Sunday 23 April 2017

இளைஞர் கழகங்களின் பணிகள் – லெனின் (கட்டுரை அறிமுகம்)

எதிர்கால கம்யூனிச சமூகத்தை மனதில் கொண்டு, இளைஞர்களுக்கு அரசியல் போதனை அளிப்பதற்காக இளைஞர் கம்யூனிஸ்ட் கழகம் ஒன்றை லெனின் அமைத்தார். 1918ஆம் ஆண்டு அக்டோபரில் இளைஞர் கழகத்தின் முதலாவது காங்கிரஸ் நடைபெற்றது. 1920ஆம் ஆண்டு இளைஞர் கழகங்களின் மூன்றாவது காங்கிரசில் இளைஞர் கழகங்களின் பணிகள் என்ற தலைப்பில் லெனின் உரை நிகழ்த்தினார். இவ்வுரையில் லெனின் இளம் கம்யூனிஸ்டுக் கழகத்தின் அடிப்படைப் பணிகளை விவரித்தார்.

                பொதுவில் இளைஞர்களுக்கும் குறிப்பாக இளங் கம்யூனிஸ்ட் கழகங்களில் உள்ள இளைஞர்களுக்கு முன்னுள்ள பணிகளை ஒரே சொல்லில் சொல்ல வேண்டுமாயின் “கற்றறியுங்கள்” என்று லெனின் கூறினார். ஆனால் எதைக் கற்றறிவது, எப்படிக் கற்றறிவது என்ற அத்தியாவசியமான கேள்விக்கு இச்சொல் பதில் அளிக்கவில்லை என்பதைத் தெரிவித்து, எதைக் கற்க வேண்டும், எப்படிக் கற்க வேண்டும் என்பதை இச் சொற்பொழிவில் விரிவாக விளக்கினார்.

“.. இளைஞர்களுக்கு நாம் போதிக்க வேண்டியது என்ன, இளைஞர்கள், கம்யூனிச இளைஞர்கள் என்னும் பெயருக்கு உரியவராகும் தகுதி பெற உண்மையாகவே விரும்பினால், அவர்கள் கற்றறிந்து கொள்ள வேண்டியது என்ன, நாம் துவக்கியிருக்கும் பணியை நிறைவுறச் செய்து முடித்து வைக்கக் கூடியவர்களாகும் பொருட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது எப்படி என்கிற பிரச்சினை குறித்து நாம் விவரமாய்ப் பரிசீலிக்க வேண்டும்.

இளைஞர் கழகமும் பொதுவில் கம்யூனிசத்துக்கு முன்னேறிச் செல்ல விரும்பும் இளைஞர்கள் அனைவரும் கம்யூனிசத்தைக் கற்றறிந்தாக வேண்டும் என்பதே முதலாவதும் மிகவும் இயற்கையானதுமான பதிலாய்த் தோன்றுகிறது…..”

                கம்யூனிச நூல்களைப் படிக்க வேண்டும் ஆனால் அது மட்டும் போதாது, ஏனென்றால் வேலையில் ஈடுபடாமல், போராட்டம் இல்லாமல் போனால் அந்த ஏட்டறிவினால் பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை. தயாராய் வரையறுத்த முடிவுகளை தெரிந்து கொண்ட ஒரே காரணத்தால் தம்மை மெச்சிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் பரிதாபத்துக்கு உரியவரே என்கிறார் லெனின்.

“இந்த அறிவை நீங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது, விமர்சனக் கண்கொண்டு ஆய்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வேண்டாத குப்பையை எல்லாம் மூளையில் அடைத்துக் கொள்ளாமல், கல்வியில் சிறந்த இக்கால மனிதர் எவருக்கும் அத்தியாவசியமான உண்மைகளைக் கொண்டு சிந்தனையை வளமாக்கிக் கொள்ள முடியும்.

கருத்து மிக்க கடும் முயற்சி இல்லாமலே, விமர்சனக் கண்கொண்டு பரிசீலிக்க வேண்டிய உண்மைகளைப் புரிந்து கொள்ளாமலே ஒரு கம்யூனிஸ்டு, தயாராய் வரையறுத்து வைக்கப்பட்ட முடிவுகளைத் தெரிந்து கொண்டு விட்ட ஒரே காரணத்தால் தனது கம்யூனிசத்தை மெச்சிப் புகழ்ந்து கொள்ள நினைப்பாராயின் உண்மையில் அவர் பரிதாபத்துக்குரிய கம்யூனிஸ்டுதான். இத்தகைய நுனிப்புல் மேயும் போக்கு நிச்சயமாய் ஆபத்தையே உண்டாக்கும்.

அறிந்தது குறைவே என்பது எனக்குத் தெரிந்தால் மேலும் கற்க முயலுவேன். ஆனால் நான் ஒரு கம்யூனிஸ்டு, எதையும் தீர்க்கமாய்த் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்று கூறும் ஒருவர் எந்நாளும் எவ்விதத்திலும் கம்யூனிஸ்டுக்கு ஒப்பானவராக முடியாவே முடியாது.”

