Sunday, 2 July 2023

லெனின் எழுதிய “எங்கிருந்து தொடங்குவது” என்கிற கட்டுரையின் சாரம்

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 90- வது வார வகுப்பு – 02-07-2023  )            


லெனினுடைய எழுத்துக்கள் இன்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது.  லெனின் 1901ஆம் ஆண்டு எழுதிய “நமது வேலைத்திட்டம்” என்கிற சிறு கட்டுரையைத்தான் இன்று பார்க்கப் போகிறோம்.

 “இஸ்க்ரா” பத்திரிகையின் நான்காவது இதழில் தலையங்கமாக லெனின் வெளியிடப்பட்டதே “எங்கிருந்து தொடங்குவது என்கிற கட்டுரை ஆகும்.

       “எங்கிருந்து தொடங்குவது” என்ற கட்டுரையின் விரிவாக்கமே “என்ன செய்ய வேண்டும்” என்கிற நூல் ஆகும்..

       அன்றைய கட்டத்தில் கம்யூனிஸ்ட்டை சமூக-ஜனநாகவாதி என்றே அழைத்தனர். இந்தக் கட்டுரையில் லெனின் அவ்வாறே அழைக்கிறார். ஆனால் புரிதலுக்காக நாம் கம்யூனிஸ்ட் என்றே பெரிட்டுக் கொள்வோம். கட்சியை சமூக-ஜனநயாக கட்சி என்றே குறிப்பிட்டனர். இன்று நாம் அதை கம்யூனிஸ்ட் கட்சி என்று குறிப்பிடுகிறோம்.

       ருஷ்ய கம்யூனிஸ்ட்  எதிர்நோக்கும் மிக அவசரமான ஒரு கேள்வி இருக்கிறது என்கிறார் லெனின். அந்தக் கேள்வி என்னவென்றால், “என்ன செய்ய வேண்டும்.”

 இந்தக் கேள்வி எந்தத் திசை வழியை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி எழுப்படவில்லை. கம்யூனிச திசைவழியில் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்ததினால்தான் இந்த கட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயர் வைத்துள்ளது. இந்த முடிவில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதுமானது அல்ல. அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்று திட்டமிட வேண்டியது அமைப்பின் அடிப்படை பிரச்சினை ஆகும்.

 கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிச திசை வழியை தேர்வு செய்தபின், அந்த திசைவழியில் செல்வதற்கு என்னனென்ன நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது அடுத்த முக்கிய கடமை ஆகும். இது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைப் பிரச்சினையாக இருக்கிறது. இந்தப் பிரச்சினையை ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று லெனின் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.

 ஆக, கட்சியினுடைய போராட்டத்தின் தன்மையையும் வழிமுறைகளையும் அமைத்துக் கொள்வதுதான் முதல் வேலை என்பது நமக்கு நன்றாகத் தெரிகிறது.

 கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்வதால் மட்டும் ஒரு கட்சி தமது நடவடிக்கைகளை எளிதாக அமைத்துக் கொண்டுவிட முடியும் என்று கருதமுடியாது. சரியான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தவறான போக்குகள் தடையாக இருக்கிறது.

 முதல் தவறானப் போக்காக லெனின் குறிப்பிடுவது “பொருளாதாரவாதம்” ஆகும். 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ருஷ்யக் கம்யூனிசக் கட்சியில் ஒரு சந்தர்ப்பவாதப் போக்காக பொருளாதாரவாதம் காணப்பட்டது.

 பொருளாதாரவாதம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்வோம். கூலி உயர்வுக்காகவும், வேலை செய்கின்ற சூழ்நிலைமையின் மேம்பாட்டுக்காவும் மட்டும் போராடுவது பொருளாதாரவாதமாகும். தொழிலாளர்களின் அன்றாடத் தேவைகளில் மட்டுமே ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கவனத்தை செலுத்தினால் போதாது. கட்சியின் நோக்கம் இதில் மட்டும் அடங்கிவிடவில்லை. அதன் முக்கியமான தலைமைப் பாத்திரம் என்னவென்றால், தொழிலாளர்களை வர்க்கப்படுத்த வேண்டும், அரசியல் தெளிவு பெறச் செய்ய வேண்டும்.

 கூலி உயர்வுக்காணப் போராட்டத்தின் தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்கு கூலி அமைப்பு முறையின் சுரண்டலை புரிய வைக்க வேண்டும். கூலி உயர்வுக்கான போராட்டத்தை, கூலி அமைப்பு முறையைத் தூக்கி எறிவதற்கான போராட்டமாக, வர்க்கப் போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும். இதனை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி செய்யாது போனால் அந்த கட்சியின் அரசியல், முதலாளித்துவ அரசியலாக சுருங்கிப் போய்விடும்.

 இந்த ஆபத்தை உணர்ந்து பொருளாதாரவாதப் போக்கை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து ஒழிக்க வேண்டும். ஆனால் அன்று ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியில் இதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்பதை லெனின் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.

 அடுத்து, கட்சியில் மற்றொரு போக்கும் காணப்படுவதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். கோட்பாட்டில் கறார் தன்மையில்லாத கதம்பப் போக்கு தலை தூக்கி நிற்கிறது. கட்சியின் இறுதிக் குறிக்கோளுக்கும் தற்கால அவசியங்களுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் இருப்பதே இந்த கதம்பப் போக்கின் பிரச்சினை ஆகும்.

 “ரபோச்சியே தேலோ” என்கிற பத்திரிகை இந்தப் போக்கையே தேர்ந்தெடுத்துள்ளது. இந்தக் கதம்பவாதிகள் பிளெகானவ் கூறிய கருத்தின் ஆழத்தைக் குறைக்க முயல்கின்றனர். லீப்னெட் கூறியதை மேற்கோளாக காட்டுகின்றனர்.

 “சூழ்நிலைகள் 24 மணி நேரத்தில் மாறினால் செயல்தந்திரங்களும் 24 மணி நேரத்திற்குள் மாற வேண்டும்.” மேலும் எதேச்சாதிகாரத்தை நேரடியாகத் தாக்குவது பற்றியும் அழிப்பது பற்றியும் “ரபோச்சியே தேலோ” பேசுகின்றது.

       "ரபோச்சியே தேலோ" என்பதின் பொருள் "தொழிலாளர்களின் லட்சியம்" என்பதாகும்.  வெளிநாட்டு வாழ் ருஷ்ய கம்யூனிஸ்ட் சங்கத்தின் பத்திரிகையே "ரபோச்சியே தேலோ". இப்பத்திரிகை 1899ஆம் ஆண்டு ஜினீவாவில் இருந்து வெளியிடப்பட்டது. பொருளாதாரவாதிகளின் கருத்தை வெளிப்படுத்தும் பத்திரிகையாக இது இருந்தது. இரண்டாவது ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரசில் "ரபோச்சியே தேலோ" போக்குடையவர்கள் தீவிரமான வலதுசாரி சந்தர்ப்பவாதப் பிரிவைப் பிரதிநித்துவப்படுத்தியது.

 “இஸ்க்ரா” என்பது ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டவிரோதமான பத்திரிகை ஆகும். ருஷ்ய சூழ்நிலைமையில் கட்சி கட்டுவதில் இந்த பத்திரிகை பெரும்பங்கு ஆற்றியது. “இஸ்க்ரா” என்ற ருஷ்ய சொல்லுக்கானப் பொருள் தீப்பொறி என்பதே ஆகும்.

 “இஸ்க்ரா” போக்காக லெனின் இங்கே சொல்வது என்னவென்றால், தனித்தனியான சலுகைகளைப் போராடிப் பெறுவதோடு நின்றுவிடாமல், எதேச்சாதிகாரக் கோட்டையை முழுமையாக வன்மையுடன் தாக்கி அழிப்பதை நோக்கமாகக் கொண்ட நிறுவனப்படுத்தப்பட்ட வலுவான கட்சியை அமைக்க வேண்டும் என்பதாகும்.

       “இஸ்க்ரா”வின் முதல் இதழில் ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த வேலைத்திட்டத்தை “ரபோச்சியே தேலோ” இவ்வளவு விரைவாக ஏற்றுக் கொண்டதைக் கண்டு திருப்தி கொள்ளலாம், ஆனால் ஏற்றுக் கொண்டவர்களிடம் எவ்வித உறுதியான போக்கு இல்லாதது முழு திருப்தியை பாழ்படுத்திவிட்டது என்கிறார் லெனின்.

 “ரபோக்சியோ தேலோ” பத்திரிகை லீப்னெட் பெயரை வீணாகக் குறிப்பிட்டுள்ளது. சூழ்நிலை மாறிவிட்டது என்றும் காலம் மாறிவிட்டது என்றும் “ரபோச்சியோ தேலோ” வாதிப்பது கேலிக்குறியது என்கிறார் லெனின்.

       தொழிலாளர்களுக்கு போராடும் தன்மை வாய்ந்த கட்சியை உருவாக்குவதும் அரசியல் கிளர்ச்சியை நடத்துவதும் அனைத்துக் காலங்களிலும் அவசியமானதாகும். அதாவது “மந்தமான அமைதியான” நிலையிலும் “புரட்சிகரமான ஊக்கம் குன்றியத் தேயும்” காலத்திலும் போராடும் தன்மை உடைய கட்சி தேவையான ஒன்றாகும்.

       போராடும் தன்மை வாய்ந்த கட்சி அமைக்கப்பட்டிருப்பது என்றைக்கும் அவசியமான ஒன்றாகும். தீடீர் என்று புரட்சிக் கலகங்கள் ஏற்படும் போது அமைப்பை உருவாக்குவது என்பது காலம் கடந்த முயற்சியாக ஆகிவிடும். ஒரு நொடியில் நடவடிக்கையைத் தொடங்குவதற்குத் தயாராக கட்சி இருக்க வேண்டும்.

 லெனின் இங்கே கூறுவது மிகமிக முக்கியமான ஒன்றாகும். கட்சி என்பது இன்றையத் தேவையாக மட்டுமல்லாது உழைப்பாளர்களின் எதிர்காலத் தேவையை உணர்ந்து கொண்டதாக இருக்க வேண்டும். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறம் பெற்றதாக கம்யூனிஸ்ட் கட்சி இருக்க வேண்டும். அதற்கு தக்கவகையில் கட்சியை நிறுவனப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

 கட்சி என்பது தொழிலாளர்களின் முன்னணிப்படையாகும். முன்னணிப் படை என்றால் அதற்கு உரிய திறத்தை பெற்றதாக கட்சி இருக்க வேண்டும்.

 “ரபோக்சியோ தேலோ” 24 மணி நேரத்தில் செயல்தந்திரங்களை மாற்றிக் கொள்வதாக கூறிக் கொள்கிறது. ஆனால் செயல்தந்திரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் முதலிலேயே செயற்தந்திரங்களை வகுத்திருக்க வேண்டுமே என்கிறார் லெனின்.

