Tuesday, 10 May 2016

ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதிகளின் இரண்டு செயற்தந்திரங்கள் - லெனின் (நூல் அறிமுகம்)

1905ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற கட்சியின் மூன்றாவது காங்கிரசில் ஏற்பட்ட செயற்தந்திரம் (tactics) பற்றிய விவாதத்தின் தொடர்ச்சியாக ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதிகளின் இரண்டு செயற்தந்திரங்கள் என்ற நூலை லெனின் எழுதினார்.

                இந்நூலில் இரண்டுவித செயற்தந்திரங்கள் பற்றிய விவாதங்கள் அடங்கியிருக்கிறது. ஒன்று போல்ஷிவிக்குகளின் மார்க்சிய புரட்சிகர போக்கு, மற்றொன்று மென்ஷிவிக்குகளின் சந்தர்ப்பவாதப் போக்கு. 1905ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற மென்ஷிவிக்குகளின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட செயற்தந்திரத்தையும் லெனின் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். முன்னுரையில் இந்நூலின் நோக்கத்தை லெனின் தெளிவுபடுத்தியுள்ளார்.

“ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரசின் செயற்தந்திரத் தீர்மானங்களையும், மாநாட்டின் செயற்தந்திரத் தீர்மானங்களையும் கவனமாகப் பயில்வதும், அவற்றிலேயுள்ள மார்க்சியக் கோட்பாடுகளினின்று வழுவிய திரிபுகள் எவை என்று வரையறுத்துக் கொள்வதும், ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயக பாட்டாளி வர்க்கத்தின் ஸ்தூலமான பணிகளைப் பற்றித் தெளிந்த அறிவைப் பெறுவதும் புரட்சிகரமான சமூக-ஜனநாயகவாதிகளின் மிகமிக அவசரமான பணி என்று கருதுகிறோம். இந்தப் பணியின் காரணமாகத்தான் இச்சிறுநூல் எழுதப்பட்டிருக்கிறது.

 

ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சி முழுவதும் எதிர்காலத்தில் முற்றாக ஒன்றுபடுவதற்கு அடிப்படையாக செயற்தந்திர ஒற்றுமைக்குச் சொல்லளவில் இணங்கச் செய்வதோடு நின்று கொள்ளாமல் நடைமுறையில் அதற்கான வழியைச் செப்பனிட விரும்புகிறவர்களுக்கு மார்க்சியக் கோட்பாடுகளின் நிலையிலிருந்து புரட்சியின் படிப்பினைகளின் நிலையிலிருந்து நமது போர்த்தந்திரங்களைச் சோதித்தறிவது அவசியமாகும்.”1

 

இன்றைய நிலையில் ஜனநாயகக் குடியரசின் தேவையை முன்வைக்கிறார்.

 

“ஒருங்கே பாட்டாளி வர்க்கத்தின் உடனடி நலன்கள் என்னும் நோக்கு நிலையிலிருந்தும் மற்றும் “சோஷலிசத்தின் இறுதியான குறிக்கோள்கள்” என்கிற நோக்கு நிலையிலிருந்தும் “முடிந்தவரை ஆக முழுவளவான அரசியல் சுதந்திரம்” தேவைப்படுகிறது என்பதை விளக்குகிறது. மேலும், முழுமையான அரசியல் சுதந்திரத்துக்கு ஜார் எதேச்சதிகார ஆட்சியை ஜனநாயகக் குடியரசு மூலம் மாற்றீடு செய்வது அவசியம், இதை நம் கட்சியின் வேலைத்திட்டம் ஏற்கெனவே அங்கீகரித்திருக்கிறது.

 

காங்கிரஸ் தீர்மானம் ஜனநாயகக் குடியரசு எனும் முழக்கத்துக்கு அழுத்தம் கொடுப்பது தர்க்க முறையிலும் சரி, கோட்பாடு முறையிலும் சரி அவசியமாகும். ஏனெனில், பாட்டாளி வர்க்கம் ஜனநாயகத்தின் முன்னணி வீரன் என்கிற முறையில் முழுமையான சுதந்திரத்தைத்தான் அடைய முயன்று வருகிறது.”2

 

ஜனநாயகப் புரட்சியின் வர்க்கத் தன்மையை தெளிவுபடுத்துகிறார்.

 

“ஜனநாயகப் புரட்சியின் வர்க்கத் தன்மையைப் பார்க்காமல்விட்டால் இடைக்காலப் புரட்சி அரசாங்கத்தின் முக்கியத்துவம் பற்றிய மதிப்பீடு முழுமையற்றிருக்கும், தவறாகவும் இருக்கும். ஆகவே, புரட்சி முதலாளி வர்க்கத்தின் ஆட்சியைப் பலப்படுத்தும் என்று தீர்மானம் சேர்த்துச் சொல்கிறது. இன்றைய முதலாளித்துவச் சமூக-பொருளாதார அமைப்பு முறையில் இது தவிர்க்க முடியாதது.

 

ஓரளவுக்கு அரசியல் சுதந்திரம் பெற்றிருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மீது முதலாளி வர்க்கத்தின் ஆட்சி பலப்படுவது அதிகாரத்திற்காக அவற்றிடையே கடுமையான போராட்டம் தவிர்க்க முடியாதவாறு நிகழ்வதிலும் “பாட்டாளி வர்க்கத்திடமிருந்து புரட்சிக் காலப் பகுதியில் கிடைத்த ஆதாயங்களைப் பறித்துவிடுவதற்கு” முதலாளித்துவ வர்க்கம் கடுமையான முயற்சிகள் செய்வதிலும் கொண்டு போய்விடும். எனவே, ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் முன்னணியில் நின்று அப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கிச் செல்கிற பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ ஜனநாயகத்தில் உள்ளார்ந்திருக்கிற புதிய பகைகளையோ அல்லது புதிய போராட்டத்தையோ ஒரு கணமேனும் மறக்கலாகாது.”3

 

                கட்சியின் செயற்தந்திரத்தை அமைப்பதில் லெனின் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை எவ்வாறு கையாளுகிறார் என்பதை அறிந்திட முடிகிறது. பொருளாதா சூழ்நிலையின் புறநிலையோடு கட்சியின் செயற்தந்திரமான அகநிலைப்போக்கை அமைத்துக் கொள்வதை இங்கே காணலாம்.

 

“ஜார் அரசாங்கத்தை வீழ்த்தும் பிரச்சினையை “ஜனநாயகப் போக்குள்ள” முதலாளித்துவ வர்க்கத்தினர் பின்னணியில் வைக்கின்றனர், ஆனால் நாம் இதை முன்னணிக்குக் கொண்டுவந்து இடைக்காலப் புரட்சி அரசாங்கத்தின் தேவையை வலியுறுத்தித்தீர வேண்டும். மேலும், இன்றைய காலப்பகுதியின் புறநிலைகளோடும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் குறிக்கோள்களோடு பொருந்தும்படியான செயலுக்குரிய வேலைத்திட்டத்தை இப்படிப்பட்ட அரசாங்கத்துக்கு நாம் வரையறுத்துத் தர வேண்டும்.

 

இவ்வேலைத்திட்டம் நம் கட்சியின் முழுமையான குறைந்தபட்ச வேலைத்திட்டமாகும். இது உடனடியான அரசியல், பொருளாதார மாற்றங்கள் பற்றிய வேலைத்திட்டம், ஒரு புறத்தில் இவற்றை இன்றுள்ள சமூக, பொருளாதார உறவுமுறைகளின் அடிப்படையிலேயே முற்றாகக் கைகூடுமாறு செய்ய முடியும், மறுபுறத்தில், அடுத்து முன்னோக்கி அடி எடுத்து வைப்பதற்கு, சோஷலிசத்தைச் சாதிப்பதற்கு, இவை தேவைப்படுகிறன்றன.”4

 

                உடனடி சோஷலிசப் புரட்சியினை நடத்துவது பற்றிய அரை-அராஜகவாதிகளின் கருத்துக்களை லெனின் மறுத்துரைக்கிறார் அவர்களது விமர்சனத்தையும் மறுத்து பதிலளிக்கிறார். அரை-அராஜகவாதிகள் சோஷலிசப் புரட்சியை தள்ளிப்போடுவதாக குற்றம் சாற்றுகின்றனர். சோஷலிசப் புரட்சியைத் தள்ளிப்போடவில்லை, ஜனநாயகக் குடியரசுக்கான பாதை என்கிற ஒரே சாத்தியமான வழியில் முதலடி வைக்கபடுவதாக லெனின் கூறுகிறார். மேலும் கூறுகிறார், அரசியல் ஜனநாயகம் என்னும் பாதையைவிட்டு வேறெந்த வழியிலாவது சோஷலிசத்தை அடைய விரும்புகிறவர்கள் பொருளாதார அர்த்தத்திலும் அரசியல் அர்த்தத்திலும் ஒருங்கே அபத்தமான, பிற்போக்கான முடிவுகளுக்கே தவிர்க்க முடியாமல் வந்தடைகின்றனர் என்று விமர்சிக்கிறார். இதனை புற அக நிலைமைகளின் அடிப்படையில் விளக்குகிறார்.

 

“ருஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியின் அளவும் (இது ஒரு புறநிலைமை) பாட்டாளி வர்க்கத் திரள்களின் வர்க்க உணர்வின் அளவும் ஒழுங்கமைப்பின் அளவும் (இது புறநிலைமையோடு பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ள அகநிலைமை) தொழிலாளி வர்க்கத்தின் உடனடியான முழுமையான விடுதலையை அசாத்தியமாக்குகின்றன. சிறிதும் விஷயமறியாத பேர்வழிகள்தாம் இன்று நிகழ்ந்துவரும் ஜனநாயகப் புரட்சியின் முதலாளித்துவத் தன்மையைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்ள முடியும். திரள்திரளான தொழிலாளிகள் சோஷலிசத்தின் குறிக்கோள்களைப் பற்றியும் அதைச் சாதிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியும் இன்னமும் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்கள் எனும் உண்மையை மிகவும் வெகுளித்தனமான நம்பிக்கை ஆர்வலர்கள்தான் மறக்க முடியும். தொழிலாளிகளின் விடுதலையைத் தொழிலாளிகள் தாம் வென்று கொள்ள வேண்டும் என்று நாமனைவரும் திடமாக நம்புகிறோம். முதலாளி வர்க்கம் முழுவதையும் எதிர்த்து நடக்கும் ஒரு பகிரங்கமான வர்க்கப் போராட்டத்திலே மக்கள் திரள் வர்க்க உணர்வும் ஒழுங்கமைப்பும் பயிற்சியும் போதனையும் பெறாவிட்டால் சோஷலிசப் புரட்சி எனும் பேச்சுக்கே இடமில்லை.”5

 

                இந்த இடத்தில் லெனின் இடது, வலது என்கிற இரு போக்குகளையும்  விமர்சிக்கிறார். மேலிருந்து செயல்படுவதை, அதாவது ஒர் இடைக்காலப் புரட்சி அரசாங்கத்தில் கம்யூனிஸ்டுகள் கலந்து கொள்வது கோட்பாட்டு முறையில் அனுமதிக்கத்தக்கது என்பதை மறுக்கிற இடதுஅராஜகப் போக்கை லெனின் கண்டிக்கிறார்.

 

“புதிய-இஸ்க்ரா கருத்தை, அதாவது இடைக்காலப் புரட்சி அரசாங்கத்தில சமூக-ஜனநாயகவாதிகள் கலந்து கொள்வது ஒரு வகையான மில்லிரான்வாதமாக (பிரெஞ்சு சோஷலிச சீர்திருத்தவாதமாக) இருக்குமென்றும் முதலாளித்துவ ஆட்சி முறையைப் புனிதப்படுத்துவது ஆகிய வகையில் அது கோட்பாட்டு முறையில் அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் கூறும் கருத்தை, ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்சிரஸ் இந்தப் பிரகடனத்தின் வழியாக மாற்றவொண்ணா வகையில் நிராகரித்தது.”6

 

                இடது அராஜகவாதிகள், இடைக்காலப் புரட்சி அரசாங்கத்தில் கலந்து கொள்வது என்பது பிரெஞ்சு வகைப்பட்ட வலதுதிரிபாக பேசுவதை லெனின் இங்கே விமர்சிக்கிறார். மேலும் லெனின் கீழிருந்து மட்டுமே செயற்படுவதற்கு மட்டுமீறி பழக்கப்படுத்திக் கொண்ட வலது போக்கையும் லெனின் மறுதலிக்கிறார். அதாவது தற்காப்புப் போராட்டங்களை மட்டுமே நடத்துவதற்கு மிதமிஞ்சிப் பழக்கப்படுத்தி கொண்டு, வலுவான தாக்குதலுக்கு தயாரிப்பு செய்வதற்கு பயிலாத போக்கை இங்கே குறிப்பிடுகிறார். இந்நூலின் மற்றொரு இடத்தில், ருஷ்யாவில் நாடாளுமன்றம் இன்னும் தோன்றவில்லை, ஆனால் அதற்குள் நாடாளுமன்ற மூடத்தனம் காணப்படுவதை சுட்டிக்காட்டி கண்டித்துள்ளார்.

 

       நாடாளுமன்ற மூடத்தனம் (parliamentary cretinism) என்றால், நாடாளுமன்ற நடவடிக்கையைத் தவிர மற்றப் போராட்ட முறையை புறக்கணித்து, நாடாளுமன்றமே முழு வல்லமையான ஒரே நடவடிக்கையாக கருதுகிற சந்தர்ப்பவாதப் போக்காகும்.

 

“கடைசிப் பகுப்பாய்வில் பார்க்கும்போது, அரசியல் சுதந்திரம், வர்க்கப் போராட்டம் பற்றிய மாபெரும் பிரச்சினைகளை பலப்பிரயோகம் ஒன்றுதான் தீர்த்துவைக்கிறது, பாதுகாப்புக்காக மட்டுமின்றித் தாக்குதலுக்காவும் இந்த பலப்பிரயோகத்தைத் தயாரித்து ஒழுங்கமைப்பது தீவிரமாகப் பயன்படுத்துவதும் நம் வேலையாகும். ஐரோப்பாவில் அரசியல் பிற்போக்கு நீண்ட காலமாக நடத்திவரும் ஆட்சி- இது பாரிஸ் கம்யூன் நடந்த நாட்களிலிருந்து இடையறாது நீடித்து வருகிறது- செய்கை என்பது “கீழிருந்து” மட்டுமே நடந்தேற முடியும் எனும் கருத்துக்கு நம்மை மிதமிஞ்சிப் பழக்கப்படுத்தியுள்ளது.

 

தற்காப்புப் போராட்டங்களை மட்டுமே பார்ப்பதற்கு நம்மை மிதமிஞ்சிப் பழக்கப்படுத்தியுள்ளது. ஐயமின்றி ஒரு புதிய சகாப்தத்தில நாம் நுழைந்திருக்கிறோம்- அரசியல் எழுச்சிகளும் புரட்சிகளும் நடக்கும் காலப்பகுதி தொடங்கிவிட்டது. இன்று ருஷ்யா கடந்து வரும் இப்படிப்பட்ட காலப்பகுதியில் நாம் பழைய, மாறுதலற்ற சூத்திரங்களோடு நிறுத்திக் கொள்வது அனுமதிக்கத்தக்கதல்ல. மேலிருந்து செயல் புரிவது  எனும் கருத்தை நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும், மிகவும் வலுவான, தாக்குச் செயலுக்குத் தயாரிப்பு செய்ய வேண்டும், அப்படிப்பட்ட செயலுக்குரிய நிலைமைகளையும் வடிவங்களையும் பயில வேண்டும்.”7

 

                தற்போதைய ருஷ்யாவின் கட்டம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கானது என்பதை லெனின் மார்க்சிய வழியில் விளக்குகிறார். இந்த ஜனநாயகப் புரட்சியானது சமூக பொருளாதார சாரத்தில் முதலாளித்துவத் தன்மையுடையது, அதனால் இப்புரட்சியானது பாட்டாளி வர்க்கத்தின் அக்கறைக்கு உரியது கிடையாது என்று கருதுகிற புதிய-இஸ்க்ரா குழுவினருக்கு லெனின் பதிலளிக்கிறார்.

