண்டது என்பதை மார்க்ஸ் தெளிவாகவே வலியுறுத்திக் கூறியுள்ளார்.

       எங்கெல்ஸ் இன்னும்கூட விவரமாகவும் எளிமையாகவும் விளக்கிறார். புரூதோனியவாதிகள் “அதிகார- எதிப்பளார்களாய்” தங்களை அழைத்துக் கொள்கின்றனர். அதாவது அனைத்து அதிகாரத்தையும் கீழ்ப்படிதலையும், ஆட்சியையும் அவர்கள் நிராகரிக்கின்றனர். இதை மறுத்து எங்கெல்ஸ், ஓர் ஆலை நிர்வாகத்தையோ, ரயில்வே துறையையோ, விரிகடலில் செல்லும் கப்பலையோ இயக்குவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட தலைமை எனும் அதிகாரம் இல்லாமல் எப்படி நடைபெறும் என்கிறு கேட்கிறார். அதாவது ஒரு கப்பல் கடலில் செல்கிறது என்றால், அதிகாரம் பொருந்திய தலைமைக் கேப்டன் இருக்க வேண்டும். தலைமை இல்லாமல் கப்பலை கடலில் வெற்றிகரமாக இயக்க முடியுமா? முடியாது என்பதே உண்மையாகும்.

       எங்கெல்ஸ் எழுதிய “அதிகாரம் குறித்து” (On Authority) என்கிற கட்டுரையில் இருந்து ஒரு பெரிய மேற்கோளை லெனின் கொடுத்துள்ளார். அதில் ஒரு பகுதியை அப்படியே பார்ப்போம். அராஜகவாதிகளைப் பார்த்து எங்கெல்ஸ் கேள்வி எழுப்பி பதிலும் கொடுக்கிறார். அராஜகவாதிகள் இதுவரை புரட்சியை எதிர்கொள்ளாமலேயே ஆனால் அதிக நேரம் புரட்சியை மட்டும் பேசிக் கொண்டிருப்பவர்கள். புரட்சிக்கான தயாரிப்பில் கவனம் செலுத்தாமல் இன்றை நடைமுறை அரசியலைப் புறக்கணித்துவிட்டு புரட்சியை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.

 

"இந்தக் கனவான்கள் எப்பொழுதாவது ஒரு புரட்சியைப் பார்த்திருக்கிறார்களா?

 

புரட்சியைப் போல, அதிகார ஆதிக்கம் செலுத்தும் எதுவுமே இருக்க முடியாது. துப்பாக்கிகளும் துப்பாக்கிக் குத்தீட்டிகளும் பீரங்கிகளும் கொண்டு, இவையாவுமே மிகக் கடுமையான அதிகார, ஆதிக்கச் சாதனங்கள் ஆகும். ஒரு பகுதி மக்கள் எஞ்சிய பகுதியின்மீது தமது சித்தத்தைத் திணிக்கும் செயலே புரட்சி. வெற்றி பெறும் தரப்பு தனது படைபலம் பிற்போக்குவாதிகளிடத்தே உண்டாக்கும் குலைநடுக்க பயங்கரத்தின் மூலமாய்த் தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டாக வேண்டும்.

 

முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு எதிராய் ஆயுதமேந்திய மக்களுடைய அதிகாரத்தை பாரிஸ் கம்யூன் செலுத்தாமல் இருந்தால், அதனால் ஒரு நாளுக்கு மேல் நீடித்திருக்க முடியுமா? அதிகாரத்தை செலுத்தியதற்காக கண்டிப்பதற்குப் பதில் இந்த அதிகாரத்தை மிகச் சொற்பமாகவே செலுத்தியது என்றல்லவா அதன்மீது குற்றம் சாட்ட வேண்டும்? ஆகவே இரண்டில் ஒன்றுதான் உண்மை: ஒன்று அதிகார-எதிர்ப்பாளர்கள் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமலே பேசிக் கொண்டிருக்கிறார்கள்- அப்படியானால் அவர்கள் குழப்பம் உண்டாக்குவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை; அல்லது அவர்கள் தெரிந்தே பேசுகிறார்கள் என்றால், பாட்டாளி வர்க்கத்தின் இலட்சியத்துக்குத் துரோகம் புரிகின்றனர். இரண்டில் எதுவாயினும், அவர்கள் பிற்போக்குக்குப் பணியாற்றுவோரே ஆவர்''

      அரசு உலர்ந்து உதிருவதற்கான அரசியலுக்கும் பொரளாதாரத்துக்கும் இடையே உள்ள உறவுநிலையை மார்க்சியம் சிறப்பாகப் பேசுகிறது. இதை பற்றி அடுத்த அதியாயத்தில் காணலாம்.

 அரசு உலர்ந்து உதிருவதற்கான பொருளாதார நிலைமைகளைப் பற்றி சிறிதும் கருத்திக் கொள்ளாமல், அரசு ஒழிக்கப்பட வேண்டியது பற்றி அரஜகவாதிகள் பேசுவது குழப்பமானது, புரட்சிகரமில்லாதது என்பதே எங்கெல்சின் வாதம் என்கிறார் லெனின்.

       4வது அத்தியாயத்தின் மூன்றாவது பிரிவு, பெபெலுக்கு எழுதிய கடிதம்

 அரசு பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் மிகச் சிறப்பானவற்றுள் ஒன்று எனக் கொள்ளத்தக்க கருத்துரை என்றால் அது 1875ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18-28 தேதியிட்ட பெபெலுக்கு அவர் எழுதிய கடிதத்தை இங்கே லெனின் குறிப்பிடுகிறார்.

       கம்யூன் போராளிகள் அமைத்த அரசு கம்யூனாகும். இந்தக் கம்யூன் அரசு எனும் சொல்லின் சரியான பொருளில் அரசாய் இருக்காது என்பதனால் அரசு என்ற சொல்லையே விட்டுவிட வேண்டும். அராஜகவாதிகள் “மக்கள் அரசு” என்று குறிப்பிட்டு சலிப்பும் அருவருப்பும் ஏற்படும் அளவுக்கு ஓயாது அதனை நம் முகத்திலேயே எறிந்து வருகின்றனர் என்று லெனின் கூறுகிறார்.

      மார்க்சியத்தைப் பொறுத்தளவில் பாட்டாளிகளின் சர்வாதிகார அரசு என்பது ஒர் இடைக்காலத்துக்கு மட்டுமே தேவைப்படுகிறது. அதன் பிறகு அரசு உலர்ந்து உதிர்ந்துவிடும்.

 தம்மை எதிர்க்கும் வர்க்கம் இருக்கும்வரையில்தான் பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு தேவைப்படுகிறது. இதற்கு மாறாக சுதந்திரத்தின் நலன்களுக்காக அரசு வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் அராஜகவாதிகள் “மக்கள் அரசு” என்று தொடர்ந்து பேசுகின்றனர். மேலும் எங்கெல்ஸ் அந்தக் கடிதத்தில் அனைத்து இடங்களிலும் அரசு என்ற சொல்லுக்குப் பதில் கம்யூன் என்கிற பிரெஞ்சு சொல்லுக்கு ஈடாக அமைந்துள்ள “மக்கட்சமூகம்” (Gemeinwesen) என்ற நல்லதொரு ஜெர்மன் சொல்லை பயன்படுத்தாலாம் என்று மார்க்சையும் சேர்த்து நாங்கள் ஆலோசிக்க விரும்புகிறோம் என்கிறார் எங்கெல்ஸ்.

       இங்கே எங்கெல்ஸ் “மக்கட்சமூகம்” என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆலோசனை ஏற்கப்பட்டால் எங்கெல்சின் இந்த செயல் “அராஜகவாதம்” என்பதாய் ஒரே கூச்சல் அல்லவா போடுவார்கள் என்கிறார் லெனின். மேலும், அவர்கள் கூச்சல் எழுப்பட்டும். அது அவர்களுக்கு முதலாளித்துவ வர்க்கத்தாரிடம் இருந்து புகழ்மாலைகள் பெற்றுத் தரும் என்கிறார்.