 அனைத்துவிதச் சூழ்நிலைகளிலும் அனைத்துக் காலங்களிலும் நடத்தப்பட்ட அரசியல் போராட்டத்தில் சோதிக்கப் பெற்ற வலுவான அமைப்பு இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் உறுதியான கோட்பாடுகளால் ஓளியூட்டப்பட்டு, விடாப்பிடியான நிறைவேற்றப்பெறும் முறையான செயல் திட்டத்தைப் பற்றி பேசுவதற்கு இடமில்லை என்கிறார் லெனின்.

 “ரபோக்சியோ தேலோ” பயங்காவாதத்தை ( terror) புதியப் பிரச்சினையாக கருதுவது ஆதாரமற்றதாகும். இங்கே லெனின் பயங்கரம் அதாவது  terror என்கிற சொல்லையே பயன்படுத்தி உள்ளார். இதனை நாம் பலப்பிரயோகம் என்பதாகப் புரிந்து கொள்ளலாம்.

 லெனின் கம்யூனிஸ்டுகளின் பயங்கரவாதம் பற்றிய அதாவது பலப்பிரயோகக் கோட்பாட்டைப் பற்றிய கருத்தை தொகுத்தளித்துள்ளார்.

 லெனினது இந்தக் கருத்தை ஒரு நீண்ட மேற்கோளாக பார்ப்பதை தவிர்க்க முடியாது. முதலில் அதில் பேசப்பட்டுள்ளதை சுருக்கமாகப் பார்த்துவிட்டு அந்த மேற்கோளை முழுமையாகப் பார்க்கலாம். இந்த மேற்கோளில் உள்ள பகுதி கருத்தை மட்டும் பிடித்துக் கொண்டு மற்றக் கருத்துக்களை விட்டுவிடுவது பெரும் தவறாகும். லெனின் இங்கே கூறிய அனைத்தையும் உள்வாங்கி கோட்பாட்டைப்புரிந்து கொள்ள வேண்டும்.

 கோட்பாடு என்கிற வழியில் கம்யூனிஸ்டுகள் பயங்கரவாததை எப்போதும் நிராகரிக்கவில்லை. பயங்கரவாதம் என்பது போராட்ட முறையில் ஒரு நடவடிக்கை ஆகும். குறிப்பிட்ட சூழநிலையில் பயங்கரவாதம் பொருத்தமாக இருப்பதோடு இன்றியமையாததாகவும் இருக்கிறது.

 மைய அமைப்பு இல்லாத நிலையில், புரட்சிகர அமைப்புகள் பலவீனமாக இருக்கும் நிலையில், முழுமையாக போர் புரிவதாக இல்லாமல் தனித்த தாக்குதலாகவே இருக்கும். அரசாங்க சக்திகளை இத்தகையப் போக்கு சீர்குலைக்காமல் உண்மையில் புரட்சிகரச் சக்திகளையே சீர்குலைக்கிறது.

 தனிப்பட்ட வீரச் செயல்களின் முக்கியத்துவத்தை மறுக்கும் நோக்கம் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை. பயங்கரவாதத்தை முதன்மையான அடிப்படையான போராட்ட முறையாகக் கருதுவதை கம்யூனிஸ்டுகள் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.

 சிறந்த முறையில் ஒரு தீர்க்கமான தாக்குதலில் பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்றாக மட்டுமே பயங்கரவாதம் செயல்பட முடியும் என்கிறார் லெனின்.

 லெனின்:-

"கோட்பாடு ரீதியில் நாம் பயங்கரவாதத்தை ஒரு பொழுதும் நிராகரித்ததில்லை; நிராகரிக்கவும் முடியாது. பயங்கரவாதம் என்பது போராட்ட நடவடிக்கையில் ஒருவகையாகும். அது படைகளின் குறிப்பிட்ட நிலையையும், குறிப்பிட்ட சூழ்நிலைகளையும் பொறுத்து, போராட்டத்தின் குறிப்பிட்ட தருணத்தில் முற்றிலும் பொருத்தமாக இருப்பதுமட்டுமின்றி இன்றியமையாததாகவும்கூட இருக்கலாம். ஆனால் இவர்களது கூற்றின் சாரம் என்ன? போராட்டத்தின் முழு ஏற்பாட்டுடன் நெருக்கமாகப் பின்னிப்பிணைந்த வகையில், களம் புகுந்து போர் புரியும் படையின் ஒரு நடவடிக்கையாக இவர்கள் இப்போது பயங்கரவாதத்தைக் கருதாமல், எந்தப் படையுடனும் தொடர்பற்ற விதத்தில், தனித்து நிற்கும் தாக்குச் செயலாகவே அதனைக் கருதிப் பேசுகிறார்கள்.

 

மைய அமைப்பு இல்லாத நிலையில், வட்டாரப் புரட்சி அமைப்புகள் பலவீனமாக இருக்கும் நிலையில், பயங்கரவாதம் இந்த வகையிலேதான் உருவாகும். எனவேதான், தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய போராட்ட முறை காலத்திற்கு ஒவ்வாததாயும் பொருத்தமற்றதாயும் உள்ளதென்று நாம் உறுதியாகச் சாதிக்கிறோம்.

 

மேலும் இப்போராட்ட முறை தீவிரமாகப் போராடும் வீரர்களின் கவனத்தை, முழு இயக்கத்தின் நலன்களைக் கருதுங்கால் மிகமிக அதிகமான முக்கியத்துவம் வாய்ந்த உண்மைக் கடமையிலிருந்து அப்பால் திருப்புகிறது என்றும், அது அரசாங்கச் சக்திகளை அல்ல, புரட்சிகரச் சக்திகளையே சீர்குலைக்கிறது என்றும் நாம் உறுதியாகப் பிரகடனம் செய்து வருகிறோம்.

அண்மைகால நிகழ்ச்சிகளை நினைவூட்டிக் கொள்ளுங்கள்: நம் கண்ணெதிரே, மிகப்பரந்த அளவிலான நகரத் தொழிலாளரும் "சாமானியக் குடிகளும்' போராட்டத்தில் குதிக்கத் துடிதுடிக்கிறார்கள். ஆனால் புரட்சியாளர்களுக்குத் தலைவர்களையும் அமைப்பாளர்களையும் கொண்ட செயற்குழு எதுவும் இல்லை. இத்தகைய சூழ்நிலைகளில் ஆற்றல் மிக்க புரட்சியாளர்கள் பயங்கரவாதத்தைத் தழுவுவதால், நாம் எந்தப் போர்ப் படைகள் மீது உண்மையில் நம்பிக்கை வைக்கலாமோ அந்தப் போர்ப் படைகள் பலவீனமடையும் என்ற ஆபத்து ஏற்படாதா? அதிருப்தி அடைந்து, எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு, போராட்டத்துக்குச் சித்தமாயிருப்பவர்களும், சிதறியிருக்கும் காரணத்தால் மட்டுமே வலுக்குறைந்திருப்பவர்களுமான திரளான மக்களுக்கும் புரட்சி அமைப்புகளுக்கு மிடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்பெறும் என்ற ஆபத்து ஏற்படாதா? அந்தத் தொடர்புதானே நமது வெற்றிக்கான ஒரே உத்தரவாதம்.

 

தனிப்பட்ட வீரச் செயல்களின் முக்கியத்துவத்தை மறுக்கும் நோக்கம் நமக்குச் சிறிதும் இல்லை. ஆனால் பயங்கரவாதத்தை மிக அதிகமாகப் பயன்படுத்துவதை எதிர்த்தும், அதை முதன்மையான, அடிப்படையான போராட்ட முறையாகக் கருதுவதை எதிர்த்தும் கடுமையாக எச்சரிப்பது நம் கடமை. மேற்சொன்ன கருத்து இப்போது மிகப் பலரை ஈர்த்திருக்கிறது. பயங்கரவாதம் என்பது போராட்ட நடவடிக்கைகளில் முறையானதொன்றாக ஒரு பொழுதும் இருக்க முடியாது. அதிகமாகச் சொல்லப்போனால், தீர்மான தாக்குதலின் வழிதுறைகளில் ஒன்றாக அது பயன்படலாம்" (63 - 65)

       லெனின் இங்கே கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். நம் நாட்டிலும் பலபேர் இப்போதே போர் தொடுக்கப் போவதைப் போல் பேசிக் கொண்டே இருப்பார்கள், ஆனால் இன்றைய அரசியல் வேலை எதையும் செய்யாது காலத்தை வீணடிப்பார்கள். வர்க்கப் போராட்டத்தின் இறுதி தான் ஆயுதப் போராட்டம். அதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்க முடியாது. அதற்கான தயாரிப்பு இல்லாது போனால் புரட்சி செய்ய வேண்டிய நேரத்தில் இயலாமையில் தாழ்ந்து போவோம் என்பதை மறந்திடக்கூடாது.

 “ரபோச்சி தேலோ” பத்திரிகை “தாக்கும் படையில் அணி திரளுங்கள்” என்று கூச்சல் இடுகிறது. உணர்ச்சியின் அடிப்படையிலேயே இத்தகைய கூச்சல் போடப்படுகிறது, உண்மையில் இது ஒரு அறிவான செயல் அல்ல. நிரந்தமான படைப்பிரிவுகள் மிகமிக குறைவாக இருக்கும் நிலையில், அதுவும் திரட்டப்படாத நிலையில் ஒவ்வொன்றையும் இணைக்கப்படாமலும்  பயிர்ச்சி பெறாமலும் இருக்கும் நிலையில் இது வெற்றுக் கூச்சலாகவே இருக்கும்.

 தயாராகமல் போரில் இறங்கக் கூடாது. உண்மையில் இன்றை முழக்கம் “தாக்குவதற்கு முற்படு” என்பதற்கு பதிலாக “எதிரியின் கோட்டையை முறையாக முற்றுகை இடு” என்பதாகத்தான் இருக்க வேண்டும். முறைப்படுத்தாமல் போரில் இறங்குவது ஆபத்தையே ஏற்படுத்தும்.

 இன்றைய நிலையில் கட்சியின் உடனடிக் கடமை என்னவாக இருக்க வேண்டும் என்பதை அடுத்து லெனின் விளக்குகிறார்.

 அனைத்து சக்திகளையும் உடனே தாக்குதலுக்கு அழைப்பது இன்றை வேலை அல்ல. புரட்சிகரமான அமைப்புக்கு ஏற்பாடு செய்தவற்கு அழைப்பதுதான் உடடினடி பணியாகும். முதலில் இந்த அமைப்பிற்குள் அனைத்து சக்திகளையும் ஒன்று சேர்க்க வேண்டும். அமைப்பை பெயரளவுக்கு அல்லாது, சிறப்பாக நடைமுறையில் செயல்படுவதற்கான ஆற்றலை உருவாக்க வேண்டும்.

 அன்றாட அரசியல் செயற்பாட்டுடன், தீர்மானகரமான போருக்கு தயார்படுத்துவதாகவும் இயக்கத்தின் அணுகுமுறை இருக்க வேண்டும். இதை லெனின் கூறுவதை அப்படியே பார்ப்போம்.