 

“ஒரு வகையினம் என்கிற முறையில் முதலாளித்துவப் புரட்சியின் அர்த்தத்தையும் உள்பொருளையும் புதிய-இஸ்க்ரா குழுவினர் முற்றாகத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். முதலாளித்துவப் புரட்சி என்பது முதலாளி வர்க்கத்துக்கு மட்டுமே அனுகூலமாயிருக்க முடியும் எனும் கருத்து அவர்களின் வாதங்களிலே எப்போதும் இழையோடிக் கொண்டிருக்கிறது. எனினும் இதைவிட தவறான கருத்து வேறொன்றும் இருக்க முடியாது.

 

முதலாளித்துவப் புரட்சி என்பது பூர்ஷ்வா – அதாவது, முதலாளித்துவ- சமூக-பொருளாதார அமைப்பு முறையின் கட்டுக்கோப்பை விட்டு விலகாத ஒன்றாகும். முதலாளித்துவப் புரட்சி முதலாளித்துவ வளர்ச்சியின் தேவைகளை வெளியிடுகிறது, அது முதலாளித்துவத்தின் அடித்தளங்களை அழிப்பதற்குப் பதிலாக மறுபுறம் செயல் பட்டு அவற்றை விரிவாக்குகிறது, ஆழப்படுத்துகிறது. எனவே, இந்தப் புரட்சி தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை மட்டுமின்றி முதலாளி வர்க்கம் முழுவதின் நலன்களையும் வெளியிடுகிறது.

 

முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளி வர்க்கத்தின் மீது முதலாளி வர்க்கம் ஆட்சி செலுத்துவது தவிர்க்க முடியாது, ஆகையால் முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைவிட அதிகமாக முதலாளி வர்க்கத்தின் நலன்களையே வெளியிடுகிறது என்று முழு உரிமையுடன் சொல்ல முடியும், ஆனால் முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை அறவே வெளியிடுகிறதில்லை என்று நினைப்பது சுத்த அபத்தமாகும்.”8

 

                முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி எவ்வாறு பாட்டாளி வர்க்கத்திற்கு அனுகூலமானது என்பதை விவரிக்கிறார். மார்க்சிய அடிப்படைக் கூறுகளில் நின்று ருஷ்ய நிலைமைகளை பகுப்பாய்வு செய்கிறார்.

 

“பொதுவாகவும் சரி, குறிப்பாக ருஷ்யா சம்பந்தமாகவும் சரி, இந்த மார்க்சியக் கோட்பாடுகள் அனைத்தும் நுண்ணிய விவரத்தோடு நிரூபிக்கப்பட்டும் விளக்கப்பட்டும் உள்ளன. மேலும் முன்னேறுகிற முதலாளித்துவ வளர்ச்சியைத் தவிர வேறெதிலாவது தொழிலாளி வர்க்கத்தின் விமோசனத்தைத் தேடுவது எனும் கருத்து பிற்போக்கானது என்று இந்தக் கோட்பாடுகளிலிருந்து தொடர்கிறது. ருஷ்யா போன்ற நாடுகளில் முதலாளித்துவத்தால் தொழிலாளி வர்க்கம் துன்பப்படுகிறதை விட போதாக் குறையான முதலாளித்துவ வளர்ச்சியாலேதான் அதிகமாகத் துன்பப்படுகிறது.

… … …

முதலாளித்துவப் புரட்சி என்பது பழங்காலத்தின் மீதமிச்சங்களை, பண்ணையடிமைகளைச் சொந்தமாக வைத்திருக்கும் அமைப்பு முறையின் மீதமிச்சங்களை மிகவும் உறுதியாகத் துடைத்தெறிந்து விட்டு முதலாளித்துவத்தின் மிகவும் விரிவான, சுதந்திரமான, விரைவான வளர்ச்சிக்கு மிக முழுமையாக உத்தரவாதம் செய்கிற புரட்சியெழுச்சியாகும்.

 

எனவேதான், முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வார்க்கத்துக்கு மிக உயர்ந்த அளவிலே அனுகூலமானதாகும். பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு முதலாளித்துவப் புரட்சி முற்றிலும் அவசியமாகும். எவ்வளவுக்கெவ்வளவு முழுமையானதாகவும் உறுதியானதாகவும் முரணற்றதாகவும் முதலாளித்துவப் புரட்சி இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை எதிர்த்தும், சோஷலிசத்துக்காவும் நடத்துகிற போராட்டம் மிகவும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருக்கும். விஞ்ஞான சோஷலிசத்தின் அடிப்படைக் கூறுகளை அறியாதவர்கள்தான் இந்த முடிவு புதுமையானது, வேடிக்கையானது, முரணுண்மையாயுள்ளது என்று நினைக்க முடியும்.”9

 

                புரட்சிகர வழி அல்லாமல் சீர்திருத்தங்களின் வழியே செல்வது முதலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானது. புரட்சிகர வழி என்பது பாட்டாளி வர்க்கத்துக்கு குறைந்த வலிகொடுக்கும் எனவே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை பாட்டாளி வர்க்கம் தலைமை ஏற்று நடத்தி முடிக்க வேண்டும்.

 

“முதலாளித்துவப் புரட்சி எவ்வளவுக்கு எவ்வளவு முரணின்றி இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஜனநாயகப் புரட்சியால் கிடைக்கும் ஆதாயங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்கும் விவசாயிகளுக்கும் அது உத்தரவாதம் செய்யும்.

 

முதலாளித்துவப் புரட்சியில் இருந்து பாட்டாளி வர்க்கம் விலகி நிற்கக் கூடாது, அதன்பால் அசிரத்தையாய் இருக்கக்கூடாது, புரட்சித் தலைமையை முதலாளி வர்க்கம் எடுத்துக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது, அதற்கு மாறாகப் புரட்சியைச் சாதித்து முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதில் தானே சக்திமிக்க பங்காற்ற வேண்டும், முரணற்ற பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கு மிகுந்த உறுதியுடன் போராட வேண்டும் என்று பாட்டாளி வர்க்கத்துக்கு மார்க்சியம் போதிக்கிறது.

 

ருஷ்யப் புரட்சியின் முதலாளித்துவ-ஜனநாயக எல்லைகளைத் தாண்டி நாம் போக முடியாது. ஆனால் இந்த எல்லைகளை நாம் மிகப் பெரிதாக விரிவாக்க முடியும், ஆனால் இந்த எல்லைகளுக்குள்ளே நாம் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவும் உடனடித் தேவைகளுக்காகவும் எதிர்காலத்திய முழுமையான வெற்றிக்கு அதனுடைய சக்திகளைத் தயாரிப்பதைச் சாத்தியமாக்கும் நிலைமைகளுக்காகவும் போராட முடியும், போராட வேண்டும்.”10

 

                பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்பதற்கு விவசாயிகளை இணைத்து பாட்டாளி வர்க்க, விவசாயி மக்களின் புரட்சிகரமான, ஜனநாயக சர்வாதிகாரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

 

“பாட்டாளி வர்க்கம் ஒன்றுதான் ஜனநாயகத்துக்கு முரணின்றிப் போராடும் போராளியாக இருக்கமுடியும். அதன் புரட்சிப் போராட்டத்தில் திரளான விவசாயி மக்கள் கலந்து கொண்டால்தான் அது ஜனநாயகத்திற்காக வெற்றிகரமாகப் போரிடும் போராளியாக முடியும். இதற்குப் பாட்டாளி வர்க்கம் போதிய வலிமை பெற்றிராவிட்டால் முதலாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியின் தலைமையில் இருக்கும். அந்தப் புரட்சிக்கு ஒரு முரணுள்ள, தன்னலமுள்ள தன்மையைக் கொடுக்கும், பாட்டாளிவர்க்க - விவசாயி மக்களின் புரட்சிகரமான - ஜனநாயக சர்வாதிகாரம் ஒன்றுதான் இதைத் தடுக்க முடியும்.”11

 

லெனினால் எழுதப்பட்ட இந்நூல், 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் செயிண்ட்பீட்ர்ஸ்பர்க் பத்திரிகைக் கமிட்டியால் தடை செய்யப்பட்டது. மார்ச் மாதம் இதனை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. ஆனால் இந்தத் தடையை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. இந்நூல் ருஷ்யாவின் பல நகரங்களில் சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டு, கட்சி ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களால் படிக்கப்பட்டது. போல்ஷிவிக் கட்சியின் வளர்ச்சியில் இந்நூல் குறிப்பிடத்தக்க பெரும் பங்கினை செலுத்தியுள்ளது.


குறிப்புகள்-

1. ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதிகளின் இரண்டு செயற்தந்திரங்கள்  -தேர்வு நூல்கள் தொகுதி 3 – பக்கம்- 20-21

2. மேற்கண்ட நூல் – பக்கம்- 28
3. மேற்கண்ட நூல் – பக்கம்- 30-31
4. மேற்கண்ட நூல் – பக்கம்- 31-32
5. மேற்கண்ட நூல் – பக்கம்- 33-34
6. மேற்கண்ட நூல் – பக்கம்- 35
7. மேற்கண்ட நூல் – பக்கம்- 36-37
8. மேற்கண்ட நூல் – பக்கம்- 65-66
9. மேற்கண்ட நூல் – பக்கம்- 67-68
10. மேற்கண்ட நூல் – பக்கம்- 70-71
11. மேற்கண்ட நூல் – பக்கம்- 85

Monday, 9 May 2016

கிராமப்புற ஏழைகளுக்கு- லெனின் (நூல் அறிமுகம்)


கிராமப்புற ஏழைகளுக்கு- லெனின்
தமிழாக்கம் கி.இலக்குவன்

விலை.ரூ.40/-

வெளியீடு:
பாரதிபுத்தகாலயம்
சென்னை

தொலை பேசி- 044-24332424, 24356935      
      விற்பனை
 044-24332924


கிராமப்புற ஏழைகளுக்கு என்ற நூல் விவசாய மக்களுக்கு கட்சியின் திட்டத்தை விளக்கும் முகமாக 1903ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் லெனினால் எழுதப்பட்டது. பொதுவாக மக்களுக்கு எவ்வாறு கட்சித் திட்டத்தை விளக்குவது என்பதை அறிவதற்கான வழிமுறையாக இந்நூல் அமைந்துள்ளது.

நகர்ப்புறத் தொழிலாளர்களின் போராட்டம் என்ற முதல் இயலில் தொழிலாளர்களின் போராட்டத்தை அறிமுகம் செய்கிறார். தொழிலாளர்கள் கூடுதல் ஊதியத்திற்காகவும், வேலை நேரத்தை எட்டு மணியாக குறைப்பதற்காகவும், அன்றாட வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் போராடுகின்றனர். தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் தொழிற்கூடங்களை சீரமைக்க வேண்டும். பயன்படுத்தும் இயந்திரங்கள் தொழிலாளர்களின் கை கால்களை சேதப்படுத்தாத வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதான கோரிக்கைகளை முதலாளிகளிடம் வைக்கின்றனர். இப்போராட்டங்களின்போது  தொழிலாளர்களை காவல்துறை ஒடுக்குகிறது, சிறையில் அடைக்கிறது. இதைக் கண்டு தொழிலாளர்கள் அஞ்சவில்லை.

“…இந்த அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள் அடிபணியவில்லை. தொடர்ந்து போராடுகின்றனர். “சித்ரவதைகளோ, சிறைத்தண்டனைகளோ, நாடு கடத்தல்களோ, கடுங்காவல் தண்டனைகளோ, மரணமோ எங்களை அச்சுறுத்த முடியாது” என்று தொழிலாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர். “எங்களுடைய குறிக்கோள் நியாயமானது. பாடுபடும் அனைத்து மக்களின் விடுதலைக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் நாங்கள் போராடி வருகிறோம், அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறை, வறுமை ஆகியவற்றுக்கு இலக்காகியுள்ள லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களை விடுவிப்பதற்காகப் போராடி வருகிறோம்” தொழிலாளர்களின் வர்க்க உணர்வு தொடர்ந்து மேலோங்கி வருகிறது. அனைத்து நாடுகளிலும் உள்ள சமூக ஜனநாயகவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனைத்து அடக்குமுறைகளையும் மீறி நாங்கள் வெற்றி பெறுவோம்!”1

தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவதற்கு நீண்ட காலமாக அனுமதிக்கப்பட்டுவிட்டது. இதில் இருந்து விடுபடுவதற்கு அவர்கள் தொழிற்சங்கங்களில் ஒன்றுதிரண்டு போராடுகின்றனர். சிறப்பான வாழ்க்கையை அமைப்பதற்கு போராடி ஒரு புதிய சிறந்த சமூக அமைப்பை உருவாக்க முனைகின்றனர்.

இந்த சமூகத்தை லெனின் விவரிக்கிறார்:
“நாங்கள் அமைக்க விரும்பும் அந்த புதிய சமூக அமைப்பில் (அந்த மேம்பட்ட சமூக அமைப்பில்) பணக்காரர்களும் இருக்கமாட்டார்கள், ஏழைகளும் இருக்க மாட்டார்கள். அனைவரும் உழைக்க வேண்டும். பொதுவான உழைப்பின் பலனை விரல்விட்டு எண்ணக்கூடிய சில பணக்காரர்கள் மட்டும் அனுபவிப்பதற்கு மாறாக அனைத்து உழைப்பாளி மக்களும் அந்த உழைப்பின் பலனை அனுபவிப்பார்கள். இயந்திரங்களும், பிற முன்னேற்றங்களும் உழைப்பவர் அனைவரின் வேலையை எளிதாக்குவதாக இருக்குமே அன்றி லட்சக்கணக்கான – கோடிக்கணக்கான- தொழிலாளர்களின் நலன்களைப் பறித்து சிலரை மட்டும் பணக்காரர்களாக மாற்றும் ஏற்பாடாக அது இருக்காது. இந்தப் புதிய, மேம்பட்ட சமூகமே சோஷலிச சமூகம் என்று பெயர். இந்த மேம்பட்ட சமூக அமைப்பு முறைக்காகப் போராடும் உழைப்பாளர்களின் சங்கங்கள் சமூக ஜனநாயகக் கட்சிகள் என்று அழைக்கப்படும். ருஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் அனைத்திலும் இத்தகைய கட்சிகள் வெளிப்படையாகச் செயற்படுகின்றன. நம்முடைய தொழிலாளர்களும், படித்தவர்கள் மத்தியிலுள்ள சோஷலிஸ்டுகளும் இணைந்து செயற்பட்டு அப்படிப்பட்ட ஒரு கட்சியை அமைத்துள்ளனர். அதன் பெயர் ருஷ்ய சமூக-ஜனநாயக சோஷலிஸ்ட் கட்சி.”2

சமூக ஜனநாயகவாதிகள் விரும்புவது என்ன? என்ற இரண்டாம் இயலில் அரசியல் சுதந்திரத்தைப் பற்றியும் ருஷ்யாவில் அச்சுதந்திரம் இல்லாமையை பற்றியும் குறிப்பிடுகிறார். ருஷ்ய மக்கள் பண்ணை அடிமை முறையில் எப்படி அடிமையாக இருந்தார்களோ அதேபோல் இன்று அதிகாரிகளுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.