       “கம்யூனானது அரசெனும் சொல்லின் சரியான பொருளில் அரசாய் இருக்கவில்லை” என்பது எங்கெல்ஸ் கூறியது கோட்பாட்டு வழியில் சரியான நிர்ணயிப்பு. கம்யூனானது பழைய பொருளில் அரசு என்பதற்கு மாறன ஒன்று. எங்கெல்சின் கருத்துக்கள் இதனை தெளிவாக விளக்கியிருக்கிறது. இருந்தாலும் ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகள் அதாவது கம்யூனிஸ்டுகளிடம் அரசு பற்றிய சந்தர்ப்பவாதக் கருத்துக்கள் பீடித்து உள்ளது. பெபெல் எழுதுகிறார், 


“அரசானது… வர்க்க ஆதிக்கத்தை அடிப்படையாய்க் கொண்ட நிலை, நீக்கப்பட்டு மக்கள் அரசாய் மாற்றப்பட வேண்டும்”

 இதில் அரசு உலர்ந்து உதிரும் என்கிற மார்க்சியக் கோட்பாடு முற்றப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மார்க்சிய அடிப்படைகளை நுட்பமாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால் இது போன்ற சந்தர்பவாதமாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

   மார்க்சியத்தின் புரட்சிகர விளக்கங்களை மூலையில் போடப்பட்டால் சந்தர்ப்பவாதத்தில் அகப்படுவது நிச்சயம் என்பதை, லெனின் இந்தப் பிரிவின் இறுதியில் கூறியதைப் பார்ப்போம்.

 

"…..விடாப்பிடியாய்த் திரும்பத் திரும்பக் கூறப்பட்டு வந்த அரசு பற்றிய சந்தர்ப்பவாதக் கருத்துக்கள், ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளைப் பீடித்துக் கொண்டுவிட்டதில், முக்கியமாய் எங்கெல்சின் புரட்சிகர விளக்கங்கள் கவனமாய் மூலையில் முடக்கப் பட்டுவிட்டதாலும், வாழ்க்கை நிலைமைகள் அனைத்தும் அவர்களை நெடுங்காலத்துக்குப் புரட்சியிலிருந்து "விலக்கிவைத்து'' இருந்ததாலும் இக்கருத்துக்கள் அவர்களைப் பீடித்துக் கொண்டுவிட்டதில் வியப்பில்லை."

 4வது அத்தியாயத்தின் நான்காவது பிரிவு, எர்ஃபுர்ட் நகல் வேலைத்திட்டத்தின் விமர்சனம்.

       ஜெர்மன் சமூக-ஜனநாயகக் கட்சியின் எரிஃபுர்ட் வேலைத்திட்டம் 1891ஆம் ஆண்டு எர்ஃபுர்ட் நகரில் நடைபெற்ற காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது. கோத்தா வேலைத்திட்டத்தைவிட இத் திட்டம் ஓரடி முன்னேற்றம்தான். முதலாளித்துவ உற்பத்திமுறை அழிவுற்று சோஷலிச உற்பத்தி முறை ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்னும் மார்க்சியக் கோட்பாட்டை இந்தத் திட்டம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இருந்தாலும் இந்தத் திட்டத்தில் சந்தர்ப்பவாத்திற்கு சில மோசமான சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தது அதனால் எங்கெல்ஸ் இத் திட்டத்தை விமர்சித்துள்ளார்.

       நவீன முதலாளித்துவம் ஏகாதிபத்தியக் கோட்பாட்டினுடைய மதிப்பீட்டின் மிக முக்கிய சாராம்சத்தை இந்த விமர்சனத்தில் எங்கெல்ஸ் எழுதியுள்ளார். அதாவது முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக மாறிவிட்டிருந்ததை எங்கெல்ஸ் இங்கே குறிப்பிட்டுள்ளார். இந்த விமர்சனத்தில் அவர், கூட்டுப் பங்குக் கம்பெனிகள் வளர்ச்சி உற்றபோது திட்டமிடாமைக்கு முடிவுவந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

       ஏகபோக முதலாளித்துவம் அதாவது அரசு-ஏகபோக முதலாளித்துவமானது முதலாளித்துவமாக இருக்கவில்லை, இப்போது இதை “அரசு சோஷலிசம்” என்பதாய் அழைக்கலாம் என்று கூறுவது தவறான முதலாளித்துவ சீர்திருத்தவாதக் கூற்று என்று லெனின் விமர்சிக்கிறார்.

       இந்த ஏகபோக முதலாளித்துவம், எவ்வளவு திட்டமிட்ட போதிலும், எவ்வளவுதான் மூலதன அதிபர்கள் தேசிய அளவிலும், ஏன் சர்வதேசிய அளவுலுங்கூட பொருளுற்பத்திப் பரிமாணத்தை முன்கூட்டியே கணக்கிட்டு கொண்ட போதிலும் இன்னமும் இந்தப் போக்கு முதலாளித்துவமே. புதிய கட்டத்தை பெற்றுவிட்ட முதலாளித்துவம் என்று கூறலாமே தவிர, இதை சோஷலிசமாகக் கருதமுடியாது. ஆனால் இதை வேறுவிதமாகக் கூறலாம். இத்தகைய முதலாளித்துவம், சோஷலிசத்துக்கு நெருங்கியது, பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான பிரதிநிதிகளுக்கு சோஷலிசப் புரட்சி அண்மையானதும், எளியதும், நடைமுறை சாத்தியமானதும், அவசரஅவசியமானதும் ஆகிவிட்டதை இது நிரூபிக்கிறது. இடதுசாரிகள் இந்த வழியில் வாதிக்கலாமே தவிர, இதை சோஷலிசப் புரட்சியை புறக்கணிப்பதற்கும் வகையில் முதலாளித்துவத்தை கவர்ச்சி மிக்கதாக காட்டுவதற்கும் உரியதாக ஆகிவிடக்கூடாது.

       தொடக்கக் காலத்தில் மார்க்சிய மூலவர்கள் சோஷலிசப் புரட்சியை சமாதான வழியில் சாதிக்க முடியும் என்று நினைத்தனர். இந்த இடத்தில்  நினைக்க மட்டும்தான் என்று லெனின் அழுத்திக் கூறியுள்ளார். இருந்தாலும் இந்த சமாதான வழிமுறை ஜெர்மனுக்கு சரிபட்டுவராது என்று எங்கெல்ஸ் கருதினார். ஜெர்மனியில் குடியரசும் இல்லை, சுதந்திரமும் இல்லை. ஆதலால் சமாதான வழி பற்றிய கனவுகள் முற்றிலும் அபத்தமாகும் என்று கூறி உள்ளார்.

       ஜெர்மனியில் உள்ள கட்சியும் தொழிலாளி வர்க்கமும் ஜனநாயக் குடியரசின் வடிவிலேதான் அதிகாரத்துக்கு வர முடியும் என்பது அறுதியிட்டு நிச்சயமாகச் சொல்ல முடியும். பிரெஞ்சுப் புரட்சி ஏற்கனவே காட்டியது போல பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு உரிய பிரத்தியேக வடிவமும் இதுவே தான் என்று எங்கெல்ஸ் கூறியுள்ளார். மார்க்சின் நூல்களில் அனைத்திலும் இழையோடி இருக்கும் அடிப்படைக் கருத்தினையே எங்கெல்ஸ் மிகவும் எடுப்பான முறையில் திரும்பக் கூறியுள்ளார். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கு மிக அருகாமையில் இட்டுச்செல்வது ஜனநாயகக் குடியரசுதான் என்பதே இந்த அடிப்படை கருத்து.

       கூட்டாட்சிக் குடியரசை ஆதரிக்கவில்லை, ஜனநாயக மத்தியத்துவம் கொண்ட குடியரசையே மார்க்சைப் போல எங்கெல்சும் ஆதரித்தார் என்று லெனின் கூறுகிறார்.

 எங்கெல்ஸ் கூட்டாட்சிக் குடியரசை விதிவிலக்காகவும் வளர்ச்சிக்கு இடையூறாகவும் கருதினார், அல்லது முடியரசில் இருந்து மத்தியத்துவக் குடியரசுக்கான சில தனி நிலைமைகளில் ஒரு முன்னேற்றப் படியாயாகக் கருதினார். இந்தத் தனி நிலைமைகளில் எங்கெல்ஸ் தேசியப் பிரச்சினையை முதலிடத்துக்கு உரியதாய்க் குறிப்பிட்டுள்ளார். சின்னஞ் சிறு அரசுகளின் பிற்போக்குத் தன்மையையும், குறிப்பிட்ட சில உதாரணங்களில் தேசிய பிரச்சினையால் இவற்றின் பிற்போக்குத் தன்மை மூடிமறைக்கப்படுவதையும் தயவுதாட்சண்யமின்றிக் கண்டித்து விமர்சத்தார். இருந்தாலும் மார்க்சைப் போலவே எங்கெல்சும் தேசியப் பிரச்சினையை ஒதுக்கித் தள்ளிவிடுகிற ஆபத்துக்கு இடமளிக்கவில்லை.