 

“.. அந்த அமைப்பு ஒவ்வொரு கண்டன நடிவடிக்கையையும் திடீர் எழுச்சியையும் ஆதரிக்கவும், தீர்மானப் போருக்கு வேண்டிய ராணுவ பலத்தை அதிகப்படுத்தி வலுப்படுத்துவதற்கு அவற்றைப் பயன்படுத்தவும் எந்த நேரத்திலும் சித்தமாயிருக்க வேண்டும்” (65)

 கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதே இயக்கத்தின் பணியாகும். இதற்கு எந்த வகையில் அமைப்பை கட்டுவது என்று முடிவு செய்ய வேண்டும், அதற்கு அடுத்து செயல்படுத்துவதற்கு அமைப்புக்கு உரிய சரிநுட்பமான திட்டத்தை வகுக்க வேண்டும்.

 திட்டத்தின் வழியில்தான் அமைப்பின் செயற்பாடு அமைந்துள்ளது. அதனால் திட்டத்தை வகுக்க வேண்டியது முதன்மையான செயலாகும். ஒரு திட்டத்தின் சுருக்கத்தை தோழர்கள் முன் சமர்ப்பிப்பதற்கான தயாரிப்பு நடைபெறுவதாக லெனின் இங்கே கூறுகிறார். அந்த தயாரிப்பே “என்ன செய்ய வேண்டும்” என்கிற நூலாகும். “என்ன செய்ய வேண்டும்” என்கிற நூல் “நம் இயக்கத்தின் சூடேறிய பிரச்சினைகள்” என்ற உட் தலைப்புடன் வெளிவந்தது.

 நம் நாட்டில் நமது கம்யூனிஸ்ட் கட்சியை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கு “எங்கிருந்து தொடங்குவது” “என்ன செய்ய வேண்டும்” என்கிற இரண்டு லெனினது எழுத்துக்களை கண்டிப்பாக படிக்க வேண்டும். லெனின் காட்டும் அமைப்பே இன்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அதன் வழியில் செயல்படும்போதே நாம் பல புதிய வழிகளை கண்டடைய முடியும்.

 ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் பத்திரிகைத் தேவைப்படும். அதாவது கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட பின்பே கட்சிக்கு பத்திரிகை தேவைப்படும். இதுவே பொதுவான இயல்பாகும். ஆனால் அன்றை ருஷ்யநிலைமை இதற்கு வழியில்லாமல் இருந்தது. அதனால் ஒரு பத்திரிகை நடத்தி அதன்மூலம் கட்சி கட்டப்பட்ட வரலாறு ருஷ்யாவில் நடந்தேறியது. ஓர் அனைத்து ருஷ்ய அரசியல் பத்திரிகையை நிறுவதே முதல் கடமையாக ருஷ்யாவில் அன்று இருந்தது. அந்த பத்திரிகைதான் “இஸ்க்ரா”. “இஸ்கரா” பத்திரிகையே ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை ஒரே சீராக வளர்க்கவும் செழுமைப்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடிப்படையாகப் பயன்பட்டது.

 தனிநபர்களின் செல்வாக்கினால் வட்டாரங்களில் சிதறலாக நடைபெறும் கிளர்ச்சியை முறையான பொதுக் கிளர்ச்சி மூலம் வலுப்படுத்த வேண்டும். இந்தப் பொதுக் கிளர்ச்சியை பத்திரிகை மூலமே அனைத்தையும் இணைக்கப்பட்டு ருஷ்யாவில் அன்று முறையாக நடத்த முடிந்தது.  

 ருஷ்யாவில் கம்யூனிஸ்டுகள் அன்று வட்டார வேலைகளில் முழுமையாக மூழ்கி கிடந்தனர். இது ஒரு பெரிய குறைபாடாக லெனின் கருதினார். கட்சி ஊழியர்களின் செயற்பாட்டில் ஊசலாட்டம், நிலையில்லாத போக்கு ஆகியவற்றுக்குக் காரணம், கட்சி அமைப்புகள் சிதறுண்டு கிடப்பதே ஆகும். கட்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு அனைத்து ருஷ்யப் பத்திரிகை நடத்துவதின் மூலமே அனைத்தையும் ஒன்றிணைக்க முடியும் என்று லெனின் கருதினார்.

 இந்த அனைத்து ருஷ்யப் பத்திரிகை இல்லாது போனால், அரசியல் அதிருப்தியையும் கண்டனத்தையும் ஒன்றுசேரத் திரட்டி, அவற்றைக் கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் இயக்கத்தை செழுமைப்படுத்துவது என்கிற கட்சியின் கடமையை செய்திட முடியாது என்பதை லெனின் சரியாகக் கணித்து செயல்பட்டார்.

 கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு கடமைகள் முக்கியமானது, ஒன்று கூலி உயர்வு போன்ற பொருளாதாரப் போராட்டத்தை முதலில் முன்னெடுப்பது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு அடுத்த ஒன்று இருக்கிறது, அதுதான் முக்கியமானது, அதுவே கம்யூனிஸ்டுகளின் தலையாயக் கடமையாகும். முதல் கடமையை தொழிலாளர்களே முயற்சித்தால் ஒன்றுகூடி செய்திட முடியும், ஆனால் இரண்டாவதை ஒர் இயக்கத்தால் மட்டுமே செய்திட முடியும்.

 பொருளாதாரப் போராட்டத்தின் மூலம் அரசியல் உணர்வு பெற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசியல் நோக்கில் அக்கிரமங்களை அம்பலப்படுத்த கற்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதே வர்க்க அரசியலாகும், அப்படி செய்யும் போதுதான் தொழிலாளர்கள் வர்க்க உணர்வைப் பெற்றவர்களாவார்கள். இதை லெனின் சொற்களில் காண்போம்.

 

“நாம் முதல் நடவடிக்கையை எடுத்திருக்கிறோம்; அதாவது, தொழிலாளி வர்க்கத்திடையே, "பொருளாதார நோக்கில்'' ஆலைகளில் நிகழும் அக்கிரமங்களை அம்பலப்படுத்த வேண்டுமென்ற ஆர்வத்துடிப்பை எழுப்பிவிட்டிருக்கிறோம். இப்பொழுது அடுத்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்: அதாவது கூடுதலாகவோ குறைவாகவோ அரசியல் உணர்வு பெற்றுள்ள எல்லா மக்கட் பகுதிகளிடமும் அரசியல் நோக்கில் அக்கிரமங்களை அம்பலப்படுத்த வேண்டுமென்ற மனவெழுச்சியை உண்டாக்குவது அவசியம்” (68)

       பொருளாதாரப் போராட்டம் என்பது அரசியல்தான் ஆனால் அது முதலாளித்துவ அரசியலாகும், அந்தப் பொருளாதாரப் போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக அரசியல்படுத்துவதே கம்யூனிச அரசியலாகும். இதைப் பற்றி லெனின் “என்ன செய்ய வேண்டும்” என்கிற நூலில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார், அதை நாம் கண்டிப்பாக மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்.

       அன்றைய குறிப்பான ருஷ்ய நிலைமையைப் பற்றி லெனின் கூறுவதை அடுத்துப் பார்ப்போம்.

 அரசியல் வெளிப்பாட்டின் குரல் இன்று மிகவும் பலவீனமாகவும், பயமுறுத்துவதாகவும், இருப்பதை கண்டு நாம் சோர்வடையக்கூடாது. இதற்கு போலீஸ் அடக்குமுறைக்கு அஞ்சியே மக்கள் அடங்கி இருக்கிறார்கள் என்பது காரணம் அல்ல.

 இச்செயலில் ஈடுபடத் திறமையும் மனமும் உள்ளவர்கள் ஏறிப்பேசுவதற்கு உரிய மேடை இல்லை என்பதே காரணம் ஆகும். திறம்பெற்ற பேச்சாளர்களின் பேசை ஆவலுடன் கேட்டு அவர்களை ஊக்ககப்படுத்தும் கூட்டமும் இல்லை. மேலும், அனைத்து வல்லமைப் பொருந்திய ருஷ்ய ஜார் அரசை எதிக்கும் சக்திபடைத்த வர்க்கம் இதுவரை காணவில்லை. ஆனால் இன்றைக்கு நிலை மாறி இருக்கிறது என்கிறார் லெனின்.

 ஆவலுடன் கேட்பதற்கும் அதை செயல்படுத்துவதற்கும் உள்ள சக்தி ருஷ்யாவில் இப்போது வந்துவிட்டது, அதுதான் புரட்சிகரமான பாட்டாளி வர்க்கம் என்கிறார் லெனின்.   

  இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி என்பது பாட்டாளிகளின் வர்க்க உணர்வு பெற்ற முன்னணிப்படை ஆகும். பாட்டாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள வேறுபாட்டை அறியாமல் இருப்பவர்களை கம்யூனிஸ்ட் என்று கூறிடவே முடியாது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அனைத்தையும் பாட்டளி வர்க்க உணர்வுக்கு உள்ளடக்கியே புரிந்து கொள்கிறது. அப்படி இருக்க பாட்டாளி என்கிற தொழிலாளர்கள் யார்? அவர்கள் எப்படிப்பட்டவர்களாக மாற முடியும் என்கிற தெளிவு கம்யூனிஸ்ட்டுக்கு இல்லை என்றால், கம்யூனிஸ்ட் எப்படி தங்களுடைய கடமையை உணர்ந்து செயல்பட முடியும்.

 ஏற்கெனவே செங்கொடி மையத்தில் எங்கெல்ஸ் எழுதிய “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்கிற கேள்வி-பதில் பகுதியைப் பார்த்தோம். அதில் உள்ளவைகளின் தெளிவு நமக்கு வேண்டும். அந்தத் தெளிவு அடிப்படையானது. அந்த அடிப்படை இருந்தால் மட்டுமே ஒரு கம்யூனிஸ்ட் மார்க்சிய விஞ்ஞான வழியில் செயல்பட முடியும்.

 அடுத்து, பாட்டாளி வர்க்கத்தைப் பற்றி லெனின் கூறுவதைப் பார்ப்போம். அரசியல் போராட்டத்திற்கான அழைப்பை கேட்டு ஆதரிப்பது மட்டுமல்லாமல், தைரியமாக போரில் ஈடுபடவும் தனது தயார்நிலையையும் பாட்டாளி வர்க்கம் நிரூபித்துள்ளது.

 ஜார் ஆட்சியை அம்பலப்படுத்தும் வகையில் நடத்த வேண்டிய பத்திரிகை அவசியத்தை லெனின் வலியுறுத்துகிறார்.

 ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் நாட்டில் உள்ள மற்ற தொழிலாளர்களைவிட வேறுபட்டதாய் அரசியல் அறிவைப் பெறுவதில் அக்கறை உள்ளதாய் இருக்கிறது. பாட்டாளி வர்க்கத்திடையே சட்டவிரோதமான இலக்கியத்துக்கு எப்போதும் தேவை உள்ளதாக இருக்கிறது. அதிகக் கொந்தளிவு உள்ள காலங்களில் மட்டும் அல்லாது அனைத்து காலங்களிலும் இதுவே உண்மை ஆகும் என்கிறார் லெனின்.