அரசியல் சுதந்திரம் பற்றி லெனின் மிகச் சுருக்கமாக இதில் எழுதியிருக்கிறார். மக்கள் தொடர்பான பொதுப் பிரச்சினைகளையும் அரசு தொடர்பான பிரச்சினைகளையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளும் உரிமையாகும். சட்ட மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, சட்டங்களை விவாதித்து நிறைவேற்றும் உரிமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றத்துக்கே வரி விதிக்கும் உரிமை,  எவரிடமும் அனுமதி கோராமல் பத்திரிகை, நூல்களை வெளியிடும் உரிமை ஆகியவையே அரசியல் சுதந்திரம் என்று கூறப்படுகிறது.

“சமூக ஜனநாயகவாதிகளின் முதல் கோரிக்கையும் முதன்மையான கோரிக்கையும் அதுதான். “அரசியல் சுதந்திரம் வேண்டும்” என்று அவர்கள் எழுப்பும் முதல் கோரிக்கையின் பொருள் இது தான்:-
அரசியல் சுதந்திரம், நாடாளுமன்றத்துக்கு சுதந்திரமான தேர்தல், கூட்டம் கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை மட்டும் உழைக்கும் மக்களை அவர்கள் சந்திக்கும் வறுமையில் இருந்தும், அடக்கு முறையில் இருந்தும் உடனடியாக விடுவித்து விடாது என்பதை நாம் அறிவோம். பணக்காரர்களின் லாபத்துக்காக வேலை செய்ய வேண்டிய சுமையில் இருந்து நகர்ப்புற ஏழைகளையும், கிராமப்புற ஏழைகளையும் விடுவிக்கக்கூடிய உடனடியான சாத்தியக் கூறுகள் அவற்றுக்கு இல்லை என்பது உண்மையே.

உழைக்கும் மக்கள் தங்கள் மீதுதான் நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும். வேறு எவரையும் நம்பியிருக்க முடியாது. உழைப்பாளி தன்னைத் தானே வறுமை நிலையில் இருந்து விடுவித்துக் கொள்ளவில்லை என்றால் வேறு எவரும் அவனை விடுவிக்க மாட்டார்கள். அவ்வாறு உழைப்பாளிகள் தங்களைத் தாங்களே விடுவித்துக கொள்ள வேண்டுமானால், ருஷ்யாவிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களும் ஒரே சங்கமாக, ஒரே கட்சியாக ஒன்றுபட வேண்டும். சர்வாதிகார போலீஸ் ஆட்சி, கூட்டங்களுக்கு தடை விதித்தது என்றால், உழைப்பாளிகளின் பத்திரிகைகளுக்கு தடை வித்ததது என்றால், உழைப்பாளர்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தடை விதித்தது என்றால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுபட முடியாது. உழைப்பாளிகள் ஒன்றுபட வேண்டுமானால் அனைத்து விதமான சங்கங்கள் அமைக்கும் உரிமை அவர்களுக்கு வேண்டும். ஒன்றுபடுவதற்கான உரிமை வேண்டும். அரசியல் சுதந்திரத்தை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

அரசியல் சுதந்திரம் உடனடியாக தொழிலாளர்களை அவர்களின் வறுமை நிலையில் இருந்து விடுவிக்காது என்பது சரிதான். ஆனால் வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான ஓர் ஆயுதத்தை அரசியல் சுதந்திரம் உழைப்பாளிகளுக்கு அளிக்கும். வறுமையை எதிர்த்துப் போராட உழைப்பாளிகளின் ஒற்றுமைதான் ஒரே வழி. வேறுவழி எதுவும் இல்லை, இருக்கவும் முடியாது. அரசியல் சுதந்திரம் இல்லை என்றால் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுபடுதல் சாத்தியமானதாக இருக்காது.”3

இந்த அரசியல் உரிமை என்பதின் மூலம் மக்களுக்கு முழுமையான விடுதலை கிடைக்காது, ஆனால் விடுதலைக்கான பாதையை அமைத்துத்தரும். மக்கள் அனுபவித்துவரும் வறுமையை நீக்குவதற்கு தனியார் சொத்துடைமை ஒழித்தலே ஒரே வழி என்று லெனின் கூறுகிறார்.

“மக்களின் வறுமைச் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி- இன்றைய சமூக அமைப்பை மேலிருந்து கீழ்வரை முழுமையாக மாற்றி அமைப்பதுதான். நாடு முழுவதும் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்து ஒரு சோஷலிச சமூக அமைப்பை உருவாக்க வேண்டும். இதனையே வேறுவிதமாகச் சொன்னால் – பெரிய நிலப்பிரபுக்களின் பண்ணைகளைக் கைப்பற்ற வேண்டும், தொழிற்சாலை அதிபர்களிடம் இருந்து தொழிற்சாலைகளைக் கையகப்படுத்த வேண்டும். வங்கிகளிடமிருந்து நிதிமூலதனத்தைக் கைப்பற்ற வேண்டும், தனியார் சொத்துடைமை முறையை ஒழித்துக்கட்டி அனைத்து சொத்துக்களையும் நாடு முழுவதுமுள்ள உழைக்கும் மக்களின் பொதுச் சொத்தாக மாற்ற வேண்டும்.
ஆனால் தற்போது நிலவும் சமூக அமைப்பை நாடு முழுவதும் மாற்றி அமைப்பது ஒர் எளிதான வேலையல்ல. அதற்கு விரிவான முயற்சியும், ஒரு நீண்ட உறுதிமிக்க போராட்டமும் தேவைப்படும். வசதி படைத்தவர்களும், சொத்துடைமையாளர்களும், முதலாளிமார்களும் தங்கள் செல்வங்களைப் பாதுகாக்க தங்களின் சதி முழுவதையும் பயன்படுத்துவார்கள். அதிகாரிகளும் ராணுவமும் வசதி படைத்த வர்க்கங்களுக்கு துணையாகக் களத்தில் இறங்கும். ஏனெனில் அரசாங்கம் வசதி படைத்த வர்க்கங்களின் கைகளில்தான் இருக்கிறது. பிறரது உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் நபர்களுக்கு எதிராக உழைப்பாளிகள் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும். உழைப்பாளர்கள் தங்களிடையே ஒற்றுமையை வளர்த்துக்கொள்வதுடன் ஏழைகள் அனைவரையும் ஒரே உழைக்கும் வர்க்கமாக – பாட்டாளி வர்க்கமாக ஒன்றுபடுத்த உதவவேண்டும். அத்தகைய போராட்டத்தை உழைப்பாளி வர்க்கம் நடத்துவது எளிதானதாக இருக்காது என்பது உண்மையே.”4

எளிதல்ல என்ற உண்மையை சொன்னவர், அதனைப் புரிந்து கொள்ள செல்வமும் வறுமையும் என்ற அடுத்த இயலில் உதவிடுகிறார்.

விவசாயிகளுக்கு தங்களின் வாழ்வில் ஏன் வறுமை நிலவுகிறது என்பதை எளிய முறையில் விளக்குகிறார்.

“கிராமப்புறங்களில் உள்ள எந்தப் பிரிவு மக்கள் பணக்காரர்களின் பின்னே செல்வார்கள் என்பதையும். எந்தப் பகுதி மக்கள் உழைப்பாளர்கள் பின்னாலும் சமுக ஜனநாயகவாதிகள் பின்னாலும் அணிதிரள்வார்கள் என்பதைப் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும். நிலப்பிரபுக்களைத் தவிர மூலதனத்தைக் கையகப்படுத்தும் நிலையிலும் பிறர் உழைப்பில் பிழைக்கும் நிலையிலும் நிறைய விவசாயிகள் இருக்கிறார்களா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இப்பிரச்சினையின் ஆழத்துக்கே சென்று சரியான மதிப்பீட்டைச் செய்யாமல் வறுமை பற்றி விரிவாகப் பேசுவதால் மட்டும் எந்தப் பயனும் கிடைக்காது.

அவ்வாறு மதிப்பிடவில்லை என்றால் கிராமப்புறங்களில் எந்தப் பிரிவு எழைகளிடம் ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும் என்பதோ, நகர்ப்புற தொழிலாளர்களுடன் ஒற்றுமை எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதோ தெரியாத ஒன்றாகவே இருக்கும். நம்பகத் தன்மை வாய்ந்த ஓர் அமைப்பை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் போய்விடும். இப்படிப்பட்ட மதிப்பீடு செய்வதின் மூலமே விவசாயிகளை அவர்களது பிரிவைச் சேர்ந்த சக தோழர்களோ, பணக்கார விவசாயிகளோ, நிலப்பிரபுக்களோ ஏமாற்றும் நிலை உருவாகாமல் தடுக்க முடியும்.”5

விவசாயிகளில் பலர் வறுமையிலும், சிலர் பணக்காரர்களாக வளர்ந்துவிடுவதாக இருக்கின்றனர். இந்தப் பணக்கார விவசாயிகள் நிலப்பிரபுக்கள் பக்கம் சாய்ந்து தொழிலாளர்களுக்கு எதிராகவும் பணக்காரர்களுக்கு ஆதரவாகவும் செயற்படுகின்றனர். இவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நகர்புறத் தொழிலாளர்களுடன் ஒன்றுபட்டுச் செயற்பட விரும்பும் கிராமப்புற ஏழைகள், இது குறித்து கவனமாக சிந்திக்க வேண்டும் என்கிறார் லெனின். பணக்கார விவசாயிகள் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக இருக்கிறார்களா? அவர்கள் எவ்வளவு வலிமையுடன் இருக்கிறார்கள் என்பதை கணக்கில் கொண்டு, அவர்களுக்கு எதிரான அமைப்பை உருவாக்க வேண்டும்.

ஒரு விவசாயி ஏழை விவசாயியா? பணக்கார விவசாயியா? என்பதை அவர்கள் வைத்துள்ள குதிரைகளின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடலாம்.  நிறைய குதிரை வைத்திருந்தால் அந்த விவசாயி பணக்கார விவசாயி ஆவார். இந்தப் பணக்கார விவசாயிகள் நிலப்புரபுக்களைப் போல் விவசாய வேலைகளுக்கு கூலி விவசாயிகளை அமர்த்திக் கொள்கின்றனர். இவர்களும் நிலப்பிரபுக்களைப் போலவே வசதி மிக்கவர்களாக வளர்ந்து வருகின்றனர்.

       அடுத்து ஏழை விவசாயியைப் பார்ப்போம்.  ஒரு குதிரைகூட இல்லாத விவசாயி ஏழ்மையிலும் கூலிக்காக விவசாய நிலத்தில் தமது உடலுழைப்பை செலுத்திட வேண்டிய நிலையிலும் இருப்பர். இத்தகைய விவசாயி பஞ்சம் ஏற்படும் போதும் விளைச்சல் பாதிக்கும் போதும் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றவர்.

இரண்டு குதிரைகளை வைத்துள்ளவர்கள் நடுத்தர விவசாயிகள். விவசாயம் நன்றாக  நடைபெறும் ஆண்டுகளில் இவர்களது அடிப்படைத் தேவைகள் ஒரளவிற்கு நிறைவேறும். விளைச்சல் பாதிக்கின்றபோது இவர்களும் வறுமையில் தள்ளப்படுகின்றனர். ஏன் என்றால் இவர்களிடம் பணச் சேமிப்பு என்பது மிகக்குறைவானதாக இருக்கும். இதனால் இவர்களும் நிலப்பிரபுக்களிடம் கொத்தடிமைகளாக மாறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

வசதி படைத்தவர்கள் ஒரு புறம், ஏழைகள் மறுபுறம் இந்த இருவருக்கும் இடையில் நடுத்தர விவசாயிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். இருவரில் யாரை சார்ந்து நிற்பது என்பது இவர்களுக்கு ஏற்படும் பெரும் சிக்கல். வசதி படைத்தவர்கள் இவர்களைப் பார்த்து நீங்கள் சொத்துடமையாளர்கள் அதனால் கூலி விவசாயிகளிடம் செல்லாதீர்கள் எங்களிடம் வாருங்கள் என்று அழைக்கின்றனர். பணக்கார விவசாயிகளின் தந்திரங்களில் அகப்பட வேண்டாம் என்று விவசாயத் தொழிலாளர்கள் கூறி, தங்களது போராட்டங்களில் கலந்து கொள்ளும்படி அழைக்கின்றனர்.

“பணக்காரர்கள் உங்களை ஏமாற்றிவிடுவார்கள். உங்களை கசக்கிப் பிழிவார்கள். அனைத்துப் பணக்கார்களுக்கும் எதிராக நாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு உதவி செய்வதுதான் நீங்கள் விடுபடுவதற்கான வழி என்று நடுத்தர விவசாயிகளிடம் தொழிலாளிகள் கூறுவார்கள்.
..
நடுத்தர விவசாயிகளை ஏமாற்றுவதற்காக பணக்காரர்கள் கையாளும் தந்திரங்கள் என்னென்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றை எவ்வாறு அம்பலப்படுத்துவது என்பதையும் கற்றுக் கொண்டு, நடுத்தர விவசாயிககளின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை அவர்கள் அறிவதற்கு உதவிசெய்ய வேண்டும். ருஷ்ய சமூக ஜனநாயக அமைப்பின் ஊழியர்களின் பாதையை உடனடியாகத் தேர்ந்தெடுத்தால் கிராமப்புறத் தொழிலாளிகளுக்கும் நகர்ப்புறத் தொழிலாளிகளுக்கும் இடையே ஒரு உறுதியான ஒற்றுமையை விரைவாக உருவாக்க முடியும்.”6

நடுத்தர விவசாயி எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதே நான்காம் இயலின் தலைப்பாகும்.

கூட்டுறவு போன்றவற்றின் உதவியோடு நடுத்தர விவசாயிகளில் சிலர் பணக்காரர்களாக மாறுவது உண்மையே, இது விதிவிலக்கானதே. பணக்கார விவசாயிகள் அனைவரையும் விரட்டியடிக்காமல் நடுத்தர விவசாயிகளுக்கு விடிவில்லை என்பதே உண்மையாகும். இவர்களை விரட்டியடிப்பதற்கு நகர்ப்புற தொழிலாளர்களுடனும் கிராமப்புறத் தொழிலாளர்களுடனும் இணைந்து போராட வேண்டும். அப்போதுதான் வலுவான நிலப்பிரபுத்துவத்தை முழுமையாகத் தூக்கி எறிய முடியும்.

அனைத்து மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எந்தெந்த முன்னேற்றங்களைப் பெற சமூக ஜனநாயகவாதிகள் விரும்புகிறார்கள்? என்பது பற்றி ஐந்தாவது இயலிலும், அனைத்து விவசாயிகளுக்கும் எத்தகைய முன்னேற்றங்கள் கிடைக்க வேண்டுமென்று சமூக ஜனநாயகவாதிகள் பாடுபடுகிறார்கள்? என்பது பற்றி ஆறாம் இயலிலும் எழுதப்பட்டுள்ளது.