 4வது அத்தியாயத்தின் ஐந்தாவது பிரிவு, “பிரான்சில் உள்நாட்டுப் போர்” என்னும் மார்க்ஸ் நூலுக்கு 1891ல் எழுதப் பெற்ற முன்னுரை.

       மார்க்சின் மறைவுக்குப் பிறகு எங்கெல்ஸ் மார்க்சின் முக்கியமான நூல்களை மறுபதிப்பு செய்தார். அப்படி செய்யும் போது அதற்கு ஒரு ஆய்வுரையை முன்னுரையாக எழுதினார், அனைத்து முன்னுரையையும் நாம் பல முறை படிக்க வேண்டும். தொழிலாளர்களின் பாரிஸ் புரட்சியின் அனுபவத்தை மார்க்ஸ் பகுத்தாய்ந்து “பிரான்சில் உள்நாட்டுப் போர்” என்ற பெயரில் ஒரு நூலை எழுதினார். இந்த நூலுக்கான எங்கெல்சின் முன்னுரையையே லெனின் இந்தப் பிரிவில் விவரிக்கிறார்.

       இந்த முன்னுரையைப் பற்றிய கருத்தை முதலிலேயே லெனின் வெளிப்படுத்தி உள்ளார். அதை முதலில் பார்ப்போம்.

       அரசு குறித்து பின்பற்ற வேண்டிய போக்கு தொடர்பான பிரச்சினைகள் பற்றிச் சுவையான சில கருத்துரைகளை இடைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார், கம்யூன் படிப்பினைகள் பற்றிய தேர்ந்த தெளிவுடைய சுருக்கவுரையையும் அளிக்கிறார். கம்யூனுக்கு அடுத்த இருபது ஆண்டுகளின் அனுபவம் அனைத்தையும் எடுத்து கொண்டு இந்த முன்னுரையில் எங்கெல்ஸ் செழுமைப்படுத்தி உள்ளார் என்பதை லெனின் கூறியுள்ளார். மேலும் இந்த முன்னுரையில், அன்று ஜெர்மனியில் அதிகமாகப் பரவிய அரசின் மீதான மூடநம்பிக்கையை நேரடியாய் எங்கெல்ஸ் எதிர்த்துள்ளார்.

       மதம் தனிநபரின் விவகாரமாய் மார்க்சியம் கூறுகிறது. ஆனால் சந்தர்ப்பவாதிகளாய் போன ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகள் அதாவது கம்யூனிஸ்டுகள், இதன் கருத்தை திரித்துரைத்தனர். புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சிக்குங்கூட மதம் தனிநபரின் விவகாரம் என்பதாய் பொருள்மாற்றி விளக்கம் கொடுத்தனர். இதை மறுக்கும் விதமாக எங்கெல்ஸ் இந்த முன்னுரையில் அரசைப் பொறுத்த மட்டில் மதம் முற்றிலும் தனிநபரின் விவகாரமாகும் என்று எழுதினார். மதத்தைப் பொறுத்த மட்டில் மதம் தனிநபரின் விவகாரம் என்று ஜெர்மன் சந்தர்ப்பவாதத்தை நேரடியாக சாடும் பொருட்டே அழுத்தம் கொடுத்து கூறியுள்ளார். கட்சியைப் பொறுத்த மட்டில் மதம் தனிநபரின் விவகாரமாகக் கொள்ள முடியாது.

 ஜெர்மன் சந்தர்ப்பவாதமானது புரட்சிகர பாட்டாளி வர்க்கக் கட்சியைச் மதச் சார்பற்ற நிலைக்கு இடமளித்துவிட்டது. இந்தப் போக்கு மக்களை மதிமயங்கச் செய்யும். மதமெனும் அபினியை எதிர்த்துக் கட்சி நடத்த வேண்டிய போராட்டத்தை கைவிட்டுவிடும் மிகக் கொடுமையான போக்காகும்.

 இந்தப் போக்கு ஜெர்மன் சமூக-ஜனநாயகக் கட்சியை குட்டி முதலாளித்துவ அற்பவாதத்தின் இழிநிலைக்குச் சீரழியும்படிச் செய்துவிட்டது என்று லெனின்  மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

       இந்த முன்னுரையில்,  பாரிஸ் கம்யூன் குறிப்பிடத்தக்க இரண்டு வழிகளை செய்தது என்று கூறியுள்ளார். முதலாவது, அனைத்துப் பதிவிகளும் மக்கள் வாக்குரிமையின் அடிப்படையிலான தேர்தல் மூலம் ஆட்களை அமர்த்தியது. அத்தோடு, அவர்களை அதே வாக்காளர்களால் எந்நேரத்திலும் திரும்பியழைக்கப்படக் கூடியவர்களாக்கியது. இரண்டாவது, அதிகாரிகள் அனைவருக்கும் மற்ற தொழிலாளர்களுக்கு அளிக்கின்ற சம்பளமே கொடுக்கப்பட்டது.

       தேசிய சுயநிர்ணய உரிமை குறித்து சில மார்க்சியவாதிகள் கருதியதைப் போல் எங்கெல்ஸ் கருதவிலை என்று லெனின் குறிப்பட்டுள்ளார். அதாவது, சுயநிர்ணய உரிமையானது முதலாளித்துவத்தில் சாத்தியமில்லை, சோஷலிசத்தில் அதற்குத் தேவையில்லை என்று வாதாடுவதைப் போன்ற பிழையை எங்கெல்ஸ் செய்யவில்லை என்று லெனின் குறிப்பிடுகிறார்.

       இந்தப் பரிவின் இறுதியில் லெனின் கூறுகிறார், முடியரசில் மட்டுமல்லாமல் ஜனநாயகக் குடியரசிலும் அரசு ஒரு வர்க்கம் பிறிதொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான இயந்திமாகவே இருக்கிறது. எங்கெல்சின் இந்தக் கூற்றை அராஜகவாதிகள் ஒடுக்குமுறையின் வடிவம் எதுவாயினும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஒன்றே என்று இதற்கு தவறாகப் பொருள்கொள்கின்றனர். அரசு எனும் வேண்டாத பிண்டம் இதை குப்பைக் குழியிலே போடும் நிலை ஒரு புதிய தலைமுறையால்தான் முடியும். இதை  லெனின் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கிறார்.

 4வது அத்தியாயத்தின் ஆறாவது பிரிவு, ஜனநாயகத்தை விஞ்சுவது குறித்து எங்கெல்ஸ்.

       அன்று கம்யூனிஸ்டுகளை, சமூக-ஜனநாயகவாதி என்று சொல்லால்தான் அழைக்கப்பட்டது. இந்த சொல் விஞ்ஞான வழியில் தவறானது என்று எங்கெல்ஸ் கருதினார். 1894ஆம் ஆண்டு சனவரி 3ஆம் நாளிட்ட முன்னுரையில் இது குறித்து எழுதினார். இன்றைய மாறிவிட்ட சூழ்நிலையில் பொதுவில் சோஷலிஸ்டாய் இருப்பதோடு அல்லாமல் முழக்க முழுக்க கம்யூனிஸ்டாக பொருளாதார வேலைத் திட்டத்தையும் கொண்டுள்ள ஒரு கட்சிக்கு, அரசு அனைத்தையும், இதன் விளைவாய் ஜனநாயத்தையும்கூட விஞ்சுவதை இறுதி அரசியல் குறிக்கோளாய் கொண்ட ஒரு கட்சிக்கு சமூக ஜனநாயகக் கட்சி என்ற பெயர் பொருத்தமானதாக இல்லை. ஆனால் இதை ஏற்க்கத்தக்கதாய் கொள்ளலாம். உண்மையான அரசியல் கட்சிகளுடையப் பெயர்கள் ஒருபோதும் முழு அளவுக்கும் பொருத்தமானதாக இல்லை. கட்சி வளர்ச்சி அடைந்து செல்கிறது அனால் கட்சியின் பெயர் அப்படியே இருந்தபடியே இருக்கிறது.

       அரசின் ஒழிப்போடு ஜனநாயகத்தின் ஒழிப்பும் அடங்கியிருக்கிறது. அரசு உலர்ந்து உதிர்வது போல ஜனநாயகமும் உலர்ந்து உதிர்ந்து போகும்.

       ஜனநாயகமும், சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கீழ்படிதலும் ஒன்றல்ல, சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கீழ்படிதலை அங்கீகரிக்கும் அரசுதான் ஜனநாயகம் எனப்படும். ஒரு வர்க்கம் பிறிதொரு வர்க்கத்தின் மீது முறைப்படி செலுத்தும் பலாத்கார ஒழுங்கமைப்பே ஜனநாயகம் எனப்படுவது.