 திரளான பாட்டாளிகளிடம் சட்டவிரோத இலக்கியம் மீது பெரிய அளவுக்கு தேவை ஏற்பட்டுள்ளது, அனுபவமுள்ள புரட்சிகரத் தலைவர்கள் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் தோன்றி இருக்கிறார்கள். ஆலை உற்பத்தியின் போக்கால் பாட்டாளிகள் ஓர் இடத்தில் குவிந்திருக்கச் செய்துள்ளது.

 ருஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி சட்டவழியில் செயல்பட முடியாத நிலையில் ஒர் அரசியல் பத்திரிகையின் வாயிலாக செய்வது பற்றியே லெனின் பேசுகிறார்.

 இந்தக் கட்டுரையில் லெனின் ருஷ்ய நிலைமைக்கு பத்திரிகையின் அவசியத்தையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

       அன்றைய ருஷ்ய சூழ்நிலையில் அரசியல் பத்திரிகை செய்ய வேண்டிய பங்கு என்னவென்பதை அடுத்து லெனின் தொகுத்துத் தருகிறார்.

 அரசியல் பத்திரிகை செலுத்த வேண்டிய பங்கானது, கருத்துக்களைப் பரப்புதல், அரசியல் கல்வி அளித்தல், அரசியல் கூட்டாளிகளை ஈர்த்துக் கொள்ளுதல் ஆகிய நடிவடிக்கைகளில் மட்டும் அடங்கி இருக்கவில்லை என்கிறார் லெனின்.

 பத்திரிகை என்பது கூட்டுத்துவப் பரப்புரையாளனாகவும் கூட்டுத்துவக் கிளர்ச்சிக்காரனாகவும் இருப்பதோடு கூட்டுத்துவ ஒழுங்கமைப்பாளனாகவும் இருக்க வேண்டும்.

 இதன் மூலம் லெனின் என்ன நிகழும் என்பதை அடுத்துக் கூறுகிறார். பத்திரிகையின் உதவியாலும் தொடர்பினாலும் ஒரு நிரந்தர அமைப்பு தானாகவே அமையத் தொடங்கும். அந்த அமைப்பு வட்டார வேலைகளில் செயல்படுவதோடு நின்றுவிடாமல், முறையான பொது வேலையிலுங்கூட ஈடுபடும், அரசியல் நிகழ்ச்சிகளைக் கவனமாகக் கண்காணிக்கவும், மக்கள் பெருந்திரளின் பல்வேறு பகுதியினரின்மீது அவை செலுத்தும் செல்வாக்கையும் மதிப்பிடவும் வேண்டும். அதற்கான பயிற்சியை கட்சி உறுப்பினர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதை லெனின் வலியுறுத்துகிறார்.

 வட்டார முகவர்கள் பத்திரிகையை வினியோகிப்பது என்பது, கட்சியின் வட்டார முகவராகவும் அனைத்து முகவரிகளின் இணைக்கும் பாலமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட வட்டாரக் கட்சியின் முகவர்கள், வட்டார நிலைமைகளுடன் நின்றுபோகாமல், மற்றவர்களுடனும் தொடர்பு கொள்ளும்போது பொதுநிலைமைகளை அறிந்து கொள்வார்கள். அனைத்து ருஷ்ய நிலைமைகளை புரிந்து கொள்வார்கள். அப்போது ஒவ்வொருவரும் நாடு முழுமையையும் தழுவி நிற்கக்கூடிய அளவுக்குப் பெரிய ஒர் அமைப்பாக உருவெடுக்கும்.

 லெனின் ருஷ்ய நிலைமையை சரியாகப் புரிந்து கொண்டு தக்க நடவடிக்கையின் மூலம் தொழிலாளர்களையும் கம்யூனிஸ்டுகளையும் இணைத்தார்.

 லெனின் இந்த சிறு கட்டுரையின் இறுதியில் கூறியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எந்தக் கட்டுரையாகவும் நூலாகவும் இருந்தாலும் அதன் உட்பொருளை அதன் எழுத்தாளர் கூறமுனைவதைவிடுத்து தங்களது போக்குக்கு ஏற்ப புரிந்து கொள்வது லெனின் காலத்திலும் காணப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. அதனால் லெனின் தப்பெண்ணங்களைத் தவிர்க்கும் பொருட்டு அவரே இக் கட்டுரையில் காணப்படும் கருத்தைத் தொகுத்துத் தந்துள்ளார்.

 எதேச்சதிகாரத்தை, சரியான முற்றுகை அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதலால் மட்டுமே தூக்கியெறியப்பட முடியும் என்று பொருள் கொள்ளக்கூடாது என்கிறார் லெனின். அப்படி கருதுவது அபத்தமானதாகவும் வறட்டுவாதமாகவும் இருக்கும். இதற்கு மாறாக அனைத்துப் பக்கங்களில் இருந்தும் இடைவிடாமல் அச்சுறுத்தும் தன்னியல்பாகத் தோன்றும் திடீர் வெடிப்புகளில் ஒன்றின் நிர்பந்தத்தாலோ, எதிர்பாராத அரசியல் சிக்கல்களின் நிர்ப்பந்தத்தாலோ எதேச்சாதிகாரத்தை தகர்த்து ஒழிக்க முடியும் என்பதற்கு வரலாற்றுப் போக்கில் நிறைய வாய்ப்புள்ளது என்கிறார் லெனின். நாம் நமது சொந்த வழியில் செல்ல வேண்டும், நமது வழக்கமான வேலையை உறுதியுடன் தொடர வேண்டும், மேலும் எதிர்பாராதவற்றின் மீது நமது நம்பிக்கை குறைவாக இருந்தால், எந்தவொரு "வரலாற்று திருப்பங்கள்" தம்மை திகைக்க வைக்க மாட்டாது என்பது உறுதி என்று கூறி லெனின் இந்தக் கட்டுரையை முடிக்கிறார்.

 

“இறுதியாக, வரக் கூடிய தப்பெண்ணத்தைத் தவிர்ப் பதற்காகச் சில சொற்கள் கூறுவோம். முறையான திட்டமிட்ட தயாரிப்பைப் பற்றியே எப்போதும் பேசி வருகிறோம்; ஆனால், சரியான முற்றுகை அல்லது நன்கு ஒழுங்க மைந்த தாக்குதல் மூலமே எதேச்சாதிகாரம் வீழ்ந்து ஒழியும் என்று உட்குறிப்பாக உணர்த்துவது நம்முடைய விருப்பமல்ல. அத்தகைய கருத்து முட்டாள்தனமாகவும் புத்தகப்புழுவுக்குரியதாகவும் இருக்கும். அதற்கு மாறாக, எல்லாப் பக்கங்களிலிருந்தும் இடைவிடாமல் அச்சுறுத்தும் தன்னியல் பாகத் தோன்றும் திடீர் வெடிப்புக்களில் ஒன்றின் நிர்ப்பந்தத்தாலோ, எதிர்பாராத அரசியல் சிக்கல்களின் நிர்ப்பந்தத்தாலோ எதேச்சாதிகாரம் தகர்ந்து ஒழியும் என்பது முற்றிலும் சாத்தியமானது; வரலாற்றுப் போக்கில் அதிக வாய்ப்புள்ளது. ஆனால் யோசனையற்ற முரட்டுத் துணிச்சலான செயல்களில் வழுக்கி விழுவதைத் தவிர்க்க விரும்பும் எந்த அரசியல் கட்சியும், மேற்சொன்ன திடீர் வெடிப்புக்களையும் சிக்கல்களையும் பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் தன் நடவடிக்கையை அமைத்துக் கொள்ள முடியாது. நம் வழியே நாம் போக வேண்டும்; நம்முடைய முறையான வேலையில் ஒரே விடாப்பிடியாக ஈடுபட வேண்டும்; எதிர் பாராத நிகழ்ச்சிகள் மீது எவ்வளவு குறைவாக நாம் நம்பிக்கை வைக்கிறோமோ, அவ்வளவுக்கு "வரலாற்றுத் திருப்பங்கள்" நம்மைத் திகைக்கச் செய்ய மாட்டா என்ற உறுதி அதிகமாகும்.” (72)

 ஆக லெனின் இங்கே சொல்ல முற்படுவது என்னவென்றால், கம்யுனிஸ்ட் கட்சி, தாம் வகுத்த வழியில் தொடர்ந்து செல்ல வேண்டும். தம்முடைய முறையான வேலையில் விடாப்பிடியாக ஈடுபட வேண்டும். எத்தகை சூழ்நிலை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் நிலையில் கட்சி இருக்க வேண்டும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அனைத்தையும் எதிர்கொண்டு பயன்படுத்தும் வகையில் திறம் பெற்று இருக்க வேண்டும்.

 நம் நாட்டைப் பொறுத்தளவில் தொழிலாளர்களுக்கான பொருளாதாரப் போராட்டத்திலேயே பலவீனமாக இருக்கிறோம். இதில் இருந்து விடுபட்டு பாட்டாளியை வர்க்க அரசியலாக்குவது கம்யூனிஸ்டுகளின் கடமை ஆகும். ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் இந்த வரலாற்றுக் கடமையை உணர்ந்து தங்களை மேம்படுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படும்போதுதான் நாளைய உலகம் தொழிலாளர்களுக்கானதாக மாறும் என்று கூறி இன்றைய சொற்பொழிவை முடித்துக் கொள்கிறேன்.

 

Sunday, 25 June 2023

04) லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” சுருக்கமும் சாரமும் (நான்காம் - இறுதி பகுதி)

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

  89- வது வார வகுப்பு – 25-06-2023  )


 

 ஐந்தாவது அத்தியாயம்

அரச உலர்ந்து உதிர்வதற்குரிய பொருளாதார அடிப்படை.

       பழங்குடி சிதைவின் போது ஏற்பட்ட வர்க்க சமூகத்தில் உபரியாய் கிடைத்தை பகிர்வதில் ஏற்பட்ட சிக்கல், கலகமாக வெடிக்காமல் தடுப்பதற்கு உருவானதே அரசு.

 அதாவது, சுரண்டும் வர்க்கம் சுரண்டலுக்கு ஆளான வர்க்கம் ஆகிய வர்க்கங்களின் இணக்கம் காண முடியாததின் விளைவே அரசு. இதை நாம் எந்தளவுக்குப் புரிந்து கொள்கிறோமோ அதே அளவுக்கு புரிந்து கொள்ள வேண்டியது, அரசு உலர்ந்து உதிர்வதற்கான பொருளாதார நிலைமை.

 குறிப்பிட்ட பொருளாதார நிலைமையின் காரணமாகவே அரசு தோன்றியது அது மறைவதற்கு உரிய பொருளாதார நிலைமை ஏற்படும் போதுதான் அரசு மறையும். இதைப் பற்றி மார்க்ஸ் “கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனம்” என்கிற கட்டுரையில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். இந்த “கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனம்” மார்க்சால் 1875ஆண்டு மே மாதத்தில் எழுதப்பட்டது. முதலாளித்துவ சமூகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அரசு உலர்ந்து உதிர்வதற்கான, கம்யூனிச சமூக வளர்ச்சிக்கு இடையில், ஒரு அரசு இருக்கிறது என்பது பற்றி இதில்தான் முதன்முறையாக மார்க்ஸ் எழுதியுள்ளார்

 ஐந்தாவது அத்தியாயத்தின், முதல் பிரிவு, பிரச்சினையை மார்க்ஸ் முன்வைத்தல்.