ஏழாம் இயல் கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டம். உழைப்பாளிகளான ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பணம்படைத்தவர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே வர்க்கப் போராட்டமாகும். இந்த போராட்டம் என்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ருஷ்ய நாட்டில் கிராமப்புறங்களிலும் நடைபெறுகிறது.

1902ஆம் ஆண்டில் விவசாயிகள் நிலப்பிரபுக்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராடினர். போராடாமல் பட்டினி கிடந்து சாவதைவிட போராட்டங்களில் பங்கெடுத்து சாவது மேலானது என்று விவசாயிகள் சரியாகவே முடிவெடுத்துச் செயற்பட்டனர். போராட்டம் தோல்வியைக் கண்டது.  விவசாயிகளின் பேரெழுச்சி நசுக்கப்பட்டதற்கு காரணம் போராடியவர்களிடம் அரசியல் உணர்வு இல்லாமையும், அறியாமையில் ஆழ்ந்தவர்களாக இருந்ததுமாகும். இந்த அரசியல் அமைப்பே மாற்றப்பட வேண்டும் என்ற தெளிவான கோரிக்கையோடு அவர்கள் போராடவில்லை.

ஒரு போராட்டம் வெற்றியடைய வேண்டுமாயின், தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஓர் அரசியல் நோக்கம் இருக்க வேண்டும், அதற்கான தயாரிப்புகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருக்க வேண்டும். இதல்லாமல் வெற்றியை அடைய முடியாது, சிறு தோல்வி, பெருந் தோல்வி என்று தோல்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். கிராமப்புற விவசாயிகளை அரசியல் படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தை அவர்கள் அறிந்தவற்றில் இருந்து விளக்க வேண்டும்.

“நூல்களில் இருந்து மட்டும் சமூக ஜனநாயகக் கோட்பாடுகளைக் கற்றுத் தந்தால் போதாது. நம்மைச் சுற்றி நிகழ்கின்ற ஒவ்வொரு அடக்குமுறை சம்பவத்தையும் அநீதிகளையும் எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத்திக் கொண்டு அவற்றின் அடிப்படையில் விளக்கங்களை அளிக்க வேண்டும். சமூக ஜனநாயகக் கோட்பாடு என்பது அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டக் கொள்கையாகும். அனைத்து பகற் கொள்ளைகளுக்கும் அனைத்து அநீதிகளுக்கும் எதிரான போராட்டக் கொள்கையாகும். எவனொருவன் இந்த அடக்குமுறைகளுக்கான காரணங்களை அறிந்து வைத்திருக்கிறானோ, எவனொருவன் தன் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு அடக்குமுறை நடவடிக்கைக்கும் எதிராகப் போராடுகிறானோ அவனே ஓர் உண்மையான சமூக ஜனநாயகவாதி.

இதை எவ்வாறு செய்வது? வர்க்க உணர்வு படைத்த சமூச ஜனநாயகவாதிகள் தங்கள் கிராமங்களிலோ நகரங்களிலோ கூடும்போது, உழைக்கும் வர்க்கம் முழுமைக்கும் மிகச்சிறந்த முறையில் சாதகமாக அமைய எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அவர்களே பேசி முடிவு செய்ய வேண்டும்.
…எழுதப் படிக்கத் தெரிந்த அனைத்து விவசாயிகளும் பிரசுரத்தைப் படித்துப் பார்க்கும்போது பிரச்சினைகள் என்னவென்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் பிறரை படிக்கச் சொல்லி அதைக் கேட்டு விளக்கம் பெறுவர். சமூக ஜனநாயகவாதிகள் தங்களை ஆதரிக்கிறார்கள் என்பதையும் அனைத்து விதமான சுரண்டல்களையும் சமூக ஜனநாயகவாதிகள் கண்டிக்கிறார்கள் என்பதையும் அப்போது விவசாயிகள் புரிந்து கொள்வார்கள். எத்தகைய நிவாரணமாக இருந்தாலும் (அவை சிறிய நிவாரணங்களாகவும் இருக்கலாம்) அனைவரும் ஒன்றுபட்டு நின்றால் உடனடியாகப் பெற முடியும் என்பதைப் புரிந்து கொள்வார்கள். அதேநேரத்தில் பெரிய முன்னேற்றங்களை நாடு முழுவதும் பெறுவதற்கு நகர்ப்புறத்தில் உள்ள சமூக ஜனநாயக ஊழியர்களுடன் இணைந்து நின்று மகத்தான போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும் என்பதையும் புரிந்து கொள்வார்கள்.”7

குறிப்புகள்
1 .கிராமப்புற ஏழைகளுக்கு - பக்கம் 13-14
2. மேற்கண்ட நூல்- பக்கம் 12-13
3. மேற்கண்ட நூல்- பக்கம்21-22
4. மேற்கண்ட நூல்- பக்கம்28-29
5. மேற்கண்ட நூல்– பக்கம்30-31
6. மேற்கண்ட நூல்– பக்கம்49-50
7. மேற்கண்ட நூல்– பக்கம் 110-112


Saturday, 7 May 2016

ஓரடி முன்னால் ஈரடி பின்னால்-லெனின்

ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூலை லெனின் “நமது கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி” என்று முத்திரையிட்டு தொடங்கினார். இரண்டாம் காங்கிரசினால், கட்சியின் பயணம் ஒரடி முன்னே சென்றது என்றால் மென்ஷிவிக்குகளின் போக்கால் ஈரடி பின்னோக்கிச் செல்வது பற்றிய போக்கை இந்நூல் எடுத்துரைக்கிறது.

 

காங்கிரசின் முடிவுகளையும், அதன் தேர்தல்களையும் மறுதலிப்பதை நம்பிக்கைத் துரோகம் என்று லெனின் கடுமையாகச் சாடினார். நடந்து முடிந்த காங்கிரஸ் மிக்க கவனத்துடன் அனைத்து பிரதிநிதித்துவ அடிப்படையில் கூட்டப்பட்டது. அதனால் காங்கிரஸ் முழுமையாக அனைவரையும் கட்டுப்படுத்தும் என்பதை வலியுறுத்தினார். ஓர் உண்மையான கட்சியை உருவாக்குவதே இக்காங்கிரசின் நோக்கம் என்பதையும் அதற்கான ஆயத்தங்களை இஸ்க்ரா மூன்று ஆண்டுகளாக செய்ததையும், பெரும்பான்மையான கமிட்டிகள் இதனை அங்கீகாரம் செய்திருந்ததையும் சுட்டிக்காட்டுகிறார்.

 

சொல்லளவில் அங்கீகரித்துவிட்டு, செயலில் தடுமாறிய அமைப்புகளும் காங்சிரசுக்கு வந்திருந்த காரணத்தால், வெற்றி அடைவதற்கு பெரிய போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது. அதனால் காங்கிரஸ் போராட்ட அரங்கமாக காட்சியளித்தது என்கிறார் லெனின்.

 

“காங்கிரசின் அடிப்படையான பணி என்ன?

 

இஸ்க்ராவினால் முன்மொழியப்பட்டதும், விரிவான விளக்கம் செய்யப்பட்டதும் ஆன கோட்பாடுகள், நிறுவன ஒழுங்கமைப்புக் கருத்துக்கள் ஆகியவற்றின் மீதான அடிப்படையில் ஓர் உண்மையான கட்சியை உருவாக்குவதுதான் அதன் பணியாக இருந்தது. காங்சிரஸ் இந்தத் திசையில்தான் பணிபுரிய வேண்டும் என்பது இஸ்க்ராவின் மூன்றாண்டு நடவடிக்கைகளால் முன்நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பெரும்பான்மையான கமிட்டிகள் இஸ்க்ராவின் மூன்றாண்டுப் பணியை அங்கீகாரம் செய்திருந்தன.

 

இஸ்க்ராவின் வேலைத்திட்டமும, போக்கும், கட்சியின் வேலைத்திட்டமாகவும், போக்காகவும் மாற இருந்தன. இஸ்க்ராவின் நிறுவன ஒழுங்கமைப்புத் திட்டங்கள் கட்சியின் ஒழுங்கு விதிகளில் உருவம் பெற இருந்தன. ஆனால், போராட்டம்  இன்றி இதைச் சாதிக்க முடியாது என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை.

 

காங்கிரசஸ் அனைத்து பகுதியினரின் பிரதிநிதித்துவம் வாய்ந்ததாக இருந்தபடியால், இஸ்க்ராவுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய அமைப்புகளும் (புந்த், ரபோச்சியே தேலோ) இஸ்க்ராவை சொல்லளவில் தலையாய உறுப்பாக அங்கீகாரம் செய்துவிட்டு, செயலில் தங்களது சொந்தத் திட்டங்களைப் பின்பற்றி, கோட்பாடு தொடர்பான செயல்களில் உறுதியற்றவைகளாக இருந்த அமைப்புகளும் (யூழ்னி ரபோச்சி குழுவும், இத்தோடு நெருக்கமாக உறவு கொண்டிருந்த சில கமிட்டிகளின் உறுப்பினர்களும்) காங்கிரசில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தன. இப்படிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலையில் “இஸ்க்ரா” போக்கின் வெற்றிக்காக நடத்தப் பெறும் போராட்ட அரங்கமாக காங்கிரஸ் மாறுவது தவிர வேறு வழியில்லை. அது அப்படிப்பட்ட அரங்கமாக மாறிற்று என்பது அதன் கூட்ட நடவடிக்கைக் குறிப்பேடுகளைச் சிறிதளவு கவனத்துடன் படிப்பவர்களுக்குத் தெளிவாகப் புலப்படும்”1

 

                கம்யூனிஸ்ட் கட்சி என்பது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப்படையாகும். இப்படை மார்க்சியத்தை தமது கோட்பாடாகக் கொண்டுள்ளது. சமூகத்தை அணுகுவதில் அது வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சமூக வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய அறிவை தமது ஆயுதமாகக் கொண்டுள்ளது. இதனால்தான் இக்கட்சி தமது முன்னணி பணியினை செயற்படுத்த முடிகிறது.

 

கட்சியையும், தொழிலாளி வர்க்கத்தையும் ஒன்றாக சேர்த்துக் குழப்பக் கூடாது. தொழிலாளர் போராட்டத்தில் பங்குபெறும் அனைவரையும் கட்சி உறுப்பினராக ஏற்பது, கட்சி உணர்வை, ஒவ்வொரு வேலை நிறுத்தக்காரனுடைய உணர்வுநிலைக்குக் குறைப்பதாகிவிடும். கம்யூனிஸ்ட் கட்சியின் பணி என்பது ஒவ்வொரு வேலை நிறுத்தக்காரனின் உணர்வை, அனைத்து தொழிலாளர்களின் உணர்வுநிலைக்கு உயர்த்துவதே ஆகும்.

 

“ஒரு வர்க்கத்தின் கட்சியாக நாம் இருக்கிறோம். எனவே கிட்டத்தட்ட முழு வர்க்கமும் நமது கட்சித் தலைமையின் கீழ் செயலாற்ற வேண்டும். எவ்வளவு நெருக்கமாக முடியுமோ அவ்வளவு நெருக்கமாக கட்சியைப் பின்பற்ற வேண்டும்.

முன்னணிப்படைக்கும், அதன்பால் ஈர்க்கப்பட்டு வரும் மக்கள் திரளுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை மறந்து விடுவது, இன்னும் பரந்ததான மக்கள் பிரிவுகளைத்தான் வளர்ச்சியுற்றுள்ள முன்னேற்ற நிலைக்கு உயர்த்தும் முன்னணிப்படையின் இடையறாத பணியை மறந்துவிடுவது ஆகியவை எல்லாம், தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்வது என்றுதான் பொருள்படும், நம்முடைய பணிகளின் அளப்பரிய தன்மையினைக் காண மறுத்துக் கண்ணை மூடிக் கொள்வது என்றாகும், இந்தப் பணிகளைக் குறுக்கிக் கொள்வது என்பதுதான் இதன் பொருளாகும்.”2

 

கம்யூனிசக் கட்சியானது தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பு வழியிலான கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும். கட்சி உறுப்பினர்களாவதற்கு கட்சியின் ஏதாவது அமைப்பில் உறுப்பினராக இருந்து கட்சிப் பணியாற்ற வேண்டும். கட்சியின் அமைப்பில் இணையாமல் இருப்போரையும் கட்சி உறுப்பினராகக் கொள்வது, கட்சியின் வர்க்க உணர்வின் உறுதி கட்டவிழ்ந்துவிடும். இப்படிப்பட்டவர்களை அமைப்பு வழியில் ஒன்றுபடுத்த முடியாமல் போய்விடும். கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்படாதவர்களின் கூடாரமாக காட்சியளித்தால், கட்சியினரிடையே ஒருமனதான கருத்தைக் காண முடியாது. ஒன்றுபட்டு செயற்படுவதை குலைக்கின்ற ஆபத்தாகிவிடும்

 

“வர்க்கத்தின் முன்னணியாகிய கட்சி சாத்தியமான அளவிற்கு அமைப்பு ஒழுங்குக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்ச அளவு அமைப்பு ஒழுங்கையாவது அனுமதிக்கும் அத்தகைய நபர்களை மட்டுமே கட்சி அதன் அணிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், என்னுடைய தேவையை என்னுடைய கோரிக்கையை இதன்மூலம் துல்லியமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துகிறேன். அதற்கு மாறாக என்னுடைய எதிராளி, கட்சிக்குள்ளாக அமைப்புக்குட்பட்ட நபர்களையும், அமைப்புக்குட்படாத நபர்களையும் ஒன்றாகக் கலந்து வைக்கிறார்.

 

மேல் நெறியாண்மை செய்யப்பட இடமளிப்பவர்களையும் இடமளிக்க மறுக்கிறவர்களையும், முன்னேற்றம் அடைந்தவர்களையும், சீராக்க முடியாதபடி பிற்போக்கானவர்களையும் ஒன்றாகக் கலந்து வைக்கிறார். இந்தக் குழப்பம் உண்மையிலேயே ஆபத்தானது.” 3

 

 மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படைகளில் செயற்படுகின்ற கட்சி தமது சித்தாந்த ஒருமைப்பாடுடன் உறுதியாக இருக்க வேண்டுமானால் அதற்கு அமைப்பைத் தவிர வேறு ஆயுதம் கிடையாது. பல கோடி உழைப்பாளர்களை ஒரு தொழிலாளி வர்க்கப் படையாக ஒருங்கிணைக்கும் அமைப்பின் பொருளாயத ஐக்கியத்தால் மட்டுமே கட்சி ஒரு முன்னணிப் படைக்கான பணியினை செய்திட முடியும்.

 

“நமது வேலைத்திட்டம், நமது செயற்தந்திரங்கள் ஆகிய துறைகளில் போலவே, அமைப்புத் துறையிலும் சந்தர்ப்பவாதமானது பரிதாபகரமாக முதலாளித்துவ உளவியலுக்கு மண்டியிட்டு விடுகிறது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் கருத்தோட்டத்தை விமர்சனம் ஏதுமின்றி ஏற்றுக் கொண்டு விடுகிறது, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்ட ஆயுதத்தை மழுங்கடிக்கிறது.