-அப்படி என்றால் எப்போது கம்யூனிஸ்ட்டாக முடியும் என்பதை லெனின் கூறுகிறார். மார்க்சிய நூல்களில் காணப்படும் முடிவுகளை மட்டும் தெரிந்து கொள்வது மார்க்சியம் ஆகாது, மனிதகுலம் படைத்தளித்திருக்கும் அனைத்து அறிவையும் மார்க்சிய அணுகுமுறையில் அறிந்து கொண்டவரே மார்க்சியர் ஆவார். அப்படிப்பட்டவரே ஒரு நடைமுறை கம்யூனிஸ்ட்டாக முடியும்.

“மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று உங்கள் சிந்தனையை நீங்கள் வளமாக்கிக் கொள்ளும் போது மட்டுமே உங்களால் கம்யூனிஸ்டாக முடியும்.
கம்யூனிசமானது குருட்டு மனப்பாடமாய் கற்க வேண்டிய ஒன்றாய் அமையாது, நேரடியாய் நீங்களே சிந்தித்துப் பார்த்த ஒன்றாய், தற்காலக் கல்வியின் கண்ணோட்டத்தில் இருந்து  எழும் தவிர்க்க முடியாத முடிவுகள் உள்ளடங்கிய ஒன்றாய் அமையும்படி, இந்த ஒட்டுமொத்த மனித குல அறிவைப் பெற வேண்டும்.
வளர்ந்து வரும் இளந் தலைமுறையினர் எப்படிக் கம்யூனிசம் கற்றறிய வேண்டும் என்கிற கேள்விக்கு இதுவே பதில்.

இவர்கள் தமது படிப்பு, பயிற்சி, கல்வி இவற்றின் ஒவ்வொரு படியையும், சுரண்டலாளர்களது பழைய சமுதாயத்தை எதிர்த்துப் பாட்டாளிகளும் உழைப்பாளி மக்களும் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலமே கம்யூனிசத்தைக் கற்றறிய முடிவும்.”

                மனிதன் படைத்துள்ள அறிவுக் கருவூலங்களைப் பெற்று சிந்தனையை வளப்படத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிய லெனின் அந்த அறிவை எவ்வாறு கற்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.

“பள்ளியின் செயற்பாடுகளில் ஒவ்வொரு படியையும், பயிற்சி, கல்வி, போதனை இவற்றில் ஒவ்வொரு படியையும், சுரண்டலாளர்களுக்கு எதிராய் உழைப்பாளி மக்கள் அனைவரும் நடத்தும் போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதவாறு அதனுடன் இணைத்துக் கொள்வதன் மூலமே கற்றறிய வேண்டும்..”

                இதுகாறும் ஒழுக்கநெறி என்று கூறப்படுவதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இந்த உரையில் லெனின் விளக்கியிருக்கிறார். ஒழுக்க நெறியை நிராகரிப்பவர்கள் என்று முதலாளித்துவ வர்க்கத்தினர் கம்யூனிஸ்டுகள் மீது குற்றம் சுமத்துகின்றனர் இதனை லெனின் மறுத்துரைக்கின்றார்.

“..கம்யூனிச அறநெறி என்பதாய் ஒன்று இருக்கிறதா? கம்யூனிச ஒழுக்கம் என்பதாய் ஒன்று இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. நமக்கென ஒரு தனி அறநெறி கிடையாது என்பதாய் அடிக்கடி பேசப்படுகிறது, ஒழுக்கநெறி அனைத்தையுமே நிராகரிப்பவர்கள் என்பதாய்க் கம்யூனிஸ்டுகளாகிய நம்மீது முதலாளித்துவ வர்க்கத்தினர் அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள். பிரச்சினையைக் குழுப்புவதற்கான – தொழிலாளர், விவசாயிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கான – ஓர் உபாயமே இது.

எந்த பொருளில் நாம் அறநெறியை, ஒழுக்க நெறியை நிராகரிக்கிறோம்?

முதலாளித்துவ வர்க்கத்தினர் அதற்கு அளித்திடும் பொருளில் நிராகரிக்கிறோம். கடவுள் கட்டளைகளை அவர்கள் அறநெறிக்கு அடிப்படையாக்கிக் கொள்கிறார்கள். இவ்விவகாரம் குறித்துப் பேசுகையில், எங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று நாம் கூறுகிறோம்.
மனிதனுக்குப் புறம்பான, வர்க்கத்துக்குப் புறம்பான கருத்தினங்களை அடிப்படையாய்க் கொண்ட எந்த ஒழுக்கநெறியையும் நாம் நிராகரிக்கிறோம். அது ஏமாற்றுவித்தை, மாய்மாலம், நிலப்பிரபுக்கள், முதலாளிகளது நலன்களை முன்னிட்டு தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மூடர்களாக்குவதற்கான உபாயம் என்கிறோம்.

எங்களுடைய ஒழுக்கநெறி பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தது என்று நாம் கூறுகிறோம். எங்கள் ஒழுக்கநெறி பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் நலன்களில் இருந்துதான் தோன்றுகிறது”

ஒழுக்கநெறியை எவ்வாறு அணுக வேண்டும் என்று லெனின் வழிகாட்டியிருக்கிறாரோ அதன்படியே அனைத்தையும் அணுக வேண்டும்.


No comments:

Post a Comment