       முதலாளித்துவ சமூகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும் வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்திற்கு இடையில் அரசு எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாகும். இதை மார்க்ஸ் எப்படி முன்வைக்கிறார் என்பதை லெனின் இந்தப் பிரிவில் விவரிக்கிறார்

       மார்க்சையும் எங்கெல்சையும் முரண்படுத்தி பார்ப்பதில் பல பேருக்கு விருப்பம் அதிகம். அதே போல இளம் மார்க்ஸ் முது மார்க்ஸ் என்று பிளவு படுத்திவதிலும், மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் வேறுபாடு காட்டுவதிலும், மார்க்ஸ்-எங்கெல்ஸ் மற்றும் லெனின் ஆகியோர்களுக்கு இடையே முரண் படுத்தி காட்டுவதில் பலருக்கு விருப்பம் இருக்கிறது. இந்த விருப்பம் உடையவர்கள் ஐரோப்பாவில் அதிகம் இருக்கிறார்கள், நம் நாட்டிலும் இருக்கிறார்கள். நம் நாட்டில் இப்படிப்பட்டவர்களே மேலான மார்க்சியவாதிகளாக நம் நாட்டில் உலாவிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த முரண்களைக் காட்டி மார்க்சிய அடிப்படைகளை சிதைக்க முடியுமா என்று அவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் இன்றுவரை இதை சாதிக்க முடியவில்லை. மார்க்சியம் அறியாவதவர்களிடையே குழப்பத்தை மட்டுமே அவர்களால் ஏற்படுத்த முடிகிறது.

 மார்க்சியத்துக்கும் லெனினியத்துக்கும் எந்த முரணும் கிடையாது. மார்க்சியத்தின் வளர்ச்சியே லெனினியம். ஸ்டாலின் எழுதிய “லெனினியத்தின் அடிப்படைகள்” என்கிற நூலில் தெளிவாக அறியலாம்.

 லெனினியம் மார்க்சியத்தின் தொடர்ச்சி என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். ஆனால் முரணைத்தான் நிரூபிக்கப்பட முடியாத முரணாக நீடிக்கிறது. ஏன் இதை கூறுகிறேன் என்றால், லெனின் இங்கே எங்கெல்சுக்கும் மார்க்கும் உள்ள முரணாக கருதுவதை எவ்வாறு போக்குகிறார் என்பதைப் பார்ப்போம்.

 மார்க்ஸ் 1875ஆம் ஆண்டு மே மாதம் 5ல் பிராக்கேவுக்கு எழுதிய கடிதத்தையும், எங்கெல்ஸ் 1875ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ல் பெபெலுக்கு எழுதிய கடித்தையும் மேலெழுந்தவாரியாக ஒப்பிட்டுப் பார்த்தால் “அரசின் ஆதரவாளராய்” மார்க்ஸ் இருப்பதாக தெரியும்.

 எங்கெல்ஸ் அரசு பற்றிய அனைத்து பேச்சுகளையும் அறவே விட்டொழித்து அரசு என்னும் சொல்லை வேலைத்திட்டத்தில் இருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஜெர்மன் சொல்லான “மக்கட்சமூகம்” என்னும் சொல்லை பயன்படுத்தும்படி ஆலோசனை கூறுகிறார். ஆனால் மார்க்ஸ் “கம்யூனிச சமூதாயத்துக்கு உரிய வருங்கால அரசு” என்பதாய் பேசுகிறார். மார்க்சின் கருத்தை மேலோட்டமாகப் பார்த்தால், கம்யூனிச சமூகத்துக்கும் அரசு அவசியம் என்பதை அவர் ஏற்றுக் கொண்டதாக தோன்றக்கூடும்.

       இது போன்ற கருத்து அடிப்படையிலேயே தவறானது என்கிறார் லெனின். அரசு குறித்தும் அது உலர்ந்து உதிரும் நிகழ்ச்சி குறித்தும் மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.

      மார்க்சும் எங்கெல்சும் வெவ்வேறு சூழ்நிலையில் கூறியதை கணக்கில் கொள்ளாமல் ஒப்பிட்டுப் பார்ப்பதே, வேறுபாடுக்கு காரணம் ஆகும். அரசு தொடர்பாக நிலவிய தப்பபெண்ணங்கள் எந்தளவுக்கு அபத்தம் என்பதை கூற முற்பட்ட இடத்தில் மக்கட்சமூகம் என்ற சொல்லைப் எங்கெல்ஸ் பயன்படுத்தினார். கோத்தா வேலைத்திட்டத்தில் மார்க்ஸ் கூறியது, முதலாளித்துவ சமூகத்தின் வீழ்ச்சிக்கும் கம்யூனிச சமூகத்தின் வளர்ச்சிக்கும் இடைப்பட்ட நிலையில் தேவைப்படுகிற அரசைப் பற்றியதாகும்.

       லெனின் இங்கே கூறுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம் நாட்டில் முதலாளித்துவத்துக்கு மாற்றாக கம்யூனிச சமூகத்தை கூறுகின்றனர். இது பெரும் தவறாகும். முதலாளித்துவத்தில் ஏற்பட்டுள்ள முரணை தீர்ப்பதற்கு முளைத்ததே கம்யூனிசம். இதைப் புரிந்தால்தான் இங்கே நாம் பேசுகிற அரசு பற்றிய கருத்தில் தெளிவு பெற முடியும். லெனின் கூறியதை அப்படியே பார்ப்போம். ஏன் இது போன்ற கருத்துக்களை மேற்கோளாய் காண்கிறோம் என்றால், நாம் அதில் எந்தக் கருத்தையும் திணிக்க வில்லை என்பதை வாசகர்களுக்குப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. நேரடியாக வாசகர்களே இங்கே படித்துவிட்டு அதன் மூலத்தை முழுமையாகப் படிக்கும் போது சுயமாகக் தெளிவு பெற முடியும். அதனால் இது போன்ற இடங்களில் மேற்கோளிடுவது தவிர்க்க முடியாததாகும்.

 

“கம்யூனிசமானது முதலாளித்துவத்தில் இருந்து தோன்றுவதாகும், வரலாற்று வழியில் முதலாளித்துவத்தில் இருந்து வளர்வதாகும், முதலாளித்துவம் பெற்றெடுத்த ஒரு சமுதாய சக்தியின் செயலால் விளைந்த பலனாகும் என்ற உண்மையை அடிப்படையாய்க் கொண்டுதான் இப்பிரச்சினையைப் பரிசீலிக்க முடியும்.” (329)

       கம்யூனிசம் என்பது ஒரு தொடர்ச்சியான ஒரு நிகழ்ச்சியே என்பதைப் புரிந்தால் தான் மார்க்ஸ் கூறுவதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

       அரசுக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவு பற்றிய பிரச்சினையில் கோத்தா வேலைத்திட்டம் செய்திடும் குளறுபடியை மார்க்ஸ் விமர்சனம் மூலம் நீக்குகிறார்.

       பெரும்பாலான நாடுகளில் முதலாளித்துவ சமூகம் ஏற்பட்டுள்ளது, அதனால் “இன்றைய சமூகம்” என்று கூறலாம். ஆனால் முதலாளித்துவமானது ஸ்விட்சர்லாந்தில் இருப்பதில் இருந்து பிரஷ்ய-ஜெர்மன் பெரிய அளவில் மாறுபட்டு இருக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதில் இருந்து இங்கிலாந்தில் மாறுபட்டதாய் உள்ளது. இதனால் இதை “இன்றைய அரசு” என்று சொல்வது கற்பனையாகத் தெரியும்.

       ஆனால் இந்த நாடுகளில் உள்ள அரசின் வடிவம் மாறியிருந்தாலும் இவை அனைத்தும் முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படையாய் அமைந்த அரசே ஆகும். இதனடிப்படையில் “இன்றைய அரசு” என்று கூறுவது தவறானது கிடையாது.

       இதனடிப்படையில் கம்யூனிச சமூகத்தில் உள்ள அரசில் ஏற்படப் போகும் மாறுதல் என்ன? இதை வேறுவகையிலும் கேட்கலாம், தற்போதுள்ள அரசின் பணிக்கு ஒப்பான எந்தச் சமூகப் பணிகள் அப்பொழுத மீதமிருக்கும்?

       இந்தக் கேள்விக்கு விஞ்ஞான வழியில் மட்டுமே பதிலளிக்க முடியும் என்கிறார் மார்க்ஸ். “மக்கள்” என்னும் சொல்லை “அரசு” என்னும் சொல்லோடு ஆயிரம் வழியில் இணைப்பதால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக ஒரடிகூட வைக்கவில்லை என்கிறார்.

 “மக்கள்” - “புரட்சிகர” என்கிற சொற்களை இணைப்பதினால் எந்த மாறுபட்ட கருத்தையும் கூறியதாகாது. நிலைமையையே சொல் விளக்குகிறது சொல்லை மாற்றுவதினால் நிலைமை மாறிவிடப் போவதில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

       கோத்தா வேலைத்திட்டத்தில் மார்க்ஸ் “மக்கள் அரசு” என்ற அனைத்துப் பேச்சுகளையும் எள்ளி நகையாடுகிறார். வளர்ச்சிக் கோட்பாட்டினாலும் விஞ்ஞானத்தினாலும் மிகவும் துல்லியமாய் நிலைநாட்டப்பட்டு இருக்கும் உண்மை என்னவென்றால், முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிசத்துக்கு மாறிச்செல்வதைக் குறிக்கும் வரலாறு வழிப்பட்ட, ஒர் இடைக்கட்டம் நிச்சயமாக இருக்க வேண்டும் என்பதையே மார்க்ஸ் கோத்தா வேலைத்திட்டத்தில் கூறியுள்ளார். இந்த உண்மை கற்பனாவாதிகளால் புறக்கணிக்கப்பட்டதும், மற்றும் சோசலிசப் புரட்சிக்கு அஞ்சும் இன்றைய சந்தர்ப்பவாதிகளால் புறக்கணிக்கப்பட்டதும் ஆகும்.

       முதலாளித்துவ சமூகத்தில் இருந்து வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகம் வளர வேண்டும் என்றால் இதற்கு இடைக் கட்டம் அதாவது மாறும் கட்டம் ஒன்று இருந்தாக வேண்டும். இதையே மார்க்ஸ் பேசுகிறார். எங்கெல்ஸ் மக்கட்சமூகம் என்று கம்யூனுக்கு இணையான ஜெர்மன் சொல்லை பயன்படுத்த நினைப்பதையும் மார்க்ஸ் கூறியதையும் இணைதுக் குழப்பிக் கொள்ளக்கூடாது.

       ஐந்தாவது அத்தியாயத்தின், இரண்டாவது பிரிவு, முதலாளித்துவத்தில் இருந்து கம்யுனிசத்துக்கு மாறிச் செல்லுதல்.

       இந்தப் பிரிவில் அந்த இடைக்கட்டத்தைப் பற்றிதான் பேசப்படுகிறது.