 

ஆட்சி அதிகாரத்திற்கான தனது போராட்டத்தில், பாட்டாளி வர்க்கத்துக்கு அமைப்பைத் தவிர வேறு ஆயுதம் ஏதும் கிடையாது.”4

 

                கட்சி ஜனநாயக வழிப்பட்டதாக செயற்படுவதற்கு ஜனநாயக மத்தியத்துவம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஓரே மாதிரியான விதிகளையும் ஒரே சீராக இருக்கக் கூடிய கட்சிதான் கட்டுப்பாடுகளை பெற்றதாக இருக்க முடியும். இதற்கு மத்தியத்துவம் அவசியமானதாகும். பெரும்பான்மையின் முடிவிற்கு சிறுபான்மை கட்டுப்பட வேண்டும், மேல் அமைப்புகளுக்கு கீழ் அமைப்புகள் கட்டுப்பட வேண்டும். இதனை மீறினால் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களின் ஜனநாயக வழிப்பட்டதாக இருக்க முடியாது. கீழிருந்து தேர்தல்கள் வழியில் அமைப்புகள் கட்டியமைக்கப்பட வேண்டும்.

 

“இப்போது நாம் அமைப்புத்திரட்சியுள்ள கட்சியாகிவிட்டோம். இது அதிகாரம் நிலைநிறுத்தப் படுவதைச் சுட்டிக் காட்டுகிறது, கருத்துக்களின் அதிகாரத்தை ஆட்சி அதிகாரமாக மாற்றுவது, கீழாக உள்ள கட்சி அமைப்புகள் உயர்மட்ட அமைப்புகளுக்குக் கீழ்ப்பட்டு நடப்பது ஆகியவை நிலை பெறுகின்றன.”5

 

                இவ்வகையிலான அமைப்பு வழியில் திரட்டப்பட்ட கட்சியே, தொழிலாளர்களின் முன்னணிப் படையாக செயற்பட முடியும்.

 

இந்த நூலில் லெனின், கட்சியில் “பெரும்பான்மை” (போல்ஷிவிக்) தான் புரட்சிகரமானது, “சிறுபான்மை” (மென்ஷிவிக்) சந்தர்ப்பவாதமானது என்பதை நிறுவுகிறார்.


குறிப்புகள்

1. ஓரடி முன்னால் ஈரடி பின்னால் - தேர்வு நூல்கள் தொகுதி 2 – பக்கம்- 16- 17

2. மேற்கண்ட நூல்– பக்கம்- 97- 98
3. மேற்கண்ட நூல்– பக்கம்- 93
4. மேற்கண்ட நூல்– பக்கம்- 358
5. மேற்கண்ட நூல்– பக்கம்- 277




Saturday, 2 April 2016

“இடதுசாரி” கம்யூனிசம்- ஓர் இளம்பருவக் கோளாறு- லெனின் (நூல் அறிமுகம்)


“இடதுசாரி” கம்யூனிசம்- ஓர் இளம்பருவக் கோளாறு என்கிற நூலை லெனின் 1920ஆம் ஆண்டில் எழுதினார். மூன்றாம் அகிலத்தின் இரண்டாம் காங்கிரசின் போது இந்நூல் வெளிவர வேண்டும் என்ற முடிவோடு இதனை லெனின் எழுதினார். பிரெஞ்சு, ஆங்கில மொழிகளிலும் வெளியிடப்பட்டு, அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நூலில் காணப்படும் முடிவுகளின் அடிப்படையில் இந்தக் காங்கிரசின் தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.

       போல்ஷிவிக் கட்சியின் அமைப்பு, போராட்டம், வளர்ச்சி, வெற்றி ஆகியற்றின் வரலாற்று சிறப்பை இந்நூலில் பொதுமைப்படுத்தி விவரித்துள்ளார். போல்ஷிவிக் கம்யூனிஸ்ட் கட்சி தங்களது நாட்டின் பிரத்யேக இடையூறுகளை, மார்க்சிய சித்தாந்தத்தின் வழிகாட்டுதலின்படி எவ்வாறு கடந்து வந்தது என்பதை இந்நூல் சித்தரிக்கிறது. திட்டவட்டமான நிலைமைகளைக் கணக்கில் கொள்ளாது மார்க்சிய பொது உண்மைகளை இயந்திரத்தனமாக இணைத்திடும் போக்கைத் தவிர்த்து, ஸ்தூலமான நிலைமைகளை கணக்கில் எடுத்து, மார்க்சிய வழிகாட்டுதலின்படி போல்ஷிவிக் கட்சி எவ்வாறு செயற்பட்டது என்பதை லெனின் இதில் விவரித்துள்ளார்.

       ருஷ்யப் புரட்சியை அப்படியே தமது நாட்டில் நடத்துவது பற்றிய சிந்தனைப் போக்கையும், அதற்கு மாறாக இது ருஷ்ய நாட்டிற்கு மட்டுமானது என்பதாக புரிந்து கொள்வதையும் லெனின் இங்கு மறுதலிக்கிறார். முதல் இயலின் தலைப்பு, எப்பொருளில் நாம் ருஷ்யப் புரட்சியின் சர்வதேச முக்கியத்துவம் குறித்து பேசலாம்.

“ருஷ்யாவில் பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரம் வென்றது (அக்டோபர் 25, 1917) தொடக்க மாதங்களில், பிற்பட்ட ருஷ்யாவுக்கும் மேலைய ஐரோப்பாவின் வளர்ச்சியுற்ற நாடுகளுக்கும் இடைப்பட்ட மிகுதியான வேறுபாடு காரணமாய், இந்நாடுகளின் பாட்டாளி வர்க்கப் புரட்சி சிறிதும் எங்களுடையதை ஒத்ததாக இராதென நினைக்கத் தோன்றியிருக்கலாம்.

இப்பொழுது நமக்குக் கணிசமான அளவில் சர்வதேச அனுபவம் கிடைத்திருக்கிறது, எங்களுடைய புரட்சியின் குறிப்பிட்ட சில அடிப்படை இயல்புகள் ஒரு மண்டலத்துக்கோ, தனியொரு சேதத்துக்கோ, ருஷ்யாவுக்கோ மட்டும் உரித்தான முக்கியத்துவத்துடன் கூட, சர்வதேச முக்கியத்துவமும் பெற்றவை என்பதை இந்த அனுபவம் திட்டவட்டமாகப் புலப்படுத்துகிறது.

சர்வதேச முக்கியத்துவம் என்பதாக இங்கு நான் கூறுவது இப்பதத்தின் விரிவான பொருளில் அல்ல, எங்களுடைய புரட்சியால் எல்லா நாடுகளுக்கும் ஏற்படும் விளைவுகளின் பொருளில், இப்புரட்சியின் முதல் நிலைக்கூறுகளில் சிற்சில மட்டுமின்றி யாவுமே, மற்றும் அதன் துணைக் கூறுகளில் பலவுங்கூட, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவையே. இப்பதத்தின் மிகக் குறுகிய பொருளில்தான், எங்கள் நாட்டில் நடந்தேறியது சர்வதேச அளவில் பொருந்துவதாகும், அல்லது சர்வதேச அளவில் திரும்பவும் நடைபெறுவது வரலாற்று வழியில் தவிர்க்க இயலாததாகும் என்கிற பொருளில்தான், இதைப் பற்றி இங்கு நான் கூறுகிறேன். எங்களுடைய புரட்சியின் சில அடிப்படை இயல்புகள் இந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன என்பதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

இந்த உண்மையை மிகைப்படுத்திக் கூறி, எங்கள் புரட்சியின் சிற்சில அடிப்படை இயல்புகளுக்கு பெரும் பிழையாகிவிடும் என்பதைக் கூறத் தேவையில்லை. வளர்ச்சியுற்ற நாடுகளில் ஏதேனும் ஒன்றிலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றியடையுமாயின், அதைத் தொடர்ந்து பெரும் மாற்றம் ஏற்படக்கூடும், அதாவது ருஷ்யா முன்மாதிரியாக இருக்கும் நிலை விரைவில் முடிவுற்று திரும்பவும் (“சோவியத்”, சோஷலிசப் பொருளில்) பிற்பட்ட நாடாகிவிடக் கூடும் என்பதைக் காணத் தவறுவதும் பிழையேயாகும்.”1

ருஷ்யப் புரட்சியை அளவுக்குமீறி புகழ்வது எந்தவகையிலும் பயனுடையது கிடையாது.

இரண்டாம் இயல், போல்ஷிவிக்குகளுடைய வெற்றிக்கு இன்றியமையாத ஒரு நிபந்தனை.

இந்த நிபந்தனையானது பாட்டாளி வர்க்க கட்சியானது, முழுமையான மத்தியத்துவமும், கடுமையான கட்டுப்பாடும் ஆகும். முதலாளித்துவ வர்க்கத்தின் மீது வெற்றி பெறுவதற்கான இன்றியமையாத ஒரு நிபந்தனையாக இது இருக்கிறது. புரட்சிக்கு மட்டுமல்லாது வெற்றி பெற்று நிறுவப்பட்ட சோவியத் ஆட்சியை தக்கவைப்பதற்கும் இது தேவைப்படுகிறது. கட்டுப்பாடில்லாமல் ஆட்சியதிகாரத்தை இரண்டரை மாதங்களுக்குக்கூட நீடித்து வைத்திருக்க முடியாது என்கிறார் லெனின்.

போல்ஷிவிக் கட்சியின் வெற்றியானது ஒரேயொரு புரட்சிகரக் கோட்பாடான மார்க்சியத்தை ஏற்றதேயாகும். மார்க்சிய கோட்பாட்டிற்கு வந்தடைந்த விதத்தை லெனின் கூறுகிறார்.

“ஈடிணையற்ற துன்பமும் தியாகமும், அயராத தேடலும், ஆராய்ச்சியும், நடைமுறைச் சோதனையும், ஏமாற்றமும், சரிபார்த்தலும், ஐரோப்பிய அனுபவத்துடனான அனுபவித்த வேதனையின் வாயிலாய் ருஷ்யாவானது பிழையற்ற ஓரேயொரு புரட்சிகரக் கோட்பாடான மார்க்சியத்தை வந்தடைந்தது.”2

       இந்நிலையை ருஷ்யா வந்தடைந்ததற்கு காரணமாக லெனின் கூறுகிறார், ஜாரிசத்தால் அரசியலாளர்கள் நாடுகடத்தப்பட்டு வந்ததன் விளைவாய், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் புரட்சிகர ருஷ்யா வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு வளமான சர்வதேசத் தொடர்புகளையும், உலகப் புரட்சி இயக்கத்தின் வடிவங்களையும் கோட்பாடுகளையும் பற்றிய சிறந்த தகவல்களையும் பெற்றுக் கொண்டது.  இந்த மார்க்சிய கோட்பாட்டு கருங்கல்லை அடித்தளமாகக் கொண்டு போல்ஷிவிசம் தோன்றியது. போல்ஷிவிசமானது சட்டவழியிலான, சட்டவழியற்ற போராட்ட முறைகளை சிறப்பாக கையாண்டதில் அடங்கியிருக்கிறது.

“கோட்பாடு என்னும் இந்தக் கருங்கல் அடித்தளத்தின்மீது (granite foundation of theory) எழுந்த போல்ஷிவிசமானது, மறுபுறத்தில், உலகில் வேறு எங்கும் ஒப்புவமை காண இயலாத அனுபவச் செழுமைவாய்ந்த பதினைந்து ஆண்டுக் கால (1903-17) நடைமுறை வரலாற்றினைக் கடக்கலாயிற்று. அந்தப் பதினைந்து ஆண்டுகளின் போது இந்நாடு கண்ட புரட்சிகர அனுபவத்துக்கும், அதிவேகமாகவும் பல்வேறு வகைப்பட்டதாகவும் வரிசையாக வந்த வெவ்வேறு இயக்க வகைகளுக்கும்- சட்டவழியிலான மற்றும் சட்டவழியற்றதான, (legal and illegal) அமைதியானதும், புயலின் மூர்க்கம் கொண்டதும், தலைமறைவானதும் வெளிப்படையானதும், சிறு குழுக்களின் அளவிலானதும் பரந்த பொதுமக்கள் வீச்சு கொண்டதும், நாடாளுமன்ற, பயங்கரவாத வடிவிலானதும் (parliamentary and terrorist forms) ஆகிய விதவிதமான இயக்க வகைகளுக்கும் – ஏறத்தாழ ஒப்பானவற்றையுங்கூட வேறு எந்த நாடும் கண்டதில்லை.”3

       மூன்றாவது இயல், போல்ஷிவிச வரலாற்றின் பிரதான கட்டங்கள். இதில் புரட்சியின் தயாரிப்பு ஆண்டுகளான 1903-05யையும், அனைத்து வர்க்கங்களும் வெளிப்படையாக வெளிவந்து போராடிய புரட்சிகர ஆண்டுகளான 1905-07யையும், ஜாரிசத்தின் கையோங்கிய பிற்போக்கு ஆண்டுகளான 1907-10யையும், புத்தெழுச்சி ஆண்டுகளான 1910-14யையும், ஏகாதிபத்திய முதல் உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகளான 1914-17யையும், பிப்ரவரிப் புரட்சியில் இருந்து அக்டோபர் புரட்சிவரையிலான 1917யையும் சுருக்கமாக எழுதியிருக்கிறார்.

       நான்காவது இயல், தொழிலாளி வர்க்க இயக்கத்தினுள் எந்தெந்தப் பகைகளுக்கு எதிரான போராட்டம் போல்ஷிவிசம் வளர்ந்து வலிமையுற்று உருக்கு உறுதி பெற உதவிற்று. இதில் போல்ஷிவிசம் எவ்வகையான சித்தாந்த பகைகளுக்கு எதிராகப் போராடி வளர்ந்து உறுதி பெற்றது என்பதையும், முதலும் முதன்மையாகவும் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துப் போராடியதையும், இதற்கு அடுத்து மற்றொரு பகையான குட்டிமுதலாளித்துவப்  புரட்சிவாதத்தை குறிப்பிடுகிறார்.

“இவர்கள் எளிதில் புரட்சிகர அதிதீவிர நிலைகளுக்குச் சென்று விடுகிறார்கள் என்றாலும், விடாமுயற்சியுடன் போராடவோ, ஒழுங்கமைப்பு பெறவோ, கட்டுப்பாடும் உறுதிப்பாடும் கொள்ளவோ திராணியற்றவர்கள் என்பதானது மார்க்சியவாதிகளுக்கு இந்தக் கோட்பாட்டின் வாயிலாக முழு அளவுக்கு நிலைநாட்டப்பட்டிருக்கிறது, ஐரோப்பியப் புரட்சிகள், புரட்சிகர இயக்கங்கள் ஆகியவற்றின் அனுபவத்தாலும் இது முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் கொடுமைகளால் குட்டிமுதலாளித்துவப் பகுதியோர் “வெறிபிடித்த மூர்க்க நிலைக்குத்” தள்ளிவிடப்படுவதானது – அராஜகவாதத்தைப் போலவே – முதலாளித்துவ நாடுகள் யாவற்றுக்கும் இயல்பாகவே உரித்தான ஒரு சமூக நிகழ்வாகும்.