       அரசை ஒழிப்பதே கம்யூனிஸ்டுகளின் இறுதி குறிக்கோள். கம்யூனிஸ்டுகள் கம்யூனிசத்தின் முதற்கட்டமான சோஷலிசத்துக்காக பாடுபடும் போது கம்யூனிசமாய் வளர்ச்சி அடையும். வளர்ச்சி அடைந்த் கம்யூனிச சமூகத்தில் மக்களின் ஒரு பரிவினர் மற்றொரு பிரிவினரை கீழ்ப்படியும்படி செய்திட வேண்டிய தேவை அறவே மறைந்து போய்விடும். ஏன் என்றால் யாரையும் கீழ்ப்படையும்படிக்கூறத் தேவையில்லாமல், மக்கள் சமூக வாழ்வின் சர்வ சாதாரண நெறிமுறைகளை பின்பற்றுவது பழக்கப்பட்டுவிடுவார்கள் என்பதில் கம்யூனிஸ்டுகளுக்கு சந்தேகம் இல்லை.

       நான்காவது அத்தியாயம் இத்துடன் நிறைவடைகிறது.

       அரசு உலர்ந்து உதிர்வதற்கான பொருளாதார அடிப்படையைப் பகுத்தாய்வது அசியமான ஒன்றாகும். அடுத்த வகுப்பில் அதைப் பார்ப்போம்.

 

 

 

 

Sunday, 11 June 2023

02) லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” சுருக்கமும் சாரமும் (இரண்டாம் பகுதி)

 (“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 87- வது வார வகுப்பு – 12-06-2023  )


             சென்ற வகுப்பில் லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” நூலின் முதல் அத்தியாயமும் இரண்டாம் அத்தியாயத்தின் முதல் பிரிவையும் பார்த்தோம்.

       இந்த இரண்டாவது அத்தியாயத்தில் 1848-1851 ஆண்டுகளில் நடைபெற்ற புரட்சியின் அனுபவங்களை லெனின் நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.

 இரண்டாம் அதியாயத்தின் இரண்டாம் பிரிவு, புரட்சியில் இருந்து பெறப்பட்ட முடிகளின் தொகுப்பு.

 மார்க்ஸ் 1848-1851 நடைபெற்ற புரட்சிகளில் இருந்து அரசு பற்றிய முடிவுகளை “லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் பூரூமேர் என்ற நூலில் கூறியதை லெனின் மேற்கோளாகக் காட்டுகிறார். அதில் காணப்படுவதைப் பார்ப்போம்.

       புரட்சி முற்றிலும் முறைபடி அனைத்தையும் செய்கிறது. கழித்து ஒழிக்கப்பட வேண்டியதை எரித்துச் சாம்பலாக்கியது, முதலில் அது நாடாளுமன்ற ஆட்சி முறையை வீழ்த்தியது. இறுதியில் நாடாளுமன்றக் குடியரசானது புரட்சிக்கு எதிரான தனது போராட்டத்தில், அடகுமுறை நடவடிக்கைகளுடன் கூடவே அரசாங்க அதிகாரத்தின் சாதனங்களை வலுப்படுத்த வேண்டியதாகியது. இதுவரை கண்ட புரட்சிகள் அனைத்தும் அரசு என்கிற பொறியமைவைத் தகர்ப்பதற்கு பதிலாக செம்மையாக்கியே வந்தன. ஒவ்வொரு புரட்சியும் அரசெனும் இந்த பிரம்மாண்டக் கோட்டையைக் கைப்பற்றி வைத்துக் கொள்வதே வெற்றியின் சின்னமாக கருதியது.

       இதுதான் அந்த மேற்கோளில் இருக்கும் சாரம். “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” அரசு பற்றி முன்வைத்தக் கருத்துக்களைவிட லுயீ போனபார்ட் நூலில் கூறிய கருத்துக்கள் மேம்பட்டதாக இருந்தது. அறிக்கையில் மிகப் பெருமளவுக்கு கருத்தியலான முறையில்தான் அரசு பற்றி பேசியிருந்தது. லுயீ போனபார்ட் நூலில் அரசு பற்றிய கருத்துக்கள் துல்லியமான, திட்டவட்டமான, நடைமுறை சார்ந்த கண்கூடான முடிவு காணப்படுகிறது. இதுவரை நடைபெற்ற புரட்சிகள் அரசு எனும் பொறியமைவை செம்மை செய்து வந்தது, ஆனால் இந்த பொறியமைவு தகர்த்து நொறுக்கப்பட்டாக வேண்டும். இந்த முடிவே அரசு பற்றிய மார்க்சியக் கோட்பாடாகும்.

       பாட்டாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைப்பட்டால் அன்றி முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்த முடியாது என்று அறிக்கையில் கூறியபடி பாட்டாளி வர்க்க அரசை அமைக்காமல், அரசை ஒழிக்க முடியாது.

       முடியாட்சி வீழ்ச்சியுடன் முதலாளித்துவத்தின் குடியாட்சி ஏற்படுகிறது. இந்த முதலாளித்துவ அரசில் இரண்டு பெரும் உறுப்புகள் காணப்படுகிறது. ஒன்று அதிகார வர்க்கம், மற்றொன்று நிரந்த படை. முதலாளித்துவ அரசு இந்த இரண்டு உறுப்புகளுடம் ஆயிரமாயிரம் தொடர்புகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. முதலாளித்துவ அரசின் இந்த இணைப்பை தொழிலாளி வர்க்கம் தமக்கு ஏற்பட்ட கொடுமையான சொந்த அனுபவத்தால் அறிந்து கொண்டது.

 அதிகார வர்க்கமும் நிரந்தர படையும் முதலாளித்துவ சமூகத்தின் உடலில் புல்லுருவியாய் அமைந்துள்ளது. இதனை அறிந்து கொள்ளாமல் முதலாளி வர்க்கத்தை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாது.

       அரசு பற்றிய மார்க்சிய கோட்பாட்டைப் புரிந்து கொள்ளாது போனால், முதலாளித்துவ அரசானது, தொழிலாளி வர்க்கத்தை எதிர்த்து கடுமையாக நடந்து கொள்வதைப் புரிந்து கொள்ள முடியாது.

       முதலாளித்துவத்தின் அரசுப் பொறியமைவை, பாட்டாளி வர்க்கம் ஒழித்தப் பின்பு அந்த இடத்தில் எப்படிப்பட்ட அரசை அமைக்கப் போகிறது என்பதை பாரிஸ் கம்யூன் அளித்திருக்கும் படிப்பினை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

       இரண்டாம் அத்தியாயத்தின், மூன்றாவது பிரிவு. 1852ல் இப்பிரச்சினையை மார்க்ஸ் எடுத்துரைத்தது.

       வர்க்கப் போராட்டம் நிகழ்வதை முதலாளித்துவத்தின் வளர்ச்சிக் கட்டத்தில் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. அதனால் இதை முதலாளித்துவ அறிஞர்களும் ஏற்றுக் கொண்டனர். அப்படி என்றால் வர்க்கப் போராட்டம் பற்றிய பிரச்சினையில் மார்க்சின் பங்களிப்பு என்ன வென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். மார்க்ஸ் 1852ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதியில் வெய்டமையருக்கு எழுதிய கடிதத்தில் அவரே இதை வெளிப்படுத்தி உள்ளார். அந்தக் கடிதத்தைப் பார்ப்போம்.

 

“… என்னைப் பொருத்தவரையிலும், நவீன சமூகத்தில் வர்க்கங்கள் இருப்பதையோ அல்லது அவர்களுக்கு இடையே நடைபெறுகின்ற போராட்டத்தையோ கண்டுபிடித்த பெருமை என்னைச் சேர்ந்ததல்ல. எனக்கு வெகு காலத்துக்கு முன்பே முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள், இந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றுரீதியான வளர்ச்சியையும், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் இந்த வர்க்கங்களின் பொருளாதார உள்ளமைப்பையும் வர்ணித்திருக்கிறார்கள்.

நான் புதியதாக என்ன செய்தேன் என்றால், அது கீழ்க் கண்டவற்றை விளக்கியது தான்:

1) வர்க்கங்கள் இருப்பதென்பது உற்பத்தியினுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

2) வர்க்கப் போராட்டம் கட்டாயமாக தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்லும்.

3) இந்த சர்வாதிகாரம் என்பது எல்லா வர்க்கங்களையும் ஒழிப்பதற்கும், வர்க்கபேதமற்ற சமூகத்தை ஏற்படுத்துவதற்கும் மாற்றமாக இருக்கிறது.”