       கோத்தா வேலைத்திட்டத்தில் இருந்து ஒரு மேற்கோளை லெனின் தந்துள்ளார். அதில் தான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி முதன்முறையாக மார்க்ஸ் தெரிவித்துள்ளார். இதுமிகவும் முக்கியமான கருத்தாகும், அதிகப் புகழ் பெற்ற மேற்கோளாகும். அதை நாம் அப்படியே பார்ப்போம்.

 

"....முதலாளித்துவ சமூகத்துக்கும் கம்யூனிச சமூகத்துக்கும் இடையில் ஒன்று மற்றொன்றாய்ப் புரட்சிகர மாற்றமடையும் கட்டம் உள்ளது. இதற்கு இணையாய் அரசியல் இடைக்கால கட்டமும் ஒன்று உள்ளது. இந்த இடைக்காலத்தில் அரசு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரமாகவே அன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது..."

 இதுவரை தொழிலாளர்களின் அரசைப் பற்றி பொதுவாகப் பேசப்பட்டதை இங்கே மார்க்ஸ் குறிப்பாக இடைக் கட்டம் என்று தெளிவாக பேசியுள்ளார்.

 இதுவரை, பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி, அரசியல் அதிகாரத்தை வெற்றி கொண்டு தனது புரட்சிகரச் சர்வாதிகாரத்தை நிறுவும் என்று கூறப்பட்டது. ஆனால் கோத்தா வேலைத்திட்டத்தில். இந்த அரசு முதலாளித்துவ சமூகத்துக்கும் வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்துக்கும் இடையே உள்ள இடைக் கட்டத்துக்கு உரியதாக, இந்த பாட்டாளி வர்க்க வர்வாதிகார அரசு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அரசு வளர்ச்சிக் கட்டத்தில் உலர்ந்து உதிரும் என்றும் தெளிவான விஞ்ஞான விளக்கம் மார்க்சால் கொடுக்கப்பட்டுள்ளது.

       சர்வாதிகாரம் ஜனநாயகத்திடம் கொண்டுள்ள உறவு என்ன? என்ற கேள்வியை லெனின் எழுப்பி பதிலும் தருகிறார்.

       “பாட்டாளி வர்க்கத்தை சர்வாதிகாரம் ஜனநாயகத்திடம் கொண்டுள்ள உறவு என்ன”, “ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் வெற்றி பெறுவது” இவ்வாறு கூறுவதோடு ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” நின்றுவிடுகிறது. முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசில் ஓரளவுக்கு முழுமையான ஜனநாயகம் இருப்பதாகக் கூறலாம். ஆனால் இந்த ஜனநாயகம் எப்போதும் முதலாளித்துவ ஆதிக்கவாதிகளால் குறுகலான வரம்புகளால் இறுக்கப்பட்டிருக்கும். உண்மையான நடைமுறையில், சிறுபான்மையோருக்கான ஜனநாயகமாகத்தான் அது இருக்கும். அதாவது சிறுபான்மையோராக இருக்கிற செல்வந்தகர்களுக்கு மட்டுமேயான ஜனநாயகம். இதுதான் முதலாளித்துச் சமூகத்தில் நிலவும் ஜனநாயகம்.

       வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில்தான், முதலாளி வர்க்கத்தாரின் எதிர்ப்பு அடியோடு நசுக்கப்பட்டு, முதலாளிய சிந்தனைகள் மறைந்து போய், வர்க்கம் இல்லாத சமூகமாய் மாறியிருக்கும். ஜனநாயகம் முழுமை பெற்று இருக்கும். அப்போது ஜனநாயகம் உலர்ந்து உதிர்ந்துவிடும்.  அந்நிலையில் அரசு தேவையற்றுப் போய் மறைந்துவிடும். அந்த நேரத்தில் சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமாக இருக்கும். அரசு உலர்ந்து உதிரும் என்ற சொல்லை மிகவும் நன்கு தேர்வு செய்துள்ளனர். அரசு படிப்படியாய் மறைவதை இந்த சொல் சிறப்பாக விளக்குகிறது.

       அந்த வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் பலவந்தம் இல்லாமல், பலாத்கார கருவிகள் இல்லாமல், பலவந்தப் படுத்தும் அரசு இல்லாமல் மக்களே சமூக விதிகளை பின்பற்றப் பழகிக் கொள்வார்கள்.

 இதை இன்றைய நிலையில் இருந்து புரிந்து கொள்ள முடியாது. அந்த வளர்ச்சி அடைந்த கட்டத்தில் இருந்து பார்க்க வேண்டும். இன்றைய மனநிலையை வைத்துக் கொண்டு அன்றைய நிலைமையினை புரிந்து கொள்ள முடியாது.

       முதலாளித்துச் சமூகத்தில் இருந்து வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்துக்கு செல்வதற்கு இடையே ஒரு கட்டம் இருக்கிறது. அந்தக் கட்டத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு இருக்கும். கம்யூனிச சமூகத்தின் தொடக்கக் கட்டத்தில் ஒரு தனிவகைப் பொறியமைவான அரசு இன்னமும் தேவைப்படுகிறது. இது வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்துக்கு மாறிச் செல்லும் கட்டத்துக்கு உரியதாக இருக்கிறது.

 அரசு என்ற சொல்லின் பழைய பொருளில் இனி அது அரசாய் இருக்காது. ஏன் என்றால் இதற்கு முந்திய அரசு சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை அடக்குவதாக இருந்தது. பாட்டாளிகளான பெரும்பான்மையினர், பழைய சிந்தனையில் உள்ள சிறுபான்மையினரின் செயலை தடுப்பதற்கு உரிய அரசாக இருக்கிறது.

       வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் தான் அரசு அறவே தேவையற்ற சூழ்நிலை இருக்கும். வர்க்கத்தின் சார்பாக அடக்க வேண்டியவர்கள் அச் சமூகத்தில் எவரும் இருக்கமாட்டார்கள். ஆனால் அந்த நேரத்தில் தனி நபர்கள் அடாச்செயல்களை செய்யக்கூடும் என்பதை மறுப்பதற்கு இல்லை. இந்த அடாச்செயலை தடுப்பதற்கு ஒரு தனி பொறியமைவு தேவையில்லை. ஆயுதம் ஏந்திய மக்கள் தாமே இதனைச் செய்துவிடுவார்கள்.

 வர்க்க சமூகத்தில் காணப்பட்ட அடாச்செயல்கள் அன்றைய சமூகத்தின் விளைவாக ஏற்பட்டதாகும். இது போன்ற அடாச்செயல்களும் வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் உலர்ந்து உதிரும். இவ்வாறு இது உதிரும் போது அரசும் உலர்ந்து உதிரும்.

       முதலாளித்துவ சமூகத்தில் இருந்து கம்யூனிச சமூகத்துக்கு மாறுவது குறித்து பொதுவானதையே லெனின் இந்தப் பிரிவில் பேசினார். அடுத்தப் பிரிவுகளில் கம்யூனிச சமூகத்தின் முதற் கட்டதையும் உயர் கட்டதையும் லெனின் விளக்குகிறார்.

       ஐந்தாவது அத்தியாயத்தின், மூன்றாவது பிரிவு, கம்யூனிச சமூகத்தின் முதல் கட்டம்

       நம் நாட்டில் உழைப்பை மட்டும் தனித்து அளவுக்குமீறி தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பர்கள் இருக்கிறார்கள். அனைத்தும் உழைப்பால் வந்து, அதனால் அனைத்தும் உழைப்பாளிக்கே உரியது என்பது போன்ற பேச்சுகளை நம் நாட்டில் அதிகம் கேட்க முடிகிறது.

       சோஷலிச் சமூகத்தில் உழைப்பாளிக்கு, அவன் உழைப்பின் முழுமையான பயன் கிடைக்கும் என்று லஸ்ஸால் கூறியதை, மார்க்ஸ் கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனத்தில் விமர்சித்துள்ளார். உழைப்பாயின் உழைப்புக்கு உரிய அனைத்தையும் கொடுத்திட முடியாது. இயந்திரத்தின் தேய்மானத்துக்கு மாற்றீடு செய்வதற்கு ஒதுக்க வேண்டும், காப்பு நிதி போன்ற நிதிக்கு ஒதுக்க வேண்டும்.  பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் போன்ற பலவற்றுக்கு வேண்டிய நிதியை கழித்தப் பிறகே உழைப்பாளிக் கொடுக்கப்படும்

       கம்யூனிச சமூகத்தின் தொடக்கக் கட்டம் வளர்ச்சி அடைந்த கட்டதைப் போல இருக்காது. முதலாளித்துவச் சமூகத்தில் இருந்து தோன்றியதுதான் முதற்கட்டம். ஆகவே இதில் அந்தப் பழைய சமூகத்திடம் இருந்து பெறப்பட்ட பிறவிக்குறிகள் ஒவ்வொரு வழியிலும் பதிந்திருக்கும். அதாவது முதலாளித்துவ குறைபாடுகள் குறைந்தளவாக தொடரவே செய்யும். அதனால் இந்த தொடக்கக் கட்டம் வளர்ச்சி அடைந்த கட்டத்தைப் போல் இருக்காது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

       முதலாளித்துவத்தை வீழ்த்தி கம்யூனிசத்தை அடைவது இரண்டு கட்டங்களா செயல்படும் என்று மார்க்ஸ் கோத்தா வேலைத்திட்டத்தை விமர்சிக்கும் போது கூறியுள்ளார்.

       முதலாளித்துச் சமூகத்தை வீழ்த்திய உடன் ஏற்படுவது கம்யூனிசத்தின் முதல் கட்டம் என்றும் அடுத்துவருவது உயர் கட்டம் என்றும் மார்க்ஸ் கூறியுள்ளார். மார்க்ஸ் முதல் கட்டம் என்று கூறியது லெனின் காலத்தில் சோஷலிசம் என்றும் உயர் கட்டத்தை கம்யூனிசம் என்றும் அழைக்கப்பட்டது.

       உற்பத்திச் சாதனங்களை சமூகம் அனைத்துக்கும் உரிய பொதுவுடைமையாய் மாற்றிவிட்டால் மட்டும் வினியோகத்தில் உள்ள குறைபாடுகளும் முதலாளித்துவ உரிமையின் சமத்துவமின்மையும் அகற்றப்பட்டுவிடுவதில்லை. செலுத்தப்படும் உழைப்புக்கு ஏற்ப உற்பத்திப் பொருட்கள் பகிர்ந்து கொள்ளப்படும்வரை இவை தொடர்ந்து நிலவும் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறர் மார்க்ஸ். முதலாளித்துவத்தின் குறைபாடுகள் தொடக்க நிலையில் முற்ற நீக்கப்பட முடியாது. இதைப் பற்றி மார்க்ஸ் கூறுவதைப் பார்ப்போம்.