இந்தப் புரட்சிவாதத்தின் நிலையற்ற தன்மையும், அதன் வறட்டுத்தனமும், மற்றும் அடங்கி அடிபணிந்துவிடும் நிலையாகவும், மனச்சோர்வாகவும் மாயக் கற்பனைகளாகவும் ஏதேனும் ஒரு முதலாளித்துவ “ஐம்பக்” கருத்தின்பால் “பைத்தியக்கார” மோகங் கொண்டுவிடும் மடமையாகவுங்கூட அதிவிரைவாய் மாறிவிடும்படியான அதன் போக்கும் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆயினும் கோட்பாட்டின் முறையிலோ, கருத்தியலான முறையிலோ இவ்வுண்மைகளை ஏற்றுக் கொள்வதனால் மட்டும் புரட்சிகரக் கட்சிகள் ஒருபோதும் தமது பழைய தவறுகளிலிருந்து விடுபட்டுவிட முடியாது. எதிர்பாராத சந்தர்பங்களில், ஓரளவு புதிய வடிவங்களில், இதுவரை கண்டிராத ஜோடனைகளிலோ, சுற்றுச்சார்புகளிலோ, விபரீதமான – அல்லது அனேகமாய் விபரீதமான- சூழ்நிலையிலோ இத்தவறுகள் எப்பொழுதும் தலைதூக்கிய வண்ணம்தான் இருக்கும்.”4

       இந்தப் புரட்சிகர குட்டிமுதலாளித்துவ அராஜகவாதம் என்பது, சந்தர்ப்பவாதக் குற்றங்களுக்கு ஒரு வகைத் தண்டனையாக லெனின் கருதுகிறார். இவ்விரு கொடும் கோரங்களும் ஒன்றுக்கொன்று துணையாகக் கரங்கோத்து ருஷ்யாவில் செயல்பட்டதை குறிப்பிடுகிறார்.

       சோஷலிஸ்டு-புரட்சியாளர் கட்சியின் அராஜகத்துடன் குலாவும் புரட்சிவாதத்தை எதிர்த்து போல்ஷிவிக் போராடியது. மார்க்சியத்தை நிராகரித்து, அரசியல் செயலையும், வர்க்க சக்திகளையும் அவற்றின் பரஸ்பரப் பலத்தை முற்றிலும் புறநிலையில் இருந்து புரிந்து கொள்ள திறனற்று இருத்தல் என்கிற இந்தப் போக்கை எதிர்த்து போராடியது.

“இரண்டாவதாக, அந்தக் கட்சி தனிநபர் பயங்கரவாதத்தை, தனியாட்களைக் கொலைபுரிவதை- மார்க்சியவாதிகளான நாம் தீர்மானமாய் நிராகரித்த இதனை- அங்கீகரித்த காரணத்தால் தன்னை அது மிகமிகப் “புரட்சிகரமானதாக”, “இடதுசாரித் தன்மையுடைதாகக்” கருதிக் கொண்டது.

தனிநபர் பயங்கரவாதம் உசிதமானதல்ல என்ற காரணத்துக்காக மட்டுமேதான் நாம் அதை நிராகரித்தோம். ஆனால் “கோட்பாட்டு அடிப்படையில்” மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கரத்தை, அல்லது அனைத்து உலகின் முதலாளித்துவ வர்க்கத்தால் முற்றுகையிடப்பட்டிருக்கும் புரட்சிக் கட்சி ஒன்றால் கையாளப்படும் பயங்கரத்தைப் பொதுப்படையாகக் கண்டனம் செய்யக் கூடியவர்களை, 1900-03ல் பிளாகானவ், அவர் மார்க்சியவாதியாகவும் புரட்சியாளராகவும் இருந்தபோது, நையாண்டி செய்து எள்ளி நகையாடினார்.”5

       மூன்றாவதாக, நிலப்பிரச்சினையிலும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் பற்றிய பிரச்சினையிலும் தாமே சந்தர்ப்பவாதிகளாக இருந்தனர்.

       மிகவும் பிற்போக்கான ஒரு நாடாளுமன்றத்தில் பங்கெடுப்பதின் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பிடிவாதமாய் மறுத்த “இடதுசாரி” ஒத்ஸொவிஸ்ட்டுகளை கட்சியில் இருந்து நீக்கியதை லெனின் குறிப்பிடுகிறார். நாடாளுமன்ற ஏற்பு, புறக்கணிப்பு என்பதை எதார்த்த நிலைமைகளின் அடிப்படையில் முடிவெடுக்காமல், புறக்கணிப்பு என்பதை கோட்பாடாக வைத்துசெயற்படுவதை விமர்சிக்கிறார். போல்ஷிவிக்குகள் நாடாளுமன்றத்தை புறக்கணித்ததைப் பற்றி லெனின் குறிப்பிடுகிறார், “அக்காலத்தில், புறக்கணிப்பே பிழையற்றதாக இருந்தது. பிற்போக்கான நாடாளுமன்றங்களில் பங்குகொள்ளாது இருப்பது பொதுவாகச் சரியானதே என்பதல்ல காரணம், எதார்த்த நிலைமையை நாங்கள் பிழையின்றி மதிப்பிட்டோம் என்பேதே காரணம்.”

       போல்ஷிவிக்குகளின் போராட்ட வெற்றியானது சட்டவழியிலான, சட்டவழியல்லாத என்ற இருவழிகளிலும் செயற்பட்டதில் அடங்கியிருக்கிறது. சட்டவழியிலான போராட்டத்தைக் கைக்கொண்டதால் போல்ஷிவிக்குகள் தங்களை வலுப்படுத்தி வளர்த்திடுவதோடு பாட்டாளி வர்க்கப் புரட்சியை சிதையாது பாதுகாக்கவும் செய்தனர்.

“முடிவுற்றவிட்ட இக்கட்டத்தை இன்று நாம் திரும்பிப் பார்க்கையில், சட்டவழியிலான போராட்ட வடிவங்களையும், சட்டவழியற்ற போராட்ட வடிவங்களையும் ஒன்றிணைத்துக் கொள்வது இன்றியமையாத கடமையாகும், மிகவும் பிற்போக்கான நாடாளுமன்றத்திலும் பிற்போக்கான சட்டங்களால் கட்டுண்டிருக்கும் இதர பல நிறுவனங்களிலும் (நோய்க்கால உதவிச் சங்கங்கள் முதலானவை) பங்கெடுத்துக் கொள்வது இன்றியமையாத கடமையாகும் என்னும் கருத்தோட்டத்தை போல்ஷிவிக்குகள் மிக உக்கிரமாய்ப் போராடி நிலைநிறுத்தியிராவிடில், 1908-14ல் அவர்களால் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்சியின் உறுதியான மையப் பகுதியை (வலுப்படுத்தவதும் வளர்த்திடுவதும் இருக்கட்டும்) சிதையாது பாதுகாத்துக் கொள்ளக்கூட முடியாமற் போயிருந்திருக்கும் என்று மிகத் தெளிவாய்த் தெரிகிறது.”6

       இளம் சோவியத் குடியரசை ஏகாதிபத்திய ஜெர்மனியுடன் போரில் இழுத்துவிட்டு பெரும் நாசத்தை விளைவிக்கும் சாகசவாதக் கொள்கையை ஆதரிக்கும் தீவிர இடது போக்கை லெனின் எதிர்க்கிறார். எவ்வகையான சமரசம் என்பதை நோக்காமல் பொதுப்பட எல்லாச் சமரசங்களையும் நிராகரிப்பது  சிறுபள்ளைத்தனமானது என்கிறார்.

       ஐந்தாம் இயலில், நாடாளுமன்றம் போன்ற வசதியான சட்டவழியிலான முறைக்கு மட்டுமீறி பழக்கப்படுத்திக் கொண்டதால், திடிரென்று ஜனநாயகமல்லாத, வசதியற்ற அதாவது சட்டவழியற்ற போராட்ட முறைக்கு மாறிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டவுடன் குழப்பத்துக்கு இரையாகி போவதை லெனின் குறிப்பிடுகிறார்.     

“ஒரு புறத்தில், கட்சியானது திடுதிப்பென்று சட்டவழியிலான நிலையில் இருந்து சட்டவழியற்ற நிலைக்கு மாற்றப்பட்டு அதனால் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் வர்க்கங்களுக்குமுள்ள வழக்கமான, முறையான, எளிய உறவுகள் குலைக்கப்பட்டுவிட்ட சூழ்நிலைக்குத் தாம் வந்துவிட்டதைக் கண்டதும், இவர்கள் குழம்பிவிட்டதாகத் தெரிகிறது. ஏனைய ஐரோப்பியா நாடுகளைப் போலவே ஜெர்மனியிலும் சட்டவழியிலான நிலைக்கு மக்கள் தம்மை மட்டுமீறிப் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டனர்.

முறைப்படி நடைபெறும் கட்சிக் காங்கிரஸ்களில் “தலைவர்கள்” தங்கு தடையின்றி ஒழுங்கான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், நாடாளுமன்றத் தேர்தல்கள், பொதுக்கூட்டங்கள், பத்திரிகைகள், தொழிற்சங்கங்கள் மூலமாகவும், பிற நிறுவனங்கள் மூலமாகவும் வெளிப்படும் உணர்ச்சிகள் வாயிலாகக் கட்சிகளின் வர்க்க இயைபைச் சோதித்துப பார்க்கும் வசதியான முறைக்கும், இன்ன பிறவற்றுக்கும் மட்டுமீறி மக்கள் தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டனர். இவர்களது இந்த வழக்கமான செயற்முறைக்குப் பதிலாய், புரட்சிப் புயலின் வளர்ச்சி காரணமாகவும், உள்நாட்டுப் போரின் வளர்ச்சி காரணமாகவும் சட்டவழியிலான நிலையில் இருந்து சட்டவழியற்ற நிலைக்கு விரைவாய் மாறிச் சென்று, இரண்டையும் ஒன்றிணைத்துக் கொண்டு “தலைவர்களது குழுக்களைத்” தேர்வு செய்ய வேண்டிய அல்லது அமைக்க வேண்டிய அல்லது பாதுகாத்துக் கொள்ள வேண்டிய “வசதியற்ற”, “ஜனநாயகமல்லாத” முறைகளைக் கையாள வேண்டிய நிலை ஏற்பட்டதும்- இவர்கள் நிலைதடுலைமாறி, கலப்பற்ற அபத்தக் கற்பனையில் இறங்கத் தலைப்பட்டு விட்டனர்.”7

       சட்டவழியிலான  மற்றும் சட்டவழியற்றப் போராட்ட முறையை இணைக்க வேண்டியதை கம்யூனிஸ்டுகள் ஏன் அறிந்திருக்க வேண்டும் என்பதை லெனின் சுட்டுகிறார்.

“மிகவும் முன்னேறிய நாடுகள் அடங்கலாய்ப் பல நாடுகளில், முதலாளித்துவ வர்க்கம், கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்குள் தனது உளவாளிகளை அனுப்பி வருகிறது என்பதில் ஐயமில்லை. இனியும் அது அவ்வாறே அனுப்பிவரும். இந்த அபாயத்தை எதிர்த்துப் போராடுவதற்கான முறைகளில் ஒன்று, சட்டவழியற்ற பணிகளையும், சட்டவழியிலான பணிகளையும் சாமர்த்தியமாய் இணைத்துச் செல்வதாகும்.”8

       புரட்சியாளர்கள் பிற்போக்குத் தொழிற் சங்கங்களில் வேலை செய்யலாமா? என்ற கேள்வியை ஆறாம் இயல் எழுப்புகிறது. இக்கேள்விக்கு ஜெர்மன் “இடதுசாரிகள்” எதிர்மறையான பதிலையே அளிக்கின்றனர். இந்த பதில் எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்த போதிலும், உண்மையில் இது அடிப்படையிலேயே தவறானது, வெற்றுச் சொல்லடுக்குகளைத் தவிர வேறு எதுவும் இல்லாதது என்று லெனின் கூறுகிறார்.

இந்த இடதுபோக்கை மறுக்கும் முகமாக லெனின் கூறுகிறார்:-
“..கம்யூனிஸ்டுகள் பிற்போக்குத் தொழிற்சங்களில் வேலை செய்ய முடியாது, வேலை செய்யக் கூடாது என்றும், இது போன்ற வேலையைக் கைவிட்டுவிடலாம் என்றும், தொழிற்சங்களை விட்டு வெளியேறி மிக அருமையான (பெருமளவுக்கு மிக இளம் பருவத்தினராகவே இருக்கக்கூடிய) கம்யூனிஸ்டுகளால் கண்டு பிடிக்கப்பட்ட புத்தம் புதிய வகைப்பட்ட அப்பழுக்கற்ற “தொழிலாளர் சங்கத்தை” உருவாக்குவது அவசியம் என்றும், மற்றும் பலவாறாகவும் கூறும் ஜெர்மன் இடதுசாரிகளின் ஆடம்பரமான, மெத்தப் படித்த மேதாவித்தனமான, பயங்கரப் புரட்சிகரமான பல பேச்சுக்களையும் நாங்கள் நகைக்கத்தக்க, சிறுபிள்ளைத்தனமான அபத்தமாகவே கருத வேண்டியிருக்கிறது.”9

பொதுமக்களின் மனநிலைகளைப் கண்டறிவதற்கும், நெருங்கிச் செல்வதற்கும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், கட்சி சார்ப்பற்ற தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரது மாநாடுகள் ஏற்படுத்தியதைக் குறிப்பிடுகிறார்.

“எங்களது புரட்சியின்போது நடைமுறையானது கட்சிசார்பற்ற தொழிலாளர்கள், விவசாயிகளது மாநாடுகள் போன்ற ஏற்பாடுகளைத் தோற்றுவித்து. பொதுமக்களுடைய மனநிலையைக் கண்டறிந்து கொள்வது, அவர்களை மேலும் நெருங்கிச் செல்வது, அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவது, அவர்களில் மிகச் சிறந்தோரை அரசாங்கப் பதவிகளுக்கு உயர்த்துவது முதலான பலவும் செய்யும் பொருட்டு, இந்த ஏற்பாடுகளை ஆதரிக்கவும் வளர்த்துச் செல்லவும் விரிவுபடுத்தவும் நாங்கள் எல்லா வழிகளிலும் முயலுகிறோம்.”10

       புரட்சிக்கட்டத்திலும் கட்சி, தொழிற்சங்கங்களையே ஆதாரமாக் கொண்டு இயங்குவதை தெளிவுப்படுத்துகிறார்.

“கட்சி அதன் வேலைகளில் நேரடியாகத் தொழிற்சங்கங்களையே ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது. தொழிற் சங்கங்கள், கடந்த காங்கிரசின் (1920 ஏப்ரல்) புள்ளிகளின்படி, நாற்பது லட்சத்துக்கும் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றன. இவை உருவில் கட்சிசார்பற்ற நிறுவனங்கள். ஆனால் நடைமுறையில் மிகப் பெரும்பாலான தொழிற்சங்கங்களின் தலைமை அமைப்புகள் யாவும், முதன்மையாக அனைத்து ருஷ்யத் தொழிற்சங்கப் பொது மையம் அல்லது குழு கம்யூனிஸ்டுகளால் ஆனவைதான், கட்சியின் எல்லாத் தாக்கீதுகளையும் இவை நிறைவேற்றுகின்றன.

இவ்வாறாக, மொத்தத்தில் நாங்கள் உருவில் கம்யூனிஸ்டல்லாத, நெகிழ்வுள்ள, ஒப்பளவில் மிகவும் விரிவான, சக்தி மிக்க பாட்டாளி வர்க்க நிறுவன ஏற்பாட்டைப் பெற்றிருக்கிறோம். இதன் மூலம் கட்சியானது வர்க்கத்துடனும் பொதுமக்களுடனும் நெருங்கிய முறையில் பிணைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம்தான் கட்சியினுடைய தலைமையில், வர்க்கச் சர்வாதிகாரம் செலுத்தப்படுகிறது.