(252-523)

                இந்த கடிதத்தில் காணப்படும் கருத்தை பற்றி லெனின் கூறுவதைப் பார்ப்போம்.

      முதலாவதாக, தமது போட்பாட்டுக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் முன்னேறிய சிந்தனையாளர்களின் கோட்பாட்டுக்கும் அடிப்படையாய் உள்ள வேறுபாட்டை மார்க்ஸ் காட்டியுள்ளார். இரண்டாவதாக, அரசு பற்றிய தமது கோட்பாட்டின் சாரத்தை மார்க்ஸ் இந்தச் சொற்களில் தெள்ளத் தெளிவாகக் எடுத்துரைத்துள்ளார். மேலும் லெனின் கூறுகிறார், இதை அவர் சொற்களிலேயே பார்த்துவிடலாம். இந்த லெனின் சொற்கள் மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கிறது.

 

 

“வர்க்கப் போராட்டமே மார்க்சின் கோட்பாட்டிலுள்ள முதன்மையான கூறாகுமென அடிக்கடி கூறப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இது தவறு. இந்தத் தவறான கருத்தின் விளைவாய் மார்க்சியம் அடிக்கடி சந்தர்ப்பவாத வழியில் திரித்துப் புரட்டப்படுகிறது, முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்புடைய பாங்கிலே பொய்யாக்கப்படுகிறது. எப்படியென்றால், வர்க்கப் போராட்டக் கோட்பாடு மார்க்சால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல, மார்க்சுக்கு முன்னரே முதலாளித்துவ வர்க்கத்தாரால் தோற்றுவிக்கப்பட்டது.

 

பொதுவாய்க் கூறுகையில் இது முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்புடைய கோட்பாடே ஆகும். வர்க்கப் போராட்டத்தை மட்டும் அங்கீகரிப்போர் மார்க்சியவாதிகளாகிவிடுவதில்லை; இன்னமும் அவர்கள் முதலாளித்துவச் சிந்தனை, முதலாளித்துவ அரசியல் இவற்றின் வரம்புகளுக்குள் நிற்போராகவே இருக்கக் கூடும்.

 

மார்க்சியத்தை, வர்க்கப் போராட்டக் கோட்பாட்டுக்கு அப்பால் செல்லாது இருத்துவதானது, மார்க்சியத்தைக் குறுகலாக்கித் திரித்துப் புரட்டுவதும் முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்றதாய்க் குறுக்குவதுமே ஆகும். வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பதோடு நிற்காமல், இதனைப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கான அங்கீகரிப்பாகவும் விரித்துச் செல்கிறவர் மட்டுமே மார்க்சியவாதி ஆவார்.

 

மார்க்சியவாதிக்கும் சாதாரண குட்டி (மற்றும் பெரு) முதலாளித்துவவாதிக்கும் இடையிலுள்ள மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இதில் தான் அடங்கியிருக்கிறது. மார்க்சியத்தை மெய்யாகவே புரிந்து கொள்கிறாரா, அதை அங்கீகரிக்கிறாரா என்பதைச் சோதித்துப் பார்க்கும் உரைகல்லாய் அமைவது இதுவே.” (253 -254)

 வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமாக கொண்டு செல்பவரே மார்க்சியவாதிகளாவார் என்று லெனின் மிகமிகத் தெளிவாக கூறியுள்ளார்.

       தவிர்க்க முடியாமல் மார்க்சியப் பக்கம் வந்து, ஆனால் மார்க்சிய முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொல்லைக் கேட்டவுடன் பதறுகிறார்கள். அரசின் தோற்றம் பற்றியும் அதன் வர்க்க சார்பு பற்றியும் தெரிந்தவர்களுக்கு திகைப்பு ஏற்படாது. அனைத்து அரசும் சர்வாதிகாரமே. அதே போல பாட்டாளி வர்க்கம் புரட்சிக்குப் பின் அமையும் அரசு என்பது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே ஆகும்.

       சந்தர்ப்பவாதிகளும் சீர்திருத்தவாதிகளும், சீர்திருத்தத்துக்கும் மார்க்சியத்துக்கும் இடையே ஊசலாடும் காவுத்ஸ்கிவாதிகளும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டை நிராகரிக்கின்றனர். இவர்கள் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளாக தம்மை நிரூபித்துக் கொண்டது வியப்பேதுமில்லை.

       “அரசும் புரட்சியும்” என்கிற நூலில் இந்தப் பிரிவை இரண்டாம் பதிப்பில்தான் லெனின் சேர்த்தார். அப்படி சேர்த்ததினால் காவுத்ஸ்கி 1918ஆம் ஆண்டு எழுதிய “பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்” நூலை லெனின் இதில் விமர்சித்துள்ளார். மார்க்சியத்தைக் குட்டிமுதலாளித்துவ வழியில் திரித்துப் புரட்டுவதையும், வஞ்சகமாய் அதைச் சொல்லளவில் அங்கீகரித்துவிட்டு செயலில் கைவிட்டு ஓடியதையும் லெனின் கடுமையாக சாடுகிறார். இதைப் பற்றி லெனின் “பாட்டாளி வர்க்கப் புரட்சியும் கொள்கைமாறி காவுத்ஸ்கியும்” (The Proletarian Revolution and the Renegade Kautsky) என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

       பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்காத சந்தர்ப்பவாதமானது, வர்க்கப் போராட்டத்துக்கான அங்கீகாரத்தை முதலாளித்துவ உறவுகளின் எல்லைக்குள் கட்டுப்படுத்திக் கொள்கிறது. அதனால் பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்காதவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தை ஒழிப்பதற்கு சக்தியற்றவர்களாகவே இருப்பர்.

 அரசு பற்றி மார்க்சியக் கோட்பாட்டை ஏற்று கடைப்பிடிப்பவர்களே முதலாளித்துவத்தை ஒழித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அமைத்து, வர்க்கமற்ற சமூகத்தை நிறுவி அரசை உலர்ந்துவிடச் செய்வார்கள்.

       தனி நபர் சர்வாதிகாரத்தையும் அரசு சர்வாதிகரத்தையும் புரிந்து கொள்ள முடியாது தவிர்ப்பவர்களே பாட்டாளி வர்க்க சர்வாதிகரம் என்ற சொல்லை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றனர். முதலாளித்துவ அரசும் சர்வாதிகரம்தான், பாட்டாளி வர்க்க அரசும் சர்வாதிகாரம்தான், ஆனால் இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது.

       முதலாளித்துவ அரசை ஒழித்தப் பின்பு, இடைக் காலகட்டத்தில் தவிர்க்க முடியாதபடி அரசு ஒரு புதிய வழியில் ஜனநாயகமான அதாவது, பாட்டாளி வர்க்கத்துக்கும் பொதுவில் சொத்தில்லாதவர்களுக்கும் ஜனநாயகமாகவும், ஒரு புதிய வழியில் சர்வாதிகரமாய் அதாவது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதரான சர்வாதிகார அரசாகவும் இருக்கும்.

       முதலாளித்துவ சர்வாதிகார அரசில் சிறுபான்மையான முதலாளிகளுக்கு சார்பாகவும், பெரும்பான்மையான உழைப்பாளர்களுக்கு பாதமானதாகவும் இருக்கும். பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசானது பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகமாகவும், உழைக்கும் மக்கள் நலனை எதிர்க்கும் சிறுபான்மையான முதலாளித்துவ சிந்தனை உள்ளவர்களுக்கு எதிராகவும் இருக்கும்.

       இதை சிறிதும் புரிந்து கொள்ள முடியாத அமைதிவாதிகளுக்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொல்லைக் கேட்டாலேயே பதறுகிறார்கள். இத்தகைய அறியாமையில் இருப்பவர்கள் உழைக்கும் மக்களுக்கு எந்த வகையிலும் உதவிடமாட்டார்கள், உண்மையாக அவர்களின் போக்கு உழைக்கும் மக்களுக்கு எதிராகவே இருக்கும்.

 அரசு என்பதே சர்வாதிகரம் தான் என்பதை லெனின் கூறுவதை அவர் சொற்களிலேயே பார்ப்போம்.

 

“தனியொரு வர்க்கத்தின் சர்வாதிகாரம் தேவைப்படுவது பொதுவில் ஒவ்வொரு வர்க்கச் சமுதாயத்துக்கு மட்டுமல்ல, முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்திவிட்ட பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல, முதலாளித்துவத்தை "வர்க்கங்களில்லாத சமுதாயத்திலிருந்து'', கம்யூனிசத்திலிருந்து பிரித்திடும் வரலாற்றுக் கட்டம் முழுமைக்கும் தேவைப்படுகிறது என்பதை உணர்வோர் மட்டுமே அரசு பற்றிய மார்க்சின் கோட்பாட்டின் சாரப்பொருளைக் கற்றுத் தேர்ந்தோர் ஆவர்.