 

 "...இந்தக் குறைபாடுகள் கம்யூனிச சமுதாயத்தின் முதல் கட்டத்தில் தவிர்க்கமுடியாதவை, ஏனெனில் இச்சமுதாயம் நீடித்த பிரசவ வேதனைக்குப் பிறகு முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து இப்பொழுதுதான் பிறந்து வெளிவந்திருக்கிறது. உரிமையானது ஒருபோதும் சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்பையும் இதனால் நெறிப்படுத்தப்பட்ட அதன் கலாசார வளர்ச்சி நிலையையும் காட்டிலும் உயர்வானதாகிவிட முடியாது..."

  இந்த முதற்கட்டத்தில் முதலாளித்துவ கூறுகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிடுவதில்லை. பகுதி அளவுக்கு மட்டும்தான் மாறியிருக்கும். இதுவரை அடைந்த பொருளாதாரப் புரட்சியின் விகிதத்தில் மட்டுமே, அதாவது உற்பத்திச் சாதனங்கள் பொறுத்த மட்டில் ஒழிக்கப்பட்டிருக்கும். உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமை ஒழித்து பொதுவுடைமை ஆக்கப்பட்டிருக்கிறது. அந்தளவுக்கு மட்டுமே முதலாளித்துவ உரிமைகள் ஒழிக்கப்பட்டிருக்கும். இது ஒரு தொடக்க நடவடிக்கை மட்டுமே ஆகும்.

       மீதமுள்ள முதலாளித்துவக் கூறுகளை களைவதற்க ஒரு அரசு வேண்டும். அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கொண்டதாக இருக்கும். மீதமுள்ள முதலாளித்துவ கூறுகள் களைந்த பிறகு உயர் நிலையான கம்யூனிச சமூகம் தோன்றும். அங்கே அரசு அறவே தேவையில்லாது உலர்ந்து உதிரும். இதைப் பற்றி அடுத்தப் பிரிவில் பார்க்கலாம்.

       ஐந்தாவது அத்தியாயத்தின், நான்காவது பிரிவு, கம்யூனிச சமூகத்தின் உயர் கட்டம்

       மார்க்ஸ் எழுதிய கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனத்தில் இருந்து ஒரு நீண்ட மேற்கோள் லெனின் கொடுத்துள்ளார். அது சுமார் 15 வரிகள் இருக்கிறது. அனைத்தும் ஒரே சொற்றொடராக இருக்கிறது. அதாவது அனைத்தும் ஒரே வாக்கியமாக முற்றுப் புள்ளி இல்லாமல் கமா போட்டு தொடர்கிறது. அதனால் நாம் அந்த மேற்கோளை அப்படியே பார்க்காமல், சொற்றொடர்களாகப் பிரித்துப் பார்ப்போம்.

 கம்யூனிச சமுதாயத்தின் உயர் கட்டத்தில், மூளை உழைப்புக்கும் உடலுழைப்புக்கும் இடையிலான எதிர்நிலையும் மறைகிறது. அதற்குப்பின் உழைப்பானது பிழைப்புக்கான சாதனமாய் மட்டுமின்றி வாழ்வின் முதற்பெரும் தேவையுமாகிறது. அதன்பின் தனிநபருடைய சர்வாம்ச வளர்ச்சியோடுகூட உற்பத்தி சக்திகளும் அதிகரிக்கிறது. பொதுச் சமுதாயச் செல்வத்தின் அருவிகள் எல்லாம் மேலும் அதிகமாய்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில்தான் முதலாளித்துவ உரிமையின் குறுகிய வரம்பு முழுமையாகக் கடக்கப்படும். சமுதாயம் தன் பதாகைகளில் "ஒவ்வொருவரிடமிருந்தும் அவரவர் திறனுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப!" என்று பொறிக்கப்படும்.

       இந்த மார்க்சின் மேற்கோளைத் தொடந்து லெனின் விளக்குவதைப் பார்ப்போம். அரசு இருக்கும்வரை சுதந்திரம் இல்லை, சுதந்திரம் வந்ததும் அரசு இல்லாமல் போய்விடும். கம்யூனிச சமூகத்தின் மிக உயர்ந்த வளர்ச்சி அடைந்த கட்டத்தில்தான் அரசு முழுமையாய் உலர்ந்து உதிர்வதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கட்டத்தில் மூளை உழைப்புக்கும் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள எதிர்நிலை மறையும். முதலாளித்துவத்தை வீழ்த்தி, பாட்டாளி வர்க்க அரசு தோன்றிய உடன் இந்த நிலையை அடைந்திட முடியாது. அதாவது உற்பத்திச் சாதனங்களை பொதுவுடைமையைக்கப்பட்டுவிட்டால் மட்டும் இத்தகைய வளர்ச்சியை எட்ட முடியாது. அதற்கு இடையே ஒரு கட்டம் இருக்கிறது.

       வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகம் பற்றிய மார்க்சியக் கூற்றை, விஞ்ஞானத் தன்மை உடையதாக இருந்தாலும், முதலாளித்துவ கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பவர்கள் இது வெறும் ஆகாயக் கோட்டை என்றும் எதார்த்ததுக்கு அப்பாற்பட்ட கனவு நிலையே என்றும் கூறுவர். மார்க்சியம் கூறுகிற முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. மார்க்சியம் விஞ்ஞானத் தன்மையுடையதே இருந்தாலும் இதில் வர்க்க சார்பு இருக்கிறது. மார்க்சிய விஞ்ஞானம் பாட்டாளி வர்க்க சார்பான விஞ்ஞானம்.

       மார்க்சியத்தின் விஞ்ஞானத் தன்மையை பாட்டாளி வர்க்க நலன்மட்டுமே ஏற்கிறது.

       கம்யூனிசத்தின் முதற் கட்டமான சோஷலிசத்தில் கணப்படும் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு என்பது, அரசெனும் சொல்லின் சரியான பொருளில் அரசாக இருக்காது. இந்தக் கட்டத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு ஜனநாயகம் உடையதாக இருக்கிறதோ அந்தளவுக்கு அரசின் ஒவ்வொரு வடிவமும் வேகமாய் உலர்ந்து உதிரத் தொடங்கும்.

       சமூக வாழ்க்கையின் சாதாரண அடிப்படை விதிகளை பின்பற்றுவதற்கு, உயர் கட்டமான கம்யூனிச சமூகத்தில் பழக்கமாகிவிடும்.

       இனி கம்யூனிச சமுதாயத்தின் முதல் கட்டத்திலிருந்து அதன் உயர்நிலைக்கு மாறுவதற்கும், அதனுடன் அரசு முற்றிலும் உலர்ந்து உதிர்வதற்கு கதவு திறக்கப்படும் என்று கூறி லெனின் இந்தப் பிரிவை முடிக்கிறார்.

 ஆறாவது அத்தியாயம்

சந்தர்ப்பவாதிகள் மார்க்சியத்தைக் கொச்சையாக்குதல்.

       சமூகப் புரட்சிக்கும் அரசுக்கும் உள்ள தொடர்பு பற்றிய விஷயத்தில் இரண்டாம் அகிலத்தின் முன்னணிக் கோட்பாட்டாளர்களும் நூலாசிரியர்களும் மிக்கக் குறைந்த கவனத்தையே செலுத்தினர். அதனால் சந்தர்ப்பவாதம் படிப்படியாய் வளர்ந்தது, 1914ஆம் ஆண்டில் இரண்டாவது அகிலம் தகர்ந்து விழுவதற்கு சந்தர்ப்ப வாதமே காரணமாகும்.

 அரசுடன் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குள்ள போக்கு பற்றிய  பிரச்சினையைத் தட்டிக் கழித்தன் விளைவாய் மார்க்சியம் திரிக்கப்பட்டது புரட்டப்பட்டது, கொச்சைய்க்கப்பட்டது.

       இந்த அவல நிகழ்ச்சிப் போக்கை சுருக்கமாக குறிப்பிட்டுக் காட்டும் பொருட்டு, மார்க்சியத்தின் மிகப் புகழ் பெற்ற கோட்பாட்டாளர்களான பிளெகானவ்வையும் காவுத்ஸ்கியையும் எடுத்துக் கொள்வோம் என்கிறார் லெனின்.

 ஆறாவது அத்தியாயத்தின் முதல் பிரிவு, அராஜகவாதிகளுடன் பிளெகானவின் வாக்குவாதம்.

       சோஷலிசத்தின் மீதான அராஜகவாதத்துக்குள்ள போக்கு குறித்து பிளெகானவ் “அராஜகவாதமும் சோஷலிசமும்” என்ற தலைப்பில் ஒரு தனி நூலை எழுதினார். இதில் பிளெகானவ் அராஜகவாத்தை எதிர்க்கும் போது அரசின்பால் புரட்சிக்கு உள்ள போக்கையும் குறிப்பாக அரசு பற்றிய பிரச்சினையையும் அறவே தட்டிக் கழித்ததில் வெற்றிக் கண்டார்!!.

       ருஷ்யாவில் புரட்சி தொடங்கும் தறுவாயிலும் புரட்சிக் காலத்தின் போதும் பிளெகானவ் செயற்பாடுகள் பகுதி அளவு வறட்டுச் சூத்திரவாதியாகவும் பகுதி அளவு குட்டி முதலாளித்துவ அற்பவாதியாகவும் இருந்து, அவரது அரசியல் முதலாளித்துவ வர்க்கத்துக்கு வால் பிடிக்கும்படியாக இருந்தது.

       “அராஜகவாதமும் சோஷலிசமும்” என்பது பற்றி பேசப்புகுந்த பிளெகானவ், அதே நேரத்தில் அரசு பற்றிய பிரச்சினையைத் தட்டிக் கழித்து, கம்யூனுக்கு முன்னதாகவும் அதற்குப் பிற்பாடும் மார்க்சியித்தின் வளர்ச்சி போக்கு அனைத்தையும் அவர் கவனிக்காதுவிட்டது தவிர்க்க முடியாத வகையில் சந்தர்ப்பவாதத்தினுள் சரிந்து சென்றது என்கிறார் லெனின்.

 ஆறாவது அத்தியாயத்தின் இரண்டாம் பிரிவு, சத்ர்ப்பவாதிகளுடன் காவுத்ஸ்கியின் வாக்குவாதம்.

       சந்தர்ப்பவாததை எதிர்த்துக் காவுஸ்கி முதலில் எழுதிய நூல் “பெர்ன்ஷ்டைனும் சமூக-ஜனநாக வேலைத்திட்டமும்.”

       1872ஆம் ஆண்டு மார்க்ஸ் அறிக்கைக்கு எழுதிய முன்னுரையில் “தொழிலாளி வர்க்கம் ஏற்கெனவே தயாராயிருக்கும் அரசுப் பொறியமைவை அப்படியே கைப்பற்றிக் கொண்டு அதனை தனது சொந்த செயல்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது” என்று எழுதினார். மார்க்ஸ் கூறிய இந்தக் கருத்தில் பெர்ன்ஷ்டைன் அதிகம் கவனம் செலுத்தனார். ஆனால் படுமோசமாய்த் திரித்துப் புரட்டிச் சந்தர்ப்பவாத வழியில் இதற்கு விளக்கம் கொடுத்தார்.