தொழிற்சங்கங்களுடன் நெருங்கிய தொடர்புகளின்றி, பொருளாதார விவகாரங்களில் மட்டுமின்றி ராணுவ விவகாரங்களிலுங்கூட அவற்றின் சக்தி வாய்ந்த ஆதரவும் பற்றுறுதி கொண்ட முயற்சிகளும் இன்றி, இரண்டரை ஆண்டுகள் இருக்கட்டும், இரண்டரை மாதங்களுக்குக்கூட நாட்டை அரசாள்வதும் சர்வாதிகரத்தைப் பாதுகாத்துக் கொள்வதும் முடியாமல் போயிருந்திருக்கும்.”11

       முதலாளித்துவ வளர்ச்சியின் தொடக்கத்தில் தொழிற்சங்கத்தின் செயற்பாட்டையும், வளர்ச்சியடைந்த நிலையில் தொழிற்சங்கம் கம்யூனிசப் பயிற்சிப் பள்ளியாக செயற்பட வேண்டியதையும் குறிப்பிடுகிறார்.

“தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ வளர்ச்சியின் தொடக்க நாட்களில் தொழிலாளி வர்க்கத்துக்கு மகத்தானதொரு படியைக் குறித்தன. எப்படியெனில் தொழிலாளர்கள் சிதறிய நிலையில் திக்கற்றவர்களாக இருந்ததிலிருந்து மாறி வர்க்க ஒற்றுமையின் கருத்துக்களைப் பெற்றதை அவை குறித்தன.

பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்சி உருவாகத் தொடங்கியதும் (கட்சியானது தலைவர்களை வர்க்கத்தோடும் பொதுமக்களோடும் பிரிக்க முடியாதவாறு ஒன்றிவிடச் செய்யத் தெரிந்து கொள்ளாத வரை அது கட்சி என்னும் பெயருக்கே ஏற்றதாகாது), தொழிற்சங்கங்கள் தவிர்க்க முடியாதபடி சிற்சில பிற்போக்கு இயல்புகளை, தேர்ச்சித் துறைக்குரிய ஒரு குறுகிய கண்ணோட்டத்தையும், அரசியல் அக்கறையின்மைக்கான ஒருவிதப் போக்கையும், ஒருவகை மந்த நிலைமையும், இன்ன பிறவற்றையும் வெளிப்படுத்தலாயின. ஆயினும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி உலகில் எங்கணுமே தொழிற் சங்கங்களல்லா பிற வழிகளில், தொழிற் சங்கங்களுகக்கும் தொழிலாளி வர்க்கக் கட்சிக்கும் இடையிலான பரஸ்பரச் செயற்பாட்டின் மூலமல்லாத பிறவழிகளில் நடைபெற்றதில்லை, நடைபெறவும் முடியாது. பாட்டாளி வாக்கம் அரசியல் ஆட்சியதிகாரம் வென்றதானது பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு வர்க்கம் என்ற முறையில் பிரம்மாண்டமானதொரு முன்னேற்றப் படியாகும்.

கட்சியானது இப்பொழுது பழைய வழியில் மட்டுமின்றி ஒரு புதிய வழியிலுங்கூட தொழிற் சங்கங்களுக்குப் போதனையளித்து வழிகாட்டியாக வேண்டும். அதேபோதில் தொழிற் சங்கங்கள் அத்தியாவசியமான “கம்யூனிசப் பயிற்சிப் பள்ளியாகவும்,” பாட்டாளி வர்க்கத்தினர் சர்வாதிகரத்தைச் செலுத்துவதற்கு அவர்களுக்குப் பயிற்சி தரும் தயாரிப்புப் பள்ளியாகவும், நாட்டின் பொருளாதாரம் முழுவதுக்குமான நிர்வாகம் படிப்படியாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு (தனித்தனிப் பணிப் பிரிவுகளுக்கல்ல), பிற்பாடு உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் மாற்றப்படுவதற்கு அத்தியாவசியமான தொழிலாளர் ஒற்றுமைக்கான வடிவமாகவும் இருக்கின்றன, நெடுங்காலத்துக்கு அவ்வாறு இருக்கவும் செய்யவும் என்பதையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.”12

       மேலும் லெனின் கூறுகிறார், தொழிற்சங்கங்களில் காணப்படும் பிற்போக்குத் தன்மையைக் கண்டு அஞ்சுவது, தட்டிக் கழிப்பது, தாவிச் செல்ல முயல்வது படுமோசமான மடமையாகும். தொழிலாளி, விவசாயி ஆகியோர்களில் பிற்பட்ட பகுதியோருக்கு போதனையளித்து, அறிவொளிபெறச் செய்கின்ற பாட்டாளி வர்க்க கட்சியின் முன்னணிப் படைக்குரிய அந்தப் பணியைக் கண்டு அஞ்சுவதாகும்.

       குறுகிய மனப்பான்மையும் தன்னலம் மிக்க, பேராசை பிடித்த, ஏகாதிபத்திய மனப்போக்கு மற்றும் ஏகாதிபத்தியத்தால் லஞ்சம் கொடுத்துக் கெடுக்கப்பட்டதுமான குட்டிமுதலாளித்துவ தொழிலாளர் பிரபுக்குலம் ஆகிய போக்குகள் தொழிற்சங்கங்களில் வளர்ச்சி பெற்றிருப்பது மறுக்கமுடியாததாகும். இதனைக் காரணம் காட்டி இங்கு செய்ய வேண்டிய அரசியலை மறுப்பது தவறானதாகும்.

“தொழிலாளர் வெகுஜனத் திரளினரது பெயரில் தான், அவர்களை நம் பக்கத்துக்கு ஈர்த்துக் கொள்ளும் பொருட்டுத்தான், நாம் “தொழிலாளர் பிரபுக்குலத்தை” எதிர்த்துப் போராடுகிறோம். தொழிலாளி வர்க்கத்தை நம் பக்கத்துக்கு ஈர்த்துக் கொள்ளும் பொருட்டுதான் நாம் சந்தர்ப்பவாத, சமூக-தேசியவெறித் தலைவர்களை எதிர்த்துப் போராடுகிறோம். மிகவும் சர்வசாதாரணமான, கண்கூடான இந்த உண்மையை மறப்பது மடமையே ஆகும்.

ஆயினும் தொழிற் சங்க உச்சத் தலைவர்கள் பிற்போக்கு, எதிர்ப்புரட்சித் தன்மை கொண்டோராய் இருப்பதைக் காரணமாகக் காட்டி, தொழிற் சங்கங்களைத் துறந்துவிட்டு நாம் வெளியே வந்துவிட வேண்டும், அவற்றில் வேலை செய்ய மறுக்க வேண்டும், தொழிலாளர்களுடைய நிறுவன ஒழுங்கமைப்புக்கான செயற்கையான புதிய வடிவங்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வருகையில் ஜெர்மன் “இடதுசாரி” கம்யூனிஸ்டுகள் இதே மடமையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள்!! கம்யுனிஸ்டுகள் முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஆற்றக்கூடிய மிகப் பெருஞ் சேவையாகிவிடும் அளவுக்கு இது மன்னிக்க முடியாத மடமையாகும்.
கம்யூனிஸ்டுகள் பிற்போக்குத் தொழிற் சங்கங்களில் வேலை செய்யக் கூடாதென்னும் இந்த கேலிக்குரிய “கோட்பாடு”, “பொதுமக்களை”, வயப்படுத்தும் பிரச்சினையை “இடதுசாரி” கம்யூனிஸ்டுகள் எவ்வளவு துச்சமாய் மதிக்கிறார்கள் என்பதையும் “பொதுமக்களைப்” பற்றிய கூப்பாட்டை எப்படி துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதையும் மிகத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. “பொதுமக்களுக்கு” உதவி செய்வதற்கும், “பொதுமக்களின்” நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவதற்கும் தெரிந்து கொள்ள விரும்புவீர்களானால், நீங்கள் இன்னல்களையும் இந்தத் “தலைவர்களால்” ஏற்படும் தொல்லைகளையும் புரட்டுகளையும் அடக்குமுறையையும் கண்டு அஞ்சாமல் நிச்சயம் பொதுமக்கள் காணப்படும் இடங்களில் எல்லாம் வேலை செய்தாக வேண்டும்.”13

       சட்டவழியிலான போராட்டத்தைக் கைக்கொள்ளாத இந்த “இடதுசாரி” கம்யுனிஸ்டுகளை லெனின் தொடர்ந்து சாடுகிறார்.

“கம்யூனிஸ்டுகள் முன்னுள்ள பணி பிற்பட்ட பகுதியோரின் நம்பிக்கையைப் பெறுவதும், அவர்களுக்குக்கிடையே வேலை செய்துவமேயன்றி, செயற்கைத் தன்மை வாய்ந்த சிறுபிள்ளைத்தனமான “இடதுசாரி” முழக்கங்களைக் கொண்டு அவர்களிடம் இருந்து தம்மைப் பிரித்து விலக்கி வேலை கட்டிக்கொள்வதல்ல”14

ஏழாம் இயல், முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்ளலாமா? என்பதாகும். இதற்கு “இடதுசாரி” கம்யுனிஸ்டுகள் பங்கெடுக்கக் கூடாது என்று எதிர்மறையில் பதிலளிக்கின்றனர். இடதுசாரி கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்றம் வரலாற்று வழியில் காலாவதியாகவிட்டதாக கருதுகின்றனர். இதற்கு லெனின் பதிலளிக்கிறார்.

“…ஜெர்மன் “இடதுசாரிகள்”, நாடாளுமன்ற முறை “அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டது” என்று 1919 ஜனவரியிலேயே கருதியது நமக்குத் தெரிந்ததே. “இடதுசாரிகளின்” இந்தக் கருத்து தவறானது என்பதும் நாம் அறிந்ததே. நாடாளுமன்ற முறை “அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டது” என்னும் நிர்ணயிப்பை ஒரே அடியில் ஒழித்திட இந்த ஒர் உண்மையே போதும். அக்காலத்தில் சர்ச்சைக்கு இடமில்லாததாய் இருந்த அவர்களது தவறு, இனி தவறல்ல என்றானது எப்படி என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இந்த “இடதுசாரிகளுடையது” ஆகும். இதை நிரூபிக்க அவர்கள் துளிக்கூட சான்று அளிக்கவில்லை, அளிக்கவும் முடியாது.
ஜெர்மனியிலுள்ள “இடதுசாரிகள்” தமது விருப்பத்தை, தமது அரசியல்-சித்தாந்தப் போக்கை எதார்த்த உண்மையாகத் தவறாய் நினைத்துக் கொண்டு விட்டனர் என்பது விளங்குகிறது. புரட்சியாளர்கள் செய்யக் கூடிய மிகவும் அபாயகரமான தவறாகும் இது.”15

       வரலாற்று வழியில் காலாவதியானதை, நடைமுறையில் காலாவதியானதாக இடதுசாரிகள் சுருக்கிக்கொண்டனர். இந்த இடதுசாரிகள் தங்களது குறுங்குழுப் போக்கின் தவறைப் புரிந்து கொண்டு தங்களை வர்க்கத்தின் கட்சியாக வளர்த்தெடுக்க வேண்டும்.

“தவறை ஒளிவுமறைவின்றி ஒப்புக் கொள்ளுதல், அத்தவறுக்குரிய காரணங்களை நிச்சயித்துக் கொள்ளுதல், அதனை நோக்கி இட்டுச் சென்ற நிலைமைகளைப் பகுத்தாய்தல், அதைச் சரிசெய்வதற்குரிய வழிகளை ஆராய்தறிந்து வகுத்துக் கொள்ளுதல் – இவையே பொறுப்புணர்ச்சி கொண்ட ஒரு கட்சிக்குரிய அடையாளம், இவ்வாறுதான் அது தனது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும், இவ்வாறுதான் அது தனது வர்க்கத்துக்கும் பிறகு பொதுமக்களுக்கும் போதனையளித்து பயிற்றுவிக்க வேண்டும்.

ஜெர்மனியிலும் (ஹாலந்திலும்) உள்ள “இடதுசாரிகள்” இந்தக் கடமையை நிறைவேற்றவும், கண்கூடான தமது தவறை ஆராய்வதில் முக்கிய கருத்தும் கவனமும் செலுத்தவும் தவறியதன் மூலம், தாம் ஒரு சிறுகுழுவே அன்றி ஒரு வர்க்கத்தின் கட்சி அல்ல என்பதையும், அறிவுத் துறையினரையும் அறிவுத்துறைவாதத்தின் மோசமான இயல்புகளைக் காப்பியடிக்கும் ஒருசில தொழிலாளர்களையும் கொண்ட சிறு குழுவேயன்றி பொதுமக்களது கட்சி அல்ல என்பதையும் நிரூபித்துக் கொண்டு விட்டனர்.”16

       பொதுமக்களுடைய நிலைக்கு, வர்க்கத்தின் பிற்பட்ட பகுதியின் நிலைக்கு, கட்சி சரிந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கை வேண்டும். நாடாளுமன்ற தப்பெண்ணங்களை எதிர்ப்பது அவசியமானதே, அதே நேரத்தில் வர்க்கம் அனைத்தின், உழைப்பாளி மக்களின் அனைவரின் வர்க்க உணர்வு, தயார் நிலை ஆகியவற்றின் எதார்த்த நிலவரத்தையும் நிதானமாய்க் கவனித்து மதிப்பிட வேண்டும் என்கிறார் லெனின்.

       மேலும் லெனின் கூறுகிறார், “இடதுசாரி” கம்யுனிஸ்டுகள் போல்ஷிவிக்குகளை புகழ்வதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, அவர்களுடைய செயற்தந்திரத்தை நன்கு தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். முதலாளித்துவ நாடாளுமன்றங்களைப் போன்ற அமைப்புகளுக்கு உள்ளிருந்து தான் கம்யூனிஸ்டுகள் இந்தப் தப்பெண்ணங்களை அம்பலம் செய்யவும், களையவும், முறியடிக்கவும், விடாப்பிடியான நீண்ட போரட்டம் நடத்த முடியும்.

“சோவியத் குடியரசின் வெற்றிக்குச் சில வாரங்கள் முன்னதாகவும், இந்த வெற்றிக்குப் பிற்பாடுங்கூட, முதலாளித்துவ-ஜனநாயக நாடாளுமன்றம் ஒன்றில் பங்கெடுத்துக் கொள்வதானது புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு தீங்கிழைப்பதற்குப் பதிலாய், இது போன்ற நாடாளுமன்றங்கள் கலைக்கப்பட வேண்டியது எப்படி அவசியம் என்பதைப் பிற்பட்ட நிலையிலுள்ள பொதுமக்கள் பகுதியோருக்கு நிரூபிப்பதற்கு நடைமுறையில் உதவுகிறது என்பதும், இந்த நாடாளுமன்றங்கள் வெற்றிகரமாய்க் கலைக்கப்படுவதற்கு வகை செய்கிறது என்பதும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை “அரசியல் வழியில் காலாவதியாக்குவதற்குத்” துணை புரிகிறது என்பதும் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன. இந்த அனுபவத்தை உதாசீனம் செய்துவிட்டு, அதே நேரத்தில் கம்யூனிஸ்டு அகிலத்துடன்- தனது செயற்தந்திரத்தைச் சர்வதேசரீதியில் (குறுகலான, அல்லது தனிப்பட்டதான எந்தவொரு தேசத்துக்குமான செயற்தந்திரமாயிராது, சர்வதேச செயற்தந்திரமாய்) வகுத்துக் கொள்ள வேண்டிய கம்யூனிஸ்டு அகிலத்துடன் – இணைப்புரிமை கொண்டாடுவதானது மிகக்கொடுந்த தவறிழைப்பதாகவும், சர்வதேசியத்தைச் சொல்லளவில் ஏற்றுக் கொண்டு செயலில் கைவிடுவதாகவுமே அமைகிறது.”17

       நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் தூற்றுவதால் மட்டுமோ, நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்வதை நிராகரிப்பதால் மட்டுமோ ஒருவர் தமது புரட்சிகர மனோபாவத்தை வெளிப்படுத்திக் கொண்டு விடுவது மிகமிகச் சுலபமே, ஆனால் இது மிகமிகக் கடினமான ஒரு பிரச்சினைக்கு தீர்வாகாது என்கிறார் லெனின்.