 

முதலாளித்துவ அரசுகள் வடிவத்தில் பலதரப்பட்டவை, ஆனால் இவற்றின் சாராம்சம் ஒன்றேதான்: வடிவம் எப்படியிருப்பினும் இந்த அரசுகள் எல்லாம், முடிவாய்ப் பார்க்குமிடத்து, தவிர்க்க முடியாத முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரமே ஆகும். முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிசத்துக்கு மாறிச் செல்வதற்குரிய இடைக்காலம் பலதரப்பட்ட அரசியல் வடிவங்களையும் மிகவும் ஏராளமாய்த் தோன்றவே செய்யும், ஆனால் சாராம்சம் தவிர்க்க முடியாதபடி ஒன்றாகவே இருக்கும்: பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே இருக்கும்.” (255 - 256)

 

      இதில் லெனின் முதலாளித்துவ அரசாக இருந்தாலும்சரி பாட்டாளி வர்க்க அரசியலாக இருந்தாலும்சரி அது சர்வாதிகாரமே என்று தெளிவாக கூறியுள்ளார். அரசுகள் அந்தந்த நாட்டின் சூழ்நிலைமைக்கு ஏற்ற வடிவம் கொள்ளும் ஆனால் அனைத்தும் சர்வாதிகார அரசே என்று எளிமையாக புரியும் வகையில் கூறியுள்ளார்.

மூன்றாவது அத்தியாயம்

1871ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூனது அனுபவம். மார்க்சின் பகுப்பாய்வு.

       மூன்றாம் அதியாயத்தின் முதல் பிரிவு, கம்யூன்போராளிகளின் முயற்சியை வீரமாக்கியது எது?

       மார்க்சியம் புறநிலையின் அடிப்படையிலேயே அனைத்தையும் புரிந்து கொள்கிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தற்செயலாக ஏற்படுகிற புரட்சிகர சூழ்நிலைமைகளை மார்க்சியம் புரிந்து கொள்ளாமல் இல்லை. புறநிலையை புறக்கணித்து தற்செயலுக்குக் காத்துக் கொண்டிருப்பவர்களையே மார்க்சியம் எதிர்க்கிறது.

       1871ஆம் ஆண்டு பாரிசில் தொழிலாளர்கள் போராடும் போது மார்க்ஸ் முதலில் மறுத்தார். புரட்சிக்கான புறநிலை இல்லாத போது பாரிசில் தொழிலாளர்கள் புரட்சி செய்ய முனைந்தனர். அப்போது “அரசாங்கத்தை வீழ்த்துவதற்ககான எந்த முயற்சியும் நம்பிக்கை இழந்தோரின் அசட்டுத் துணிச்சலே ஆகும்” என்றார் மார்க்ஸ். ஆனால் 1871ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொழிலாளர்கள் தீர்மானகரமான போரில் இறங்கும்படியான நிர்பந்தம் ஏற்பட்ட போது, எழுச்சி எதார்த்த உண்மையாகிவிட்டது, பாதகமான அறிகுறிகள் தென்பட்ட போதும், பாரிஸ் தொழிலாளர்களின் வர்க்கப் புரட்சியை மார்க்ஸ் வரவேற்றார். “விண்ணைச் சாடியவர்கள்” என்று போராட்டத்தை போற்றினார், கம்யூன் புரட்சியாளர்களை பாராட்டினார்.

       இந்தத் தொழிலாளர்களின் புரட்சியானது தனது குறிக்கோளை எட்டவில்லை, என்றாலும் அது அளவுகடந்த வரலாற்று அனுபவமாக மார்க்ஸ் கருதினார். இந்தப் புரட்சியானது உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் குறிப்பிட்ட முன்னேற்றமாகும். நூற்றுக் கணக்கான வேலைத்திட்டங்கள், வாதங்களையும்விட முக்கியமான ஒரு நடைமுறையாகும்.

       பாரிஸ் கம்யூன் தோல்வி அடைந்தாலும், அந்தப் புரட்சியின் அனுவத்தை மார்க்ஸ் ஆராய்ந்தார். பாரிஸ் அனுபவத்தின் அடிப்படையில் மார்க்சியக் கோட்பாடுகளை வளர்த்தெடுத்தார்.

 பாரிஸ் கம்யூன் அனுபவத்தில் இருந்து அரசு பொறியமைவு பற்றிய புதிய முடிவுக்கு மார்க்ஸ் வந்தடைந்தார். 1872ஆம் ஆண்டு ஜீன் மாதம் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின்” புதிய ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் அதை வெளிப்படுத்தினார். அதை அப்படியே பார்ப்போம்.

 

“…கம்யூனானது முக்கியமாய் ஒரு விவரத்தை, அதாவது ‘ஏற்கெனவே உள்ள அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டுவிட முடியாது’ என்பதை, நிரூபித்துக் காட்டிற்று….” (257)

  “பிரான்சில் உள்நாட்டுப் போர்” என்ற நூலில் எழுதியதை அப்படியே அறிக்கையில் மார்க்ஸ் வெளிப்படுத்தி உள்ளார்.

       வெற்றிப் பெற்ற தொழிலாளர்களின் புரட்சி அரசானது, பழைய முதலாளித்துவ அதிகாரவர்க்கம், இராணுவம் ஆகியவற்றை அழித்தொழிக்க வேண்டியிருந்தது. இந்தப் பணியை பழைய அரசு பொறியமைவு வைத்துக் கொண்டு செய்திட முடியாது. பழைய அரசு நொறுக்கிவிட்டு தமக்கான புதிய அரசை அமைக்க வேண்டும்.

       மூன்றாம் அதியாயத்தின் இரண்டாவது பிரிவு, தகர்க்கப்படும் அரசுப் பொறியமைவுக்குப் பதிலாய் அமையப் போவது எது?

       தொழிலாளர்களால், தகர்த்தப்படும் முதலாளித்துவ அரசுக்கு பதிலாய் எப்படிப்பட்ட அரசை அமைக்க வேண்டும் என்பது பற்றி “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்” கருத்தியலானதாகவே காணப்பட்டது. ஏன் கருத்தியலாக இருக்கிறது என்றால் மார்க்ஸ் இதைப் பற்றி கற்பனையில் கூறிட விரும்பவில்லை. தொழிலாளர்களின் புரட்சிகர அனுபவம் பதிலளிக்கும் என்று மார்க்ஸ் எதிர்ப்பார்த்தார். பாரிஸ் கம்யூன் அனுபவம் கிடைத்தப் பின்னரே, இதைப் பற்றி, “பாரிசில் உள்நாட்டுப் போர்” என்ற நூலில் எழுதினார்.

       நிலையான படைக்குப் பதிலாக ஆயுதமேந்திய மக்கள் படையை அமைப்பது பற்றிய சட்டமே, கம்யூன் அரசு போட்ட முதல் அரசாணை ஆகும். அனைத்து மக்களது வாக்குரிமையின் அடிப்படையில் பாரிஸ் நகரின் பல்வேறு தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கபபட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு, கம்யூன் நிறுவப்பட்டது. இந்த உறுப்பினர்கள் பொறுப்புள்ளவர்களாகவும் எந்நேரத்திலும் நீக்கப்படக் கூடியவர்களுமாய் இருந்தனர்.

 வாக்களிக்கும் மக்களின் பிரதிநிதி தவறாக செயல்பட்டாலோ, மக்களுக்கு விரோதமாக செயல்பட்டாலோ அவர்களை நீக்கும் அதிகாரம் வாக்களிப்பவர்களுக்கு இருந்தது.

      இதுவரை அரசாங்கத்தின் கைக்கருவியாய் இருந்த போலீஸ் இப்போது எக்காலத்தில் நீக்கப்படக்கூடிய கம்யூனின் கைக்கருவியாய் மாற்றப்பட்டது. முதலாளித்துவ ஜனநாயகமாய் இருந்ததில் இருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகமாய் மாற்றம் பெற்றது. அரசு இனி மெய்யான அரசு அல்லாத ஒன்றாய் மாற்றம் அடைந்துவிட்டது. அதாவது இதுவரை இருந்த அரசு போல் இல்லாது புதிய அரசாய் அது இருந்தது.