       பழைய அரசு பொறியமைவை நொறுக்க வேண்டும் என்று மார்க்சும் எங்கெல்சும் கூறியதை, பெர்ன்ஷ்டைன் தனது கருத்துக்கு ஏற்ப திரிக்கிறார். அதிகாரத்தைக் கைப்பற்றுகையில் மட்டுமீறி புரட்சி ஆர்வம் கொண்டுவிடுவதை எதிர்த்து இச் சொற்கள் மூலம் மார்க்ஸ் தொழிலாளி வர்க்கத்தை எச்சரிக்கை செய்தார் என்று அவர் திரித்துரைத்தார்.

       மார்க்சின் கருத்தை இதைக் காட்டிலும் படுமோசமாக திரித்துப் புரட்ட முடியாது. ஆகவே பெர்ன்ஷ்டைனியத்துக்கு மிகவும் விவரமாய் மறுப்புரை கூறும் நூலில் காவுத்ஸ்கி இது குறித்து என்ன செய்தார்? என்று கேள்வி எழுப்பி பதிலளிக்கிறார் லெனின்.

       இந்த விவகாரம் குறித்து சந்தர்ப்பவாதமானது மார்க்சியத்தை அப்பட்டமாய்த் திரித்துப் புரட்டுவதை பெர்ன்ஷ்டைன் பகுத்தாராயமல் ஒதுங்கிவிட்டார். மேலும் மார்க்ஸ் கூறியதை திரித்துரைத்தது பற்றி காவுத்ஸ்கி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

       இதன் மூலம், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பணிகள் குறித்து மார்க்சியத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் உள்ள மிகவும் அடிப்படையான வேறுபாடு காவுத்ஸ்கினால் மழுங்கடிக்கப்பட்டது. பெர்ன்ஷ்டைன் கருத்துக்கு காவுத்ஸ்கியின் மறுப்புரையாக இல்லாது சராம்சத்தில் அவருக்கு விட்டுக் கொடுப்பதாகவே இருந்தது. இது சர்ந்தர்ப்வாதத்துக்குச் சரணடைவதே ஆகும் என்கிறார் லெனின். பாரிஸ் கம்யூன் தொழிலாளர்களுக்குப் புதியதாய் போதித்தைப் பற்றி காவுத்ஸ்கி ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை.

       முதலாளித்துவ நாடாளுமன்ற முறைக்கும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும் உள்ள வேறுபாட்டை காவுத்ஸ்கியால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

       புரட்சிகளின் சகாப்தம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்று வெளிப்படையாக காவுத்ஸ்கி அறிவித்தப் பின்னும், “அரசியல் புரட்சி” குறித்து ஆராய்வதற்கென எழுதப்பட்டதாய் அவரே கூறிக் கொண்ட இந்த நூலில் திரும்பவும் அரசு பற்றிய பிரச்சினையை அணுகாது தட்டிக்கழிப்பதானது தவிர்க்க முடியாமல் முழு அளவுக்கு சந்தர்ப்பவாதத்திடம் ஓடி விடுதில் முடிந்தது என்று லெனின் கூறுகிறார்.

 ஆறாவது அத்தியாயத்தின் மூன்றாம் பிரிவு, பெனெக்குடன் காவுத்ஸ்கியின் வாக்குவாதம்.

       பெனெக் என்பவர், டச்சு நாட்டு சமூக-ஜனநாயகவாதி, அதாவது கம்யூனிஸ்ட். ஏகாதிபத்திய உலக போரின் போது சந்தர்ப்பவாதி ஆனார். ஆதீத-இடதுசாரி, குறுங்குழுவாத நிலையில் நின்றார்.

       பெனெக் தமது கருத்துக்களை வகுத்தளிக்கும் வடிவத்தில் பெரிய குறைகள் இருக்கிறது. இதற்கு காவுத்ஸ்கி எப்படி மறுப்பு உரைத்தார் என்பது கவனிக்கத்தக்கது.

       காவுத்ஸ்கி பெனெக்குக்கு பதிலளிக்கும் போது, கோட்பாடு குறித்த அடிப்படையான விவகாரத்தில் அவர் மார்க்சிய நிலையில் அறவே துறந்துவிட்டு முற்றிலும் சந்தர்ப்பவாதத்திடம் ஓடிவிடுகிறார். கம்யூனிஸ்டுகளுக்கும் அராஜகவாதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டுக்கு காவுத்ஸ்கி அளிக்கும் இலக்கணம் முழுக்க முழுக்க தவறானது, மார்க்சியத்தை அவர் கொச்சைப்படுத்தித் திரித்துப் புரட்டுகிறார் என்று லெனின் கூறுகிறார்.

 மார்க்சியவாதிகளுக்கும் அராஜகவாதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்று லெனின் தொகுத்தளிக்கிறார். அதை அப்படியே பார்ப்போம்.

 

“(1) முன்னவர்கள் (மார்க்சியவாதிகள்) அரசை அடியோடு ஒழிப்பதை நோக்கமாய்க் கொண்டுள்ள அதேபோது சோஷலிசப் புரட்சியால் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்ட பிறகுதான், சோஷலிசம் நிலைநாட்டப்படுவதன் விளைவாய் மட்டுமே, இந்த நோக்கம் நிறைவேற முடியும். அரசு உலர்ந்து உதிர சோஷலிசம் வழி வகுக்கிறது என்பதை அங்கீகரிக்கிறார்கள். பின்னவர்கள் (அராஜகவாதிகள்) அரசை ஒழிப்பதற்குரிய நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமலே எடுத்தயெடுப்பிலே அரசை அடியோடு ஒழிக்க விரும்புகிறார்கள்.

 

(2) முன்னவர்கள் (மார்க்சியவாதிகள்), பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வென்று கொண்டதும் அது பழைய அரசுப் பொறியமைவை அடியோடு அழித்துவிட வேண்டுமென்பதையும், அதனிடத்தில் கம்யூன் வகைப்பட்ட ஆயுதமேந்திய தொழிலாளர்களது ஒழுங்கமைப்பாலான புதிய ஒன்றை நிறுவிக் கொள்வது அவசியமென்பதையும் அங்கீகரிக்கிறார்கள். பின்னவர்கள் (அராஜகவாதிகள்) அரசுப் பொறியமைவு அழிக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்துகையில் அதனிடத்தில் பாட்டாளி வர்க்கம் நிறுவப் போவது என்ன, பாட்டாளி வர்க்கம் எப்படி தனது புரட்சிகர அதிகாரத்தைப் பிரயோகிக்கப் போகிறது என்பது குறித்துத் தெளிவுடையோராயில்லை. புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்பதைக் கூட அராஜகவாதிகள் மறுக்கிறார்கள்; அதன் புரட்சிகரச் சர்வாதிகாரத்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்.

 

(3) முன்னவர்கள் (மார்க்சியவாதிகள்), தற்போதுள்ள அரசைப் பயன்படுத்திப் புரட்சிக்காகப் பாட்டாளி வர்க்கத்துக்குப் பயிற்சி தர வேண்டுமென்று கோருகிறார்கள். அராஜகவாதிகள் இதனை நிராகரிக்கிறார்” ()

லெனின் இங்கே மார்க்சியத்துக்கும் அராஜகவாதத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தெளிவாகக் கூறியுள்ளார். இதற்கு மேல் விளக்கம் தேவைப்படாது.

       சந்தர்ப்பவாதிகள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை அறவே புறக்கணிக்கின்றனர். இவர்களின் பார்வையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஜனநாயகம் என்பதில் உள்ள அரசியல் பார்வையில்லாது தூய ஜனநாயகம் பேசுகின்றனர். இவர்களுக்கும் குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகளுக்கும் உண்மையில் வேறுபாடுகிடையாது. முன்பே நாம் பார்த்தது போல, வர்க்கப் போராட்டம் என்பதின் வெற்றி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில்தான் அடங்கியிருக்கிறது. இதனைக் கடந்து வளர்ந்து வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்துக்கு செல்ல வேண்டும். அங்கே அரசு தேவையற்று உலர்ந்து உதிர்ந்துவிடும். இதை லெனின் இந்த “அரசும் புரட்சியும்” என்ற நூலில் பல வழிகளில் நமக்குப் புரியவைத்துள்ளார்.

      தற்போது நமது நாட்டிலும் தூய ஜனநாயக் கோரிக்கை அதிகம் காணப்படுகிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொல்லுக்குப் பதிலாக மக்கள் ஜனநாயக அரசு என்று தூய ஜனநாயகவாதிகள் கூறுகின்றனர். அரசு என்பதே ஒரு வர்க்க சார்பானதுதான். முதலாளித்துவ அரசு என்றால் அது முதலாளித்துவ சர்வாதிகாரம்தான். பாட்டாளி வர்க்கம் என்றால் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்தான். அடிப்படைப் புரிதலற்ற இத்தகைய சந்தர்ப்பவாதத்தை முறியடித்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டை நிலைநிறுத்த வேண்டும்.

      சந்தர்ப்பவாதத்துக்கு எதிராக லெனின் கூறிய கருத்தோடு தொடர் வகுப்பை முடித்துக் கொள்வோம்.

 

"நாங்கள் சந்தர்ப்பவாதிகளிடமிருந்து முறித்துக் கொள்வோம். வர்க்க உணர்வு கொண்ட பாட்டாளி வர்க்கம் அனைத்தும் எங்களுடன் சேர்ந்த போராட்டத்தில் -"சக்திகளின் சமநிலையை மாற்றுவதற்கு" அல்ல, முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்துவதற்காக, முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை அழிப்பதற்காக, கம்யூனை முன்மாதிரியாகக் கொண்ட ஜனநாயகக் குடியரசு அல்லது தொழிலாளர்கள், படையாட்களது பிரதிநிதிகளின் சோவியத்துகளுடைய குடியரசுக்காக, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரத்துக்காகப் போராடும்."

       லெனின் கூறிய வழியில் நம் நாட்டு கம்யூனிஸ்டுகளும் சந்தர்ப்பவாததுடன் போராடி, முதலாளித்துவத்தை வெற்றி கொண்டு, பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை அமைப்போம்.

       ஏழாவது அத்தியாயத்தை லெனின் எழுதி முடிக்கவில்லை. அதன் தலைப்பு “1905,1917ஆம் ஆண்டுகளின் ருஷ்யப் புரட்சிகளின் அனுபவம்.”

       இந்த தலைப்பை எழுதியதற்குப் பிறகு லெனினது புரட்சிகர நடவடிக்கையினால் முடிக்க முடியாமல் போய்விட்டது. இதற்கு பதிலாய் லெனின் கூறியதைப் பார்ப்போம்

 

““புரட்சியின் அனுபவத்தை” எழுதுவதைக் காட்டிலும்நேரில் வாழ்ந்து காண்பது இனிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது”

       ஆம் எழுத்தைக் காட்டிலும் வாழ்ந்து அனுபவிப்பது இனிமையானதுதான், நாமும் மார்க்சிய வழியில் போராடுவோம், வெற்றி பெறுவோம். வாழ்ந்து காட்டு காட்டுவோம், என்று கூறி இன்றைய வகுப்பையும் தொடர் வகுப்பையும் முடித்துக் கொள்கிறேன்.