இடதுசாரிக் கம்யூனிஸ்டுகள் புதிய சமூகத்தை அமைத்திட விரும்புகிறார்கள், ஆனால் திடநம்பிக்கை கொண்ட வீரமிக்க கம்யூனிஸ்டுகளான அவர்கள், சிறந்த நாடாளுமன்றக் குழு ஒன்றைப் பிற்போக்கு நாடாளுமன்றத்தில் நிறுவிக் கொள்வதில் உள்ள சிரமங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள், இது சிறுபிள்ளைத் தனம் என்கிறார் லெனின்.

பிற்போக்கான முதலாளித்துவ நாடாளுமன்றத்திலும், பிற்போக்கான தொழிற்சங்கங்களிலும் பங்கெடுப்பதை மறுப்பது “இடதுசாரி” இளம் பருவக் கோளாரின் வெளிப்பாடாகும். மறுக்கின்ற இத்தகைய செயற்தந்திரம் தவறானது என்கிறார் லெனின்.

“கண்கூடான காரணங்களில் ஒன்று ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுடைய தவறான செயற்தந்திரமாகும். இவர்கள் அச்சமின்றியும் நேர்மையுடனும் இந்தப் பிழையை ஏற்றுக் கொண்டு, இதனைத் திருத்திக் கொள்ளக் கற்றுக் கொண்டாக வேண்டும். பிற்போக்கான முதலாளித்துவ நாடாளுமன்றத்திலும் பிற்போக்கான தொழிற்சங்கங்களிலும் பங்கெடுத்துக் கொள்வதன் அவசியத்தை இவர்கள் மறுத்ததில் இந்தத் தவறு அடங்கியிருந்தது, “இடதுசாரி” இளம்பருவக் கோளாறின் எண்ணற்ற வெளிப்பாடுகளில் இது அடங்கியிருக்கிறது. இந்த “இடதுசாரி” இளம்பருவக் கோளாறு இப்பொழுது வெளியே தெரியும்படி வெளிப்பட்டு விட்டது, இதனால் இது முன்னிலும் தீர்க்கமாகவும் விரைவாகவும் உடலுக்கு இன்னும் கூடுதலான அனுகூலம் உண்டாகும் முறையிலும் குணப்படுத்தப்படும்.”18

எட்டாம் இயல், சமரசம் கூடவே கூடாதா? என்பதாகும். “இடதுசாரிகள்” இதற்கு கூடாது என்று எதிர் மறையான பதிலையே அளிக்கின்றனர். லெனின் இதனை மறுத்துரைக்கிறார்.

“அரசியலில் சில நேரங்களில் வர்க்கங்களுக்கும் கட்சிகளுக்கும் இடையிலான அளவு கடந்த சிக்கல் வாய்ந்த உறவுகள் (தேசிய, சர்வதேசிய உறவுகள்) தொடர்பான விவகாரங்கள் எழுவதால், “சமரசமா”, அல்லது கருங்காலியாலோ, துரோகமான “சமரசமா” என்கிற பிரச்சினையைக் காட்டிலும், மிகவும் கடினமான சந்தர்ப்பங்கள் பலவும் ஏற்படும் என்பது தெளிவு. எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு சூத்திரத்தையோ, பொது விதியையோ (சமரசம் கூடவே கூடாது!) வகுத்திடுவது அறிவுடைமையாகாது. அவரவரும் தமது சொந்த அறிவைப் பயன்படுத்திக் கொண்டு, அந்தந்தச் சந்தர்ப்பத்திலும் தமக்குரிய நிலையை வகுத்துக் கொள்ளும் ஆற்றலுடையவராய் இருத்தல் வேண்டும்.”19

       ஒன்பதாவது இயல், பிரிட்டனில் “இடதுசாரி” கம்யூனிசம் என்பதாகும்.

       தி ஒர்க்கர்ஸ் டிரட்னாட் என்ற பத்திரிகைக்கு எழுதப்பட்ட கடிதத்தை முன்வைத்து இந்த இயல் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதம் எழுதியவரிடம், முதலாளித்துவ அரசியல்வாதிகள் மீது வெறுப்புணர்ச்சி நிறைய இருப்பதை எடுத்துக்காட்டுகிறார்.

“…அரசியல் என்பது ஒரு விஞ்ஞானமும் கலையுமாகும், அது அப்படியே ஆகாயத்திலிருந்து வந்து குதித்துவிடுவதோ, வரப்பிரசாதமாய்க் கிடைப்பதோ அல்ல என்பதையும், பாட்டாளி வர்க்கமானது முதலாளித்துவ வர்க்கத்தின்மீது வெற்றி பெற விரும்பினால் அது முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு எவ்விதத்திலும் சப்பையில்லாத தனது சொந்தப் பாட்டாளி “வர்க்க அரசியல்வாதிகளை” உருவாக்க வேண்டுமென்பதையும் இக்கடிதத்தின் ஆசிரியர் பார்க்கத் தவறிவிடுகிறார் என்பது தெரிகிறது”20

பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு அரசியல் பற்றிய அனுபவம் ஏற்பட வேண்டியுள்ளது. அதனால் பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்றச் செயற்பாட்டில் பங்கு கொண்டாக வேண்டும், நாடாளுமன்றதின் உள்ளிருந்து கொண்டு அரசியல் நடவடிக்கைகளை கண்டுணருவதற்குத் துணை செய்ய வேண்டும். இதற்கு மாறாக சக்தியற்ற சிறுபான்மைத் தொழிலாளர்கள் இடமிருந்து வரும் “சமரசங்களின்றி, திருப்பமின்றி முன்னேறிச் செல்ல வேண்டும்” என்கிற முழுக்கம் தவறானது.

“வேறுவிதமாய்ச் செயல்படுவதானது, புரட்சிக் குறிக்கோளுக்கு ஊறு செய்வதாகவே இருக்கும். ஏனெனில் தொழிலாளி வர்க்கத்தில் பெரும்பாலோரது அபிப்பிராயங்களில் மாற்றம் உண்டாக்காமல், புரட்சி சாத்தியமன்று. இந்த மாற்றத்தை பொதுமக்களுடைய அரசியல் அனுபவத்தால் உண்டாக்க முடியுமேயன்றி, பிரச்சாரத்தினால் மட்டும் ஒரு நாளும் உண்டாக்கிவிட முடியாது.”21

இதனைத் தொடர்ந்து லெனின் மூன்று ருஷ்யப் புரட்சிகள் அடங்கலாய் அனைத்துப் புரட்சிகளிலும் உறுதிசெய்யப்பட்ட புரட்சி பற்றிய அடிப்படை விதியை தருகிறார்.

“..புரட்சி நடைபெற வேண்டுமானால், சுரண்டப்படும், ஒடுக்கப்படும் பொதுமக்கள் பழைய வழியில் தாம் வாழ்வது சாத்தியமல்ல என்பதை உணர்ந்து மாற்றங்கள் வேண்டுமெனக் கோரினால் மட்டும் போதாது. புரட்சி நடைபெற வேண்டுமானால், சுரண்டலாளர்கள் பழைய வழியில் வாழவும் ஆட்சி நடத்தவும் முடியாமற்போவதும் அவசியமாகும். பழைய வழியில் வாழ “அடிமட்டத்து வர்க்கங்கள்” விரும்பவில்லை, “மேல் வர்க்கங்களால்” பழைய வழியில் நடத்திச் செல்ல முடியவில்லை என்கிற நிலை ஏற்படும்போது மட்டும்தான் புரட்சி வெற்றி பெற முடியும்.”22

       பத்தாவது இயல், சில முடிவுகள் என்ற தலைப்பில் இந்நூலில் காணப்படும் கருத்துக்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

       வலது சந்தர்ப்பவாதத்தையும், இடதுசாரி வறட்டுச் சூத்திரவாதத்தையும் வெற்றி கொள்ள வேண்டும், வருவதை அறிந்து கூற வேண்டிய திறம் பெற்றாக வேண்டும் என்று இதில் வலியுறுத்துகிறார்.

“தொழிலாளி வர்க்க இயக்கத்தினுள் சந்தர்ப்பவாதத்தையும் இடதுசாரி வறட்டுச் சூத்திரவாதத்தையும் வெற்றி கொள்ளுதல், முதலாளித்துவ வர்க்கத்தைக் கவிழ்த்தல், சோவியத் குடியரசையும் பாட்டாளி வார்க்கச் சர்வாதிகாரத்தையும் நிறுவுதல் என்னும் ஒருமித்த சர்வதேசப் பணியை அந்தந்த நாடும் நிறைவேற்றிட வேண்டிய ஸ்தூலமான முறையில் தேசிய வழியில் பிரத்தியேகமானவற்றையும் தேசிய வழியில் தனிச்சிறப்பானவற்றையும் அலசி ஆராய வேண்டும், தேடிப் பிடித்தாக வேண்டும், வருவது அறிந்து கூற வேண்டும், உணர்ந்து கொண்டாக வேண்டும் – இதுவே வளர்ச்சி பெற்ற எல்லா நாடுகளும் (அவை மட்டுமல்ல) கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த வரலாற்றுக் கட்டத்தின் அடிப்படையான பணியாகும்.”23

       இதனைத் தொடர்ந்து லெனின் கூறுகிறார், அனுபவமில்லாத புரட்சியாளர்கள் சட்டவழியிலான போராட்டமுறைகளை சந்தர்ப்பவாத முறைகளாக கருதுகின்றனர். முதலாளித்துவ வர்க்கம் சட்டவழிமுறையில் தொழிலாளர்களை எண்ணற்ற முறை ஏய்த்தும் ஏமாற்றியும் விட்டதென்றும், சட்டவழியற்ற போராட்ட முறைகளே புரட்சிகரமானவை என்றும் அடிக்கடி கூறிவருகின்றனர் ஆனால் இது சரியல்ல. சட்டவழியற்ற போராட்ட முறைகளைக் கையாளத் திராணியில்லாத அல்லது விருப்பம் இல்லாத கட்சிகளும் தலைவர்களும்தான் சந்தர்ப்பவாதிகள், இவர்கள் தொழிலாளி வர்க்கத்துத்தின் துரோகிகள் என்கிறார். சட்டவழியற்ற போராட்ட வடிவங்களைச் சட்டவழியிலான போராட்டத்துக்கு உரிய எல்லா வடிவங்களோடும் இணைத்துக் கொள்ளும் திறனில்லாத புரட்சியாளர்கள் மட்டரகமான புரட்சியாளர்களே ஆவர் என்கிறார் லெனின்.

வலதுசாரி மற்றும் இடதுசாரி வறட்டுச் சூத்திரவாதிகளின் தவறுகளைப் பற்றி லெனின் கூறுகிறார்:-
“வலதுசாரி வறட்டுச் சூத்திரவாதம் பழைய வடிவங்களை மட்டுமே அங்கீகரிப்பேன் என்று விடாப்பிடியாக நின்று, முற்றிலும் கையாலாகாததாகி விட்டது, புதிய உள்ளடக்கத்தை அது காணத் தவறியதே இதற்குக் காரணம். இடதுசாரி வறட்டுச் சூத்திரவாதம் கண்ணை மூடிக் கொண்டு சில பழைய வடிவங்களைப் பிடிவாதமாய் நிராகரிக்கிறது, புதிய உள்ளடக்கம் எல்லா வகையான வடிவங்கள் மூலமாகவும் வலுக்கட்டாயமாக வெளிப்படுகிறது என்பதையும், கம்யூனிஸ்டுகளாகிய நாம் எல்லா வடிவங்களிலும் புலமை பெறுவதும், மிகவும் கூடுதலான வேகத்திலும் ஒரு வடிவத்துக்குத் துணையாக மற்றொன்றை இணைத்துக் கொள்வதும், ஒன்றுக்குப் பதிலாய் இன்னொன்றை பயன்படுத்திக் கொள்வதும், நம்முடைய வர்க்கத்திடமிருந்தோ, நம்முடைய முயற்சிகளின் வாயிலாகவோ ஏற்படாத எந்த மாறுதலுக்கும் பொருத்தமாய் நம்முடைய செயல்தந்திரத்தை மாற்றியத்துக் கொள்வதும் நமது கடமையாகும் என்பதையும் அது பார்க்கத் தவறிவிடுகிறது.”24

இந்நூலை சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கம் விரைவாக முழுமையாக இடதுசாரி கம்யூனிசம் என்னும் இந்த இளம்பருவக் கோளாறில் இருந்து விடுபடும் என் முழு நம்பிக்கை தெரிவித்து லெனின் முடிக்கிறார். வலதுசாரி இடதுசாரி சூத்திரவாதங்களில் இருந்து விடுபட்டால் லெனினது நம்பிக்கை நிலைநாட்டப்படும்.

அடிக்குறிப்பு

1.“இடதுசாரி” கம்யூனிசம்- ஓர் இளம்பருவக் கோளாறு – தேர்வு நூல்கள் 10 - பக்கம்- 183-184
2. மேற்கண்ட நூல் - பக்கம்- 190-191
3. மேற்கண்ட நூல் - பக்கம்- 191
4. மேற்கண்ட நூல் - பக்கம்- 201-202
5. மேற்கண்ட நூல் - பக்கம்- 203-204
6. மேற்கண்ட நூல் - பக்கம்- 208
7. மேற்கண்ட நூல் - பக்கம்- 217-218
8. மேற்கண்ட நூல் - பக்கம்- 226
9. மேற்கண்ட நூல் - பக்கம்- 231
10. மேற்கண்ட நூல் - பக்கம்- 229-230
11. மேற்கண்ட நூல் - பக்கம்- 228-229
12. மேற்கண்ட நூல் - பக்கம்- 232-233
13. மேற்கண்ட நூல் - பக்கம்- 226-237
14. மேற்கண்ட நூல் - பக்கம்- 239
15. மேற்கண்ட நூல் பக்கம்- 244-245-246
16. மேற்கண்ட நூல் - பக்கம்- 244-245
17. மேற்கண்ட நூல் - பக்கம்- 249-250
18. மேற்கண்ட நூல் - பக்கம்- 272
19. மேற்கண்ட நூல் - பக்கம்- 263-264
20. மேற்கண்ட நூல - பக்கம்- 283-284
21. மேற்கண்ட நூல் - பக்கம்- 290
22. மேற்கண்ட நூல் - பக்கம்- 291
23. மேற்கண்ட நூல் - பக்கம்- 303-304

24. மேற்கண்ட நூல் - 10 பக்கம்- 323