       அதிகாரிகளுக்கான அனைத்து தனிச் சலுகைகளையும் ஒழித்தல், அதிகாரிகளின் சம்பளம், தொழிலாளர்களின் சம்பளத்துக்கு இணையாகக் கொடுத்தல் போன்ற கம்யூனின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மார்க்ஸ் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

       முதலாளித்துவ வர்க்கத்தாரை அடக்குவதும் அவர்களுடைய எதிர்ப்பை நசுக்குவதும் இன்னும் அவசியமாகவே இருக்கிறது. பாரிஸ் கம்யூனுக்கு இது மிகமிக அவசியமாய் இருந்தது. இதை போதிய உறுதியோடு செய்யாதது கம்யூனுடைய தோல்விக்கு முதன்மைக் காரணங்களில் ஒன்றாகும் என்று மார்க்ஸ் கருதினார்.

      இரண்டாவது அத்தியாயத்தின், மூன்றாம் பிரிவு, நடாளுமன்ற முறையை ஒழித்தல்.

 கம்யூனானது, நடாளுமன்ற உறுப்பாய் இல்லாமல், செயலாற்றும் உறுப்பாய், ஒருங்கே சட்டமன்றமாகவும் நிர்வாகக் குழுவாகவும் செயல்படும் உறுப்பாய்த் திட்டமிட்டப்பட்டது என்று மார்க்ஸ் எழுதியதை சுட்டிக்காட்டி லெனின் இந்தப் பிரிவைத் தொடங்குகிறார்.

 மக்களை அடக்கி ஒடுக்கி நசுக்க வேண்டும் என்பதை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவெடுப்பதுவே பாராளுமன்ற முடியாட்சிகளின் சாரமமாகும். முடியாட்சியளில் மட்டுமல்ல மிகவும் ஜனநாயக குடியரசுகளிலும் முதலாளித்துவ பாராளுமன்றவாதத்தின் உண்மையான சாராம்சமும் அதுவே ஆகும்.

 இங்கே லெனின் மிகவும் தெளிவாக முதலாளித்துவ பாராளுமன்றத்தின் சாரத்தைக் குறிப்பிட்டுள்ளார். பல இடதுசாரிகள் இத்துடன் நின்றுவிடுகின்றனர். நாடாளுமன்றத்திற்குள் செல்வதே தவறானது என்பதுபோல் கூறிவிடுகின்றனர். இவ்வாறு கருதுபவர்கள் மார்க்சியவாதிகள் அல்ல அராஜகவாதிகளே ஆவர்.

 நம் நாட்டில், நாடாளுமன்ற புறக்கணிப்பாளர்கள்தான் நாடாளுமன்றத்தை பன்றி தொழுவம் என்று அதிகம் கூறிவருகின்றனர். நாடாளுமன்றத்தையும் பன்றி தொழுவத்தையும் இணைத்து பேசியது லெனின்தான். ஆனால் இந்த புறக்கணிப்பாளர்களின் கருத்தில் லெனின் பேசவில்லை. நாடாளுமன்ற முறை பன்றித் தொழுவமே ஆயினும் அதனைப் பயன்படுத்த வேண்டும், அதுவும் நிலைமை புரட்சிகரமானதாக இல்லதபோது பயன்படுத்துவது தேவையான ஒன்றாக இருக்கிறது. நாடாளுமன்றத்தை புறக்கணிப்பது அல்லது ஏற்பதும் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தளவில் இறுதிநோக்கமாக இருக்க முடியாது அது ஒரு செயல்தந்திரமாக இருக்க வேண்டும். அதாவது நாடாளுமன்றத்தை ஏற்பதோ புறக்கணிப்பதோ strategy இருக்கக்கூடாது அது tacticsயாக இருக்க வேண்டும்.

 போல்ஷிவிக் கட்சியின் அனுபவம் நமக்குத் இதைத் தெளிவு படுத்தியுள்ளது. போல்ஷிவிக்குகள் சில நேரங்களில் டூமாவை புறக்கணித்தனர் சில நேரங்களில் டூமாவில் பங்பேற்றனர். நாடாளுமன்றத்தில் மூழ்கிப்போவது எந்தளவுக்குத் தவறோ அதே அளவுக்கு நாடாளுமன்றத்தை முற்றப் புறக்கணிப்பும் தவறாகும்.

 லெனின் மார்க்சை முன்வைத்து கூறியதை அவரது மொழியிலேயே பார்ப்போம். என்னுடைய சொற்கள் எதையும் பயன்படுத்தாது இங்கே லெனின் சொற்களிலேயே பார்ப்போம்.

 

“மார்க்சுக்குப் புரட்சிகர இயக்கவியலானது, பிளெஹானவும் காவுத்ஸ்கியும் ஏனையோரும் ஆக்கிக் கொண்டு விட்ட வெற்று ஜம்பமாகவோ விளையாட்டுக் கிலுகிலுப்பையாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. முதலாளித்துவ நாடாளுமன்ற முறை "பன்றித் தொழுவமே" ஆயினுங்கூட அதனைப் பயன்படுத்திக் கொள்ள, முக்கியமாய் நிலைமை புரட்சிகரமானதாய் இல்லை என்பது தெளிவாய்த் தெரியும் நேரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் திராணியற்றதாய் இருந்ததென்பதற்காக அராஜகவாதத்திடமிருந்து தயவு தாட்சண்யமின்றி முறித்துக் கொள்ள மார்க்சுக்குத் தெரிந்திருந்தது. அதேபோது நாடாளுமன்ற முறையை மெய்யாகவே புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலையில் இருந்து விமர்சிக்கவும் அவருக்குத் தெரிந்திருந்தது.” (270 -271)

       இங்கே லெனின் கூறியது போல நாடாளுமன்றத்தை புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலையில் இருந்து விமர்சிக்கவும் வேண்டும், அதே நேரத்தில் நாடாளுமன்றத்தை பன்றித் தொழுவம் என்று கூறி முற்றப் புறக்கணிக்காமல் பயன்படுத்தத் தெரிந்திருக்கவும் வேண்டும்.

 அராஜகவாதிகளின் கோட்பாட்டை விமர்சித்தே மார்க்சியம் நிலைபெற்றது.

       நாடாளுமன்றத்தை பன்றி தொழுவம் என்று இந்த நூலில் கூறியது போலவே மற்றொர் இடதிலும் கூறியுள்ளார்.

 

"…. மூன்றாவது நான்காவது டூமாவில் பங்கெடுக்க ஒத்துக்கொண்டது ஒரு சமரசமேயாகும், தற்காலிகமாகப் புரட்சிகரமான கோரிக்கைகளைக் கைவிடுவதேயாகும். ஆனால் இந்தச் சமரசம் முற்றிலும் நம் மீது நிர்ப்பந்தமாகச் சுமத்தப்பட்டதேயாகும், ஏனெனில், சக்திகளின் பரஸ்பர நிலையானது நாம் வெகுஜனப் புரட்சிப் போராட்டத்தை நடத்துவதைத் தற்காலிகமாக அசாத்தியமாக்கிவிட்டிருந்தது, மேலும் இந்தப் போராட்டத்துக்கு ஒரு நீண்ட காலப்பகுதியில் தயாரிப்பு செய்யும் பொருட்டு நாம் இப்படிப்பட்ட ஒரு "பன்றி தொழுவத்தின்" உள்ளேகூட இருந்து வேலை செய்யத் திறமை பெற்றிருக்க வேண்டியிருந்தது. ஒரு கட்சி என்கிற முறையில் போல்ஷிவிக்குகள் இப்பிரச்சினையை இவ்விதம் அணுகியதானது முற்றிலும் சரியே என்பதை வரலாறு நிரூபித்துள்ளது."

(சமரசங்கள் குறித்து)

      நம் நாட்டில் லெனின் கூறிய பன்றி தொழுவம் என்பது நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பதற்குப் பயன்பட்டது. ஆனால் லெனின் பன்றி தொழுவத்தில் இருந்து வேலை செய்வது, புரட்சி போராட்டத்துக்கு ஒரு நீண்ட காலப்பகுதியாக தயாரிப்பு செய்வதற்கு என்று கூறியுள்ளார். புரட்சிக்கான புறநிலை இல்லாத போது புரட்சிக்கான தயாரிப்பு வேலையை செய்ய வேண்டும். அத்தகைய தயாரிப்பு இல்லாது போனால் புரட்சிக்கான புறநிலை ஏற்படும் போது தயாரிப்பு இல்லாதக் காரணத்தால் புரட்சியை தவறவிடும் சூழ்நிலையே ஏற்படும் என்பதை அராஜகவாதிகள் அறிந்திடாது இருக்கின்றனர்.

      புரட்சிகரமான பாட்டாளி வர்க்கப் பார்வையில் நாடாளுமன்ற முறையை விட்டொழிக்கும் வழி என்ன? நாடாளுமன்ற முறையைத் தவிர்ப்பது எப்படி?

இதற்கு பதிலளிக்கும் முன் லெனின் கம்யூனை முன்வைத்து என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். “கம்யூனை ஆராய்ந்து மார்க்ஸ் எடுத்துரைத்த படிப்பினைகள் அப்படியே அடியோடு மறக்கப்பட்டுவிட்டதால், இன்றைய “சமூக-ஜனநாயகவாதிகள்” அதாவது சோஷலிசத்தின் இன்றை துரோகியால், நாடாளுமன்ற முறை பற்றிய அராஜகவாத அல்லது பிற்போக்கு விமர்சனத்தைத் தவிர்த்து வேறு எந்த விமர்சனத்தையும் உண்மையில் புரிந்து கொள்ள முடியவதில்லை”

இவ்வாறு கூறிய பின்பே, புரட்சிகரமான பாட்டாளி வர்க்கப் பார்வையில் நாடாளுமன்ற முறையை விட்டொழிக்கும் வழி என்ன? என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார்

லெனின் பதிலாகத் தருவதை அப்படியே பார்ப்போம்.

“நாடாளுமன்ற முறையை விட்டொழிப்பதானது பிரதிநிதித்துவ உறுப்புகளையும் தேர்தலையுமே விட்டொழிப்பதாகாது. பிரதிநிதித்துவ உறுப்புகள் வெறும் வாய்ப் பேச்சுக் கூடங்களாய் இருப்பதை மாற்றி அவற்றை “செயலாற்றும்” உறுப்புகளாக்க வேண்டுமென்பதே இதன் பொருள்.”

   பொதுவாக நாடாளுமன்ற செல்லப்பிள்ளைகளான இடதுசாரிகளுக்கு, இது தெரிவதில்லை.

      19ஆம் நூற்றாண்டின் எழுபதாம் ஆண்டுகளில் வேடிக்கையாக ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதி ஒருவர் அஞ்சல் பணித் துறையை சோஷலிசப் பொருளாதார அமைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாய் குறிப்பிட்டார். இது  ஒரு வகையில் உண்மையே. தற்போது தபால் சேவை என்பது அரசு-முதலாளித்துவ ஏகபோகத்தின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட வணிகமாகும். ஏகாதிபத்தியம் படிப்படியாக அனைத்து அறக்கட்டளைகளையும் ஒரே மாதிரியான அமைப்புகளாக மாற்றுகிறது.

கம்யூனின் அனுபத்தில் லெனின் கூறுகிறார், தொழில் நுட்ப வல்லுநர்கள், ஃபோர்மேன்கள், கணக்காளர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் "ஒரு தொழிலாளியின் ஊதியத்தை" விட அதிகமாக ஊதியம் பெறாத வகையில் இருக்க வேண்டும். அனைத்துப் பொருளாதாரத்தையும் அஞ்சல் சேவையின் வழியில் ஒழுங்கமைக்க வேண்டும். ஆயுதமேந்திய பாட்டாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டிலும் தலைமையிலும் இதை செய்ய வேண்டும். இதுவே நமது உடனடி நோக்கம். இதுவே நாடாளுமன்றவாதத்தை ஒழித்து பிரதிநிதித்துவ அமைப்புகளைப் பாதுகாக்கும். இதுவே இந்த உறுப்புகளை முதலாளித்துவ வர்க்கம் ஆழ்த்திய இழிநிலையில் இருந்து தொழிலாளர் வர்க்கங்களை விடுவிக்கும்.

      மூன்றாம் அத்தியாயத்தின் நான்காவது பிரிவு, தேசிய ஒற்றுமையின் நிறுவன ஒழுங்கமைப்பு.

      இந்தப் பிரிவை நாம் மிகமிக சுருக்கமாகவே பார்க்கப் போகிறோம், விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு மூல நூலை எடுத்துப் படிக்க வேண்டும்.

      பாட்டாளி வர்க்க சர்வாதிகரம் என்பது மத்தியத்துவ அதிகாரம்தான். இதை அராஜகவாதிகள் ஏற்பதில்லை. கூட்டாட்சிக் கோட்பாடு பற்றிய பிரச்சினையில் புருத்தோன், பக்கூன் போன்ற அராஜகவாதிகளிடம் இருந்து மார்க்ஸ் வேறுபடுகிறார். கூட்டாட்சிக் கோட்பாடானது, அராஜகவாதத்தின் குட்டி முதலாளித்துவக் கருத்துக்களில் இருந்து தர்க்க வழியில் பெறப்பட்ட ஒன்று.

மார்க்ஸ் மத்தியத்துவவாதி. மார்க்ஸ் கூறிய கருத்துக்களில் எங்கேயும் மத்தியத்துவத்தில் இருந்து எந்த இடத்திலும் விலகியதே இல்லை. அரசு பற்றிய அற்பத்தனமான மூடபக்தியில் மூழ்கிக் கிடப்போரே முதலாளித்துவ அரசு பொறியமைவை அழிப்பது மத்தியத்துவத்தை அழிப்பதாகும் என்று நினைக்க முடியும். இது தவறானதாகும் என்கிறார் லெனின்.

   முதலாளித்துவ அரசை வீழ்த்தி அமைக்கும் தொழிலாளர்களின் அரசானது மத்தியத்துவம் அடிப்படையில்தானே இருக்கும்.

பாட்டாளி, விவசாயி ஆகிய தொழிலாளர்களின் அரசு அதிகாரம் என்பது மத்தியத்துவம் இல்லாது எப்படி இருக்க முடியும். முதலாளிகளின் எதிர்ப்பை அடக்குவது, தனியார் உடைமையாய் இருக்கும் ரயில் துறையை சமூகம் முழுமையின் உடைமையாய் மாற்றுவது, இதுபோன்ற அனைத்தையும் கம்யூன்களுடைய செயலையும் ஒன்றுபடுத்திக் கொண்டால், அது மத்தியத்துவம் அன்றி வேறு என்ன? சிறிதும் முரணில்லாத ஜனநாய மத்தியத்துவத்தோடு பாட்டாளி வர்க்க மத்தியத்துவமும் இல்லாமல் பிறகு என்ன? என்று கேள்வி கேட்டு லெனின் மத்தியத்துவத்தை வலியுறுத்தி பேசியுள்ளார்.

       மூன்றாம் அத்தியாயத்தின் ஐந்தாவது பிரிவு, புல்லுருவி அரசை ஒழித்தல்.

      உழைப்பை வாங்குபவர் உழைப்பைச் செலுத்துபவர் என்கிற இரண்டு வர்க்கத்தின் இணக்கம் காண முடியாத பகைமையின் வெளிப்பாடே அரசு என்று மார்க்சியம் கூறுகிறது.

       அராஜகவாதிகள் அரசியல் நடவடிக்கைகளை முற்றப் புறக்கணிக்கின்றனர். தற்கால சமூக-ஜனநாயகத்தின் சந்தர்ப்பவாதிகள் நாடாளுமன்ற ஜனநாயக அரசுக்குரிய முதலாளித்துவ அரசியல் வடிவமானது இறுதி வரம்பென்றும் இதற்கு அப்பால் அடியெடுத்து வைக்கக்கூடாது என்று கருதினர். ஒரு அரசே அனைத்துத் தீங்கக்கும் காரணம் என்று கருதியது அரஜாகவாதத்தின் முக்கியமான ஒரு தவறாகும், மற்றொன்று முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனமாநாயக அரசே இறுதி வடிவம் என்று கருதியது அவர்களின் பெரும் தவறாகும்.

       இந்த இரண்டு போக்குக்கும் மாறாக மார்க்ஸ் அரசு மறைந்தே தீரும். மறைவுக்கான இடைக் காலத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார இருக்கும் என்றார். இந்த முடிவு பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு மார்க்ஸ் வலியுறுதிக் கூறியுள்ளார். மார்க்ஸ் கற்பனையில் தனது கோட்பாட்டை உருவாக்கவில்லை. பாரிஸ் கம்யூன் குறுகிய காலத்திலேயே தோல்வி அடைந்திருத்தாலும் இதன் அனுபவங்களை மார்க்ஸ் கணக்கில் கொண்டு தமது கோட்பாட்டை செழுமைப்படுத்தினார்.

 மூன்றாம் அத்தியாத்துடன் இன்றைய வகுப்பு முடிவடைந்தது.